Saturday, March 27, 2010

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இ.எம்.எஸ். பங்களிப்பு--பிரகாஷ் காரத்



தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்கும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், சோசலிசத்திற்காக உலகளாவிய முறையில் இயக்கத்தைக் கட்டுவதற்கும் அவர் அளித்திட்ட பங்களிப்புகளுடனும் அதனை இணைத்து நாம் பார்க்க வேண்டும்.

மார்க்சிச-லெனினியக் கொள்கையானது, முதலாளித்துவத்தை ஓர் உலக அளவிலான முறையாகவே கணிக்கிறது. ஒரு நாட்டில் சோசலிசத்திற்காக நடைபெறும் போராட்டம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடனும், உலக அளவிலான முதலாளித்துவ முறையைத் தூக்கி எறிவதற்கான போராட்டத்துடனும் பின்னிப் பிணைந்ததே யாகும்.
எனவே தோழர் இ.எம்.எஸ்., ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே உலக அளவில் நடைபெறும் போராட்டத்தின் பின்னணியிலேயே இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்வதற்கான போராட்டத்தையும், இந்தியாவில் சோசலிசத்திற்காக முன்னேறிச் செல்வதையும் பொருத்திப் பார்க்கிறார்.

தோழர் இ.எம்.எஸ். 1957இல் இந்தியாவில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் முதலமைச்சராக மாறிய சமயத்தில், சர்வதேச அளவில் அவர் புகழ் பெற்றார். அவர் முதன் முதலாக ஒரு சோசலிச நாட்டிற்குப் பயணம் செய்ததென்பது, சீனாவில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது கட்சிக் காங்கிரசில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சகோதரப் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் கலந்து கொள்வதற்காக சென்றதேயாகும். அந்த மாநாட்டில் அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை மட்டுமல்ல, சோவியத் யூனியன் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து சகோதரப் பிரதிநிதிகளாக வந்திருந்த பலரையும் அவர் சந்தித்தார்.

1960இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு, அவை முழுமையான முறையில் முற்றி இது கட்சிகளுக்கும் மற்றும் நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட சமயத்தில், ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள்ளும் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், திருத்தல் வாதத்திற்கு எதிராகவும், இடது குழுவாதத்திற்கு (Left sectarianism) எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தையும் சர்வதேச அளவில் இவ்விரு போக்குகளுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தோழர் இ.எம்.எஸ். பார்த்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட தவறான கொள்கைகள் மற்றும் தத்துவார்த்த நிலைப்பாடுகளின் காரணமாக திருத்தல்வாதமும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திட்ட சில தவறான தத்துவார்த்த மற்றும் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக இடது குழுவாத நிலைப்பாடுகளும் (Left sectarianism) வெளிப்பட்டன. சீனத்தில் 1966இல் கலாச்சாரப் புரட்சி நடைபெற்ற சமயத்தில் இது மிகவும் அதீதமான முறையில் வெளிப்பட்டது.
1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட வலது திருத்தல்வாதம் மற்றும் இடது குழுவாதத்திற்கு எதிராக தோழர் இ.எம்.எஸ். கேந்திரமான பங்களிப்பினை மேற்கொண்டார். ஒன்றுபட்ட கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான சமயத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றியிருந்த தத்துவார்த்தப் பிரச்சனைகளை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலோர் அப்போது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் 1966இல் விடுவிக்கப்பட்ட சமயத்தில், கட்சியானது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வலது திருத்தல்வாதத்தை மட்டுமல்ல, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஊக்குவிக்கப்பட்ட நக்சலைட்டுகளின் இடது குழுவாதத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கம் பர்த்வானில் 1968இல் தத்துவார்த்த பிளீனம் ஒன்றை நடத்தியது. பீளீனத்தில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்தத் தீர்மானம், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவாகி இருந்த திருத்தல்வாத திரிபுகளையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட இடது அதிதீவிரவாதப் போக்கையும் எதிர்த்து முறியடித்து சரியான நிலைப்பாட்டினை மேற்கொண்டது.

அடுத்த சில ஆண்டுகளில், தோழர் இ.எம்.எஸ். சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவாகி இருந்த திருத்தல்வாதம் மற்றும் வறட்டுத் தத்துவவாதத் திரிபுகளுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டார். இந்தியப் புரட்சிக்காக, சரியான போர்த்தந்திரத்தை (strategy)யும், அதனை எய்தக்கூடிய உத்திகளை (tactics)யும் கடைப்பிடிக்க வேண்டுமானால், மார்க்சியத் தத்துவத்தைத் துல்லியமாகக் கற்று, இந்தியாவின் நிலைமைகளுக்கேற்பப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று தோழர் இ.எம்.எஸ். நம்பினார். ‘‘மார்க்சியம் - லெனினியம் என்பது எங்களுக்குத்தான் சொந்தம் என்று எந்த ஒரு கட்சியும் அல்லது எந்த ஒரு நாடும் தனிப்பட்ட முறையில் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. அது தொழிலாளர் வர்க்கத்தின் சித்தாந்தம். எனவே அது உலகளாவியது’’ என்று இ.எம்.எஸ். கூறினார்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பல ஆண்டு கால அனுபவத்திற்குப்பின், இந்தியாவின் புரட்சிப் பாதையை எந்த ஒரு நாட்டின் அனுபவத்தையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவோ அல்லது நகலெடுக்கவோ முடியாது என்பதில் தோழர் இ.எம்.எஸ். தெளிவாக இருந்தார். சோவியத் யூனியனில் சோசலிசம் மலர்ந்த பாதையையோ அல்லது சீனத்தில் புரட்சி ஏற்பட்ட விதத்தையோ இயந்திரகதியாக இந்திய நிலைமைகளுக்குப் பிரயோகிக்க முடியாது.

சோவியத் யூனியன் மற்றும் சீனக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட பிளவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திரிபுகளும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் பாதித்தன. கம்யூனிஸ்ட் அகிலம் இருந்த நாட்களில் அமைந்திருந்தபோல் சர்வதேச அளவிலான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மையம் இனி அமைப்பது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதை இ.எம்.எஸ். தேர்ந்து தெளிந்தார். அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் என்ன செய்ய வேண்டும்? ‘‘இன்றைய உலக நிலைமையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்டுகளும் தங்கள் நாட்டில் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடைவதற்கான பொருத்தமான பாதையை தங்கள் நாட்டின் நிலைமைகளுக்கேற்பத் தேர்ந்தெடுக்க வேண்டும். ... ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் தங்கள் நாட்டில் சோசலிஸ்ட் புரட்சியை கொண்டுவருவதற்கான பாதையைத் தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும், உலக அளவில் மையப்படுத்தப்பட்ட தலைமையை அதற்காக அவர்கள் சார்ந்திருக்கக் கூடாது.’’ என்று இ.எம்.எஸ். கூறினார். (தி மார்க்சிஸ்ட், அக்டோபர் - டிசம்பர், 1996)

இ.எம்.எம். மேலும், உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகவும் பொதுப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதால், அவற்றிற்கிடையே கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

1964இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தம்தம் கட்சிக் காங்கிரசுகளை நடத்திய சமயத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் சகோதரப் பிரதிநிதிகளைக் கவர்ந்தது. ஏன் இப்படி நடந்தது என்றும், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு அதிக அளவில் வெளிநாட்டுச் சகோதரப் பிரதிநிதிகள் வரவில்லை என்றும் இ.எம்.எஸ்.-இடம் கேட்கப்பட்டது. அதற்கு இ.எம்.எஸ். ‘‘நாங்கள் எங்கள் நாட்டு மக்களிடமிருந்துதான் அங்கீகாரம் கோருகிறோம், அதுதான் எங்களுக்கு முக்கியம்’’ என்றார்.

அடுத்து வந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சர்வதேச பிரச்சனைகள் பலவற்றிலும் மார்ச்சியம்-லெனினியம் மற்றும் தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எழுந்த பல்வேறு அம்சங்கள் குறித்தும் சுயமான நிலைப்பாட்டினை மேற் கொண்டது. வியட்நாம் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய சமயத்தில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் கருத்துவேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, வியட்நாமிற்கு உதவிட முன்வர வேண்டும் என்றும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓர் ஒன்றுபட்ட முன்னணியைக் கட்ட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. மேலும் மேற்படி இரு சோசலிச நாடுகளின் அயல்துறைக் கொள்கையும் எப்போதெல்லாம் தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையிலும் தங்கள் நாடுகளின் குறுகிய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையிலும் அமைகிறதோ அப்போதெல்லாம் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் திருத்தல் வாதம் மற்றும் வறட்டுத் தத்துவவாதத்திற்கு எதிராக மார்க்சிய - லெனினியத்தின் அடிப்படையிலும் திட்டத்தின் கீழும் தோழர் இ.எம்.எஸ். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில், கட்சி நடத்திய போராட்டங்கள், கட்சியை உருக்கு போன்று உருவாக்கி வளர்த்தது. 1964இலிருந்து 1980வரை - 16 ஆண்டு காலம் - இந்தியத் தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்கவில்லை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்கவில்லை.

1981இல் தோழர் இ.எம்.எஸ். பொதுச் செயலாளராக இருந்த சமயத்தில், கட்சிக்குக் கட்சி உறவுகள் என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உறவினை ஏற்படுத்திக் கொண்டது. 1983இல் ஹர்கிசன்சிங் சுர்ஜித், பசவபுன்னையா ஆகியோருடன் இ.எம்.எஸ். தலைமையில் ஒரு குழு சீனத்திற்குச் சென்றது. அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்று முழுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், இரு கட்சிகளுக்கும் இடையே கட்சிக்குக் கட்சி உறவு ஏற்படுத்திக்கொள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வந்தது. இவ்வாறு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது இந்திய நிலைமைகளுக்கேற்ப மார்க்சியத்தை சுயேச்சையாக நின்று பிரயோகிப்பதாகவும், சோசலிசத்திற்கானப் பாதையை அமைத்துக் கொண்டுள்ளதாகவும் அவ்விரு கட்சிகளும் அங்கீகரித்தன.

1987இல், மாஸ்கோவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இ.எம்.எஸ். தலைமையில் ஒரு குழு சென்றது. அப்போது கோர்பசேவ் ஆற்றிய உரையைக் கேட்டபின், அவரது உரை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சேபணைகளை அப்போதே இ.எம்.எஸ். சோவியத் தலைமையிடம் தெரிவித்தார். கோர்பசேவ் அப்போது ‘‘வர்க்க மாண்புகளை விட மனித குலத்தின் மாண்பு’’களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியதையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முரண்பாடுகளில் திருத்தங்கள் கூறியதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. அவற்றிற்குத் தங்கள் மறுப்பினை அங்கேயே தெரிவித்தன. கோர்பசேவ் தலைமையின் சீர்திருத்த நிலைப்பாடுகளுக்கு எதிராக முதன்முதல் குரல்
கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.

சோவியன் யூனியன் 1991இல் தகர்ந்தபின் உலகில் புதியதொரு நிலைமை உருவானது. முதலாளித்துவத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் அனைத்தும் தகர்ந்தன. இந்த சமயத்தில் இ.எம்.எஸ். எண்ணற்ற கட்டுரைகளை எழுதினார். சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டும் பணி நடைபெற்றக் காலங்களில் அதற்கு ஏற்பட்ட அனுபவங்களை முழுமையாகப் பரிசீலனை செய்ய ஆரம்பித்தார். லெனின் காலகட்டத்தில் நடைபெற்ற பணிகளையும் புதிய பொருளாதாரக் கொள்கை (New Economic Policy (NEP)யையும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சோவியத் பாணியில் இருந்த திருத்தல்வாதம் மற்றும் வறட்டுத்தத்துவவாதம் ஆகியவற்றின் வேர்களைக் கண்டறிந்தார். இந்தப் பின்னணியில்தான் அவர் சோவியத் யூனியனில் ஏற்பட்ட தவறுகளைத் தவிர்த்திடும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை சீனா மேற்கொண்டபோது அதற்கு ஆதரவாக அவர் நின்றார். ‘‘சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் முதலாளித்துவம் வெற்றி அடைந்திட முடியாது’’ என்று அவர் பகுத்தாய்ந்து கூறினார். மேலும் அவர், ‘‘உலகின் நான்கு முக்கிய முரண்பாடுகள் - ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயே உள்ள முரண்பாடு, மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையேயுள்ள முரண்பாடு, ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடு - இன்னமும் நீடிக்கின்றன, அவை சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளுக்கு வழிகோலியிருக்கின்றன’’ என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

அவர் மேலும், தற்போது சோசலிச நாடுகளாக நீடிப்பவை உலக அளவில் சூழ்நிலைகள் பாதகமாக இருந்தபோதிலும், தங்கள் நாடுகளில் சோசலிச முறையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதில் தங்களாலானஅனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் கூறினார். ‘‘இன்றையதினம் சோசலிச நாடுகளாக உள்ள நான்கு நாடுகளும் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றிருக்கின்றன. முந்தைய சோசலிச நாடுகள் செய்திட்ட தவறுகளை ஆராய்ந்து, அதுபோன்று தங்கள் நாட்டில் நடைபெறாதவாறு பாதுகாத்து முன்னேற அவை முயல்கின்றன. சீனம், வியட்நாம், கொரியா மற்றும் கியூபா ஆகியநாடுகளில் எவ்விதமான சீர்குலைவு நடவடிக்கைகளும் இருக்காது என்று நம்மில் எவரும் உத்தரவாதம் அளித்திட முடியாது. ஆயினும் சோசலிசத்தை இன்னமும் உயர்த்திப்பிடிக்கின்ற இந்நான்கு நாட்டுத் தலைவர்களும் மிகவும் எச்சரிக்கையாக நின்று தங்கள் மக்களை வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். (ப்ரண்ட்லைன், ஜூலை 1, 1994).

தோழர் இ.எம்.எஸ். தன் கடைசிக் காலங்களில், மார்க்சியம் - லெனினியத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் நாடுகளில் சோசலிசத்தை அடைவதற்கான பாதையை சொந்தமாகவே அமைத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும், மற்ற மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிகள் மற்றும் சக்திகளுடன் சகோதரத்துவ உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதையும் வலியுறுத்தினார். சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர் மார்க்சியத்தைக் கைவிட மறுத்த அனைத்து சக்திகளையும் மீண்டும் அணிதிரட்டக்கூடிய வகையில் ‘இன்றைய உலக நிலைமையில் மார்க்சியம் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே’ என்கிற தலைப்பில் 1993இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சர்வதேச கருத்தரங்கை அவர் பார்த்தார்.
இ.எம்.எஸ். 1998இல் இறக்கும் சமயத்தில், உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான முயற்சிகள் கனியத் தொடங்கின. 1998இல் ஏதன்ஸ் நகரில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் முதல் மாநாடு நடைபெற்றது. அதன்பின்னர் ஒவ்வோராண்டும் அத்தகைய மாநாடுகள் நடைபெறத் துவங்கியுள்ளன. கடைசியாக, சமீபத்தில் புதுடில்லியில் முதன்முறையாக 11ஆவது மாநாடு நடைபெற்றது.

(தமிழில்: ச.வீரமணி)

அனைவருக்குமான வேலைவாய்ப்பு உத்தரவாதம்-இடதுசாரி அரசாங்கங்கள் வழிகாட்டுகின்றன


தலையங்கம்:


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இயங்கும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் உள்ள இடது முன்னணி அரசாங்கங்களும் மற்றும் கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும் தங்கள் தங்கள் மாநிலங்களில் அனைவருக்குமான வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டங்களை (ருniஎநசளயட நுஅயீடடிலஅநவே ழுரயசயவேநந ஞசடிதநஉவள) உருவாக்கி நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, நாட்டுக்கு வழிகாட்டி இருக்கின்றன. இவற்றில் திரிபுராதான் முதலில் திரிபுரா நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிவித்தது. கேரளாவில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அய்யன்காளி நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இதேபோன்று மேற்கு வங்க நிதி அமைச்சர், சென்ற வாரம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில் ஒரு நகர்ப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஐமுகூ-1 ஆட்சிபுரிந்த சமயத்தில் அதற்கு இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தார்கள் என்பதையும், அவர்கள் ஆதரவின்றி அது நீடித்திருக்க முடியாது என்பதையும், அத்தகைய நிலைமையில் இடதுசாரிக் கட்சிகள் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் உட்பட குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை நிறைவேற்ற ஐமுகூ-1 அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தி வந்ததையும் வாசகர்கள் நினைவுகூர்வார்களாக. இடதுசாரிகள், ஐமுகூ-1 அரசாங்கத்தை தொடர்ந்து மூன்றாண்டு காலம் வற்புறுத்தி வந்ததன் விளைவாக, மன்மோகன் சிங் அரசாங்கமானது நான்காவது ஆண்டு தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றியது. வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டின் வளங்கள் வீணாகும் என்கிற கருத்து ஐமுகூ-1 அரசாங்கத்திற்குள்ளேயே கடுமையான முறையில் இருந்து வந்தது என்ற போதிலும், நடைமுறையில் நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் இச்சட்டம் கணிசமான அளவில் பயன்களையும் ஆதாயத்தையும் அளித்ததை நாம் கண்டோம். இதில் வேடிக்கை விநோதம் என்னவெனில், இச்சட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என்று அப்போது கூப்பாடு போட்டவர்கள் தான் அதன்பின் நடைபெற்ற தேர்தலில் இச்சட்டத்தின் காரணமாக அரசியல் ரீதியாக ஆதாயம் அடைந்து, மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே இடதுசாரிக் கட்சிகள், இதேபோன்றதொரு சட்டம் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, நாட்டின் நகர்ப்புறங்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவிட வேண்டும் என்று கோரி வருகின்றன. இது இதுநாள் வரை செய்யப்படவில்லை. இதனை அடுத்து இப்போது தாங்கள் ஆளும் மாநிலங்களில் இதனை அமல்படுத்தி, மத்திய அரசுக்கும் மற்ற மாநில அரசுகளுக்கும் வழிகாட்டியுள்ளன. 13ஆவது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ஆதாரங்களைக் குறைத்திடப் பரிந்துரைத்துள்ள போதிலும் (கேரள அரசு மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாயை இழக்க வேண்டி வரும்.) இடதுசாரி அரசாங்கங்கள் இத்திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இடதுசாரி அரசாங்கங்கள் தங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ஆதாரங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றபோதிலும், தங்களுக்குள்ள நிதி ஆதாரங்களை ஏழை மக்களுக்காகவும் நலிந்த பிரிவினருக்காகவும் விரிவான வகையிலும் சிறந்த முறையிலும் பயன்படுத்தித் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்த வருகின்றன.
திரிபுராவில் அறிவிக்கப்பட்டிருக்கிற திட்டமானது, அகர்தலா நகராட்சிப் பகுதி மற்றும் 12 இதர நகர் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் பதிவு செய்யப்படாத நகர்ப்புற ஏழைகளுக்கும் விரிவாக்கக்கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் அதன் மக்கள் தொகையில் 68 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று திரிபுரா மாநில அரசாங்கம் மதிப்பிட்டிருக்கிறது. ஆயினும் மத்திய அரசாங்கமும் திட்டக் கமிஷனும் இம்மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் 40 விழுக்காட்டினர் என்று வரையறுத்திருக்கின்றன. மாநில அரசாங்கமானது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராத ஏழைகளுக்கும் இடையே எவ்விதப் பாகுபாட்டையும் மேற்கொள்ளப்போவதில்லை என்றும், அனைத்து நகர்ப்புற ஏழைகளுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைத்திடக்கூடிய வகையில் விரிவாக்கிடுவது என்றும் தீர்மானித் திருக்கிறது. ஏற்கனவே, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை அமல்படுத்துவதில், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள அரசுகளில் திரிபுரா அரசு மிகச் சிறந்த முறையில் செயல்படுவதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசானது தன்னுடைய கொள்கைகளின் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் விண்ணிற்கு எடுத்துச் சென், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏழை மக்கள் மீது சுமைகளை ஏற்றியுள்ள சூழ்நிலையில்தான் இடதுசாரிகள் தலைமை தாங்கும் மாநிலங்களில் நகர்ப்புற மக்களின் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் பட்ஜெட்டினாலும் டில்லி மாநில அரசு போன்ற சில மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளினாலும் அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் வானத்தை நோக்கி மிக வேகமாகப் பறந்து சென்று கொண்டிருக்கின்றன. இடதுசாரி அரசு களுக்கும் மற்ற அரசுகளுக்கும் இடையிலான வர்க்க அணுகுமுறையை இது மிகத் தெளிவாகக் காட்டுகிறது. தங்கள் மாநிலங்களில் நிதி ஆதாரங்கள் மிகக் குறைவாக இருந்தபோதிலும், அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமைக்கான உத்தரவாதத்தை அளித்திட வேண்டும் என்பதில் இடதுசாரி அரசுகள் எந்த அளவிற்கு உளப்பூர்வமாகவும் உண்மையாகவும் செயல்படுகின்றன என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. ‘‘வாழ்வுரிமை என்பது பாலத்திற்கு அடியில் படுத்து உறங்குவதோ அல்லது வீதிகளில் பிச்சை எடுப்பதோ அல்ல, மாறாக ஒருவர் நாகரிகமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை அளிப்பதேயாகும்’’ என்று உச்சநீதிமன்றம் இப்பிரிவு குறித்து தெளிவுபடுத்தித் தீர்ப்பளித்திருக்கிறது.

நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்துவதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமையை விரிவாக்கம் செய்திட வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இதனை மத்திய அரசு மேற்கொள்ளாவிடில், அது ‘‘உள்ளார்ந்த வளர்ச்சி’’ (‘inclusive growth') என்று சொல்வதில் எந்தப் பொருளுமில்லை.
நிறைவாக, வலுவான வெகுஜன மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான் மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தத் துடித்திடும் ஐமுகூ-2 அரசாங்கத்தின் திசை வழியை மாற்றியமைத்திட முடியும், மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை அளித்திட நிர்ப்பந்தத்திட முடியும். இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ள ஏப்ரல் 8 - சிறைநிரப்பும் போர் எதிர்காலத்தில் இத்தகு போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதற்கானதோர் ஆரம்பமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, March 21, 2010

விலைவாசி உயர்வு: மனஉறுத்தலே இல்லாதிருக்கும் மத்திய அரசு



தலையங்கம்:

மத்திய அரசு, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருப்பது குறித்து இதுநாள்வரை மனஉறுத்தல் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு வந்ததைக்கூட, தற்போது அது அதிகாரபூர்வமாகக் கைவிட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதங்களுக்குத் தொகுப்புரை வழங்கிய சமயத்தில், நிதியமைச்சர், ‘‘மார்ச் மாதத்திற்குள்ளேயே பணவீக்கம் இரு இலக்கத்தை எட்டினால்கூட நான் ஆச்சர்யப்பட மாட்டேன்’’ என்று எவ்வித கூச்சநாச்சமுமின்றி, தெரிவித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல, அவர் மேலும் ஒருபடி மேலே சென்று, நாட்டில் இதற்கு முன்பும் பலமுறை இவ்வாறு உயர் விகிதத்தில் பணவீக்கம் இருந்ததென்றும், எனவே இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஆண்டில் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர், ‘‘விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது’’ என்று கூறியதையே நிதியமைச்சர் இவ்வாறு எதிரொலித்திருக்கிறார். தங்கள் கையறுநிலையைத் தெரியப்படுத்தியுள்ள அரசாங்கம், விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பைக் கைவிட்டதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இவ்வாறு விலைவாசி உயர்வினால் ஆளும் வர்க்கங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் வழிவகுத்துக் கொடுத்திருப்பதுதான் அதைவிடக் கொடுமையாகும். இவ்வாறு ஒளிரும் இந்தியனை மேலும் ஒளிரச் செய்வதற்கும், அவதிப்படும் இந்தியனை மேலும் மோசமான முறையில் அவதிக்குள்ளாக்குவதற்கும் ஆட்சியாளர்கள் வழிவகுத்துத் தந்திருக்கிறார்கள்.

நாம் இந்தப் பகுதியில் எங்ஙனம் அரசு, நேரடி வரிமீதான சலுகைகள் மற்றும் பல்வேறு விதமான வரிச் சலுகைகள் மூலம் கார்பரேட் நிறுவனங்களும் உயர்நிலையில் வருமானவரிக் கட்டுபவர்களுக்கும் நாட்டின் வளங்கள் மிகப் பெரிய அளவில் செல்வதற்கு,மிகவும் வெட்கங்கெட்ட முறையில் பட்ஜெட்டில் பல வழிகளை வகுத்துத் தந்திருக்கிறது என்பதை விளக்கி இருக்கிறோம். அதே சமயத்தில், சாமானியர்களோ மறைமுக வரிகளை அதிகரித்திருப்பதன் மூலம் மேலும் அவதிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். எரிபொருள் மற்றும் ரசாயன உரங்களின் விலை உயர்வுகள் பெரும்பகுதியாக உள்ள சாமானிய மக்களின் வறுமைநிலைமையை மேலும் மோசமானதாக்கிடும். பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஒரு ஏற்றம் காணப்பட்டதற்கும் இவ்வாறு பணக்காரர்களுக்குப் பல்வேறு வாய்ப்புவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டதுதான் காரணமாகும்.

பட்ஜெட்டில் காணப்பட்ட பல அம்சங்களும் இயற்கையாகவே பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இருந்ததால், மொத்த விலைவாசிக் குறியீட்டெண் (Wholesale Price Index) கடந்த பதினாறு மாதங்களில் கடந்த பிப்ரவரியில்தான் உயர்ந்த அளவிற்கு 9.89 விழுக்காட்டு நிலையைத் தொட்டது. எரிபொருள்களின் விலை உயரவும், கலால் தீர்வைகளை உயர்த்தியதும்தான் இந்த உயர்வுக்குப் பிரதான காரணங்களாகும். மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பிரதான உணவுப் பொருள்களான பருப்பு வகைகள் மற்றும் தான்யங்களின் பணவீக்க அளவு, முந்தைய ஆண்டைவிட முறையே 11.79 மற்றும் 35.58 விழுக்காடு அதிகமாகும். சீனி விலை 55.45 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.

நாடாளுமன்றத்திலும், நாடு முழுதும் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணிகளிலும், தில்லியில் மார்ச் 12 அன்று நடைபெற்ற இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியிலும் இடதுசாரிக் கட்சிகள் பரிந்துரைத்தது போன்று, விலைவாசியைக் கட்டுப்படுத்திட, ஐமுகூ -2 அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வில்லை. மாறாக பணக்காரர்களுக்கு அதிக அளவு ஆதாயங்களை அளிக்கும் வகையில்தான் நடந்துகொண்டு வருகிறது.

இன்றியமையப்பண்டங்கள் அனைத்தின் மீதும், முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆயினும் இதனைச் செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது. ஏனெனில் ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவோருக்கு இது கொள்ளை லாபத்தை அளிப்பதால், அவர்களுக்கு ஆதரவாக அரசு இதனைச் செய்ய மறுக்கிறது. ஊக வர்த்தகத்தில் விவசாயம் சார்ந்த உணவுப் பண்டங்கள் தொடர்பான ஊக வர்த்தகத்தில் மட்டும் 2009 ஏப்ரல் 1க்கும் 2010 ஜனவரி 30க்கும் இடையேயான வர்த்தகம் 102.59 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இதன் மதிப்பு என்பது சுமார் 10 லட்சத்து 13 ஆயிரத்து 379 கோடியே 97 லட்சம் ரூபாயாகும். ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எவரொருவரும் அவர்கள் விற்பனை செய்திடும் பொருள்களின் விலைகள் முன்பைவிட உயர்வாக இருந்தால்தான் விற்க வருவார்கள். அவர்கள் கொள்ளை லாபம் அடிக்க வேண்டுமானால் அவர்கள் விற்பனை செய்திடும் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்திட வேண்டும். இவ்வாறு இவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக அப்பாவி சாமானிய மக்கள் அதிக விலைகொடுத்து பொருள்களை வாங்க வேண்டியிருக்கிறது.
அடுத்து நாம் கிடங்குகளில் உள்ள உணவு தான்யங்களை விடுவித்து பொது விநியோக முறை மூலம் மக்களுக்கு அளித்திடக் கோரினோம். பொருளாதார ஆய்வறிக்கையின்படி எதிர்பார்த்த உணவு தான்ய விளைச்சல் 200 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமைதான். ஆனால் அதைவிட அதிகமாக சுமார் 474.45 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் இருக்கின்றன. இவற்றை எலிகளுக்கு இரையாக்கிடாமல், வெளியில் எடுத்து மக்களுக்குப் பொது விநியோக முறையில் பகிர்ந்து கொடுத்தால் அதன் மூலம் ஏறிவரும் விலைவாசியைக் கணிசமான அளவிற்குக் கட்டுப்படுத்த முடியும் என்றோம்.

ஆனால் நாம் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எதையும் எடுத்திட அரசு மறுத்துள்ள அதே சமயத்தில், எரிபொருள் மற்றும் ரசாயன உரத்தின் விலையையும் உயர்த்தி வெட்கங்கெட்டமுறையில் அதனை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறது. இவ்வாறு அரசு, நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பணக்காரர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, நாட்டின் பெரும்பகுதி மக்களின் தோள்களில் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது.

பணவீக்கம் என்பது வருமானப் பகிர்வை உற்பத்தியாளருக்கு சாதகமாகவும், நுகர்வோருக்குப் பாதகமாகவும் மாற்றக்கூடிய அற்புதமான ஒரு பொருளாதார வழியாகும். முதலாளித்துவத்தின் கீழ் இதுதான் நடைபெறும். ஆயினும், நம்மைப் போன்ற முதலாளித்துவ நாடுகளில், பணவீக்கத்தால் பயனடைவோர் உற்பத்தியாளர்கள் அல்ல. மாறாக, உற்பத்தியாளர்களுக்கும் நுகர் வோருக்கும் இடையே இடைத்தரகர்களாகச் செயல்படுபவர்கள்தான் அதிகமான அளவில் பயனடைவார்கள். நாட்டு மக்களுக்கு உணவை அளித்திடும் உழவர்கள், கடன் சுமையைத் தாங்கு முடியாது, தொடர்ந்து தற்கொலைப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் ஏறும் விலைவாசியால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி, தத்தளிக்கும் நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இடைத்தரகர்கள் மட்டும் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள்.

நாட்டில் மக்கள் இயக்கங்களை வலுப்படுத்துவதன் மூலமாக மட்டும்தான், இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளைஅமல்படுத்தும் ஐமுகூ - 2 அரசாங்கத்திற்கு அதன் கொள்கைகளை மாற்றியமைக்க நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். மார்ச் 12 அன்று இடதுசாரிக் கட்சிகளின் பிரம்மாண்டமான எதிர்ப்புப் பேரணியை அடுத்து வரும் ஏப்ரல் 8 அன்று, நாடு முழுதும் மாவட்டத் தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் செய்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்திட இருக்கிறோம். இவ்வாறு வீரஞ்செறிந்த மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான், ஐமுகூ 2 அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நாசகர மக்கள் விரோதக் கொள்கைகளை மாற்றியமைத்திட முடியும்.

(தமிழில்:ச.வீரமணி)

Friday, March 19, 2010

பட்ஜெட் கூட்டத்தொடர்: நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற போராட்டங்கள்-பிரகாஷ் காரத்



நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் பகுதி மூன்றுவார காலம் நடைபெற்று இடைவேளை விடப்பட்டிருக்கிறது. அடுத்து ஏப்ரல் திங்களில் கூடும். கடந்த மூன்று வார காலமும் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரானது நாட்டின் அரசியல் வானில் சில தெளிவான அடையாளங்களைப் பதித்திருக்கின்றன. சென்ற ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ கூட்டணி மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் அதனால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. ஐமுகூட்டணிக்கு 262 இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஆயினும் அது சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் அளித்த ஆதரவினை அடுத்து அதனால் அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. இதில் வினோதம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியானது இக்கட்சிகளிடம் ஆதரவு எதுவும் முறையாக கோராத நிலையிலேயே இக்கட்சிகள் அதற்கு ஆதரவு அளித்தன.

ஆயினும், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமானது தன்னுடைய கொள்கைகளுக்கு மக்கள் அபரிமிதமான ஆதரவினை அளித்திருப்பது போலவே கருதிக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டணிக்கு முன்பிருந்த பலம் இப்போதில்லை என்பதையோ, தனக்கு வெளியிலிருந்து சில கட்சிகள் ஆதரவு அளிப்பதால்தான் அரசாங்கத்தை அமைக்க முடிந்திருக்கிறது என்பதையோ அது அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. எனவேதான் ஆட்சிக்கு வந்த பத்து மாத காலத்திற்குள்ளேயே அது ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. ஆட்சியாளர்களிடம் அதிருப்திகொண்ட முதல் கட்சி சமாஜ்வாதிக் கட்சிதான். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின்போது திடீரென்று குட்டிக்கரணம் போட்டு, மிகவும் இழிவான முறையில் சந்தர்ப்பவாத நிலை எடுத்து, காங்கிரசுடன் போய் சேர்ந்து கொண்ட சமாஜ்வாதக் கட்சியின் தலைவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பேயே காங்கிரசுடன் கசப்புணர்வுகள் தொடங்கிவிட்டன. அப்போது காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது தவறு என்றும் அவ்வாறு ஆதரவு அளித்ததற்கு வருந்துவதாகவும் வெளிப்படையாகவே முலாயம் சிங் பேசத் தொடங்கிவிட்டார். ஐமுகூட்டணியின் மற்றொரு விசுவாசக் கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடி-யும் தேர்தல்களுக்குப்பின் வெறுப்பை உமிழத் தொடங்கிவிட்டது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்திருப்பதற்கு, ஐமுகூ அரசாங்கம் எவ்விதப் பொறுப்பையும் ஏற்கத் தயாராயில்லை. சர்வதேச அளவில் இவற்றின் விலைகள் உயர்ந்திருப்பதும், விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த விளைபொருள்களுக்குக் கூடுதல் விலை கொடுத்ததும், அதனால் அவர்கள் நிறைய உண்ணத் தொடங்கி விட்டதும், மாநில அரசுகள் விலைவாசி உயர்வுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்காததும்தான் விலை உயர்வுக்குக் காரணங்கள் என்று ஆட்சியாளர்கள் மக்கள் மீதும், மாநில அரசுகள் மீதும் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய மத்திய அரசின் மிக முரட்டுத்தனமான நடவடிக்கைகளினால் நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுமே வெகுண்டெழுந்தன. இது இயற்கையே, இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. இதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே நம்மால் காண முடிந்தது. விலைவாசிக்கு எதிராக நடைபெற்ற விவாதங்களில் அரசாங்கத்தை வெளியிலிருந்து ஆதரித்து வந்த கட்சிகளும் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக நம்முடன் இணைந்து குரல் கொடுத்தன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திட வேண்டும் என்று கிரித் பாரிக் குழு அறிக்கை சமர்ப்பித்தபின் அதன் அடிப்படையில் அரசாங்கம் செயல்படத் தீர்மானித்தபோது, அதன் கூட்டணிக் கட்சிகளே அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. திமுகவும் திரிணாமுல் காங்கிரசுமே தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தின. எனவே பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என்ற தன் முடிவை மத்திய அமைச்சரவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதிலும், காங்கிரஸ் சரியான தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசு, யூனியன் பட்ஜெட்டை பெட்ரோல் மற்றும் டீசல்களின் மேல் சுங்கம் மற்றும் கலால் தீர்வைகளை உயர்த்திடப் பயன்படுத்திக் கொண்டது. பட்ஜெட் உரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்புக்கு எதிராகத் தன்னெழுச்சியான எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் கிளம்பியது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே வெளிநடப்புச் செய்ததைப் பார்க்க முடிந்தது.

மத்திய அரசு உருப்படியாக ஏதேனும் செய்திருக்கிறது என்று சொன்னால் அது மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவை மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதுதான். மாநிலங்களவையில் இடதுசாரிக் கட்சிகள், பாஜக மற்றும் சில பெரிய மாநிலக் கட்சிகள் ஆதரவு அளித்ததால் இந்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிந்தது. ஆயினும், இந்தச் சட்டமுன்வடிவுக்கு எதிரானவர்களை - சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களை - மேலும் கூடுதலான முறையில் ஆத்திரப்பட வைத்திருக்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் எவ்விதமான தயக்கமுமின்றி தங்கள் முழு ஆதரவினை அளித்தன. அதேபோன்று அவை நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் அரசின் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எவ்விதத் தயவுதாட்சண்யமுமின்றி தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்தன. ஐமுகூ அரசாங்கமானது, தன்னுடைய அமெரிக்க ஆதரவு. பெரு முதலாளிகள் ஆதரவு, தனியார்மயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அரசு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கக்கூடிய சட்டமுன்வடிவுகளில் ஒன்று, தேசிய மயமாக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாகும். தற்போதுஅதில் அரசின் பங்குகள் 55 விழுக்காடு இருக்கிறது. அதனை 51ஆகக் குறைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து, நாட்டின் ‘‘கல்விச் சந்தை’’யில் அந்நிய கல்வி நிறுவனங்களும் புகுந்திட வழிவகுத்துத் தந்திருக்கிறது. லாபகரமாக இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தனியாருக்குத் தாரை வார்க்க பட்ஜெட்டில் முன்மொழிந்திருப்பதுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இடதுசாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்திருப்பதோடு மட்டுமல்ல, மற்ற மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளாலும் எதிர்க்கக்கூடிய நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. ரசாயன உரத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மான்யங்களில் மூவாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வெட்டிக் குறைத்திட அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்ல, சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் அதற்கு முன்னாள்களில் ஆதரவு அளித்து வந்த கட்சிகளும் எதிர்த்துள்ளன. அரசு இவ்வாறு உணவு மற்றும் ரசாயன உரத்திற்கு அளித்து வந்த மான்யங்களை வெட்டிக் குறைத்துள்ள அதே சமயத்தில், சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளித்திருப்பதையும் எவரும் பார்க்கத் தவறிவிடக் கூடாது. ஐமுகூ அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த எந்த வொரு கட்சியும் இத்தகைய நடவடிக்கைகளை மன்னிக்க முடியாது. அவ்வாறு அவை செய்யுமானால் அவற்றிற்கு மக்கள் இதுநாள்வரை அளித்து வந்த ஆதரவு அகன்று அவை தனிப்படும் என்பது நிச்சயம்.

மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்திற்குக் கிஞ்சிற்றும் கவலை யில்லை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, அது தற்போது கொண்டுவர முயன்றுகொண்டிருக்கும் ராணுவம் சாரா அணுசக்தி பொறுப்புச் சட்டமுன்வடிவு (Civil Nuclear Liability Bill) ஆகும். நாட்டில் நிறுவப்படும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அப்போது மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்து இச்சட்டமுன்வடிவு சில விவரங்களைத் தெரிவிக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது, நாட்டில் 10 ஆயிரம் மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்வதற்காக அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணுஉலைகளை வாங்குவது தொடர்பாக கொண்டுவரப்படுகிறது. அணு உலைகளை அளித்திடும் அமெரிக்க நிறுவனங்கள், அவை அளித்திடும் அணு உலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதனால் பாதிப்புகள் உருவானால் அதனால் விளையும் இழப்பு எதற்கும் பொறுப்பு இல்லை என்று இந்தச் சட்டமுன்வடிவு கூறுகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், விபத்தால் ஏற்படும் அனைத்துப் பாதிப்புகளுக்கும் இந்திய அரசாங்கமும் நாட்டு மக்களும்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமேயொழிய, அணுஉலைகளைத் தந்திட்ட அமெரிக்க நிறுவனங்கள் அல்ல. இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு சட்டமானாhல், அதன்பின் அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு, மருத்துவ சிகிச்சை முதலானவற்றை இந்த அணுஉலைகளை அளித்த அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து கோர முடியாது.
ஆயினும், இத்தகைய சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதில் மன்மோகன்சிங் அரசாங்கத்திற்கு எவ்விதமான லஜ்ஜையுமில்லை. இந்தச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஐமுகூ அரசு முன்வந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு கிளம்பியதிலிருந்து ஐமுகூ அரசாங்மானது எந்த அளவிற்கு தனிமைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

அடுத்து, ஐமுகூ அரசாங்கமானது மாநிலங்களின் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள முயன்றுவருவதைக் காண முடிகிறது. கல்வித் துறையைப் பொறுத்தவரை, கல்வியில் மாநிலங்களுக்கு இருந்துவரும் பங்கினைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பள்ளி மற்றும் உயர் கல்வி தொடர்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவிப்புகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார். முன்மொழியப்பட்டிருக்கும் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் (National Commission for Higher Education and Research) என்பது உயர் கல்வித்துறையில் மாநிலங்களின் பங்கைக் கடுமையாக வெட்டிக் குறைக்கிறது. மேலும், மத்திய அரசானது மாநிலங்களுக்குப் போதிய நிதி உதவி எதனையும் அளித்திடாமல் கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act) தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக எண்ணற்ற கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு ஆக்கிரமிக்க முயல்வதும் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதி ஆதாரங்களைக் குறைத்துக் கொண்டிருப்பதும் வரவிருக்கும் காலங்களில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மோதல்களை அதிகப்படுத்தும் நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மூன்று வார இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கூடவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரானது, மத்திய அரசு கொண்டுவரத் துடித்துக் கொண்டிருக்கும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கக்கூடிய சட்டமுன்வடிவுகள், விலைவாசி உயர்வு, வேளாண்மை நெருக்கடி, மற்றும் பட்ஜெட்டில் அரசு முன்மொழிந்துள்ள சில திட்டங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆவேச அலைவீச்சைப் பார்க்கப்போகிறது.

இடதுசாரிக் கட்சிகள், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறையை வலுப்படுத்தி, எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும், உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடக் கோரியும் மக்களை அணிதிரட்டி வருகின்றன. மாநிலங்களில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்ற இயக்கங்கள் காரணமாக மார்ச் 12 அன்று தில்லியில் நடைபெற்ற பேரணி / ஆர்ப்பாட்டம் மகத்தான வெற்றி பெற்றது. நாடு முழுதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றனர். அடுத்து இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 8 அன்று நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் செய்து 25 லட்சம் மக்கள் சிறையேகத் திட்டமிட்டிருக்கிறோம்.

வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரும், தொழிலாளர் வர்க்கத்தின் உடனடிக் கோரிக்கைகளுக்காக ஐந்து மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ள இருக்கிறது. மார்ச் 5 அன்று நாடு முழுதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கைதானார்கள். தொழிலாளர் வர்க்கமும் வரவிருக்கும் காலங்களில் தங்கள் போராட்டங்ளையும் வேலைநிறுத்தங்களையும் தீவிரப்படுத்த முனைந்துள்ளன. இவை அனைத்தும் மாற்றுக் கொள்கைகளுக்கானதொரு போராட்டத்தை ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி சக்திகளும் ஒருமுகப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வழிவகுத்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, March 13, 2010

மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு


பதினான்கு ஆண்டு காலம் கழித்து, மூன்று முறை நாடாளுமன்றத்தில் இதற்கு முன் கொண்டுவரப்பட்டு, உறுப்பினர்கள் செய்த அமளியால் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டு, கடைசியாக, மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை மகளிர்க்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டமுன்வடிவு 2010 மார்ச் 9 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்போது கொண்டுவரப்பட்ட இச் சட்டமுன்வடிவானது 1996இல் இடதுசாரிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சரவையால் ஏற்கப்பட்ட ஒன்று என்பதையும் அதுதான் இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. அந்தச் சட்டமுன்வடிவானது, மிகவும் ஆழமான பரிசீலனைக்காக ஒருமுறை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கும், பின்னர் நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் இரண்டிலுமே அனைத்துக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அங்கம் வகித்தார்கள் என்ற போதிலும், இந்தச் சட்டமுன்வடிவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டது, வெளிப்படையாகவே அவையில் நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டது. அதே அரசியல் கட்சிகள் அவற்றைத் திரும்பவும் அரங்கேற்ற இப்போதும்கூட முயற்சித்தன. ஆயினும், இடதுசாரிக் கட்சிகள், வலதுசாரிக் கட்சிகள் மற்றும் நடுநிலை சக்திகளின் விரிவான ஒற்றுமையின் காரணமாக ( வாந செடியனநளவ யீடிளளiடெந ரnவைல டிக வாந டுநகவ, சுiபாவ யனே வாந ஊநவேநசளைவ கடிசஉநள) மாநிலங்களவையில் அத்தகைய சீர்குலைவு முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இறுதியாக மகளிர்க்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மகளிர்க்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்திய சுதந்திரப் போராட்டம் துவங்கிய காலத்திலேயே எழுப்பப் பட்டுவிட்டது. சுதந்திரப் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்த வீராங்கனைகள், அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்ட் வீராங்கனைகள், எப்போதும் பாலின சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுத்து வந்தனர். இது, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் சமயத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்பதன் பிரிக்கமுடியாததொரு பகுதியாக பாலின சமத்துவமும் அமைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆயினும், சுதந்திரம் பெற்றபின், ஆட்சியாளர்கள் பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்படும் என்கிற உறுதிமொழியை நிறைவேற்ற நிரம்பவே தயக்கம் காட்டினர். எனவே பெண்களுக்கு சமத்துவம் அளிப்பதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியம் உருவாயின. 1954இல், ‘‘வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சம உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான மகளிர் போராட்டத்தை’’ முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தோடு இந்திய மகளிர் தேசிய சம்மேளனம் அமைக்கப் பட்டது.

உலக அளவிலும், பாலின சமத்துவம் மற்றும் பாலின நீதி (நனேநச நளூரயடவைல யனே பநனேநச தரளவiஉந) தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கக்கூடிய விதத்தில், 1975இல் சர்வதேச மகளிர்ஆண்டாக பிரகடனம் செய்தது. அப்போது ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் பெண்களின் நிலை குறித்து ஓர் அறிக்கை தயார் செய்து அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் தொடர்பாக கோரிக்கைகள் எழுப்பப்படுவது அதிகரித்தன. 1971 செப்டம்பரில் இந்தியாவில் பெண்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்திட ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் அறிக்கை 1975இல் வெளி உலகுக்கு வெளியிடப்பட்டது. அதன்மூலம் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் பாகுபாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்தக்குழுவானது, மாதர் அமைப்புகள் உயர்த்திப்பிடித்ததைப்போல், நாட்டில் மகளிர் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டிய அதே சமயத்தில், பெண்களின் நிலைமைகளை உயர்த்திட, மிக முக்கியமான கூறாக, பெண்களுக்கு அரசியல் அமைப்புகளிலும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்திருந்தது. பின்னர் 1988இல் பெண்களுக்கான தேசிய தொலைநோக்குத் திட்டம் (சூயவiடியேட ஞநசளயீநஉவiஎந ஞடயn கடிச றுடிஅநn), பெண்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அமைப்புகளிலும் அனைத்து மட்டங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இக்கோரிக்கைகளின்பால் ஏற்பட்ட அரசியல் கருத்தொற்றுமை அடிப்படையில், 1993ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74ஆவது திருத்தங்களின் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உத்தரவாதப் படுத்துவதற்காக சட்டமுன்வடிவு நிறைவேற்றப் பட்டிருக்கும் இத்தருணததில் பெண்களின் நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக நடைபெற்ற போராட்டங்களை நினைவுகூர்வது அவசியம். அரசியல் அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் மூலம், அவர்களின் நிலை தானாகவே மேம்பட்டுவிடும் என்று பொருள் கொண்டிடக் கூடாது. பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இவை கவனத்தில் கொண்டுவர உதவிடும். இடஒதுக்கீடுகள் அவசியம் என்ற போதிலும் அது மட்டுமே அவர்களின் வாழ்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவந்து விடப் போதுமானதல்ல. மகளிர் அமைப்புகளின் வலு மற்றும் நாட்டின் ஜனநாயக இயக்கங்கள் மூலமாகத்தான் தந்தைவழிச் சமுதாய அமைப்பில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அநீதிகள் மற்றும் தப்பபிப்பிராயங்கள் நீக்கப்படுவது சாத்தியம். மேலும் தற்போது நாட்டில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றன. பெண் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்வி கவனிப்பாரற்றுக் கிடப்பது மட்டுமல்ல, ஊட்டச்சத்தின்மை மற்றும் ஆரோக்கியமற்ற சூழ்நிலைமைகளும் இந்தியப் பெண்களை மிகவும் கீழ் நிலையில் வைத்திருக்கின்றன. இவற்றை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கிட வேண்டியிருக்கிறது. பாலின சமத்துவம் அளிப்பதில் உலகில் உள்ள 128 நாடுகளில் இந்தியா 114ஆவது நாடாகப் பட்டியலிடப் பட்டிருக்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் மற்றும் பிரிவினர், இந்த ஒதுக்கீடுகள் நாட்டில் உள்ள மேல் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினருக்குத்தான் சாதகமாக இருந்திடும் என்றும் பிற்பற்ற வகுப்பார் மற்றும் முஸ்லீம்கள்போன்ற மதச் சிறுபான்மையினருக்கு உருப்படியான எவ்வித முன்னேற்றத்தையும் அளித்திடாது என்றும் வாதிட்டனர். பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம் பெண்கள் வாழ்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பது உண்மைதான். அவை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியவைதான். இதற்குத் துல்லியமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டியது அவசியம். ஆனால் இதனைக் கூறி, பெண்களுக்கு அரசியல் அமைப்புகளில் இடஒதுக்கீடு அளிப்பதைத் தடுப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது. கடந்த இருபதாண்டு காலமாகவே பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை இவர்கள் இவ்வாறுதான் தடுத்து முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள்.

மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவை எதிர்த்து வந்தவர்கள், இப்போது தங்கள் அணியில் ஒரு புதிய கூட்டாளியை - திரிணாமுல் காங்கிரசை - கண்டார்கள். ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு முக்கிய பங்காளராக இருந்த போதிலும், இச்சட்டமுன்வடிவு தொடர்பாக அரசாங்கம் தங்களைக் கலந்தாலோசிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இது மிகவும் விசித்திரமாகும். எந்தவொரு சட்டமுன்வடிவும், அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. ஆனால் மத்திய கேபினட் அமைச்சர் ஒருவர் இவ்வாறு தனக்குத் தெரியாது என்று கூறுவது கேலிக்கூத்தான ஒன்று. கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவு தற்போதைய வடிவத்தில் ஏற்புடையதல்ல என்றும், இதில் முஸ்லீம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கூடிய வகையில் போதுமான சிறப்பு ஷரத்துக்கள் ஏதுமில்லை என்றும் திரிணாமல் காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் இதே திரிணாமுல் காங்கிரஸ்தான், மேற்கு வங்கத்தில் ரங்கனாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கு வங்க அரசு, முஸ்லீம்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தெளிவாகிவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இவ்வாறு மோதுவது முதல் தடவையல்ல. இதற்குமுன் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தபோதும், பிரதமர் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பிரகடனம் செய்துள்ளபோதும், திரிணாமுல் காங்கிரஸ், மத்திய - மாநில அரசுகள் இணைந்து கூட்டாகப் பாதுகாப்புப் படையினர்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்ததன் நோக்கம் மாவோயிஸ்ட்டுகளுக்குப் பரிவுகாட்டுவதற்கே. மேற்கு வங்கத்தில் மக்கள் மத்தியில் அராஜகம் மற்றும் வன்முறையை ஏவி, அவர்களை மிரட்டிப் பணிய வைத்து, தங்கள் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட வேண்டும் என்ற கெடுசிந்தையுடன் இவ்வாறு அது நடந்து கொள்கிறது. மொத்தத்தில் இந்தக் கட்சிக்கு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட்டிருக் கிறதே என்ற கவலை கிஞ்சிற்றும் கிடையாது.

இவ்வாறு இக்கட்சி நிலை எடுத்திருந்த போதிலும், மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலிருந்து, நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பான்மையானவை, மகளிர்க்கான இடஒதுக்கீட்டை ஆதரித்து நிற்பது தெளிவாகி இருக்கிறது. உண்மையில் இது, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சி மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளில் ஒரு மைல்கல்லாகும். வரவிருக்கும் காலங்களில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமுன்வடிவானது மக்களவையிலும் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெரும்பாலானவற்றிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகி செயல்வடிவம் பெறுவதற்கான நிலைமையை உருவாக்க வேண்டியது நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அடுத்து, பெண்களின் வாழ்நிலைமையை மேம்படுத்துவதற்கும், சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் சமத்துவ நிலையை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Friday, March 12, 2010

புதுதில்லி, மார்ச் 12 பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்




ஏப்ரல் 8 - சிறை நிரப்பும் போர்

புதுதில்லி, மார்ச் 12-
ஏப்ரல் 8 அன்று மாவட்டத் தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும் இதில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.
புதுதில்லி வரலாற்றிலேயே இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு லட்சக்கணககானோர் பங்கேற்ற செம்படைப் பேரணி, தலைநகரைக் குலுக்கியது. விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், முன்பேர வர்த்தக முறையை ரத்து செய்யக்கோரியும், நில உரிமை மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகவும், பொது விநியோக முறையை அனைவருக்கும் விரிவுபடுத்திடக் கோரியும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் உதவியுடன் அராஜகவாதிகள் நடத்திடும் வன்முறைக்கு முற்றுப்புள்ளிவைக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் தலைநகர் புதுதில்லியில் மாபெரும் செம்படைப் பேரணி நடைபெற்றது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பேரணி தில்லி, ராம்லீலா மைதானத்திலிருந்து வெள்ளியன்று காலை புறப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை, கே. வரதராசன், எம்.கே. பாந்தே, பிமன் போஸ், பிருந்தா காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் தேவபிரதா பிஸ்வாஸ், முன்னே வர, தில்லி, பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், அர்யானா, உத்தரப்பிரதேசம் முதலான மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான செம்படைத் தொண்டர்கள் பேரணியில் முழக்கமிட்டவாறு பின்தொடர்ந்தனர். பேரணி தில்லியின் முக்கிய வீதிகள் வழியே நாடாளுமன்ற வீதியை சென்றடைந்தது.
பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், பிமன் போஸ், ஏ. பி. பரதன், தேவபிரதா பிஸ்வாஸ், சந்திரசூடன் (புரட்சி சோசலிஸ்ட் கட்சி), சீத்தாராம் யெச்சூரி, குருதாஸ் தாஸ் குப்தா முதலானோர் உரையாற்றினார்கள்.
நாடாளுமன்றத்திலும் போர்க்குரல்
அதே சமயத்தில், நாடாளுமன்றத்திலும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் போர்க்குரல் எழுப்பினார்கள். மாநிலங்களவையில், அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, விலைவாசியைக் கட்டுப்படுத்திட ஐந்து கோரிக்கைகளை அரசின் முன் வைத்து உரையாற்றினார். சீத்தாராம் பேசுகையில், இந்தியா ஒரு பக்கத்தில் ஒளிரும் அதே சமயத்தில் மறு பக்கத்திலோ நாட்டிலுள்ள மக்களில் 80 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானம் கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்றார். சாமானிய மக்கள் படும் கடும் துன்பத்தைப் போக்கிட ஐந்து முக்கிய கோரிக்கைகளை அரசின் முன் வைக்கிறோம்.
முதலாவதாக, கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் 476 லட்சம் டன் உணவு தான்யங்களை உடனடியாக விடுவித்திட வேண்டும், இரண்டாவதாக உணவுப் பொருள்கள் தொடர்பான முன்பேர வர்த்தகத்தை ரத்து செய்திட வேண்டும், மூன்றாவதாக பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்கவரியை ரத்து செய்திட வேண்டும், நான்காவதாக பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக மாற்றிட வேண்டும், ஐந்தாவதாக கள்ளச்சந்தைப் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சீத்தாராம் செய்சூரி கூறினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா பேசுகையில் அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்ட விலைவாசியைக் கட்டுப்படுத்தாவிட்டால் இடதுசாரிக் கட்சிகள் போராட்டங்களைத் தீவிரப்படுத்திடும் என்று எச்சரித்தார்.
பின்னர் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திடும் இடத்திற்கு முழக்கமிட்டுக்கொண்டே பேரணியாக வந்தனர்.
சிறைநிரப்பும் போர்
பேரணி/ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வரும் ஏப்ரல் 8 அன்று, அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவதென்று அறைகூவல் விடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் நாடு முழுதும் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் பலத்த முழக்கத்திற்கிடையே அறிவிக்கப்பட்டது.
(ந.நி.)

