Tuesday, September 6, 2016

அமெரிக்காவின் அடி வருடியா இந்தியா? : பிரகாஷ் காரத்



பிரகாஷ் காரத்


(கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு (எல்எஸ்ஏ) ஒப்பந்தம் என்பது அதில் கையெழுத்திடுகிற நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கான சேவை மற்றும் பொருள்களுக்கு ஒரு தொகையையும் அளிப்பதற்கு வகை செய்கிறது.)
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தமது அமெரிக்கப்பயணத்தின்போது, அந்நாட்டுடன் கடல்வழி மற்றும் வான்வழி ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒப்பந்தம் (Logistics Agreement) செய்து கொண்டிருப்பதானது இதுவரை இல்லாத ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஓர் அந்நிய ராணுவப் படை, அதுவும் ஓர் ஏகாதிபத்திய நாட்டின் மிகவும்வலுமிக்க ராணுவம், இப்போது இந்தியாவின் கடல்வழி மற்றும் வான்வழி தளங்களில் வந்து, தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள வழி வகுத்துத்தரப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, தன்னுடன் ராணுவக் கூட்டணி அல்லது நெருக்கமாக ராணுவ ஒத்துழைப்பு வைத்துக்கொண்டுள்ள நாடுகளுடன் இதுபோன்று கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தங்களை (LSA-Logistics Support Agreement) ஏற்படுத்திக் கொள்கிறது. இது, நேட்டோ அல்லாத நாடுகளைக் கையாள்வதற்காக அமெரிக்கா, ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமாகும். உண்மையில் இது ‘நேட்டோ பரஸ்பர ஆதரவு சட்டத்தின்’ கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘கையகப்படுத்தல் மற்றும் பரஸ்பர சேவை ஒப்பந்தங்கள்’ (ACSA-Acquisition and Cross Service Agreements) என்பதன் மற்றொரு பெயரேயாகும். ஆசியாவில் பிலிப்பைன்ஸ் போன்றநாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. தெற்கு ஆசியாவில் இலங்கை சமீபத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. பாகிஸ்தான் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம் 2012இல் காலாவதியாகிவிட்டது.
நமது ராணுவத்திற்கு விலை
கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு(எல்எஸ்ஏ) ஒப்பந்தம் என்பது அதில் கையெழுத்திடுகிற நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கான சேவை மற்றும் பொருள்களுக்கு ஒருதொகையையும் அளிப்பதற்கு வகை செய்கிறது. அமெரிக்கா தனது தாக்குதல்நடவடிக்கைகளை உலகின் பல பகுதிகளில் மேற்கொள்ள தனது சொந்த ராணுவதளங்களை மட்டுமே சார்ந்திருக்கவில்லை; இதுபோன்ற எல்எஸ்ஏ பாணிஒப்பந்தங்கள் மூலமாக உலகின் அனைத்துப்பகுதிகளிலும் பிற நாடுகளின் ராணுவங்களைப் பயன்படுத்தி மிக விரைந்துதாக்குதல் தொடுப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள அமெரிக்கா வெகுநீண்டகாலமாகவே முயற்சித்து வந்தது. 2015 ஜூன் மாதத்தில் மேலும் பத்தாண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கா - இந்தியா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (US-India Defence Framework Agreement) வரம்பெல்லை இதற்கு வகைசெய்கிறது. எல்எஸ்ஏ-இன் உண்மையான உள்நோக்கத்தை இந்தியாவில் மூடிமறைப்பதற்காக, ஒரு வித்தியாசமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கையெழுத்தாகி இருக்கிற ஒப்பந்தத்திற்கு கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் ((LEMOA-Logistics Exchange Memorandum of Agreement) என்று மேற்பூச்சாக ஒரு பெயரிடப்பட்டிருக்கிறது.
மக்களைக் குழப்பி, குளிர் காயும் நோக்கம்
இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் மக்களுக்குப் புரியாமல் குழப்பவேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டேசெயல்படுகிறது. இரு நாடுகளின் ராணுவமும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒரு முக்கியமான நடவடிக்கை இதுவாகும். இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஓர்அறிக்கையில் இது, நம்முடைய அதிகாரப்பூர்வமான துறைமுகங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், கூட்டு ராணுவப்பயிற்சிகள் மற்றும் மனிதாபிமானமுறையிலான உதவிகள் மற்றும் பேரிடர்காலத்தில் தேவையான நிவாரண முயற்சிகளுக்கு உதவிடக்கூடிய விதத்திலான, வெறுமனே ஒரு ‘வசதி செய்துதரும் ஒப்பந்தம்’ மட்டுமே’’என்று கூறியிருக்கிறது.
ஆயினும் உலகம் முழுவதும், கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தங்களை அமெரிக்கா தன்னுடைய ராணுவத் தளங்களின் வலைப்பின்னலை விரிவாக கெட்டிப்படுத்திக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.இத்தகைய கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தத்தின் மூலமாக, அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை இந்திய ராணுவ வசதிகளை, தங்கள் விமானங்கள் மற்றும் கப்பல்களில் எரிபொருள்களை நிரப்பிக் கொள்ளவும், உபகரணங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் நேரடியாக கையாளும்.
தற்போது மோடி அரசாங்கம் அமெரிக்காவின் நீண்டகால சூழ்ச்சித் திட்டத்துடன் உடன்பாடு செய்துகொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் அவர்கள் எரிபொருள் நிரப்ப வேண்டும்அல்லது போர் விமானம் தரையிறங்கவேண்டும் எனக்கேட்டால். அதைத்சீர்தூக்கிப்பார்த்து கடல்வழி மற்றும்வான்வழி ஆதரவுநடவடிக்கைகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டிருப்பது வெறும் சம்பிரதாயமான ஒன்றேயாகும். இதுபோன்றதொரு ஒப்பந்தம் இதற்கு முன் இல்லாத சமயத்திலேயேகூட, இந்தியா, அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்கி, இந்திய ராணுவ தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து வந்திருக்கிறது. 1991ல் இராக்கில் குண்டுகளைப் போட்டுவந்த அமெரிக்க விமானப்படை விமானங்கள் இந்திய விமானப்படைத் தளங்களில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள அப்போதைய சந்திரசேகர் அரசாங்கம் அனுமதித்தது.
2001இல் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானத்தில் தாக்குதலைத் தொடுக்கத் தீர்மானித்தசமயத்தில், அமெரிக்க ராணுவம் இந்திய ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு எழுதியிருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்கா, பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்தி வந்ததால் இந்தியாஉதவ வந்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எனவே, இன்றைக்கு மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்டுள்ள கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் என்பது பேரிடர் மற்றும் மனிதாபிமான நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு மட்டுமானது அல்ல; அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன், தன்னுடைய ஆசிய -பசிபிக் ராணுவச் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்தியாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும். சீனா மற்றும் மத்திய ஆசியா உட்பட ஆசியா முழுவதும் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளும். ஆசியாவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் மிகப் பெரிய அளவில் ராணுவப் படையைக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்திருப்பது என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை மாபெரும் ஆதாயமாகும்.
முழுமையான ராணுவக் கூட்டாளி
இந்தியாவை தனது மாபெரும் ராணுவக் கூட்டாளி என்று அமெரிக்கா நாமகரணம் சூட்டியிருப்பதைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் ரொம்பவும்தான் சிலிர்த்துப்போயிருக்கிறது. இந்தப் பட்டம்மோடி, வாஷிங்டனுக்குச் சென்றிருந்தபோது அளிக்கப்பட்டது. கடல்வழி மற்றும்வான்வழி ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம் அதனை மெய்ப்பித்திட இந்தியா இப்போது மிகவும் விருப்பத்துடன் காத்திருக்கிறது. இதன்மூலம் இந்தியா அமெரிக்கா வின் முழுமையான ராணுவக் கூட்டாளியாகவே மாறியிருக்கிறது.
சென்ற ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்திருந்தபோது கையெழுத்தான ஆசிய - பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை (Joint Vision Statement for the Asia Pacific and Indian Ocean region)யில் கூறப்பட்டிருந்த அமெரிக்கா - ஆசிய - பசிபிக் நீண்டகால ராணுவ சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இது மாறி இருக்கிறது,ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகியமூன்று நாடுகளுக்கு இடையே முத்தரப்புபாதுகாப்புக் கூட்டணி அமைத்துக்கொள்வதற்கு இந்தியா இணங்கி இருப்பதிலிருந்து, அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சிக்கூட்டணியின் ஓர் அங்கமாக மாற இந்தியாவிருப்பம் தெரிவித்திருப்பது நன்கு தெரிகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தென்சீனக் கடலில் பயிற்சிக்காக இந்தியா கடற்படையின் நான்கு கப்பல்களை அனுப்பியிருந்தது. இது, இந்தியாவானது அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்துசீனாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர், இந்தஒப்பந்தத்தை விமர்சிப்பவர்கள் ‘வேண்டுமென்றே குழப்புகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். எல்எஸ்ஏ எனப்படும் கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் என்பது, இந்தியாவில் அமெரிக்க தளங்கள் நிறுவப்படுவதற்கானது அல்ல என்பதும், மாறாக இந்திய ராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒன்று என்பதும் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். இதேபோல் இந்தியாவும் அமெரிக்காவின் ராணுவத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்வதும் வேடிக்கையான ஒன்று.
இந்தியக் கடற்படை கப்பல்கள் எதற்காக அமெரிக்க கடற்படைத் தளங்களான சாண்டியாகோ, குவாம் அல்லது ஒக்கினாவா ஆகிய இடங்களுக்குச் செல்லப் போகின்றன?இதனையொட்டி வேறு சில ஒப்பந்தங்களிலும் மோடி அரசாங்கம் கையெழுத்திட இருக்கிறது. தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்(CISMOA-Communication and Information Security Memorandum of Agreement) மற்றும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA-Basic Exchange and Cooperation Agreement) ஆகிய இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறது. இப்போது இந்தியாவிற்கு ராணுவத்தளவாடங்களை பெரிய அளவிற்கு விற்பனை செய்து வருவது அமெரிக்காதான். இவ்விரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டால், இந்திய - அமெரிக்கபாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் முழுமையாக செயல்படத் தொடங்கிவிடும்.
சமரசத்திற்குள்ளாகும் இறையாண்மை
கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் நாட்டின்இறையாண்மையை சமரசத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இதுநாள்வரையிலும் இந்தியா எந்தவொரு நாட்டுடனும் ராணுவக் கூட்டணியை வைத்துக் கொள்ளாமல், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்து வந்தது.
இப்போது நாட்டின் நலன்களுக்கு மிகவும் அடிப்படையாக விளங்கும் சுயேச்சையான ராணுவத் தந்திரச் செயல்பாடுகளை, இந்த ஒப்பந்தத்தின் மூலம் மோடி அரசாங்கம் அமெரிக்காவின் காலடிகளில் சரணாகதி ஆக்கிவிட்டது.இப்படியாக, இந்தியாவின் அயல்துறைக் கொள்கையும், நீண்டகால ராணுவரீதியான பாதுகாப்புக் கண்ணோட்டமும் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன.
இது, இப்போது பிரதமர் மோடி வெனிசுலாவில் காரகாசில் செப்டம்பர் மூன்றாம்வாரத்தில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்கிற முடிவின் மூலம் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது.அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இதற்கு முன் இடைக்கால அரசின் பிரதமராக இருந்த சரண் சிங் மட்டும்தான் பங்கேற்காமல் இருந்தார்.
அதற்கு அடுத்து இப்போது அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்காத முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். இது தெரிவித்திடும் செய்தி மிகவும் தெளிவானது: இந்தியா என்பது இனிவருங்காலங்களில் அணிசேரா நாடல்ல, அது அமெரிக்காவின் அடிவருடியாக (subordinate ally) மாறி விட்டது என்பதே அந்த செய்தியாகும்.
(தமிழில்: ச.வீரமணி)



No comments: