Saturday, October 31, 2009

ப.சிதம்பரம் பாசாங்கு செய்ய வேண்டாம்: பிரகாஷ் காரத்



புதுடில்லி, அக். 31-

தன்னுடைய அமைச்சரவை சகாவின் முரண்பாடான நிலைப்பாட்டைச் சரிசெய்ய முயலவேண்டுமேயொழிய, மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பழிசுமத்தி பாசாங்கு செய்திட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரகாஷ்காரத் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நக்சலைட்/மாவோயிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைக் கண்டுகொள்ளாது ஒதுக்கியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் எப்போதுமே மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு எதிராகத்தான் இருந்து வந்திருக்கிறார்களேயொழிய, மார்க்சிஸ்ட்டுகளுடன் எந்தக் காலத்திலும் இணைந்து போராடியது இல்லை. அவர்கள் 1960களின் பிற்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தபின், மேற்கு வங்கத்தில் செயல்பட்ட இடது அதிதீவிரவாதிகள் மார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் ஊழியர்களையுமே குறிவைத்துத் தாக்கி வந்தார்கள். இவர்களின் தாக்குதலில் 1970களின் முற்பகுதியில் நூற்றுக்கணக்கான ஊழியர்ளையும் ஆதரவாளர்களையும் மார்க்சிஸ்ட் கட்சி இழந்துள்ளது.

பூர்ஷ்வா காங்கிரசை எதிர்த்திடும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர், மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து போராடினார்கள் என்று ப. சிதம்பரம் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐமுகூ அரசாங்கமானது சுமார் நான்காண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் முட்டுக் கொடுக்கப்பட்டு ஆட்சியில் நீடித்து வந்தது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
மாவோயிஸ்ட்டுகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினரின் அணுகுமுறை தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளவை, தவறானவைகளாகும். பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட அரக்கத்தனமான சட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தே வந்திருக்கிறது. இத்தகைய சட்டங்கள், பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக, ஏவப்பட்டிருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகள் தத்துவார்த்தரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும், அவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது அவற்றை உறுதியான நிர்வாக நடவடிக்கைகளின் மூலமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுமே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளை எந்தக் காலத்திலும் லஸ்கர்-இ-தொய்பா அல்லது ஜைசி-இ-முகமது இயக்கங்களுடன் இணைத்துப் பார்க்கக் கூடாது. மாவோயிஸ்ட்டுகள் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பதிலிருந்தே இவ்வித்தியாசத்தை அவர் அங்கீகரிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆயினும், அவரது அமைச்சரவை சகா ஒருவர், அவரது அமைச்சகத்திற்கும், அரசாங்கத்திற்கும் எதிரான விரும்பத்தகாததொரு நிலைப்பாட்டை மேற் கொண்டிருக்கிறார் என்பது உள்துறை அமைச்சர் நன்கு அறிவார். லால்காரில் மத்திய பாதுகாப்புப் படையினரும் மாநிலப் பாதுகாப்புப் படையினரும் மாவோயிஸ்ட்டு களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளைத் துவக்கிய சமயத்திலிருந்தே, மத்திய ரயில்வே அமைச்சர் அந்நடவடிக்கைக்கு எதிராகத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மத்திய பாதுகாப்புப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரி வந்தார். மேலும் அவர், மாவோயிஸ்ட்டுகளின் பின்னணியில் இயங்கிடும் ஓர் அமைப்புக்கு ஆதரவினை அளித்து வருகிறார். அவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவது தொடர்பாக தனக்கு முன்னமேயே தெரியும் என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தங்களுடைய அமைச்சரவைக்குள்ளேயே திகழும் இத்தகைய வெளிப்படையான முரண்பாட்டைச் சரிசெய்திட ப.சிதம்பரம் முன்வரவேண்டுமே யொழிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சம்பந்தம் இல்லாத வகையில் போலித்தனமானவற்றைக் கூறாதிருத்தல் நன்று.’’

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறியுள்ளார்.
----

Friday, October 30, 2009

ப.சிதம்பரம் கூற்றிற்கு சீத்தாராம் யெச்சூரி விளக்கம்



புதுடில்லி, அக். 31-
திரிணாமுல் காங்கிரஸ் தொடர்பாக ப.சிதம்பரம் அளித்துள்ள கூற்றினை மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி விளக்கம் அளித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவைகளாகும் என்று ப.சிதம்பரம் கூறியிருப்பதனை மறுத்து, தக்க ஆதாரங்களை சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். வெள்ளிக்கிழமையன்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

‘‘மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றினை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, மத்திய பாதுகாப்புப் படையினரும், மாநிலப் பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர். அவை தொடர வேண்டும். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை,

மத்தியில் அமைச்சராக உள்ள திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த சிசீர் அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்ல, ராஜதானி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படவிருக்கும் செய்தி தனக்கு முன்னமேயே தெரியும் என்று கூறியிருக்கிறார். இது ஓர் ஆழமான விஷயமாகும். மத்திய அமைச்சர் ஒருவருக்கு நடக்கப் போகும் குற்ற நடவடிக்கை குறித்து ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாவோயிஸ்ட்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ரீதியாக அன்பும் ஆதரவும் அளித்து வருவதாக நாம் ஏற்கனவே கூறி வந்திருக்கிறோம். இப்போது, நாம் கூறிவந்தவற்றை அமைச்சரின் பேட்டி உறுதிப்படுத்துகிறது. இது ஒரு மிகவும் மோசமான விஷயம். எனவேதான் இதனை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்.
இரண்டாவதாக, மாவோயிஸ்ட்டுகளின் ஆபத்துக்கள் குறித்து மார்க்சிஸ்ட்டுகள் மிகவும் காலதாமதமாகத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படும் கூற்று குறித்ததாகும். மக்கள் தங்கள் நினைவாற்றலையும் வரலாற்றையும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நக்சலைட் இயக்கம் என்பது 1967இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சிறு குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது மேற்கு வங்கத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்தில் உருவானதால், இதற்கு நக்சல்பாரி இயக்கம் என்றும் நக்சலைட் இயக்கம் என்றும் இவ்வியக்கம் அழைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தங்கள் இயக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்று அமைத்துக் கொண்டனர். அவர்கள் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து வந்தனர். 60களின் பிற்பகுதியிலும் 70களின் முற்பகுதியிலும் நாங்கள்தான் அவர்களின் கொலைவெறித் தாக்குதல்களின் இலக்காக இருந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தின் மூலமாக அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அதனால்தான் அவர்களால் பிற மாநிலங்களில் வேரூன்ற முடிந்த அளவிற்கு, மேற்கு வங்கத்தில் முடியவில்லை.

