Sunday, September 4, 2016

குஜராத் கோப்புகள்-5 கொலைகளைத் தூண்டியவரின் கோட்டைக்குள் முதல் நுழைவு

ரானா அயூப்
கொலைகளைத் தூண்டியவரின் கோட்டைக்குள் முதல் நுழைவு
எனது நண்பரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. மகப்பேறு மருத்துவர் ஒருவரைப் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன - மேலிடத் தொடர்புகள் உள்ளவர்என்ற குறிப்புடன். அவரைத் தொடர்பு கொண்டு, மாநிலத்தின் மக்கள் நலவாழ்வு நிலவரம்பற்றிப் படமெடுக்க வந்திருப்பதாகத் தெரிவித்தேன். அவர் அன்று மாலை தனது மருத்துவமனைக்குவரலாம் என்றார். நன்றி தெரிவித்துவிட்டு, என் அறைக்கு நடந்தபோது மைக் வேகமாக வந்தான்.‘மைதிலி, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இப்படியே என்னால் தொடர முடியாதென்றுநினைக்கிறேன். நாம் சந்திக்கிறவர்களிடம் உங்களை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, என்னை உங்களின் உதவியாளராக அறிமுகப்படுத்துகிறீர்கள். உங்கள் புலனாய்வின் உண்மை நோக்கத்தைஇப்போது நீங்கள் எனக்குச் சொல்லியாக வேண்டும்.’
உண்மையைச் சொல்லும் தருணம்
அவனுடைய விசாரணையை வழக்கம்போல், ‘நேரம் வரும்போது சொல்கிறேன்’ என்று சொல்லி ஒதுக்கிவிடத்தான் நினைத்தேன். ஆனால் இப்போது அவன் குரலில் ஒரு அழுத்தம் வெளிப்பட்டது. உண்மையை மறைப்பதால் ஏதோ தான் அவமானப் படுத்தப்படுவதாக எண்ணுகிறான். ‘நான் ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. நான் நிறைய படிக்கிறேன். வாழ்க்கையில் ஏதேனும்சாதிக்கிற லட்சியத்துடன் வந்திருக்கிறேன். நீங்கள் என்னை நம்புகிறீர்களா? அல்லது உங்களுடையநோக்கத்திற்காக, மற்றவர்களுக்குக் காட்டுவதற்குக் கிடைத்த ஒரு வெளிநாட்டு முகமாக மட்டுமேபயன்படுத்தப் போகிறீர்களா?’என் உண்மையான புலனாய்வு என்ன என்பதை அவனிடம் சொல்லியாக வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தேன். அதைச் சொல்வதன் மூலம் அவனுடைய நம்பிக்கையைப் பெற முடிவுசெய்தேன். மடிக்கணினியிலிருந்து என்னுடைய முந்தைய சில கட்டுரைகளைஅவனுடையமின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பினேன். ‘நான் திரும்பி வருவதற்குள் இதையெல்லாம் படித்துவிடு மைக். பிறகு நிதானமாகப் பேசுவோம்.அப்போது என் நோக்கமும் பின்னணியும் உனக்குத்தெரிய வரும்,’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
மருத்துவரின் உதவி
செல்வாக்குள்ள அந்த மகப்பேறு மருத்துவரைச் சந்தித்தது மிகவும் பயனளித்தது. அவர் எனது ‘திரைப்பட முயற்சிக்கு’ உதவ ஆர்வத்துடன் முன்வந்தார். பேச்சோடு பேச்சாக அவரிடம்,மருத்துவத் துறையில் புகழ்பெற்ற பெண் யாரையாவது அறிமுகப்படுத்த முடியுமா என கேட்டேன். என் மனதில் இருந்தவர் மாயா கோட்னானி. குஜராத் சட்டமன்றத்திற்கு நரோடா தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2002 படுகொலைகளைத் தூண்டியவர்களில் ஒருவர்என, நேரடி சாட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டவர். மாநில அமைச்சராகவே ஆக்கப்பட்டவர்.