Tuesday, March 9, 2010

பெண்கள் அரசியலுக்கு வருவது கலாச்சாரத்திலும் மாற்றத்தைக் கொண்டுவரும்-பிருந்தா காரத்



புதுதில்லி, மார்ச் 10-
பெண்கள் அரசியலுக்கு வருவது நாட்டின் கலாச்சாரத்திலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய் அன்று மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பிருந்தா காரத் பேசியதாவது:
‘‘இந்திய அரசியலின் முகத்தோற்றத்தையே நிச்சயமாக மாற்றி அமைக்கப் போகிற வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சட்டமுன்வடிவினை ஆதரித்துப் பேச முன்வந்திருக்கும் இத்தருணத்தில் இச்சட்டமுன்வடிவிற்கு என் கட்சியின் சார்பிலும் நான் இத்தனை ஆண்டு காலம் செயல்பட்டு வந்த மகளிர் அமைப்புகளின் சார்பிலும் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி முழு ஆதரவினை முழுத் திருப்தியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக இது நாட்டைச் சிறப்பான முறையில் மாற்றியமைத்திடும் என்று நம்புகிறேன். இச்சட்டமுன்வடிவானது, இத்தனை ஆண்டு காலமாக அரசியல் அரங்கில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த பாகுபாடுகளை நீக்குவதற்கு உதவிடும் என்பதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக நடைமுறைகளையும் ஆழமான முறையில் விரிவாக்கிடும் என்றும் நம்புகிறேன்.
இச்சட்டமுன்வடிவைக் கொண்டு வருவதற்காகக் கடந்த 13 ஆண்டுகளாக மகளிர் அமைப்புகள் போராடி வந்தன. இதற்கு எதிராக எண்ணற்ற மோசமான விமர்சனங்களையும் நாம் எதிர்கொண்டோம். சமூக அவலங்களை சீர்திருத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்போதெல்லாம் இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பும் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நாடாளுமன்ற மக்களவையில் கூறிய வார்த்தைகளை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன்.
இந்து சீர்திருத்தச் சட்டமுன்வடிவின் மீது நீண்ட நெடிய விவாதம் நடைபெற்றது. அப்போது அதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. அப்போது அவர், ‘‘பெண்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எந்த ஒரு நாடும் முன்னுக்குப் போக முடியாது’’ என்றார். அதனை இப்போது நினைவுகூர்கிறேன்.
இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால், நம் நாட்டில் மாபெரும் சமூக சீர்திருத்தவாதிகளில் பலர் ஆண்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்போது இந்தச் சட்டமுன்வடிவும் ஜனநாயக எண்ணம் படைத்த ஆண்களின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட இருக்கிறது. எனவே இந்தச் சட்டமுன்வடிவை ஆதரிக்கும் இந்த நாட்டில் உள்ள, இந்த அவையில் உள்ள அனைத்து ஆண்களையும் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவு இன்று நிறைவேற்றப்படுகிறது என்றால் அதற்கு எண்ணற்றோர் தங்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இன்றையதினம் நினைவுகூர மறக்க மாட்டோம்.
இந்தச் சட்டமுன்வடிவு இன்றையதினம் உயிருடன் இருக்கிறதென்றால் அதற்கு மகளிர் அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள்தான் காரணம். அவை அனைத்து அரசியல் கட்சிகளையும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன. எனவே அனைத்து மகளிர் அமைப்புகளுக்கும் இந்த சமயத்தில் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டு வந்ததற்காக அனைத்து மகளிர் அமைப்புகளின் சார்பாகவும் பிரதமருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சட்டமுன்வடிவு தொடர்பாக இரண்டு, மூன்று முக்கிய அம்சங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவைக்கு வர வேண்டும், அவர்கள் நியமனம் மூலம் வரக்கூடாது. அதுவே ஜனநாயகத்தினை வலுப்படுத்திடும்.
இந்திய அரசியலில் கடந்த இருபதாண்டு காலமாக, பல மாநிலங்களில் பெண்கள் பஞ்சாயத்துக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். பெண்களாகிய நாங்கள் தற்சமயம் பஞ்சாயத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு அல்ல, அதற்கும் மேல் 40 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு வரை அங்கம் வகிக்கிறோம். அதே போன்று சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் எங்கள் திறமையின் மூலமாக, எங்கள் தியாகங்களின் மூலமாக மூன்றில் ஒரு பங்கை விஞ்சுவோம், 40 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு அளவிற்கு வருவோம். இது சத்தியம்.
பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வருவது என்பது நிச்சயமாக அரசியல் களத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது நிச்சயம்.
பெண்கள் அரசியலுக்கு வருவதானது, நம் கலாச்சாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் நாட்டில் பாரம்பர்யம் என்ற பெயரில், கலாச்சாரம் என்ற பெயரில் பழம் பஞ்சாங்கப் பழக்க வழக்கங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் திணிக்கப்படுகின்றன. பொது வாழ்வில் ஏராளமான அளவில் பெண்கள் பங்கேற்கும்போது இந்நிலைமைகள் மாறும் என்று நான் நம்புகிறேன். பெண்களை, பாரம்பர்யத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் பிணைத்து வைத்திருக்கும் பல்வேறு தளைகள் அறுபடும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிருந்தா காரத் கூறினார்.
(ச.வீரமணி)

ஆண்-பெண் சமத்துவம் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்திடும்

ஐ.நா.வளர்ச்சித் திட்டம் அறிக்கை
புதுதில்லி, மார்ச் 9-
ஆண் - பெண் இரு பாலருக்குமிடையே சமத்துவம், சமுதாயத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்திடும் என்று ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மகளிர் தினமான மார்ச் 8 அன்று, புதுதில்லியில், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமான ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் நிர்வாகியும் நியுசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமருமான ஹெலன் கிளார்க், பெண்கள் சம்பந்தமான ஆய்வறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர்க்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திட சட்டம் இயற்றப்படவிருக்கிறது. இச்சட்டம் நிறைவேறினால், இது வரலாறு படைத்திடும்.
சமீபத்தில் ஆசிய - பசிபிக் நாடுகள் அபரிமிதமான முறையில் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன. ஆயினும் அதன் மூலம் ஆண் - பெண் சமத்துவம் ஏற்பட்டு விட்டதாகக் கூறுவதற்கில்லை. நாட்டின் சட்டங்கள் முன் ஆண் - பெண் சமம் என்றும், சம வேலைக்க சம ஊதியம் என்று கூறப்பட்டபோதிலும், பல நாடுகளில் அது இன்னமும் அமலாகவில்லை.
ஆசிய நாடுகளில் சுமார் பத்து கோடி பெண்கள் போதிய சுகாதார வசதியும் ஊட்டச் சத்தும் இல்லாததாகல் இறந்துள்ளார்கள். இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் 42 லட்சத்து 60 ஆயிரம் (42.6 மில்லியன்) பேர் இறந்திருக்கிறார்கள் என்று ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள பின்னணியில், ஆண் - பெண் வேற்றமையும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் வேலைபார்த்து வந்த பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியே அவர்கள்வேலை பார்த்தாலும் அவர்களுக்கென்று இருக்கின்ற பிரத்யேக உரிமைகளான மகப்பேறு விடுப்பு மற்றும் பல்வேறு விதமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.
தெற்காசியாவில் உள்ள நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் (அதாவது ஆப்கானிஸ்தானம், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள்) ஆண்களுக்கு மட்டுமே நிலத்தில் பாரம்பர்ய உரிமைகளை வழங்கி சட்டங்கள் இயற்றியிருக்கின்றன.
ஆண்-பெண் சமத்துவம் என்பது இரு பாலினருக்கும் சுதந்திரத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அளித்திட வேண்டும். சமத்துவமின்மை என்பது சமூக நீதிக்கும் சமூக உறுதிப்பாட்டிற்கும் எதிரானது.
பாலின சமத்துவத்தின்று ஐ.நா.வளர்ச்சித் திட்ட அறிக்கை மூன்று முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறது. பெண்களின் பொருளாதார வல்லமையை மேம்படுத்துவதுடன், அவர்களிடம் அரசியல் அதிகாரத்தையும் வழங்கிட வேண்டும், ஆண்களுக்கு சமமாக சட்ட உரிமைகளையும் அளித்திட வேண்டும். இதில் அரசியல் அதிகாரத்தைச் சுற்றி மற்ற இரு உரிமைகளும் பிணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஹெலன் கிளார்க் கூறினார்.
(ச.வீரமணி)

Sunday, March 7, 2010

உலக மகளிர் தினத்தின் நூறாவது ஆண்டு - பிருந்தா காரத்




நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1910 ஆகஸ்ட் 27 அன்று கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மகளிர் மாநாட்டில் புரட்சி வீராங்கனை கிளாரா ஜெட்கின், தன் சக தோழர் அலெக்சாண்ட்ரா கொல்லன்டாய் மற்றும் இதர தோழர்களுடன் இணைந்து ‘‘சர்வதேச மகளிர் தினம்’’ அனுசரிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

வரலாறு படைத்திட்ட தீர்மானம்

தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது: ‘‘ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற அரசியல் மற்றும் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் இயங்கும் தொழிற்சங்க ஸ்தாபனங்களின் ஒத்துழைப்புடன் அனைத்து நாடுகளிலும் உள்ள சோசலிஸ்ட் மகளிர், ஒவ்வோராண்டும் மகளிர் தினத்தைக் கொண்டாடுவார்கள். அதன் தலையாய குறிக்கோள், மகளிர்க்கான வாக்குரிமையைப் பெற உதவுவதேயாகும். இந்தக் கோரிக்கையை, சோசலிஸ்ட் கட்டளைக்கிணங்கப் பெறப்பட வேண்டும். மகளிர் தினம் சர்வதேச குணாம்சத்துடன் அமைந்திட வேண்டும். அதற்கான தயாரிப்புப் பணிகள் மிகவும் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.’’ மகளிர்க்கான வாக்குரிமையானது, சோசலிசத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் எனக் கருதப்பட்டது.

முதல் மகளிர் தினம்

தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சிகள், உழைக்கும் பெண்கள் மன்றங்கள் மற்றும் பின்னிஷ் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பெண்கள் அடங்கிய பதினேழு நாடுகளைச் சேர்ந்த நூறு பெண் பிரதிநிதிகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்கள். அடுத்த ஆண்டு - அதாவது 1911இல் - கோபன்ஹேகன் முன் முயற்சியின் விளைவாக ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அணிவகுத்தார்கள். 1848 புரட்சியைக் கொண்டாடும் மார்ச் 19 அப்போது மகளிர் தினத்திற்கான நாளாகத் தெரிவுசெய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மகளிர் தின அணிவகுப்புகள் மிக எழுச்சியுடன் நடைபெற்றன.

ஜார் ஆட்சி புரிந்த ரஷ்யாவிலும் பிப்ரவரி கடைசி ஞாயிறில் மகளிர் அத்தினத்தை அனுசரித்தார்கள். (அன்றைக்கு ரஷ்யாவில் புழக்கத்தில் இருந்த ஜூலியன் காலண்டர்படி அன்றையதினம் கொண்டாடப்பட்டது. உலகில் உள்ள மற்ற நாடுகளில் புழக்கத்திலிருந்த கிரிகோரியன் காலண்டர்படி அன்றைய தேதி மார்ச் 8 ஆகும்.) அமெரிக்காவில், சோசலிஸ்ட் பெண்கள் 1908இலேயே தேசிய மகளிர் தினத்தைக் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். உண்மையில் உலகில் கொண்டாடப்பட்ட முதல் மகளிர் தினம் இதுவேயாகும். அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மகளிர் வாக்குரிமை மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்கள். ஆடை ஆயத்தத் தொழிலகங்களில் பணியாற்றி வந்த பெண்கள் போலீஸ் அடக்குமுறையையும் மீறி வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினார்கள். அந்த சமயத்தில் ஏகாதிபத்தியங்கள் உலக யுத்தத்திற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தன. உலகம் முழுதுமிருந்த பெண்கள் யுத்தத்திற்கெதிராக அமைதிக்காக அறைகூவல் விடுத்தார்கள். 1913இல்தான் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-க்கு மாற்றப்பட்டது.

ஆனால், அடுத்த ஆண்டு, உலக யுத்தம் மூண்டது. 1915 மற்றும் 1916 ஆம் ஆண்டுகளில் மகளிர் தினத்தைக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், போரில் ஈடுபட்டிருந்தவர்கள் அமைதிக்காகக் குரல் கொடுத்தவர்கள் மீது அடக்குமுறையை ஏவினார்கள். ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அலெக்சாண்ட்ரா கொல்லன்டாய் கூற்றின்படி அப்போது நார்வேயில் மட்டும்தான் மார்ச் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்தது. சில பெண் பிரதிநிதிகள் கூடி, மிகவும் துணிவுடன் அமைதிக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

அடுத்து, மாபெரும் 1917 வந்தது. ரஷ்யாவில் ஜாரின் ஆட்சிக்கெதிராகப், பெட்ரோகிராடில் புயல் அடித்துக்கொண்டிருந்த சமயத்தில், பெண் தொழிலாளர்கள் மார்ச் 8 பேரணி/ஆர்ப்பாட்டத்திற்காகப் பெண்களை அணிதிரட்டிக் கொண்டிருந்தார்கள். பெண் தொழிலாளர்கள், ராணுவ வீரர்களின் மனைவிமார்கள், தொழிலாளர் வர்க்கத்தின் குடும்பப் பெண்கள், பட்டினிக் கொடுமைக்கு ஆளானோர் அனைவரும் பெட்ரோகிராட் தெருக்களில் அணிவகுத்தார்கள். அவர்கள் யுத்தத்திற்கெதிராகக் குரல் கொடுத்தார்கள். தங்களுக்கு அமைதி வேண்டும் என்றும், உணவு வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்கள். இவர்களது குரலுக்குத் தொழிலாளர்களும், ராணுவத்தினரும் ஆதரவு நல்கியதை அடத்து பெட்ரோகிராடின் வீதிகளில் வீறுகொண்டு உணர்ச்சி முழக்கங்களுடன் முன்னேறினார்கள். மார்ச் 8 அன்று பெட்ரோகிராட் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுதும் மக்களின் எழுச்சியைப் பன்மடங்குப் பெருகச் செய்து, புரட்சிகர நிகழ்வுகளை ஏற்படுத்தி, உலகின் முதல் சோசலிஸ்ட் குடியரசு உதயமாவதற்கு இட்டுச் சென்றது. பெட்ரோகிராட் பெண்களும் மற்றும் ஜார் ஆட்சி செய்த ரஷ்யாவில் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெண்களின் ஆர்ப்பாட்டங்களும், ‘‘பெண்களின் பங்களிப்பு இல்லாமல் மாபெரும் சமூகப் புரட்சிகள் சாத்தியமில்லை’’ என்று மாமேதை காரல் மார்க்ஸ் 1868 டிசம்பர் 12அன்று லுட்விக் குடேல்மான் என்பவருக்கு எழுதியிருந்த கடிதத்தின் வாசகங்ளை சரி என்று மெய்ப்பித்தன.

பிந்தைய வளர்ச்சிப் போக்குகள்

பின்னர், 1922இல் முதல் தொழிலாளர் அரசு மார்ச் 8 மகளிர் தினத்தை விடுமுறை தினமாகப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டு சீனாவிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகளிர் தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் வளர்ந்து வந்தன. இந்தியாவில் 1931இல் சமத்துவத்திற்கான ஆசியப் பெண்களின் மாநாடு லாகூரில் நடைபெற்ற சமயத்தில் முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், நாடுகளுக்கு விடுதலை கோருவதுடன் பெண்களின் சமத்துவத்தையும் இணைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1960களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் நாடுகளிலிருந்த பெண்கள் மற்றும் அனைத்து நாடுகளிலும் இருந்த இடதுசாரி மகளிர் அமைப்புகளும் மகளிர் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடத் துவங்கின. இதனையடுத்து, பெண்கள் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டதை அடுத்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் 1975இல் மார்ச் 8 தினத்தை சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாகப் பிரகடனம் செய்து, தீர்மானம் நிறைவேற்றியது. இன்று உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மார்ச் 8 அன்று மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய அம்சமே என்றாலும், மார்ச் 8 உருவான வரலாற்றை - அதன் சோசலிச மற்றும் சமூகப் பின்னணியை, அதிலும் குறிப்பாக உழைக்கும் பெண்கள் முதலாளித்துவ சுரண்டல் அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த வரலாற்றை - நீர்த்துப்போகச் செய்திட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடம் தந்திடக் கூடாது.

இரண்டு அம்சங்கள்

மார்ச் 8 - மகளிர் தின வரலாற்றின் இரு அம்சங்கள் நமக்கு இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகும். இதில் முதலாவதும் மிகவும் முக்கியமானதும் முதலாளித்தவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திலும், சோசலிச மாற்றுக்கான போராட்டத்திலும் பெண் தொழிலாளர்களை அணிதிரட்டுவதாகும். ஐரோப்பா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உழைக்கும் பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களிலிருந்து தொழிலாளர் வர்க்கப் பெண்களின் கேந்திரமான பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றன. ஆரம்ப நாட்களில் தொழிற்சாலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களின் பணிநிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உழைப்பு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டன.

" மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியில், ‘‘...எனவே, எந்திர சாதனங்களைப் பயன்படுத்திய முதலாளிகள் முதலில் நாடிச்சென்றது பெண்கள், குழந்தைகளின் உழைப்பையே. எந்திரம் என்பது மனித உழைப்புக்குப் பதிலாக நிறுத்தப்பெற்ற அசுர அமைப்பு. எனினும் ஒவ்வொரு பாட்டாளிக் குடும்ப உறுப்பினரும் மூலதனத்தின் நேரடி ஆளுகையின்கீழ் உழைப்பாளி எனப் பதிவு செய்யப்பட்டனர். வயது வேற்றுமை, ஆண்/பெண் பால் வேற்றுமை எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. மூலதனத்திற்காக அனைவரும் கட்டாயமாக உழைப்பாளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனர்’’ என்று எழுதுகிறார். பெண் தொழிலாளர்களுக்கு எதிரான சுரண்டலுக்கு எதிராகப் பெண் தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்கள் மத்தியில் வேலை செய்த சோசலிஸ்ட்பெண் தலைவர்கள் மிகவும் முனைப்பாக செயல்பட்டார்கள். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தலைமையின்கீழ் நடைபற்ற முதலாவது கம்யூனிஸ்ட் அகிலம், பெண் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தது. மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையில் உள்ள பெண் தொழிலாளர்கள் நிலைமைகள் குறித்தும் ஆய்வு செய்திட ஆழமான கேள்வித்தாளையும் வெளியிட்டது. அதுநாள்வரையில் அடிமைகள் போல் வேலை செய்து வந்த பெண்கள் மற்றம் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலை உட்பட பல கோரிக்கைகள் உருவாக்கப்பட்டன. கிழக்கு லண்டனில் இருந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண் தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்திடும் பணியில் மார்க்ஸ் புதல்வி எளியானார் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.

1988இல் லண்டனில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை பார்த்த பெண்கள் - இளம் பதின்மரிலிருந்து வயது முதிர்ந்த மூதாட்டி வரை - முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களது வேலை நிறுத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்ளும் ஆதரவு அளித்தன. வேலை நிறுத்தப்போராட்டம் பல முக்கிய சலுகைகளுடன் வெற்றி பெற்றது. இவ்வெற்றியானது பெண் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. இதேபோன்று அமெரிக்காவிலும் பெண்தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றனர்.

ஆரம்ப காலத்தில் மகளிர்க்கென்று தனியே மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமா என்கிற கருத்து, ஆண் தொழிலாளர்கள்மத்தியில் இருந்தது. 1920இன் பிற்பகுதியில் தோழர் லெனின், தோழர் ஜெட்கின்னுடன் உரையாடிய சமயத்தில், சோசலிஸ்ட் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் பெண்களுக்கென்று தனி அமைப்புகள் இருப்பதை விமர்சித்தவர்களை, தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே பெண்களுக்குத் தனி அணுகுமுறையைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பதை அங்கீகரிக்காதவர்களைக் கடுமையாச் சாடினார். அப்போது அவர்சொல்லிய விமர்சனங்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதேயாகும்.

நவீன தாராளமயப் பொருளதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில், பெண் தொழிலாளர்களும், கிராமப்புறத்தில் இருக்கின்ற பெண்கள் உட்பட ஏழைப் பெண்களின் நிலைமைகளும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரசு, தன் சமூகப் பொறுப்புக்களைக் கைகழுவி விட்டுவிட்டதன் விளைவாகவும், பொருள்களின் விலைகளை சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விட்டதன் காரணமாகவும், பணவீக்கம் அதிகரித்திருக்கிறது, வேலையின்மையும், வேலையிறக்கமும், குறைந்த ஊதியங்களும் பெண்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதன் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைவு என்பது அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. எனவேதான் இக்கொடுமைகளுக்கு எதிராக பெண்களை அணிதிரட்ட வேண்டிய அவசிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

உலகில் முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது, சோவியத் யூனியன்தான். இப்போது நம் நாட்டில் மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 விழுக்காடும், உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு மகளிர் தினம் கொண்டாடப்பட நூறு ஆண்டுகளுக்கு முன், கோபன்ஹேகனில் முயற்சிகளை மேற்கொண்ட 100 பெண்கள், நூறாண்டுகள் கழித்து இந்த அளவிற்கு உலகம் முழுதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் என்று கற்பனை செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் அன்றைய தினம் வைத்திட்ட முழக்கங்கள் இன்றைக்கும் பொருந்துகிறது.

சர்வதேச மகளிர் தினம் என்பது முதலாளித்துவ நுகத்தடியில் பிணைக்கபட்டிருந்த பெண்களை விடுவிப்பதற்கான போராட்டத்தின் ஓர் அடையாளமாகும். அதே சமயத்தில் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தும் இன்றைய சமூக அமைப்பில் மிகவும் மோசமான முறையில் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள உழைக்கும் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், கிராமப்புறமற்றும் நகர்ப்புறங்களில் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களின் உரிமைகளுக்காக அணிதிரட்டுவதன் மூலமாகவே சமூகத்தில் தற்போது நிலவும் சமத்துவமின்மையை மாற்றியமைத்திட முடியும். வரும் மார்ச் 8 அன்று மகளிர் தினத்தின் நூற்றாண்டு தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடும் அதே சமயத்தில், இவர்களுக்கான போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல, சபதமேற்போம்.

மார்ச் 8 மகளிர் தினம் நீடூழி வாழ்க!
தோழர் கிளாரா ஜெட்கின் நீடூழி வாழ்க!
தமிழில்: ச.வீரமணி

மார்ச் 12 பேரணியில் அணிதிரள்வோம்--பிரகாஷ் காரத்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் அகில இந்திய அளவில் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டத்தினை வரும் மார்ச் 12 அன்று தலைநகர் புதுதில்லியில் நடத்த அறைகூவல் விடுத்திருக்கின்றன. இக்கட்சிகள் சுமார் இருபதாண்டுகள் கழித்து இப்போது இவ்வாறு அறைகூவல் விடுத்திருக்கின்றன. தில்லியில் சமீப காலங்களில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகு ஜன அமைப்புகள் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டங்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. ஆனால் இடதுசாரிக் கட்சிகள் நீண்ட கால இடைவெளிக்குப்பின் இப்போதுதான் அகில இந்திய அளவில் பேரணிக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.
2009 செப்டம்பரிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை நாட்டின் பல மாநிலங்களிலும் சிறப்பு மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு, நிறைவு நிகழ்ச்சியாக மார்ச் 12 அன்று தலைநகர் தில்லியில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நடவடிக்கைகள் மூலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறை மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்திடக் கூடிய வகையிலும் நாடு முழுதும் பெருவாரியான அளவில் மக்கள் அணிதிரட்டப் பட்டிருக்கிறார்கள்.

நான்கு முக்கிய பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக மார்ச் 12 அணிவகுப்புக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மூன்று பிரச்சனைகள் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவைகளாகும். நான்காவது பிரச்சனை, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும் ஏவப்பட்டுள்ள வன்முறைக்கு எதிரானதாகும். உணவுப் பணவீக்கத்தின் அளவு 20 விழுக்காட்டிற்கு மேல் வானத்தில் பறந்தகொண்டிருக்கக்கூடிய நிலையில், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நாள்தோறும் விண்ணை நோக்கி விலைவாசி உயர்வு எகிறிக்கொண்டிருப்பதன் விளைவாக மக்கள், அதிலும் குறிப்பாக வறிய நிலையில் உள்ளோர், வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி எந்தவிதமான நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்க மறுத்திடும் தடித்தனமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி வளர்ந்து கொண்டிருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, விளைந்த பயிர்களுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலைகொடுத்திருப்பதுதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்றும், சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் உயந்திருப்பதுதான் காரணம் என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்திட மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்காததுதான் காரணம் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம் விலைவாசி உயர்வுக்குத் தவறான முறையில் வியாக்கியானங்கள் செய்வதன் மூலமும் விலைவாசியை மேலும் உயர்த்திட இப்போது நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் உயர்த்தி இருப்பதும், யூரியா உரத்தின் விலையை 10 விழுக்காடு உயர்த்தியிருப்பதும் எந்த அளவிற்கு அரசு மக்கள் வயிற்றில் அடிக்கும் கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணிகளாகவுள்ள, அனைத்து உணவுப் பொருள்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதற்கு (Ban on Future Trading) தடை விதித்திட வேண்டும், வறுமைக்கோட்டுக்கு மேல்/வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்று பாகுபாடின்றி அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்திட வேண்டும், பதுக்கல்காரர்கள் மற்றும் கள்ளச்சந்தைக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் மார்ச்12 பேரணியின் போது வலியுறுத்தப்படும்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் அளித்தல் என்பது இப்போது மிக முக்கிய கோரிக்கையாக மாறியிருக்கிறது. நாட்டிலுள்ள பல்வேறு மாநில அரசுகளும் நிலச்சீர்திருத்தச் சட்டங்களை கைவிட்டுவிட்டன அல்லது நீர்த்துப்போகச் செய்துவிட்டன. நாட்டில் சுமார் 500 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பதாக மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதில் 73 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே பல்வேறு மாநில அரசுகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதிலும் 53 லட்சம் ஏக்கர் நிலம்தான் உண்மையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. நாட்டில் மொத்தம் விநியோகிக்கப்பட்ட நிலத்தில் மேற்கு வங்கம் மட்டும் 20 விழுக்காடு நிலத்தை விநியோகித்திருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடி இன மக்களும் பயன்படுத்தி வந்த நிலம், 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் அரக்கத்தனமான பிரிவுகளின் காரணமாக அவர்களிடமிருந்த பறிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு இல்லா மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்குவதென்பது இப்போது ஓர் அவசர அவசியத் தேவையாக மாறி இருக்கிறது.

அரசாங்கம் தேர்ந்தெடுத்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதை வேலைவாய்ப்பை அதிகரிக்கக் கூடிய அளவில் இல்லை. அரசு அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி, நாட்டில் மொத்தம் உள்ள அமைப்புரீதியான துறைகளில் வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1991இல் 267.33 லட்சங்களாக இருந்தது, 2006இல் 269.93 லட்சங்களாக மாறியிருக்கிறது. இவ்வாறு பதினைந்து ஆண்டுகளில் வெறும் 2.6 லட்சம் பேர்களுக்குத்தான் கூடுதலாக வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மிக மோசமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மார்ச் 12 பேரணி, நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றவும், தொழிலாளர்களைக் குறைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகளில் வேலை நியமனத்திற்குத் தற்போது இருந்து வரும் தடையை நீக்கவும், வலியுறுத்தும்.

இடதுசாரி இயக்கத்தின் கோட்டையாகத் திகழும் மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக மிகவும் இழிவான முறையில் வன்முறைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அவர்களின் மாவோயிஸ்ட் கூட்டாளிகளாலும் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூடிக் குலாவுவதற்கும் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கும் எதிராக இடதுசாரிக் கட்சிகள் உறுதியான போராட்டத்தை நடத்துவதை குலைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்ற முறையில் இவ்வாறு தாக்கதல்களைத் தொடுத்துள்ளார்கள். மார்ச் 12 பேரணி, மேற்கு வங்கத்தில் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்திடவும் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும் கோரும்.
மார்ச் 12 பேரணி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேரணியாகும். ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பின் நாட்டிலுள்ள அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து இப்பேரணிக்கு அறைகூவல் விடுத்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, இனி நாட்டில் இடதுசாரி அரசியலுக்கு இடமில்லை என்று எதிரிகள் கூறத் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களைக் காத்திடும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரிகளால்தான் சரியான மாற்றுக் கொள்கைகளை முன் வைத்திட முடியும் என்பதை மார்ச் 12 பேரணி மக்களுக்குக் காட்டிடும். இடதுசாரிகள் முன்வைத்திடும் கொள்கைத் திட்டத்தால் மட்டுமே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை அளித்திட முடியும், நிலமில்லா மக்களுக்கு நிலம் வழங்கிட முடியும், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலையளித்திட முடியும்.
மார்ச் 12 பேரணி முன்வைத்திடும் இந்நான்கு பிரதான கோரிக்கைகள் மீது ஓர் அனைத்திந்திய இயக்கத்திற்கு அன்றைய தினம் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திடும். 1994இல் இதேபோன்று இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பேரணியின்போது, அப்போதிருந்த நரசிம்மராவ் அரசாங்கம் கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. அந்த சமயத்தில், அறைகூவலை ஏற்று 1994 ஆகஸ்ட் - செப்டம்பரில் நடைபெற்ற நாடு தழுவிய இயக்கத்தில் பங்கேற்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் சிறையேகினார்கள், அதுமட்டுமல்ல, 11.5 லட்சம் மக்களும் கைது செய்யப்பட்டார்கள். இப்போது மார்ச் 12 பேரணி அன்று விடுக்கப்படும் அறைகூவலும், அதே போன்று லட்சோப லட்சம் மக்களை அணிதிரட்ட இட்டுச் செல்லும் என்பது நிச்சயம்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, March 6, 2010

மொழியும் தேசிய இனமும்--பிரகாஷ்காரத்



(புதுதில்லியில், சப்தர்ஹஸ்மி நினைவு அறக்கட்டளை சார்பில் தோழர் இ.எம்.எஸ். நினைவு சொற்பொழிவு மார்ச 4 வியாழன் அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மொழியும் தேசியஇனமும் என்கிற பொருளில் பிரகாஷ் காரத் பேசியதன் சாரம்)

‘‘தோழர்களே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுதும் தோழர் இ.எம்.எஸ். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைப் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகிறோம். தோழர் இ.எம்.எஸ். இந்தியாவிலிருந்த மார்க்சிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளில் தனித்துவம் மிக்கவர். இந்திய சமூகத்தின் நிலைமைகளுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிப்பதில் அசாத்திய திறமைகளைப் பெற்றிருந்தார்.

தோழர் இ.எம்.எஸ். நம் நாட்டில் விவசாயிகள் பிரச்சனைகளை மார்க்சிய சிந்தனையில் ஆராய்ந்து விவசாய இயக்கத்தை இந்தியாவில் கட்டினார். நவீன கேரளாவின் சிற்பி அவர். திருவாங்கூர் - கொச்சி - மலபார் என்றிருந்த சமஸ்தானங்களை ஒன்றுபட்ட மலையாள மொழியின் கீழான தேசிய இனமாக ஒன்றிணைப்பதற்கு முதலில் அடித்தளமிட்டவர். அதன் அடிப்படையில்தான் ஒன்றுபட்ட கேரள மாநிலம் உருவானது. அதேபோன்று நாட்டில் சாதி மற்றும் வர்க்கங்களுக்கிடையேயான உறவுகளையும் ஆய்ந்த பேரறிஞர். இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கேற்பு எப்படி அமைந்திட வேண்டும் என்பதையும் ஆய்ந்து ள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய அம்சம் குறித்து தற்போது விவாதிப்பது பொருத்தமுடையதாக இருக்கும் என்று கருதுகிறேன். அதுதான் இந்தியாவில் மொழிவாரி தேசிய இனப் பிரச்சனை என்பதாகும்.

ஒரு தேசிய இனத்தை நிர்ணயிப்பதில் எல்லைகள், பொதுச் சந்தை, பொதுக் கலாச்சார அமைப்பு போன்ற மற்ற பல்வேறு காரணிகளைவிட மொழிதான் மிகவும் முக்கியமான காரணி என்று தோழர் ஸ்டாலின் கருதினார். அந்த அடிப்படையில் தோழர் இ.எம்.எஸ்.=உம் மலையாள தேசிய இன வளர்ச்சி மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் குறித்து ஆய்வுகள் செய்தார்.

அதன் ஒரு பகுதியாக கேரளாவில் மலபாரிலிருந்த விவசாயி உறவுகள் குறித்து ஆய்வு செய்து, ஜமீன் - நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் விவசாய இயக்கத்தைக் கேரளாவில் கட்டினார்.
மலபாரில் மட்டுமல்ல, மன்னர் சமஸ்தானங்களாக விளங்கிய திருவாங்கூர் - கொச்சி ஆகிய பகுதிகளிலும் ஜமீன் முறை ஒழிப்புக்கான விவசாய இயக்கங்களைக் கட்டினார்.

இவ்வாறு மலையாளம் பேசும் திருவாங்கூர் - கொச்சி - மலபார் பகுதிகளில் வாழ்ந்த மலையாளிகளை மொழிவாரி தேசிய இனமாக ஒருங்கிணைத்திட இ.எம்.எஸ். முயன்றார். 1942இல் அவர் ஒரு சிறு பிரசுரம் வெளியிட்டார். அதன் தலைப்பு ஒன்றே கால் கோடி மலையாளிகள் என்பதாகும். இவ்வாறு இ.எம்.எஸ். எழுதிய அதே சமயத்தில் ஆந்திராவில் தோழர் பி.சுந்தரய்யா, ‘விசாலாந்திரா’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார். அதுதான் அன்றைய தினம் தெலுங்கு மக்களை ஒன்றிணைப்பதற்கான பைபிளாக விளங்கியது. அதே கால கட்டத்தில் வங்கத்தில் தோழர் பவானி சென், வங்கமொழி பேசும் மக்களை ஒன்றுதிரட்ட ‘‘புதிய வங்கம்’’ என்ற நூலை எழுதினார். இவ்வாறு அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்களை வடிவமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இவ்வாறு மாநிலங்கள் நாட்டிலுள்ள பல்வேறு மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில் உருவாக வேண்டும் என்பதற்கான அவசியத்தை கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் முன்வைத்தது.

மொழிவாரித் தேசிய இனத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது திடீரென்ற ஒன்று அல்ல. ஏற்கனவேயே காந்தி தலைமையில் மக்கள் இயக்கமாக மாறியிருந்த காங்கிரஸ் கட்சியும் கூட மொழிவாரித் தேசிய இனங்களை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியானது 1920இல் நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டில் தன்னுடைய பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளை மொழிவாரி அடிப்படையில் மாற்றியமைத்தது. கேரளாவில் திருவாங்கூர் - கொச்சி - மலபாரிலிருந்த காங்கிரஸ் கமிட்டிகளை மலையாள மொழி அடிப்படையில் ஒருங்கிணைத்தது. அதேபோன்று ஹைதராபாத் மற்றும் தெலுங்கு பகுதி மக்களையும் ஒன்றிணைத்தது. இவ்வாறு காங்கிரஸ் கட்சியானது தன் அனைத்து கமிட்டிகளையும் மொழிவாரி அடிப்படையில் மாற்றி அமைத்தது. மற்ற கட்சிகளும் அதனைப் பின்தொடர்ந்தது. இவ்வாறு அனைத்துக் கட்சிகளுமே மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில்தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தன.
நம் நாட்டில் மொழிவாரி தேசியஇனங்கள் உருவாக்கம் என்பது நம் நாட்டிற்கு பிரிட்டிஷார் வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பாகவே தேசியஇனங்கள் உருவாவதற்கான மூலக்கூறுகள் நம் நாட்டில் இருந்தன. வர்த்தகம், பண லேவாதேவி, விவசாயம் போன்றவற்றின்மூலம் முதலாளித்துவ மூலக் கூறுகள் வளர்ந்து கொண்டிருந்தன. மக்களால் பேசப்படும் மொழிகள் மூலமாக ஆளும் வர்க்கங்கள் மொழிகளின் மூலமாகவே மக்களிடம் சென்றார்கள். 14ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் மூலமாக மொழிகள் வளர்ந்தன. ஆயினும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தேசியஇன உணர்வு அரும்புவிடத் தொடங்கிவிட்டது.
பின்னர் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வந்தபோது முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி இல்லாமல் மொழிவாரித் தேசியஇனங்களின் வளர்ச்சி கிடையாது என்று இ.எம்.எஸ். கூறினார்.

பல்வேறு தேசிய இனக் குழுக்களும் மொழிவாரித் தேசிய இனக்குழுக்களும் பிராந்திய உணர்வுடன் மொழிவாரித் தேசிய உணர்வினைப் பெற்றிருந்தன. இத்தகைய மொழிவாரித் தேசிய உணர்வின் மூலமாகத்தான் நாட்டின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் மக்கள் இயக்கங்கள் வளர்ச்சி அடைந்தன. அந்த விதத்தில்தான் கேரளாவிலும் விவசாயிகள் இயக்கம் வளர்ச்சி அடைந்தது.
மக்களை அணிதிரட்ட மொழிவாரித் தேசிய இனத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திய அந்த சமயத்தில் ஆளும் வர்க்கம் அதனை ஒரு பிரிவினை முழக்கமாகக் கருதியது. முதலாளித்துவமும் பெரும் வர்த்தக நிறுவனங்களும் மொழிவாரி தேசிய இனத்தைத் தங்களின் நலன்களுக்கு எதிராகக் கருதின.

காங்கிரஸ் கட்சியும் சுதந்திரத்திற்கு முன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொழிவாரி மாநிலங்கள் அமைத்திடுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. 1929இலேயே மோதிலால் நேரு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மொழிவாரி மாநிலங்கள் அமைத்திடும் என்று உறுதி கூறியிருந்தார். ஆனால் சுதந்திரத்திற்குப்பின், ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, மக்களுக்குத் துரோகம் செய்து விட்டது. மாறாக, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதற்காக ஒரு கமிட்டியை அமைத்தது. ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீத்தாராமய்யா என்ற மூவரும் அந்தக் கமிட்டி உறுப்பினர்கள். இந்தக் கமிட்டியானது, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கூடாது என்றும் அது மக்களைப் பிளவுபடுத்தி விடும் என்றும் பரிந்துரை செய்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்நிலையை எதிர்த்து நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திராவில் விசாலாந்திராவிற்கான போராட்டம் தொடங்கியது. கேரளாவில் ஐக்கிய கேரளாவிற்கான போராட்டமும், கர்நாடகாவில் ஐக்கிய கர்நாடகாவிற்கான போராட்டமும் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் போராட்டங்கள் வெடித்தன. இதனை அடுத்து காங்கிரஸ் அரசாங்கம் மொழிவாரி மாநிலங்களைக் கண்டறிவதற்கான குழு ஒன்றை 1953இல் அமைத்தது. அதன் பரிந்துரைகளின்படி நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தன.
மகாராஷ்ட்ராவிலிருந்து குஜராத்தைப் பிரித்திட காங்கிரஸ் முன்வர மறுத்ததை அடுத்து அங்கு குஜராத் மாநிலத்திற்காக நடைபெற்ற போராட்டத்தில் எண்ணற்றோர் உயிர்நீத்தபிறகு, குஜராத்தைத் தனி மாநிலமாகப் பிரித்தது.

பின்னர் பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹர்யானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் வடகிழக்கு மாநிலங்கள். இப்போதுள்ள மேகாலயா, மிசோரம், மணிப்பூர் அனைத்துமே அஸ்ஸாமின் பகுதிகளாகத்தான் இருந்தன. ஆயினும் அவை சிறிய தேசிய இனங்களாக இருந்தன.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? ஒரு காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் தங்கள் நலன்களுக்கு உகந்தது அல்ல என்று நினைத்த முதலாளித்துவம் இன்றைய தினம் சிறிய மாநிலங்கள் உருவானால்தான் தங்கள் நலன்களுக்கு உகந்தது என்று கருதத் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து இப்போது ஆந்திராவில் தனித் தெலுங்கானா மாநிலக் கோரிக்கை எழுந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் தனி விதர்பா மாநிலம் கோரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தங்கள் மாநிலங்களையும் பிரித்திட வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிராக இருக்கிறது.

மொழிவாரி மாநிலங்கள்அமைக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் முதலாளித்துவம் நன்கு வளர்ந்தது. உதாரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா. குஜராத் மாநிலங்களைக் குறிப்பிடலாம்.