இவ்வாறு, இடது அதிதீவிர கட்சிகள் நம் நாட்டில் பிறப்பெடுத்த நாட்களிலிருந்தே, மார்க்சிஸ்ட் கட்சியை இலக்காக வைத்துத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சியை அழித்த ஒழித்தால்தான் நாட்டில் மக்கள் யுத்தமும் விடுதலையும் சாத்தியம் என்று அவர்கள் கருதினார்கள். எனவே அது உருவான காலத்தில் - 60களின் பிற்பகுதியிலும் 70களின் முற்பகுதியிலும் - ஆயிரக்கணக்கான ஊழியர்களை நாங்கள் இழந்திருக்கிறோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) உருவான பிறகு, அது மேலும் 32 குழுக்களாக சிதறுண்டது. அவற்றில், இரு பெரிய குழுக்கள் (ஆந்திராவில் செயல்பட்டு வந்த மக்கள் யுத்தக் குழு மற்றும் பீகாரில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் ஒருங்கிணைப்பு மையம்) ஒன்றிணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்று உருவானது. மற்ற குழுக்கள் தேர்தல்களில் பங்கெடுக்கத் துவங்கிவிட்டன.

இது வரலாறு. இதனை எவரும் மறக்கவும் கூடாது, திரிக்கவும் கூடாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே இந்த அதிதீவிர இடதுசாரிக் குழுக்களின் பிரதான இலக்காக இருந்து வந்திருக்கிறது.

இன்றும் கூட மேற்கு வங்கத்தில் கடந்த நான்கு வாரங்களில் எங்களின் 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ரீதியாக அளித்து வரும் அன்பும் ஆதரவும்தான், மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் வங்கத்தில் புத்துணர்ச்சி பெற்று செயல்படக் காரணமாகும்.

நக்சலைட் இயக்கம், மேற்கு வங்கத்தில் உருவாகியிருந்தபோதிலும் அதனால் அங்கு நீடித்து வளர முடியாமல் போனது. காரணம், மேற்கு வங்கத்தில் அமைந்த இடது முன்னணி விவசாயிகள் ஆதரவுக் கொள்கைகளை மேற்கொண்டு, நிலச்சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து, நிலங்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ததால், அதி தீவிரக் குழுக்கள் அங்கு நீடித்திருக்க முடியவில்லை. இப்போது திரிணாமுல் காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவினைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மீண்டும் வங்கத்திற்குள் தங்கள் தாக்குதலை எங்களுக்கு எதிராகத் தொடுத்திருக்கிறார்கள். இவ்வாறான தாக்குதல்களில் பெரும்பாலானவை மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் - ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் - என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகளாகும்.

எனவேதான், இவற்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்று அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மாவோயிஸ்ட் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திடவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

...

Thursday, October 29, 2009

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம்:விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்



மாவோயிஸ்ட்டுகள், புவனேஸ்வர் - புதுதில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை, பான்ஸ்டாலா ரயில் நிலையம் அருகில் ஜாக்ரம் - கரக்பூர் பிரிவில், ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கைகள் காரணமாக, பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் இல்லை, ரயிலும் விடுவிக்கப்பட்டுவிட்டது. ரயிலில் இது தொடர்பாக எழுதப்பட்டிருந்த வாசகங்களின்படி, சமீபத்தில் காவல்துறை யினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் பின்னணியில் இருந்து இயக்கி வரும் ‘போலீஸ் அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் நடவடிக்கைக் குழு’வின் தலைவர் சத்ரகார் மஹாதோவை விடுவித்திடக் கோரி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உய்த்துணர முடிகிறது. (மேற்படி வாசகங்களை, மிகச் சாமானிய பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் எவரும் எழுத வில்லை என்பதும், நன்கு படித்த ஒருவர் தான் அதனை எழுதி யிருக்க முடியும் என்பதும் அது எழுதப்பட்ட தன்மையிலிருந்து அறிய முடிகிறது.)

ஒட்டுமொத்த இந்நிகழ்வானது பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது. ராஜதானி அல்லது சதாப்தி ரயில்கள் சுமார் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்பதும், ரயில் பாதையில் ஏதேனும் தடைகள் இருந்தாலும் கூட, அவசரமாக பிரேக் செய்தால், அந்தத் தடைகள் தூக்கி எறியப்பட்டுவிடும் என்பதும், ரயிலுக்கும் சேதத்தை ஏற்படுத்திவிடும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். ஆயினும் இந்த நிகழ்வின்போது, ரயில் மிகவும் அமைதியான முறையில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட வுடனேயே மத்திய ரயில்வே அமைச்சர் அளித்திட்ட பதில் மிகவும் வேடிக்கையான - விசித்திரமான ஒன்று. வழக்கம்போல் இந்த சம்பவமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களால் தன் செல்வாக்கைக் குலைத்திடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்று கூறினார். ஆயினும், நிறுத்தப்பட்ட ரயிலில் நிறுத்தப்பட்டவர்களால் எழுதப்பட்ட வாசகங்கள், இதனைச் செய்தது மாவோயிஸ்ட்டுகள் என்பதை வெளிப்படுத்தியபோது, அவர்களுடன் தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராயிருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடத்தை அவர்கள் அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவரான சிசீர் அதிகாரி என்பவர், இத்தகைய தாக்குதல் நடைபெறப்போகிறது என்று தனக்கு முன்னமேயே தெரியும் என்று ஊடகங்களிடம் பீற்றிக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக, தன் அமைச்சரவை சகா ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் குறித்து முன்னமேயே தெரிந்திருப்பது தொடர்பாக, பிரதமர் விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகும்.

திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகளுக்கு உடந்தையாக இருந்து வருவது தொடர்பாக எண்ணற்ற விவரங்களை இப்பகுதியில் நாம் ஏற்கனவே அளித்திருக்கிறோம். சத்ரகார் மஹாதோ என்பவர் ‘காவல்துறை அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள்குழு’ என்று அழைக்கப்படுகின்ற அமைப்புக்குத் தலைவராவதற்கு முன்பு அப்பகுதி திரிணாமுல் தலைவராக இருந்திருக்கிறார். அதேபோன்று ஊடகங்கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள ஆர்வம் காட்டும் மாவோயிஸ்ட்டுகளின் தலைவராகத் தன்னைத் தானே கூறிக்கொள்ளும் கிஷன்ஜி என்பவரும் தாங்கள் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக மமதா பானர்ஜியைப் பார்க்கவே விரும்புகிறோம் என்று இதற்குமுன் ஒருதடவை பிரகடனம் செய்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே தாங்கள் நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரசாருக்கு உதவியதற்கும், இப்போது நாங்கள் லால்காரில் உதவிக் கொண்டிருப் பதற்கும், அவர்களிடம் இருந்து நாங்கள் இப்போது கைமாறு எதிர்பார்க்கிறோம் என்று கேட்டிருக்கிறார். இவற்றிலிருந்து திரிணாமுல் காங்கிரசார் அளித்திடும் அன்பாதரவு மற்றும் பாதுகாப்பின் பின்னணியில்தான் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகும்.

இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் உடன்பாட்டினால் தான், ரயிலை நிறுத்தி சேதப்படுத்திய மாவோயிஸ்ட்டுகளைக் கண்டித்திட திரிணாமுல் காங்கிரஸ் முன்வரவில்லை. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாட்டினால்தான் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளுக்கு எதிராக மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாவோயிஸ்ட்டு வன்முறை பெரும் சவாலாக இருக்கிறது என்று அடிக்கடி கூறும் பிரதமரின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி, இவ்வாறு அதே மாவோயிஸ்ட்டுகளுக்கு அவர்களின் அனைத்து வன்முறை நடவடிக்கைகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதுதான். இவ்வாறு ஐமுகூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தபோதிலும், எவ்விதமான லஜ்ஜை யுமின்றி அவை தொடர்ந்து ஒரே கூட்டணியில் இருப்பதுதான் நாட்டின் துர்ப்பாக்கிய நிலையாகும். இது தொடர்பாக பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டவராவார்.
அதே சமயத்தில், ரயில்வே ஊழியர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அசௌகரியமான நிலையும், பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகின்றன. புருலியாவில் உள்ள ரயில்வே ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர், ரயில்வே நிலையங்களில், ரயில் பாதைகளில் மற்றும் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரயில்வே ஊழியர்களுக்கு, மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல்களிலிருந்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மிகுந்த அச்சத்துடனேயே பணியாற்ற வேண்டி யிருக்கிறது என்று கூறியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே உள்ள உறவின் காரணமாக திரிணாமல் காங்கிரசின் தலைவர் ரயில்வே அமைச்சராக இருக்கும் வரை நிலைமைகளில் மாற்றம் ஏதும் வர வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

எனவே நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்து ஓர் ஆழமான விசாரணை மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும். நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிக முக்கியமான கருவியாக விளங்கும் இந்தியன் ரயில்வேயின் பாதுகாப்பினை இவ்வாறு மாவோயிஸ்ட்டுகளுக்கு அனைத்துவிதமான வகைககளிலும் ஆதரவினையும் பாதுகாப்பினையும் அளித்து வரும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் காரணமாக கடும் ஆபத்திற்குள்ளாக்கலாமா? மேலும், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மாவோயிஸ்ட்டு களை அனுமதிக்கலாமா? நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று பிரதமரும் ஐமுகூ-2 அரசாங்கமும் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்திட வேண்டும். ராஜதானி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு, அதன் ஓட்டுநர்கள் கடத்தப்பட்ட நிகழ்வுகள் குறித்தும், நாட்டின் நலன்களுக்கு எதிராகவும், அப்பாவி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, October 25, 2009

அமைச்சர் ஆ.ராசா ஏன் பதவி விலக வேண்டும்? - ‘பயனீர்’ நாளேடு தரும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்




அமைச்சர் ஆ. ராசா பொறுப்பு வகிக்கும் அமைச்சகத்தின் கீழான பல்வேறு அலுவலகங்களிலும் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்களிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, முக்கியமான பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி யுள்ளனர். ஆயினும் அமைச்சர் ஆ.ராசா, தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதி முறைகளைச் சரியாகத்தான் கடைப் பிடித்துள்ளதாகவும் எனவே தான் பதவி விலகப் போவதில்லை என்றும் கூறி யிருக்கிறார்.

புதுதில்லியிலிருந்து வரும் ‘தி பயனீர்’ நாளேடு அவர் ஏன் பதவி விலக வேண் டும் என்பதற்கான ஆதாரங்களை அடுக் கியுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:

“2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக் கீடு தொடர்பாக, நடைபெற்றுள்ள முறை கேடுகள் குறித்தும், அதில் அமைச்சர் ஆ. ராசாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து ‘தி பயனீர்’ நாளேடு ஆதாரங் களை வெளியிட்டு வந்திருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சரவை ஏற்பளிப்பு தரப்படவில் லை என்பதிலிருந்து இது தொடங்கு கிறது. அமைச்சர் ஆ.ராசாவின் கட்ட ளைக்கிணங்கவே இது தரப்பட்டிருக் கிறது.

2007 மே மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தொலைத் தொடர் புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அமைச்சர் பொறுப்பிலிருந்து கழற்றிவிடப்பட்ட பிறகு, அமைச்சர் ஆ.ராசா அந்த இடத்திற்கு வந்தார்.

இதனை அடுத்து, இவ்வாறு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக விண்ணப் பித்த புதிய நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் அனைவருமே அதுநாள்வரை அமைச்சர் ராசாவின் ஆளுகையின் கீழிருந்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ‘ரியல் எஸ்டேட் துறை’யின் கீழ் பதிவு செய்திருந்த நபர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கு விண் ணப்பிப்பதற்கான கெடு நாள் 2007 அக் டோபர் 1 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆ. ராசா, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் தரப்படும் என்று அறிவித்தார். அப்போது டெலிகாம் செய லாளராக இருந்த டிஎஸ் மதுர் மற்றும் ட்ராய் சேர்மன் நிரூபேந்திரா மிஷ்ரா இந்த முறைக்குக் கடும் ஆட்சேபணை தெரி வித்தனர், ஏலம் விட்டுத் தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத் தினர்.

மதுர் ஆட்சேபித்ததால், அவர் 2007 டிசம்பர் 31ல் ஓய்வு பெறும் வரை, இது தொடர்பான கோப்புகளை ஆ.ராசா, கிடப் பில் போட்டார். பின்னர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணியாற்றிவந்த, ராசாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய சித்தார்த் பெஹுரா, புதிய டெலிகாம் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவியேற்ற ஒருசில நாட்களி லேயே, ஒரு பத்திரிகைக் குறிப்பின் மூல மாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கோரு வதற்கான கெடு நாளை 2007 அக்டோபர்1 லிருந்து, ஆறு நாட்கள் முன்தேதியிட்டு, 2007 செப்டம்பர் 25 என்று எவரும் எதிர்பாராத விதத்தில் ஓர் ஆணையை வெளியிட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட ஸ்டெல் என்னும் நிறுவனம், தில்லி உயர்நீதி மன்றத்தில் இந்த ஆணையை ஆட்சே பித்து வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற ‘ஒரு நபர் பெஞ்சு’, இந்த ஆணையை ரத்து செய்தது. உயர்நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மத்திய டெலிகாம் துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து, அது நிலுவையில் இருந்து வருகிறது. ஆயினும் உயர்நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு ‘இடைநிறுத்த ஆணை’ (ஸ்டே) வழங்கிட மறுத்துவிட்டது.

அமைச்சர் ஆ.ராசா இவ்வாறு சித் தார்த் பெஹுரா மூலமாக உத்தரவுகள் பிறப்பித்தபோதிலும், அப் போது பதவி யிலிருந்த ‘ட்ராய்’ சேர்மன் மேற்படி உத்த ரவுகளை ஆட்சேபித்து, அமைச்சகத் திற்குப் பல்வேறு பரிந்துரைகளையும், வழி காட்டும் நெறிமுறைகளையும் அளித்துள் ளார். ஆனால் அவை அனைத்தும் அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள் ளன. அனைவரும் போட்டி போடக்கூடிய ஏல முறையை வலியுறுத்திய ட்ராய் பரிந் துரைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு, ராசா, வெளிப்படையற்ற மற்றும் பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்கிற முறையையே பின்பற்றினார்.

‘ட்ராய்’ மட்டுமல்ல, ப.சிதம்பரம் தலைமையிலிருந்த நிதி அமைச்சகமும் கூட, ‘முதலில் வருவோருக்கு முன் னுரிமை’ என்னும் கொள்கையை வெளிப் படையாகவே எதிர்த்தது. இந்தப் பிரச் சனை தொடர்பாக அப்போது நிதிச் செய லாளராக இருந்த டி.சுப்பாராவுக்கும் (இப் போது ரிசர்வ் வங்கி கவர்னர்) பெஹுரா வுக்கும் இடையில் கடிதங்கள் பரிமாற்றம் வாயிலாக சண்டையே நடந்தது.

ராவ், ஸ்பெக்ட்ரம் உரிமங்களை, 2001இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு, 2008இல் தரக்கூடாது என்று கூறி இதனை ஆட்சேபித்தார். நிதிச் செயலாள ரும் கூட, விலைகள் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், இந்த முறையை ரத்து செய்திடுமாறு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். தற்போதுள்ள சந்தை விலைக்கேற்ப ஏலம் மூலமாக விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ராசாவின் கேள்விக்குரிய இத்தகைய நடவடிக்கைகளினால் பலன் அடைந் தவை அதுநாள்வரை ரியல் எஸ்டேட் கம்பெனிகளாக இருந்த ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள்தான். பெஹுரா இந்தக் கம்பெனிகளுக்கு ஆதரவாக, இந்தக் கம்பெனிகள் தங்கள் பங்குகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மாற்றக் கூடிய வகையில் வசதிகள் செய்து கொடுத்து, உத்தரவுகளைப் பிறப்பித்தார். மூன்றாண்டுகளுக்குள் ஒரு நிறுவனம் தங்கள் உரிமையாளர்களை மாற்றக் கூடாது என்கிற நிபந்தனைகள் கூட இந்தக் கம்பெனிகளுக்காக கைவிடப் பட்டன.

இவ்வாறு சித்தார்த் பெஹுரா பல்வேறு வழிகளிலும் உதவியதற்காக, அவர் ஓய்வுபெற்ற பின்னரும் கூட நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து 2009 அக் டோபர் 1 அன்று பெஹுரா சென்னையில் உள்ள பொதுத்துறை - தனியார் துறைக் கூட்டு நிறுவனமான ஆல்கடேல் ஆராய்ச்சி மையத்தின் சேர்மனாக நியமிக்கப் பட்டார்.

இவ்வாறு பயனீர் நாளேடு தெரிவித் துள்ளது.

விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வி மன்மோகன் அரசு மீது பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு




புதுதில்லி, அக். 25-

ஆசியான் நாடுகளுட னான தாராள வர்த்தக உடன்பாட்டில் இந்திய விவசாயிகளை பாதிக்கும் விதத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரி விக்கிறது என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிர காஷ் காரத் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அக்டோபர் 23 - 25 தேதிகளில் புதுதில் லியில் ஏ.கே. கோபாலன் பவனில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவு களை விளக்கி ஞாயிறு மாலை நடைபெற்ற செய்தி யாளர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறியதாவது:

கடந்த ஐந்து மாதங் களில், காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐமுகூ அரசு, முன்பு கடைப் பிடித்த அதே தாராளமய, தனியார்மய உலகமயக் கொள்கைகளைத்தான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. மேலும் அது கூடுதலாக அமெரிக்காவுட னான தன் கேந்திர உறவு களை வலுப்படுத்திக் கொள்வதிலும் முகப்பு காட்டுகிறது.

ஐமுகூ அரசின் பொரு ளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, லாபத்தை அள்ளித்தரும் என்டிபிசி போன்ற நவரத்தினா பொதுத் துறை நிறுவனங்களின் பங் குகளைக் கூட தனியாருக் குத் தாரை வார்க்க நடவ டிக்கைகளை எடுத்து வரு கிறது. லாபம் ஈட்டும் நவ ரத்தினா பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கமாட்டோம் என்று முன்பு ஐமுகூ அர சாங்கம் சொல்லி வந்தது. ஆனால் தற்சமயம் உலக வங்கியிடமிருந்து 2 பில் லியன் டாலர்கள் கடன் வாங்கியதை அடுத்து,உலக வங்கியின் நிபந்தனைக ளுக்கு கட்டுப்படும் விதத் தில் நவரத்தினா பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்த் திட இருக்கிறது.

ஆசியன் நாடுகளுட னான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கும் எங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தி ருக்கிறோம். இதன் அடிப்ப டையில் இன்சூரன்ஸ், வங் கிகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை அதிக ரிக்க அரசு முயற்சித்து வரு கிறது.

அத்தியாவசியப் பொருள் களின், குறிப்பாக உணவுப் பொருள்களின், விலை வாசியைக் கட்டுப்படுத் துவதிலும் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந் திருக்கிறது. எதிர் காலத்தில் நிலைமைகள் சரியாகி விடும் என்று அரசு உறுதி கூறியது. ஆனால் இப் போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. விலைவாசியைக் கட்டுப் படுத்துவதில் அரசாங்கத் தின் செயலற்ற தன்மை சாமானிய மக்களைக் கடும் துன்பத்திற்குள்ளாக்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிக ளில் வெள்ளம், வறட்சி இவற்றால் உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சி, தொடர்ந்து அத்தியாவசியப் பண்டங்க ளின் விலை உயர்வு இவற் றால் மக்களின் வாழ்வா தாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண் டிருக்கிறது. அரசின் இத்த கைய செயலற்ற தன்மையை எதிர்த்தும், விலைவாசி யைக் கட்டுப்படுத்தக்கோரி யும், வெள்ளம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கோரி யும், உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் இடது சாரிக் கட்சிகள் மாநில அள வில் சிறப்பு மாநாடுகள், பேரணிகள்/ஆர்ப்பாட்டங் களை நடத்தி வருகின்றன.

ஐமுகூ அரசாங்கமா னது மிக வேகமாக உலக வர்த்தக அமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர் பான தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பக்கம் சாய்ந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரதம ருக்கு எழுதிய கடிதம் அதிர்ச் சியளிக்கிறது. அரசின் இத் தகைய மாற்றத்திற்கு எதிராக பொதுக்கருத்தை உருவாக் கிட தீர்மானித்திருக்கி றோம். பருவநிலை மாற்றம் தொடர்பாக விரிவான வகையில் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறோம்.

மத்தியக் குழுக் கூட்டத் தில் கட்சியில் நெறிப்படுத் தும் இயக்கம் குறித்த ஆவ ணம் இறுதிப்படுத்தப் பட் டிருக்கிறது. அரசியல் ரீதி யாக, தத்துவார்த்த ரீதியாக, ஸ்தாபன ரீதியாக நெறிப் படுத்தும் இயக்கம் அமைந் திடும். அதன் மூலம் கட் சியை மேலும் உருக்கு போன்று உருவாக்கிடக் கூடிய வகையில் இது அமைந்திடும். இந்த ஆவ ணத்தின் அடிப்படையில் கட்சியை வலுப்படுத்திட, நடவடிக்கைகள் மேற் கொள்ள இருக்கிறோம்.

சில வழிகாட்டும் நெறி முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற் றின் அடிப்படையில் அது அமைந்திடும். முதலில் மத்தி யக் குழுவில் இது தொடங் கும். அடுத்து மாநில அள வில், அதற்கடுத்து மாவட்ட, வட்ட, மண்டல அளவில் அது அமைந்திடும்.

இந்துத்வா சக்திகளின் வன்முறை வெறியாட்டங்களை முறியடிப்போம்




இந்துத்துவா சக்திகள் மீண்டும் ஒருமுறை தங்களுடைய கோரமான முகத்தினை உயர்த்தியுள்ளன. கோவாவில் மட்கானில் வெடிகுண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலை நடத்தியதாக, சனாதனா சன்ஸ்தா என்னும் அமைப்பானது ஒப்புக் கொண்டிருக்கிறது. மகாராஷ்ட்ராவில் தேர்தலுக்கு முன்னதாக சங்லி மற்றும் கோலாபூர் மாவட்டங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்களிலும் இந்த அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. சங்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணபிரகாஷ், ‘‘சனாதன சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கலவரங்களின்போது இந்துக்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாகவும், வாள்கள், சங்கிலிகள் ஆகியவற்றை ஒரு காரில் சனாதன சன்ஸ்தா அமைப்பினர் எடுத்துச் சென்றுள்ளார்கள் என்றும் எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன’’ என்று கூறியிருக்கிறார் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்). உண்மையில், மகாராஷ்ட்ரா, பயங்கரவாத எதிர்ப்புக் குழு (ATS - Anti Terrorism Squad)வும், வீரமரணம் எய்திய அதன் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரேயும், மகாராஷ்ட்ரா மாநிலம் தானேயில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, 2008 ஜூன் மாதத்திலேயே சனாதன சன்ஸ்தா அமைப்பைத் தடை செய்திட வேண்டும் என்று கேட்டிருந்தார். பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தற்போதைய தலைவரும் கூட, இந்த அமைப்பினைத் தடை செய்திடுமாறு ஒரு முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டதென்றும், ஆனால் அதன் தற்போதைய நிலைமை என்ன வென்று தனக்குத் தெரியாதென்றும் கூறியிருக்கிறார்.

சனாதன சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் ஆறு பேரை பயங்கரவாத எதிர்ப்புக் குழு கைது செய்திருப்பதன் பின்னணியில் இவ்வாறு பரிந்துரைகள் அனுப்பப் பட்டிருக்கின்றன. 2008 செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற மலேகான் வெடிகுண்டு தாக்குதலிலும் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் டியோலாலி மற்றும் நாசிக் நகர்களில் சதியாலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். மேலும், மலேகான் வெடிகுண்டு விபத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகேஷ் தாவாடே, 2003 ஜூனில் சின்கார் கோட்டை அருகே பஜ்ரங்தளத்தினருக்காக ஒரு பயிற்சி முகாமையே நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் இப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சில அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாக வந்த தகவல்களைச் சுட்டிக்காட்டி அவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தோம்.
‘‘நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுள்ள வெடிகுண்டு தாக்குதல்களில் பஜ்ரங் தளம் அல்லது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் வேறு பல அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதாக, காவல்துறையின் புலனாய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. 2003இல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில்ல பர்பானி, ஜால்னா மற்றும் ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல், 2006இல் நாண்டட் தாக்குதல், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு, கான்பூரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் போன்ற இவை அத்தனையிலும் பஜ்ரங் தளம் அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழான ஏதேனும் ஒரு துணை அமைப்பு ஈடுபட்டிருந்தது ,’’ என்று 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அதன்பின்னர், 2008 செப்டம்பர் 29 அன்று, பயங்கரவாத எதிர்ப்புக் குழு, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ள எண்ணற்றவர்களைச் சுற்றிவளைத்து, விசாரணை செய்து, நாசிக், போன்சாலா ராணுவப் பள்ளியைச் சேர்ந்த கமாண்டண்ட் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாகூர் உட்பட பலரைக் கைது செய்தது.

இந்துக்களுக்குத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பதென்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ‘‘இந்து நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசியல் பயிற்சியும் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டு அனைவரையும் முழு இந்துக்களாக்க வேண்டும்’’ என்பதே சாவர்கர் வைத்த கோஷம். இதனால் உத்வேகம் அடைந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஹெக்டேவார் அவர்களின் குருவான டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். சந்திப்பு 1931 மார்ச் 31 அன்று நடைபெற்றது. அவர் மார்ச் 20 அன்று தன் சொந்த நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ள வாசகங்களிலிருந்து, இத்தாலிய பாசிசம் எங்ஙனம் தன் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது என்று மிகவும் வியந்து, பாராட்டி, எழுதியிருக்கிறார். பின்னர் அவர் இந்தியா திரும்பியபின், 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்விக் கழகம் (Central Hindu Military Education Society) என்னும் அமைப்பினை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும். கோல்வால்கர், 1939இல், ஹிட்லர் யூதர்களைப் பூண்டோடு துடைத்தழித்திட நாசி பாசிசம் குறித்து குதூகலம் அடைந்து, ‘‘இந்துஸ்தானில் இருக்கிற நமக்கெல்லாம் இது நல்லதொரு பாடம் என்றும், இதனை நன்கு கற்று, ஆதாயம் அடைய வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார். சமீபத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வினை அடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொடுக்குகளான விசுவ இந்து பரிஷத்தும், பஜ்ரங் தளமும் ‘‘கர சேவகர்களுக்கு’’ப் பயிற்சி அளித்தது குறித்து பெருமைப்பட்டதைப் பார்த்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் முதல்வராக இருந்தவர், ‘‘பாபர் மசூதியை, தொழில்ரீதியான ஒப்பந்தக்காரர்களைவிட மிகவும் வேகமாகவும், திறமையாகவும் தகர்த்திட்ட கரசேவகர்களின் செயல் குறித்து மிகவும் பெருமைப்படுவதாக’’, வெளிப்படையாகவே கூறினார்.

இந்தப் பின்னணியில்தான், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் ‘‘இந்து தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்கிற சொற்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று கூறியிருப்பதானது, மிகவும் மர்மமாக இருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் குறித்து, எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களுடைய மத அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவான உண்மை. இந்த உண்மை எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒன்று என்று சொல்லக்கூடாதா? ஆம், சொல்லக்கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நிலைப்பாடாகும். 2008 அக்டோபர் 17 - 19 தேதிகளில் நடைபெற்ற அதனுடைய ‘அகில பாரதீய கார்யகாரிணி மண்டலி பைதக்’ கூட்டத்தில் ‘‘இஸ்லாமிக் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. இவ்வாறு இரட்டை நிலை எடுத்ததோடு மட்டுமல்லாது, மகாராஷ்ட்ராவிலும் மற்றும் பல பகுதிகளிலும் காவல்துறையினரும் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவினரும் மேற்கொண்ட ‘‘வெற்றிகரமான நடவடிக்கைகள்’’ குறித்து வெகுவாகப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அவர்கள் பாராட்டிய அதே பயங்கரவாத எதிர்ப்புக் குழுவானது, இப்போது இந்துத்வா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்திருப்பது குறித்து ஆர்எஸ்எஸ் செய்வதறியாது மிகவும் திகைத்து நிற்கிறது. கோவாவில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக நடைபெறும் புலனாய்வு விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டத்தின் ஆட்சி தன் கடமையைச் செய்திட வேண்டும்.

இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் முழுமையாக புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம்புரிந்த கயவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இப்போது நடைபெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகள், நாம் இப்பகுதியில் அடிக்கடி கூறிவந்ததைப்போல் இரு விஷயங்களை உறுதிப்படுத்தகின்றன. பயங்கரவாத நடவடிக்கைகள் தேச விரோதத்தன்மை கொண்டவை என்பதால் அவை தொடர்பாக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதற்குமில்லை. இரண்டாவதாக, அனைத்துவிதமான பயங்கரவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்து, வலுப்படுத்திடும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை. இவை தங்களுடைய செயல்பாடுகளினால் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையுமே அழிக்கின்றன.

பயங்கரவாத நடவடிக்கைகளைத் தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது மிகவும் கேவலமான சித்தாந்த நடைமுறைகளாகும். மதவெறி அல்லது பிராந்திய வெறி மூலம் மக்களை உசுப்பிவிடுவதன் மூலமாகப் பெரிய அளவில் தேர்தலில் ஆதாயம் அடைந்திடலாம் என்று கருதுவது இந்தியாவின் பன்முகப்பட்ட சமூகக் கலாச்சாரத் தன்மையைச் சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிடும். நாட்டின் நவீன மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாத்து, வலுப்படுத்திட வேண்டுமானால், இத்தகைய பயங்கரவாத அரசியல்கள் முறியடிக்கப்பட வேண்டியது அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, October 24, 2009

மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது விதிவிலக்கான ஒன்றுதான் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பேட்டி




புதுதில்லி, அக். 24-

மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கையை ஏற்று, 26 பழங்குடியினப் பெண்கள் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது விதிவிலக்கான ஒன்றுதான் என்றும், மாவோயிஸ்ட்டு களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா சனிக்கிழமையன்ற மதியம் வங்க பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘நேற்றையதினம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்தேன். மேற்கு வங்க மாநிலத்திலும், மற்றும் நாடு தழுவிய அளவிலும் இருந்து வரும் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை தொடர்பாக மிக விரிவான அளவில் விவாதங்களை நடத்தினோம். மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் கிரிமினல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் அனைத்துவிதமான உதவிகளையும் நல்கும் என்று அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்து ஒருசிலவற்றைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜார்கண்ட் மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் இயங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர்களின் நடவடிக்கைளை மேற்கு வங்கத்தில் முற்றிலுமாக ஒழித்திட நாங்கள் முயற்சித்துக் கொண்டு வருகிறோம். இந்த நடவடிக்கைகளில் சமீபத்தில் சில பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மூன்றுமாதங்களுக்கு முன்பு மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்தவர்களும், மாநிலக் காவல்துறையினரும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டுக் கொண்டிருந்த பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டு, அவர்களின் செயல்பாட்டை வெகுவாகக் குறைத்துவிட்டோம். அவர்களின் முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களைக் கைது செய்திருக்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில தினங்களுக்கு முன் கேந்திரமான பகுதியில் இல்லாத ஒரு காவல்நிலையத்திற்குள் புகுந்து மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த இரு காவல்துறையினரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, நிலையத்திற்குப் பொறுப்பு வகித்த காவல் அதிகாரியைக் கடத்திச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் கொள்ளையடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பக்கத்திலிருந்த வங்கி ஒன்றிலிருந்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட காவல்துறை அதிகாரியை ஒப்படைத்திட, சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்து வரும் பழங்குடியினப் பெண்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மாவோயிஸ்ட்டுகள் முன்வைத்தனர். மாவோயிஸ்ட்டுகளின் நிபந்தனைகள் கடுமையானவைகளாக இருந்திருந்தால் நம்மால் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.

மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கேடயங்களாகப் பயன்படுத்தி வந்த அப்பாவி பழங்குடியினப் பெண்களை விடுதலை செய்யுமாறு கோரியிருக்கிறார்கள். சில கிளர்ச்சிப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகத்தான் அப்பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். எனவே காவல்துறை அதிகாரியை மாவோயிஸ்ட்டுகள் விடுவிப்பதற்கு அவர்கள் கோரிய இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். பழங்குடியினப் பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பழங்குடியினப் பெண்கள் மீதான வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் பிணையில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது விதிவிலக்கான ஒன்றுதான். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். மாவோயிஸ்ட்டுகளை மேற்கு வங்க மாநிலத்திலிருந்தும், நாட்டிலிருந்துமே ஒழித்திடும்வரை இந்த நடவடிக்கைகள் தொடரும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் உறுதியாக இருக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளைப் பற்றி எவ்விதமான மாயையையும் எங்களுக்குக் கிடையாது. அவர்கள் தனிநபர் கொலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள், வங்கிகளைக் கூட கொள்ளையடிக்கிறார்கள். இவ்வாறு அனைத்துவிதமான கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே எவ்வித மாயையும் இன்றி இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

மாவோயிஸ்ட்டுகள் மேற்கு வங்க மாநிலத்திலிருந்தும், நாட்டிலிருந்தும் ஒழிக்கப்படும் வரை எங்கள் நடவடிக்கைகள் தொடரும். இதற்கு மத்திய அரசும் முழு அளவில் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்திருக்கிறது.

