Monday, July 31, 2017

சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த அரசு எதுவுமே செய்ததில்லை

மாநிலங்களவையில் டி.கே.ரெங்கராஜன் தாக்கு
புதுதில்லி, ஆக.1-
இந்த அரசு சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதுவுமே செய்ததில்லை என்றும், பாதையை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் இந்த அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.  
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மாநிலங்களவையில்  2017ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (ரத்து) சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:
“மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களே, இதன்மீது பேச வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவை உருவாக்கிய தெரிவுக்குழுவின் தலைவர் பூபேந்தர் யாதவ்விற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சட்டமுன்வடிவின்மீது அபரிமிதமான அறிவுடன் திகழும் அமைச்சர் ஜெஹ்லாத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மீது பல விஷயங்களை ஒப்புக்கொள்ள மறுப்பதில் நாம் ஒத்துப்போனபோதிலும், தெரிவுக்குழுவில் இதன் நடவடிக்கைகளை மிகவும் அருமையாக அவர் நடத்தினார். அறிவிற்சிறந்த பெருமக்கள் தெரிவுக்குழு முன் ஆஜராகி தங்கள் கருத்தக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவை அனைத்தும் ஏற்கனவே அவையின்முன் வைக்கப்பட்டுவிட்டன. இதற்காக அவைக்கு நாம் ஒவ்வொருவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். முக்கியமாக மண்டல் கமிஷன்  அறிக்கையைத் தயார் செய்த, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன்,  இந்தக்குழுவின் முன் ஆஜரானார். திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இந்தக் குழுவின் முன் ஆஜரானார். அவர் இக்குழுவின் முன் சாட்சியம்  அளித்தார்.
தெற்கு, வடக்கிலிருந்து வேறுபட்டது என்பதை இங்கே உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு அமைச்சர் இதனைக் குறித்துக்கொள்ள  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
1920களில் நடந்தவைகளை நாம் திரும்பிப் பார்த்தோமானால், மைசூர் மகாராஜா பிற்படுத்தப்பட்டவர்கள் மீது இரக்கம் காட்டத் தொடங்கினார், அவர்களுக்குக் கல்வி அளித்தார், அவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்தார். பின்னர், நாம் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்த்தோமானால், மாண்புமிகு உறுப்பினர்கள் முத்துக்கருப்பன்  மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியதுபோல, அது ஓர் அற்புதமான மாநிலமாகும். கடந்த 80 முதல் 90 ஆண்டு காலமாக அது பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் போராடி வந்தது. இந்த அவை திராவிடக் கழகத் தலைவர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திட வேண்டும். அவர், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் அல்லும்பகலும் அயராது பாடுபட்டு வந்தார். அவர் அதில் சமரசமே செய்து கொள்ளவில்லை. அதுதான் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் மிகவும் சரியானமுறையில் போராட்டம் நடத்தி, வகுப்புவாத அரசாணையைப் பெற்றுத்தந்தார். வகுப்புவாத முதல் அரசாணை திராவிடக் கழகத்தாலும் தந்தை பெரியாராலும் பெறப்பட்டது.
கேரளாவிற்குச் சென்றோமானால், அங்கே நாராயணகுரு அவர்கள் அனைத்துப் பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டிற்காகவும்  வாழ்ந்து வந்தார். அவர்களின் மேம்பாட்டிற்காகப் போராடி, அவற்றைப் பெற்றார். கேரளாவில் கல்வியின் அளவு என்னவென்பதை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இன்றையதினம் இவ்வாறு கேரளாவும், தமிழகமும் எப்படி முதல் மாநிலங்களாகத் திகழ்கின்றன. நாராயண குருவும், தந்தை பெரியாரும், தொடர்ந்து வந்த தமிழக  அரசாங்கங்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் அவற்றிற்குக் காரணங்களாகும்.  திமுக அரசாங்கம், அஇஅதிமுக அரசாங்கம் ஆகிய இரண்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்திருக்கின்றன.
ஜெய்ராம் ரமேஷ்: காமராஜரும்தான்.
டி.கே.ரெங்கராஜன்:  காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்காரணமாக தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்தது,
ஜெய்ராம் ரமேஷ்: இதனை காமராஜர்,  திமுக, அஇஅதிமுக அரசாங்கங்கள் வருவதற்குமுன்பே செய்தார்.
டி.கே.ரெங்கராஜன்: நான் என்னுடைய நண்பர் ஜெய்ராம் ரமேஷின் கூற்றை ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால் வட இந்தியாவின் நிலை என்ன? இப்போதும்கூட 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.  இது நமக்கு அவமானம் இல்லையா?  எனவேதான் இந்த அவையின்முன்பு மிகச் சரியானமுறையில் எங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துகொண்டிருக்கிறோம்.
சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை  அடையாளம் காண்பதற்கு மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும். தில்லியிலிருந்துகொண்டு எல்லாவற்றையும் நீங்கள் அடையாளம் கண்டுபிடித்திட முடியாது. அல்லது, இங்கேயுள்ள அதிகார வர்க்கம் எல்லாவற்றையும் அடையாளம் கண்டிட முடியாது. 
உச்சநீதிமன்றம், 1992 நவம்பர் 16 அன்று மண்டல் வழக்கில் அளித்துள்ள முத்திரை பதித்த தீர்ப்பில், 1990ஆம் ஆண்டின் ஆணையின் செல்லுபடித் தன்மையை உறுதிசெய்தது.   அதன்பின்னர் உச்சநீதிமன்றம் முன் நிபந்தனைகளாகப் பிறப்பித்த இரு கட்டளைகளும் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.   இவை அனைத்தையும் இந்தச்சட்டமுன்வடிவிற்குள் நீங்கள் கொண்டுவந்து இணைக்காவிட்டால், அவ்வாறு இதனை நீங்கள் சட்டமாக்காவிட்டால், பின்னர் எவராவது உச்சநீதிமன்றத்திற்குச் செல்வார்கள், இதற்கு எதிராக வழக்குத் தொடுப்பார்கள். அது மற்றுமொரு குறுக்கீட்டிற்கு வழி வகுத்திடும்.
இந்தச்சட்டமுன்வடிவு, சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டிருக்கும் வகுப்பினர் வரவேற்கக்கூடிய நல்ல அம்சங்கள் பலவற்றைப் பெற்றிருக்கிறது. அதேபோன்று எதிர்காலத்தில் சில ஐயுறவுகளை உருவாக்கக்கூடிய அம்சங்களும், சில பகுதிகளில் பொருள் தெளிவின்மையும் காணப்படுகின்றன.  இந்தச் சட்டமுன்வடிவைக் கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பது, சமூக ரீதியாகவும், கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பயன் தராது என்பதே என் கருத்தாகும்.  அதே சமயத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஐயுறவுகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களைச் சரிப்படுத்திட வேண்டியதும், தெளிவற்றிருக்கக் கூடியவற்றை தெளிவுபடுத்திட வேண்டியதும் அவசியமாகும்.
நான் அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் முக்கியமான அம்சமாக விளங்கும் 338B (5), (a), (b), (c), (d) மற்றும் (e) ஆகிய பிரிவிற்கு நேரடியாகவே வருகிறேன்.  இது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் நீண்ட கால விருப்பமாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையம், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான  நாடாளுமன்ற உறுப்பினர்களின்  அமைப்பு, தலித்துகள்/பழுங்குடியினர்களுக்கான நலன்கள் குறித்து துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை இந்தப் பிரிவை வலுப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றன.  நேரமின்மை காரணமாக, இதன்மீது ஒவ்வொரு பத்தியாக எடுத்துக்கொண்டு பேச நான் விரும்பவில்லை.
இதில் மூன்று அல்லது நான்கு ஆக்கபூர்வமான அம்சங்கள் இருக்கின்றன. நேரமின்மை காரணத்தால் நான் அதற்குள் பத்தி, பத்தியாக செல்ல விரும்பவில்லை.  ஆணையம்/நடுவர் மன்றங்களின் அறிவுரை சாதாரணமாக மத்திய அரசைக் கட்டுப்படுத்தும் என்கிற உச்சநீதிமன்றத்தின் கட்டளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தேசிய ஆணையச் சட்டத்தில் மீளவும் எடுத்துப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அது, இப்போது கொண்டுவரப்படக்கூடிய சட்டமுன்வடிவிலும் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த கட்டளை தொடர வேண்டும். அது இந்த சட்டமுன்வடிவில் இல்லாதது மிகவும் ஆழமான  இடைவெளியாகும். இது சரி செய்யப்பட வேண்டும்.  
மற்றுமொரு மிக முக்கியமான ஒன்று இந்த ஆணையத்தின்  வல்லுநர் குழு சம்பந்தப்பட்டதாகும். இந்த வல்லுநர் குழு உச்சநீதிமன்றத்தின் கட்டளைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும். மண்டல் கமிஷன் தீர்ப்பில் உச்சநீதிமன்றம், தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இல்லாதவற்றை நீக்கிடவும், புதிதாக சிலவற்றை சேர்த்திடவும் கட்டளையிட்டிருந்தது. அவற்றை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்திட வேண்டும் என்றும், உடனடியாக அல்ல என்றும் கூறியிருந்தது. மத்திய  அரசாங்கம், பத்தாண்டுகள் கழித்து, பட்டியல்களில் திருத்தங்களை செய்வது தொடர்பாக, நடவடிக்கைகள் எடுத்து அவ்வாறு திருத்திய பட்டியலை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருந்தது.  அரசமைப்புச் சட்டத்தின் 342A சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் கல்விரீதியாக உள்ள  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் பட்டியல் சம்பந்தமான குடியரசுத் தலைவரின் அறிவிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தால் சேர்க்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்டவற்றை  தொடர்பாக மாநில  அரசுகளுக்கு உள்ள உரிமைகளை திரும்பப் பெறுகிறது.  அரசாங்கம் இதனை மறுத்திருக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகள் இந்தச் சட்டமுன்வடிவால் பாதிக்கப்பட வில்லை என்கிறது. அரசாங்கத்தின் இந்தக் கருத்துக்களை இந்தச் சட்டமுன்வடிவின் ஷரத்துக்களை ஆய்வுசெய்வதன் மூலம் நியாயப்படுத்தப்பட வேண்டியது தேவை. 342A பிரிவைப் படித்தோமானால்,  சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரையே சாரும். அதாவது, மத்திய அரசும் அதன் அமைச்சரவையையுமே சாரும்.  அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் குடியரசுத்தலைவர் செயல்பட முடியும்.  அதனைத் தொடர்ந்து பட்டியலில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர விரும்பினால்  அதனை நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டுவர முடியும். இது தற்போது மாநில அரசாங்கங்களுக்கு மாநில அரசாங்கங்களில்  வேலைகளுக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு உள்ள உரிமைகளை  நீக்கிவிடுகிறது.  இது ஒருபக்கத்தில், சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பினரின் பிரச்சனையாகும், மறுபக்கத்தில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயுள்ள பிரச்சனையாகும்.  
அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் பட்டியலும், மாநில அரசின் பட்டியலும் ஒத்துப்போகும். பல மாநிலங்களில் வித்தியாசம் கிடையாது. ஒருசில மாநிலங்களில் ஆதிக்க சாதியினரின் நிர்ப்பந்தங்களின்காரணமாக ஆட்சியாளர்கள் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற மேதைகளால் பரிந்துரைக்கப்பட்டவைகளைக் கூட நிராகரித்திருக்கின்றன. ஆதிக்க சாதியினரின் நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு மாற்றங்களைச் செய்த மாநில அரசாங்கங்களை நான் பட்டியலிட முடியும்.
இந்தக்குழுவில் ஒரு பெண் உறுப்பினர் இருக்க வேண்டும், ஒரு பிற்படுத்தப்பட்டவர் இருக்க வேண்டும்.  சிறுபான்மையினத்தவர் ஒருவர் இருக்க வேண்டும். இந்தக் குழு சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சனைகளைப் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே முற்படுத்தப்பட்ட இனத்தினரிடமிருந்து நிர்ப்பந்தம் இந்த அரசுக்கு இருக்கிறது. வாக்கு வங்கி அரசியல் இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வாக்குகளைப் பெறுவதற்காக சில மாநில அரசுகள் மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு பெற்றிட முயற்சிக்கலாம். இதற்கு மத்திய அரசு இடம்கொடுக்கக்கூடாது. ஆணையம் இருக்க வேண்டும்.
நான் இந்த விவாதத்தை முடிக்கும் தருவாயில், அமைச்சர் பூபேந்திரஜிக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் ஆளும் கட்சியினரைப் பார்த்து ஒன்று  கேட்க விரும்புகிறேன். அரசாங்கத்தில் ஜனசங்கம் இருந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்? பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஏதாவது செய்திருக்கிறீர்களா?  அவர் எதையும் பரிசீலிக்கவில்லை. (குறுக்கீடு). நீங்கள் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய பிரதமர் குறித்து நிறையவே பேசுகிறீர்கள். வாஜ்பாயிஜி இருந்தபோது என்ன செய்தீர்கள்? மண்டல் கமிஷன் அறிவிக்கப்பட்டபோது உங்கள் நடவடிக்கை எவ்வாறிருந்தது? நீங்கள் ரத யாத்திரையைத் தொடங்கினீர்கள். (குறுக்கீடு). நீங்கள் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதுவுமே செய்ததில்லை. (குறுக்கீடு). அந்தப் பாதையில் போகாதீர்கள். பாதையை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச்சட்டமுன்வடிவிற்கு, நான் ஒரு திருத்தம் கொடுத்திருக்கிறேன். இதனை அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மிகவும் நன்றி.”
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் பேசினார்.

(தமிழில்: ச.வீரமணி)

Wednesday, July 26, 2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறிக்கை


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறிக்கை
புதுதில்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் ஜூலை 24-26 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மத்தியக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அனைத்து முனைகளிலிருந்தும் மக்கள் மீதான தாக்குதல்கள்
பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் மக்களில் பெரும்பான்மை யவர்களின் வாழ்வாதாரங்களின் மீது அனைத்து முனைகளிலிருந்தும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, நவீன தாராளமயப் பொருளாதாரத் தாக்குதல்கள் மக்களில்  பெரும்பகுதியினரை  சொல்லொண்ணான துன்ப துயரங்களுக்கு ஆழ்த்தி இருக்கின்றன, பசுப்பாதுகாப்பு  போன்ற தனியார் ராணுவத்தினரால் தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மீதான மதவெறித் தாக்குதல்கள் கூர்மையடைந்திருக்கின்றன, மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது மேலும் எதேச்சாதிகாரமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன, நாடாளுமன்ற அமைப்புகளின் செயல்பாடுகளே அரித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நான்கு முனைகளிலும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதோடு, ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய போர்த்தந்திர பங்காளியாக தன்னை மாற்றிக்கொண்டு, அதன் காரணமாக நம் அயல்துறைக் கொள்கையிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதை தெள்ளத்தெளிவாகப் பார்க்கின்றோம்.
அதிகரித்துவரும்  சகிப்புத்தன்மையின்மை:
பாஜக, நாடு முழுதும் மதவெறித் தீயை கூர்மைப்படுத்துவதன்முலம் தன்நிலையை ஒருமுகப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின்கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் மதவெறிபிடித்த நபர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை போன்ற அமைப்புகள் உட்பட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்  அனைத்தும் ஆர்எஸ்எஸ் நபர்களால் நிரப்பப்பட்டு, மதவெறித்தீயைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் வரலாறே மாற்றி எழுதப்பட்டு வருகிறது.  பொது நிறுவனங்கள் அனைத்திலுமே மதவெறித் தீயை விசிறிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  தாகூர், கலிப், டிங்கர், அவதார் சிங் பாஷ் போன்றவர்கள் குறித்த விவரங்களையும், முகலாயர்களை புகழ்ந்துரைத்திடும் உருது வார்த்தைகளையும் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கி புத்தகங்களை ‘ஞானஸ்நானம் செய்திடவேண்டும்’ என்று ஆர்எஸ்எஸ் கூறிவருகிறது. நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் குறித்த ஓர் ஆவணப்படத்தில் வரும் ‘பசு’, ’குஜராத்’, ’இந்துத்துவா’ போன்ற வார்த்தைகளை நீக்கவேண்டும் என்று கூறி, அப்படத்தைத் திரையிடக்கூட தணிக்கை வாரியம் மறுத்திருக்கிறது. நாட்டில் சகிப்புத்தன்மையின்மை இவ்வாறு மிகவும் கூர்மையாக வளர்ந்துவரும் சூழல் இருந்துவருகிறது.
இதுபோன்ற தனியார் ராணுவங்கள்,  அதிலும் குறிப்பாக பசுப்பாதுகாப்புக் குழுக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி இருக்கிறது.    
கால்நடை வர்த்தகத்திற்குத் தடை விதித்த அரசாங்கத்தின் அறிவிக்கைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை ஆணையைத் தொடர்ந்து,  தற்போது உச்சநீதிமன்றமும் தடையாணை பிறப்பித்திருக்கிறது. பாஜக அரசாங்கம், உச்சநீதிமன்றத்திடம் மேற்படி அறிவிக்கையைத் திருத்தம் செய்து, மீளவும் நீதிமன்றத்திற்கு வருவோம் என்று கூறியிருக்கிறது. எந்தவிதமான திருத்தத்திற்கும் தேவையே இல்லை. இந்த அறிவிக்கை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டியதாகும்.  
விவசாய நெருக்கடி:
இந்தக்கால கட்டத்தில், வேளாண் நெருக்கடி உக்கிரமடைந்திருக்கிறது. விவசாயிகளின் தன்னெழுச்சியான மற்றும் அமைப்புரீதியான எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்தெழுந்து வருகின்றன. அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலைகள் இத்தகைய கிளர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. மத்தியப்பிரதேசத்தில் மண்ட்சர் என்னுமிடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் விவசாயிகளால் அறிவிக்கப்பட்ட பொது வேலை நிறுத்தம் போன்றவை விவசாய நெருக்கடியை நாட்டின் ஒட்டுமொத்த கவனத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளன.
மோடி அரசாங்கம், விவசாய விளைபொருள்களுக்கு, அரசு நிறுவனமான வேளாண் பொருள்கள் உற்பத்திச் செலவினம் மற்றும் விலை தொடர்பான ஆணையம் நிர்ணயிக்கும் உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு  குறைந்தபட்ச ஆதார விலை அளித்திடுவோம் என்று அளித்த தேர்தல் உறுதிமொழியை நடைமுறைப்படுத்தாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்திருக்கிறது.  
இவ்வாறு இந்த அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளாக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு மேற்கண்ட விதத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் உரிமையை அளித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிட வேண்டும். இதன்பொருள் என்னவெனில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களைக் கொண்டுவந்தால், அரசாங்கம் சட்டத்தின்படி  அதனைக் குறைந்தபட்ச ஆதார விலையுடன் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.
அதிகரித்து வரும் வேலையின்மை:
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததானது, நாட்டில் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் வாழ்வாதாரங்களை முழுமையாக சிதறடித்துவிட்டதால், தினக்கூலி மற்றும் வாரக்கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை வீதிகளில் தூக்கி எறியப்பட்டுவிட்டன. 2016 ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையேயும், மற்றும் 2017 ஜனவரி – ஏப்ரலுக்கு இடையேயும் அமைப்பு சார் வேலைவாய்ப்புகள்கூட 93 மில்லியனிலிருந்து, 86 மில்லியன் வரையிலும் வீழ்ச்சி அடைந்திருப்பதாக, அதாவது முன்பு வேலை பார்த்தவர்களில் 70 லட்சம் பேர் தற்போது வேலையிழந்துவிட்டதாக இந்திய பொருளாதாரத்தைக் கண்காணித்து வரும் மையத்தால் (CMIE-- Centre for Monitoring Indian Economy) குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட வேண்டிய ஒதுக்கீட்டுத்தொகை தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இதன் பொருள் கிராமப்புற வேலைவாய்ப்புகள்  மேலும் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கின்றன என்பதேயாகும். கிராமப்புற இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பே இல்லை என்றே அறிக்கைகள் கூறுகின்றன.
மோடி அரசாங்கம், தாங்கள் ஆட்சிக்கு வந்தால்,  ஒவ்வோராண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதி அளித்திருந்தது. ஆனால் அதற்குப் பதிலாக, நாம் இன்றைக்குப் பார்ப்பது என்னவென்றால், வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி  அடைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோராண்டும் இளைஞர்கள் பட்டாளம் சுமார் 1.5 கோடி பேர் வேலைவாய்ப்பு சந்தையில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், இத்தகு நிலைமை இளைஞர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல்:
நிட்டி ஆயோக் பரிந்துரையின்படி, இந்த பாஜக அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியாருக்குத் தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. நிட்டி ஆயோக் முழுமையாக கார்ப்பரேட்டுகளால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது. அதன் முன்மொழிவுகள் அனைத்துமே நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டு பெரும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்திற்கு சேவகம் செய்யக்கூடிய விதத்திலேயே அமைந்திருக்கின்றன.  நாட்டின் பிரதானமான பொதுத்துறை சொத்துக்களை அந்நிய மற்றும் உள்நாட்டு தனியார் மூலதனத்திற்கு அடிமாட்டு விலைக்கு அளிப்பதற்கு முன்வந்துள்ளது, சமீபத்திய தாக்குதலாகும்.
அந்நிய ராணுவ தளவாடங்கள் உற்பத்தி கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுக்கக்கூடிய விதத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மையங்களை மிகப்பெரிய அளவில் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இது, நாட்டின்  பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.  ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. நாட்டு மக்களை உயிரோட்டமான முறையில் பிணைத்து வைத்திருக்கக்கூடிய ரயில்வேயையும் கூட தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வேயுடன் இணைந்துள்ள பல்வேறு சேவைகள்  தற்போது தனியார்  வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  இவை அனைத்தும் ரயில்வேயையே தங்கள் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு துணையாகக்கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானு கோடி இந்திய மக்கள் மத்தியில் கடும் சுமைகளை ஏற்றிடும்.
நிதித்துறையில் புதிதாக இயற்றப்பட்டுள்ள நிதித் தீர்மானம் மற்றும் சேம்ப்பு இன்சூரன்ஸ் சட்டமுன்வடிவு (FRDI—Financial Resolution and Deposit Insurance Bill, 2017) மூலம் இந்த அரசாங்கமானது வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களையும் முற்றிலுமாக பொதுத்துறை கண்காணிப்பு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து நீக்கி இருக்கிறது.
ஆதாரும் தனிநபர் அந்தரங்கத்தைக் காப்பதற்கான உரிமையும்:
தனிநபர் அந்தரங்கத்தைக் காப்பதற்கான உரிமை குறித்த பிரச்சனையைத் தற்போது உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச்சட்ட அமர்வாயம் விசாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த உரிமைமீது போதுமான அளவிற்கு வரம்புகள் விதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆதார்  அட்டையில் கூறப்பட்டுள்ள தனிநபர் தரவுகளை தனிநபர்களுக்கு அளிப்பது குறித்து அரசாங்கம் மிகவும் தெளிவாக வரையறுத்திட வேண்டும்.
இங்கே பிரச்சனை, ஒரு தனிநபரின் அந்தரங்கம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதல்ல.  பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு இது தேவைஎன்று அரசாங்கத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது. இன்றைய உலகில் இந்தப் பிரச்சனையானது, இவ்வாறான தனிநபர்களின் தரவுகளை உலக அளவில் இயங்கும் பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் இந்தியக் கார்ப்பரேட்டுகள் தங்கள் லாபங்களைப் பெருக்கிக் கொள்வதற்காகவும். தனிநபர்களைக் கசக்கிப் பிழிவதற்காகவும், பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதேயாகும். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் தனிநபர்களைச் சூறையாடுவதைத் தடுக்கக்கூடிய விதத்தில்  மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும். எனவேதான், தனிநபர் அந்தரங்கங்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் புதிய சட்டம் ஒன்றை இயற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.  ஆதார் தகவல்களை இணைய தளத்தில் ஜியோ நிறுவனம் பரப்பியதுபோல் எவரேனும் பரப்பினால் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை அந்தச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும்.
கேரளம்
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் தாக்குதல்களில் 13 தோழர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.  200க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 150க்கும்  மேற்பட்ட வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கட்சி அலுவலங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.  
ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கக் காலத்திலும் நம் தோழர்கள் 27 பேர் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அத்தகு தாக்குதல்கள் இப்போதும் தொடர்கின்றன. அதே சமயத்தில், தங்கள் கொலைபாதக நடவடிக்கைகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் மூடி மறைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ‘அட்டூழியங்கள்’ புரிவதாக அவதூறு செய்து வருகிறார்கள்.  
திரிபுரா
திரிபுராவில் வரவிருக்கும் சட்டமன்றத்  தேர்தலில் இடது முன்னணி அரசாங்கத்தை பலவீனப்படுத்திட வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ-பாஜக வகையறாக்கள் தலைகீழாக நின்று முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.  அம்மாநிலத்தில் பழங்குடியினருக்கும், பழங்குடியினரல்லாதவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கிட முயற்சிகளை உக்கிரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழுவும், திரிபுரா மாநில அரசாங்கமும்  சமீபத்தில் திரிபுராவில் நெடுஞ்சாலையில் முற்றுகைப்போராட்டம் நடத்திய ஐபிஎப்டி (IPFT) அமைப்பினரின் போராட்டத்தை மிகவும் சாதுர்யமாகக் கையாண்டதற்கு மத்தியக்குழு தன் திருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாஜக மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளையும், தேர்தல் தயாரிப்பு வேலைகளையும் எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக திரிபுரா மாநிலக்குழு அளித்துள்ள அறிக்கையை மத்தியக்குழு கேட்டறிந்தது. அமைதியை விரும்பும் திரிபுரா மாநில மக்கள் பாஜகவினர் மேற்கொண்டுவரும் சூழ்ச்சி வலைகளைத் தகர்த்தெறிவார்கள் என்றும், வரவிருக்கும் தேர்தலிலும் அவர்கள் இடது முன்னணியையே மீளவும் தெரிவு செய்வார்கள் என்றும்  மத்தியக்குழு நம்புகிறது. 
மத்திய அரசின் சமீபத்திய தரவு ஒன்று, நாட்டிலேயே இரண்டு மாநிலங்கள்தான் பொது சுகாதாரம் மற்றும் கல்வியில் மிகவும் சிறந்து விளங்குவதாகவும், அவை கேரளாவும், திரிபுராவும் என்று குறிப்பிட்டிருக்கிறது.  திரிபுராவைப் பொறுத்தவரை,  அங்கே எழுத்தறிவு 96 சதவீதமாகும், மக்களின் ஆயுட்காலம் ஆண்கள் 71 ஆண்டுகள், பெண்கள் 73 ஆண்டுகளாகும். பொது சுகாதாரம் மற்றும் கல்வியிலும்  நாட்டின் மற்ற மாநிலங்களைவிட மிகவும் உயரத்தில் இருக்கிறது.  இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி அரசாங்கங்களும் அமல்படுத்தும் இத்தகைய மக்கள் ஆதரவு முற்போக்குக் கொள்கைகளைத்தான் பாஜக குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலங்களவைத் தேர்தல்
மாநிலங்களவைக்கு மூன்றாவது முறையாக சீத்தாராம் யெச்சூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலக்குழு கொண்டுவந்த முன்மொழிவை, மத்தியக் குழு நிராகரித்துள்ளது.  மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஏற்கத்தக்க சுயேச்சை உறுப்பினரை நிறுத்தினால் அதனைப் பரிசீலிக்கலாம் என்றும் அவ்வாறில்லையேல் மேற்கு வங்க இடது முன்னணிக்குழு சார்பில் போட்டியிடுவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என்றும் மத்தியக்குழு கருதுகிறது.
காஷ்மீர்
ஜம்மு – காஷ்மீரில் நிலைமைகள் சீர்கேடடைந்து வருவது குறித்து மத்தியக் குழு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், காஷ்மீர் மக்களுக்கும், இந்திய நாடாளுமன்றத்திற்கும், உள்துறைஅமைச்சரின் தலைமையில்  காஷ்மீருக்குச் சென்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தூதுக்குழுவிற்கும் அளித்த உறுதிமொழிகளுக்குத் துரோகம் செய்துவிட்டது.   பெல்லன்குண்டுகள் பயன்படுத்த மாட்டோம், காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு நடவடிக்கை எடுத்திடுவோம் என்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வோம் என்று அது அறிவித்திருந்தது. அதேபோன்று காஷ்மீரில் இயங்கும் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திடுவோம் என்றும் வாக்குறுதி அளித்தது. ஆனால், அது கடந்த ஆறு மாதங்களில் இதில்  எதனையுமே செய்திடவில்லை. காஷ்மீர் மக்கள் அந்நியப்படுதல் அதிகமாவதற்கு இவைகள் பெரிய அளவில் பங்களிப்பினைச் செய்துள்ளன. 
அனைத்துத்தரப்பு அரசியல் சக்திகளையும், மக்கள் இயக்கங்களையும் ஒருங்கிணைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிகள் தொடர்ந்திட வேண்டும் என்று மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
கட்சியின் அகில இந்திய மாநாடு
கட்சியின் அகில இந்திய 22ஆவது மாநாட்டை 2018 ஏப்ரலில் தெலங்கானா மாநிலத் தலைநகர், ஹைதராபாத்தில் நடத்திட மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
மத்தியக்குழு அறைகூவல்
வரவிருக்கும் காலத்தில் கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
(1)
(அ) கடன்சுமையால் தற்கொலைப்பாதைக்குத் தள்ளப்பட்டு வரும் விவசாயிகள் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
(ஆ) விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு விலை வைத்து குறைந்தபட்ச ஆதார நிலை நிர்ணயம் செய்திடுவோம் என்று பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்,
(இ) விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை குறைந்தபட்ச ஆதாரவிலையில் மத்திய அரசே கொள்முதல் செய்திட சட்டம் இயற்றிட வேண்டும் என்று வலியுறுத்தியும்,
(ஈ) இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்கிற பாஜக தன் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தக்கோரியும்,
(உ) பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறைசேவைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்தக்கோரியும்,
(ஊ) 2014 தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்ததுபோல் மகளிர்க்கான  இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை நிறைவேற்ற வலியுறுத்தியும்,
வரும் 2017 ஆகஸ்ட் 15 முதல் 31 தேதிகளில் நாடு முழுதும் கிளர்ச்சி இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது. 
2. வரும் 2017 செப்டம்பர் 1 அன்று உலக அமைதி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தினத்தை அனைத்துக் கிளைகளும் அனுசரித்திட வேண்டும். அன்றைய தினம் மோடி அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்திருப்பதையும் அதன் இளைய பங்காளியாக மாறியிருப்பதையும் மக்கள் மத்தியில் விளக்கிட வேண்டும்.  பிரதமரின்  சமீபத்திய இஸ்ரேல் பயணம், உலக அளவில் அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா கூட்டணியை உருவாக்கிட பாஜக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திட வேண்டும்.
3. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுதும் மதவெறிக்கு எதிராக இயக்கங்களை நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை இணைத்திட வேண்டும்.
4. செப்டம்பர் மாதத்தில் தலித்துகள் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல்களைக் கடுமையாக எதிர்த்திட வேண்டும். பசுப்பாதுகாப்புக்குழுக்களையும் ஆர்எஸ்எஸ்-ஆல் நடத்தப்படும் தனியார் ராணுவங்களையும் தடை செய்திட  வலியுறுத்தி மத்திய சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)



சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரான அமீர் ஹைதர்கான்





====.வீரமணி===                                                                       இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களின் பட்டியலை எடுத்தோமானால் அவர்களில் பலர் மிகவும் வசதிபடைத்த நிலவுடைமையாளர்கள் குடும்பங்களிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
தோழர்கள் .எம்.எஸ்., எம். பசவபுன்னையா, பி.சுந்தரய்யா, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் எல்லாம் வசதியுடன் வாழ்ந்தவர்கள். இவர்கள் தங்கள் வசதியான குடும்பப் பின்னணியை உதறித்தள்ளிவிட்டு, கம்யூனிஸ்ட்டுகளாக மாறி கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர்கள்.
ஆனால் மிகவும் வறிய நிலையில் பிறந்து, வளர்ந்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்த தோழர்களும் உண்டு. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க தோழர் அமீர் ஹைதர்கான் ஆவார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் தோழர் அமீர் ஹைதர்கான்.
இன்றைய பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த அமீர் ஹைதர்கானின் பெற்றோர் கல்வியறிவற்ற ஏழை விவசாயிகள். அமீர் ஹைதர்கான் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார்.
பின்னர் அவரது தாயார் இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். அமீர் ஹைதர்கான், தன்னுடைய மாற்றாந் தந்தையிடம் பட்ட கொடுமைகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவைகளாகும். ஆயினும் கல்வி கற்கும் தணியாத ஆவலால் அவர்வீட்டைவிட்டு வெளியேறி பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார். பம்பாயில் தெருவோரச் சிறுவர்களுடன் அவர் வசித்தபோது, அவருக்கு கப்பலில் வேலை கிடைத்தது.அவரது வாழ்க்கை அதன்பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. 
அமீர், தொழிலாளியாக மாறி தன் ஸ்தாபனத்திறமைகளை கப்பலிலேயே வெளிப்படுத்தினார். அமெரிக்காவில் சில காலம் வசித்தார். தன் கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொண்டார். அமெரிக்காவில் அமெரிக்கத் தொழிலாளர் கட்சியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அந்தக் கட்சி அவரை முழுமையான மார்க்சிய, லெனினியக் கல்வி பயில்வதற்காக மாஸ்கோவிலிருந்த கீழைத் தொழிலாளர்கள் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தது.
அங்கே கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் அகிலத்தைச் சேர்ந்த தோழர்கள் அவரை நுட்பமாக விசாரணை செய்துவிட்டு, கம்யூனிஸ்ட் அகிலத்திற்குள் அனுமதித்தனர். அவர் பெயரையும் சகாரோவ் என்று மாற்றினார்கள்.
தோழர் அமீர் ஹைதர்கான் ரஷ்யாவில் இருந்த சமயங்களில் கம்யூனிஸ்ட் அகிலத் தலைவர்களிடம் தாங்கள் சீனத்தில் கட்சியைக் கட்டி எழுப்புவதற்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு அதற்கு இணையாக இருக்கின்ற இந்தியாவிற்கு ஏன் உதவி செய்வதில்லை என்று சண்டை போட்டிருக்கிறார்.
அவ்வாறு சண்டை போட்டபோதுதான் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்திற்கு உதவுவது போலவே இந்தியாவிற்கும் எம்.என்.ராய் மூலமாக உதவி வந்திருக்கிறது என்பதையும், ஆனால் அந்த உதவிகள் சரியான விதத்தில் சரியான தலைவர்களிடம் இந்தியாவிற்கு வந்து சேரவில்லை என்பதையும் அவர் உணர்ந்தார். இதன் பின்னர் அவரையே சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1920இல் தாஷ்கண்டில் அமைக்கப்பட்டிருந்தது; அதில் எம்.என்.ராய், பிரோசுதின் மன்சூர், அக்பர்கான் மற்றும் சிலர் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற விவரம் அமீர் ஹைதர்கானுக்கும், அவரது சகாக்களுக்கும் கூறப்பட்டது. இந்தக் கட்சியை லெனினும் ஸ்டாலினும் அங்கீகரித்தனர்.
பின்னர் அமீர் ஹைதர்கானுக்கு அங்கே ஆயுதப்பயிற்சி மூன்று மாதங்களுக்கு அளிக்கப்பட்டது. இது அமீருக்கு புதிய உற்சாகத்தை அளித்தது. இந்திய விடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தில் இணைய விரும்பினார்.
அமீர், மாஸ்கோவில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அலுவலகத்துக்குச் சென்று அங்கு இந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்த லொஹானி என்பவரைச் சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். லொஹானியை எம்.என்.ராய் கொண்டு வந்திருந்தார். ஆனால் லொஹானி, அமீர் ஹைதர்கானை சந்திக்கவே இல்லை. ஏதாவது நொண்டிச்சாக்கைக் கூறி தவிர்த்துவந்தார். இதனால் அமீர்ஹைதர்கான் அவரை சந்திக்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டார்.
1927இல் நவம்பர் புரட்சியின் பத்தாம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வந்திருந்தனர். இந்தியாவிலிருந்து மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடுவின் இளைய சகோதரி சுஹாசினி வந்திருந்தார்கள். சுஹாசினி பல்கலைக் கழகத்தில் மாணவராகச் சேர்க்கப்பட்டு அமீர் ஹைதர்கானுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1927 இறுதியில் அமீர் ஹைதர்கான் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார்.
பின்னர் அமீர் ஹைதர்கான் செஞ்சேனையின் மூத்த அதிகாரி ஒருவரின் தலைமையில் சில தொழிற்சாலைகள், அருங்காட்சியகங்கள், கிரெம்ளின், லெனின்கிராட் ஆகிய இடங்களுக்குப் பயணமாகச் சென்றனர். புரட்சிப் படைகள், புரட்சியை வழிநடத்திய ஸ்மோல்னிக் கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
குளிர்கால அரண்மனைக்கும், புரட்சியின் முதல் குண்டை வெடித்த கப்பலான அரோராவுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். புரட்சிக்கு முன் புரட்சியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த பாதாளச் சிறைகளுக்கும் அவர்கள் சென்றனர்.
பல்கலைக் கழகத்தில் அமீர் ஹைதர்கானின் கல்வி முடிந்திருந்தது. சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் பின்வாங்கிய பிறகு எம்.என்.ராய் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவி காலியாக இருந்தது. அந்தப் பொறுப்பை தற்காலிகமாக தோழர் பெட்ரோவ்ஸ்கி பார்த்து வந்தார்.
இப்போதைய கேள்வி அமீர் ஹைதர்கான் எங்கு செல்ல வேண்டும் என்பதாகும். அமீர் ஹைதர்கான், பெட்ரோவ்ஸ்கியிடம்நான் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புகிறேன்என்றார். மகிழ்ச்சியடைந்த பெட்ரோவ்ஸ்கி, ‘இந்தியாவில், முறையான கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. நீங்கள் அங்கு கடினமாக உழைக்க வேண்டும்.
பிரிட்டிஷ் உளவு அமைப்பிடம் வலைப் பின்னல் உள்ளது. உலகம் முழுதும் எல்லா மூலைகளிலும் அது இருக்கிறது. அவர்களது கடற்படையும் மிக வலிமையாக உள்ளது. உலகின் பெரும்பாலான துறைமுகங்களில் அவர்களது கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. நீங்கள் இந்தியாவில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்என்று கூறி அமீர் ஹைதர்கான் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வாறு அந்தக் காலத்தில் சர்வ தேச அளவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்துவந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவாக அன்றைய தினம் செயல்பட்டுவந்த கோமின்டர்ன் (comintern) என்னும்கம்யூனிஸ்ட் அகிலத்தால், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி எழுப்புமாறு அனுப்பிவைக்கப்பட்ட தோழர்தான் அமீர் ஹைதர்கான்.
அவர் இந்தியா வந்தபிறகும் அவரால் அவ்வளவு எளிதாக இங்கே செயல்படமுடியவில்லை, செயல்படவிடவில்லை. அவற்றைத் தோழர்கள் விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், ‘அமீர் ஹைதர்கான்காவியம் படைத்த கம்யூனிஸ்ட்என்ற தலைப்பிலான புத்தகத்தை படிக்க வேண்டும்.
தோழர் அமீர் ஹைதர்கானிடம் அவரது வாழ்க்கை வரலாற்றை நேரிடையாகக் கேட்டுப் பெற்ற டாக்டர் அயூப் மிர்சா என்பவர் உருதுமொழியில் எழுதிய வரலாற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த தோழர் முகமது அமீன் மிகச் சிறப்பாகச் சுருக்கி ஆங்கிலத்தில் அளித்திருந்த புத்தகமாகும்.
அதை, தோழர் கி.ரமேஷ், மிக அற்புதமாகத் தமிழாக்கம் செய்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.தோழர் அமீர்ஹைதர்கான் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு தோழரும் அவசியம் அறிந்துகொள்வது புரட்சிகரப் பணிகளில் ஈடுபடும் தோழர்களுக்கு  உத்வேகத்தை அளித்திடும்.