Sunday, April 12, 2015

வலிமை மிக்க கட்சியை கட்டுவோம்!


வரவிருக்கும் காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியால் பின்பற்றப்பட வேண்டிய அரசியல்-நடைமுறை உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டின் வரைவு அரசியல் தீர்மானம் விளக்கி இருக்கிறது. சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்திருப்பதுடன், இன்றுள்ள நிலைமைகள் என்ன என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றின் அடிப்படையில் கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் - நடைமுறை உத்தி மற்றும் பணிகள் என்ன என்பது குறித்தும் குறிப் பிட்டிருக்கிறது.
வலதுசாரிகளின் தாக்குதல்
இந்தியாவில் 2014 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உரு வாகியுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் மற்றும் புதியஅரசியல் நிலைமைகள் குறித்தும் தீர்மானம்கவனம் செலுத்தியுள்ளது. பாஜக பெரும்பான் மை பெற்று மோடி அரசாங்கம் அமைந்திருப்பது வலதுசாரித் தாக்குதலுக்கு வழிவகுத்துத்தந்துள்ளது. இத்தாக்குதல்கள் இரு விதங் களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முத லாவதாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உந்தித்தள்ளுவதில் காட்டும் வெறித்தனமான ஆர்வம். இரண்டாவது, இந்துத்வா மதவெறி சக்திகளின் பன்முகப்பட்ட நடவடிக்கைகள்.
நிச்சயமற்ற நிதி மூலதனம்
இவ்வாறு இந்தியாவில் வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டிருப்பதற்கு சர்வதேச நிலைமையின் இரு அம்சங்கள் நேரடியான காரணி களாக அமைந்திருக்கின்றன. 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து எப்போது மீள்வோம் என்று தெரியாது நிச்சயமற்ற தன்மை தொடர்கிறது. இத்தகைய நிலைமையானது, சர்வதேச நிதி மூலதனத்தையும், ஏகாதிபத்தியத் தையும் உலக அளவில் நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக உந்தித்தள்ள இட்டுச் சென்றிருக்கிறது. இத்தகைய நட வடிக்கைகளை மேற்கொண்டு வந்ததன் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நிலைமைகளிலிருந்து மீள்வதற்காக இந்திய ஆளும் வர்க்கங்களும் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன.
சீனாவுக்கு எதிரான அமெரிக்கத் திட்டம்
சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஆசியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரஅமெரிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறது. இத்தகைய அமெரிக்காவின் செயல்உத்தி நடவடிக்கைகளில், இந்தியா ஒருகேந்திரமான பாத்திரத்தை வகிக்க வேண் டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா வுடன் மிகவும் நெருக்கமான கேந்திரக் கூட் டணி நடவடிக்கைகள் வலதுசாரிப்பக்கம் போவதற்கு ஒரு தூண்டுவிசையாக அமைந் திருக்கிறது.
அவசரச் சட்ட ஆட்சி
மோடி அரசாங்கத்தின் கடந்த பத்து மாதகால ஆட்சி, பெரு முதலாளிகளின் கட்டளைக் கிணங்க நடந்துகொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறது. பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்து விட்டிருப்பது, நிலக்கரித்துறையை பொதுத்துறையிலிருந்து தனியாருக்கு மிகப்பெரிய அளவில் தாரை வார்த்திருப்பது, நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைத் திருத்தி அதன் மூலம் அதிக நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்க முன்வந்திருப்பது -
ஆகிய அனைத்தும் நவீன தாரளமயக் கொள்கைகளை முன்னிலும் வேக மாக எடுத்துச் செல்வதற்கான தெளிவான அறிகுறிகளாகும்.அதேபோன்று நாட்டிலுள்ள ஒருசிலர் சுகபோகமாக வாழ்வதற்கு, நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடிய விதத்தில் சிக்கனநடவடிக்கைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நவீன தாராளமயக் கொள்கை யின்மீதும் மோடி அரசாங்கம் நம்பிக்கை வைத் திருக்கிறது. பொதுச் செலவினங்களைக் குறைத்திருப்பதும், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகத்துறைகளுக்கு அளித்துவந்த பட்ஜெட் ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்திருப்பதும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது நேரடித் தாக்குதலை விளைவிப்பவைகளாகும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சுருக்கப்பட்டிருக்கிறது, குழந்தைகள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் பாதியாக்கப்பட்டிருக்கின்றன. உணவுப் பாதுகாப்புச் சட்டம், வன உரிமைகள் சட்டம் போன்றசில சட்டங்களில் மக்களுக்கு அளிக்கப்பட் டிருந்த ஒருசில உரிமைகளும் பறிக்கப்பட் டிருக்கின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்து தொழிலாளர் களின் உரிமைகளைப் பறித்திடவும் மோடிஅரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்கிறது. மோடி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற அவசரச்சட்ட ஆட்சி, அரசாங்கம் எதேச்சாதிகாரத்தை நோக்கி விரைவாக சென்றுகொண்டிருப்பதை எடுத்துக் காட்டும் எச்சரிக்கை மணியாகும்.
அதிகரிக்கும் பதற்றம்
வலதுசாரித் தாக்குதலின் மற்றோர் அம்சம், இந்துத்வா திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பல்வேறு வடிவங்களில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதாகும். பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-சுடன் மிகவும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரிவினரும் மிகவும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த நிலைமைகளில் மிகப் பெரிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அறிமுகப்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளும் பசுவதை, ‘காதல் ஜிகாத்’ மற்றும் வங்கதேசத்தினர் ஊடுருவல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமைகளை அதிகரித்திட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அமெரிக்கக் கூட்டணி
அதிகார மையத்தின் வலதுசாரித் திருப் பம், மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையிலும் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறது. அணிசேராக் கொள்கையிலிருந்து வெகு தூரம் விலகி வந்திருப்பது, அயல்துறைக் கொள்கை யில் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது 1990களின் ஆரம்பத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடங்கிய போதே ஆரம்பித்துவிட்டன. மோடி அரசாங்கம் அவற்றை முன்னிலும் வேகமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் ஐமுகூ அரசாங்கம் கொண்டிருந்த கேந்திர கூட்டு உறவுகளை மோடி அரசாங்கம் மேலும் தீவிரமானமுறையில் மேற்கொண்டு வருகிறது. இந்திய - அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் மேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஆசியா - பசிபிக்மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் குறித்த ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
இது, அமெரிக்கா ஆசியாவில் மேற்கொள்ளவிருக்கும் அடாவடி நடவடிக்கை களுக்கு இந்தியா பக்கபலமாக நிற்கும் என் பதைத் தெளிவு படுத்துகிறது. மேலும் மோடி ஜப்பானுடனும், ஆஸ்திரேலியாவுடனும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கட்டி யெழுப்பவும் கோரி இருக்கிறார். இவ்வாறு ஏற்படும் உறவுகளுடன், அமெரிக்காவின் அணுகுமுறையும் சேர்ந்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணி அமை வதற்கு வழிவகுத்திருக்கிறது.
முறியடிப்பது எப்படி?
வரைவு தீர்மானத்தின் சாரம், இவ்வாறு தொடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தாக்குதலை எப்படி முறியடிப்பது, அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை உத்தி என்ன என்பவை களேயாகும். நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை உத்தி,மக்கள் திரளின் பல்வேறு பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மீது இயக்கங் களையும் வெகுஜனப் போராட்டங்களையும் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் வளர்த்திட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. எண்ணற்ற வெகுஜன அமைப்புகள், தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் இயக்கங்களையும், போராட்டங் களையும் வளர்த்தெடுப்பதற்கான திசைவழியை வரைவு தீர்மானம் அளித்திருக்கிறது.
தத்துவார்த்தப் போராட்டம்
வரைவு தீர்மானம், இந்துத்வா சக்திகள் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தை கூறுகிறது. மதவெறி சக்திகள், சமூகரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் மற்றும் கல்வி அமைப்புகள் என பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த முன்வந்திருப்பதை முறியடிப்பதற்கான உத்திகளைத் துல்லியமான முறையில் உரு வாக்க வேண்டியதன் அவசியத்தை அர சியல் -
நடைமுறை உத்திகளுக்கான ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி இருந்தது. இதன்அடிப்படையில், கட்சிக்கும், வர்க்க மற்றும்வெகுஜனஅமைப்புகளுக்கும் ஐந்து பரிந் துரைகளை வரைவு தீர்மானம் அமைத்துத் தந்திருக்கிறது. இவற்றில், மதவெறி சக்திகளுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கட்சியின் அறிவுஜீவிகள் மற்றும் கலாச்சாரப் பகுதியினரை ஒருங் கிணைத்தல், ஜனநாயக மதச்சார்பற்ற கல்வி யைப் பாதுகாத்திட கல்வி முறையில் தலையிடல், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கை களுக்குத் திட்டமிடல், குறிப்பாக தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் இவற்றை மேற்கொள்ளுதல், மதவெறி சக்திகளால் கட்டவிழ்த்து விடப்படும் சாதிய மற்றும் மூடத்தனமான பழக்கவழக்கங்களுக்கு எதிராக கலாச்சார மற்றும் சமூக நடவடிக்கைகளை வளர்த்தெடுத்தல், நிறைவாக, பழங்குடியினர் பகுதிகளிலும் தலித்துகள் மத்தியிலும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை களை எதிர்த்து முறியடிக்கக்கூடிய விதத்தில் அமைப்பை வளர்த்தெடுத்தல் ஆகியவையும் அடங்கும்.
பாஜக எதிர்ப்பே பிரதானம்
பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதே பிரதானக்கடமை என அரசியல் நிலைப்பாடு வகுக்கப்பட்டிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், மக்களின் வாழ் வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான போராட் டங்களுடன் ஒருங்கிணைப்பதுடன், மத வெறிக்கு எதிராகவும் மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுக்கு எதிரான அர சியல்-தத்துவார்த்த போராட்டங்களையும் ஒருங் கிணைத்திடவும் அறைகூவி அழைக்கிறது.
காங்கிரஸ் எதிர்ப்பும் தொடரும்
பாஜகவிற்கு எதிராக போராட்டத்தின் பிரதான திசை வழி இருந்திடும் அதே சமயத்தில், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றி வந்த காங்கிரசை எதிர்ப்பதும் தொடரும். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளும் மற்றும் அதன் ஊழலும் தான் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு உதவியுள்ளது. எனவே, காங்கிரசுடன் எவ்விதமானப் புரிந்துணர்வோ அல்லது தேர்தல் கூட்டணியோ வைத்துக் கொள்வதை கட்சி யின் அரசியல் நிலைப்பாடு நிராகரிக்கிறது.
இடதுசாரி ஜனநாயக மேடை
அரசியல் நிலைப்பாடு ஒரு புதியதிசை வழியையும் தற்போது சேர்த்துக் கொண்டிருக்கிறது. அதாவது, பிராந்தியக் கட்சிகளின் தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்கள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதையும் வலியுறுத்தியுள்ளது. மாநிலக் கட்சிகளின் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் மற்றும் கொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்பதையும் அரசியல் நிலைப்பாடு உறுதிப்படுத்தி இருப்பதுடன்
அதன் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக மேடையைச் சுற்றி அணிதிரட்ட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக் கிறது. இதுவரை கடைப்பிடித்து வந்த அரசியல் - நடைமுறை உத்தியை மறு ஆய்வு செய்ததன் வெளிப்பாடு இதுவாகும்.
இடது ஜனநாயக முன்னணிவரைவு தீர்மானம், இடது ஜனநாயக முன்னணியின் வடிவம் எத்தகைய தாக இருக்க வேண்டும் என்பதையும் வரையறுத்திருக்கிறது. 10வது அகில இந்திய மாநாட்டிற்குப்பின்னர், முதன்முறையாக, இவ்வாறு ஒரு வரையறையை வரைவு தீர்மானம் அளித்திருக்கிறது. அது வருமாறு: `தற்போது, இடது ஜனநாயக முன்னணிக்குள் ஈர்க்கப்பட முடிகின்ற சக்திகளின் மையமாக, இடதுசாரி கட்சிகள் மற்றும் அவற்றின் வர்க்க, வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள்; பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கின்ற சோசலிஸ்டுகள்; காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான பிரிவினர்; பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினரின் ஜனநாயகப்பூர்வமான அமைப்புகள்; ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளை கையிலெடுத்துச் செயல்படும் சமூக இயக்கங்கள் ஆகியவை அமையும். முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு நேர்விரோதமான, முற்றிலும் மாறுபட்டதொரு திட்டத்தின் அடிப்படையில் இந்தச் சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையை நோக்கி அணிதிரட்டுவதன் மூலமே இடது ஜனநாயக அணியை நோக்கிய இயக்கமானது முறையானதொரு கட்டமைப்பிற்கு வழிகோலும். இந்த வகையிலான ஒரு நடவடிக்கைதான் பொதுவான கோரிக்கை சாசனத்துடன் பல்வேறு வகையான வர்க்க, வெகுஜன அமைப்புகள் அடங்கிய பொதுமேடை ஒன்றை உருவாக்குவதாக அமையும்.’’
சுயேச்சையான பலத்தைப் பெருக்குவோம்!
அரசியல் நிலைப்பாடு, கட்சியின் சுயேச் சையான வலுவை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறியிருக்கிறது. கட்சியும், இடதுசாரி சக்திகளும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய சூழ்நிலை யில், கட்சியின் சுயேச்சையான வலுவைத் தக்கவைத்துக்கொண்டு மேலும் விரிவுபடுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். கட்சியின் சுயேச் சையான வலுவை அதிகரித்திட ஒன்றுபட்ட போராட்டங்களும் கூட்டு இயக்கங்களும் ஒரு முக்கியமான தேவையாகும்.
மக்கள் பிரச்சனைகள், தேசிய இறையாண்மையைப் பாதுகாத்தல், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்கள் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட மேடைகளும், வெகுஜன இயக்கங்களும் இதரஜனநாயக சக்திகளுடனும் காங்கிரஸ் அல்லாதமதச்சார்பற்ற கட்சிகளுடனும் நடத்தப்பட வேண் டும். வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் இவ்வாறு ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்துவதன் நோக்கமே, காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளின் பின் உள்ள மக்களை கூட்டு இயக்கத்திற்குள் கொண்டுவர முயல்வதேயாகும்.
இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவோம்!
இடது மற்றும் ஜனநாயக முன்னணியைப் படிப்படியாக அமைத்திடுவதை நிறைவேற்று வதற்கு, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டிட வேண்டியது அவசியம். கட்சியின் தேர்தல் உத்திகள் கட்சியை வலுப்படுத்துவதற்கும், இடது மற்றும் ஜனநாயக சக்தி களை அணிதிரட்டுவதற்கும் உதவக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். கட்சியின் சுயேச்சையான வலுவை அதிகரித்திட வேண்டும், விரிவாக்கிட வேண்டும், இடதுசாரி ஒற்று மையை வலுப்படுத்திட வேண்டும் மற்றும் இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கூட்டணியை அமைத்திட வேண்டும் என்பவைகளே அர சியல் நடைமுறை உத்தியின் ஆணி வேராக அமைந்திருக்கிறது.
உள்ளூர் பிரச்சனைகளில் போராடுவோம்!
கட்சியை சுயேச்சையானமுறையில் விரி வாக்கம் செய்வதற்கு வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஸ்தலப்பிரச்சனைகள் மீது தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்வது, நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத் துடனான இணைப்புச் சங்கிலியாக அமையும்! கட்சி சமூகப் பிரச்சனைகள் மீதும் நேரடியாகத் தலையிட்டு, போராட்டங்களைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெகுஜன செல்வாக்கை விரிவுபடுத்துவோம்!
கட்சியின் சுயேச்சையான வலுவை விரிவுபடுத்துவது என்பது, மேற்கு வங்கத்திலும் வெகுஜன ஆதரவு தளத்திலும் அரிப்புஏற்பட்டிருப்பதை சரி செய்து முன்னேறு வது என்றும் பொருளாகும். கட்சி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலும், திரிணா முல் காங்கிரசின் வன்முறை வெறியாட்டங் களைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத் திலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை முறித்துக்கொண்டு முன்னேறவும், மக்களின்வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் பிரச்சனை களின் மீது மக்களைத் திரட்டிடவும், மதவெறியர்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை முறியடித்து முன்னேறவும் வேண்டியிருக் கிறது.
கேரளாவிலும் கட்சி தன் ஆதரவு தளத்தைகெட்டிப்படுத்துவதுடன், இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்திடவும் வேண்டியிருக்கிறது. திரிபுராவில், கட்சி தன் ஆதரவு தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது. இடது முன்னணிஅரசாங்கம் மேற்கொண்டுள்ள நற்பணிகள் அங்கே கட்சியின் செல்வாக்கு விரிவடை வதற்கு உதவி இருக்கிறது. இந்த செல்வாக்கை மேலும் கெட்டிப்படுத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்களிலிருந்து இடது முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாத்திடவும் மிகவும் விழிப்புடன் இருந்திட வேண்டும்.
அனைத்து இடதுசாரிகளையும் ஒருங்கிணைப்போம்!
இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்து வது என்பதும் வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றுமொரு பணி யாகும். இதற்கு அனைத்து இடதுசாரிக் கட்சிகளையும், குழுக்களையும் மற்றும் தனிநபர் களையும் ஒரு பொதுவான இடதுசாரி மேடைக்குக் கொண்டுவந்து, அதனை விரிவுபடுத்துவதும் அவசியமாகும். தற்சமயம், ஆறுஇடதுசாரிக் கட்சிகள் கூட்டு நடவடிக்கை களுக்கு ஒன்றிணைந்திருக்கின்றன. இதனை மேலும் விரிவான இடதுசாரி மேடையைக் கட்டக்கூடிய விதத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது தேவை.
- தமிழில் : ச. வீரமணி


முதலாளிகளுக்கு சேவகம் மதவெறி எதேச்சதிகாரம் மோடி அரசின் திரிசூலம் இடைவேளையில் ஒரு மெகா மோசடி


ஈஸ்டர் ஞாயிறு (ஏப்ரல் 5) அன்று பிரதமர் மோடி, நீதித்துறையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளும் கலந்து கொண்ட மாநாட்டில் உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டார்கள். அவர்கள் முன் உரை நிகழ்த்துகையில், “ஐந்து நட்சத்திர பாணியில் விறுவிறுப்பாகச் செயலாற்றி, புலனுணர்வு அடிப்படையில் தீர்ப்புகள் பெறப்படுவதற்கு எதிராக மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இன்றைய தேவை.’’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக் கிறார்.
திருவாளர் நரேந்திர மோடி, `ஐந்து நட்சத்திர செயல்வீரர்கள்’ (‘Five Start Activists’) என்ற சொற்றொடரை, அவர் பிரதமராவதற்கு முன்பே 2002 குஜராத்கலவரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் மூலம் சட்டப் பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகக் குறிப்பிடுகையில் பயன்படுத்தி இருந்தார்.
நீதிபதிகளுக்கு மிரட்டல்
பொது நல மனுக்களை இழிவுபடுத்தி அவர் கூறியதை சட்ட வல்லுநர் கள் மிகவும் கடுமையாக விமர்சித்தனர். “பொது நல மனுக்களின் அதிகாரவரம் பெல்லை, விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக முன்வந்து போராடு பவர்களுக்கு உறுதி அளிப்பதற்காக, 1980களில் உச்சநீதிமன்றத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களை `ஐந்து நட்சத்தி ஆர்வலர்கள்’ என்று குறிப்பிடுவதுஅரசமைப்புச் சட்டத்தின் உண்மையான நெறிமுறைகளுக்கும் உணர்வுகளுக் கும் எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
“உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்ந்திருந்த கூட்டத்தின் முன்புஇவ்வாறு கூறியிருப்பது என்பது, இந்நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத் தின்கீழான விவாதங்களைக் கேட்டு தீர்ப்பு சொல்லாமல், தங்களைப் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்டு ஆணைகள் வழங்க வேண்டும் என்றுகட்டாயப்படுத்தக்கூடிய ஒன்றேயாகும். இது நீதித்துறையை மிகவும் மோச மான முறையில் அவமதிக்கும் செயலாகும் என்று கண்டனக் குரலும் எழுந் துள்ளது.’’
மூன்று தூண்களின் சமநிலை
பிரெஞ்சு தத்துவஞானி மாண்டெஸ்க்கியூ, நவீன ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்க வேண்டிய வரையறை ஒன்றை முன்வைத்திருக்கிறார். அதுதான்இன்றளவும் தொடர்கிறது. அவர், நாடாளுமன்ற/சட்டமன்ற நடவடிக்கைகள், ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் ஆகிய அனைத்தும் ஒரே நபரின்கீழ் வருவதன் ஆபத்துக்களுக்கு அனைவரின் கவனத்தையும் கொண்டு வந்து, இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தின் மூன்றுதூண்களுக்கும் இடையே இருக்க வேண்டிய சமநிலையை அவ்வப்போதுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கருத்தாக்கத்தை நம்முடைய அரசமைப்புச் சட்டம் உட்பட பல நவீனஅரசமைப்புச் சட்டங்கள் தங்கள் அரசமைப்புச் சட்டங்களில் இணைத்திருக் கின்றன. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் (2007இல்) கூறியதைப்போல, “அரசமைப்புச் சட்டம் நாட்டில் நீதித்துறை உட்பட ஒவ் வொரு கட்டமைப்பின் அதிகாரத்தையும் நன்கு வரையறுத்திருப்பதுடன், அவற்றிற்கிடையேயான பரஸ்பர உறவுகள் குறித்த நெறிமுறைகளையும், ஒன்றையொன்று ஆய்வு செய்வது தொடர்பாகவும், அவற்றிற்கிடையிலான சமநிலை குறித்தும் நன்கு வரையறுத்து அளித்திருக்கிறது.’’ இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அதிகாரங்களை வரை யறுத்திருப்பதுடன், இவை மூன்றும் பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் கூறும் அதே சமயத்தில், அரசமைப்புச் சட்டமானது மக்களின் அதிகாரமே எல்லாவற்றிற்கும் மையமானது என்றும் வரையறுத்திருக்கிறது.
நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தொடக்கத்திலேயே, “இந்திய மக்களாகிய, நாம்,’’ என்று மிகவும் செம்மையான முறையில் வரையறுத்திருப்பதுடன், “இந்த அரசமைப்புச் சட்டத்தை நமக்குநாமே இதன்மூலம் நிறைவேற்றி, சட்டமாக்கி, அளித்துக்கொண்டிருக் கிறோம்,’’ என்று முடிகிறது. இவ்வாறு நம் அரசமைப்புச் சட்டம் மிகவும் தெளிவானது. இதன் கருத்தாக்கம், “நீதித்துறையின் கீழ் மறுஆய்வு’’ தானே ஒழிய, “நீதித்துறையின் விறுவிறுப்பான நடவடிக்கை’’ அல்ல.இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொன்றும் அதன் செயல்பாடு கள் குறித்து நன்கு வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றுதன் வரையறையை மீறுமானால் அது மற்ற அமைப்புகளுடன் உரசுவ தோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அளவில் அலங்கோலமான ஆட்சியை உருவாக்கிவிடும்.
ஆட்சியாளர்கள் தங்கள் வரையறையை மீறி சட்டமன்றங் களையும்/நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பொருட்படுத்தாத நிலைமை ஏற்படும் சமயங்களில் நீதித்துறை தலையிடவேண்டிய அடிப்படை உருவாகின்றன. நீதியரசர் வர்மா (2007ல்) குறிப்பிட்டதைப்போல, “சிலசுயநல சக்திகள் தங்கள் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக, அல்லது சில நெருடலான அரசியல் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்து, அதனை நீதிமன்றத் தின்பால் தள்ளிவிட்டு, நீதித்துறை வேண்டுமென்றே துஷ்பிரயோகமான முறையில் முடிவுகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படும் சூழ்நிலையில்,
ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நீதித்துறை செய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடுகிறது’’.
நீதித்துறை ஆணையம் அமைப்பதே தீர்வு
இத்தகைய சமநிலையின்மையைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றைநிறுவிட வேண்டும் என்று முன்மொழிந்திருந்தது. இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கம் செய்த முதல் வேலை, நீதித்துறை நியமனங்கள் சட்டமுன்வடிவைக் கொண்டு வந்ததாகும். தற்போது அரச மைப்புச் சட்டத்தின்கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையிலான சமநிலையின்மையைச் சரிசெய்யாமல், நீதித்துறை நியமனங்கள் குறித்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் (அதாவது செல்வாக்கு செலுத்த வேண்டும்?) என்று இவ்வாறு செய்யப்பட்டிருக்கக்கூடும்.
இது, மீண்டும் ஒருமுறை, நம்நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையை மதிக்காமல் மிதித்துப் புறந்தள்ளி விட்டு, எதேச்சாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான முயற்சியேயாகும்.
நாடாளுமன்ற நடைமுறைகளையும் மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் மதிக்காமல் மிதித்துத் தள்ளுகிறது என்பதற்கு மற்றுமோர் உதாரணம் நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நடைமுறையாகும். நாட்டில் இதற்குமுன்னெப்போதுமே இல்லாத விதத்தில், இடைவேளை விடப் பட்ட மாநிலங்களவையை `தள்ளிவைத்து’ இருப்பதாகும். அதன்மூலம் முன்பு பிறப் பிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் காலாவதியாகிற ஏப்ரல் 5ஆம்தேதிக்கு முன்னர், மீண்டும் ஓர் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், இரு அவைகளில் ஓர் அவை மட்டும் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தள்ளிவைக்கப்பட்டிருப்பது நம் நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் அபூர்வத்திலும் அபூர்வமான ஒன்றாகும். சில மாநிலங்கள் குடியரசுத் தலைவரின் கீழ் நேரடி ஆட்சியிலிருக்கும் சமயத்தில் அம்மாநிலங்களுக்கான பட்ஜெட்டுகளுக்கு ஏற்பளிப்பு தேவைப்படும் சமயத்தில் இவ்வாறு அவசியமான சூழ்நிலை உருவாகலாம்.
ஆனால் அவசரச் சட்டம் பிறப்பிக் கப்பட வேண்டும் என்பதற்காக சமீபகால வரலாற்றில் இவ்வாறு நடந்ததே இல்லை. ஆட்சியாளர்கள் இவ்வாறு நடந்து கொண்டதன் மூலம், மிகவும் விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையின் 234வது அமர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதிச் சட்ட முன்வடிவு ஒன்று இப்போது மீண்டும் மக்களவையின் 235வது அமர்விற்கு அனுப்பப் படவிருக்கிறது.
குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் 235வது அமர்வு 2015 ஏப்ரல்23 லிருந்து மே 13 வரை கூடும் (முன்பு இது ஏப்ரல் 20 அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது) என்று அழைப்பாணை பிறப்பித்திருக்கிறார். அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான அதிகாரம் என்பது பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது ஏற்படுத்திய ஒன்று. காலனியாதிக்கத்தின் கீழ் தேர்வு செய்யப் பட்ட மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்டிருந்த நாடாளுமன்ற/சட்டமன்ற அமைப்புகளின் கருத்துக்களைக் கூட உதறித்தள்ளக்கூடிய அதிகாரத்தை மன்னர் பெற்றிருந்தார். அரசியல் நிர்ணய சபையில் இந்த ஷரத்து நீடிக்கப்படுவதை ஹிரிதே நாத் குஞ்ரு கடுமையாக எதிர்த்தார். 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்கீழ் கவர் னர் ஜெனரல் அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கான அதிகாரம் இருந்து வந்தது;
எப்போதும் “மக்கள் மத்தியில் இது செல்வாக்கின்றியே இருந்து வந்திருக்கிறது,’’ என்று அவர் கூறியதுடன், சுதந்திர இந்தியாவில் இது தொடரக்கூடாது என்று கூறி கடுமையாக ஆட்சேபித்தார். அரசமைப்புச் சட்டத்திலிருந்து இந்த ஷரத்தை நீக்கும் யோச னையை நிராகரித்து, டாக்டர் அம்பேத்கர் பதிலளிக்கையில் கூறியதாவது: “நான் அவைக்கு கீழ்க்கண்ட விவரங்களை சமர்ப்பித்துக் கொள்கிறேன்: சாதாரணமான சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஷரத்துக்களின்படி ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் திடீரென்று மற்றும் உடனடியாக ஏதேனும் பிரச்சனை உருவாகி அதனைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகலாம்.
அத்தகைய அவசரகாலமும் சரிசெய்யப் பட்டாக வேண்டும். அதற்கு சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவருக்கு அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படுவதே தீர்வாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதன்மூலம் ஆட்சி புரிவோர் அக்குறிப்பிட்ட சூழ்நிலையைச் சமாளித்திட முடியும்.’’ எனவேதான், அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும் அதிகாரங்களை அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் 123வது பிரிவு, நம் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இப்போது என்ன அவசரம் வந்தது?
டாக்டர் அம்பேத்கரால் பரிந்துரைக்கப்பட்ட `அவசரநிலைமை’யின்கீழ்தான், மாநிலங்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்க்கும் சூழலில் நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படுகிறதா? நடந்து கொண்டி ருக்கக்கூடிய நாடாளுமன்ற அமர்வுக்கூட்டத்தை, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதற்காகவே தள்ளிவைத்து, ஆணை பிறப்பித்திருப்பது,
மோடி அரசாங் கமானது நாடாளுமன்ற நடைமுறைகளையும் அரசமைப்புச் சட்டத்தையுமே காலில் போட்டு மிதித்துத்தள்ளிவிட்டு, எதேச்சதிகார ஆட்சியை நோக்கி செல்வதற்கான ஆபத்தான நடவடிக்கையாகத் தெரியவில்லையா?இந்த அவசரச் சட்டத்தை மீளவும் பிறப்பிப்பதற்கான நம்பிக்கையிழந்த நிலைஏன்? பிரதமரும் பாஜகவின் தேசிய செயற்குழுவிலும் எதிர்க்கட்சிகள் “பொய் களைப்’’ பரப்புவதாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வது, ஏன்? 2013ஆம் ஆண்டுநிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாஜக முழுமையாக ஆதரவுஅளித்தது என்று சுட்டிக்காட்டுவது பொய்யா? பின் ஏன் இப்போது இத்தகைய மாற்றங்கள்? ஏற்கனவே துவண்டு தூளாகிப் போய்க்கொண்டிருக்கிற இந்திய விவசாயிகளின் நலன்களை மேலும் காவு கொடுத்து அயல்நாட்டு மற்றும் உள் நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயம் அடைவதற்காக, பிரதமரால் இவை கொண்டு வரப்படவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தாராளமாக நிதி அளித்தவர்களுக்கு இது ‘திருப்பி அளிக்கும் தருணம்’என்றும் அதனை அமல்படுத்துவதற்கான முயற்சி என்றும் இதைச் சொல்லக் கூடாதா?இப்படியாக, நரேந்திர மோடி அரசாங்கம் மூன்று விதங்களில் ஆபத்தானதாக மாறி இருக்கிறது.
இந்த ஆபத்துக்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இப் போது தெளிவாகத் தெரியத் தொடங்கி இருக்கின்றன. பெரும்பான்மை நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குணத்தையும் தாக்கக்கூடிய திரிசூலம் என்கிற ஆயுதமாக மோடி அரசின் நடவடிக்கைகள் மாறி இருக்கின்றன. நாட்டு மக்கள் முன் எழுந்துள்ள இத்தகைய சவால் ஒன்றுபட்ட வலுவான மக்கள் போராட்டங்கள் மூலமாக எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
(ஏப்ரல் 8, 2015)
(தமிழில்: ச. வீரமணி)


Sunday, April 5, 2015

ஆள்வோரின் சூழ்ச்சியை முறியடிப்போம்!


காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் ஒருமுறை வெள்ளத்தால் பேரழிவு ஏற் பட்டிருக்கிறது. இதன் தாக்கம் விரைவில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் உணரப்படும். இந்த மாநிலம் முந்தைய இயற்கைப் பேரிடரினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தே இன்னும் மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சட்ட மன்றத் தேர்தல்களும், அதனைத் தொடர்ந்து பாஜகவிற்கும் பிடிபி-க்கும் இடையே அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, கொள்கை எதுவுமற்ற ஒரு கூட்டணி அமைவதற்கான பேச்சுவார்த்தை இழுத்தடித்துக் கொண்டி ருந்ததும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் போய்ச் சேருவதைத் தாமதப்படுத்திக் கொண்டே வந்தன.
முந்தைய இயற் கைப் பேரிடருக்கான நிவாரணம் தொடங்கு வதற்கு முன்னதாக, மீண்டும் ஒரு கொடூர மான இயற்கைப் பேரிடர் இப்போது மீண்டும் மக்களைக் கடுமையாகத் தாக்கி, கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கும் மாநில நிர்வாகத்திற்கும் அனைத்து விதமான உதவிகளும், வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்குத் தேவைப்படும் ராணுவத்தினரின் உதவிகளையும் மற்றும் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் அளிக்க வேண்டி யது மத்திய அரசின் தலையாய கடமை யாகும்.
அதேபோன்று பருவம் தவறி பெய் துள்ள மழையாலும், புயல்காற்றாலும், வடஇந்தியாவில் பல மாநிலங்களில் விளைந்துள்ள வேளாண் பயிர்கள் கடும் நாசம் அடைந்துள்ளன. இதனால் கிராமப் புறங்களில் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் துன்ப துயரங்களைப் போக்குவதற்கு முன் வராது, மோடி அரசாங்கமானது பாதிப்புக் குள்ளான பகுதிகள் குறித்து குறைத்து மதிப்பிடுவதிலேயே அக்கறைகாட்டி வரு கிறது. ஆரம்பத்தில் 181 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் சேதத்திற்குள்ளானதாக மதிப் பிடப்பட்டிருந்தது. இப்போது அது, 106 லட்சம் ஹெக்டேர் நிலம்தான் என்று குறைக்கப்பட்டிருக்கின்றது.
மத்திய அரசு, மாநில அரசுகளைச் சேதத்தின் மதிப்பீட்டைக் குறைத்துக்காட்டி அனுப்பி வைக்குமாறு “நிர்ப்பந்திப்பதாக’’ பீகார்அரசு கடுமையாக விமர்சனம் செய்திருக் கிறது. (தி இந்து, மார்ச் 31, 2015)இவ்வாறு கடும் பயிர்ச்சேதத்திற்கு இதுவரை 14 மாநிலங்கள் உள்ளாகியுள்ளன. இவற்றில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், இமாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களும், பீகாரும் அடங்கும்.
நாட்டில் ஏற்கனவே வேளாண் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளை இது மேலும் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. கடந்த சம்பா பருவத்தில் பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப் பரப்பளவு கடுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. சுதந்திரம் பெற்றபின் இவ்வாறு வீழ்ச்சி அடைந்தது இதுவே முதன்முறையாகும். வேளாண் மையில் ஈடுபடுவது, தங்கள் அடிப் படை வாழ்வாதாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குக் கூட பயன்பட வில்லை என்ற காரணத்தால் பெரும் பகுதி விவசாயிகள் வேளாண் தொழிலை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்பது தெளிவு. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
மத்திய அரசின் கீழ் இயங்கும் வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகளுக்கான மத்திய நிறுவனம் நிர்ணயித்துள்ள உற்பத்திச் செலவினம் குறித்த தொகையைவிடக் குறைவாகத்தான் குறைந்தபட்ச ஆதார விலைகடந்த மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு வருவதாக, சென்றஆண்டு நாடாளுமன்றத்தில் முந் தைய ஐமுகூ-2 அரசாங்கத்தின் சார்பில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் சரத் பவார் ஒப்புக்கொண்டி ருந்தார். வேளாண்மைச் செலவினங் களுக்காக விவசாயிகள் கடன் வாங்கி யதை அடைக்க முடியாது திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், வேளாண் உற்பத்தியில் ஆதாயம் இல்லாததால், கடன் வலையிலிருந்து மீள முடி யாது, பல விவசாயிகள் தற்கொலைப் பாதைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இவற்றின் காரணமாக, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. “பருவம் தவறிபெய்த மழை வடநாட்டின் பல பகுதிகளிலும் மிகப்பெரிய அளவிற்கு குளிர்காலப் பயிர்களையும் மிகவும் மோசமாகப் பாதித்திருக்கிறது. இதுவும் விவசாயி களின் தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாகும்’’ என்று அறிக்கை ஒன்றுதெரிவிக்கிறது. மேலும், அந்த அறிக்கையானது “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ எவ்வித நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லை என்றும் வேளாண் விளைபொருள்களின் விலைகள் நிலையாக இருப்பதற்கும் எவ்வித உத்தர வாதத்தையும் மோடியால் அளிக்க முடியவில்லை என்றும் கிராமத்தினர் குறைகூறுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டிருக் கிறது.
மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட பிரதமர் மோடியின் வானொலி உரை யான, “மனதின் குரல்’’ என்கிற உரையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் “பொய்களைப் பரப்புவதாக’’க் குறிப் பிட்டதுடன், நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவு கிராமப்புறங்களில் வேலைகளை உருவாக்க உதவும் என் றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, ஆர்எஸ்எஸ்/பாஜகவின் கீழ் இயங்கும் பாரதிய விவ சாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் புத்தா சிங் என்பவர், “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்கு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுப்பதற்குப் பதிலாக, குறிப்பாக இம்மாதம் கடுமையாக மழை பெய்தபின்பு, மோடியும் அவரது அரசாங்கமும் நிலம் கையகப்படுத் தல் சட்டமுன்வடிவைக் கொண்டுவருவ திலேயே தன் நேரத்தையும் சக்தியையும் செலவு செய்து கொண்டிருக்கின்றன.“
(2015 மார்ச் 31, மின்ட், ஏட்டில் வெளியாகி இருந்த ரெய்ட்டர் அறிக்கையின் மேற்கோள் என்று கூறினார்). “பொய்களைப் பரப்புகின்றன’’ என்று பிரதமர் மோடிஎதிர்க்கட்சிகள் மீது `குற்றம்’ சுமத் தினார் அல்லவா? உண்மையில் யார்“பொய்களைப் பரப்புவது’’ என்பது இதன் மூலம் நன்கு தெளிவாகும். ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுவதுபோல, “செருப்பு கால்மாற்றி போடப்பட்டிருக்கிறது.’’இவற்றின் விளைவாக நாட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி கணிசமான அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
பொது விநியோக முறையை வலுப் படுத்தி, நாட்டு மக்களுக்கு உணவு தானியங்கள் போய்ச்சேருவதை உத்தரவாதப் படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கமானது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளா தார வளர்ச்சியைத் தூக்கிநிறுத்த வேண்டும் என்பதற்காக, வேளாண் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்வதி லேயே குறியாக இருக்கிறது. இதன் காரணமாக நம் நாட்டில் மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்தோ, சமூகத்திற்கு இதுநாள்வரை உணவை அளித்து வந்த உழவர்களே இன்றைய தினம் உண வில்லாமல் பசி, பட்டினியால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு, தற்கொலைப் பாதைக்கு அவர்கள் தள்ளப்படுவது குறித்தோ மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்படாது,
உழவர்கள் உற்பத்தி செய்த அரிசி, தேயிலை, காப்பி, தானியங்கள், எண் ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் என அனைத்தையும் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதிலேயே குறியாக இருக்கிறது. அடுத்து, நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை குறித்து, எதார்த்த நிலை என்ன என்பதைப் பார்ப்போம். “வருடாந்திர உள்கட்டமைப்பு வளர்ச்சி விகிதம் 2015 பிப்ரவரியில் 1.4 சதவீத அளவிற்கு மந்தமாகி இருக்கிறது. இதற்குப் பிரதான காரணம், உருக்கு, ரசாயன உரம் மற்றும் சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி கடுமையாகக் குறைந் திருப்பதேயாகும் என்று அரசின் புள்ளிவிவரங்களே செவ்வாய் அன்று காட்டி யிருக்கிறது. (2015 மார்ச் 31).
இயற்கை எரிவாயு, உருக்கு மற்றும் கச்சா உற்பத்தி 8.1 சதவீதம், 4.4 சதவீதம் மற்றும் 1.9 சதவீதம் அளவிற்கு முறையே வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. இவ்வாறு மத்தியவர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரி விக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தொழில்உற்பத்தியில் நிலக்கரி, கச்சா எண்ணெய், எண்ணெய் சுத்திகரிப்பு, இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்ட், மின்சாரம் மற்றும் ரசாயன உரங்கள் 37.9 சதவீதமாகும். (பிசினஸ் ஸ்டாண்டர்டு, மார்ச் 31, 2015)நிலைமைகள் இவ்வாறு இருந்தும் கூட, மோடி அரசாங்கம், தரவு கணக் கீடுகளுக்கான “அடிப்படை ஆண்டை’’ மாற்றி இருக்கிறது.
இவ்வாறு மாற்றி அமைத்ததன் மூலம் உலகில் பொருளா தாரத் துறையில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருப்பதுபோன்று ஒரு சித்திரத் தை ஊடகங்களின் மூலம் திட்டமிட்டுத் தீட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையில் மோசமாகிக் கொண்டிருக்கும் பொரு ளாதார நிலை குறித்து, மக்கள் மனதின் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டிய தருணம் இதுவாகும். மோடி அரசாங்கம் இவ்வாறு பொருளாதார நிலைமைகள் குறித்து அளித்துள்ள நன்னம்பிக்கை, இந்தியகார்ப்பரேட்டுகளால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.
2015 மார்ச் மாத பிடிஐ செய்திநிறுவனத்தின் செய்தியின்படி, “இந்திய பெரும் கார்ப்பரேட்டுகள் தங்கள்முதலீடுகளை அதிகரித்திட இன்ன மும் திட்டமிடவில்லை. இந்தியப் பெரும்கார்ப்பரேட்டுகளின் மூலதனச் செல வினம் 2014இல் இருந்ததைவிட வரும் 2016இல் சுமார் 10-15 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று நாங்கள் நம்புகிறோம்,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? “இந்தியக் கார்ப்பரேட் டுகள் அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் காரணமாக அல்லது ஆட்சியாளர்கள் கூறுவது போன்ற இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் காரணமாக இன்னமும் பயன் அடையவில்லை’’ என்று அது கூறுகிறது.
2014 உடன் 2016ஐ ஒப்பிடுகையில், பொருளாதார மந்தம் உள்கட்டமைப்புத் துறையில் 20 சதவீதம் அளவிற்கும், உலோகங்கள் மற்றும் நிலக்கரித்துறை யில் 30 சதவீதமும் குறைந்திருக்கும் என்றும் அறிக்கை மேலும் கூறுகிறது. 2014 மூன்றாவது காலாண்டுக்குப் பின்னர், மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலைமையும் மிகவும் பரிதாபகரமான நிலைக்குச் சென்றுவிட்டது என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், வேலைவாய்ப்பு 13.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக அது குறிப்பிடுகிறது. மக்க ளின் வாழ்நிலையைப் பொறுத்தவரை, அவர்களின் வாழ்நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பது தொடர்கிறது. அத் தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக் கின்றன. காய்கறிகள், பழங்கள், உணவுதானியங்கள், வெங்காயம், சர்க்கரை, சமையல் எரிவாயு மற்றும் எல்லாவற் றிற்கும் மேலாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்திருப்பதே இதற்குக் காரணமாகும். நாம் முன்பே குறிப்பிட் டிருந்ததைப்போல, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும், அதன் பயன்கள் மக்களுக்குத் திருப்பிவிடப்பட வில்லை. மாறாக, மோடி அரசாங்கம் கலால் வரியை நான்கு தடவைகள் செங்குத்தாக உயர்த்தி, அரசாங்கத்தின் வருவாயைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டுவிட்டது.
இதுதான் எதார்த்த நிலை பிரதமர் மோடி அவர்களே. எனவே, “பொய்களைப் பரப்பிக் கொண்டிருப்பது’’ யார்? எதிர்க் கட்சிகளா, அதிலும் குறிப்பாக இடது சாரிக் கட்சிகளா? அல்லது இந்த அரசாங்கமா?மோடி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு அடைவதற்கு முன்பாகவே, மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்கு தல்கள் தொடுக்கப்பட்டுவிட்டன. மேலும், மோடி அரசாங்கத்தின் அரவணைப் போடு, மதச் சிறுபான்மையின ருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் மற்றும் அதன்கீழ் இயங்கும் அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதல்களும், மதச் சகிப் பின்மையும் அதிகரித்து வருகின்றன. இவை, சமூக நல்லிணக்கத்திற்கும், மக்களின் ஒற்றுமை மற்றும் நாட்டின் ஒருமைப் பாட்டிற்கும் பெரும் சவால்களாக எழுந்துள்ளன.
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட இவர்களின் சூழ்ச்சித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும். மக்களின் மகத்தான மற்றும் சக்திமிக்க போராட்டங்கள் மூலமாகவே இதனை எதிர்கொள்ள முடியும்.
(ஏப்ரல் 1, 2015)
தமிழில்: ச.வீரமணி