Sunday, May 27, 2018

பாஜக மத்திய அரசாங்கத்தின் நான்காண்டுகள்: மோடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்: சீத்தாராம் யெச்சூரி





 சீத்தாராம் யெச்சூரி
பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக மத்திய அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மிகவும் தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறது.  அதாவது, அது 2014ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் – எந்த வாக்குறுதிகளை மக்களிடம் கூறி மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்ததோ – அவ்வாறு மக்களுக்கு அளித்த அந்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் - கிட்டத்தட்ட முழுமையாக அது துரோகம் செய்திருப்பதாகும். 
‘நல்ல காலம் பிறக்குது‘ என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது. வளர்ச்சியும், வளமும் நாட்டிற்கு வந்துசேரும் என்று உறுதிமொழி அளி அளித்தது. சுதந்திரத்திற்குப் பின்  கடந்த எழுபது ஆண்டுகளில் எவராலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு. நாட்டை உச்சத்திற்குக் கொண்டுசென்று ஒரு வலுவான நாடாக மாற்றுவோம் என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது.  “அனைவரும் ஒன்றுபட்டு, அனைவருக்குமான வளர்ச்சியை”யைக் கொண்டுவருவோம் என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது. இந்த முழக்கங்கள் அனைத்துமே எவ்வளவு உள்ளீடற்ற வெறுமையான முழக்கங்கள் என்பதைக் கடந்த நான்காண்டு காலம் காட்டிவிட்டது. அனைத்து உறுதிமொழிகளுக்கும் துரோகம் இழைத்து விட்டது.
கடந்த நான்காண்டுகளில், நாட்டின் மீதும் நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். கடந்த நான்காண்டுகளிலும் நான்கு முனைகளிலிருந்து மக்கள் மீது மிகவும் கொடூரமானமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதும் தொடர்கிறது.   (1) நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக்கட்டக்கூடியவிதத்தில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மிகவும் குரூரமானமுறையில் பின்பற்றி வருவதன் மூலமாகவும், (2) நம் நாட்டில் அனைத்து மக்களும் சாதி – மத – இன – மொழி வேறுபாடுகளுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் சமூக நல்லிணக்க வலைப்பின்னலை சுக்குநூறாகக் கிழித்தெறிந்திடக்கூடிய விதத்தில் மக்கள் மத்தியில் சாதி வெறியை, மத வெறியை, இன வெறியை, மொழி வெறியை உருவாக்கி வகுப்புவாதப் பதட்டநிலைமையைக் கூர்மைப்படுத்துவதன் மூலமாகவும், (3) நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், அரசமைப்புச்சட்ட அதிகார மையங்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் அனைத்துவிதமான தாக்குதல்களையும் ஏற்படுத்தியிருப்பதன் மூலமாகவும், மற்றும் (4) இந்தியாவின் அயல்துறைக் கொள்கையையும் நம் நாட்டின் இறையாண்மையையும்  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அதன்கீழ் முழுமையாகச் சரணாகதி அடைந்திருப்பதன் மூலமாகவும் – இவ்வாறு நான்கு முனைகளிலும் மக்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பது தொடர்கிறது. இவ்வாறு நம் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் மிகவும் கொடூரமானமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது.  
இவர்களின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்காலத்தில் பாதுகாத்திட முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறது.
மக்கள் மீதான பொருளாதாரத் தாக்குதல்கள்
நாட்டின் பொருளாதார அடிப்படைகளுக்கு வலுவாக இருந்தவற்றை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் (demonetization). பொருள்கள் மற்றும் சேவைகள் வரி என்னும் ஜி.எஸ்.டி. (GST) என்னும் இரட்டைத் தாக்குதல்கள் சின்னாபின்னமாக்கிவிட்டன. இவ்விரண்டும், மீளவும் இழந்த நம் பொருளாதாரத்தை மீட்கமுடியாத அளவிற்கு நம் பொருளாதாரத்தை அழித்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, பாதிக்குப் மேல் பங்களிப்பினைச் செலுத்திவந்த, வேளாண்மைக்கு அப்பால் உள்ள தொழில்களில்  (informal sector) ஈடுபட்டுவந்த அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த      முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் இன்றைய தினம் சின்னா பின்னமாகிக்  கிடக்கிறது. ஜிஎஸ்டியும் அது அமல்படுத்தப்பட்ட விதமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுத்து வந்த இந்தியாவின் நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களை கிட்டத்தட்ட முழுமையாக முடமாக்கி இருக்கிறது.
அந்நிய நேரடி முதலீடு நம் பொருளாதாரத்தின் அனைத்துத்துறைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கிட்டத்தட்ட இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தை கொல்லைப்புற வழியாக  முழுமையாகக் கைப்பற்றக்கூடிய விதத்தில் நுழைந்திருக்கிறது.  இந்தியாவில் சில்லரை வர்த்தகத்துறை நான்கு கோடிக்கும் மேலான மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை அளித்து வந்தது. இதன் பொருள், நம் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாரங்கள் பெரும் பன்னாட்டு நிறுவன  பகாசுரன்களால் இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதாகும். சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் சர்வதேச பகாசுரனான – வால்மார்ட் – இந்தியாவில் செயல்பட்டுவந்த ஃபிலிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதானது சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய மூலதன நுழைவினை சட்டபூர்வமானதாக மாற்றி இருக்கிறது.
நாட்டின் விவசாய நெருக்கடி மிகவும் அச்சந்தரத்தக்க அளவிற்கு மிகவும் மோசமாகி இருக்கிறது.  நாட்டுப்புற ஏழை மக்களின் உண்மை ஊதியம் ஜீவனாம்ச அளவைவிட மிகவும் கீழான நிலைக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நம் விவசாயிகளுக்கு விளைபொருள்களுக்கு, உற்பத்திச்செலவைவிட ஒன்றரைமடங்கு விலை நிர்ணயம் செய்து,  குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்போம் என்று ஆட்சியாளர்கள் அளித்திட்ட உறுதிமொழியை அமல்படுத்து மறுப்பது,  பல லட்சக்கணக்கான விவசாயிகளை தாங்கள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை மீளவும் திருப்பிச் செலுத்த முடியாமல் கடன்வலையில் சிக்கி,  வெளிவர முடியாது தற்கொலைப் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது.  பெரிய கார்ப்பரேட்டுகள் தாங்கள் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்திடும் அதே சமயத்தில், விவசாயிகள் வாங்கிய கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்திட மறுத்து வருகிறது.  அந்நிய மற்றும் உள்நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுத்துத் தந்திருப்பதன் காரணமாக, நாட்டில் மக்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அச்சந்தரத்தக்க அளவிற்கு வளர்ந்திருக்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார்கள், ஏழைகள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2017இல் நாட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் வளத்தில் 73 சதவீதம் நாட்டு மக்கள் தொகையில் வெறுமனே 1 சதவீதத்தினராகவுள்ளவர்களால் வளைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நாட்டின் வளங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கூட்டுக் களவாணி முதலாளித்துவம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.  11 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கார்ப்பரேட்டுகளால் பெறப்பட்ட கடன்கள், அநேகமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்கள், திருப்பி வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருக்கின்றன. ஒவ்வொரு அடிப்படைப் பொருளாதார ஆய்வுக் கருவிகளும் ஒன்று வீழ்ச்சியை அல்லது தேக்கநிலையைக் காட்டுகின்றன. இவ்வாறு, கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அரசாங்கம் மிகவும் மட்டரகமான முறையில் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதன் மூலமாக மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது.     
மதவெறி கூர்மைப்படுத்தப்படுதல்
மக்கள் மத்தியில் நிலவிவந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகத்தான பண்பின் மீது மதவெறித் தீயைத் தொடர்ந்து  விசிறிவிடுவதன் மூலம் தலித்துகள் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது கொலைபாதகத் தாக்கதல்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘பசுப்பாதுகாப்பு’ மற்றும் ‘ரோமியோ எதிர்ப்புக் குழுக்கள்’ என்ற பெயர்களில் தனியார் ராணுவங்கள் அமைக்கப்பட்டு,  இளைஞர்கள் மத்தியில் என்ன  சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும், யாருடன் நட்புகொள்ள வேண்டும் போன்றவற்றைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். மதவெறி நஞ்சு, நம் சமூகத்து மனிதர்களின் சிறப்பியல்புகளையே இழக்கும்படிச் செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இளம் சிறுமிகள் மிகவும் கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வுகள் இவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் மீது தாக்குதல்கள்   
நம் சமூகத்தில் மனிதர்களின் சிறப்பியல்புகளை இழக்கும்படிச் செய்திடும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், பகுத்தறிவாளர்கள் மீதான தாக்குதல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து மதவெறி அடிப்படையில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் மீதான தாக்குதல்களும் ஏவப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாற்றை, இந்து புராணங்களில் கண்டுள்ள சம்பவங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, ஆர்எஸ்எஸ் விரும்பும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற தெய்வ ஆளுகை சார்ந்த பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ஆக மாற்றுவதை ஏற்கச்செய்வதற்கான அடிப்படையிலேயே இவ்வாறு மதவெறியின் அடிப்படையில் மக்களின் சிந்தனையை மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய தாக்குதல்கள் இன்றைய இந்தியாவை அழித்துவிடும் என்பதை இன்றையதினம்  நாம்  அனைவரும் அறிவோம். அனைவரும் ஒன்றுபட்டு அனைவருக்குமான வளர்ச்சியைக் கொண்டுவருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, கடந்த நான்காண்டுகளில் இவர்கள் செய்ததெல்லாம், தலித்துகள் மற்றும் மதச்சிறுபான்மையினர் போன்றவர்களை இதர  மக்கள் திரளினரிடமிருந்து ஒதுக்கி வைத்திடும் விதத்தில் இந்துத்துவா தாக்குதல்களைத் அதிகரித்திருப்பதேயாகும்.    
அனைவருக்குமான வளர்ச்சியா?
கடந்த நான்காண்டுகளில் மத்திய அரசாங்கம் சமூகநலத்திட்டங்களுக்கு அளித்துவந்த செலவினங்களைக் கடுமையாக வெட்டிக்குறைத்திருப்பதையும் அதன்மூலம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நேரடியாகவே பாதிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மோடி  அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கான செலவினத்தை உயர்த்திடுவோம் என்று உறுதி அளித்தது. ஆனால், மாறாக, நடந்துள்ளது என்ன?  2014-15ஆம் ஆண்டில் 0.55 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 0.45 சதவீதமாக வீழ்ச்சி  அடைந்திருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட் சதவீத அடிப்படையில் பார்த்தோமானால், 2014-15இல் 4.1 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 3.6 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அளிக்கப்படும் என்று ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின்கீழ் படாடோபமாக தம்பட்டம் அடிக்கப்பட்டபோதிலும், எதார்த்த நிலைமைகள் இதற்கு நேரெதிராக இருக்கிறது. தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு, 2014-15இல் 10 ஆயிரத்து 892 கோடி ரூபாய்களாக இருந்தது, 2018-19ஆம் ஆண்டிற்கு 7 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.  அதாவது 36 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட  கழிப்பிடங்களில் பத்தில் ஆறில் தண்ணீர் வசதி கிடையாது என்று 2015-16ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு ஸ்தாபனத்தின்  ஆய்வறிக்கை காட்டியிருக்கிறது. இவ்வாறு இந்த முழக்கங்கள் அனைத்துமே தேர்தல்காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட ‘ஜும்லாஸ்’ (‘jumlas’) எனப்படும் பித்தலாட்ட வாக்குறுதிகளேயாகும்.
அதேபோன்றே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் போதுமானவை அல்ல. இவற்றில் மிகவும் மோசமானவை, தலித் மற்றும் பழங்குடியினரின் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளாகும்.  துணைத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் முற்றிலும் போதுமானவையல்ல.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
கடந்த நான்காண்டுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.  நாடாளுமன்ற நடவடிக்கைகளே  நகைப்புக்குரியவிதத்தில் செயலற்றதாகக் குறைந்துவிட்டது. அரசாங்கம் தான் செய்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்வதிலிருந்து  ஒதுங்கிக் கொண்டுள்ளது. முன்னெப்போதும் கேள்விப்படாத பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் விவாதத்திற்கு அனுமதித்திடவில்லை. மாநிலங்களவையின் கூர்ந்தாய்வுக்காக வருவதிலிருந்து தப்பித்திட வேண்டும் என்பதற்காக பல சட்டமுன்வடிவுகளை, நிதிச் சட்டமுன்வடிவுகளாக கடத்திச் சென்றுவிட்டனர். தேர்தல் ஆணையம்  போன்ற பல அரசமைப்புச்சட்ட அதிகாரக் குழுமங்கள் தங்களுடைய பங்களிப்புகளின் மூலமாக கேள்விக்குறியானவைகளாக மாறியிருக்கின்றன. இதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு, முன்னாள்  தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, மக்களின் முன் தேர்தல் ஆணையத்திற்குரிய நம்பகத்தன்மையைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். நாட்டிலுள்ள அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் அரசாங்கத்தின் அரசியல் அங்கமாகச்  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.     
பல்வேறுவிதமான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் அளிப்பதுடன் பணத்தை வாரி இறைப்பதன் மூலமும் பாஜக கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் பின்னர் பீகாரில் தேர்தல்களில் தோல்வி அடைந்தபின்னரும் அரசாங்கங்களை அமைப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
மக்களுக்குப் பதில் சொல்லும் விதத்திலும், ஊழலற்ற விதத்திலும்  அரசாங்கங்களை அமைப்போம் என்று அளித்த வாக்குறுதிகள்  அனைத்தும் முழுமையாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டன. இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்க உறுதிபூண்டிருக்கிறது என்று பிரதமர் அடிக்கடி வாய்கிழிய பேசியபோதிலும், இதுநாள்வரையிலும், 2013 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2014 ஜனவரியில் அறிவிக்கை அளிக்கப்பட்ட லோக்பால், லோக் அயுக்தா சட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்திடவில்லை. ஊழல் தடுப்புச்சட்டம் 2016இல் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலமாக பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றன.  ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்களைப் பாதுகாத்திடும் சட்டம் (The Whistle Blowers Protection Act) இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பலர் ஊழலைப் புரிந்த கயவர்களால் உயிர்களை இழந்துள்ளார்கள். மோடி அரசாங்கம் குறைதீர்க்கும் சட்டமுன்வடிவு (Grievance Redressed Bill),  தகவல் அறியும் உரிமைச் சட்டம் திருத்தப்பட்டு மீளவும் அறிமுகப்படுத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது. மத்திய தகவல் ஆணையத்தில் (Central Information Commission) மொத்தமே 11 ஆணையர்கள்தான். இதில் நான்கு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 2018இல்  அதன் தலைவர் உட்பட நான்கு பேர் ஓய்வு பெற்றுவிடுவார்கள். இவற்றின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவற்றதாக மாற்றிட அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகும்.
மோடி  அரசாங்கம், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் கடுமையான மாற்றங்களைச் செய்து, அரசியல் ஊழலை சட்டபூர்வமாக  மாற்றியிருக்கிறது. தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதுடன், பெரிய அளவிற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்குக் கணக்குச் சொல்வதற்குப் பதிலாக, அரசாங்கம் அவற்றை மூடிமறைத்திடும் விதத்தில் சட்டத்தை இயற்றியிருக்கிறது. இவற்றை இந்த அரசாங்கம் நிதிச்சட்டமுன்வடிவின் மூலம் நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. இதன் மூலமாக அரசியலில் பொதுவாகவும், தேர்தலில் குறிப்பாகவும்  பணத்தை வாரியிறைப்பதை சட்டபூர்வமாகவே மாற்றிவிட்டது.
நான்கு ஆண்டு கால அனுபவம்
இந்த பாஜக அரசாங்கம் தூக்கி எறியப்பட  வேண்டும். மக்களுக்கு  அது அளித்திட்ட எந்தவொரு வாக்குறுதியையும்  அது நிறைவேற்றாமல் துரோகம் செய்ததுமட்டுமல்லாமல், ஒரு வலுவான நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பையும் குழி தோண்டிப் புதைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில், நம் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்களையும் தொடுத்துள்ளது.  இவ்வாறு இந்த மோடி அரசாங்கம் மக்கள் விரோத  அரசாங்கமாகவும், அரசமைப்புச்சட்ட விரோத அரசாங்கமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு எல்லாவிதத்திலும், நாட்டு மக்கள் முன் உள்ள மிகவும் பிரதான முன்னுரிமை என்பது, இந்த அரசாங்கத்தின் கடைசி ஆண்டான வரவிருக்கும் இறுதி ஆண்டில், இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில், இதன் தாக்குதல்கள் அனைத்திற்கும் எதிராக, மக்களின் கிளர்ச்சிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பதேயாகும்.
 (தமிழில்: ச.வீரமணி)

Thursday, May 17, 2018

தீண்டாமை - தந்தை பெரியார்



தீண்டாமை
இந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமையைவிட சுயராஜியத்தை விட - பூரண சுயேச்சையை விட - காந்தி - இர்வின் ஒப்பந்தத்தைவிட - தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியது முக்கியமானது என்கின்ற விஷயம் கடுகளவு அறிவும் மனிதத் தன்மையும் உடையவர்களாகிய எவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் இப்போது அழுவாரற்ற பிணமாய், கேள்வி கேட்பாடு அற்று அலக்ஷியப் படுத்தப்பட்டு கிடக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் அவர்கள் அதாவது தீண்டப்படாதார் என்பவர்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு முயற்சி செய்து தங்கள் இழிவுகளையும் கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முயற்சிப்ப தையும் இந்தப்பாழும் சுயராஜியமும் பூரண சுயேச்சையும் என்கின்ற வெறும் வாய் வார்த்தைகள் தோன்றி பழையவைகளையே புலப்படுத்திக் கொள்ளவும் புதியவைகளை தலைகாட்டாமல் இருக்கவும் முயற்சி செய்வதன் மூலம் தடுத்து அழுத்தி வைக்கப்பட்டும் வருகின்றது. இந்த நெறுக்கடியான சமயத் தில் இந்தமுக்கியமான விஷயம் (தீண்டாமைக் கொடுமை விஷயம்) இக் கதியானால் இனி எப்போது தலையெடுக்க முடியும் என்பது நமக்கு விளங்க வில்லை.
இந்திய சுயராஜியத்திற்கு இன்று இந்து முஸ்லீம் விஷயம் தடை யாய் இருக்கின்றது என்று தேசீயக்காரர்கள் நீலிக்கண்ணீர்விட செய்தது எது என்று பார்த்தால் முஸ்லீம் சமூகத்தாருடைய கிளர்ச்சியும் அவர் களுடைய ஒற்றுமையும் பலமும் சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். ஆகவே அதை விட முக்கியமானதும் அவசியமானதும் மனிதத் தன்மை யானதுமான தீண்டாமை ஒழிக்கும் விஷயம் இந்து முஸ்லீம் “விசாரத்தில்” ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கவலைப்படுவதற்கு லாயக்கில்லாததாகப் போன தற்கு காரணம் தீண்டப் படாதார் என்பவர்களுக்குள் ஒற்றுமையும் பலமும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாததே காரணமாகும்.
சாதாரணமாக சுமார் 20 வருஷத்திற்கு முன்பு லக்னோவில் முஸ்லீம்களுக்கு சில உரிமையும், சீர்திருத்த திட்டத்தில் தனி வகுப்புவாரி பிரதி நிதித்துவ உரிமையும் கொடுத் தது போல் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் ஏதாவது வழி செய்து இருந்தால் இன்று அந்த சமூகத்திலும் 100க்கு இத்தனை பேர்கள் என்பதாக படிப்பிலும் உத்தி யோகத்திலும் சமூக வாழ்க்கையிலும் ஸ்தானங்கள் பெற்று இருந்து இந்தச் சமயத்தில் அவர்களும் மனிதர்கள் என்று மதிக்கப்பட்டு இந்திய பூரண விடுதலைக்கு திட்டம் வகுக்கும்போது அவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டிய காரியம் முக்கியமானதாக திரு. காந்தி அவர்களும், அவர்களையும் ஒரு சமூகமாக மதிப்பதாக காட்டிக் கொண்டாவது இருக்க முடிந்திருக்கும். அப்படிக்கு இல்லாததாலேயே “தீண்டப்படாதார் விஷயம் சுய ராஜியம் வந்த பின்பு சரியாய் விடும்” என்கின்ற ஒரே பேச்சில் முடிவடையவும் முடிந்துவிட்டது.
இவை ஒரு புறமிருக்க கராச்சி காங்கிரசில் புதிய சுயராஜியத்தில் ஏழை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வகுக்கப்பட்ட ஜீவாதாரமான உரிமைகள் என்பவையான 20 திட்டங்களில் தீண்டாமை விஷயமும் ஜாதி வித்தியாச விஷயமும் எப்படி காப்பாற்றப்பட்டிருக்கின்றது என்று பார்த் தால் அதில் உள்ள சூக்ஷியும் சாமார்த்தியமும் நன்றாய் விளங்கும். அது என்ன வென்றால், பிரஜா உரிமை முதலாவது தீர்மானத்தின் 6வது உட் பிரிவால் ‘ஜாதிவகுப்பு காரணமாக பொது உத்தியோகம், அதிகாரம், கௌர வம் தொழில் ஆகிய விஷயங்களில் எவ்வித வித்தியாசமும் கொள்ளக் கூடாது’ 7வது உட்பிரிவில் “பொதுகிணறு, பொதுவீதி, பொது இடம் ஆகியவைகளை உபயோகித்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு” என்பதாக குறிக்கப்பட்டிருக் கின்றது. இந்த இரண்டு தீர்மானங்களிலும் ஜாதியையோ தீண்டப்படாத வகுப்பு என்று சொல்லப்படுவதையோ ஒழிக்கும் எண்ணமோ, கவலையோ இல்லா திருப்பதை நன்றாய் உணரலாம்.
ஒரு சமயம் அதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமோ என்னமோ என்கின்ற எண்ணத்தின் மீதே திரு. சத்தியமூர்த்தி ஐயர் 15-ந்தேதி இந்து பத்திரிகையில் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது “பொது இடம் என்பதில் வகுப்பு பாத்தியமுள்ள பொது இடமும், தனிப்பட்ட வர்களால் விடப்பட்டபொது இடமும், கோயில் சம்மந்தப்பட்ட பொது இடமும் இதில் சம்மந்தப்பட்டதல்ல” என்றும் எழுதி இருக்கிறார். இவை மாத்திரமல்லாமல் தாழ்த்தப்பட்ட, கொடுமை செய்யப் பட்ட வகுப்புகள் என்பவைகளுக்கு மற்றவகுப்பார்களைவிட எவ்வித வித்தியாசமும் அதாவது தனிச்சலுகை எதுவும் காட்டப்படாது என்பதை வலியுருத்தியும் காட்டப்பட்டிருக்கின்றது.
ஆகவே இந்த கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி பார்த்தால் இப்போது அவர்களுக்குச் சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் தேர்தலிலோ, மற்ற வழிகளிலோ சம உரிமைபெற சில தனி ஏற் பாடுகள் செய்து இருப்பதும்கூட ஒழிக்கப்பட்டு விடவேண்டியதாகிவிடும்.
அது மாத்திரமல்லாமல் சட்டங்களிலும், ஆதாரங்களிலும் ஜாதியும், வகுப்பும் குறிக்கப்படவேண்டியதாகும் என்பதோடு அவற்றைப் பற்றி மதங்களில் உள்ள நிலைமையையே அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியதுமாகும். இதற்கு ஆகவே அதன் முந்திய பாகத்தில் மதநடு நிலைமையையும் அது சம்மந்தமான மனச்சாட்சியையும் வலியுறுத்தப் பட்டும் இருக்கின்றது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தீண்டாமை உண்டு, ஜாதி வித்தியாசமுண்டு, புனிதமான ஸ்தலங்கள் என்று கருதப்படுபவைகளில் எல்லா மக்களுக்கும் சம சுதந்திரம் கிடையாது. மற்றபடி யாருக்கும் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக தனிச்சலுகை காட்டப்பட மாட்டாது என்பதாகும். ஆகவே புதிய சுயராஜியத்தில் ஜாதி, வகுப்புக் கொடுமைகள் சட்டத்தின் மீதே தாண்டவமாடும். ஆனால், சுயராஜியமில்லாத அன்னிய ராஜியத் தில் அதாவது இப்போதய ராஜியத்தில் அநேக விஷயங்களில் ஜாதி, வகுப்பு வித்தியாசக் கொடுமைகள், பழக்கம்,வழக்கம்,மாமூல் என்பவை களையே பிரதானமாய் கொண்டு ஒரு விதத்தில் தாண்டவமாடி வந்தது. ஏதோ ஒரு விதத்தில் இப்போது தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற எண்ணமும், உணர்ச்சியும் பொது மக்க ளுக்குத் தானாகவே ஏற்பட்டு அவை அழிபடக்கூடிய நிலைமை ஏற்படுகின்ற காலத்தில் பூரண சுயேச்சையின் பேரால் மறுபடியும் ஜாதி, வகுப்பு, பேர்களும், ஆதாரங்களும் ஒரு மனிதன் மனசாட்சியை உத் தேசித்து சட்டத்தின்மூலம் நிலை நிறுத்தும்படியாக ஆயிருப்பது மிகுதியும் கண்டிக்கத் தக்கதேயாகும்.
இனி ஏற்படப்போகும் சுயராஜியத்தில் வரும் சமத்துவத்திற்கு ஒரு உதாரணம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் அதாவது, காங்கிரஸ் தீர் மானத்தின் பலனாய் நமது பெரியார்களும் எவ்விதத்திலும் குற்றம் சொல்ல முடியாதவர்களுமான ஆர்.கே.ஷண்முகம் (வைசியகுலம் என்று சொல்லப் படும்) அவர்களும், திரு. டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியன் (க்ஷத்திரிய குலம் என்று சொல்லப்படும் ) அவர்களும் திருச்செந்தூர் கோவில் எல்லைக்குள் போகக்கூடாது என்பது இன்னும் பலமாக நிலை நிறுத்தப் பட்டது என்பதேயாகும். “வைசியர்” “க்ஷத்திரியர்” குலங்களே இப்படி இருக்கும்போது இனி சுப்பப் பரையன், கருப்பன் சக்கிலி (“சண்டாள” குலம் என்பதைச் சேர்ந்தவர்களே) என்பவர்களின் நிலைமையைப்பற்றி பேச வேண்டுமா என்று கேட்கின்றோம்.
நிற்க, இதைப் படித்துப் பார்க்கின்றவர்களில் பலருக்கு இந்த நிர்ப்பந்தங்களானது தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கும், தீண்டப்படாத வகுப்பாருக்கும் தான் ஏற்பட்டவைகளே தவிர ‘ஜாதி இந்துக்கள்’ என்று சொல்லிக்கொள்ளப் படும் பார்ப்பனரல்லாத மக்களைப் பாதிக்காது என்று தோன்றக்கூடும், அப்படித் தோன்றுவது முட்டாள் தனமான தோற்றமேயாகும்.
“மதநடு நிலைமை” “மனசாக்ஷி” என்கின்ற இரண்டு வார்த்தைகள் பிரயோகப் படுத்தப்பட்ட பிறகு இந்து மதம் என்பதில் கண்டிப்பாய் “பிராமணன்”, “சூத்திரன்”, “பஞ்சமன்” என்கின்ற மூன்று பிரிவுகளும், அவை களுக்கு இப்போது அனுபோகத்திலும் மதச்சம்மந்தமான ஆதாரத்திலும்  உள்ள விஷயங்கள் நிலை நிறுத்தப்பட்டு, அவைகளின்படி அமுல் நடத்தப் படும் என்பதைக் கண்டிப்பாய் உணர்வார்களாக.
ஆகவே தீண்டாதார் எனப்படுவோரும், தாழ்த்தப்பட்ட மக்கள் எனப்படுவோரும் மற்றும் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதையோ சமத்துவமோ பெறவேண்டுமானால் “பூரண சுயேச் சையை”யே லட்சியமாய்க் கொண்ட இன்றைய காங்கிரசை நம்பிக் கொண்டிருந்தால் பெருமாள் மாறி பெத்தப்பெருமாளானகதையாகத்தான் முடியும். வட்டமேஜை மகாநாடாவது ஒரு விதத்தில் சூக்ஷி இல்லாமல் பேசவும், தைரியமாய் உண்மையை எடுத்துச் சொல்லவும் பயன்படக் கூடியதாக இருக்குமாதலால் அங்கு செல்லுகின்றவர்களாவது இவ் விஷயங்களில் ஜாக்கிரதையாய் இருந்து கவனித்தால் சிறிதளவாவது நமக்கு அனுகூலம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அங்கு மதசம்மந்தமான நடுநிலைமை மனசாட்சி ஆகியவைகள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
ஜாதி, வகுப்பு என்கின்ற பிரிவினைகள் ஏற்படுவதற்கு இடமில்லாமல் படிக்கு வாழ்க்கைத் திட்டங்களையும், ஆதாரங்களையும் ஏற்படுத்த வேண்டும். எந்த ஆதாரங்களிலும் ஜாதிக்கு கலமே இருக்கக்கூடாது. வருணாச்சிரம பட்டங்களும் பெயர்களுக்குப் பின் ஜாதிப்பட்டமோ, வகுப்புப் பட்டமோ இருக்கக்கூடாது. சிவில் கிரிமினல் சட்டங்களில் ஜாதிப் பிரிவு களுக்கும், வகுப்புப் பிரிவுகளுக்கும் இடமே இருக்கக் கூடாது என்பது போன்ற இன்னும் பல நிபந்தனைகளை வற்புறுத்தி இந்த சீர்திருத்தம் முதல் கொண்டாவது ஜாதி வகுப்புக் கொடுமையை அழித்து விடும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்தக் காரியத்தில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்தார் களேயானால் இந்தியாவைப் பல வகைகளிலும் பிடித்த எலும்புருக்கி வியாதி யானது அடியோடு ஒழிந்துபோகும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.04.1931

Sunday, May 13, 2018

மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது -சீத்தாராம் யெச்சூரி


மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது
-சீத்தாராம் யெச்சூரி
(லண்டனில் 2018 மே 5 அன்று மார்க்ஸ் 200:சர்வதேச மாநாட்டில் ஆற்றிய உரை)
காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக லண்டன் மாநகருக்கு உலகம் முழுதுமிருந்து மார்க்சிஸ்ட்டுகள், அறிவுஜீவிகள் வந்துகுழுமியிருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் சார்பாக, என் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ள அமைப்பாளர்களுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இறுதி அமர்வு “மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது” என்பது குறித்து விவாதித்திட திட்டமிட்டிருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சர்வதேச அளவில் மார்க்சியத்தை எப்படிக் கொண்டுசென்று கொண்டிருக்கிறோம் என்பதைச் சுருக்கமாக விளக்கிட விரும்புகிறேன்.
மார்க்சியம் தன்னிரகரற்றது. எப்போது எனில் அதன் நிகழ்ச்சிநிரல் முழுமையாக நிறைவேற்றப்படுகையில் மட்டுமே அது அனைத்தையும் விஞ்சி நிற்கிறது என்று நம்மால் கூற முடியும்.   அதன் நிகழ்ச்சிநிரலான ஒரு வர்க்கமற்ற கம்யூனிஸ்ட் சமுதாயத்தை அமைக்கும்போதுமட்டுமே, அவ்வாறு நாம் கூற முடியும். குறிப்பாக முதலாளித்துவத்தின் கீழ், முதலாளித்துவத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற மார்க்சிய சிந்தனையின் அடிப்படையில், அதனை நோக்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
முதலாளித்துவத்திற்குப் பிந்தைய சமூகத்திலும், மார்க்சியத் தத்துவம் மற்றும் அதன் உலகக் கண்ணோட்டம் சோசலிசக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதனைத் தொடர்ந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்வதற்குமான ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக தொடர்ந்திடும்.
மார்க்சியம் ஒரு வறட்டுச்சூத்திரமல்ல, மாறாக அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, இதர அனைத்தையும்விட.  ’“துல்லியமான நிலைமைகள் குறித்த ஒரு துல்லியமான ஆய்வின்” அடிப்படையில் அமைந்துள்ளதாகும்.  மார்க்சியம், பொதுவாக வரலாற்றை ஆய்வு செய்வதற்குமான, குறிப்பாக முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்குமான ஓர் அணுகுமுறையாகும்.  மார்க்சால் அளிக்கப்பட்ட அடித்தளத்தின் அடிப்படையில், இன்றைய சமூகநிலையைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தில் எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை  அறிந்துகொள்வதற்கும், நாம் நம்முடைய சிந்தனையை தொடர்ந்து வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.  அப்போதுதான், மார்க்சியம்  ஒரு மூடப்பட்ட தத்துவார்த்த சிந்தனை என்ற நிலையிலிருந்து,  தொடர்ந்து செறிவூட்டப்பட்டு ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்திடும். இவ்வாறு மார்க்சியம் ‘ஓர் ஆக்கபூர்வமான அறிவியலாக’ இருப்பதால்தான், மார்க்சியம் மட்டுமே மனித  சமூகம் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து அம்சங்கள் குறித்தும், அதன்  விளைவுகள் குறித்தும் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிப்போக்குகளின் திசைவழிகள் குறித்தும் சரியாக அடையாளப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் அதன் வளர்ச்சிப்போக்கும் – வான் இயற்பியலிலிருந்து நானோ தொழில்நுட்பம் வரை  (from astro physics to nano technology) – தர்க்கவியல் பொருள்முதல்வாதம் எவ்வளவு மிகச்சரியானது என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்திருக்கின்றன. இவ்வாறு மார்க்சியம் மட்டுமே நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கும் எவ்விதமான கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதனை மிகச்சரியான முறையில் எதிர்கொண்டு அதற்கு எதிராகப் போராடுவதற்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறது.
இன்றைய உலகம் – ஏகாதிபத்திய உலகமயம்
இரண்டாம் உலகப் போருக்குப்பிந்தைய காலகட்டத்தில், உலக முதலாளித்துவம் அமைதியான முறையில், பனிப்போர் காலத்தில், வளர்ச்சி அடைந்து, தன் மூலதனக் குவியலை அதீத உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.  மேலும் 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுக் காலத்தில்,  சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் தகர்ந்து அவை மீளவும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மாறிய பின்னர், இது மேலும் அதிகரித்தது. இவ்வாறு அதீதமான குவியல் சர்வதேச நிதி மூலதனத்தின் ஒருமுகப்படுத்துதலையும் உருவாக்கத்தையும் மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
ஏகாதிபத்தியத்தின் கட்டத்திற்குள்ளேயே, இன்றைய உலகமயத்தின் நடப்பு நிலையானது, மூலதனக் குவியலை சர்வதேச நிதிமூலதனத்தால் மேலும் உயர்நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இன்றைய தினம், சர்வதேச நிதி மூலதனம், மூலதனத்தின் தொழில்துறை மற்றும்  அனைத்து வடிவங்களையும் தன் வலைக்குள் சிக்க வைத்துக் கொண்டு,  தன் கொள்ளை லாப வேட்கையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து சர்வதேச நிதி மூலதனம் இப்போது தன் மூலதனக் குவியலையும் கொள்ளை லாப வேட்கையையும் உச்சத்திற்குக் கொண்டுசெல்வதற்காக, மக்கள் மீது புதிய தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
சர்வதேச நிதிமூலதனத்தின் கட்டளைகளுக்கிணங்க கொள்ளை லாப வேட்கைக்காக, உலகத்தை மாற்றியமைத்து, நவீன தாராளமயத்தை வரையறுத்திருக்கிறது. இதற்காக அது, முதலில், நாடுகளுக்கு அப்பால் மூலதனமும், பொருள்களும் இயங்குவதற்கு இருந்துவரும் தடைகளை நீக்குவதற்கான கொள்கைகளை இயக்குகிறது. வர்த்தக தாராளமயம், நாடுகளில் உற்பத்தி செய்துவந்த உள்நாட்டுத் தொழில் உற்பத்தியாளர்களை வேலையில்லாமல் செய்து, உள்நாட்டுத் தொழில் உற்பத்தியை குறிப்பாக வளர்முக நாடுகளில் அதிக அளவில் ஆபத்திற்குள்ளாக்கி இருக்கிறது.  மேலும்  உற்பத்தி மற்றும் வணிக நடைமுறைகள் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும்கூட, அந்நாடுகளையும் தாண்டி பிற நாடுகளுக்கும் செல்லும் விதத்தில்  மாற்றி அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக,  வர்த்தக தாராளமயம் நடைபெற்றிருக்கிறது. மேலும், மூலதனத்தின் தாராளமய நடவடிக்கைகள் பன்னாட்டு நிறுவனங்களை அனைத்து நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி சொத்துக்களையும் (இந்தியாவில் பொதுத் துறையில் உள்ள சொத்துக்களைப் போன்று) வாங்குவதற்கும் அனுமதித்திருக்கிறது. 
மூலதனக் குவியலை ஒருமுகப்படுத்திட மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் சர்வதேச நிதிமூலதனம் எடுத்திருக்கிறது. நிதிச்செலவினத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் அரசாங்க செலவினங்களுக்குக் கட்டுப்பாடுகளைத் திணித்திருக்கிறது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் மக்களின் தேவைகளின் சராசரி அளவு (aggregate demand) குறைந்திருக்கிறது. வளர்முக நாடுகளில் விவசாயிகளுக்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. உலக அளவில் சமூக சேவைத்துறைகளை அந்தந்த நாடுகளின் அரசுகள் மேற்கொண்டுவந்ததை ஒழித்துக்கட்டி இருக்கிறது. இதற்கு முன் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லாம் தனியாரிடம் தாரைவார்ப்பது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன்காரணமாக இவர்களின் கொள்ளை லாப வேட்கைக்கான வாய்ப்புவாசல்கள் மிகப் பெரிய அளவிற்குத் திறந்துவிடப் பட்டிருக்கின்றன. அறிவுச் சொத்துரிமைகள் மற்றும் ஏகபோகக் கட்டுப்பாட்டில் இருந்த இதர வடிவங்களும்  உற்பத்தி மீதான கட்டுப்பாடு மூலமாக அதீத லாபத்தை ஈட்டித்தரத் தொடங்கின. இவ்வாறு, தற்போதைய ஏகாதிபத்தியத்தின் புதியதொரு அம்சம் இதற்முன் இல்லாத அளவிற்கு சர்வதேச நிதி மூலதனத்தின் கொள்ளை லாப வேட்கைக்கு புதிய வாய்ப்புவாசல்களை வலுக்கட்டாயமாகத் திறந்துவிட்டிருக்கின்றன.
இவ்வாறாக முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதுமே, மூலதனக் குவியல் என்பது இரு வழிகளில் இடம் பெற்றிருக்கிறது. ஒன்று, மூலதன விரிவாக்கத்தின் காரணமாக, அதாவது அதன் உற்பத்தி நடைமுறையில் ஈடுபடுவதன் வாயிலாக,  இயல்பாகவே ஏற்படும் வளர்ச்சி. மற்றொன்று, வலுக்கட்டாயமாகவும் நிர்ப்பந்தம் மூலமாகவும் சூறையாடுதல் வாயிலாக ஏற்படுத்திக்கொள்வது.      இத்தன்மையைத் தான் மார்க்ஸ் மூலதனத்தின் துவக்க மூலதனக் குவிப்பு (primitive accumulation of capital) என்று வரையறுக்கிறார்.
துவக்க மூலதனக்குவிப்பு என்பது அடிக்கடி தவறானமுறையில் வியாக்கியானம் செய்யப்படுகிறது. அதாவது நவீனத்திற்கு எதிரான சொல்லாக ஈவிரக்கமற்றதன்மை உடையதாக, ஈவிரக்கமற்ற தன்மை (எதிர்) நவீனத்துவம் (primitive vs. modern) என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது. மார்க்சுக்கும், எனவே மார்க்சிஸ்ட்டுகளுக்கும் துவக்க மூலதனக்குவிப்பு என்பது ஒரு பகுப்பாய்வு வகையினமாகும். அது மூலதனத்தின் இயல்பான இயங்குவியலுடன் தொடர்ந்து இருந்துவருவதாகும். கடந்த காலங்களில் துவக்க மூலதனக் குவிப்பின் செயல்முறைகள்  நேரடிக் காலனிமயமாக்கல் உட்பட பல்வேறு வடிவங்களில் நடந்திருக்கின்றன. துவக்க மூலதனக்குவிப்பின் மூர்க்கத்தனம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்,  வர்க்க சக்திகளின் சர்வதேசத் தொடர்பினை நேரடியாகச் சார்ந்தே இருந்து வருகிறது. அது முதலாளித்துவத்தின் கொடூரத்தன்மையை அனுமதிக்கிறது அல்லது  தடுக்கிறது. இன்றைய ஏகாதிபத்திய கால கட்டத்தில், துவக்க மூலதனக்குவிப்பின் கொடூரத்தன்மையின் செயல்முறைகள் உக்கிரமடைந்து,  உலக மக்கள் தொகையில் வளர்முக நாடுகளில் உள்ள மக்கள் மீது மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதீத லாப வேட்கைக்கான இத்தகைய முதலாளித்துவத்தின்  கொள்ளையடிக்கும் குணம் உலக அளவிலும், ஒவ்வொரு நாட்டிலும் மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மையைக் கூர்மையான முறையில் விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், உலகத்தில் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் ஏழை மக்களில் பெரும்பகுதியினரை மிகப்பெரிய அளவிற்கு வறுமைக்குழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. பொருளாதார அமைப்பின் நடப்பு நெருக்கடியின் ஒவ்வொரு கட்டத்திலும், முதலாளித்துவம் அதனை மீட்க மேற்கொண்டிடும் ஒவ்வொரு முயற்சியும், மேலும் ஆழமான நெருக்கடியின் புதிய கட்டத்தை நோக்கி இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில், அதுதான் முதலாளித்துவ வளர்ச்சிக்கான  சட்டவிதிகளின் இயற்கையான குணமாகும்.
நவீன தாராளமயத்தின் நெருக்கடி – வலதுசாரி அரசியல் பெயர்வு
