Wednesday, December 21, 2022

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும் மாநிலங்களவையில் எஸ். கல்யாணசுந்தரம் வலியுறுத்தல்

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும் மாநிலங்களவையில் எஸ். கல்யாணசுந்தரம் வலியுறுத்தல் புதுதில்லி, டிச.22- 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்றும், 100 நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் திமுக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் கோரினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நிதி சட்டமுன்வடிவு மீது பேசிய திமுக உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் தன்னுடைய கன்னிப்பேச்சில் கூறியதாவது: மாண்புமிகு தலைவர் அவர்களே, எங்கள் இயக்கத்தின் தோற்றுணர் பேரற
ிஞர் அண்ணா அவர்கள் உரை நிகழ்த்திய இந்த சரித்திரப் புகழ்பெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில் எனக்குப் பேச வாய்ப்பளித்து ஓர் உறுப்பினராக்கி, பெருமை சேர்த்திருக்கும் எங்களுடைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்ற தலைவர்களோடு பயணம் செய்த எனக்கு, இந்த மாநிலங்களவையில் வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். மாண்புமிகு தலைவரவர்களே, நாடாளுமன்ற மாநிலங்களவையில்இது என் முதல் உரையாகும். எனவே, நாடாளுமன்ற மரபினைக் கருத்தில் கொண்டு, எனக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கியும், இடையூறு எதுவும் இல்லாமல் என் உரையை முடிக்கவும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாக ஒரு போலி வேடம் இட்டு மூன்று சட்டங்களைக் கொண்டு வந்து, திரும்பப் பெற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்ததைவிட, உரங்களின் விலை, பொட்டாஷ், யூரியா, டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் போன்றவைகளின் விலைகள் பத்து மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், விவசாயிகளின் உற்பத்திப் பொருளான நெல் விலையோ, கோதுமை விலையோ, கரும்பின் விலையோ அல்லது சிறு தானியங்களின் விலையோ அந்த அளவுக்கு உயரவில்லை. இதற்கு ஈடுகட்டும் அளவிற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி விவசாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை. இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி, உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடும் துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை மீட்டெடுக்கவும், இந்த அரசு எந்தவொரு தேவையான, சரியான, தெளிவான திட்டங்களைக் கொண்டுவரவிலிலை. ஒட்டுமொத்தமாக இந்த அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. அடித்தட்டு மக்களுக்கு உஜாலா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமையல் எரிவாயு அளிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ஒரு பக்கத்தில் 400 ரூபாய்க்கு விற்ற ஒரு சிலிண்டர் விலை, இப்பொழுது 1250 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. இப்பொழுது பொது மக்களுக்கு உஜாலா திட்டம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல நாட்டு மக்களின் அத்தியாவசியப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டீசல், பெட்ரோல் விலையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல்களை மனதில் கொண்டு, சில நேரம் விலையை உயர்த்தாமல் ஏமாற்றி, பின்னர் இரண்டு மடங்காக உயர்த்தியது. இதனால் போக்குவரத்து செலவுகள் கூடுதலாகி, விலைவாசியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதே போல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருக்கும்போது அனைவருக்கும் பயன்படும் வகையில் செல்லிடப் பேசி வசதியை அடித்தட்டு மக்கள் பயன்பெறும் ஒரு சாதனையைப் படைத்தது. ஆனால் இந்த அரசு வந்த நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி வழங்கப்படவில்லை. 5ஜியும் வழங்கப்படவில்லை. இவை இரண்டையும் தனியாருக்கு வழங்கியுள்ளது. ஆனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது எந்தவொரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பணிபுரிவதில்லை. பிஎஸ்என்எல் மட்டுமே தன் பணியைச் செம்மையாகச் செய்து வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தை அழிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகரான தில்லியில் பிஎஸ்என்எல் சேவை முழுமையாகக் கிடைப்பதில்லை. நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஏழை மக்களுக்கு வேலை கொடுக்கும் உரிமையை அடிப்படையாகக் கொண்டு, 100 நாள் வேலை என்கிற மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை உலகப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டி, அதற்கு ஒதுக்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் அவ்வாறு நிதியை காலத்தே ஒதுக்காமல் அந்த ஏழை எளிய மக்களுக்கு உள்ள உரிமையை இந்த அரசு பறித்து வருகிறது. அவர்களுக்கு 100 நாட்களுக்குப் பதிலாக 150 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் கும்ப மேளா என்று அழைக்கப்படும் மகா மகம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அடுத்த மகாமகம், 2028இல் நடைபெறவுள்ளது. பல லட்சம் மக்கள் வந்து செல்லும் கும்பகோணம் நகரத்தை மேன்மைப்படுத்தி பொது மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்திட தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்து ஆலயங்களை மாநில அரசு, புதுப்பித்து வருகின்றது. இதற்கும் ஒன்றிய அரசு சிறப்பு நிதி ஒதுக்கி ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நான் சார்ந்த தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான ரயில்வே பாதை, விழுப்புரம்-தஞ்சை இரயில்பாதை இரட்டை இரயில்பாதையாக இன்னமும் மாற்றப்படவில்லை. அதே போல் மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதையைப் புதுப்பிக்கும் கோரிக்கையும், சென்னை-தஞ்சாவூர் இடையே இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் விட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிலுவையில் இருந்து வருகின்றன. இவற்றை உடனே முடிக்க வேண்டுமென இந்த மன்றத்தில் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும் ஒன்றிய அரசு நிறுவனங்களான ரயில்வே, நெய்வேலி, பெல் போன்ற நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தங்கள் மூலமாக வைக்க விரும்புகிறேன். தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான கைவினைப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவைகள் அனைத்தையும் அரசே கையகப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் கைவினை கலைஞர்களுக்கு ஒரு போனஸ் வழங்குவது போன்ற வாய்ப்பு கிடைக்கும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், அங்கு தொழில் துவங்குவது சாத்தியம் இல்லை. அதனால் விவசாயம் சார்ந்த மாடு வளர்ப்பு, பால் பதப்படுத்துதல், மீன் வளர்த்தல், உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், நெல் அரவை தொழிற்சாலை, கடலை, தேங்காய், எள் போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைகளை மேற்கொள்ள மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக ஒன்றிய அரசு இருந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை தனிநபர் தீர்மானமாக இந்த அவையில் நான் தாக்கல் செய்திருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளின் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஈட்டியுள்ளபோதிலும் அவற்றை சி.எஸ்.ஆர். முறை மூலமாக சரியான விகிதத்தில் அவை தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளித்திடவில்லை என்பதை நான் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், சி.எஸ்.ஆர். திட்டத்தை அமல்படுத்தும்போது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுக்களை உருவாக்கி இந்தப் பணிகளைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொருள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபின், கலால் வரி எடுக்கப்பட்டுவிட்டதால், கரும்பு வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக கரும்பு பயிரிடுவதால், நெல்லைப் போல் கரும்பு விவசாயிகளுக்கும் மானியங்கள் வழங்கிட கரும்பு வளர்ச்சி நிதியைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் தனியார் கரும்பாலைகள் மூடப்பட்டுவிட்டதால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதிப்பைப் போக்கும் விதத்தில் மூடப்பட்ட கரும்பாலைகளைத் திறப்பதற்கு, மாநில அரசுடன் கலந்து பேசி ஒன்றிய அரசு நிதி உதவி செய்திட வேண்டும். தஞ்சை டெல்டா மாவட்டத்தில் ரயில்வே நிலையங்கள் அருகே பயன்படுத்தப்படாத நிலங்கள் உள்ளன. அதில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும். நெல் மற்றும் இதர பொருட்களை ரயில்வே மூலம் எடுத்துச் செல்ல வசதியாக ரயில்வே துறை மூலம் குடோன் அமைத்தால் ரயில்வேக்கு வருமானம் கிடைத்திடும். அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் தஞ்சை மாவட்டத்தில் 20 கிராமங்களை டிஜிடல் கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எஸ். கல்யாணசுந்தரம் பேசினார். (ந.நி.)

Thursday, November 10, 2022

ஆர்எஸ்எஸ்-இன் இலட்சியம்: இந்து ராஷ்ட்ரம் -சவெரா (தமிழில்:ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ்-இன் இலட்சியம்: இந்து ராஷ்ட்ரம் -சவெரா (தமிழில்:ச.வீரமணி) 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மோடிக்கு வாக்களித்த இந்தியர்களில் அநேகமாக எவருக்குமே தாங்கள் ஆர்எஸ்எஸ் என்னும் ‘ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்’ இயக்கத்திற்குத்தான் உண்மையில் வாக்களித்திருக்கிறோம் என்று தெரியாது. மோடி அந்த இயக்கத்தின் பிரச்சாரகர் என்னும் முழு நேர ஊழியராக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான வர்களும், மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலானவர்களும் நீண்டகாலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இருந்துவருபவர்களேயாவர். பிரதமர் மோடியிலிருந்து அவரின்கீழ் பணிபுரியும் அத்தனை பேர்களுமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தாலும், சிந்தனைகளாலும் பயிற்றுவிக்கப் பட்டவர்களாவார்கள். ஆர்எஸ்எஸ் கடந்த 90 ஆண்டு காலமாக எதனைப் பிரச்சாரம் செய்து வந்ததோ, அதனை நாடு முழுதும் தங்களின் வன்முறை நடவடிக்கைகளின் மூலமாக எடுத்துச் செல்லும் வேலைகளையே இதன்கீழ் இயங்கிடும் டஜன் கணக்கான அமைப்புகள் துணிச்சலுடன் செய்து கொண்டிருக்கின்றன. இத்தகைய இவர்களின் பிரச்சாரம் இந்திய சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே சண்டை மற்றும் அவநம்பிக்கையை உருவாக்கிடும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் ஒற்றுமையைக் கிழித்தெறிந்து, நாட்டை மத்தியகால இருள்சூழ்ந்த காலத்திற்கு இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனாலும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கூட்டாளிகளும் விரும்புவது என்ன? எந்தவிதமான இந்தியாவை அவர்கள் கட்டி எழுப்பு விரும்புகிறார்கள்? எந்தவிதமான சமூகத்தை அவர்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கும் சமூகம் ஆபத்தானது என்றும் நாட்டையே எரித்துச் சாம்பலாக்கிடும் என்றும் ஏன் கூறுகிறோம்? இதனைப் புரிந்துகொள்ள சற்றே முயல்வோம். இவர்கள் கூறும் ‘இந்து’ தேசம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இறுதி இலட்சியம் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் ‘இந்து தேசத்தை’ அமைத்திட வேண்டும் என்பதேயாகும். ‘இந்து ராஷ்ட்ரம்’ என்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ்-இன் தொலைநோக்குப் பார்வை என்ன என்பது குறித்து இவ்வியக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவரும் இவ்வியக்கத்தின் சித்தாந்தத்திற்கு மிகவும் முக்கியமாக விளங்குபவருமான எம்.எஸ். கோல்வால்கர், இது தொடர்பாக ஏராளமான விவரங்களைத் தன்னுடைய “நாம் – அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம்” (“We-or Our Nationhoold Defined”) என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். மோடி, இவரை ஓர் ஆன்மீக ஜாம்பவான் என்றும் தொலைநோக்குப் பார்வையுள்ளவர் என்றும் சித்தரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கோல்வால்கர், அனைவரும் அறிந்துள்ள அறிவியல் சாட்சியங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, இந்த பூமியில் உள்ள இந்த ‘தேசத்தில்’ நாம் பல லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம் என்கிறார். இந்த பூமி, பன்முகத்தன்மை கொண்டவர்கள், ஆன்மீக மேதைகள் மற்றும் தெய்வீகத்தன்மை படைத்தவர்கள் வாழ்ந்த பூமி. பின்னர் இந்துக்கள் திருப்தி மனப்பான்மையுள்ளவர்களாகவும், உணர்வு மங்கியவர்களாகவும் மாறிப்போனார்கள். இம்மாபெரும் பூமி, “கடந்த ஆயிரம் ஆண்டுகளில்” “கொலைபாதகக் கொள்ளையர்களின் கூடாரமாக” மாறிப்போனது. இது, இந்துக்களின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது. இவ்வாறு கூறுவதன்மூலம் கோல்வால்கர், முஸ்லீம்களைத்தான் இவ்வாறு இந்துக்கள் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் என்று குறைகூறுவது தெளிவாகவே தெரிகிறது. இப்போது நம்முன் உள்ள கடமை மீளவும் இந்து தேசத்தைக் கட்டி எழுப்புவதும், மீளவும் நிறுவுவதுமேயாகும் என்று கோல்வால்கர் கூறுகிறார். இந்து ராஷ்ட்ரத்தில் வரையறுக்கப்பட்டுள்ள முதல் குணாம்சம் என்பது, இந்துக்கள் மட்டுமே அதன் அங்கமாக இருக்க முடியும் என்பதாகும். “இந்த நாட்டில், இந்துஸ்தான், அதன் இந்து மதம், இந்து கலாச்சாரம் மற்றும் (சமஸ்கிருதம் மற்றும் அதன் தொடர்புனுள்ள இயற்கையான குடும்பத்தைச்சேர்ந்த) இந்து மொழி ஆகியவற்றுடனான இந்து இனம் தேசம் என்பதன் கருத்தியலை முழுமையாக்குகிறது. அதாவது, இந்துஸ்தான் புராதன இந்து தேசமாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது மற்றும் தொடர்ந்து இருந்து வரவேண்டியதுமாயிருக்கிறது. இதனுடன் சேர்ந்திராத எவராக இருந்தாலும், அதாவது இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழியுடன் சேர்ந்திராத எவராக இருந்தாலும், ‘இயற்கையாகவே’ அவர்கள் உண்மையான தேசிய வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக வீழ்ந்துவிடுவார்கள்.”(ப.99) இவ்வாறு தாங்கள்தான் மற்ற இனத்தைவிட மேலாதிக்கவாதிகள் என்று பொருள்படக்கூடிய கோல்வால்கரின் இந்தக் கூற்றானது, மற்ற மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதை மறைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்களுடைய சமஸ்கிருத பிராமணியக் கண்ணோட்டத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. இவர்களின் கூற்றுப்படி, இந்து ராஷ்ட்ரம் என்பது சமஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுபவர்கள் மட்டுமே. இவ்வாறு இவர்களின் இந்து ராஷ்ட்ரம் திராவிட மொழிக் குடும்பத்தை ஒதுக்கிவிடுகிறது மற்றும் பழங்குடியினர் மொழிகள் பலவற்றையும் ஒதுக்கிவிடுகிறது. இதன்காரணமாகத்தான் பாஜக மற்றும் அதன் முந்தைய பெயரில் அமைந்திருந்த ஜன சங்கம் உட்பட சங் பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் இந்தியைத் திணிப்பதற்குத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில் இவர்களின் பார்வையில் இந்து அல்லாத அனைவரும் தேச வாழ்க்கைக்கு வெளியே நிறுத்தப்படுவதாகும். இதனைப் பின்வரும் பத்திகளில் கோல்வால்கர் நேரடியாகவே முன்வைக்கிறார்: “ஆரம்பத்திலேயே ஒன்றை நாம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, ‘தேசம்’ என்கிற வரையறை குறித்து நாம் குறிப்பிட்டுள்ள ஐந்து நிபந்தனைகளுக்குள், வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு, இந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரை, அவர்கள் தேசிய வாழ்வில் இடம்பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடைய இன, மத மற்றும் கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்களெனில், அவர்கள் அந்நியர்களாக (foreigners)க் கருதப்படுவதைத்தவிர, வேறெப்படியும் இருக்க முடியாது. (ப.101) வேறு வார்த்தைகளில் சொல்வதானால் - முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்திஸ்டுகள் மற்றும் பல பழங்குடியினத்தவர்களாகவுள்ள - இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துயிசத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல், இரண்டாம்தர பிரஜையாக அல்லது அதைவிட மோசமாக வாழ்வதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கோல்வால்கர் மிகவும் தெளிவாகவே அவர்களை ‘அந்நிய இனத்தினர்’ (‘foreign races’) என்று அழைப்பதன் மூலம், இதில் எவ்விதமான குழப்பத்திற்கும் இடமில்லை. “…இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் ஒன்று, இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதத்தை மதித்திடவும், பயபக்தியுடன் போற்றித் துதித்திடவும் வேண்டும், இந்து இனத்தையும், கலாச்சாரத்தையும், அதாவது இந்து தேசத்தை வானளாவப் புகழ்வதைத் தவிர வேறெந்த சிந்தனையையும் ஏற்காதிருக்க வேண்டும், தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களை யெல்லாம் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும், அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்புரிமைகளையும் உரிமைபாராட்டாமல், முன்னுரிமை சலுகைகள் எதனையும் கோராமல், ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக்கூடக் கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் அவர்கள் வேறெந்த விதத்திலும் இருந்துவிடக்கூடாது.” (பக்.104-5) கோல்வால்கர் 1930களின் பிற்பகுதியில், அடால்ப் ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி ஜெர்மனியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார். நாஜிக்கள் யூதர்கள் நடத்திய விதத்தால் இயற்கையாகவே மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த கோல்வால்கர், அவர்கள் யூதர்களை நடத்திய விதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு எழுதியதாவது: “ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.’’(ப.88) முஸ்லீம்கள் குறித்து ஆர்எஸ்எஸ்-இன் கருத்து என்ன என்பதை இப்போது நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, ஒன்று அவர்கள் இந்துயிசத்தைத் தழுவிட வேண்டும் (“தாய்மதத்திற்குத் திரும்பிட வேண்டும்”) அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதை எதிர்கொள்ள வேண்டும். அதனால்தான் பாஜக தலைவர்கள், தங்கள் மதவெறிக் கருத்துக்களை விமர்சிப்பவர்களை, ‘இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்றும் ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்றும் திரும்பத்திரும்பக் கூறுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002இல் குஜராத்தில் நடைபெற்ற கொலைகளைப் போன்று இந்தியாவின் இதர பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும்போது அவற்றைக் கண்டித்து வாயே திறப்பதில்லை. ஆர்எஸ்எஸ்-இன் வரையறையின்படி, ‘தேசியவாதம்’ (‘nationalism’) என்பதும், ‘தேசபக்தி’ (‘patriotism’) என்பதும் இந்துயிசத்தைப் புகழ்வது என்பது மட்டுமேயாகும். வேறெந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது தேச விரோதச் செயலே. அவற்றைச் செய்வோர் தேசத்துரோகிகளே (traitors)யாவார்கள். இவ்வாறுதான் கோல்வால்கர் கூறுகிறார்: “தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் `தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனத்தைப் பெருமைப்படுத்தக்கூடிய விதத்தில், லட்சியத்தை எய்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் மட்டுமே செயல் படுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தேசத்தின் லட்சியத்தைக் காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும், அல்லது, கருணையான பார்வையுடன் கூறவேண்டுமானால், இடியட்டுகளாக இருக்க வேண்டும்.’’(ப.99-100) மதத்தின் அடிப்படையிலான அரசு கோல்வால்கர் சிந்தனைகள் வெளிப்படுத்துவது என்ன? அவை மதத்தின் அடிப்படையில் ஓர் அரசு அமைய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டவைகளேயாகும். அதன் வழிகாட்டும் கொள்கை என்பது சனாதன தர்மமேயாகும். (அதாவது இந்து புராணங்களில் காணப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களேயாகும்.) இவர்கள் அமைக்கவிரும்பும் மத அடிப்படையிலான அரசு எதுபோன்று இருக்கும்? இப்போது சில நாடுகளில் மத வெறியர்களின் தலைமையின்கீழ் நடைபெற்றுவரும் ஆட்சிகளை இதற்கு உதாரணங்களாகக் கூற முடியும். தலிபான் இயக்கத்தினர் நடத்தி வரும் ஆப்கன் நாட்டை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். இதே போன்றே சிரியாவில் சில பகுதிகளில் நடைபெறும் ஐஎஸ்ஐஎஸ் மதவெறியர்களின் ஆட்சியையும், மற்றும் ஈராக்கில் நடைபெறும் ஆட்சியையும் கூற முடியும். இவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்துகிறார்கள். சவுதி அரேபியாவில் நடைபெறும் ஆட்சியும் இதே போன்றதுதான். (இங்கே பெண்கள் தனியாக எங்கும் செல்ல முடியாது. சமீபத்தில்தான் அவர்களுக்கு வாக்குரிமையே அளிக்கப்பட்டது.) ஈரானில் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். பாஸ்தானில் 1978-88க்குப்பின்னர் ஜெனரல் ஜியாவுல்ஹக் ஆட்சிப் பொறுப்பேற்றபின்பு, இஸ்லாம் மதம்தான் வழிகாட்டும் கொள்கையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று மற்றுமொரு மதத்தின் அடிப்படையிலான அரசு என்பது இஸ்ரேல். அங்கேயுள்ள மக்களை விரட்டியடித்துவிட்டு வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் ஹீப்ரு கொள்கைகளின் அடிப்படையிலேயே ஆட்சிபுரிவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் வன்முறை வடிவங்களில் மிகவும் அதிதீவிரமான வடிவங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக் கின்றன. இவ்வாறு இவை தங்கள் மதத்தினருக்கு எதிரானவர்கள் மீது மட்டுமல்ல, தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களையும்கூட வன்முறைரீதியாக நசுக்கிடும் விதத்திலும் ஆட்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளின் அனுபவங்கள் காட்டுவது என்னவென்றால், இவற்றால் தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே தங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன என்பதேயாகும். உதாரணமாக, கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள்தான் இருந்தார்கள். எனினும் அவர்களால் மேற்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, 1971இல் சுதந்திர வங்க தேசத்தை அமைத்தார்கள். உலகில் இந்து நாடு என்று பிரகடனம் செய்யப்பட்ட நேபாளம், அங்கே ஆட்சிசெய்த கொடுங்கோலனுக்கு எதிராக, சுமார் பத்தாண்டு காலம் ஆயுதமேந்தி வீரச் சமர் புரிந்து, அரசாட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, தற்போத ஒரு குடியரசை நிறுவியிருக்கிறார்கள். இவ்வாறு உலக அளவிலான அனுபவம் காட்டுவது என்னவென்றால் பன்முகத் தன்மையுள்ள மக்கள் வாழ்கின்ற ஒரு நவீன மயமான நாட்டில் ஆட்சி செய்வதற்கு அடிப்படையாக எந்தவொரு மதமும் இருக்க முடியாது என்பதேயாகும். இந்தியாவில் இந்து அரசு ஒன்றை ஆர்எஸ்எஸ் விரும்புவதாக மிகைப்படுத்திக் கூறுவதாக சிலர் கூறலாம். ஆனால் இதில் எவ்விதப் பிழையும் கிடையாத. இதுபோன்ற ஓர் அரசைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். கோல்வால்கரின் சிந்தனைகள் இதைத்தான் கூறுகின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் வழிகாட்டும் கொள்கைகளாக விளங்குவது கோல்வால்கரின் சிந்தனைகளேயாகும். அதனால்தான், சுதந்திரத்திற்குப்பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர், நாட்டை இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஆட்சி புரிவதற்குப் பதிலாக, இந்தப் பூமியின் சட்டமாக விளங்கும் மனுஸ்மிருதியையே நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று, கோரியது. (அதன் 1949 நவம்பர் 30 மற்றும் 1950 ஜனவரி 25 இதழ்களைக் காண்க). மனுஸ்மிருதி என்பது மனு என்னும் முனிவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் இந்து தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற வரையறைகளை வகுத்துத்தந்திருக்கிறது. இதில் பெண்களுக்கு எதிராகவும் தலித்துகளுக்கு எதிராகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஏராளமான விவரங்கள் இருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இதன் நகலை எரித்திட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் வெளிப்படையாகவே தெரிவித்தார். கோல்வால்கர், ஜனநாயகம் என்பது மேற்கத்தியக் கட்டமைப்பு என்றும், அது இந்தியாவுக்குப் பொருந்தக்கூடியது அல்ல என்றும் கூறுகிறார். இந்து ராஷ்ட்ரம் சுயநலமற்ற மற்றும் சுய அர்ப்பணிப்பு கொண்டோரால் நேர்மையானமுறையில் ஆட்சிபுரியப்பட வேண்டும் என்று கோல்வால்கர் எழுதுகிறார். (ஸ்ரீ குருஜி சமாக்ரா, தொகுப்பு 5, பக்.89-90). இந்து ராஷ்ட்ரம் என்பதில் பாசிஸ்ட் சித்தாந்தம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை இவர் மூடிமறைப்பதோடு, பிராமணர்களை உயர்த்திப்பிடிக்கும் வர்ணாச்ரம (அ)தர்மத்தைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பதையும் மூடி மறைத்துள்ளார். ஆர்எஸ்எஸ் என்னும் பாசிஸ்ட் அமைப்பு இத்தகைய வர்ணாச்ரம முறையில் கட்டுப்பட்டுள்ளதுதான் என்பதை இன்றைக்கும் பலர் அறியாதிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-இல் தேர்தல்கள் கிடையாது. இதன் தலைவர், சர்சங்சலக் (sarsanghchalak) என்பவர், இதிலிருந்து ஓய்வுபெறுபவரால் நியமனம் செய்யப்படுபவரே யாவார். இதுநாள்வரையிலும் இவ்வாறு இதன் தலைவராக இருந்த அனைவருமே பிராமணர்கள்தான். அவரின்கீழ் மாநில மற்றும் பிராந்த மட்டத்திலான தலைவர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பின்கீழ் ராணுவ அணிவகுப்புப் பயிற்சிகள் உண்டு, சிறப்பு வணக்கம் அளிக்கும் நடைமுறை உண்டு, சீருடை உண்டு, ‘தேசப்பற்று’ பாடல்கள் உண்டு. இவை அனைத்துமே நாஜிக்கள் பின்பற்றிய நடைமுறைகளையொட்டியே இருப்பதைக் காண முடியும். இவர்கள் அணியும் காக்கி கால் சட்டைகள் மற்றும் கறுப்பு குல்லாய் உட்பட நாஜிக்கள் பாணியிலேயே அமைந்திருக்கின்றன. மக்கள் குறித்த கண்ணோட்டம் என்ன? இந்து ராஷ்ட்ரத்தின் பார்வையில், அவர்கள் மக்களை எப்படிப் பொருத்துகிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? கோல்வால்கர் கூறியிருப்பதுபோல், ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி, வாழ்க்கையின் குறிக்கோள் என்பது தங்கள் மதத்தில் தனக்கு இடப்பட்டுள்ள கட்டளைப்படி வாழ்ந்து, பல்வேறு பிறவிகள் எடுத்து, பின்னர் இறுதியாக பிறவியே இல்லாத நிலையை எட்டியபின் மோட்சத்திற்குச் செல்வதாகும். இப்பூலகில் சுகபோகங்களில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கண்டிக்கிறார்கள். அவற்றை அவர் அவசியமான பாவங்கள் (necessary evils) எனவும் அவற்றை ஒருவர் பொருட்படுத்தக்கூடாது என்றும் கூறுகிறார். மக்களின் கடும் வறுமை, வேலையின்மை, பிணி, அறியாமை மற்றும் ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்கள் குறித்தும் தனிநபர் எவரும் கவலைப்பட வேண்டாம், அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பதே கோல்வால்கரின் கூற்றாகும். இந்து ராஷ்ட்ரம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையின் விவரங்கள் குறித்து இவர்கள் கூறுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதாகும். கோல்வால்கர் கனரகத் தொழில்மயத்திற்கு எதிரானவர் (தொகுதி 9, ப.59). கிராமங்கள் சுயசார்புடையவைகளாக மாற வேண்டும் என்றே விரும்புகிறார் (தொகுதி 5, பக்.13-14). உற்பத்தியைப் பெருக்குவதற்கு மாட்டு சாணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் (தொகுதி 5, பக்.65-68). வறுமை குறித்தும் வழக்கம்போல் கண்ணீர் விடுகிறார். அத்துடன் அதனை ஒழித்தக்கட்டுவதற்காக முழக்கம் எழுப்புகிறவர்களையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். பின்னர் அவர் வறுமையை ஒழிப்பதற்காக முன்வைக்கும் தீர்வு என்னவென்றால், ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கையளவு தானியம் எடுத்து ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கும், பசியால் வாடுகிறவர்களுக்கும் அளித்திட வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்(தொகுதி 5, ப.92)! ஆனால் தீர்வு என்ன? வறுமையை ஒழிக்க ஒரே வழி மக்கள் சுயநலத்துடன் வாழ்வதை கைவிட்டு, மிகவும் நேர்மையுடன் கடினமாக உழைத்து தேசிய வளங்களை அதிகரித்திட வேண்டும் என்று எழுதுகிறார். (தொகுதி 5, பக்.263-265). இதுதான் மாபெரும் இந்து ராஷ்ட்ரம் இவ்வாறான அடித்தளத்தின்மீதுதான் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நம்பிக்கை அளித்திடும் கலங்கரை விளக்கமாக மாற வேண்டும் என்றும் கூறுகிறார்! இதன் பொருள் என்ன? இதன் பொருள் என்னவென்றால் உழைக்கும் மக்கள் அதிக ஊதியமோ அல்லது வசதிகளோ எதுவும் கோராது, தேசத்திற்காக உழைத்திட வேண்டும் என்பதும், அவர்களின் உடனடித் தேவைகளுக்கு குறைந்தபட்சம் எந்த அளவுக்குத் தேவையோ அதை மட்டுமே அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுமேயாகும். அவர்களின் உழைப்பால் உருவாகும் செல்வம் அவர்களைச் சுற்றி பரந்து பரவிடும். ஆனால் அவர்கள் அதனைத் துய்த்திட முடியாது. நிலம், எந்திரங்கள் மற்றும் மூலதனம் போன்ற உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாகப் பெற்றிருக்கக்கூடிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் குறித்து கோல்வால்கர் கூறுவது என்ன? இவர்களிடம் ‘மன மாறுதலை’ (‘change of heart’) எதிர்பார்த்திட வேண்டும் என்று கோல்வால்கர் பரிந்துரைக்கிறார். அப்போதுதான் அவர்கள் செல்வத்தை சேகரிப்பதை நிறுத்திக்கொண்டு, அதனைப் பகிரத் தொடங்குவார்களாம் (தொகுதி 2, பக்.100-101)! இது முதலாளித்துவம் மற்றும் சுரண்டலுக்கு ஆதரவான ஒரு காந்தியபாணி தீர்வாகும். கோல்வால்கர் இதனை ஓர் ‘இந்தியனின்’ தீர்வு என்கிறார். உண்மையில் இது ஓர் இந்தியனின் தீர்வும் கிடையாது, இரக்கமற்ற முறையில் இடைவிடாது நடந்துகொண்டிருக்கும் வர்க்கச் சுரண்டலுக்குத் தீர்வும் ஆகாது. அனைத்து மனித சமூகங்களிலுமே வர்க்கச் சுரண்டலின் சுபாவம் இப்படித்தான் இருக்கும். ஆர்எஸ்எஸ் இயக்கம், மாபெரும் இந்துயிசத்தின் அடிப்படையில் அமைக்கவிரும்பும் இந்து ராஷ்ட்ரத்தில் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கஜானாக்களை நிரப்பிட, கோடானுகோடி இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஒட்டச் சுரண்டப்படும் என்பதே பொருளாதாரரீதியாக இவர்களின் எதார்த்த நடவடிக்கைகளாகும். இவர்கள், மக்களைக் குருட்டுத்தனமான முறையில் மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது, அவர்களை முட்டாளாக்கும் ஒரு கருவியேயாகும். இவ்வாறு மதவெறி நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்திடும் அதே சமயத்தில் அவர்கள், பொருளாதார மற்றும் சமூகத்தில் மேட்டுக்குடியினராக இருப்பவர்களை, நிலவுடைமையாளர்களையும் தொழில் உடைமையாளர்களையும், உயர் சாதியினரையும், தங்களைப் பின்பற்றுபவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பதற்காகவும், இவர்களின் லாபங்களை அறுவடை செய்வதற்காகவும் எப்போதும் தங்கள் பாசிஸ்ட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆர்எஸ்எஸ் வெற்றி பெற முடியுமா? இத்தகைய மதத்தின் அடிப்படையிலான பயங்கரமான பார்வை இவர்களுடைய அறிவியலற்ற, பண்டைக்கால பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளிலிருந்து உதித்தவைகளாகும். இதனை அப்படியே இந்திய மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றால் அவர்கள் அதனை முற்றிலுமாக நிராகரித்திடுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளுக்கு முன் உயர்சாதியினர் நாக்பூரில் அமர்ந்து பல பத்தாண்டுகளுக்கு முன் சிந்தித்திட்ட உயர்சாதியினரின் சிந்தனைகளையெல்லாம் தாண்டி இந்திய சமூகமும், உலக சமூகமும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. இந்திய மக்கள் மிகவும் வலுவாக ஆட்சி புரிந்துவந்த காலனியாதிக்க வெள்ளையர்களையே எதிர்த்துப் போராடி வெற்றிகரமாகத் தூக்கி எறிந்தவர்களாவார்கள். இதில் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு, சாதிகளுக்கு அப்பாற்பட்டு, இன மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று போராடியிருக்கிறார்கள். பகுத்தறிவின் அடிப்படையில் அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு நின்றுதான் ஒரு சமத்துவ சமுதாயத்தை அமைத்திட முடியும் என்பது உண்மை என்ற போதிலும், அதனை இன்னமும் இந்தியாவில் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் சுதந்திர இந்தியாவில் உள்ள ஆளும் வர்க்கங்கள் மக்கள் மத்தியில் பிளவு விஷத்தைத் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனைவரின் விடுதலைக்குமான பாதை என்பது மதத்தின் அடிப்படையில் இருக்க முடியாது என்பதை மக்கள் தங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தெரிந்துகொண்டு வருகிறார்கள். எனவேதான், ஓர் இந்து முதலாளி தன்னைக் கொடூரமான முறையில் சுரண்டினாலும், தன்னை அவமானப்படுத்தினாலும் அதனை எந்தவொரு இந்து தொழிலாளியும் பொறுத்துக்கொள்ள மாட்டான். இந்து நிலப்பிரபுக்களால் பாலியன் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுவதையோ அல்லது கொல்லப்படுவதையோ எந்தவொரு தலித் பெண்மணியும் பொறுத்துக்கொள்ள மாட்டாள். எனவேதான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகள் அவிழ்த்துவிடும் சரடுகளையெல்லாம் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, முறியடித்திட வேண்டும். ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் இயக்கங்களும் இந்து ராஷ்ட்ரம் என்னும் தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக, மக்களைக் கூறுபடுத்திடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்திடும். மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் மதவெறி விஷத்தை விதைத்துக்கொண்டே இருந்திடும், இவற்றின் மூலம் மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்திட முயற்சித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய இவர்களின் இழிநடவடிக்கைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று போராடி, முறியடித்திட வேண்டும். இதில் ஏராளமானவர்கள் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும். இப்போது ஒன்றியத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதையொட்டி இவர்களின் இத்தகைய இழிநடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, சமூகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் முடமாக்கி, தங்களுக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையை உருவாக்கி, எப்படியாவது ஆழமாக தங்கள் விஷ விதைகளை வேரூன்ற வைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதனை வெற்றி பெறச் செய்திடக் கூடாது. ..

Sunday, November 6, 2022

நவம்பர் புரட்சியும் அதில் பெண்களின் பங்கும் - ஜெயதி கோஷ்

நவம்பர் புரட்சியும் அதில் பெண்களின் பங்கும் -ஜெயதி கோஷ் (தமிழில்:ச.வீரமணி) ரஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி வேண்டும், அமைதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் மேற்கொண்ட பிரம்மாண்டமான பேரணியுடன்தான் துவங்கியது. இயக்கத்திற்குள் பல்வேறு சமூகத்திலிருந்தும் பெண்களை அணிதிரட்டிக் கொண்டுவருவதற்கு இப்பேரணி ஓர் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக 1917இன் முந்தைய மாதங்களில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி வீழ்வதற்கும், பின்னர் அமைந்த ஒழுங்கற்ற மற்றும் தாறுமாறான கெரன்சி அரசாங்கமும் அதற்குப் பின்னர் போல்ஷ்விக் புரட்சி நவம்பரிலும் ஏற்படுவதற்கும் இட்டுச் சென்றது. பெண்கள் அரசியலில் தலையிடுவது என்பது புதிது. எனவே எதிர்பாராததும் கூட. புரட்சிக்கு முந்தைய ரஷ்யா என்பது ஓர் ஆணாதிக்க, ஒரு வகையான நிலப்பிரபுத்துவ சமுதாயமேயாகும். புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் பெண்களின் நிலைமை என்பது இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்ததைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. உரிமைகள் ஏதுமற்று, சமூகக் கட்டுப்பாடுகள் மிகுந்தவர்களாகவே அவர்கள் இருந்துவந்தார்கள். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகம் எதிலும் அவர்கள் இருக்க முடியாது. உண்மையில் சமூகத்தின் முன் எந்தக் கருத்தையும் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையும் கிடையாது. பொதுவாக வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே அவர்கள் இருத்தி வைக்கப்பட்டார்கள். மிகவும் கீழான நிலையிலும் இழிந்த நிலையிலும் அவர்கள் வாழ்க்கை இருந்து வந்தது. அவர்களுக்கு சொத்துரிமை கிடையாது. பொதுவாக அவர்களால் சுயமாகச் சம்பாதித்திட முடியாது. 19வது நூற்றாண்டின் முடிவில் ரஷ்யப் பெண்களில் 13 சதவீதத்தினர் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், 19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரப் பகுதிகளில் தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்பட்ட சமயத்தில், ஏழைப் பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பணிகளை மேற்கொண்ட இளம்பெண்களாக இருந்தார்கள். அவர்களின் வேலை தன்மை என்பது மிகவும் கடினமானதாகும். அவர்களுக்கு அளித்த ஊதியம் என்பதும் மிகவும் சொற்பம். ஆயினும், தங்களாலும் வீட்டிற்கு வெளியே வந்து, வேலைகளைச் செய்ய முடியும் என்பதையும், வீடுகளில் எவ்வித வருமானமும் இல்லாது எவரையாவது “சார்ந்திருப்பவர்களாக” இருந்ததைவிட, ஓரளவுக்கு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பதையும் அவர்களுக்கு அது அளித்தது. முதல் பெண் புரட்சியாளர்கள் அதே சமயத்தில், 1860இன் பிந்தைய ஆண்டுகளிலிருந்து, 1870 வரை, உயர் மற்றும் நடுத்தர வர்க்கப்பெண்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அன்றைக்கிருந்த சமூக அரசியல் ஆண்களுக்கு மட்டுமே இருந்த நிலைமைகளிலிருந்து தங்களுக்கும் நிவாரணம் கோரி உயர்குடி குடும்பங்களிலிருந்த படித்த பெண்கள் அப்போது துளிர்விட்ட சமூக ஜனநாயக இயக்கங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். பெண்களின் கல்வி மற்றும் பெண்களுக்கான வாக்குரிமைக்கான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டதுடன் சமூக மாற்றத்திற்கான கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. இவை, “பெண்களின் பிரச்சனைகள்” குறித்து அதிகக் கவனம் செலுத்தவும் இட்டுச் சென்றது. வெரா ஜாசுலிச் (Vera Zasulich), மரியா ஸ்பிரிடோனோவா (Maria Spiridonova) மற்றும் வெரா ஃபிக்னர் (Vera Figner) ஆகியோர் ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர அனுமதிக்காததால், வெளிநாடுகளில் உயர்கல்வியைக் கற்றவர்கள். இவர்கள் பின்னர் புரட்சியாளர்களாக மாறினார்கள். வெரா பிக்னர், ஒரு புரட்சியாளரின் நினைவுக்குறிப்புகள் (Memoirs of a Revolutionist) என்ற பெயரில் ஒரு சுயசரிதையை எழுதியிருக்கிறார். நரோட்னயா வோல்யா (Narodnaya Volya) என்னும் பயங்கரவாதக் குழுவில் உறுப்பினராக இருந்த இவர், 1881இல் ஜார் மன்னனான அலெக்சாண்டர் 2 கொல்லப்பட்டதை ஆரவாரத்துடன் வரவேற்றிருக்கிறார். காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா போன்ற இதரர்களும் அராஜகவாதி (anarchist) பீட்டர் குரோபோட்கின் என்பவரின் செல்வாக்கினால் நரோத்னிக்குகளாக மாறினார்கள். காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா அரசியல் மாற்றம் அமைதி வழியிலேயே வர வேண்டும் என்று கூறிவந்தபோதிலும், ஜாரிஸ்ட் ரஷ்யாவில் சைபீரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். இவர் பின்னர் போல்ஷ்விக் ஆட்சிக்காலத்தின்போது போல்ஷ்விக் ஆட்சியைக் கடுமையாக எதிர்த்ததால், பிரேக் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும் மிகவும் கொந்தளிப்பாக இருந்த அன்றைய ரஷ்யாவில் காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா மற்றும் இதர நரோத்னிக் பெண்கள், பெண்களின் மனோபாவம் மற்றும் அபிலாசைகளை மாற்றியமைத்ததில் முக்கிய பங்களித்தவர்கள் ஆவார்கள். நடேஷ்தா குரூப்ஸ்காயா (Nadezhda Krupskaya) (லெனின் மனைவி), அலெக்சாண்ட்ரா கொலண்டாய் (Alexandra Kollontai), யெலினா ஸ்டாசோவா(Yelena Stassova), இனெஸ்ஸா ஆர்மந்த்(Inessa Armand) மற்றும் கொங்கோரிடியா சமியோலோவா (Konkordia Samiolova) போன்ற பலர் பெண் சமத்துவத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு, போல்ஷ்விக் தலைமையின் மிக முக்கியமான தலைவர்களாக உருவானார்கள். 1917 புரட்சிக்கு முந்தைய பத்தாண்டுகள் என்பது இத்தகைய போர்க்குணம் மிக்க பெண்களுக்கும் பெண்ணியவாதிகளான “பூர்ஷ்வா பெண்களுக்கும்” இடையேயான பதட்டத்துடனே காணப்பட்டது. ஏனெனில் “பூர்ஷ்வா பெண்கள்”, போல்ஷ்விக்குகளைக் கண்டு அஞ்சினார்கள். போல்ஷ்விக் பெண்களோ, பெண் விடுதலைக்கான போராட்டம் என்பது வர்க்கப் போராட்டத்தைவிட தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்திடுமோ என்று அஞ்சினார்கள். போல்ஷ்விக் பெண்கள் மத்தியில், “பெண்கள் பிரச்சனை” என்பது, ஜாரிஸ்ட் ரஷ்யாவைத் தூக்கி எறிவது என்கிற தொழிலாளர் வர்க்கத்திற்கான லட்சியங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதிலும், சோசலிசத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இதன்மூலம் மட்டுமே பாலின சமத்துவத்தைக் கொண்டுவர முடியும் என அவர்கள் நம்பினார்கள். உண்மையில், 1914இல் போல்ஷ்விக் பெண்கள் உழைக்கும் பெண்கள் என்று பொருள்படும் ரபோட்னிட்சா (Rabotnitsa) என்னும் ஏட்டைக் கொண்டு வந்தார்கள். இதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக “பெண்ணியப் பிரச்சனைகளைத்“ தவிர்த்தார்கள். ஆயினும் இந்த ஏடு ஏழு இதழ்கள்தான் வெளிவந்தது. பின்னர் புரட்சிக்குப்பின்னர்தான் இது மீண்டும் வெளிவந்தது. ஆயினும் இந்தத் தலைவர்கள் எல்லாரும் புரட்சிக்கு இட்டுச்சென்ற மாபெரும் மக்கள் எழுச்சியில் பங்கேற்ற வீரப்பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவேயாகும். அலெக்சாண்ட்ரா கொலண்டாய் இவ்வீராங்கனைகளைப் பற்றி தன் நினைவுக்குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார்: “ஒருவர் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமானால், அக்டோபர் புரட்சியில் பங்கேற்ற பெண்களை உன்னிப்பாகப்பார்த்தார்களென்றால், அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் வறிய நிலையில் வாழ்பவர்களாக, பட்டினி கிடந்து வருபவர்களாக இருப்பதைப் பார்க்க முடியும். …அவர்கள் தலையில் குளிருக்காக அணிந்திருக்கும் குல்லாய்கள் கிழிந்து காணப்படுவதைக் காண முடியும். (பலருக்கு அதற்குக்கூட வழியில்லாமல் சிவப்புக் கைக்குட்டையை அணிந்திருப்பார்கள்.) கிழிந்த ஆடைகள், ஒட்டுப்போட்ட குளிர்கால ஜாக்கெட், …இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்கள், பெண் தொழிலாளர்கள் மற்றும் வீரர்களின் மனைவிமார்கள், விவசாயப் பெண்கள், நகர்ப்புறங்களிலிருந்து வந்துள்ள குடும்பத் தலைவிகள் எனப் பார்க்க முடியும். அந்தக் காலத்தில், மிகவும் அபூர்வமாகத்தான், அலுவலக ஊழியர்களும், வேலை பார்க்கும் பெண்களும், படித்த பெண்களும், நாரீமணிகளும் பங்கேற்றார்கள். ஆனால் பின்னர், அக்டோபர் புரட்சியின்போது செங்கொடியை ஏந்தி வந்த அறிவுஜீவிகளில் – ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக் கழக இளம் மாணவிகள், பெண் மருத்துவர்கள் -- மிகவும் உற்சாகத்துடன், சுயநலமின்றி, அதே சமயத்தில் லட்சிய வேட்கையோடு கலந்துகொண்டார்கள். அவர்கள் எங்கே அனுப்பப்பட்டார்களோ, அங்கே சென்றார்கள். போர்முனைக்குச் செல்ல வேண்டும் என்கிறீர்களா? வீரர்களின் தொப்பியை அணிந்துகொண்டு, செஞ்சேனை வீரர்களாக மாறினார்கள். அவர்கள் கைகளில் சிவப்புப் பட்டையை அணிவிப்பீர்களேயானால், பின்னர் அவர்கள் போர்முனையில் காயம்பட்டுக் கிடக்கும் செஞ்சேனை வீரர்களுக்கு முதலதவி செய்திட விரைந்து சென்றார்கள். படைகளின் தகவல் தொடர்பு மையங்களில் பணியாற்றினார்கள். இவ்வளவையும் மிகவும் உற்சாகத்துடனும், விரைவில் பெருஞ்சிறப்புவாய்ந்தவை நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் செய்தார்கள். நாங்கள் அனைவருமே புரட்சியை மேற்கொண்டுள்ள வர்க்க சக்கரத்தின் ஒரு சிறிய பல் என்ற உணர்வுடன் இருந்தோம்.” இத்தகைய குறிப்பிடத்தக்க பெண்களின் படைதான் 1917இல் நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது மாபெரும் தாக்கத்தை அளித்தது. ஜூலையில் பெண்களுக்கு வாக்குரிமையும், பொது நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் நவம்பரில் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, வாக்களித்தவர்களில் பல பகுதிகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாகும். போல்ஷ்விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், புரட்சியின் சமத்துவ சிந்தனைகள், தவிர்க்கமுடியாத விதத்தில், புதிதாகத் துளிர்விட்ட சோவியத் அரசின் மனோபாவம் மற்றும் கொள்கைகளில் பெண்களுக்கான முக்கியத்துவத்துடன், அவர்களுக்கு சமூகத்தில் இருந்துவந்த ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையிலிருந்து விடுதலை அளிக்கக்கூடியதாக வளர்ந்தது. பூர்ஷ்வா தலைமையானது, சோசலிசத்தின் கீழ் பெண்களின் விடுதலைக்கான அவசியத் தேவையை தெள்ளத்தெளிவாக அங்கீகரித்தது. மாமேதை லெனின் இதுகுறித்துக் கூறியதாவது: “மனிதகுலத்தின் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள், முதலாளித்துவத்தின் கீழ் இரட்டிப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். உழைக்கும் பெண்களும், விவசாயப் பெண்களும் மூலதனத்தால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கும் மேலாக, பல முன்னேறிய பூர்ஷ்வா குடியரசு நாடுகளில்கூட, பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான உரிமைகள் மறுக்கப்பட்டே இருந்துவருகிறார்கள். அங்கேயுள்ள சட்டங்கள் பெண்களுக்கு ஆண்களுக்கிணையாக உரிமைகளை வழங்கிடவில்லை. இரண்டாவதாக, (இதுதான் மிகவும் முக்கியமானது) அவர்கள் வீட்டுவேலைகளுடன் பிணைக்கப்பட்டு (“household bondage”) இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டு அடிமைகளாக (“household slaves”) இருந்து வருகிறார்கள். மிகவும் அழுக்கடைந்த சமையலறைகளில் திரும்பத்திரும்ப அரைத்தமாவையே அரைத்திடும் விதத்தில் உற்சாகமற்ற வேலைகளை, கடினமான வேலைகளை அதீதமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.” பெண்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்தது பெண்கள் பெரும் எண்ணிக்கையில் ஊதியத்துடன் வேலை பார்க்க வந்ததானது இத்தகைய அடிமைத்தளையிலிருந்து பெண்களை விடுவித்திட உதவியதைப் பார்க்க முடிந்தது. பெண்களின் பொருளாதார சுயாட்சியை வலுப்படுத்தும் விதத்தில் எண்ணற்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சொத்து உறவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திருமணத்திற்குப்பின்னர் பெண்கள் இயங்குவதிலிருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. நிலம் வைத்துக் கொள்வதற்கும், ஆண் – பெண் இருவருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. குடும்பப் பொறுப்புகளிலும் பாலின சமத்துவத்துடன் செயல்பட்டனர். புதிய சட்டங்களின் மூலமாக சமூக மாற்றங்களும் கட்டாயப்படுத்தப்பட்டன. மதச்சார்பற்ற முறையிலேயே திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. விவாகரத்து எளிதாக்கப்பட்டது. பெண்கள் கருத்தடை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மணமான பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும், மணமாகாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் இடையே சட்டபூர்வமாக எந்தப் பாகுபாடும் கிடையாது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மருத்துவ விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவமனைகளில் அதிக அளவில் மகப்பேறு வார்டுகள் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் பெண்களின் வாழ்க்கையில் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்குப் பெண்களுக்கு உரிமைகளோ அங்கீகாரமோ அளிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது. புரட்சிக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் பெண்கள் பலமுனைகளிலும் முன்னேறினார்கள். புதிதாக விடுதலை பெற்ற பெண்கள் மத்தியிலிருந்து படைப்பிலக்கியவாதிகள் உருவானார்கள். தங்களுக்குக் கிடைத்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் பல துறைகளிலும் தங்கள் சொந்த முயற்சிகள் மற்றும் அரசியல் ஈடுபாட்டுடன் முன்னேறினார்கள். சோவியத் யூனியன் சிதைந்தபிறது, சோசலிச அமைப்பில் கிடைத்த பயன்கள் பல பெண்களிடமிருந்து பறிபோயின. அவர்கள் பெற்று வந்த ஊதியமும் சந்தைப் பொருளாதார சமூகத்தில் மிகமோசமான அளவிற்குக் குறைந்தது. கடந்த நூறாண்டு கால அனுபவம் காட்டுவது என்னவெனில், பாலின சமத்துவத்தை நோக்கி முன்னேறுவது என்பது,அதன்மூலம் பெண்கள் விடுதலை பெற்று, அதிகாரம் படைத்தவர்களாக மாறுவது என்பது, ஒரு நீண்ட நெடிய சிக்கலான மற்றும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாதையாகும் என்பதேயாகும். முன்னேறிய சமூகத்திலேயே கூட இத்தகைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஆனாலும், ரஷ்யப் புரட்சிக்குப்பின்னர் பெண்கள் அடைந்த முன்னேற்றங்கள் என்பதும் அவர்கள் படைத்த சாதனைகள் என்பதும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதுடன் நம் போராட்டப் பாதையில் நமக்கு என்றென்றும் ஒளிவிளக்காக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை. (நன்றி: ப்ரண்ட்லைன்)

நவம்பர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் -சீத்தாராம் யெச்சூரி

 நவம்பர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும்

-சீத்தாராம் யெச்சூரி

(தமிழில்:ச.வீரமணி)

இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 19 ஆண்டுகளாக, எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து ஒவ்வோராண்டும் இக்கருத்தரங்கை நடத்தி வருவதற்காக இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2017ஆம் ஆண்டு, மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்ற நூற்றாண்டாக அனுசரித்து வருகிறோம்.  இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். மனிதனை மனிதன்சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.

 

காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது: ‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.’’ (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.)

மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘...சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், ...’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கபூர்வ அறிவியல் என்பதை ருஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது.

நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும். சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை , ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும். 20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம்.

சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

 

முதலாளித்துவத்துக்கு பெரும் சவால்

சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல.

இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.

அக்டோபர் புரட்சியின் பாரம்பர்ய மாண்புகள்

அக்டோபர் புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோவியத் யூனியன் இன்றில்லை. அது சிதைந்து சிதறுண்டு போனதற்கான காரணங்களைத் தனியே விவாதித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1992இல் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். சோவியத் யூனியன் இன்றில்லை என்ற போதிலும், அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பர்யத்தின் முக்கியமான நான்கு அம்சங்கள், மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி செல்வதற்கு  இடையிலான இடைப்பட்ட மாறுதல் காலத்தில் அச்சாணியாக விளங்கக்கூடிய  நான்கு அம்சங்களை  அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.

(1)  தோழர் லெனின் அவர் காலத்திய உலக நிலைமைகளுடன் முதலாளித்துவ வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்கையில், மூலதனக் குவியல் ஏகபோக மூலதனத்தினை உருவாக்கும் என்று மார்க்ஸ் கூறியதானது, அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றார்.  மேலும் தோழர் லெனின் ஏகாதிபத்தியத்தின் சங்கிலியின் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கும் விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் முதல் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து, தகர்த்திட்டார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தை தங்கள் விடுதலைக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிட  ருஷ்யத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாய்ப்பினை அளித்தது. எனவே, இன்றைய சூழ்நிலையில், எந்தவொரு நாடும் ஏகாதிபத்தியத்தினை உறுதியுடன் எதிர்த்திடாமல்  தங்கள் நாட்டில் புரட்சிகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது என்பது தெளிவாகும்.

இன்றைய  ஏகாதிபத்திய உலகமயக் காலத்திலும்கூட அக்டோபர் புரட்சியின் இந்த அம்சம் இப்போதும் செல்லத்தக்கதாகவே தொடர்கிறது.  ஏகாதிபத்திய உலகமயம் என்னும் சங்கிலியின் பலவீனமான கண்ணிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனத்தின் வர்க்க ஆட்சியின்மீதான அரசியல் தாக்குதல் அழுத்தமாகத் தொடரப்பட வேண்டும்.

இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிச ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.

சரியற்ற மதிப்பீடுகள்: 20ஆம் நூற்றாண்டில் சோசலிம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஈடிணையற்ற விதத்தில் முன்னேற்றங்களைக் கண்டபோதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஒருசிலவற்றைத்தவிர பல நாடுகளில் ஏற்பட்ட அனைத்து சோசலிசப் புரட்சிகளும் ருஷ்யாவில் இருந்ததைப்போன்ற ஒரு பிற்போக்கு முதலாளித்துவ நாடுகள் அல்ல. இந் நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கண்ணி, லெனினிசத்தின் புரிதல்படி பலவீனமான ஒன்று  அல்ல. இந்நாடுகளில் உலக முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் மீது தன்னுடைய பிடிப்பை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அதனால் வளரவும் முடிந்தது. சோசலிச நாடுகள் உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை முதலாளித்துவத்திடமிருந்து நீக்கியது. எனினும்,  இதன்மூலம் அதனால், உலக முதலாளித்துவம் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் தன்னுடைய உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான கொள்திறனை நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்க முடியவில்லை. இதன்காரணமாக ஏகாதிபத்தியம் நவீன காலனியாதிக்கத்தின் மூலமாக உலகச் சந்தையை விரிவாக்கிக்கொள்வதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.

முன்னூறு ஆண்டுகளில் முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது.   சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது.  முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது.  ஆனால் அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய - லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது  அவசியம் என்பதை உணர்ந்திட முடியும். இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை.

சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.

 

சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர்  எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு  வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது. இது ஒரு பிழையான சிந்தனையாகும்.

அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம், அல்லது, மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம் --  அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுபாட்டுக் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த  ஆட்சிப்பரப்பை மீளவும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும்.  அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற  நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும்.

உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில்  எய்தப்பட்ட வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து, குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும்.

துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார்.  இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும்.

இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.

சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்

சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்ற எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.

அரசின் வர்க்க குணம்

மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும்.  முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின்  சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணமாகும்.

எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது.  தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசில் சமர்ப்பித்தார்.  ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்தசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.  சோவியத் யூனியன், முதலாளித்துவ  நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை.  பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும்,  மிகவும் விரிவானமுறையில்  1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின்  சமர்ப்பித்தார். இதற்கு "சித்தாந்தம் குறித்த கேள்விகள்" ("Questions of theory") என்று தலைப்பிட்டிருந்தார்.  எனினும், இவ்வாறு  வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது. இதனை  மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச்  சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில்  தீர்மானிக்கப்பட வேண்டியதாகும். 

தோழர் லெனின் இதுகுறித்து தன்னுடைய அரசும் புரட்சியும் என்னும் நூலில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும்,  வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது என்றும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார். "முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் தீவிரமானமுறையில் வேறுபட்டிருக் கின்றன, எனினும் அவற்றின் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், இறுதி ஆய்வில் தவிர்க்கமுடியாதவகையில் அவை முதலாளிவர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருந்திடும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது."

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான கிழக்கு  ஐரோப்பிய சோசலிச நாடுகள்,  சோவியத் யூனியனில் இருந்தைப்போன்ற சோவியத் வடிவத்தை கையகப்படுத்திக் கொண்டன. அவை தங்கள் நாடுகளின் துல்லியமான சமூகப் பொருளாதார நிலைமைகளையோ மற்றும் வரலாற்றுப் பின்னணியையோ கணக்கில் கொள்ளவில்லை.  இவற்றின் விளைவாக இந்நாட்டின் அரசுகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டன. இவற்றுக்கு எதிராக மக்களின் இடையேயான அதிருப்தியும் வளர்ந்துகொண்டிருந்தன.  

சோசலிஸ்ட் ஜனநாயகம்: இரண்டாவதாக மிகப் பெரிய குறைபாடு, சோசலிஸ்ட் ஜனநாயகம் சம்பந்தப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விட சோசலிசத்தின்கீழ் ஆழமானதாகவும், வளமானதாகவும் இருந்திட வேண்டியது அவசியம். முதலாளித்துவம் பெயரளவில் ஜனநாயக உரிமைகளை வழங்கும் அதே சமயத்தில், அது மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதனை உண்மையில் அளித்திடாது. (முதலாளித்துவத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் எதனையும் வாங்குவதற்கு உரிமை படைத்தவன்தான். எனினும் அவ்வாறு வாங்குவதற்கான சக்தியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.) ஆனால் சோசலிசம் எதனையும் வாங்கும் உரிமையையும், அதற்கான சக்தியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கும்.

எனினும், பல நாடுகளில் சோசலிஸ்ட் கட்டுமானம் நடைபெற்ற சமயத்தில், இரு விதமான குறைபாடுகள் நடைபெற்றுள்ளன. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு,  பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் சர்வாதிகாரமாக, அதாவது கம்யூனிஸ்ட்  கட்சியின் சர்வாதிகாரமாக, மாற்றப்பட்டிருந்தது. இதுவும் சிறிது காலத்திற்கப்பின் கட்சித் தலைமையின்  சர்வாதிகாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறு சோசலிச அரசு என்பது, ஒட்டுமொத்த  பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சோசலிச அரசு என்பது, நடைமுறையில்  கட்சியின் ஒரு சிறு பிரிவால், அதாவது  கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால்,  மேற்கொள்ளப்படும் ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டது. 

அரசு அறிவிக்கும் ஆணைகள் பெரும்பான்மையான மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் அமைந்திடவில்லை.  அவை சோவியத்துகள் போன்ற அடிப்படையான ஜனநாயக அமைப்புகளின் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லப்படவில்லை. மாறாக அரசின் கட்டளைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன.  இவை இயற்கையாக மக்களை அரசிடமிருந்து தனிமைப்படுத்திட இட்டுச்சென்றது.

இரண்டாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்தும் சமயங்களில், உள்கட்சி ஜனநாயகம் என்பது அடிக்கடி பலிகிடாவாக மாறியது.  சோவியத் யூனியனின் வரலாற்றில் சில சமயங்களில் இருந்ததைப்போல மத்தியத்துவம் முன்னுக்கு வந்தது. இது, அதிகாரத்துவம் வளர்வதற்கு இட்டுச் சென்றது. இவ்வாறு அதிகாரத்துவம் வளர்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இவற்றின் காரணமாக சோசலிசத்திற்கு விரோதமான போக்குகள், ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகை போன்றவை தலை தூக்கின.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த  பெரும்பாலானவர்கள் சலுகைகள் அனுபவித்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்சியின் புரட்சிகரத் தன்மை கொள்ளை போய்விட்டது, கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது, கட்சித் தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் தனிமைப்பட்டன.   

இதுபோன்ற திரிபுகளைச் சரிசெய்வதற்குப்  பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது,  அவசியமா  திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.

சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம்:  சில குறைபாடுகள் காணப்பட்ட மூன்றாவதான பகுதி என்பது சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானமாகும். அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றபின் முதலில் அது தேர்ந்தெடுத்த பாதை தொழிலாளர்-விவசாயிக் கூட்டணியின் அடிப்படையில் வெற்றிகரமாக ஜனநாயகப் புரட்சியை நிறுவியதாகும். இதுவே புதிய சவால்களை எதிர்கொண்டது.  ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிஸ்ட் புரட்சிக்குத் மாறுவதற்கான இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் தேவைப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையில் சொத்து உறவுகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிறுவ வேண்டியிருந்தது.  தொழிலாளி – விவசாயிக் கூட்டணிதான் ஜனநாயகப் புரட்சிக்கான முதுகெலும்பு என்கிற உண்மை, விவசாயத்தில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது என்பது விவசாயிகளில் சில பிரிவினரது அந்தஸ்தைக் கடுமையாகப் பாதித்தது என்று பொருளாகும். இவர்கள்தான் ஜனநாயகப் புரட்சியை எய்துவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்தவர்கள். உள்நாட்டு யுத்தம் மற்றும் சோவியத் யூனியன் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்த சிக்கலான பிரச்சனை மேலும் சிக்கலானது.  ஆனாலும், சோசலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்கும்,  சோசலிஸ்ட் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கும் அபரிமிதமான தொழில்மயம் அவசியமாக இருந்தது. ‘யுத்த கம்யூனிசம்’ (‘war communism’), ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ (new economic policy) காலங்களின்போது, தோழர் லெனின் இந்தப் பிரச்சனையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தார். 

தோழர் லெனின் முன்னதாகவே இறந்ததை அடுத்து, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சோசலிஸ்ட் தொழில் மற்றும் விவசாயிகளின் விவசாயம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து ஒரு விவாதம் எழுந்தது.   விவசாய உற்பத்தி அபரிமிதமாக இருந்ததன்  காரணமாக, அதன்மூலம் ஏற்பட்ட உபரியை தொழிற்துறை செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்குப் போடுவது என்பது தொடர்பாகவும், இதனை எப்படி தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. தொழில்துறை நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு விவசாய உற்பத்தியின் உபரியை வெகுவாகப் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. இதனை எப்படிச் செய்வது? இதில் பிரச்சனைகள் எழுந்தன. விவசாயத்துறையில் புதிதாக உருவான பணக்கார விவசாயிகள் (குலாக்குகள்) வர்க்கம் அக்டோபர் புரட்சிக்கு ஒரு வித்தியாசமான விதத்தில் அச்சுறுத்தலாக அமைந்தனர்.

எனினும், உலகம் முழுதும் சோவியத் யூனியனுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் தொடர்ந்து இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சனையை தோழர் ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக சமாளித்தார். அவ்வாறு சமாளிக்காமல் மட்டும் இருந்திருந்தால் சோவியத் யூனியன் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட தாக்குதலை வெற்றிகரமானமுறையில் முறியடித்திருக்க முடியாது.  அப்போது தோழர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த அறைகூவல்களை நினைவுகூருங்கள்.  நாஜிக்களுக்கு எதிராகப் போர்முனையில் போராடுவதால் மட்டும் வென்றுவிடமுடியாது, மாறாக அதனை தொழிற்சாலைகளிலும்,  வயல்களிலும் நாம் வெற்றிபெறுவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும்.  சோசலிசத்தைக் காப்பதற்காகவும், உலகை பாசிசத்திலிருந்து காப்பதற்காகவும், போர்முனையில் சோவியத் செஞ்சேனை வீரஞ்செறிந்த முறையில் போராடுவதற்கு, எவ்விதத் தொய்வுமின்றி அவர்களின் தேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்யப்பட்டதே அடிப்படைக் காரணமாகும்.

ஆனால் "சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளிகளின் கடவுள்", செல்வாக்கு செலுத்தியதன் காரணமாகவும், இத்தகைய சோசலிஸ்ட் பொருளாதார அடித்தளங்களை,  கோர்பசேவ் படிப்படியாகக் கைவிட்டதன் காரணமாக, சோசலிசமே கைவிடப்படக்கூடிய நிலைக்கு கொண்டுசென்றது.

தத்துவார்த்த உணர்வினை உதாசீனம் செய்தல் (Neglect of Ideological Consciousness):  அடுத்து மாபெரும் குறைபாடு காணப்பட்ட பகுதி, மக்களின் கூட்டு தத்துவார்த்த உணர்வினை (collective ideological consciousness of the people) வலுப்படுத்தத் தவறியமையாகும்.  மக்களிடம் இத்தகைய கூட்டு தத்துவார்த்த உணர்வு உயர்ந்தோங்கி இருப்பதன்மூலமாகத்தான் சோசலிசம் நிலைத்து நிற்கமுடியும் மற்றும் அதனை மேலும் வளர்த்தெடுக்க முடியும். இதனை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு இல்லாமல் மேற்கொண்டிட முடியாது.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் திருத்தல்வாதி திரிபுக்கு (revisionist deviation)ப் பின்னர் இது மிகப்பெரிய ஆபத்தாக (casualty-ஆக) மாறியது.  

இக்குறைபாடுகளின் காரணமாக, சோவியத்  யூனியனிலும் இதர சோசலிச நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்புரட்சி சக்திகள் முன்னுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டு, சோசலிசம் கைவிடப்பட்டது.

இவ்வாறு இந்நாடுகளில் சோசலிசம் கைவிடப்பட்டதற்கு, மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, மார்க்சியம்-லெனினியத்தின் அறிவியல் மேற்றும் புரட்சிகர சாராம்சத்திலிருந்து நழுவிச் சென்றதே காரணமாகும்.  உலக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து சரியற்ற மதிப்பீடுகளும் காரணமாகும். மார்க்சியத்தின் ஆக்கபூர்வ அறிவியலை வறட்டுத் தனமான முறையில் வியாக்கியானம் செய்ததும் காரணமாகும். மேலும் சோசலிசக் கட்டுமானத்தின்போது மேலே கூறியவாறு மேற்கொண்ட குறைபாடுகளும் காரணமாகும்.

நடப்பு முதலாளித்துவ நெருக்கடி – சோசலிச மாற்று

மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட இன்றைக்கும் ஒரே வழி, சோசலிசம்தான்.  இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கும் ஒரே மாற்று சோசலிசம்தான்.  2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருந்தே, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதனை மேலும் ஆழமான முறையில் புதிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதன் மூலம் இதனை நன்கு உணர முடியும். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  மேலும் அதிகரித்திருக்கின்றன.  முதலாளித்துவ அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம் என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மையாட்சிக்க எதிராக சோசலிசத்திற்கான அரசியல் மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும்.

முதலாளித்துவத்தின் மீதான நெருக்கடி எவ்வளவுதான்  உக்கிரமானதாக இருந்தபோதிலும், நாம் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் எப்படியாவது தன்னைத் தக்கவைத்துக் கொண்டுதான்  இருக்கும். எனவே, சோசலிஸ்ட் அரசியல் மாற்று அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் வெகுவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிற போதிலும்,   இன்றையநிலையில் இவை அனைத்தும் தற்காப்புநிலையில்தான் இருந்து வருகின்றன.  தற்காப்புநிலையில்தான் என்று ஏன் கூறுகிறேன் என்றால், மக்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாகத் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் பறிக்கப்படும்போது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன.  இத்தகு போராட்டங்கள் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் மீதான தீர்மானத்தில் அலசி ஆராய்ந்திருப்பதைப்போல, லெனினிஸ்ட் அகநிலைக் காரணியை வலுப்படுத்திட வேண்டும். அதாவது, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு புரட்சிக் கட்சியின் வல்லமையை வலுப்படுத்திட வேண்டும்.

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப்பணியைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது. நமது கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடும், ஸ்தாபனத்தின் மீதான பிளீனமும் இந்தியாவின் நிலைமைகளில் அகக்காரணியை (கட்சியை) வலுப்படுத்தும் குறிக்கோளை எய்தக்கூடிய விதத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்கள்

அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைய தினம் தன் நிலையை சர்வதேச அளவில் வலுவாக்கிக்கொண்டுள்ள நிலையில், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மூன்று முக்கிய குறிக்கோள்களை எய்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

முதலாவதாக அது இப்போது மீதம் இருந்துவரும் சோசலிஸ்ட் நாடுகளைக் கலைத்திட விரும்புகிறது. இரண்டாவதாக,  அணிசேரா இயக்கத்தின்கீழ் முக்கியமாக இருந்த  மூன்றாம் உலக நாடுகளை வலுவிழக்கச்செய்வதன்மூலம் எதற்கும் இலாயக் கற்றவைகளாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இறுதியாக, உலகத்தின்மீது பொதுவாகவும், குறிப்பாகத் தனக்குப் போட்டியாக வருபவர்கள் யார் என்று கருதுகிறதோ அவர்களை அழித்து ஒழித்து, தன்னுடைய ராணுவ மற்றும் பொருளாதார மேன்மையை நிலைநிறுத்திட முயற்சிக்கிறது. 

ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக வலுவானத் தத்துவார்த்த தாக்குதலால் வெற்றிபெற முடியவில்லை.  ஏகாதிபத்தியம், ஜனநாயகத்தை சுதந்திர சந்தையுடன் சமமாக்கப் பார்க்கிறது. இத்தகைய நிலைப்பாட்டுடன்,  தன்னுடைய மேலாதிக்கத்தையும் மற்றும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ‘சுதந்திர சந்தைகளை’த் திணிப்பதை எதிர்த்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தலையிடுகிறது.

ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகள்’ மற்றும் ‘மண்ணின் மாண்புகள்’ ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கிறோம் என்ற பெயரில் சுயேச்சையான இறையாண்மை நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகத் தலையிடுகிறது. இவ்வாறு ராணுவத் தலையீடுகளின் மூலமடாக அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவந்த முதலாளிவர்க்கம் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, தேசிய இறையாண்மையை மிகவும் புனிதமானதாக உயர்த்திப்பிடித்தது. இன்றையதினம், ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகளை’ப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அந்த நாடுகளின் தேசிய இறையாண்மையை மறுதலித்து, ராணுவ ரீதியாகத் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியம், வெறித்தனமாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கம்யூனிசத்தை, சர்வாதிகாரத்துடனும் பாசிசத்துடனும் சமப்படுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் கம்யூனிசத்தை பாசிசத்துடன் இணைத்து சமப்படுத்தி, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சட்டங்களை இயற்றி இருக்கிறது.  செக் குடியரசு, போலந்து போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கம்யூனிச அடையாளங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமாகத் தடை விதித்திருக்கின்றன.