மகப்பேறு மருத்துவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்ததும் அவர் என் முன்னிலையிலேயே, மாயா கோட்னானியையே தொலைபேசியில் அழைத்தார். ‘அமெரிக்காவில் குடியிருக்கிறஒரு பெண் படத்தயாரிப்பாளர் வந்திருக்கிறார். எனக்கு நன்றாகத் தெரிந்தவர். உங்களிடம் பேட்டிகாண விரும்புகிறார்...’ என்றார். மறுநாளே வரச்சொல்லுமாறு அவருக்கு பதில் வந்தது.என்னுடைய நடிப்பில் சந்தேகம் வந்துவிடக்கூடாது. ஆகவே அவரிடம் சுகாதார நிலைமை பற்றிசில கேள்விகள் கேட்டேன். தொடர்ந்து அவரிடமிருந்து நிறையத் தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூற, அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்தார்.விடுதிக்குத் திரும்பியபோது மைக் எனது கட்டுரைகளைப் படித்து முடித்திருந்தான். என்னிடம்கேட்பதற்காக நிறையக் கேள்விகளை எழுதி வைத்திருந்தான். அவன் `கிரிமினல்கள்’ என்றுகருதியவர்களைப் பற்றிய கேள்விகளும் இருந்தன. மாணவர் பகிர்வுத் திட்டத்தின் கீழ் தன்னுடையநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதற்குப் பொருத்தமானவனே என மெய்ப்பித்தான்.நான் சொன்னதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டான். சரியான முறையில்சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டான். நுட்பமான, சிக்கலான விசயங்களைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டான்.
முதல் சந்திப்புக்குத் திட்டம்
அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்துப் பேசினோம். திட்டமிட்டபடி நிகழ்வுகள்அமையவில்லை என்றால் நிலைமைக்கேற்ப உடனடியாகத் திட்டத்தை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றேன். ‘எப்போது புறப்பட வேண்டியிருக்கும், மைதிலி?’ ‘நாளையே! நம் உண்மைப்புலனாய்வுக்கானமுதல் சந்திப்பு இது. இதை சரியாக அமைத்துக்கொள்ளத் திட்டமிடுவோம்மைக்.’மறுநாள் மாயா கோட்னானியை சந்திப்பதே எங்கள் திட்டம். எடுத்த எடுப்பிலேயே தகவல்கள்எளிதாக வந்து கொட்டிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளராக நான் நன்கு அறிவேன். அப்படியே தகவல்கள் தாமாக வந்தாலும் கூட, நாம் நம் ஆர்வத்தைஅளவுக்கு மிஞ்சிக் காட்டிவிடலாகாது. இதனை மைக்கிடம் கூறி எச்சரித்தேன். ‘இன்று நாம்திரைப்படத் தயாரிப்பாளர்கள்தான். படமெடுப்பது மட்டுமே நம் தொழில்.’ மாயா கோட்னானியின் மருத்துவமனை நரோடா பகுதியின் மையச் சாலையில் இருந்தது.அந்த மருத்துவமனையிலிருந்து கல்லெறி தொலைவில்தான் நரோடா பாட்டியா படுகொலைகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெறியூட்டும் முழக்கங்களால் வன்முறைக் கும்பலை ஏவிவிட்டதே மாயா கோட்னானிதான் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. மைக்கும் நானும் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, மாயா கோட்னானியின் அறைக்கு வெளியே பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அறை வாயிலில் இரண்டு முரட்டு ஆட்கள் காவலுக்கு நின்றிருந்தார்கள். ஒரு ஆளின் கையில் துப்பாக்கி இருந்தது. அவர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். தொலைபேசியில் தங்களது தலைவரிடம் பேசி உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான் எங்களை உள்ளே அனுப்பினார்கள். (தொடரும்)


No comments: