Sunday, May 31, 2020


வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து
(3)
1-06-2020

அன்பார்ந்த நண்பர்களே,
தமிழ்ச் சுருக்கெழுத்து தொடர்பாக நாள்தோறும் பத்து நிமிடங்கள் யூ-ட்யூப் வலைதளத்தில் பதிவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
இன்றைய தினம் தமிழ்நாடு மாநில முதுநிலை சுருக்கெழுத்துத் தேர்வு – டிசம்பர் 90 -  முதல் தாளை என்னுடைய இடுகையான illakkia.blogspot.com –இல் பதிவேற்றம் செய்கிறேன்.
சுருக்கெழுத்து வடிவங்களை நன்கு பயிற்சி செய்துவிட்டு, பின்னர் எழுதிப் பழகுங்கள். நிச்சயமாக வேகம் விரைவுபடும்.


அடுத்து, நான் உருவாக்கியுள்ள சில வடிவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்வதாகச் சொல்லியிருந்தேன்.
இன்றைய தினம் ஒரு பத்து வடிவங்களை அறிமுகம் செய்கிறேன்.
அதனை/எதனை/இதனை
அத்தனை/எத்தனை/இத்தனை
ஆகியவற்றிற்கு ஆங்கிலத்தில் I என்பதற்காகப் போடுவதை, above the line/on the line/under the line எழுதுக.
அதேபோல்
அடுத்து/எடுத்து என்பதற்கு ow dipthong போடுவதுபோல் above the line/on the line  எழுதுக.
ஆங்கிலத்தில் with எழுதுவதுபோல் தமிழில் போட்டால் அதாவது/ஏதாவது/இதாவது எனக்கொள்க.

இரட்டிப்பாக்கும் முறை நமக்கு அதிவேகமாக எழுதுவதற்கு மிகவும் கைகொடுக்கும். இதனை நான் …ற்ற என்பதற்கும், ….வதற்கு என்பதற்கும், …பதற்கு என்பதற்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

முடியும் என்பதற்கு போடும் சுருக்கெழுத்து வடிவத்தை, பாதியாக்கினால் முடியாது எனக் கொள்க.

ஆனான் என்பதற்கு ஆங்கிலத்தில் on  போடுவது போலவும், அவர்கள் என்பதற்கு but எழுதுவது போலவும் எழுதலாம்.
Suffix ஆக …வர்கள்/வார்கள்/வீர்கள் வந்தால் சுருக்கெழுத்து வடிவத்தின் கடைசியில் அவர்கள் என்பதற்கு போடக்கூடிய வடிவத்தையே பயன்படுத்திக்கொள்ளலாம்.




வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து
தமிழ்நாடு அரசு சுருக்கெழுத்துத் தேர்வு - டிசம்பர் 78 - முதல் தாள்












வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து
(2)
31-05-2020

அன்பார்ந்த நண்பர்களே,
தமிழ்ச் சுருக்கெழுத்து தொடர்பாக நாள்தோறும் பத்து நிமிடங்கள் யூ-ட்யூப் வலைதளத்தில் பதிவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று ஓர் ஐந்து நிமிடங்கள் பதிவேற்றம் செய்தேன். இன்றும் தொடர்கிறேன்.
இன்றைய தினம் தமிழ்நாடு மாநில முதுநிலை சுருக்கெழுத்துத் தேர்வு முதல் தாளைப் என்னுடைய இடுகையான illakkia.blogspot.com –இல் பதிவேற்றம் செய்கிறேன். அதனை நிமிடத்திற்கு 70 வார்த்தைகள், நிமிடத்திற்கு 90 வார்த்தைகள் மற்றும் நிமிடத்திற்கு 115 வார்த்தைகள் (வணிகக்கடிதம் பகுதி நீங்கலாக) என்ற வீதத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
சுருக்கெழுத்து வடிவங்களை நன்கு பயிற்சி செய்துவிட்டு, பின்னர் மூன்றையும் எழுதிப் பழகுங்கள். நிச்சயமாக வேகம் விரைவுபடும்.
அடுத்து, நான் உருவாக்கியுள்ள சில வடிவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்வதாகச் சொல்லியிருந்தேன்.
இதில் மிகவும் முக்கியமான ஒன்று. இடையில் …கின்ற என்று வரும்போதும், கடைசியில் …கின்ற என்று வரும்போதும் எப்படி எழுத வேண்டும் என்பதாகும்.
‘இருக்கிறது’ என்பதற்கு, ஆங்கிலத்தில் ‘should’ என்று எழுதுவதுபோல் எழுத வேண்டும் என்று நேற்று குறிப்பிட்டிருந்தேன். அதே போல் ‘இரு’, ‘இருக்க’, ‘இருக்கின்ற’, ‘இருக்கின்றன’, ‘இருக்கின்றோம்’, ‘இருக்கின்றது’, ‘இருக்கின்றார்கள்’ என்பனவற்றை எப்படி எழுதவேண்டும் என்று பார்ப்போம்.
இதேபோன்று ‘…ங்களில்’ வந்தாலும் கடைசியில் புள்ளி வைத்து எழுதலாம்.
‘….ங்களில்’ எழுதியபின்பு ‘…ங்களிலும்’ என்று வந்தால் இரு புள்ளிகளை அடுத்தடுத்து எழுதிடலாம்.
உதாரணங்கள்:






Saturday, May 30, 2020

வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து - 2

அன்பார்ந்த நண்பர்களே மற்றும் சுருக்கெழுத்து மாணவர்களே,
இத்துடன் தமிழ்நாடு அரசு டிசம்பர் 1976 நடத்திய தமிழ்ச்சுருக்கெழுத்து முதுநிலை (Senior Grade) தேர்வின் முதல் தாளின் இரு பக்கங்களின் PDF File சுருக்கெழுத்து வடிவங்களுடன் இணைத்திருக்கிறேன். இதற்கான Speed, 70 wpm, 90 wpm, 115 wpm என்னுடைய you-tube பக்கத்திலும் பதிவேற்றம் செய்திட இருக்கிறேன். நன்கு பயிற்சி செய்துவிட்டு, Speed எழுதிப் பழகுங்கள்.
வாழ்த்தக்களுடன், உங்கள் அன்பு, ச.வீரமணி.


வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து 1




வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து

அன்பார்ந்த நண்பர்களே,
தமிழ்ச் சுருக்கெழுத்து தொடர்பாக நாள்தோறும் பத்து நிமிடங்கள் யூ-ட்யூப் வலைதளத்தில் பதிவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். எந்த அளவிற்கு வெற்றிகரமாக இருக்கும் என்று காலம்தான் சொல்ல வேண்டும்.
அன்பு நண்பர்களே,
நான் தமிழ்ச் சுருக்கெழுத்தில் நிமிடத்தற்கு 150 வார்த்தைகள் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாகவும் ஒரேயொரு ஆளாகவும் தேர்ச்சி பெற்றவன் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நான் 1976 முதல் 1986 வரை ஆங்கிலச் சுருக்கெழுத்து மற்றும் தமிழ்ச் சுருக்கெழுத்துக் கற்றுக் கொண்டவன். தஞ்சை மாவட்டத்தில் குற்றவியல் நீதித்துறையில் ஆராய்வாளராக இருந்த நான், சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றதன்காரணமாக சுருக்கெழுத்தராகவும் மாறினேன். பின்னர் தமிழ்ச் சுருக்கெழுத்து உயர்வேகம் (நிமிடத்திற்கு 150 வார்த்தைகள்) தேர்வில் வெற்றிபெற்றதால், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையிலும் தமிழ் நிருபராகப் பணியாற்றி இருக்கிறேன்.
நான் நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு சிரமங்களுடன்தான் சுருக்கெழுத்து கற்றுக்கொண்டேன். ஆங்கிலச் சுருக்கெழுத்திற்கு - பிட்மேன் முறைக்கு – ஏராளமான நூல்கள் உண்டு. அகராதியே மூன்று வகையில் உண்டு. கையடக்க அகராதி. வெறும் சுருக்கெழுத்து வடிவங்கள் உள்ள அகராதி மற்றும் ஆங்கிலம் – ஆங்கிலச் சுருக்கெழுத்து வடிவம் – மற்றும் அதற்கான பொருளுடன் கூடிய அகராதி என உண்டு.
தமிழைப் பொறுத்தவரை சீனிவாசராவ் எழுதிய தமிழ்ச் சுருக்கெழுத்து நூலை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதப்பதிவாளராக இருந்த அனந்தநாராயணன் அவர்கள் மிகவும் சிறப்பாக அரசின் உதவியுடன் வெளிக்கொண்டு வந்திருந்தார். அதைத்தான் நான் பயிற்சி செய்தேன். அந்தக் காலத்தில் குமுதல் வார இதழில் சுருக்கெழுத்துக்கு என்று ஒரு பக்கம் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்ததையும் அவற்றின் தொகுப்பையும் நான் வைத்திருந்தேன். தமிழ்ச்சுருக்கெழுத்திற்கு என்று தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல.
எனினும், அவரே ஓய்வுபெற்றபின் இப்போது வெளியிட்டுள்ள தமிழ்ச் சுருக்கெழுத்து நூலில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்து வெளியிட்டிருக்கிறார். ‘மந்திரிகள்’ ‘அமைச்சர்களாகி’ இருக்கிறார்கள். ‘கனம் சபாநாயகர் அவர்களேங என்பது ‘மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே’ என்று மாறியிருக்கிறது. ‘கஷ்டநிஷ்டூரங்கள்’ போன்ற வார்த்தைகள் இப்போதுள்ள நூலில் இல்லை.
இதேபோல் நான் பயிற்சி செய்த காலத்தில் எண்ணற்ற சுருக்கெழுத்து வடிவங்களை நானே உருவாக்கி இருக்கிறேன். நான் நிமிடத்திற்கு 150 வார்த்தைகள் தேர்வில் வெற்றி பெறுவதற்கும், என்னிடம் பயின்ற மாணவர்களும் தமிழ்ச்சுருக்கெழுத்துத் தேர்வுகளை நேரடியாகவே முதுநிலைத் தேர்வுக்குச் சென்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும் அந்தச் சுருக்கெழுத்து வடிவங்கள் பெரிதும் உதவின என்று நான் உளமார நம்புகிறேன்.
எனவே அவற்றை நான் எதிர்கால சந்ததியினருக்கு உதவிடும் விதத்தில் இந்த வலைத்தளத்தின் மூலம் பதிவேற்றலாம் என முடிவு செய்திருக்கிறேன். எவருக்கேனும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவித்தீர்களானால் அவர்களுக்குத் தெளிவுபடுத்திடவும் தயாராக இருக்கிறேன்.
நான் உருவாக்கிய சுருக்கெழுத்து வடிவங்களில் நாள்தோறும் சுமார் பத்து வடிவங்களை அறிமுகப்படுத்தலாம் என எண்ணியிருக்கிறேன்.
1)   ‘என்று’ என்பதற்கும் ‘என்ற’ என்பதற்கும் தமிழ்ச் சுருக்கெழுத்துப் புத்தகத்தில் ‘ஏனென்றால்’ என்பதற்கு இருக்கின்ற வரிவடிவமான ‘வரிக்கு மேலே ஒரு புள்ளி’ (a dot will be put above the line) வைத்திடுக. ஏனெனில் ‘ஏனென்றால்’ என்பது ‘என்ற/என்று’ வரக்கூடிய அளவிற்கு அதிக அளவிற்கு வராது. எனவே ‘ஏனென்றால்’ என்று வரும்போது வேறு விதத்தில் எழுதிக்கொள்ளலாம்.
2)   இதன் கிளைச்சொற்களான, ‘என்றும்’ என்பதற்கு இரு புள்ளிகள், ‘என்றென்றும்’ என்பதற்கு மூன்று புள்ளிகள், ‘என்றுதான் என்பதற்கு : என்பதுபோல் மேலேயும், கீழேயும் புள்ளிகள், ‘என்றும்தான்’ என்பதற்கு ‘என்றும் என்பதற்கான இருபுள்ளிகளை வைத்துவிட்டு, கீழே ஒரு புள்ளி வைத்திடுக.
3)   ‘என்றால்’ என்று வரும்போது அதே புள்ளியை வரியை ஒட்டி (on the line) மேல் வைத்திடுக. கிளைச் சொற்களும் மேலே எழுதியது போன்றே ‘என்றாலும்’, ‘என்றால்தான்’, ‘என்றாலும்தான்’ என வந்தாலும் எழுதிடலாம். ஒன்றும் பிரச்சனை கிடையாது.

ஆங்கிலத்தில்  a என்பதற்குப் போடக்கூடிய வடிவத்தை ‘என்று/என்ற’ என்பதற்கும்,  the  என்பதற்குப் போடக்கூடிய வடிவத்தை ‘என்றால்’ என்பதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
4)   சுருக்கெழுத்துப் புத்தகத்தில் ‘இருக்கிறது/இருக்கின்றன’ என்பதற்கு ஆங்கிலத்தில் ‘should’ என்பதற்குப் பயன்படுத்தும் வடிவத்தைப் பயன்படுத்தி இருப்பார்கள். இந்த வடிவத்தை ‘இருக்கிறது’ என்பதற்கு மட்டும் வைத்துக் கொள்க. இருக்கின்றன என்பதற்கு வேறு வடிவத்தைப் பின்னர் கூறுகிறேன்.


என் மின்னஞ்சல் முகவரி: veeramani1107@gmail.com,
என் இடுகை முகவரி: illakkia.blogspot.com
(தொடரும்)


Tuesday, May 26, 2020

அரசமைப்புச்சட்ட நீதிமன்றம் அதன் செயல்பாட்டிலிருந்து தோல்வியடைந்துவிட்டது


அரசமைப்புச்சட்ட நீதிமன்றம் அதன் செயல்பாட்டிலிருந்து தோல்வியடைந்துவிட்டது
(உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் பாதுகாத்திடாமல் உதாசீனம் செய்திருக்கிறது)

-ஏ.பி.ஷா
தமிழில்: ச.வீரமணி
கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி, உலகின் பல நாடுகளைக் கவ்விப்பிடித்திருப்பதுபோல், இந்தியாவையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதால், அது பல்வேறு விசித்திரமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இதில் மிகவும் கடுமையான பிரச்சனை என்பது புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையாகும். அவர்களுக்கு வேலை இல்லை, வருமானத்திற்கான வழி எதுவும் இல்லை, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழி எதுவும் இல்லை, குரோனா  வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை வசதிகள் இல்லை, அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான சாதனம் எதுவும் இல்லை, தங்கள் வீடுகளுக்குப் போய்ச்சேர்வதற்கான வழிகளும் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும், புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூறு மைல்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றும், போகும்போதே பலர் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் நாம் கேள்விப்படுகிறோம். இதில் மிகவும் சோகமானதும் துன்பமிக்கதுமான விஷயம் என்னவென்றால் இவர்களின் நிலைமைகள் குறித்தும், இவர்களின் நலன்கள் குறித்தும் கவனிக்க வேண்டிய நிறுவனங்கள்  அக்கறையற்று இருப்பதும், உணர்ச்சியற்று மரக்கட்டைகள்போன்று இருப்பதுமாகும். நான் இங்கே நிறுவனங்கள் என்று குறிப்பிடுவது, நம் உச்சநீதிமன்றத்தைத்தான். இது, புலம்பெயர் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது என்பதை திருப்திகரமான முறையில் ஒப்புதல் அளிப்பதில் தோல்வி அடைந்திருக்கிறது. அவர்களுக்கு மிகவும் பாதுகாப்புத் தேவைப்படும்போது, அவற்றை அவர்களுக்கு வழங்குவதில் உதாசீனமாக இருந்து வருகிறது.
குரோனா வைரஸ் தொற்றின் பாதகமான விளைவுகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அது அவசரநிலைக் காலமாக இருந்தாலும்கூட, அவை அரசமைப்புச்சட்டத்தின் தனியுரிமைக்கு உட்பட்டுதான் எப்போதும் இருந்திட வேண்டும். நீதித்துறை என்பது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான கண்காணிப்பு அமைப்பாக (watchdog) மாறி இருக்கிறது.
தொழிலாளர்களுக்கு நிவாரணம் எதுவும் இல்லை
இந்த சமூக முடக்கத்தில், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் முழுமையாக மீறப்பட்டிருக்கின்றன என்பதற்கு, குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் போன்று மிகவும் வடுப்படத்தக்க நிலையில் உள்ள மக்கட்பிரிவினரின் அடிப்படை உரிமைகள் ஒட்டுமொத்தமாக மீறப்பட்டிருக்கின்றன என்பதற்கு, போதுமான அளவிற்கு சாட்சியங்கள் இருக்கின்றன. ஆனால் உச்சநீதிமன்றம், இது தொடர்பாக வந்திருக்கிற மனுக்கள் மீது நாட்டிலுள்ள நிலைமைகள் குறித்து விசாரிப்பதற்குப் பதிலாக, இந்த மனுக்களை அனுமதிக்க மறுத்துக்கொண்டு, அல்லது, ஒத்திவைத்துக்கொண்டு தன்னுடைய தந்த சிம்மாசனத்தில் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டிருக்கிறது.
வலுவானமுறையில் எவ்வித நிவாரணமும் வழங்காது, நீதிமன்றம் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள நீதிக்கான மிகவும் அடிப்படை உரிமைக்கான வழியைக் குடிமக்களுக்கு மறுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்திருப்பதன் மூலம், அது பல லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களைக் கீழே வீழ்த்தியிருக்கிறது, ஓர் அரசமைப்புச்சட்டத்தின் கீழான நீதிமன்றமாகத் தன்னுடைய கடமையைப் போதுமான அளவில் நிறைவேற்றுவதில் தோல்வி  அடைந்திருக்கிறது. நவீன இந்தியாவின் மிகவும் கண்டிப்பான சமூக முடக்கங்களில் ஒன்றாக விளங்குவதில், மத்திய அரசு ஏராளமான கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது, ஆனால், அவற்றை நிறைவேற்ற வேண்டியவை மாநில அரசுகள்தான் என்றும் அமர்த்தியிருக்கிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை என்பது இயல்பாகவே மாநிலங்களுக்கிடையேயான ஒரு பிரச்சனையாகும். மாநிலங்கள் அதனை உள்ளார்ந்த முறையிலும் மற்றும் குறுக்குவெட்டு முறையிலும் (internally as well as interse) கையாள வேண்டியிருந்தது, இருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்புவதற்குப் பாதுகாப்பான போக்குவரத்தை யார் உத்தரவாதம் செய்திட வேண்டும்? அவர்களைத் தனிமைப்படுத்திய காலத்தில் அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான ஊதியத்தை, யார் கொடுக்க வேண்டும்?  அல்லது, அவர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை யார் கவனித்துக்கொள்ள வேண்டும்? அவர்களின் உணவுக்கும் அப்பாற்பட்டு அவர்களின் தேவைகளை யார் கவனித்துக்கொள்ள வேண்டும்? அவர்களின் வேலையிழப்புக்கான இழப்பீட்டை யார் உத்தரவாதம் செய்திட வேண்டும்? அவர்களை முறையாகவும், அடிக்கடியும் சோதனை செய்து பார்க்க வேண்டியது யார்? இவை அனைத்திற்கும் பொறுப்பு மத்திய அரசுதான் என்று உச்சநீதிமன்றம்தான் கட்டளை பிறப்பிக்க முடியும். இதுதொடர்பான மனுக்களை நிராகரித்திருப்பதன் மூலம் அல்லது ஒத்திவைப்பதன் மூலம், நீதிமன்றம் எண்ணற்றக் கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை, ஒரு கொள்கை சம்பந்தப்பட்ட விஷயமா? அதன்காரணமாக அதில் நீதிமன்றம் தலையிடுவதற்கான தகுதி இல்லையா? அல்லது, அரசாங்கங்கள் ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் இரு வேளை போஷாக்கான உணவு அளித்து வருகின்றனவா? (Governments already provide labourers with two square meals a day.) எனவே, அவர்களுக்கு மேலும் என்ன தேவை? (நிச்சயமாக ‘ஊதியங்கள் இல்லை’). புலம் பெயர் தொழிலாளர்கள் ரயில்வே டிராக்குகளில் தூங்கிக்கொண்டிருக்கையில் மிகவும் கொடூரமான முறையில் ரயில் ஏறிக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தவிர்க்கப்பட முடியாதவைகளா? ஏனெனில், ‘அத்தகைய சம்பவங்கள் எப்படி நிறுத்தப்பட முடியும்?’ என்று கேட்கிறீர்களா?
 இவற்றுக்கு இணையாக, வழக்கறிஞர்களும் ‘வெறுமனே’ செய்திகளின் அடிப்படையில்  நீதிமன்றத்தை அணுகியமைக்காக, தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், நீதிமன்றம் இத்தகைய சம்பிரதாயத்தை அபூர்வமாக வலியுறுத்தியிருக்கிறது. அதனுடைய கடிதங்கள் மூலமாகவே மனுக்களை அனுமதித்திடும் அதிகாரவரம்பெல்லை (epistolary jurisdiction) பழங்கதையாகிவிட்டதா? ஆகையால்தான் அதன் எதிர்வினை மிகவும் அவசரநிலைக் காலத்தில் தாறுமாறானதாகத் தோன்றுகிறதா?
மேலேகூறப்பட்டுள்ள விவரங்களில் நீதிமன்றத்தின் சாக்குப்போக்குகளில் பல, குறிப்பாக கொள்கை மற்றும் நீதித்துறை யல்லாத தலையீடு (the question of policy and non-judicial interference) ஆகிய பிரச்சனைகள் தொடர்பாக முந்தைய தீர்ப்புரைகள் பலவற்றால் கையாளப்பட்டிருக்கின்றன. கொள்கைப் பிரச்சனை தொடர்பாக எண்ணற்ற தீர்ப்புரைகள் உண்டு. உதாரணமாக, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் மீதான விசாகா வழிகாட்டும் நெறிமுறைகள், உணவுக்கான உரிமை, மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து எண்ணற்ற தீர்ப்புரைகள் உண்டு. இவ்வழக்குகள் அனைத்திலும், நீதிமன்றம் கொள்கைகளை வகுத்துள்ளது. மாநிலங்கள் அவற்றை அமல்படுத்த வேண்டும் என்றும்கட்டளைகள் பிறப்பித்திருக்கிறது.
இன்றையதினம், அரசாங்கம்தான் நிலைமையை மிகச்சிறந்த முறையில் கணித்திட முடியும் (the government is the best judge of the situation) என்று நீதிமன்றம் எதிர்வினையாற்றியிருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. நீதிமன்றம் இவ்வாறு நம்புவதன்மூலம், அரசமைப்புச்சட்டம் நெருக்கடிக் காலங்களில் மவுனமாக இருந்துவிடக்கூடாது என்பதை மறந்துவிட்டதுபோன்றே தோன்றுகிறது. அதேபோன்று, நிலைமைகளை, அதிலும் குறிப்பாக அரசின் கடப்பாடுகள் சம்பந்தமான பிரச்சனைகளை, நேரடியாகக் கண்காணிப்பதிலிருந்து எதுவும் நீதிமன்றத்தைத் தடுத்திடவில்லை. அது நேரடியாகவே அதிகாரவர்க்கத்திடமிருந்து அனுபவரீதியான தரவுகளை எளிதாகக் கேட்டுப் பெற முடியும். நீதிமன்றம் இவ்வாறு இதற்குமுன் பல முறை செய்திருக்கிறது.
ஒருவர், இத்தகைய நிலைமையைக் கையாள்வதில், உச்சநீதிமன்றமானது, இரக்கமின்றி, அல்லது கூருணர்ச்சியற்று நடந்துகொண்டிருப்பதால் உடனடியாகத் தாக்குதலுக்கு ஆளாகிறார். இது, இருவிதமான அவதானிப்புகளுக்கு வரச்செய்கிறது. முதலாவது, நீதிமன்றம் இந்த மனுக்களை வெறுமனே நிராகரித்திட அல்லது ஒத்திவைத்திடவில்லை. இது இவ்வாறு மனுக்கள் தாக்கல்செய்த மனுதாரர்களை நிவாரணம் கோரி நீதிமன்றங்களை அணுகக்கூடாது என்று மிகவும் சுறுசுறுப்பாக விரட்டியடித்திருக்கிறது. ஏனெனில், இதெல்லாம் ஆட்சியாளர்களின் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்மானித்துவிட்டது. சாதாரணமாக, உச்சநீதிமன்றம் குறைந்தபட்சம் மனுதாரர்களை உயர்நீதிமன்றங்கள் பக்கம் தள்ளிவிடும். ஆனால், இங்கே, அதைக்கூட உச்ச நீதிமன்றம் செய்திடவில்லை.  நடைமுறையில் உச்சநீதிமன்றம் அவ்வாறு வந்தவர்களுக்கு, நீதிமன்றத்தின் கதவுகளைச் சாத்தி அறைந்திருக்கிறது.
இரண்டாவது, பொது நல மனுக்களை எப்படிக் கருதிட வேண்டு என்ற ஒரு விஷயம் இருக்கிறது. பொது நல மனுக்கள் என்பவை ஏழைகள், அடித்தட்டு மக்கள் மற்றும் வடுப்படத்தக்க நிலையில் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்களில் எவரொருவருக்கும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உத்தரவாதப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட கருவியாகும். அவர்களின் சார்பாக நீதிமன்றம் பொருத்தமான கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோர முடியும்.  இதுதான் பொதுநல மனுக்களின் இதயமாக இருக்கிறது. ஒரு பொது நல மனுவின் கருத்தாக்கம் எவருக்கும் எதிர்ப்பானதல்ல. ஆனால், நீதிமன்றம் இந்த மனுக்களை அரசாங்கத்திற்கு எதிரானவைகளாக கருதிக்கொண்டிருக்கிறது. உண்மையில், பொதுநல மனுக்கள், நீதிமன்றங்களுக்கும், அவற்றைத் தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கும் இடையேயான ஒரு  கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஒவ்வொருவரும் நீதிமன்றம் வந்து பிரச்சனைக்கு நீதிமன்றத்துடன் சேர்ந்து தீர்வு காண்பதற்கான முயற்சியேயாகும். இன்றையதினம், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் எப்படி இருப்பதாக நம்மால் பார்க்க முடிகிறது? அதற்கு பலகோடி டாலர்கள் உள்ள கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நேரம் ஒதுக்க முடிகிறது, அல்லது குறிப்பிட்ட ஒரு சுயவிவர பத்திரிகையாளருக்கு நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால், அதே சமயத்தில் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் உண்மையான அவலநிலை குறித்து ஆராய்வதை உதாசீனம் செய்திருக்கிறது. ஏனெனில், மேலே கூறிய பெரியமனிதர்களின் வழக்குகளைப்போன்று நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு இவர்களிடம் பணமும் இல்லை, உயர் அந்தஸ்தும் இல்லை.
உயர்நீதிமன்றங்களின் பங்கு
இந்தக் கட்டத்தில், சில உயர்நீதிமன்றங்கள் மிகச்சிறந்தமுறையில் பங்களிப்புகள் ஆற்றியிருப்பதைப் பாராட்டிட வேண்டும். உச்சநீதிமன்றம் இதில் தலையிடவில்லை என்பதால் உயர்நீதிமன்றங்களும் தலையிடமுடியாது என்கிற விதத்தில் அரசாங்கம் அவற்றை அதைர்யப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், அந்த உயர்நீதிமன்றங்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இதில் குறைந்தபட்சம் நான்கு உயர்நீதிமன்றங்களை, (கர்நாடகம், சென்னை, ஆந்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்) புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து கேள்விகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.    இது கிட்டத்தட்ட, அவசரநிலை காலத்தின்போது என்ன நடந்ததோ அதே போன்றதுதான். அப்போதும் உயர்நீதிமன்றங்கள் மிகவும் தைர்யமாக உரிமை மீறல்களுக்கு எதிராக நின்றன. அவற்றை அப்போதும் உச்சநீதிமன்றம் தலையிட்டு அவற்றைத் தள்ளுபடி செய்தது. உதாரணமாக, சென்னை உயர்நீதிமன்றம், ஜனநாயகத்தை இந்த மாதிரி நெறித்திட முடியாது என்று கூறி ஊடகங்களுக்கு எதிராக வந்த கிரிமினல் மானநஷ்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்தது. இப்போது இதற்கு நேரெதிரான விதத்தில் உச்சநீதிமன்றத்தின் எதிர்வினை இருக்கிறது. அரசுத்தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் (சொலிசிடார் ஜெனரல்), பொய்ச்செய்திகள் காரணமாகத்தான் தொழிலாளர்கள் வெளியேறினார்கள் என்று விசித்திரமானமுறையில் வாதிடுகிறார். உச்சநீதிமன்றமும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. மேலும் அதில் உச்சநீதிமன்றம், ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செய்திகள் வெளியிடவேண்டும் என்று அறிவுரைகள் வேறு செய்திருக்கிறது.  இத்தகைய தருணங்களில் உயர்நீதிமன்றங்கள் பகுத்தறிவு, துணிவு மற்றும் பச்சாத்தாபம் ஆகியவற்றின் தீவுகளாக வந்திருக்கின்றன. எனினும், உண்மையில், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை என்பது மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையே தவிர, ஒரு மாநிலத்திற்குள்ளான பிரச்சனை அல்ல. உச்சநீதிமன்றம் தலையிடுவதற்கு இதுவே தருணம். அவ்வாறு தலையிட்டு அரசாங்கம் சொல்வதே வேதவாக்கு என்று இருப்பதற்குப் பதிலாக, பேரழிவு நிலைமையைக் கண்காணித்திட முன்வர வேண்டும். நீதியரசர் பிராண்டிஸ் வார்த்தைகளை நீதியரசர் எச்.ஆர்.கன்னா தன்னுடைய ஏடிஎம் ஜபல்பூர் ரிங் வழக்கில் மேற்கோள் காட்டியிருப்பது இந்த சமயத்தில் மிகவும் உண்மையாகும்: அரசாங்கத்தின் நோக்கங்கள் வைராக்கியமுள்ளவர்களால், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்காது,  நயவஞ்சகமாக அத்துமீறப்படுகையில், அதன்மூலம் சுதந்திரத்திற்குப் பெரிய அளவில் ஆபத்து ஏற்பட்டிருக்கும்போது, சுதந்திரத்தைப் பாதுகாத்திடுவது நம் மாபெரும் கடமை என்பதை அனுபவம் நமக்குக் கற்றுத்தந்திட வேண்டும்.  
(கட்டுரையாளர், தில்லி மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களின் முன்னாள் நீதியரசர் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர்.)
(நன்றி: The Hindu)

Thursday, May 21, 2020

மத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்:சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம் யெச்சூரி
20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு என்று பிரதமர் நரேந்திரமோடி கம்பீரமாக அறிவித்து, அதன் விவரங்கள் மத்திய நிதி அமைச்சரால் ஐந்து தவணைகளில் அறிவிக்கப்பட்டது. இவர்கள் அறிவித்துள்ள இந்த நிதித் தொகுப்பின்மூலம், மோடியும் பாஜக மத்திய அரசாங்கமும், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றையும் அதன்காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சமூக முடக்கத்தையும் தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும், அரக்கத்தனமான முறையில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் மேலும் வெறித்தனமாக அமல்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றை முறியடிக்கிறோம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சமூக முடக்கக் காலம், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையினரால் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக, இந்துத்துவா மதவெறித் தீயை மேலும் தீவிரமாக விசிறிவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, இந்தக் காலம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அமைதியானமுறையில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்தியவர்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்களைத் தாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அரக்கத்தனமான சட்டப்பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒருமுறை, இவர்கள் கைது செய்யப்படுவதில் மத விவரக்குறிப்புகள் விஷத்தனமான முறையில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.
மூன்றாவதாக, ஜனநாயக உரிமைகள், சிவில் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்காகப் போராடுகிறவர்கள் மற்றும் தங்களுக்கு எதிராக மாற்றுக்கருத்துக்களைக் கூறுகிறவர்கள் அனைவரையும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகப் பிரிவு, சட்டவிரோத தடைச் சட்டம் (UAPA), தேசியப் புலனாய்வுச் சட்டம் (NIA) ஆகிய அரக்கத்தனமான சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராகவும், அதன் கொள்கைகளுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பதிவு செய்கிற ஊடகவியலாளர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள், பலிவாங்கப்படுகிறார்கள் மற்றும் குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குகளில் பதிவு செய்யப்படுகிறார்கள். இவ்வாறு ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்களுடன் சேர்த்து, உழைக்கும் மக்கள், குறிப்பாக தொழிலாளர் வர்க்கம், சட்டரீதியாகப் பெற்றிருந்த உரிமைகள் மீதும் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். சமூக முடக்கக் காலத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உண்மையில், பாஜக மாநில அரசாங்கங்களில் சில, மூன்று ஆண்டு காலத்திற்கு தொழிலாளர்நலச் சட்டங்கள் அனைத்தையும் ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கின்றன. இவ்வாறு, கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றை எதிர்க்கிறோம் என்ற போர்வையின்கீழ் உழைக்கும் மக்கள் கடுமையாகப் போராடி பெற்ற உரிமைகளின் மீது கூச்சநாச்சமின்றி தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது.
நான்காவதாக, சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கைகளுக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் உரிமைகளை முற்றிலுமாக மறுதலித்துக்கொண்டிருக்கிறது, அதிகாரங்கள் அனைத்தையும் தன்னகத்தே குவித்துக்கொண்டு தன்னை வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.      இவ்வாறு ஒரு சர்வாதிகார ஒற்றையாட்சி முறையை நிறுவக்கூடிய நடவடிக்கைகளில் வெறித்தனமாக இறங்கி, அனைத்து முடிவுகளும் மத்திய அரசாங்கத்தாலும், பிரதமராலும் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றால் மாநிலங்களின் சுமைகள் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன.
நாடும், நாட்டு மக்களும் குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திடவும் அதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் போராடிக் கொண்டிருக்கிற அதே சமயத்தில், மோடியின் தலைமையின்கீழ் இயங்கிடும் ஆர்எஸ்எஸ்/பாஜக மத்திய அரசாங்கம்  அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றன.
சுய சார்பு அல்ல, மாறாக அடிபணிதல்
இந்தியாவின் சுய சார்பை மேம்படுத்தப்போகிறோம் என்ற பெயரில், மோடியால் பொருளாதார ஊக்குவிப்புத் தொகுப்பு முன்வைக்கப்பட்டிருக்கிறது. மோடிக்கு, எதை அறிவித்தாலும் அது தன்னுடைய சொந்தப் பங்களிப்பு என்பதுபோல் அறிவிக்கும் பழக்கத்தின் அடிப்படையில், இப்போது சுயசார்பு என்பதையும் ஏதோ புதிதான ஒன்று என்பது போலவும் அதனைத் தான் முன்னெடுத்துச்செல்லப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். பொருளாதாரம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவில் சுய சார்பு என்கிற கருத்தாக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த ஓர் அம்சமாக இருந்து வந்திருக்கிறது. தாதாபாய் நௌரோஜி மற்றும் இந்தியாவின் செல்வத்தை பிரிட்டிஷார் சூறையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே, சுதந்திர இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாக சுய-சார்பு இருந்து வந்தது. சுய சார்பு நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்றாக விளங்குகிறது.  
ஆனாலும், மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு, இந்தியாவின் சுயசார்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அதனை மேலும் அந்நிய மற்றும் உள்நாட்டிலுள்ள கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு அடிபணியவைத்திடும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. இந்த முன்மொழிவுகள் நேரடியாகவே அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுத்துத் தந்திருக்கிறது. மேலும் இந்த நடைமுறையில், நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக மோடி அரசாங்கம் அமல்படுத்திவரும் கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை அருவருப்பான அளவிற்கு வலுப்படுத்தும் விதத்தில் வாய்ப்பு வாசல்கள் மேலும் அகலத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த முன்மொழிவுகள் அனைத்துமே நாட்டின் சொத்துக்களை மிகப்பெரிய அளவில் சூறையாடுவதற்கானவைகளே தவிர வேறல்ல. நம் நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளும் 74 சதவீதம் வரையிலும் இப்போது அந்நிய நேரடி முதலீட்டுக்கு அகலத்திறந்து விடப்பட்டிருக்கிறது. இவற்றில் ராணுவ உற்பத்தித் தளவாடங்களும், அணு எரிசக்தித்துறையும் அடக்கம். அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட இருக்கின்றன. இவை நிச்சயமாக மாபெரும் அளவில் ஊழலுக்கு வழிவகுத்திடும். இவ்வாறு கார்ப்பரேட் நலன்களுக்கு அடிபணியும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிதித்தொகுப்பைத்தான் மோடி-கோவிட்-குணப்படுத்தும் முறை! (Modi-Covid-cure!) எனச் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிதி ஊக்குவிப்புத் தொகுப்பின் விவரங்கள்
கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனையொட்டி மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற பின்னணியிலும் இந்த நிதித்தொகுப்பு மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுகாதார வசதிகள்: கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பிரதானமாகச் செய்யவேண்டியது என்னவெனில், நம் சுகாதார அமைப்பு முறைகளையும் அதன் கீழ் இயங்கும் துறைகளையும் வலுப்படுத்துவதேயாகும். சமூக முடக்கம், தொற்றைக் குணமாக்கிடாது. தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும் நம்மை வலுப்படுத்தவதற்குத் தேவையான தயாரிப்புகளுக்கு போதிய அளவுக்கு அவகாசம் அளிப்பதற்கு மட்டுமே அது பயன்படும்.   இதற்கு நம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இத்தொற்றிலிருந்து முதலில் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகளை முறையாக அளித்திட வேண்டும். ஆயினும், சமூக முடக்கம் அறிவித்து 50 நாட்கள் கழிந்தபின்பும், இதுநாள்வரையிலும் அவர்களுக்கு இவ்வாறு போதிய அளவுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
மருத்துவமனைகள்: கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது என்பதன் பொருள், அதற்குத் தேவையான அளவிற்கு நம் மருத்துவமனைகளில் இத்தொற்றுக்கு சிகிச்சை செய்வதற்கான அளவிற்குக் கணிசமான இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதாகும். இன்றையதினம் இந்தியாவில் ஆயிரம் மக்களுக்கு 0.8 மருத்துவர்கள் என்ற அளவிலும், 0.7 மருத்துவனைப் படுக்கைகள் என்ற அளவிலும்தான் நிலைமைகள் இருக்கின்றன. இது மிகவும் பரிதாபமான நிலையாகும். சமூக முடக்கக் காலத்தை, நம் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனாலும், இந்தத் திசைவழியில் மோடி அரசாங்கம் எதுவுமே செய்யாமல் இருக்கிறது. உலகில் பல நாடுகள், தங்கள் நாடுகளிலிருந்த தனியார் மருத்துவமனைகளை, கொரானா வைரஸ் தொற்று சவாலை சமாளிப்பதற்காக, பொது உபயோகத்திற்குப் பயன்படுத்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அதுபோன்று எவ்விதக் கட்டளையையும் மோடி அரசாங்கம் பிறப்பித்திடவில்லை. கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்களைப் பாதுகாத்திட மிகவும் அவசியமாகத் தேவைப்படும் வென்டிலேடர்கள் போதுமான அளவிற்கு நம் நாட்டில் இல்லை, கடும் பற்றாக்குறை நீடிக்கிறது.
சோதனைகள்: சமூக முடக்கக் காலத்தில், மக்களில் எவருக்கேனும் ‘பாசிடிவ்’ எனப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்திட, மிகப்பெரிய அளவில், பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுவும் நடந்திடவில்லை. இன்றையதினம், இந்தியா, உலகில் மிகவும் குறைவான அளவில் சோதனை செய்து பார்க்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. நம் நாட்டில் பத்து லட்சம் மக்களில் 1700 பேர் என்ற அளவில்தான் சோதனை செய்து பார்க்கப் பட்டிருக்கிறார்கள். பல நாடுகள் பத்து லட்சம் பேர்களில் ஒரு லட்சம் பேர்களை சோதனை செய்து பார்த்திருக்கின்றன. ஸ்பெயின், பத்து லட்சம் பேர்களில் 50 ஆயிரம் பேர்களுக்கும் மேலாக சோதனை செய்து பார்த்திருக்கிறது. சீனாவில், கொரானா வைரஸ் முதன்முதன் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் பகுதியில் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதை எதிர்கொள்வதற்காக, இப்போது, மீண்டும் அனைவரும் சோதனை செய்து பார்க்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் எங்கே குரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கிறது என்பதையும், எங்கே அது மிக வேகமாகப் பரவுகிறது என்பதையும் கண்டறிந்து அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்தாக அவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கு, சோதனைகள் செய்து பார்க்கப்பட வேண்டியது அவசியம். இதுவும் இங்கே நடைபெறாதது, மிகவும் வருந்தத்தக்கதாகும். சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்தியாவில் உள்ள 91 மாவட்டங்களில் 191 பேர் ‘பாசிடிவ்’ எனக் கண்டறிப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். இன்றையதினம் 550 மாவட்டங்களில் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மே 8ஆம் தேதிக்குப் பின்னர், சராசரியாக 3600 பேர், ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டு, தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக, குரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவிதத்தில் நம் திறன்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளாமல், மோடி அரசாங்கத்தால் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு முறை கைவிடப்பட்டிருக்கிறது
எதார்த்த நிலை இப்படி இருந்தபோதிலும், சுகாதார இந்தியாவை உருவாக்குவதற்கு மிகவும் அடிப்படைத் தேவையாக விளங்கும்,  அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு முறையை உருவாக்குவதற்கு, இப்போது மோடி அரசாங்கம் அறிவித்திருக்கிற நிதித்தொகுப்பு அநேகமாக எதுவுமே செய்திடவில்லை. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிகச்சிறந்த சுகாதாரப் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று பேசினார்களேயொழிய, அவற்றை உருவாக்குவதற்காக ஒரு காசு கூட ஒதுக்கீடு செய்திடவில்லை. இன்றையதினம் மத்திய அரசு, சுகாதாரத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவு செய்கிறது. இப்போது வெளியிடப்பட்டிருக்கிற நிதித்தொகுப்பு மூலம் இதனைக் குறைந்தபட்சம் 3 சதவீதமாகவாவது உயர்த்தி இருக்க வேண்டும். ஆனாலும், மோடி அரசாங்கம், இந்தியாவின் ஏழை மக்களுக்கு உதவி, நிவாரணம் அளித்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதைவிட, அதனுடைய சொந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே சுறுசுறுப்பாக இருக்கிறது.
மக்களின் நிலைமைகள்: இந்த நிதித்தொகுப்பு வந்திருக்கும் பின்னணியின் இதர அம்சம் மக்களின் நிலைமைகள் ஆகும். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இரண்டாகப் பிரிந்ததற்குப்பின்னர், இந்த அளவிற்கு மிகப் பெரிய அளவில் மக்கள், தங்கள் சொந்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்காக, பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து செல்வது என்பதைப் பார்த்திருக்கவில்லை.  இதில் பலர் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள். இன்றும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.  ஐம்பது நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்கள் பசி-பட்டினியுடன், மிகவும் சோர்வடைந்து, பல இடங்களில் விபத்துக்களுக்கு ஆளாகி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நம் சொந்தச் சகோதர சகோதரிகளுக்கு, போக்குவரத்து வசதிகளை இலவசமாகத் தருவதற்கு, மோடி அரசாங்கம் மறுத்திருக்கிறது. இப்போது இவர்கள் வெளியிட்டுள்ள நிதித்தொகுப்பும், இன்றையதினம் இந்தியச் சாலைகள், முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதகுலத்தின் துயரார்ந்த அவலக் காட்சிகளைத் துடைத்தெறிய எதுவும் செய்திடவில்லை. அதேபோல், மக்களின் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் பசிக்கொடுமையைப் போக்குவதற்கும் எதையும் அறிவித்திடவில்லை.
வேலையின்மைக் கொடுமை: இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE-Centre for Monitoring Indian Economy) சமூக முடக்கக் காலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 14 கோடியாக அதிகரித்திருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. நகரங்களில் பத்து தொழிலாளர்களில் எட்டு பேர் தாங்கள் பார்த்து வந்த வேலைகளை இழந்துவிட்டதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருக்கிறது.  நாட் கூலிப் பெற்று வந்தவர்கள், சிறிய பெட்டிக்கடை வர்த்தகர்கள், தலையில் சுமந்து வர்த்தகம் செய்தவர்கள் கோடானுகோடி பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றனர். திறன்படைத்த தொழிலாளர்கள் (skilled workers), ஊடகவியலாளர்கள் பலரும் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள் அல்லது ஊதிய வெட்டை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிதித்தொகுப்பு இவர்களின் துயர் துடைத்திட போதுமான அளவில் எதுவும் செய்திடவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள்
இந்தப் பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வருமானவரி செலுத்த வேண்டிய நிலையில் இல்லாத, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 7500 ரூபாய் ‘நேரடி ரொக்க மாற்று’ (Direct Cash transfer) செய்திட வேண்டும் என்று கோருகிறது. இது, அவர்கள் உயிருடன் நீடித்திருப்பதற்கு அவர்கள் கைகளில் கொஞ்சம் பணம் இருப்பதற்கு உதவிடும். மேலும், பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு பரவிவருவதன் காரணமாக, தேவைப்படும் அனைவருக்கும் உணவு தான்யங்கள் இலவசமாக அளிக்கப்பட வேண்டியது அவசியத் தேவையாகும். ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் 10 கிலோ உணவு தான்யங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் உள்ள 7 கோடியே 70 லட்சம் டன்கள் உணவு தான்யங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் இல்லங்களுக்கு போக்குவரத்து வசதிகளை இலவசமாக செய்துகொடுத்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு
நிதி ஊக்குவிப்பு என்பதன் வரையறையின்படி, ஆட்சி புரிந்திடும் அரசாங்கம் நிதியாண்டிற்காக பட்ஜெட் செலவினத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக செலவிடுவது என்பது பொருளாகும். அறிவிக்கப்பட்டிருக்கிற தொகுப்பில் பெரும்பாலானவை ஏற்கனவே அறிவித்த திட்டங்களேயாகும். அவை மறுபடியும் மேலும் ஒரு கட்டுப்போட்டு அளிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். இதில் கொடுக்கப்பட்டிருக்கிற அழுத்தம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன்கள் அளிக்கப்படும் என்பதைத் தவிர அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் நேரடிச் செலவினம் என எதுவும் கிடையாது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இவை அனைத்தும் நாட்டின் நிதிக் கொள்கையின் அடிப்படை அம்சங்களாகும். இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட வேண்டியவைகளாகும்.
இவர்கள் அறிவித்திருக்கிற நிதித் தொகுப்பில் உண்மையில் கூடுதலான செலவினம் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அது 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வருகிறது. அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவு. பல்வேறு பொருளாதார மேதைகள் பலவிதங்களில் கணக்கிட்டு, அரசாங்கத்தின் உண்மையான செலவினம் மற்றும் அது அறிவித்துள்ள அனைத்தும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீதத்திற்கும் 1.5 சதவீதத்திற்கும் இடையேதான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இந்த ஊக்குவிப்புத் தொகுப்பு, இன்றைய நிலைமைகளில் எந்த ஊக்குவிப்பையும் அளிக்கப் போவதில்லை.
இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பட்ஜெட் செலவினம்,   30 லட்சத்து, 42ஆயிரத்து, 230 கோடி ரூபாய்களாகும். ஓர் ஊக்குவிப்பு என்பது, இதைவிடக் கூடுதல் தொகை என்று பொருளாகும். இவர்கள் பட்ஜெட்டில் அறிவித்த செலவினங்களையே செய்திருக்கிறார்களா, இல்லையா என்று எவருக்கும் தெரியாது. அரசாங்கத்தின் வருவாய்கள், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெளிவாகும். சமூக முடக்கக் காலத்தில் அது மேலும் மோசமாக மாறியிருக்கிறது. எனவே, இவர்கள் அறிவித்துள்ள கூடுதல் செலவினமும் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படும் என்பதும் மிகவும் நிச்சயமற்ற தன்மையேயாகும்.   கண்டிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், அரசாங்கம், அறிவித்துள்ள ஊக்குவிப்பு உண்மையில் மேற்கொள்ளப்படுகிறதா, இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு, அது தன்னுடைய வருவாய்கள் மற்றும் செலவினங்களை காட்டும் பட்ஜெட் அறிக்கையை அறிவித்திட வேண்டும்.
முழுவீச்சில் தனியார்மயம் மற்றும் தாராளமயம்
நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப்போல, அனைத்துத் துறைகளும் அந்நிய நேரடி முதலீட்டிற்கும், உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கும், இப்போது அகலத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. இந்தத் தனியார்மயம், நாட்டின் சொத்துக்களை அரசாங்கத்தின் தினச் செலவுகளுக்காக விற்பனை செய்வது போன்றதாகும். இது, ஓர் விவசாயி தன்னுடைய தினசரி செலவுகளுக்காக, தன்னுடைய நிலத்தை விற்பது போன்றதாகும். இச்செயல் பொருளாதார அறிவுடனும் செய்யப்படவில்லை, சாமானியப் பொது அறிவுடனும் கூட செய்யப்படவில்லை. எனினும், இது இரக்கமற்ற கொள்ளை லாப வேட்டைக்கான பாதையாகும். 
இவ்வாறு நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதற்கு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவதற்காகத்தான், எட்டு மணி நேர வேலை மற்றும் தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற முக்கியமான உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது, வெளிப்படையான சூறையாடல் மற்றும் சர்வாதிகாரத் தாக்குதல்களின் ஒரு கூட்டுக் கலவையாகும்.
வேளாண்மை: பொது முதலீடுகளின் மூலமாக விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மீண்டும், விவசாயிகளுக்குக் கடன் வசதிகள் செய்துதரப்படும் என்று கூறியிருக்கிறார்கள். விவசாயிகள், ஏற்கனவே பெற்ற கடன் சுமைகளிலிருந்து மீளமுடியாமல் தற்கொலைகளைச் செய்துகொண்டிருக்கக்கூடிய தருணத்தில், புதிய கடன்களை அவர்கள் பெற முன்வருவார்களா என்பது அநேகமாக சந்தேகம்தான்.
இந்தத் தருணத்தில் என்னசெய்ய வேண்டும்? அறுவடைக் காலம் வந்திருக்கிறது. அறுவடை செய்த பயிர்கள் அரசாங்கத்தால் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படாமல் இருக்கின்றன. இது குறித்தெல்லாம் ஒருவார்த்தை கூட இந்தத் தொகுப்பில் காணப்படவில்லை. அடுத்த விவசாயப் பருவமும் ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது. விதைகள் மற்றும் இடுபொருட்கள் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு இவற்றையெல்லாம் அளிப்பதற்கு எந்த நடவடிக்கையும் இந்தத் தொகுப்பில் இடம்பெறவில்லை.    
 இந்தத் தொகுப்பில்  குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள், சந்தைகள் குறித்தெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இருந்துவரும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தைக் கிழித்தெறிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் உணவு தான்யங்கள் மாநிலங்களுக்கிடையே முறைப்படுத்தப்படாத விலைகளின் அடிப்படையில் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. இது, எதிர்காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திடும். 
மாநிலங்களின் மீதான தாக்குதல்கள்
கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடித்திடும் நடவடிக்கைகளில் மாநில அரசாங்கங்கள் முன்னணியில் நிற்கின்றன. அவற்றுக்கு உரிய வாய்ப்பு வசதிகளைச் செய்து தரவில்லை என்பது மட்டுமல்லாமல், இந்த நிதித்தொகுப்பானது அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலைவைத் தொகைகள் அளிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தைக்கூட அளித்திடவில்லை. மாநில அரசாங்கங்கள் தற்போது தங்களுடைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 5 சதவீதம் வரை கடன்பெறும் வரம்பை (borrowings) உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது. எனினும், இவ்வாறு வரம்பை உயர்த்தியிருப்பதன் பொருள் அநேகமாக எதுவும் கிடையாது. ஏனெனில், இவ்வாறு உயர்த்தியிருக்கும் கடன் வரம்பு, வணிக அடிப்படையில்தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதிக வட்டி விகிதத்தில் மாநிலங்களைத் தள்ளி இருப்பது அவற்றுக்கு பெரிய அளவில் கடன் சுமைகளை ஏற்படுத்திடும். இந்திய ரிசர்வ் வங்கி மாநில அரசாங்கங்களால் வெளியிடப்படும் பத்திரங்களை ‘பிரகடனம் செய்யப்படும் ரெபோ விகிதத்தில்’ (declared repo rate) வாங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தத் தொகுப்பு இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. எல்லாவற்றையும்விட மோசமான விஷயம் என்னவென்றால், மத்திய அரசாங்கம் தற்போது பேரிடர் நிவாரண நிதியத்தின்கீழ்  சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய மாற்றல்களைக் (statutorily mandated transfer) கூட, மாநிலங்களுக்கு ஓர் ஊக்குவிப்புத் தொகுப்பாக அளித்ததாக, அல்லது, மத்திய அரசு, மாநில அரசுகள்மீது காட்டிய தாராளம் என்பதுபோல் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. மத்திய அரசாங்கம், பிஎம்கேர்ஸ் (PM CARES) என்னும் பெயரில் ஏற்படுத்திய தனியார் அறக்கட்டளையின்கீழ்  வசூலித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களிலிருந்து, மாநிலங்களுக்கு குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்காக நிதி உதவிகளைச் செய்திட வேண்டும்.
இந்த நிதித்தொகுப்பின் பல்வேறு அம்சங்கள் ஆய்வுசெய்து பார்க்கப்படும் போது, இவற்றில் பல நீண்டகால நடவடிக்கைகளாக இருப்பதையும், நாட்டின் பொருளாதாரத்திற்கோ, அல்லது, அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ, உடனடி ஊக்குவிப்பு அளிக்கக்கூடிய விதத்தில் எதுவும் இல்லாமல் இருப்பதையுமே காட்டுகின்றன. நிதித் தொகுப்பின் இதர அம்சங்கள் குறித்து தனியே ஆய்வு செய்யப்படும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாதார செயல்திட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நடப்பு நிலைமையில் பின்பற்றப்பட வேண்டிய, பொருளாதார செயல்திட்டம் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டு, அதில் தன்னுடைய பரிந்துரைகளையும் தெரிவித்திருக்கிறது. அதனைக் குடியரசத் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அதில் நாம், அரசாங்கத்தால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதாரத் திட்டம் என்ன என்பதை முன்வைத்திருக்கிறோம். பொருளாதார நெருக்கடியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாங்கொணா வேதனைகளும் தீர்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என்ன என்று அதில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த மூன்று நடவடிக்கைகளையும்  இப்போது எடுத்திட வேண்டும்.
மத்திய அரசாங்கம் நமது பொருளாதாரத்தையும், மக்கள் நலனையும் சரி செய்ய நாம் அளித்துள்ள இந்த முன்மொழிவுகளை உடனடியாக உரிய அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 
இந்த நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் உடனடியாக மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நிர்பந்தங்களையும் அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி கேட்டுக் கொள்கிறது.” 
இந்த செயல்திட்டம், இந்தியப் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள அடிப்படை பிரச்சனை என்ன என்பதை சரியாக அடையாளம் காட்டியது. இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே, குரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே, பொருளாதார மந்த நிலைக்குள் (recession ) நுழைந்துவிட்டது. இதன் காரணமாக மக்களின் தேவைகள் அனைத்து அளவிலும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி மிகவும் கூர்மையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, பொருளாதாரத்தில் கிராக்கி இன்மை (lack of demand) ஏற்பட்டு, ஏராளமான தொழில் பிரிவுகள் மூடப்படுவதற்கும், பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படுவதற்கும் இட்டுச்சென்றன. இந்த நிலைமை தேசிய சமூக முடக்கக் காலத்தில் மேலும் மோசமாகியது. ஆகையால், மக்களின் கைகளில் வாங்கும் சக்தியை அதிகரிக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரத்தை புதுப்பித்திட வேண்டிய முக்கிய பிரச்சனையை உடனடியான, குறுகிய கால மற்றும் நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பொது முதலீடுகள்: இதனை கடன்கள் அளிப்பதன் மூலமாகச் செய்திடாமல், அரசாங்கம் நேரடியாக செலவு செய்வதன் மூலமாகவே மேற்கொள்ள முடியும். நம் நாட்டிற்கு அதிக அளவில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட மிகப்பெரிய அளவில் பொது முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றை தனியார் மூலதனத்திடம் ஒப்படைப்பது என்பது எப்போதும் வெற்றி பெற முடியாது. ஏனெனில் அவர்கள் இவற்றுக்காக முதலீடு செய்வதிலிருந்து லாபத்தை எடுப்பதற்கு வெகு காலமாகும் என்பதால், அவர்கள் இதற்காக கடன்களை எழுப்புவார்கள். எனவே, உலகில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் அனைத்துமே – அமெரிக்காவிலிருந்து மக்கள் சீனக் குடியரசு  வரையிலும் – அரசாங்கங்கள்தான் பொது முதலீடுகள் மூலமாக உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதில் பிரதான பங்கினை ஆற்றி இருக்கின்றன. இன்றைய நிலைமைகளில் எவ்விதமான நிதித் தொகுப்பாக இருந்தாலும் இத்தகைய அணுகுமுறைதான் இருந்திட வேண்டும்.
இத்தகைய பொது முதலீடுகள் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட,  கோடானுகோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இட்டுச் செல்லும். தொழிலாளர்கள் தாங்கள் ஈட்டிய ஊதியங்களைச் செலவு செய்யத் தொடங்கிவிட்டார்களானால், உள்நாட்டுத் தேவை உயரத் தொடங்கிடும், பின்னர் அதன் காரணமாக, மூடிய தொழிற்சாலைகளும் மற்றும் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளும் மீளவும் திறக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும்.
இவற்றைச் செய்வதற்குப் பதிலாக இந்த அரசாங்கத்தின் நிதித்தொகுப்பு, கார்ப்பரேட்டுகளுக்கும் மற்றும் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளுக்கும் முதலீடு செய்வதற்காகப் பெரிய அளவில் மூலதனத்தை அளிப்பதன் மீது கவனம் செலுத்தி இருக்கிறது. லாபம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே எவரும் முதலீடு செய்திட முன்வருவார்கள். பொருளாதாரத்தில் கிராக்கி (demand) இல்லை என்கிறபோது, இத்தகைய முதலீடுகளின் மூலம் உற்பத்தியாகும் பொருள்கள் உள்நாட்டில் விற்க முடியாது. அவற்றை சர்வதேச அளவிலும் விற்க முடியாது. ஏனெனில உலகப் பொருளாதார நிலைமையும் மந்தமாகவே இருக்கிறது.
எனவே லாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகளே இருக்க முடியாது.  எவ்வளவுதான் அரசாங்கம் நிதியைக் கொட்டிக்கொடுத்தாலும், எவ்வளவுதான் அத்தகைய நிதிச் செலவினத்தைக் குறைத்தாலும், பொருளாதாரத்தில் கிராக்கி இல்லையேல் அவற்றால் வேலை செய்ய முடியாது.
எனவே, மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பால் நம் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்ட முடியாது. எனினும் இந்த நிதித்தொகுப்பின் உண்மையான நோக்கம், நாம் முன்பே கூறியதுபோல், முன்பு அறிவித்த திட்டங்களுக்கான மறுதொகுப்பேயாகும். மேலும், கொரானா வைரஸ் தொற்றாலும், சமூக முடக்கத்தாலும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்களை அளித்து அவர்களைச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கிடும் அதே சமயத்தில், நாட்டின் சொத்துக்களை எந்த அளவிற்கு வேகமாகச் சூறையாட முடியுமோ அந்த அளவிற்குச் சூறையாட வேண்டும் என்பதுமேயாகும்.
இவர்களின் இந்தப் பாதை, இந்தியாவின் பொருளாதார சுயசார்பின் நலன்களுக்கு எதிரானதாகும். இந்தப் பாதை, இந்திய மக்களின் நலன்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் வளத்திற்கு எதிரானவைகளாகும். இந்தப் பாதை கூட்டுக் களவாணி முதலாளித்துவத்திற்கு வசதி செய்து கொடுக்கும் பாதையாகும். அதன் மூலம் ஆளும் கட்சிக்கும் தெளிவாகத் தெரியக்கூடிய விதத்தில் ஆதாயங்கள் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை. இந்த மக்கள் விரோதப் பாதையை ஏற்க முடியாது.
இப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக முடக்கக் காலத்தின்கீழ், குரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இப்போதைய நிலைமையில், நாட்டின் கோடானுகோடி மக்களின் உடனடித் தேவைகளுக்கு உடனடியாக உதவிடும் விதத்தில், இந்த அரசாங்கம் இந்தப் பாதையில் செல்வதை மாற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மக்களின் நிர்ப்பந்தங்களை வலுப்படுத்திட வேண்டும்.            
(தமிழில்:ச.வீரமணி)   



Sunday, May 17, 2020




தான்தோன்றித்தனமாக செயல்படும்போக்கை நிறுத்துக
-ஆர்.வைகை மற்றும் அண்ணா மாத்யு
(தொழிலாளர் நலச் சட்டங்கள் நாகரிகமான லட்சியங்களைக் கொண்டவைகளாகும். கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியாளர்கள் அவற்றைத் துருப்புச்சீட்டுகளாகப் பயன்படுத்தக் கூடாது.)
 கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றால் உருவாக்கப்பட்டிருக்கிற பொது சுகாதார நெருக்கடி மூலமாக, நாம் மற்றுமொரு மாபெரும் துயரத்தின் சாட்சிகளாக இருக்கிறோம். அதாவது, இதனைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகளும், அவர்களுக்கும் மேலாக, அரசும் தொழிலாளர்களை நிர்க்கதியாகக் கைவிட்டிருக்கின்றன. 2005 பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொழிலாளர்களின் உரிமைகள் காவு கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவர்களின் உணவு, தங்குமிடம் அல்லது மருத்துவ நிவாரணம் என எதற்கும் எவ்விதமான வழிவகைகளும் செய்து தரப்படவில்லை. அவர்கள் இதுவரையிலும் பெற்றுவந்த ஊதியங்களுக்கு எவ்விதமான உத்தரவாதமும் கிடையாது. அரசின் ரொக்கம் மற்றும் உணவு நிவாரணம் என்பவை பெரும்பகுதி தொழிலாளர்களுக்குச் சென்றடையவில்லை.

பசி-பஞ்சம்-பட்டினியால் பரிதவித்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவதற்காக நடக்கத் தொடங்கி இருக்கிறார்கள். போகிற வழியிலேயே பலர் இறந்துள்ளார்கள். சமூக முடக்கம் அறிவித்து ஒரு மாதம் கழிந்த பின்னர், இப்போதுதான் மத்திய அரசு, அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்கு அனுமதித்து, பூடகமான முறையில் ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறது. இதன்பின்னர் உடனடியாக, முதலாளிகளின் அமைப்புகள் எல்லாம் தொழிலாளர்கள் இவ்வாறு செல்வதைத் தடுப்பதற்காகக் குரல் கொடுத்திருக்கின்றன. இவர்களின் குரலுக்குச் செவிமடுத்து அரசாங்கங்களும், முதலாளிகள் தொழில்களைத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு இடையூறு இல்லாது தொழிலாளர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக, அவர்கள் பயணம் செய்வதற்கான போக்குவரத்து வசதிகளைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
முதலாளிகள் தற்போது தொழிலாளர் நலச் சட்டங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனையொட்டி உத்தரப்பிரதேச மாநில அரசு, மகப்பேறு பயன்கள் மற்றும் பணிக்கொடைச் சட்டம், 1948 தொழிற்சாலைகள் சட்டம், 1948 குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், 1946 தொழில்நிறுவனங்கள் (நிலையாணைகள்) சட்டம், 1926 தொழிற்சங்கங்கள் சட்டம் உட்பட அநேகமாகத் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும் கிடப்பில் போடுவதற்காக ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. பல மாநில அரசாங்கங்கள், தங்கள் மாநிலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் நாட்டிலுள்ள பல சட்டங்களை அமல்படுத்துவதற்கு, விலக்கு அளித்திருக்கின்றன. நாட்டிலுள்ள இந்தியத் தொழில்களின் கூட்டமைப்பு (The Confederation of Indian Industry) தொழிலாளர்களுக்கு 12 மணி நேர ஷிப்ட் முறையைப் பரிந்துரைத்திருக்கிறது. அரசாங்கங்களும் வேலைக்கு அழைக்கப்பட்டால் தொழிலாளர்கள் உடனே வந்து சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்கள் தண்டனைக் குரிய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் கட்டளைகள் பிறப்பித்திருக்கின்றன.
இவ்வாறு, நாட்டில் உள்ள முறைசாராத் தொழிலாளர்கள் ஸ்தாபனரீதியாகக் கைவிடப்பட்டபின்னர், முதலாளிகள் தரப்பில், அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்படும்போக்கை மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், ஸ்தாபனரீதியாகவுள்ள தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றும் ஒரு முறையைக் கொண்டுவர வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இதன்மூலம், நாடாளுமன்றத்தால் ஸ்தாபனரீதியான தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்புகளைப் பறித்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
காலனியாதிக்கக் காலத்துச் சுரண்டல்முறை
அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில், பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்களுக்காக  1819 வங்க முறைப்படுத்தல் VII என்னும் சட்டத்தின்மூலமாக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்னும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதை ஆட்சியாளர்களின் இப்போதைய நடவடிக்கை நினைவுபடுத்துகிறது. இந்த சட்டத்தின்படி தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையின்கீழ் வேலை செய்திட வேண்டும். இவர்கள் வேலை செய்யாமல் ஓடிவிட்டார்களானால் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப் படுவார்கள். பின்னர், வங்கத்தில் 1863 பூர்வீகத் தொழிலாளர்கள் போக்குவரத்துச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது, தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மீது செலுத்திவந்த கட்டுப்பாட்டை வலுப்படுத்தியது. அவர்களுக்கு, தொழிலாளர்களை வேலைவாய்ப்பு மாவட்டத்தில் இருத்தி வைப்பதற்கும் தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலும் சிறையில் அடைப்பதற்கும் வகை செய்தது.  பின்னர், 1865 வங்கச் சட்டம் VI நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் சிறப்பு குடியேற்றக் காவல்துறையினர் (Special Emigration Police) வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டது. வெளியேறிய தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு, தண்டனைகள் அனுபவித்தபின்னர் மீண்டும் தோட்டங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.  பிரிட்டிஷ் இந்தியாவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அதேபோன்ற பயங்கரமானதோர் ஒற்றுமையை இன்றையதினம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்களும் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்கள் நாளொன்றுக்கு 16 மணி நேரம், அற்பக் கூலிக்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.  இவர்களின் எதிர்ப்பின் விளைவாகத்தான் 1911இல் தொழிற்சாலைகள் சட்டம் உருவாக்கப்பட்டு, ஷிப்டுககளுக்கான வேலைநேரம் 12 மணி நேரம் என அறிமுகப்படுத்தப்பட்டது.  எனினும் குறைந்த ஊதியங்கள், தான்தோன்றித்தனமானமுறையில் ஊதிய வெட்டுகள் மற்றும் இதர கடினமான நிலைமைகள் தொழிலாளர்களை ‘கடன் அடிமைத்தனத்திற்குள்’ தள்ளின.
இந்தியாவில், தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர்களின் போராட்டங்களால் உருவாகி இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை காலனியாட்சிக் காலத்தில் தொழில் அதிபர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக, விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகும். 1920களிலிருந்து, சிறந்த வேலை நிலைமைகள் கோரி, எண்ணற்ற வேலைநிறுத்தங்களும், கிளர்ச்சிப் போராட்டங்களும் அலை அலையாக நடைபெற்றன. இதன் விளைவாக தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் இந்தியப் பாதுகாப்பு விதிகளின் (Defence of India Rules) கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் நம் அரசியல்கட்சித் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் தொழிலாளர்கள் குறித்து ராயல் கமிஷனை நியமனம் செய்திட நிர்ப்பந்திக்கப்பட்டது. அது, 1935இல் ஓர் அறிக்கை அளித்தது. அப்போது உருவான 1935 இந்திய அரசாங்கச் சட்டம், சட்டங்களை உருவாக்குவதில் இந்தியர்களுக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு வகை செய்தது. இவற்றின் விளைவாக இன்றைய தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவற்றிற்கு முன்னோடியாக பல சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர் சட்டம், 1951 தோட்டத் தொழிலாளர் நலச் சட்டம் என்ற வடிவத்தில் மாற்றியமைக்கப்பட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளித்தது.
ஜனநாயகத்தின் மூலம் கண்ணியமான வாழ்க்கை
நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளின்கீழ், நாடாளுமன்றம் தொழிலாளர்களைப் பாதுகாத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொழிற்சாலைகள் சட்டம், தொழிலாளர்களுக்கு ஷிப்டுகளுக்கு 8 மணி நேர வேலை வரையறுத்தது. இதற்குமேல் வேலை செய்தால் கூடுதல்நேர ஊதியங்கள் வழங்கிடவும், வாராந்திர விடுமுறைகள் வழங்கிடவும், ஊதியங்களுடன் கூடிய விடுப்பு வழங்கிடவும், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முதலானவற்றிற்கு நடவடிக்கைகள் எடுத்திடவும் வகை செய்தது. தொழில் தகராறு சட்டம் (The Industrial Disputes Act), வேலைநிறுத்தங்கள்/கதவடைப்புகள், நியாயமற்ற வேலைநீக்கங்கள் மற்றும் ‘டிஸ்மிஸ்’ செய்யப்படுதல் முதலானவற்றைத் தவிர்ப்பதற்காக தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் மூலமாக ஊதியம் மற்றும் இதர தகராறுகளைத் தீர்த்திட வாய்ப்புகள் அளித்தது. குறைந்தபட்ச ஊதியச்சட்டம், அளிக்கப்படும் ஊதியத்தைவிடக் குறைவாக அளித்தால் உயிர்வாழ்வதற்குச் சாத்தியமில்லை என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்தது. இந்தச் சட்டம் அனைத்தும், அரசமைப்புச் சட்டத்தின் 21 மற்றும் 23 ஆகிய பிரிவுகளின்கீழ் சுரண்டலுக்கு எதிராக உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் இதர உரிமைகளையும் பாதுகாத்திட அரசுக் கொள்கையின் வழிகாட்டும் நெறிமுறைகளை (Directive Principles of State Policy) நடைமுறைப்படுத்தவதற்கு உதவின.  தொழிலாளர்களின் வாழ்க்கை, அடிமைத்தனத்திலிருந்து கண்ணியமிக்க ஒன்றாக மாற்றுவதற்கு, தொழிற் சங்கங்கள் முக்கியமான பங்கினை செலுத்தின. தொழிலாளர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கும், பொருளாதார நீதி கிடைப்பதற்கும் தொழிற்சங்கங்களுக்கு இருக்கும் பங்கினை ஒதுக்கி வைத்திட முடியாது.
உச்சநீதிமன்றம், தன்னுடைய  கிளாக்சோ லாபரட்டரி (எதிர்) தலைமை அதிகாரி, தொழிலாளர்நலம், (1983) (Glaxo Laboratories v. The Presiding Officer, Labour (1983)) என்னும் வழக்கில், தொழில் வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம், 1946 குறித்துக் குறிப்பிட்டிருப்பதாவது:
முதலாளிகள் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டக் காலத்தில், தொழில் உறவுகள் மிகவும் கடுமையாக இருந்தன. நிர்வாகம்தான் உச்சபட்ச எஜமானன். தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலை முடிந்ததும் தூக்கி எறிந்துவிடும் விதத்தில் சட்டத்தைப் பெற்றிருந்தனர். தொழிலாளர்களுக்கும் முதலாளிக்கும் இடையேயான உறவு சமமற்றவர்களுக்கு இடையேயான ஒப்பந்தமாகவே இருந்தது… சமூக நீதியின் வளரும் கருத்துக்கள் மற்றும் சமூக-பொருளாதார நீதியின் விரிவான அளவீடுகள் தொழிற்சாலைகளில் சமத்துவமற்ற பங்காளிகளுக்கு இடையே, அதாவது மூலதனத்தைக் கொண்டுவரும் முதலாளிகளுக்கும், தங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் முதலீடாகப் போடுகின்ற தொழிலாளர்களுக்கும் இடையேயிருந்திடும் சமத்துவமற்றப் போக்கினைச் சட்டத்தின்படி பாதுகாக்கவேண்டியது அவசியமாகும். … ஒப்பந்தம் இரு சமத்துவமற்ற நபர்களால் பேசித்தீர்க்கப்படக்கூடிய விதத்தில் அமைந்துவிடக் கூடாது. மாறாக அவை சட்டரீதியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு உருவான சட்டங்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் எவ்விதமான நடவடிக்கையும், தொழிலாளர்களை நூறாண்டு காலத்திற்குப் பின்னுக்குத் தள்ளிவிடும். இந்தச் சட்டங்களின் அரசமைப்புச்சட்ட லட்சியங்களை அடிக்கோடிட்டுத்தான், இந்தச் சட்டங்களுக்கு விதிவிலக்கு அளித்திட, கண்மூடித்தனமான அதிகாரங்களை (blanket powers) ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றம் வழங்கிடவில்லை. தொழிற்சாலைகள் சட்டம் 5ஆவது பிரிவு, மாநில அரசாங்கங்களுக்கு பொது அவசரநிலைக் காலத்தில் மட்டும் விலக்கு அளிப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது.  பொது அவசரநிலைஎன்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு அல்லது நாட்டின் எல்லையில் ஏதேனும் ஒரு பகுதியில், யுத்தம் அல்லது வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டில் இடையூறு, போன்று அச்சுறுத்தல் ஏற்பட்டு, கடுமையான அவசரநிலை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நாட்டின் பாதுகாப்புக்கு அப்படியெல்லாம் எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை. பொது நிறுவனங்களிலும்கூட வேலை நேரங்கள் அல்லது விடுமுறைகள் குறித்து விலக்கு அளிக்க முடியாது. தொழில் தகராறுகள் சட்டத்தின் 36-பி பிரிவு, அரசாங்கத் தொழில்நிறுவனங்களுக்கு, அவற்றுக்குப் புலனாய்வுகள் மற்றும் குடியேற்றங்கள் (settlements) ஏற்பட்டால் மட்டுமே விலக்கு அளிக்க வேண்டும், என்கிறது.
சட்டபூர்வமான ஆதரவு இல்லை
எனவே, மாநில அரசாங்கங்களின் உத்தரவுகள் நாட்டிலுள்ள சட்டங்களின் ஆதரவினைப் பெறவில்லை. தொழிலாளர் நலம் என்பது அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பொதுப் பட்டியலில் (concurrent list) இருக்கிறது. தொழிலாளர்நலச் சட்டங்களில் பல மத்தியச் சட்டங்களாகும். உத்தரப்பிரதேச அரசாங்கம், தொழிலாளர்நலச் சட்டங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிரயோகிக்கப்படாது என்று கூறியிருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஊதியங்கள், மகப்பேறு மருத்துவப் பயன்கள், பணிக்கொடைகள் முதலான அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்திடும் சட்டங்கள்கூட ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டிருக்கின்றன. எப்படி ஒரு மாநில அரசாங்கம், ஒரேவரியில் தடாலடியாக, மத்தியச் சட்டங்களை ரத்து செய்திட முடியும்?
அரசமைப்புச்சட்டம், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற சட்டங்களை செயலற்றதாக்கும்விதத்தில்,  மாநிலங்கள் பிறப்பிக்கும் அவசரச்சட்டத்திற்கு (ordinance) ஏற்பளிப்பு அளிப்பதற்கு வகைசெய்திடவில்லை.  தொழிலாளர் சம்பந்தப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் தற்போது பல சட்டங்களாலும், ஜனநாயகமுறையில் மேற்கொள்ளப்படும் பரஸ்பர விசாரணை மன்ற தீர்ப்புகளாலும்  நிர்வகிக்கப்படுகின்றன.  இவற்றில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் நடைமுறை சமத்துவம் (procedural equality) அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நடைமுறைகள்தான் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்கின்றன.
ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எதிர்) டி.ஜே. பகதூர் & இதரர்கள் (1980) தீர்வறிக்கையில், உச்சநீதிமன்றம், ஊழியர்களின் பணிநிலைமைகளில் எந்தவிதமான மாற்றங்களும் பேச்சுவார்த்தைகள் அல்லது சட்டத்தின் ஜனநாயக நடைமுறைகள் மூலம் மட்டுமே இருந்திட முடியும் என்று உயர்த்திப்பிடித்திருக்கிறது. மத்திய அரசாங்கம் போனஸ் இல்லை என மறுத்து ஒருதலைப்பட்சமானமுறையில் மேற்கொண்ட முயற்சியை நிராகரித்து, நீதிமன்றம் கூறியதாவது: அடிப்படை விழுமியங்களை நினைவுபடுத்திக்கொள்வதன் மூலமாக மட்டுமே அடிப்படைத் தவறுகளைத் தவிர்த்திட முடியும். fundamental errors can be avoided only by remembering fundamental values” என்றும், இல்லையேல், சட்டவிரோத இடைவெளியே (lawless hiatus) ஏற்படும் என்றும் கூறியிருக்கிறது.
மாநில அரசாங்கங்கள் பிறப்பித்துள்ள ஆணைகளும், அவசரச்சட்டங்களும் ஜனநாயகவிரோதமானவை மற்றும் அரசமைப்புச்சட்டத்திற்கும் எதிரானவைகளாகும். தொழிலாளர்களுக்கு இப்போது இருந்துவரும் நிலைமைகள் தொடர வேண்டும்.
உலக அளவில் இயங்கிடும் நிறுவனங்கள் காலனித்துவத்தின் கருவிகளில் தங்களுடைய மூலக்கூறுகளைப் பெற்றிருந்தன என்பதையும், அவர்களின் பாரம்பர்ய மரபு, சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய மூலதனத்தால் மரபுரிமையாகப்பெற்றவை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இத்தகைய காலனியகாலத்திய மனோபாவம் மீண்டெழுவது என்பது சமூகத்திற்கு ஆபத்தான ஒன்று, பலலட்சக்கணக்கான மக்களின் நலன்களுக்கும் எதிரானது, தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு இடர் ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினருக்கும் இடரினை ஏற்படுத்திடும்.
மூலதனத்திற்கும், தொழிலாளருக்கும் இடையே சமத்துவமற்ற கூட்டுபேர சக்தி உள்ள நிலையில், நாட்டில் உள்ள முறைப்படுத்தும் சட்டங்கள்தான் ஒருவிதமான எதிர்சமநிலையை அளித்து, தொழிலாளர்களின் கண்ணியத்தை உறுதி செய்கிறது. அரசாங்கங்கள், தொழிலாளர்களுக்கான வேலைகளில் மனிதாபிமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு உத்தரவாதம் செய்யவேண்டிய அரசமைப்புச்சட்டக் கடமையைப் பெற்றிருக்கின்றன. தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பலம், பொருளாதார அவசியத்தின் சக்திகளால் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது. இவ்வாறு தொழிலாளர் நலச் சட்டங்கள் நாகரிகமான லட்சியங்களைக் கொண்டவைகளாகும். கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியாளர்கள் அவற்றைத் துருப்புச்சீட்டுகளாகப் பயன்படுத்தக் கூடாது.
(கட்டுரையாளர்கள், மதராஸ் உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாகப் பயிற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள்.)
நன்றி: The Hindu
தமிழில்: ச.வீரமணி