கடந்த இருபதாண்டுகளில் இந்தப் போக்குகள் மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப்பின்னர் மார்க்சியத்தை மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. எனவேதான் மார்க்சியத்தைப் பல்வேறுவிதமாக திரித்திடும் சித்தாந்தங்கள் அறிவுஜீவிகள் மத்தியில் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டன. இவற்றின்மூலம் மக்களைக் குழப்பிடும் பணி வெகுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

பின்-நவீனத்துவம் (Post-Modernism): ஏகாதிபத்தியமும், உலக நிதி மூலதனமும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் எதிர்ப்பு சித்தாந்தங்களை உருவாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் அனைத்து முற்போக்கு சித்தாந்தங்களையும் மறுதலித்திட முனைகின்றன.  வர்க்கப் போராட்டம் மறைந்துவிட்டது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பங்களிப்பு மறுதலிக்கப்பட்டுவிட்டது போன்ற சிந்தனைகள் முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியிலிருந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ள சித்தாந்தம்தான், பின்-நவீனத்துவம் என்பதாகும்.

பின்-நவீனத்துவம் என்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவம் வெற்றிபெற்று, சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உருவான முதலாளித்துவ தத்துவார்த்தக் கண்ணோட்டமாகும்.  இத்தத்துவமானது மார்க்சியம் உட்பட எந்தவொரு தத்துவமோ, அரசியலோ உலகளாவிய அளவில் இருந்திடமுடியாது என்று நிராகரிக்கிறது.  பின்-நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்தையோ அல்லது சோசலிசத்தையோ ஒரு கட்டமைப்பு (a structure) அல்லது ஒரு முறை (a system) என்கிற விதத்தில் அங்கீகரித்திடவில்லை. இவ்வாறு, இது, உலக நிதி மூலதனத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு தத்துவமாகும். ஏனெனில் இது வர்க்கங்கள் இருப்பதை மறுதலிக்கிறது. எனவே, வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பனவற்றையும் மறுதலிக்கிறது. மேலும் இது, அடையாள அரசியலை உந்தித்தள்ளுவதற்கும், மக்களை அரசியலற்றவர்களாக ஆக்குவதற்கும் மிகவும் பொருத்தமான ஒரு தத்துவமுமாகும்.

கலாச்சாரா மேலாதிக்கம் (Cultural Hegemony): இந்தக் கால கட்டத்தில் ஏகாதிபத்தியமும், நவீன தாராளமயமும்  தங்களுடைய கலாச்சார மேலாதிக்கத்தை வலுவாக நிறுவியுள்ளன.  இவை மக்களைத் தங்களுடைய தகவல் (Information), தொடர்பு (Communication) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment) என்கிற மூன்று ஐசிஇ (ICE) ஆகியவற்றைத் தங்களுடைய மெகா கார்ப்பரேஷன்கள் மூலமாக மக்களிடையே கொண்டுசெல்வதில் மூர்க்கத்தனமாக இறங்கியிருக்கின்றன.  தங்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள் மூலமாக செய்திகளைத் திரித்துக்கூறுதல் என்பதும், மக்களிடம் கூறப்படும் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதும் இவற்றின்  ஏகபோகமாக மாறியிருக்கின்றன.  கலாச்சாரத்தை வணிகமயமாக்குவது உலகமயத்தின் ஒரு பகுதியாகும்.

வர்க்க மேலாதிக்கத்தின் காரணமாக, உலகமயக் கலாச்சாரம் மக்களை தங்களுடைய எதார்த்தமான  வாழ்க்கை நிலைமைகளிலிருந்து கத்தரித்துவிட முயல்கிறது. இவர்களின் கலாச்சாரம் என்பது அழகியலை மேம்படச் செய்வதற்கானது அல்ல, மாறாக மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை மற்றும் ஏழ்மை  ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்புவதற்கானதாகும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தன் ஆளுகையை அதிகரித்துக் கொள்வதற்கும், மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்கும் நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.

பின்-உண்மை (Post-Truth): மார்க்சியத்திற்கும், சோசலிசத்திற்கும் எதிராக, முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்றொடர்தான், பின்-உண்மை (Post-Truth) என்பதாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய 2016ஆம் ஆண்டின்  அகராதியில் ‘இந்த ஆண்டின் புதிய வார்த்தை’ என இதனைக் குறிப்பிட்டு, இதன் பொருளை வரையறுக்கும்போது, உணர்ச்சிக்கும் தனிப்பட்ட நம்பிக்கை அடிப்படையில் எழுப்பப்படும் வேண்டுகோள் அளவிற்கு  மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு செலுத்தாத சொற்றொடர் என்று கூறுகிறது.

டொனால்டு டரம்ப் மற்றம் நரேந்திர மோடி அரசோச்சும் இக்காலத்தில் இதனைப் புரிந்துகொள்வது எளிதாகும். ஈராக்கில் யுத்தத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்க புஷ் நிர்வாகம் அவிழ்த்துவிட்ட பொய்கள் மற்றும் ஏகாதிபத்திய அரசியல் மற்றம் ராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திட அவிழ்த்துவிடப்படும் பொய்களும் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்தியாவிலும் இதேபோன்றே முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதிலிருந்து இதனை நோம்  அறிந்துகொள்ள முடியும்.  மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்காக தலித்துகள் மற்றம் முஸ்லீம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படை போன்ற தனியார் ராணுவத்தினர் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடுப்பதிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடியும்.

பின்-உண்மை என்கிற சொற்றொடரும் மனிதகுல வரலாற்றில் புதிதான ஒன்றல்ல. ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்ஸ், "ஒரு பெரிய பொய்யைக் கூறுங்கள், திருப்பித் திருப்பி  அதனைக் கூறுங்கள், அது உண்மையாகிவிடும்," என்று கூறிவந்தான் அல்லவா?  அதுதான் இது. இதுதான் அன்றைக்கு நாஜி பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு ஆணிவேராக இருந்தது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்துத்துவா வெறியர்களுக்கும்  முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு ஹிட்லரின் பேச்சுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் போது எப்படி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள் என்று ஒலிபரப்பப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றைக்கு மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிதுருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி என்பது புதிய உருவாக்கம் ஒன்றுமல்ல.

இவ்வாறு ‘பின்-உண்மை’ என்பதும் மக்களை தாங்கள் சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் எதிரான போராட்டங்களிலிருந்து திசைதிருப்புவதற்கான ஒன்றே தவிர, வேறல்ல.

மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரம்  அல்ல. மாறாக, அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, "துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதன்" அடிப்படையில் அமைந்த ஒன்று. மார்க்சியம், வரலாற்றைப் பொதுவாகவும், முதலாளித்துவத்தைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்திடும் ஓர் அணுகுமுறையாகும்.  மாமேதை மார்க்ஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், நாம் இன்றைய சூழ்நிலையைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்.

இந்த அடிப்படையில் நான் சரியானமுறையில் நின்றுகொண்டு, வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளர் ஒற்றுமையையும்  சீர்குலைக்கும் விதத்தில்,  நமக்கு எதிராகத் தற்போதும், எதிர்காலத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.

இந்திய நிலைமைகளில் சோசலிசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் தொடர்பான தீர்மானத்தில், இந்தியாவில் சோசலிசம் என்பதன் கருத்தாக்கம் என்ன என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் சோசலிசம் எப்படி இருக்கும் என்பதை,  இந்தியப்புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவடைந்தபின்புதான், அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்ற பின்னர்தான் கெட்டிப்படுத்திட முடியும்.

எனினும், சோசலிசத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவை எவை தேவை என்பதை நம்மால் எதிர்பார்த்திட முடியும். எனவே, இந்தியாவில் சோசலிசம் என்றால் அதன் பொருள் என்ன?

அதன்பொருள், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு,  அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி.

அதன் பொருள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினர் என அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரநிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மேம்பாடு.

அதன்பொருள், மக்கள் அதிகாரமே உயர்வானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் சமூகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிலும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்தவைகளாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுபோன்ற உரிமைகள் தரப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவை மாயை. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வல்லமை கிடையாது. சோசலிசத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தி இருப்பதன் காரணமாக மனிதகுல வாழ்வின் தரம் உயர்ந்து, அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் செழுமையுடன் காணப்படும்.

அதன் பொருள், சாதி அமைப்புமுறை ஒழிக்கப்படுவதால் சாதி ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து மொழிப்பிரிவினரும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைத்து மொழிகளும் சமமான முறையில் வளர்த்தெடுக்கப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும், பாலின ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதன் பொருள், சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டமைப்பு, சோசலிச உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டமிடல்  அடிப்படையில் அமைந்திடும்.  சந்தை சக்திகள், மத்திய திட்டமிடலின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிடும். சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் இருக்கும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையை தீர்மானகரமான வடிவமாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் அது அரசின்கீழான பொதுத்துறை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் அதே சமயத்தில், கூட்டு(collective) மேற்றும் கூட்டுறவு அமைப்புகள், அரசுக் கட்டப்பாட்டில் உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை இயக்கி முறைப்படுத்திடும்.

அக்டோபர் புரட்சி : உலகத்தை மாற்ற முடியும்

மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு சமயம் கூறிய பொருள்பொதிந்த வார்த்தைகள்: "தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும்."  அக்டோபர் புரட்சி உலகை மாற்றுவது சாத்தியமே என்று உலகுக்கு காட்டியிருக்கிறது. அது இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றேயாகும்.  பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், அக்டோபர் புரட்சி மற்றம் அதன் பங்களிப்புகள் மனிதகுல நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு இன்றளவும் உதவிக்கொண்டு இருக்கிறது. நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட அக்டோபர்புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை அளித்துவரும்.  அக்டோபர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக்கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.

(கேரள மாநிலம், திருச்சூரில், 2017 ஜூன் 13 அன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது  அவர் கூறியதிலிருந்து சில அம்சங்கள்.)