ஆனால் முதலாளித்துவம் இப்போது சிறிய மாநிலங்களை விரும்புகிறது. ஏனெனில் சிறிய மாநிலங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருந்திடும் என்பதாலும் அவற்றைத் தாம் எழுதில் வாங்கிட முடியும் என்றும் முதலாளித்துவம் கருதுகிறது. உதாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சொல்லலாம். அங்கே ஆட்சியிலிருந்தவர்களால் மாநிலமே பங்கு போட்டு விற்கப்பட்டதைப் பார்த்தோம். கனிம வளங்கள் விற்கப்பட்டன, காட்டு வளங்கள் விற்கப்பட்டன, ஆற்று நீர் தனியாருக்கு விற்கப்பட்டதை யெல்லாம் கண்டோம். எனவேதான் பெரு முதலாளிகள் சிறு மாநிலங்ளை விரும்புகிறார்கள். சிறிய மாநிலங்களாக இருந்தால் அங்கு ஆட்சிக்கு வருபவர்களைத் தாங்கள் எளிதாக வசப்படுத்தி வாங்கிவிட முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சிறு மாநிலங்கள் தாங்களாக எதையும் செய்திட முடியாது. அவை ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசைச் சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கும். இன்றைக்கும் கூட வடகிழக்கில் உள்ள அரசாங்கங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவை மத்தியில் யார் ஆட்சியிலிருக்கிறார்களோ - அது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தாலும் சரி, அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் சரி - அவர்களுக்கு ஆதரவாக மாறுவதைப் பார்க்க முடியும். ஏனெனில் பல சிறிய மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கேத் திணறக்கூடிய நிலையில் இருக்கின்றன.

எனவேதான் மொழிவாரி மாநிலங்கள்தான் மிகச் சிறந்த முறையிலும், மிகவம் ஜனநாயக ரீதியிலும் செயல்பட முடியும் என்று நம்புகிறோம். நிர்வாக ரீதியாகவும் சரி, கல்வி ரீதியாகவும் சரி, நீதித்துறை செயல்பாடாக இருந்தாலும் சரி மொழிவாரி மாநிலங்கள்தான்
ஜனநாயக ரீதியாக செம்மையாகச் செயல்பட முடியும்.

ஆனால் இப்போது மாநிலங்களில் ஒரு பகுதி மற்றொரு பகுதியை விடப் பின் தங்கியிருப்பதாகக்கூறி, பின் தங்கிய பகுதிகளைத் தனியே பிரித்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தபின் முதலாளித்துவத்தின் நியதியின்படி ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகியது. முதலாளித்துவ வளர்ச்சியின் விதியே அதுதான். எனவே மாநிலங்களைப் பிரிப்பதால் பிற்பட்ட நிலைமைகளுக்கான பிரச்சனைகள் தீர்ந்திடாது.
சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகள் கழிந்த பின்னரும், நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு மாநிலத்திலேயே பல இடங்களிலும் சமத்துவமின்மை தொடர்கிறது. ஆட்சியாளர்கள் தற்சமயம் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் இந்நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.

மொழிவாரி மாநிலங்கள் அமைவது என்பது நவீன மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பின் ஒரு பகுதி என்று தோழர் இ.எம்.எஸ். தெளிவுபடுத்திக் கூறியுள்ளார்.

ஆனால் இத்தகைய மொழிவாரி தேசியஇனத்தின் விதிகளை மத்திய அரசு முழுமையாக அமல்படுத்த வில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகள் வளமான முறையில் வளர்ந்துள்ளன. சுதந்திரம் பெற்ற சமயத்தில் மத்திய அரசு தேசிய மொழிகளாக 13 மொழிகளை அங்கீகரித்திருந்தது. பின்னர் அது 14 ஆக மாறி தற்போது 22 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் சரிதான். நாம் இதற்கு எதிராக இல்லை. இவ்வாறு மொழிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அந்த மொழிகள் பேசும் மாநிலங்களில் உள்ள மாநில அரசுகள் தங்கள் தங்கள் மொழிகளை வளர்த்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அது மட்டுமல்ல, மாநிலத்திற்கள்ளேயே சிறுபான்மை இன மக்கள் பேசிடும் மொழிகளையும் வளர்த்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
மாநில அரசுகள் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமையைக் கணக்கில் கொண்டு மத்திய அரசும் ஜனநாயக முறையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆனால் மத்திய அரசு அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை.
நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியை மத்திய அரசு செய்ய மறுக்கிறது. இன்றைக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அதுதான் பிரச்சனை. ஒரு ஜனநாயக நாட்டில், உறுப்பினர் பிற நாட்டின் மொழியை பிற பகுதியின் மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதை ஏன் மத்திய அரசு வற்புறுத்துகிறது என்பதுதான் எங்கள் கேள்வி. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்திடுவதற்கான செலவு ஒன்றும் அதிகம் கிடையாது. ஒருசில கோடி ரூபாயில் இதனைச் செய்திட முடியும். ஆனாலும் மத்தியஅரசு இதனைச் செய்ய மறுக்கிறது.

மத்திய அமைச்சர் அழகிரி தமிழில் பேச அனுமதிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் நடைபெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாட்டின் தேசிய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மொழிவாரி தேசிய இனங்களை நாம் முழுமையாக அங்கீகரித்ததாகக் கொள்ள முடியும்.
மொழி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் இதனை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘நாடாளுமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர்களின் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படுவதோடு, மற்ற அனைத்து மொழிகளிலும் அதே நேரத்தில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். அனைத்து சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்கும். மற்ற மொழிகளை விலக்கிவிட்டு இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்குவது என்பது கட்டாயப்படுத்தப்பட மாட்டாது. பல்வேறு மொழிகளுக்கும் சமத்துவம் அளிப்பதன் மூலம் மட்டுமே நாடு முழுதும் அதனைத் தகவல் தொடர்பு மொழியாக ஏற்கச் செய்ய முடியும்.’’

அவ்வாறு செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதிகள் அந்நிய மொழி ஒன்றை அறிந்திருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமானால் அனைத்து தேசிய மொழிகளும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

(ச.வீரமணி)

Thursday, March 4, 2010

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் அயல்துறை செயலாளர்கள் மட்டத்தில் 2010 பிப்ரவரி 25 அன்று நடந்துள்ளது. 2007இல் இந்தியா மீது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் கட்டவிழ்த்துவிட்டதை அடுத்து இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் துண்டிக்கப்பட்டன. அதன்பின் இரு நாடுகள் தரப்பிலும் பல்வேறு மட்டத்தில் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கடைசியாகத் தற்போது அயல்தறை அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து இதுபோன்றதொரு சந்திப்பு, வரும் 2010 மார்ச்சில் இஸ்லாமாபாத்திலும் நடைபெறும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும்வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இதுநாள்வரை இந்தியா மிகச் சரியாகவே தீர்மானித்திருந்தது. மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பான கயவர்களைக் கைது செய்வதில் பாகிஸ்தான் இன்னமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று இந்தியா, பாகிஸ்தானிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளிலும் வன்முறைகளிலும் ஈடுபடுவோம் என்று பகிரங்கமாகவே தெரிவித்து வரும் ஜமாத் உட் தாவா போன்ற இயக்கங்களுக்கு எதிராகவும் பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட எவரையும் அனுமதியோம் என்று பாகிஸ்தான் அரசு உறுதிமொழிகள் அளித்துள்ள போதிலும், பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்பு இன்னமும் ஒழிக்கப்படாமல் நீடித்து வருகிறது. பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்விதப் பிரச்சனையும் இன்றி சுமுகமாக அமைந்திடும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நன்னம்பிக்கை சூழலில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் இந்தியா சரியாகவே வலியுறுத்தி வந்திருக்கிறது.

பயங்கரவாதம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் உரசல்கள் இருந்து வந்தபோதிலும், இப்போது பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடப்பதில் தயக்கம் இருந்ததை, பாகிஸ்தான் அதற்கு அதன் மேற்கு எல்லையில் தாலிபான் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதை நீர்த்துப்போக அல்லது குறைத்திட இட்டுச்செல்வதாக பலரால் வியாக்கியானம் செய்யப்பட்டது. முன்பு இந்தியத் தூதரகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல்களின் பின்னணியில் சென்ற வாரம் காபூலில் இந்தியர்கள் மிகக் கோரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வினைப் பார்க்கும்போது, இந்தியாவிற்கு எப்படி லஸ்கர்-இ-தொய்பா அல்லது இதர பயங்கரவாத அமைப்புகளோ அப்படி தாலிபான்இயக்கமும் ஒரு பயங்கரவாத அமைப்புதான். இப்போது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளானது, பாகிஸ்தானை அதன் மேற்கு முன்னணியிலிருந்து தாலிபான் இயக்கத்தால் வரும் தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் சாக்குபோக்கு சொல்வதைத் தவிர்த்திட உதவிடும்.

மத்திய அயல்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில், ‘‘இரு நாடுகளின் தரப்பிலும் மனம் திறந்த, ஆக்கபூர்வமான மற்றும் உபயோகமான முறையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது’’ என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அவர், இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான முறையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற இந்தியா மேற்கொண்டு முயற்சிகள் அத்தனையும் கடந்த காலங்களில் பல முறை பாகிஸ்தான் மண்ணிலிருந்து வந்த பயங்கரவாத நடவடிக்கைகளால் நிலைகுலையச் செய்யப்பட்டன.

இப்பேச்சு வார்த்தைகளை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், சவுதி அரேபிய விஜயம் குறித்து அவரது அமைச்சரவையில் உள்ள அயல்துறை இளம் அமைச்சர் தெரிவித்த கருத்துக்களால் பிரச்சனைகளை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், மூன்றாம் தரப்பினர் தலையிடு இல்லாமல் இரு நாடுகள் மட்டுமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. இத்தகையப் புரிந்துணர்வில் விரிசல் எதுவும் இல்லை என்பதை இந்தியா உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. பிரதமரும் தன் பங்கிற்கு சவுதி அரேபியாவிலிருந்து திரும்புகையில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கையில், ‘‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை பாகிஸ்தான் மண்ணில் அனுமதித்திட வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கிட தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துங்கள்’’ என்பதைத் தவிர தான் சவுதி அரேபியாவிடமிருந்து வேறு எதனையும் கோரவில்லை என்று கூறியிருக்கிறார்.
பயங்கரவாதம் - அது எந்த வகையினதாக இருந்தாலும் - ஏற்றக்கொள்ளத்தக்கதல்ல. இதற்கு எதிராக எடுக்கப்படும் முயற்சிகளில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் வேறெதற்காகவும் விட்டுக்கொடுக்கத்தக்கதல்ல. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளின்போது பாகிஸ்தானிடம் இந்தியா உறுதிபடத் தெரிவித்திட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Wednesday, March 3, 2010

பெட்ரோல் விலை உயர்வை நியாயப்படுத்தாதீர்: சிபிஎம்

புதுதில்லி, மார்ச் 3-
பெட்ரோல் - டீசல் விலையை நியாயப்படுத்தக்கூடாது, அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘ஒரு நீண்டகாலத் தொலைநோக்கின்’’ அடிப்படையில்தான் பட்ஜெட்டில் பெட்ரோல - டீசல் விலைகளை உயர்த்தியிருப்பதாகப் பிரதமர் விலை உயர்வினை நியாயப்படுத்தி இருக்கிறார். இதனால் மேலும் விலை உயர்வு ஏற்பட்டு அதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்களே என்ற கவலைக் கிஞ்சிற்றும் இல்லாததும், வழுவான பொருளாதார சிந்தனையும்தான் பிரதமரை இவ்வாறு கூறச் செய்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வின் மூலமாக வரவிருக்கும் ஆண்டில் அரசு 20 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் அரசு வருவாய் ஈட்டிடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் நிதி அமைச்சர் தன்னுடைய பட்ஜெட் உரையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அறிவித்திருக்கிறார். இவ்வாறு வசதிபடைத்தவர்களுக்கான வருமான வரியில் விலக்கு அளித்துள்ள அரசு அதே தொகையை அல்லது அதைவிடக் கூடுதலான தொகையை சாமானியர்களிடமிருந்து வசூலிக்கக்கூடிய முறையில் பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தி இருப்பதை எப்படி நியாயப்படுத்துகிறது என்றே தெரியவில்லை.

‘‘மக்கள் நலத் திட்டங்கள்’’ என்றால் என்ன? பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் எரிபொருள்களுக்கு வரி விதித்திடும் அதே சமயத்தில் ஊக்குவிப்பு என்ற முறையில் முதலாளிகளுக்கு ஓராண்டில் மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கார்பரேட் வரியிலிருந்து சலுகை அளிப்பதுதான் ‘‘மக்கள் நலத் திட்டங்களா’’?

எரிபொருள் விலை உயர்வு என்பது மொத்த விலைவாசி அட்டவணை (wholesale price index)யில் வெறும் 0.4 விழுக்காடு உயர்வினையே அளித்திடும் என்று பிரதமர் கூறியிருப்பதானது தவறான கணிப்பேயாகும். ஏனெனில் எரிபொருள் விலை உயர்வு அதனோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது உணவுப் பொருள்களின் விலைகளையும் உயர்த்திடும். 2009 ஜூலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்ந்ததை அடுத்து உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்ததை நாம் அறிவோம். தற்சமயம் மக்கள் சுமார் 20 விழுக்காடு அளவிற்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வால் விழிபிதுங்கி அல்லாடிக்கொண்டிருக்கக்கூடிய இத்தருணத்தில் இவ்வாறு பெட்ரோல் - டீசல்களின் விலைகளை உயர்த்துவது அவர்கள் வாழ்வில் சொல்லொண்ணாத் துயரத்திற்கே இட்டுச் செல்லும்.
இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை உயர்வை பிரதமர் மிகவும் தடித்தனமான முறையில் நியாயப்படுத்தி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மேல் விதிக்கப்பட்டுள்ள சுங்க மற்றும் கலால் வரிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மீண்டும் வன்மையாக வலியுறுத்துகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
(ச.வீரமணி)