தற்போது, உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட பின்னர் கடந்த பத்தாண்டுகளில், நவீன தாராளமயமும் தற்போது நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இப்போது உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்களுக்கு, இது தெள்ளத்தெளிவாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவில் ரீகனும், கிரேட் பிரிட்டனில் தாட்சரும் வருவதற்கு முன்பே அந்நாடுகளிலிருந்த பொருளாதார நிலைமைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சியில் பெருமளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் கொழிக்கவும், மீதமுள்ள பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடக்கூடிய நிலைமையை உருவாக்கவும் இட்டுச்சென்றன.  இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர்,  முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் ஆற்றல் மிகு வளர்ச்சியைக் கண்டது. இது முதலாளித்துவத்தின் பொற்காலம் (Golden Age) என்று வர்ணிக்கப்படுகிறது. அமெரிக்காவில், 1948 – 1972 கால கட்டத்தில், அமெரிக்க மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவினருமே தங்களின் வாழ்க்கைத்தரத்தில் உயர்வு ஏற்பட்டதை உணர்ந்தனர். எனினும், 1972க்கும் 2013க்கும் இடையே,  மேல்தட்டில் உள்ள 10 சதவீத மக்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த அதே சமயத்தில், அடித்தட்டில் உள்ள 10 சதவீத மக்கள் தங்கள் உண்மையான வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்தனர். நடுத்தர மக்களில் ஆண் தொழிலாளர்களின் உண்மையான வருமானம் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட குறைவாகவே இருந்தது.  அடித்தட்டு மக்களில் 90 சதவீதத்தினரின் வருமானம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித உயர்வும் இல்லாமல் தேக்க நிலையில் நீடித்து வருகிறது. சராசரியாக, உயர்வருமானப் பொருளாதார நிலையிலிருந்த குடும்பங்களில் 65 முதல் 70 சதவீதத்தினர்  2005க்கும் 2014க்கும் இடையே தங்களுடைய உண்மையான வருமானங்களில் தேக்க நிலை அல்லது வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அனுபவரீதியாக உணர்ந்தனர். 2000 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி (Gallup Poll), அமெரிக்கர்களில் 33 சதவீதத்தினர் தங்களைத் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். 2015ஆம் வாக்கில் இது 48 சதவீதமாக, அதாவது மக்கள் தொகையில் பாதி அளவாக உயர்ந்தது. உலக மக்கள் தொகையில் பெரும்பான்மைப் பிரிவினரின் வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வின் மிக மோசமாகவுள்ள ஏற்றத்தாழ்வு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிருப்தியை உருவாக்கி, இதனைப் போக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் தீர்வு தேவை என்கிற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.
நவீன தாராளமயத்தின் நெருக்கடி புதிய முரண்பாடுகளை உருவாக்கி, ஏகாதிபத்திய நாடுகளிடையே நட்புமுறிவுகளையும் மோதல்களையும் உருவாக்கி இருக்கிறது.    ஐரோப்பிய யூனியனிலிருந்து கிரேட் பிரிட்டன் வெளியேறியது  (Brexit) இதைத்தான் காட்டுகிறது. புதிய அரசியல் சக்திகள் உருவாவதும், பதட்ட நிலைமைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாகிவிட்டன.
நடப்புக் காலத்தில் உலகின் பல பகுதிகளில் அரசியலில் ஒரு வலதுசாரிப் பெயர்வு  ஏற்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் காரணமாக ஏகாதிபத்தியம்  உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய உலக அளவிலான பிளவுவாத நிகழ்ச்சிநிரலுடன் நவீன தாராளமயக் கொள்கையை மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. தன் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் ஒருமுகப்படுத்திக்  கொள்வதற்காகவும் மேற்காசியாவில் உள்ள எண்ணெய் வளங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் இராணுவத் தலையீடுகளில் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக நிறவெறி, இனவெறி, பிராந்திய வெறி,  அயல்நாட்டினர் மீதான வெறி, மதவெறி, சாதி வெறி மற்றும் அதிதீவிர வலதுசாரி நவீன பாசிச வெறிப் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.  அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி, பிரிட்டனில் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் வலதுசாரிகள் அணிதிரண்டமை, பிரான்சில் அதிதீவிர வலதுசாரி தேசிய முன்னணியின் மாரின் லீ பென் (Marine Le Pen) தேர்தலில் ஆதாயங்கள்  அடைந்தது, ஜெர்மனியில்  டச்சுலாண்டுக்கான மாற்று என்னும் இயக்கம் முன்னேறிக் கொண்டிருப்பது, ஆஸ்திரியாவில் அதீதீவிர  சுதந்திரக் கட்சி (Freedom Party)யுடன் சேர்ந்துகொண்டு வலதுசாரி அரசாங்கம்  அமைந்தது, ஐரோப்பிய யூனியனில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக இருப்பது முதலானவை இவ்வாறு உலக அளவில் அரசியலில் வலதுசாரிப் பெயர்வு ஏற்பட்டிருப்பதன் பிரதிபலிப்பாகும். இத்தகைய போக்கு, இந்திய அரசியலிலும் பிரதிபலித்திருப்பதைக் காண முடியும்.
உலகப் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை அணிதிரட்டித் தலைமை தாங்குவது யார் என்பதில் வலதுசாரிகளுக்கும் மற்றும் இடதுசாரி,  முற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான அரசியல் போராட்டத்தில் வலதுசாரிகளே பல நாடுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  பல நாடுகளில் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவாகாததே இதற்குக் காரணமாகும். மக்களின் அதிருப்தியை இந்த வலதுசாரி சக்திகள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளன.  ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அதே பொருளாதாரக் கொள்கைகளை இவர்கள் மேலும் மூர்க்கத்தனமாக பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு துன்பதுயரங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இதன்காரணமாக ஆட்சிக்குப் புதிதாக வந்தவர்கள்மீதும்  அதிருப்தி அதிகரித்துள்ளது. வரவிருக்கும் நாட்களில், உலகில் பல  நாடுகளின் அரசியல் திசைவழி மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்குத் தலைமை தாங்குவது யார் என்பது தொடர்பாக,  இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையேயான போட்டியில், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதிலேயே அடங்கி இருக்கிறது. 1929-30களில் மாபெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஏற்பட்ட சமயத்தில் உலக ஏகபோக மூலதனத்தின் ஆதரவுடன்  பாசிசம் தலைதூக்கியது. மக்கள் மத்தியில் நிலவிய அதிருப்தி உணர்வை பாசிசம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் அதேபோன்றே தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி உணர்வு, அதிதீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிஸ்ட் சக்திகள் தலைதூக்குவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடியின் இன்றைய நிலைமைகளில், சோசலிசத் தத்துவம் மட்டுமே மனிதகுலத்தை அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் விடுவித்திட முடியும். உலகப் பொருளாதார மந்தம்  ஏற்பட்ட 2008இலிருந்தே, உலக முதலாளித்துவம்  ஒரு நெருக்கடியிலிருந்து மீண்டு மற்றொரு நெருக்கடிக்குள் வீழ்ந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அது மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் ஓர் ஆழமான நெருக்கடிக்குள்ளாகும் விதத்தில் அதனை மாற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் மீதான முதலாளித்துவ சுரண்டல் உக்கிரமடைவதன் காரணமாக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரச் சுமைகளை  ஏற்க வேண்டியிருப்பதும் அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இவற்றின் விளைவாக உலக மக்களிடையே பெரும்பாலான மக்களுக்கும், இதர விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கும் இடையேயான பொருளாதார சமத்துவமின்மை  மிகவும் கூர்மையாக விரிவடைந்துகொண்டிருக்கிறது.  முதலாளித்துவத்தின் கொள்ளை லாப வெறி முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது. முதலாளித்துவத்திற்குள் இருந்துகொண்டு மேற்கொள்ளப்படுகிற எவ்விதமான சீர்திருத்தத்தாலும் மனிதகுலத்தை அதன் சுரண்டலின் பிடிகளிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசத்திற்கான அரசியல் மாற்று ஒன்றினால் மட்டுமே அதனை எய்திட முடியும். சோசலிசத்திற்கான அரசியல் மாற்றால் மூலதன ஆட்சியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை அதன் சுரண்டலிலிருந்து முற்றிலுமாக விடுவித்து மனிலகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்தை உருவாக்கும் விதத்தில் நாம் உக்கிரப்படுத்த வேண்டியதிருக்கிறது.
முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி எவ்வளவுதான் உக்கிரமானதாக இருந்த போதிலும், அது எப்போதுமே  தானாக நிலைகுலைந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடும் விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, முதலாளித்துவம் மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன்மூலம் சீரானமுறையில் ஜீவித்துக்கொண்டிருக்கும். எனவே, சோசலிஸ்ட்  அரசியல் மாற்று வலுப்படுத்தப்பட்டு வளர வேண்டியது அவசியமாகும். தற்போது முதலாளித்துவத்தின் கொள்ளைக்கு எதிராக உலகம் முழுதும் உள்ள மக்கள் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்றாலும், இவை இன்றையநிலையில் தற்காப்பு நிலையில் (defensive)தான் இருந்து வருகின்றன. தற்காப்பு நிலை என்று ஏன் சொல்கிறேன் என்றால், மக்கள் தாங்கள் தங்கள் போராட்டங்கள் மூலமாகப் பெற்றிருந்த ஜனநாயக உரிமைகளையும், வாழ்வாதார நிலைமைகளையும் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன. இது மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக வர்க்கரீதியான தாக்குதல் தொடுக்கக்கூடிய அளவிற்கு இத்தகையப் போராட்டங்கள் அதிகரித்திட வேண்டும்.   
எனவே, மூலதனம், தூக்கி எறியப்படுவது என்பது, தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படக்கூடிய சமூகத்தின்  வர்க்கப்படை வலுப்படுத்தப்படுவதையே தீர்மானகரமான முறையில் சார்ந்திருக்கிறது.  மக்கள் போராட்டங்கள், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக அரசியல் தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் வர்க்கப் போராட்டமாக  உக்கிரமடைந்திட வேண்டும்.  இத்தகைய தொழிலாளி வர்க்கப்படையைக் கட்டுவதும், அதனை வலுவானதாக மாற்றுவதும் ‘அகக் காரணி’ (‘subjective factor’) யாகும். அகக் காரணியை வலுப்படுத்த வேண்டியது இன்றியமையாததும் முக்கியமானதுமாகும். புறக்காரணி (objective factor), நெருக்கடியின் துல்லியமான நிலைமை, புரட்சிகர முன்னேற்றத்திற்கானதாக எவ்வளவுதான் உகந்ததாக இருந்தாலும்,  ‘அகக் காரணி’யை வலுப்படுத்தாமல், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனை ஒரு புரட்சிகரமான தாக்குதலாக மாற்றிவிட முடியாது.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் துல்லியமான நிலைமைகளுக்கு ஏற்ப துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையில், தொழிலாளி வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறுவிதமான இடைக்கால முழக்கங்கள், நடவடிக்கைகள் மற்றும் உத்திகள் உருவாக்கப்பட்டு, வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திட வேண்டும், ‘அகக் காரணி’யை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் உண்மையான நிலைமைகளின் சவால்களை எதிர்கொண்டிட வேண்டும். இவ்வாறு,  ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளி வர்க்கம் தங்கள் நாடுகளில் புரட்சிகரமான மாறுதலுக்கான செயல்முறையில் முன்னேறிட வேண்டும். மக்கள் மத்தியில் அரசியல் சக்திகளின் சேர்மானம் இடதுசாரிகள் பக்கம் திரும்ப வேண்டும். இது, நவீன தாராளமயத்திற்கு எதிராக மாற்றுக் கொள்கையின் அடிப்படையில்  தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் மட்டுமே, நடந்திடும்.
மார்க்சியம் மட்டுமே இன்றைய தினம் ‘அகக் காரணி’யை வலுப்படுத்துவதற்கான தத்துவார்த்த அடித்தளங்களை அமைத்துத்தருகிறது.  அதன்மூலம் வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, முதலாளித்துவம் தூக்கி எறியப்படும்வரை, இன்றைய உண்மையான உலகத்தை மாற்றுவதற்கு, மனிதனை மனிதன், நாடுகளை நாடு சுரண்டுவதிலிருந்து  முற்றுப்புள்ளி வைத்திடுவதற்கு, மார்க்சிசம் தான் வீர்யம் மிக்க ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)




Thursday, May 10, 2018

ஜனரஞ்சக தேசியவாதம் : இந்தியப் பின்னணி: சீத்தாராம் யெச்சூரி



(தோழர் சீத்தாராம் யெச்சூரி, லண்டனில் 5.5.2018 அன்று ஆற்றிய உரை)
‘தேசியவாதம்’ மற்றும் ’ஜனரஞ்சகம்’ என்கிற இரு சொற்களுமே எண்ணற்ற வியாக்கியானங்களை அளிக்கக்கூடிய சொற்றொடர்கள்தான். இவ்விரு சொற்களின் பொருள்கள் குறித்தும் சண்டையிடக்கூடிய அளவிற்கான விவாதங்களை நான் முன்வைக்கப் போவதில்லை. மாறாக, இந்தியாவின் இன்றுள்ள பின்னணியில் ஜனரஞ்சகமான தேசியவாதம் (Populist Nationalism) எப்படி தலைதூக்கி இருக்கிறது என்பதைச் சுருக்கமாக விவாதிக்க விரும்புகிறேன். இது, இந்தியாவின் எல்லைகளைக் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திடும் என நம்புகிறேன்.
முதலாளித்துவ உலகில், முதலாளித்துவ (பூர்ஷ்வா) தேசியவாதம் என்பது எப்போதுமே முதலாளிகளின் நலன்களை மேம்படுத்துவதுதான். முதலாளிகள் ஆளும் வர்க்கமாக இருக்கும் வரையிலும், தேசியவாதம் என்பதுதான் நாட்டுப்பற்று என்று அழைக்கப்படும். அதே சமயத்தில்,  ஜனரஞ்சகம் என்பது தங்களின் அரசியல் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய விதத்தில், தங்களின்  ‘பொய்யான உணர்வு’க்கு ஒத்துப்போகக்கூடிய விதத்தில் மக்களின் உணர்வுகளை மாற்றியமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும். முதலாளித்துவத்தின் கீழ், ஜனரஞ்சக தேசியவாதம் என்பது இவ்வாறு முதலாளிகளின் நலன்களை முன்னெடுத்துச்  செல்லும் அதே சமயத்தில், தங்களுடைய ஜனரஞ்சகக் குறிக்கோளின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைப்பதற்குத் தேவைப்படக்கூடிய விதத்தில் ஒருசில குழுக்களின் நலன்களை முன்னெடுத்துச் சென்றிட முயற்சிப்பதும் ஆகும். இவ்வாறு ஜனரஞ்சக தேசியவாதம் என்பது இவ்விரு குறிக்கோள்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
தேசியவாதம்
நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்தின் கட்டத்திலிருந்து மனிதகுல நாகரிகம் முன்னேறிய காலத்தில் தேசிய அரசுகள் தோன்றின.  இந்தக் கால கட்டத்தில் ஐரோப்பாவிலும் தேவாலாயத்திலிருந்து அரசைத் தனியே பிரிப்பதற்கான போராட்டம் நடைபெற்றது.  நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கி எறிந்து முதலாளித்துவம் வெற்றி பெற்றதென்பது, மனிதகுல நாகரிகங்கள் மன்னர்களாலும், மாமன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட சமயத்தில் அவர்கள் அனைவரும் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கிற மாயையிலிருந்து  மக்களை விடுவிப்பதிலும்,  அரசியல் அதிகாரத்தைத் தங்கள் வசம் ஈர்த்துக்கொள்வதிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றது. வெஸ்ட்பாலியாவின் ஒப்பந்தங்கள் 1648இல் கையெழுத்தாகி, நாடுகளின் இறையாண்மை தொடர்பான விதிகள் உருவானதைத் தொடர்ந்து, நாடுகளின் இறையாண்மைக் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச அளவிலான சட்டங்களும், சர்வதேச அமைப்பும் மிக விரிவான அளவில் நிறுவுவதற்கான வேலைகள் நடைபெற்றன. நாடுகளுக்கு இடையே சமத்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும், ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் போன்ற கொள்கைகள் வகுக்கப்பட்டன. இவற்றை வெஸ்ட்பாலியன் அமைப்பு என்றே அனைவரும் குறிப்பிட்டார்கள். வெஸ்ட்பாலியன் அமைதி குறித்து 1644க்கும் 1648க்கும் இடையே ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இவற்றால் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்தான் இன்றளவும் சர்வதேச சட்டங்களின் அடிப்படைகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
இரண்டாம் உலகப்போரில் பாசிசம் முறியடிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலனிய நாடுகள் விடுதலை பெற்றுவந்த சமயத்தில், காலனிய நாடுகளில் விடுதலைக்காக மக்கள் நடத்திய போராட்டங்கள் சுதந்திரம் அடைந்த பல நாடுகளின் பண்புகளையே உருக்குபோன்று வீரஞ்செறிந்தமுறையில் மாற்றி அமைத்தன.  இந்தியா உட்பட  காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்நாடுகளில் நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டங்கள்தான் இந்நாட்டு மக்களின் போர்க்குணமிக்க பண்புகளையும் உருவாக்கின.
‘இந்தியா என்னும் சிந்தனை’  (‘Idea of Nation’)உருவான வரலாறு
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான மகத்தான மக்கள் போராட்டத்தின் வாயிலாகவே ‘இந்தியா என்னும் சிந்தனை’ உருவானது. ‘இந்தியா என்னும் சிந்தனை’ என்றால் என்ன? சுருக்கமாகச் சொல்வது என்றால், இந்தியா பல்வேறு வேற்றுமைகளுடன் கூடிய தேசிய இனங்களைக் கொண்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் தாண்டி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே சிந்தனையினராக,  ஒரே நாட்டினர் என்ற உணர்வோடு முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் வெஸ்ட்பாலியன் அமைதிக்குப் பின்னர் உருவான ப் போக்கை முழுமையாக மறுக்கும் விதத்தில் இது அமைந்திருந்தது. 
இப்போது, இவ்வாறு உருவாகியுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக நவீன இந்தியக் குடியரசைத் தங்களுடைய சித்தாந்தமான ‘இந்து ராஷ்ட்ரம்’ –ஆக மாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஆர்எஸ்எஸ்/பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வெஸ்ட்பாலியன் மாடலுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறது. அதாவது நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களுக்கு மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள், குறிப்பாக முஸ்லீம்கள் (இவர்களை இந்தியாவிற்குள்ளேயே இருக்கின்ற வெளிநாட்டு எதிரிகள் என்று அது வர்ணித்துக்கொண்டிருக்கிறது) தங்களுக்குக் கீழ்ப்பட்டு வாழ்ந்திட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக இப்போதுள்ள “இந்திய தேசம்” என்பதை “இந்து தேசியவாதம்” என்று மாற்றியமைத்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், இவர்கள் கூறும் ‘பெரும்பான்மைவாதம்’ என்பது, அதாவது ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்பது, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக இந்திய மக்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா என்னும் சிந்தனை’யையே முற்றிலுமாக மறுதலித்திடும், ‘ஒரு புதுவிதமான அரசியல் உளவியல்’ ஆகும்.
ஆர்எஸ்எஸ்/பாஜக சிந்தனையாளர்கள் ‘இந்தியா என்கிற சிந்தனை’யையே தள்ளுபடி செய்கின்றனர்.  இதன்மூலம் அவர்கள் இந்திய மக்களின் சுதந்திரப் போராட்ட சகாப்தத்தையே மறுதலிக்கின்றனர். வெஸ்ட்பாலியன் ‘தேசியம்’ என்கிற கருத்தாக்கத்திலிருந்தும் இந்திய மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திலிருந்தும்தான் இந்திய தேசியம் என்கிற கருத்தாக்கம் உருவானது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக, விடுதலை கோரி  நடைபெற்ற மகத்தான மக்கள் போராட்டத்திலிருந்து உருவான இந்திய தேசியம் (‘இந்தியா என்கிற சிந்தனை’) என்பதையே ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் நிராகரித்திடவும், தங்களுடைய இந்திய (இந்து) தேசியம் என்பதை முன்னிறுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.    நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள அகீல் பில்கிராமி, “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் ஒன்றுபட்ட, உறுதியான, அளப்பரிய அணிசேர்க்கை என்பது இந்தியர் அனைவரும் ஒன்று என்கிற மாற்றுச் சிந்தனை மற்றும் ஒன்றுபட்டச் சிந்தனையில்லாமல் சாத்தியமாகி இருக்காது,” என்று உறுதிபடத் தெரிவித்தார்.  
இந்தியாவின் வேற்றுமை – மொழி, மதம், இனம், கலாச்சாரம் போன்றவை – உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில்,  அவை அனைத்தையும்விட பரந்த, விரிந்த ஒன்றாகும். இந்தியாவில் குறைந்தபட்சம் 1,618 மொழிகள், 6,400 சாதிகள், பெரிய அளவில் 6 மதங்கள் (இவற்றில் நான்கு இம்மண்ணிலேயே உருவானவைகளாகும்), இருப்பதாக அதிகாரபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.    மானுடவியலின்படி ஆறு விதமான இனக் குழுக்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான் ஒரே நாடு என அரசியல்ரீதியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பின் காரணமாகத்தான் இந்தியா 29 பெரிய அளவிலான மதக் – கலாச்சார விழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள நாடுகளிலேயே பண்டிகைகளுக்காக அதிக விடுமுறைவிடும் நாடாகவும் இந்தியா அநேகமாக இருந்து வருகிறது. 
இவ்வாறு பல்வேறு வேற்றுமைகொண்ட மக்களையும் ஒருங்கிணைத்தவர்கள் பிரிட்டிஷார் என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தை மதரீதியாக இரு நாடுகளாகப் பிரித்ததன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்ட நாட்டுப்பிரிவினைக்கு வழிவகுத்ததும் இதே பிரிட்டிஷார்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.   பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இவ்வாறு கறைபடிந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள்தான். பிரிட்டிஷ் காலனியாதிக்கம், எண்ணற்ற நாடுகளில் – இந்தியா மட்டுமல்லாது, ஆப்ரிக்காவில் சைப்ரஸ் மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இவர்கள் இவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தி விட்டுச் சென்ற காயங்களின் ரணம் இன்னமும்  ஆறாமல் தொடர்கின்றன எனில் அதற்கு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் அவமானகரமான வரலாற்றுப் பாரம்பர்யம்தான் முக்கியமான காரணமாகும்.  சுதந்திரத்திற்காக இந்திய மக்கள் தங்கள் வேற்றுமைகளையெல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு ஒன்றுபட்டு நின்று போராடியதன் காரணமாகத்தான் பிரிட்டிஷ் இந்தியாவில் மட்டுமல்ல, 600க்கும் மேற்பட்டிருந்த மன்னர் சமஸ்தானங்களில் வாழ்ந்துவந்த மக்களும் ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் போராடித்தான் இன்றைய இந்தியர் என்கிற உணர்விற்கு – நவீன இந்தியாவிற்கு – வடிவம் கொடுத்தவர்களாவார்கள்.
தேசியவாதம்:
சர்வதேச நிதிமூலதனத்தின் சேவையின் கீழ், ‘தேசம்’ (Nation) என்கிற வெஸ்ட்பாலியன் வரையறைகள், வர்த்தகமய முதலாளித்துவம் (mercantile capitalism) உயர்ந்தோங்கியிருந்த காலகட்டத்தில்தான் பூர்ஷ்வா முதலாளித்துவத்துடன் (bourgeois nationalism) தன்னை இணைத்துக்கொண்டு எழுந்தது.   ஒரு ‘நாட்டில்‘ உள்ள  அபரிமிதமான செல்வவளத்தைச் சூறையாடுவதன் மூலமும், தொடர்ந்து  நாட்டிலுள்ள தங்கள், வைரங்கள், மற்றும் இதர  கனிம வளங்களை  அடிமை உழைப்பாளர்களைக் கொண்டு, நேரடியாகவே சூறையாடுவதன் மூலமும்,  தங்களுடைய ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கான வழிமுறைகளாகத்தான் இவர்கள் ‘தேசியவாதம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்து கிறார்களேயொழிய, அந்நாட்டிலுள்ள மக்களில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை முன்னேற்றுவதற்கும் இதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.  இவர்களால் ‘தேசம்’ என்பது மக்களுக்கும் மேலான ஒன்று என்கிற முறையில் சித்தரிக்கப்படுகிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், ஓர் ஏகாதிபத்தியம், மற்றொரு ஏகாதிபத்தியத்துடன் போர் தொடுக்கும் சமயத்தில் தங்கள் சார்பாக மக்களை அணிதிரட்டுவதற்காக இந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொள்கிறது. போராடும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், தங்கள் சக தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி கொன்றுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ‘தேசம்’ என்கிற சொல்லை, மக்களுக்கு மேலானதாக, தங்கள் “செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான” ஒன்று என்ற முறையில்தான்  “முதலாளித்துவ தேசியவாதம்” (“பூர்ஷ்வா தேசியவாதம்”) என்ற சொற்றொடர் இருந்தது, இப்போதும் இருந்து வருகிறது.  
சர்வதேச நிதி மூலதனத்தின் உலக அளவிலான ஆட்சி மற்றும் தாக்குதல் காரணமாக,  முதலாளித்துவ தேசிய வாதம்.  மக்களில் பெரும்பாலோருக்கு வறுமையைத் திணித்து, சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை மேம்படுத்துகிறது. ‘தேசியவாதம்’ என்ற பெயரில்  இந்தியா போன்ற நாடுகளில்  ஜனநாயகக் கட்டமைப்புக்குள்ளேயே, நவீன தாராளமய ஆட்சிக்கான அரசியல் ஆதரவு,  மக்களை மிகவும் பரிதாபமான முறையில் அச்சுறுத்துகிறது.
இந்தியாவில், தற்போது, கார்ப்பரேட்டுகளும், இந்துத்துவா மதவெறியர்களும் கை கோர்த்துக்கொண்டு, ‘தேசம்’ என்ற பெயரால் ஜனநாயக உரிமைகள் உட்பட மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் தியாகம் செய்திட வேண்டும் என்றும், மக்களின் நலன்களுக்கும் மேலானது ‘அபரிமிதமான தேசியவாதம்’ என்கிற சிந்தனை என்றும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.    இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள், “தேசத்தைப் பாதிக்கும் விதத்தில் பேச்சுரிமை இருக்க முடியாது,” என்று அடிக்கடி அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் கூறும் தேசியவாதத்தின் கருத்து, ஆர்எஸ்எஸ்-ஆல் தலைமை தாங்கப்படக்கூடிய இந்திய மதவெறியர்களின் பாசிஸ்ட் நிகழ்ச்சிநிரலை மேலும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் அமைந்துள்ள ஒன்றுதான்.  இவர்கள் தற்போதுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்புவதுபோல ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’- ஆக  முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று கோருகிறார்கள்.
ஆர்எஸ்எஸ்,  தாங்கள் நிறுவ விரும்பும் “இந்து ராஷ்ட்ரம்” என்பதை சித்தாந்தரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் நியாயப்படுத்தும் விதத்திலேயே  “தேசியவாதம்” என்பதைக் கட்டமைத்திருக்கிறது.  (இவர்கள் கூறும் இந்துத்துவா ராஷ்ட்ரத்திற்கும், இந்துயிசத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.)  ஆர்எஸ்எஸ்-இன் மறைந்த தலைவரான எம்.எஸ். கோல்வால்கர், 1939இல் எழுதிய நாம் அல்லதுஅல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்னும் நூலின் முகப்புரையில், “இந்துக்கள்,  அயலக இனத்தைச் சேர்ந்த எவராலும் இந்த நாடு படையெடுக்கப்படுவதற்கு முன்பே இந்த மண்ணில் எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக எவ்விதமான தகராரோ மற்றும் எவராலும் தொந்தரவுக்கு உள்ளாகாமலோ இருந்து வந்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், “எனவே, இந்துக்கள் பூமியான இந்த பூமி, இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது,”  என்றும் குறிப்பிட்டார். (We or Our Nationhood Defined – M.S. Golwalkar, 1939, Page 6).    
இந்துத்துவா மேலாதிக்கவாதிகள், இவ்வாறாக இந்துக்கள்தான் எப்போதும் இந்தத் தேசத்தில் இருந்தார்கள் என்றும், தொடர்ந்து இருந்து வருகிறார்கள் என்றும்  அறிவியல்பூர்வமற்ற முறையிலும், வரலாற்று ஆய்வின் அடிப்படையுமின்றி “நிறுவியதைத்” தொடர்ந்து, அத்தகைய இந்து  தேசத்தின் சகிப்புத்தன்மையற்ற, தத்துவார்த்த சாராம்சத்தையும் பதித்திடும் வேலையில் தொடர்கிறார்கள்.
“… இவ்வாறு நாம் மேற்கொண்டுள்ள ஆய்வானது, நம்மை மறுக்க இயலாத விதத்தில், … இந்துஸ்தான் இங்கேதான் தோன்றியது மற்றும் புராதன இந்து தேசமும் இங்கேதான் தோன்றி இருக்க வேண்டும், வேறெங்கும் அல்ல என்கிற முடிவுக்கே தள்ளிவிடுகிறது. இந்த தேசத்திற்குச் சொந்தமாயிராத மற்ற அனைவரும், அதாவது, இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றுக்குச் சொந்தமாயிராத அனைவரும் இயற்கையாகவே உண்மையான ‘தேசிய’ வாழ்விலிருந்து விலகிவிடுகிறார்கள்.
“… இவற்றை ஏற்றுக் கொண்டு, தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு, செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் ‘தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனத்தைப் பெருமைப்படுத்தக் கூடிய விதத்தில், லட்சியத்தை எய்திட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் அவர்கள் மட்டுமே செயல்படுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தேசத்தின் இலட்சியத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது கருணையான பார்வையுடன் கூற வேண்டுமானால், இடியட்டுகளாக இருக்க வேண்டும்.” (கோல்வால்கர், 1939, பக்.43-44).
இவ்வாறு இவர்கள் வைக்கும் விளக்கம், ‘இந்தியா என்னும் சிந்தனை’ யை உணர்வதிலிருந்து அல்லது புரிந்துகொள்வதிலிருந்து  ஒருவரைப் பின்னுக்கு இழுக்கிறது. இவர்களால் முன்வைக்கப்படும் ஒரு தனித்த இந்துத்துவா தேசியவாதம் (exclusive Hindutva nationalism) என்பது இந்தியாவின் பின்னணியில் ஜனரஞ்சகமான தேசியவாதத்தை வரையறுக்கிறது.
இவ்வாறு  இவர்கள் முன்வைத்திடும் பிற்போக்குத்தனமான திட்டம் இந்தியாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டத்தினர் இந்திய வரலாற்றையே, இந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் மாற்றிடவும், இந்தியத் தத்துவத்தை, இந்து இறையியலுடன் மாற்றிடவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பாஜக அரசாங்கம், இளைஞர்களுக்கும்  மாணவர்களுக்கும் கற்பிக்கப்படும் உயர்கல்வித்துறையின் பாடத்திட்டங்களில் இந்துத்துவா சித்தாந்தத்தைப் புகுத்திடத் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவர்களின் ஜனரஞ்சகமான தேசியவாதம் வெற்றிபெறவேண்டுமானால் அதற்கு மிகவும் முக்கியம் மக்கள் பகுத்தறிவற்றவர்களாக மாறிட வேண்டும். அந்த வேலைகளில்தான் இந்திய ஆட்சியாளர்கள் இப்போது இறங்கி இருக்கிறார்கள்.  ஜார்ஜ் லூகாக்ஸ் எழுதிய “காரணம் கேட்பதை ஒழித்துக்கட்டுதல்” (“Destruction of Reason”) என்னும் நூலில் கூறியதைப்போல இந்தியாவின் இன்றைய பின்னணியில் தத்துவார்த்த பகுத்தறிவின்மை (philosophical irrationalism) தேவைப்படுகிறது. ஹிட்லருக்கு ஜெர்மனியின் பாதை இவ்வாறுதான் இருந்தது என்று லூகாக்ஸ் அடையாளப்படுத்தி இருக்கிறார். ”ஏகாதிபத்திய உலகில் பகுத்தறிவின்மை ஒரு சர்வதேசக் காட்சியாகும்,” என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
பகுத்தறிவின்மை என்பது கேள்வி கேட்பதற்கு எதிரான ஒரு தத்துவார்த்தப் போக்கு ஆகும். அதன் பிரதான குறிக்கோள், அன்றைய ஐரோப்பிய அறிவொளிக் காலத்திலிருந்து இன்றைய ஏகாதிபத்திய உலகமயக் காலம்வரையிலும், மனித விவகாரங்களில் கேள்வி கேட்பதற்கு இருந்து வரும் அதிகாரத்தையும், எதார்த்த நிலைமைகள் குறித்த அறிவினை மக்களுக்கு அளிப்பதையும் சவாலுக்கு  அழைப்பதேயாகும்.  அறிவு எந்தக் காலத்திலும் முழு எதார்த்த நிலையினையும் விளக்கிட முடியாது. எனினும், பகுத்தறிவின்மை எதார்த்தத்திற்கும் அறிவுக்கும் இடையேயுள்ள தர்க்கவியல் உறவுமுறையினை மறுதலிக்கிறது. புறநிலை எதார்த்தம் (objective reality) நம்முடைய அறிவை விட மிகவும் வளமானது என்று லூகாக்ஸ் கூறுகிறார். இதன் இடைவெளியை. பகுத்தறிவின் அடிப்படையில் நிரப்பிடுவதற்குப் பதிலாக, பகுத்தறிவின்மையால் ஒட்டுமொத்த எதார்த்தத்தின்  அறிவினை ஒருவர் பெற்றிட முடியாது. ஒட்டுமொத்த எதார்த்தத்தையும் ‘நம்பிக்கை’ (‘fairth’) மற்றும்  ‘உள்ளுணர்வு’(‘intuition’) அடிப்படையில்தான் கிரகித்துக்கொள்ள முடியும். இதுதான் அறிவின் உயர்ந்தபட்ச வடிமாகக் கருதப்படுகிறது. ஜனரஞ்சகமான தேசியவாதம் மக்களுக்கு இத்தகைய ‘நம்பிக்கை’ யை ஊட்டிவளர்க்கிறது. இதன்மூலம், அது தன்னுடைய இரட்டை குறிக்கோளான, நவீன தாராளமய சீர்திருத்தங்களை முன்னெடுத்துச்சென்றிடவும், இந்தியாவை தனித்த இறையியல் இந்து நாடாக மாற்றிடவும் மக்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இவர்களின் இத்தகைய தத்துவார்த்த பகுத்தறிவின்மையானது ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியாளர்களின் கீழ் இந்தியாவின் சமூக-அரசியல்-கலாச்சார வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் எதுகுறித்தும்,  கேள்வி கேட்காதே என்கிறது.
‘இந்தியா என்னும் சிந்தனை’ என்பது அனைத்தையும்  காரணத்துக்கு உட்படுத்துவதன் மூலம் எல்லாருக்குமான பொருளாதார நிகழ்ச்சிநிரலுக்காக வேலை செய்வது. இவர்கள் கூறும் எதையும் காரணத்துக்கு உட்படுத்தாதே என்பது சர்வதேச நிதி மூலதனத்துடன் கூடிக்குலாவிக் கொண்டு,  நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை  அமல்படுத்துவது. அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தங்கள் கொள்ளை லாப வேட்கைக்காக அடக்கி ஆள்வது.  நாட்டில் மக்கள் மத்தியிலிருந்துவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய உணர்வினை மறுதலிப்பதுடன், இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றிடும் நடவடிக்கைகள் மூலமாக, இந்தியாவில் உள்ள இருவிதமான இந்தியர்களிடையே – வறுமையில் வாடும் இந்தியர்களுக்கும், வளமாக உள்ள பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள – இடைவெளியை மேலும் விரிவாக்கும் விதத்தில் ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு ‘இந்தியா என்னும் சிந்தனை’க்கு நேரெதிராக இன்றைய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டிலுள்ள நிலைமைகளைக்  காரணத்துக்கு உட்படுத்துவதன் மூலம் தலித்துகள், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் போன்று  விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக நாம் வேலைசெய்து கொண்டிருக்கிறோம். அவர்களோ எல்லாவற்றையும் காரணத்துக்கு உட்படுத்தக்கூடாது என்பதன் மூலம் சமூக பொருளாதார எதார்த்தநிலைகளிலிருந்து அவர்களை ஒதுக்கி வைத்திட முயல்கிறார்கள்.
நம் அரசமைப்புச்சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளின்படி, “சாதி, இனம், பாலினம் எதுவாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம்” வேண்டும் என்று நாம் கேட்கிறோம். அவர்களோ, அத்தகைய சமத்துவத்தை மறுக்கிறார்கள்.  அவர்கள்  தற்போது பின்பற்றிவரும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் இந்துத்துவா தேசியவாதத்தின்கீழ் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் அவர்களுக்கு  இவ்வாறு  சமத்துவத்தை மறுப்பது தேவைப்படுகிறது.
காரணத்துக்கு உட்படுத்துவதன் மூலம், ஆட்சி அமைப்புமுறையிலிருந்து மதம் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம். அவர்களோ,  மதவெறியை மூர்க்கத்தனமாக பிரயோகித்து, மக்கள் மத்தியில் பிளவினை உண்டாக்கிடும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இவ்வாறு இவர்களின் நடவடிக்கைகள், அரசமைப்புச்சட்டம் மதச் சிறுபான்மையினருக்கு உத்தரவாதப்படுத்தியுள்ள உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுத்திருக்கின்றனர். அவர்களின்  உயிர் மற்றும் உடைமைகளையே சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். மதவெறியர்களின் தாக்குதல்களுக்கு அவர்களை இரையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.   
நாம், அனைத்தையும் காரணத்துக்கு உட்படுத்துவதன்மூலம், ‘இந்தியா என்னும் சிந்தனை‘யை  மேம்படுத்திட விரும்புகிறோம். அவர்களோ எதையும் காரணத்துக்கு உட்படுத்தக்கூடாது என்ற அடிப்படையில் நம் கல்வி அமைப்புமுறையையே விஷமாக்கிட முனைந்துள்ளார்கள். மேலும் அனைவருக்கும் கல்வி என்பதையும் நிராகரித்திடும் விதத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பகுத்தறிவு மற்றும் அறிவியல் அணுகுமுறையை மறுதலித்து வருகிறார்கள்.  அனைவரையும் சமமாகப் பாவிக்கும் வளமான சமத்துவக் கலாச்சாரத்தை, தங்களின் இந்து புராணமாக மாற்ற விரும்புகிறார்கள்.
இதுதான் இப்போது இந்தியாவில் ‘ஜனரஞ்சகமான’ ‘இந்துத்துவா தேசியவாதம்’ மற்றும் ‘இந்திய தேசியவாதம்’ ஆகியவற்றிற்கிடையே நடைபெற்று வரும் போராட்டமாகும்.  மதச்சார்பற்ற ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதற்கான நிகழ்ச்சிநிரல் வெற்றிபெற வேண்டும் என்பதன்பொருள் எதையும் காரணத்துக்கு உட்படுத்தும் தத்துவம், எதையும் காரணத்துக்கு உட்படுத்தாதே என்னும் தத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுவது என்பதேயாகும். இதுதான் ‘இந்தியாவின் சிந்தனை’ என்பதன் ஆணிவேராகும்.
(தமிழில்: ச. வீரமணி)

Sunday, May 6, 2018

மோடி ஆட்சியின் நான்காண்டுகள்


ஊழல்,
மதவெறி,
தலித்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்
சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுதல்,
வங்கிகள் சூறையாடப்படுதல் நிறைந்த

மோடி ஆட்சியின் நான்காண்டுகள்

இவற்றைக் கண்டித்து
2018 மே 16 முதல் 22 வரை தேசிய அளவில் பிரச்சாரம்
2018 மே 23 அன்று மாநிலத் தலைநகர்களில் மாபெரும் பேரணி

(தமிழில்: ச.வீரமணி)
  
மோடி ஆட்சியின் நான்காண்டுகள்
“நல்ல காலம் பிறக்குது” என்றும் “அனைவருக்கும் வளர்ச்சி” என்றும் உறுதிமொழிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி என்பது, “வளர்ச்சி” என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கும், ஏகபோக மூலதன நிறுவனங்களுக்கும் மட்டுமே என்பதைக் காட்டிவிட்டது.
உழைக்கும் மக்களுக்கு அது அளித்த எந்தவொரு உறுதிமொழியையும் நிறைவேற்றிட அது முன்வரவில்லை. மாறாக, முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியத்தின் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளை, மேலும் மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றிடவே தேஜகூ அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இன்றைய தினம், மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதமாக உள்ள பணக்காரர்கள், நாட்டின் செல்வ வளங்கள் மற்றும் சொத்துக்களில் 53 சதவீதத்தைத் தங்கள் வசம் சுருட்டிக்கொண்டுள்ளார்கள்.
உச்சத்திலிருக்கும் வேலையின்மைக்கொடுமை
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று நம் இளைஞர்களுக்கு உறுதிமொழி அளித்து, ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர், ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்குக் கூட வேலை அளிக்கவில்லை. நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் வேலை தேடி 10 லட்சம் பேர் வேலை சந்தையை நோக்கி வெளித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின்னர் வேலையின்மைக் கொடுமை இப்போது உச்சத்தில் இருக்கிறது. வேலையில் இருப்பவர்களிலும் 77 சதவீதத்தினருக்கு முறையான ஊதியம் கிடையாது. தொழிலாளர் நிலையத்தின் (லேபர் பீரோவின்) கூற்றுப்படி, 2014க்கும் 2015க்கும் இடையே  பட்டதாரி இளைஞர்களில் (18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களில்) வேலையில்லாதோர் விகிதாசாரம் 28 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. மேலும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசாங்கத்தின் அறிவிப்பின் காரணமாக, 2016 அக்டோபருக்கும் 2017 அக்டோபருக்கும் இடையே 90 லட்சம் வேலைகளுக்கு இழப்பு (job lobs) ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி என்கிற பொருள்கள் மற்றும் சேவை வரிகள் மூலமாக வேலையின்மைக் கொடுமை மேலும் மோசமாகி இருக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், மருந்தப் பொருள்கள் உட்பட எண்ணற்ற அத்தியாவசியப் பொருள்கள் சாமானிய மக்களின் கைகளுக்கு எட்டாத உயரத்திற்குச் சென்று விட்டன.
விண்ணைத் தொடும் விலைவாசி
விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த, தேஜகூ ஆட்சியில், உண்மையில் விலைவாசிகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளன. பொது விநியோக முறைக்குப் போதிய நிதி ஒதுக்காததன் காரணமாக பொது விநியோக முறையே முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது. ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், பொது விநியோக முறையில் பொருள்களை வாங்கி வந்தவர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைத்ததும் பட்டினிச் சாவுகள் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளன. பெட்ரோலியப் பொருள்களின் விலைகளுக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைகள் குறைந்தபோதிலும், நம் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

ஊழல் ஒழிப்பும் நீரவ் மோடி வகையறாக்களும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊழலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவோம் என்றும், கறுப்புப்பணத்தை வெளிநாடுகளிலிருந்து மீளவும் கொண்டுவருவோம் என்றெல்லாம் உறுதிமொழிகளை வாரி இறைத்தார்கள். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் என்ன நிலைமை? ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப்பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்கள் நாள்தோறும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோடி கோடியாகக் கொள்ளையடித்த கயவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள் என்று முன்கூட்டியே எச்சரித்து பிரதமர் அலுவலகத்திற்கு முறையீடுகள் வந்தபோதிலும்கூட, அவர்களை அவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்லாமல் தடுத்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வதற்குப் பதிலாக, அவர்களைத் தப்பவிட்டு, அவர்களுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். நிரவ் மோடி என்கிற கார்ப்பரேட் பேர்வழி, வைர வியாபாரி, 11,200 கோடி ரூபாய் தொகை பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து கொள்ளையடித்து வெளிநாட்டிற்குச்  சென்றவன், வெளிநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

லலித் மோடி, விஜய் மல்லய்யா போன்ற கார்ப்பரேட் பேர்வழிகள் நாட்டைச் சூறையாடிய  மற்ற கொள்ளையர்களாவார்கள். ஊழலை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, இதுவரை லோக்பால் சட்டமுன்வடிவைக் கொண்டுவர எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்தே ஊழலுக்கு எதிராக அவர்களின் ‘லட்சணம்’ எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
நிறுவனமயமான ஊழலும் நன்கொடை லஞ்சமும்
நாட்டிலுள்ள வங்கிகளில் கடன் பெற்ற கார்ப்பரேட்டுகள் அக்கடன் தொகையைத் திருப்பிச்செலுத்தாது கொள்ளையடித்த தொகை எவ்வளவு தெரியுமா? மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் முதல் மூன்று ஆண்டுகளில் இவர்களின் கடன் தொகைகளைத் திரும்பப்பெறாது தள்ளுபடி செய்த தொகை மட்டும் சுமார் 1.92 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். நான்காம் ஆண்டில் மட்டும், அதாவது 2016-17இல் மட்டும் 81,863 கோடி ரூபாயாகும். இவ்வாறு இவர்களின் ஆட்சியில் ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது. இதன்காரணமாக ஆட்சியில் உள்ள இவர்கள். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் தங்கள் இலஞ்சத் தொகையை நன்கொடை என்ற பெயரில் சட்டபூர்வமாகவே அளிப்பதற்கும் வகை செய்து கொண்டிருக்கிறார்கள். 
வளங்களைச் சூறையாட கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு
தேஜகூ அரசாங்கம், பெருமளவில் நாட்டின் செல்வ வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்குத் தனியாரிடம் வாரை வார்த்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. தேசியவாதம் என்று சொல்லிக்கொண்டே, நம்முடைய நாட்டின் கேந்திரத் துறைகளாக விளங்கும் ராணுவம், ரயில்வே, வங்கிகள், இன்சூரன்ஸ், ‘பெல்’ நிறுவனம் போன்றவற்றையும் இதுபோன்ற இதர நிறுவனங்களையும் அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்த்திட, நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. ‘இந்தியாவில் தொழில் தொடங்குகள்’ (‘Make in India), ‘வணிகத்தை எளிதாக்குகிறோம்’ (‘Ease of Doing Business), என்ற பெயர்களின் மூலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகள் நம் நாட்டின் செல்வ வளங்களைச் சூறையாடிச் செல்வதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து, வரவழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு இவர்கள் கொள்ளையடித்துச் செல்வதற்கு நாட்டின் எண்ணெய் வளங்கள், எரிவாயு மற்றும் பல்வேறு இயற்கை வளங்களும் மட்டுமல்ல இந்தியத் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியையும் சுரண்டிச் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.
இதற்காக நாட்டில் இதுநாள்வரையில் நடைமுறையிலிருந்த தொழிலாளர்நலச் சட்டங்களையெல்லாம் கார்ப்பரேட்டுகள் நலச் சட்டங்களாக, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் நிலுவையில் உள்ள நிதித் தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை இன்சூரன்ஸ் சட்டமுன்வடிவு  (FRDI bill—Financial Resolution and Deposit Insurance Bill), நிறைவேற்றப்பட்டுவிட்டால் வங்கிகளிலும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் சேமித்துவைத்துள்ள சாமானிய மக்களின் தொகைகளும் மிக மோசமான முறையில் சூறையாடப்பட்டுவிடும்.  
தொழிலாளர்நலச் சட்டங்கள் அனைத்தும், முதலாளிகளுக்கு ஆதரவான முறையில் தொழிலாளர்கள் இதுநாள்வரையிலும் தங்களுடைய போராட்டங்களின் மூலமாக வென்றெடுத்திருந்த உரிமைகளான எட்டு மணி நேரம் வேலை, குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, அணிதிரளும் உரிமை மற்றும் கூட்டுபேர சக்தி போன்றவற்றைப் பறித்துவிட்டு, அவற்றை முதலாளிகள் ஆதரவு சட்டங்களாக, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றிட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் ஒப்பந்தமுறையை அனுமதித்திருக்கிறார்கள். இப்போது ஆட்சியாளர்கள் அனைத்துத் துறைகளிலும் நிரந்தர ஊதியம் பெறும் வேலையைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
விவசாயிகளுக்குத் துரோகம்
விவசாயிகளுக்கு இவர்கள் அளித்திட்ட முக்கியமான உறுதிமொழிக்கும் இவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய விளைபொருள்களுக்கு அதன் உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் உயர்த்தி, விவசாய விளைபொருள்களின் விலைகள் நிர்ணயிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்கள். இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டிருந்தால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 65 சதவீதக் குடும்பங்கள் பயன் அடைந்திருக்கும். ஆனால் அதனைச் செய்திட இதுவரை மோடி அரசாங்கம் முன்வரவில்லை. அதே போன்று விவசாயிகள் கடன் வங்கிகளில் பெற்ற கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிய உறுதிமொழிக்கும், அவர்கள் துரோகம் செய்து விட்டார்கள்.
விவசாயிகளின் தற்கொலைகள் 2014-15ஆம் ஆண்டில் 42 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அது மேலும் உக்கிரமடையக்கூடிய விதத்தில் தொடர்கிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்திடவோ மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவரவோ மோடி அரசாங்கம் தயாராயில்லை. மாறாக அவர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணமளித்துவந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MNREGA) கீழ் ஒதுக்கவேண்டிய நிதி ஒதுக்கீட்டைக்கூட வெட்டிச் சுருக்கியிருக்கிறார்கள்.
மிகப்பெரும் மோசடித் திட்டம்
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள திட்டங்களிலேயே மக்களைக் கொள்ளையடித்திடும் மிகப்பெரிய மோசடியான திட்டம் எது தெரியுமா? தேஜகூ-பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனம் (NDA-PM FASAL BIMA YOJANA) என்னும் பயிர்ப் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டமாகும். சாமானிய விவசாயிகளின் தொகையை, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளையடித்திட, அரசாங்கம் நன்கு வழிசெய்து தந்திருக்கிறது. இதுவரை விவசாயிகளிடம் இவர்கள் 2015-16ஆம் ஆண்டில் வசூலித்த பிரிமியம் தொகைகள் 21,500 கோடி ரூபாயில் 15,500 கோடி ரூபாயை தங்கள் இலாபமாக சுருட்டிக்கொண்டுவிட்டார்கள். வேளாண்துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை மோடி அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. விவசாயத்தில் ஒப்பந்தப் பண்ணை முறையையும் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, நாட்டின் விவசாயத்தை பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கையகப்படுத்துவதற்கு வகை செய்து தந்திருக்கிறது. நம் நாட்டு விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களிலேயே அவர்களின் கீழ் ஒப்பந்தக்காரர்களாக மாறும் அவலநிலை உருவாகி இருக்கிறது. மேலும் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டின் காரணமாக நாடு முழுதும் உள்ள நம் நாட்டின் சிறுவணிகர்கள் மற்றும் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரங்களும் கேள்விக்குறிகளாகிவிட்டன.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளையும் தனியாரிடம் தாரை வார்த்திட மோடி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்காரணமாக முக்கியமான இந்த இரண்டு துறைகளையும் வணிகமயப்படுத்திட அனுமதித்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்குமே அதற்குத் தேவையான பட்ஜெட் ஒதுக்கீடுகளை அளித்திடாமல் அவற்றை ஆபத்திற்குள்ளாக்கி இருக்கின்றன.
பாசிஸ்ட் நடவடிக்கைகளும்பலியாகும் அப்பாவிகளும்...
மேலும், பாசிஸ்ட் குணம் படைந்த ஆர்எஸ்எஸ்/பாஜக மக்கள் மத்தியில் சாதி வெறி, மதவெறி மூலமாக மக்களுக்கிடையே வெறுப்பு உணர்வைக் கிளப்பி வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் அமர்த்தப்பட்டு அவற்றைத் தங்கள் விருப்பத்திற்கிணங்க செயல்படுத்தி வருகின்றனர். பாஜகவினரின் ஆட்சியில் மக்கள் கொத்து கொத்தாகக் கொலை செய்யப்படுவது நாளும் நடந்து வருகிறது. பசுப் பாதுகாவலர்கள் என்ற அமைப்பினரால் 40க்கும் மேற்பட்ட அப்பாவிகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு கொலை செய்த கயவர்களில் ஜார்கண்டில் ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தவிர நாட்டில் வேறெங்கும் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
பாசிஸ்ட்டு ஆர்எஸ்எஸ்/பாஜகவினரின் கருத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர் களும், பகுத்தறிவாளர்களும் பாசிஸ்ட் வெறியர்களால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். கல்புர்கி, பன்சாரே மற்றும் கௌரி லங்கேஷ் இதற்கு உதாரணங்களாகும். பாஜகவினரின் ஆட்சியில், உயர்சாதி தனியார் ராணுவங்கள் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்கள், மதச் சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறிக் கலகங்களை உருவாக்கி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா நிகழ்வு பாசிஸ்ட்டுகளின் குணத்தை தோலுரித்துக் காட்ட மிகச் சரியான உதாரணமாகும். சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதுகூட இவர்களின் உத்திகளில் ஒன்றாகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான  அட்டூழியங்கள் பாஜக ஆட்சியில் மிகவும் அதிகமாகி இருக்கிறது. இத்தகு கொடூரச் செயல்களில் ஈடுபட்ட கிரிமினல்களை, பாஜக தலைவர்கள் மற்றும்  அமைச்சர்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பது என்பதை வெளிப்படையாகவே செய்து கொண் டிருக்கிறார்கள். மோடியின் ஆட்சியின் கீழ் எவருக்குமே பாதுகாப்பு கிடையாது என்பது சாமானிய மக்களின் மத்தியில் பொதுக் கருத்தாக மாறியிருக்கிறது. மோடி அரசாங்கம் பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.
வளைக்கப்படும் நீதித்துறை
ஆட்சியாளர்கள் தங்களின் ஆளும் வர்க்க சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் விதத்திலும், தங்களின் பிற்போக்கு நலன்களுக்குப் பாதுகாப்பு அளித்திடும் விதத்திலும் நீதித்துறையையும் தங்கள் விருப்பத்திற்கிணங்க செயல்படும் நீதிபதிகளைக் கொண்டு வளைத்துப்போடும் வேலையிலும் இறங்கி இருக்கிறார்கள்.  வன்கொடுமைத் தடைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திடும் விதத்திலும், நீதியரசர் லோயா மரணம் அடைந்த வழக்கிலும் வெளியாகியுள்ள தீர்ப்புகள் இவற்றிற்கு மிகச் சரியான உதாரணங்களாகும். இத்தகைய சூழ்ச்சிகளுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகளே வெளிப்படையாக வெளிவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் அவசரநிலைப் பிரகடனம் போன்ற மிகமோசமான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றவர்கள் இந்திய மக்கள். இத்தகைய மிகவும் வளமான பாரம்பர்யத்தைக் கொண்டவர்கள் இந்திய மக்கள். இத்தகைய மக்களை பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ்/பாஜகவினரின் எதேச்சாதிகார நடவடிக்கைகளால் அமைதிப்படுத்திவிட முடியாது.
பொங்கியெழுந்த போராட்டங்கள்...
கடந்த நான்காண்டுகளில் ஆட்சியாளர்களின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எண்ணற்றப் போராட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். 2015இலும் 2016இலும் நடைபெற்ற இரு பொது வேலைநிறுத்தங்களில் 18 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். தில்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற மகாமுற்றுகைப் போராட்டம், மற்றும் போக்குவரத்து, மின்சாரம், திட்டப் பணியாளர்கள், விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்கள் என்ற பல போராட்டங்களில் சக்தியாக மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் காரணமாக ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்ததைப்போன்று நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. மகாராஷ்ட்ரா விவசாயிகள் நீண்ட பேரணி ஆகியவை நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் இவை மிக முக்கியமானவையும், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட  வேண்டிய போராட்டங்களுமாகும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தலித்துகள் மற்றும் பழங்குடியினர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அணிதிரண்டு வருகின்றனர். அதேபோன்று பெண்கள், மாணவர்கள், இளைஞர்களும் நாட்டின் செல்வங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளைகொண்டு போவதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய போராட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் இழிவான நிகழ்ச்சி நிரல்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஆட்சியாளர்களையும்  மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றன.
இத்தகு பின்னணியில்தான் மக்கள் ஒற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம் (Jan Ekta Jan Adhikar Andolan (JEJAA)) என்னும் பதாகையின்கீழ் நவீன தாராளமய, மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் மதவெறியர்களின் பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக முற்போக்காளர்களை அணிதிரட்டிட முன்வந்திருக்கிறது.
ஆட்சியாளர்கள் தங்களின் படுபிற்போக்குத்தனமான கொள்கைகளின் கேடுகெட்ட தாக்கத்தின் காரணமாக சவக்குழிக்குச் செல்வது தவிர்க்கமுடியாதது.  ஜேஇஜேஏஏ என்னும் மக்கள் ஒற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளில் உள்ள 20 கோடிக்கும் மேலான உறுப்பினர்கள் ஆட்சியாளர்களின் கேடுகெட்ட கொள்கைகளை விளக்கி, “ஆட்சியாளர்களே கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள், இல்லையேல் நீங்கள் மாற்றப்படுவீர்கள்” என்ற முழக்கத்துடன் இத்துண்டுப்பிரசுரத்தை நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரிடம் எடுத்துச்செல்ல உறுதிபூண்டுள்ளனர்.
2018 மே 23 அன்று நாட்டிலுள்ள 24 மாநிலத் மாநிலத் தலைநகர்களிலும் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.  மோடி அரசாங்கத்தின் முடிவின் தொடக்கமாக இப்பேரணி இருப்பதோடு மட்டுமல்லாமல், நாடு தழுவிய அளவில் ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ மற்றும் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான சமூக அமைப்பைக் கட்டி எழுப்பக்கூடிய விதத்திலும் அமைந்திடும். மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்துக்காக நாட்டு மக்கள் அனைவரையும் அணிதிரட்டும் விதத்திலும் இப்பேரணிகள்  அமைந்திடும்.
இப்பேரணி / ஆர்ப்பாட்டத்தில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்கேற்ற ஆதரவு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஆட்சியாளர்களின் கேடுகெட்ட பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்திற்காக ஒன்றுபடுவோம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடுவோம், மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடுவோம்.
மக்கள் ஒற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்
 (வெகுஜன, வர்க்க மற்றும் சமூக அமைப்புகள், குழுக்கள் மற்றும்
முற்போக்காளர்கள் இணைந்த தேசிய மேடை)