இவ்வாறு புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

காவல்துறை அதிகாரியின் விடுதலைக்காக, மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கையை ஏற்றிருப்பதானது, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மத்தியில் மனச்சோர்வை அளித்திருப்பதாகக்கூறப்படுகிறதே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில் இது நடைபெற்றிருக்கிறதென்றும், கட்சிஊழியர்கள் முழுமையாக இதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் புத்ததேவ் கூறினார்.

இவ்வாறு கைதிகள் பரிமாற்றம் மாவோயிஸ்ட்டுகளுக்கு தைரியத்தை அளித்திடாதா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, சரியான கேள்வி என்று ஒப்புக்கொண்ட புத்ததேவ், இதுதொடர்பாக நாங்கள் ஆழமாக விவாதித்தோம் என்றும், இதுபோன்று முன்னெப்போதும் நடந்திராத ஒன்றுதான் என்றும், இத்தகைய நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாதவாறு மிகவும் எச்சரிக்கையாக இருப்போம் என்றும் கூறினார்.

மாவோயிஸ்ட்டுகளிடம் அரசு சரணடைந்து விட்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘இல்லை’, ‘நிச்சயமாக இல்லை’ என்று கூறிய புத்ததேவ், மாவோயிஸ்ட்டுகள் அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற பழங்குடியினப் பெண்களைத்தான் இப்போது விடுவித்திருப்பதாகவும், இவர்களும் பிணையில்தான் விடுவிக்கப் பட்டிருக்கிறார்களேயொழிய இவர்கள் மீதான வழக்குகள் விலக்கிக் கொள்ளப் படவில்லை, அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடரும் என்றும் எனவே இதனை எப்படி சரணாகதி என்று கூறமுடியும் என்றும் புத்ததேவ் கூறினார்.

‘சரணாகதி’ இல்லை என்றால் ‘அரசு சற்றே இறங்கி வந்திருக்கிறது’ என்று எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு செய்தியாளர் வினா தொடுத்தபோது, அதனையும் மறுத்திட்ட புத்ததேவ், பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் அனைவரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பழங்குடிப் பெண்கள் என்றும், இந்தப் பெண்களில் எவர் ஒருவருக்கும் நக்சலைட் தொடர்பு இருந்ததாகப் பதிவேடு (ரிகார்ட்) எதுவும் கிடையாது என்றும், இவர்கள் எந்தவிதக் கொடூரமான குற்றத்தையும் புரிந்து சிறையில் அடைக்கப்படவில்லை என்றும், சாதாரண குற்றங்களின்கீழ்தான் இவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்கள் என்றும், எனவே இவர்கள் இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் புத்ததேவ் தெளிவாக்கினார்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜார்கண்ட் மாநில அரசும், மேற்கு வங்க மாநில அரசும் இணைந்து செயல்படுத்திடுமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, இது தொடர்பாக நானும் மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பதாகவும், ஆனால் ஜார்கண்டில் தேர்தல் நடைபெறவிருப்பதால் இப்போதைக்கு அது மிகவும் சிரமம் என்றும் புத்ததேவ் கூறினார்.

லால்காரில் தற்போதைய நிலைமை என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, கடைத்தெருக்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் முதலானவை நம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்தான் இன்னமும் பிரச்சனை இருப்பதாகவும் புத்ததேவ் கூறினார்.
...

Saturday, October 17, 2009

யாருடைய நலன்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் சேவகம் செய்கிறார்கள்?



ஒரிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் விழா நிகழ்ச்சியின்போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜார்கண்ட் மாநிலம், கிரிதி மாவட்டத்தில் ஈஸ்ரி என்னும் ஊரில் ஆஜ்மீர் செரீஃபுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 12 பக்தர்கள் மிக மோசமான முறையில் காயமடைந்திருக்கிறார்கள். பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் இருப்புப் பாதைகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் சிமிலிபால் புலிகள் வனச் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றனர், வனத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் மற்றும் ஒயர்லஸ் தகவல் தொடர்பு சாதனங்களைப் கொள்ளையடித்திருக்கிறார்கள். லக்கி சரத் மாவட்டம் மற்றும் சத்ராவிலிருந்த நவாதி நடுநிலைப் பள்ளி ஆகியவை வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை சேதப்படுத்தி போக்குவரத்தைச் சீர்குலைத்திருக்கின்றனர். தொலைத்தகவல் தொடர்பு கோபுரங்களை (டெலிகம்யூனிகேசன் டவர்கள்) சேதப்படுத்திட வெடிகுண்டுகள் அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களில் நடைபெற்றுள்ள மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை மேலே குறிப்பிடப்பட்டவைகளாகும். இவ்வன்முறைச் சம்பவங்களில் அப்பாவிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட விட்டு வைக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் மெடினாபூர் மாவட்டத்தில் இவர்களின் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடர்கின்றன. இதற்கு சமீபத்தில் ஜார்கண்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் பலியாகியிருக்கிறார். கடந்த சில வாரங்களில் மட்டும் இவர்களின் வன்முறைத் தாக்குதல்களின் விளைவாக மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுமார் 130 பேர் பலியாகியிருக்கின்றனர். அப்பாவி மக்களின் உடமைகளையும் உயிர்களையும் மார்க்சிஸ்ட் ஊழியர்கள் பாதுகாத்து நிற்பதால், இவர்கள் மார்க்சிஸ்ட் ஊழியர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு பரவிக் கொண்டிருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டாலும் உண்மை நிலைமைகள் என்ன? மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ள பழங்குடியினரின் பகுதிகளில் அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பினும், பழங்குடியினர் பகுதிகள் சிலவற்றை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, நிர்வாகத்தை அங்கே அவர்கள் செய்து வருவதால், கணிசமான அளவிற்கு அது அவர்களுக்குப் பணபலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் அளித்திருக்கிறது. அவர்களின் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் இதுதான் உந்துசக்தியாக இருந்திருக்கிறது. மேற்கு வங்கம், லால்கார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர், சத்ரஹார் மஹாதோ அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள விவரங்களும் இதனை உறுதி செய்கின்றன. மேலும் மஹாதோ தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில், போலீஸ் அத்துமீறல்களுக்கு எதிரான மக்கள் குழு என்பது உள்ளூர் பழங்குடியின மக்களால் தன்னெழுச்சியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுவதும் பொய் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியை ‘‘விடுவிக்கப்பட்ட பகுதி’’யாக மாற்ற வேண்டும் என்பதற்காக, மாவோயிஸ்ட்டுகளால் உருவாக்கப்பட்ட முன்னணியே இது என்றும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். சல்போனி என்னுமிடத்தில் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்களைப் படுகொலை செய்ய முயற்சித்த மாவோயிஸ்ட்டுகளைப் பாதுகாத்திட, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திட உருவாக்கப்பட்டதே இந்த ‘விடுவிக்கப்பட்ட பகுதி’யாகும். இதற்குமுன் அவர்கள் நந்திகிராமத்தில் கடைப்பிடித்த அதேபாணியில், இங்கும் இப்பகுதியை நோக்கி வரும் அனைத்து சாலைகளையும், தொலைத் தகவல் தொடர்பு சாதனங்களையும் துண்டித்து, அனைத்தையும் சீர்குலைத்தனர். அதே சமயத்தில் இதற்கு எதிராக நின்ற அனைவரையும், குறிப்பாக மார்க்சிஸ்ட்டுகளை, அழித்தொழித்திட அவர்கள் குறிவைத்தனர்.

மாவோயிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கிரசிடமிருந்து முழுமையான ஆதரவும் பாதுகாப்பும் பெற்றுக் கொண்டிருப்பதையும் மஹாதோ வெளிப்படுத்தி இருக்கிறார். அண்டை கிராமங்கள் பலவற்றில் இத்தகைய ‘குழுக்களை’ அமைத்திட, திரிணாமல் காங்கிரஸ் ஆதரவு அவர்களுக்கு உதவி இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கொலை பாதக நடவடிக்கைகளை விரிவாக்கிட, உள்ளூர் திரிணாமுல் காங்கிரசார் அடைக்கலமும் ஆதரவும் அளித்திருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசார் தங்கள் அரசியலையும் தேர்தல் ஆதாயங்களையும் விரிவாக்கிடுவதற்காக, மார்க்சிஸ்ட்டு தலைவர்களையும், இடது முன்னணி ஆதரவுத் தளத்தையும் குறிவைத்துத் தாக்குவதற்கு, மாவோயிஸ்ட்டுகளுக்குத் தங்கள் கட்சியின் அரசியல் முகமூடியை அளித்தனர் என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. திரிணாமுல் காங்கிரசால் திரட்டப்பட்ட ‘அறிவுஜீவிகள்’ என்று அழைக்கப்பட்டவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்காக அவர்களுக்கு அதீத நன்கொடைகளும் பிற உதவிகளும் செய்யப்பட்டன என்பதையும் மஹாதோ வெளிப்படுத்தி இருக்கிறார். மாவோயிஸ்ட் - திரிணாமுல் பிணைப்பு எந்த அளவிற்கு பின்னிப்பிணைந்திருந்தது என்பதை, மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவர், ஆனந்த் பசார் பத்திரிகா (அக்டோபர் 4) இதழுக்கு அளித்துள்ள நேர்காணல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதில் அவர் நேரடியாகவே, ‘மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக மம்தா பானர்ஜியைப் பார்க்கவே’ தாங்கள் ஆசைப்படுவதாக அவர் வெளிப்படையாகவே பிரகடனம் செய்திருக்கிறார்.
எனவேதான், மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய - மாநில அரசுகளின் பாதுகாப்புப் படையினர் இணைந்து பணியில் ஈடுபட்டிருப்பதிலிருந்து மத்திய அரசின் பாதுகாப்புப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வலியுறுத்துவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. மாவோயிஸ்ட்டுகளின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவங்களை நியாயப்படுத்துவதோடு மட்டுமல்லாது திரிணாமுல் காங்கிரசார், ‘இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மாவோயிஸ்ட்டுகள் பெறும் அச்சுறுத்தலாக உள்ளனர்’ என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் செய்துள்ள மதிப்பீடுகளையும் மறுதலிக்கின்றனர். காபூலில் இந்தியத் தூதரகத்தின் மீது தாலிபான்கள் புரிந்திட்ட தாக்குதலில் 17 பேர் பலியானதைப் போலவே, மாவோயிஸ்ட்டுகள் கத்சிரோலியில் மேற்கொண்ட தாக்குதலிலும் 17 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆயினும் இத்தகைய வன்முறையாளர்களின் அனைத்து காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் செயல்களையும் நியாயப்படுத்திடும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களுக்கு இது தொடர்பாக பதில் சொல்லியேயாக வேண்டும்.

அடித்தட்டு மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தாங்களே என்று மாவோயிஸ்ட்டுகள் கூறிவருவதும் தற்போது மீண்டும் ஒருமுறைப் பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. கத்சிரோலியில் நடைபெற்ற தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்ட்டுகள் விடுத்த அறைகூவலை மக்கள் புறந்தள்ளிவிட்டனர். இங்கே வாக்களித்தோரின் சதவீதம், நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையில் வாக்களித்தோரின் சதவீதத்தைவிட அதிகமானதாகும். இவ்வாறு நாட்டின் எந்தப் பகுதியிலும் அவர்களது ஆதிக்கம் என்பது மிரட்டலையும் அச்சுறுத்தலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறதேயொழிய, சுரண்டப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடையாது என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது.

நாட்டில் சுரண்டப்படுவோர் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளுமேயாகும். வறுமை ஒழிப்பிற்கான நிலைமைகளை முற்றிலுமாக ஒழித்திடுவது என்பது, பெரும் திரளான மக்களை அரசியல் நடவடிக்கைகளில் திரட்டிப் போராட வைப்பதன் மூலமும், அதன் வழியாக இந்திய ஆளும் வர்க்கங்களை மாற்றியமைப்பதன் மூலமுமே சாத்தியமாகும். எனவேதான் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ள அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் பெரும் திரளான மக்களைத் திரட்டிப் போராடுவதற்கான அறைகூவல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் விடுத்து வருகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதற்காக, ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக இத்தகைய வலுவான மக்கள் எழுச்சி, எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி வருகின்றன. இதன் பொருள், மக்கள் மத்தியில் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு, துன்ப துயரங்களைக் கொண்டு வந்துள்ள, ஏகாதிபத்திய உலகமயம் கட்டவிழ்த்துவிட்டுள்ள நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை முழுமையாக எதிர்த்திட வேண்டியது இன்றைய தேவையாகும். கடந்த பத்தாண்டுகளில் ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நடத்தி வந்துள்ளன. இப்போராட்டங்கள் குறித்து மாவோயிஸ்ட்டுகள் என்றைக்காவது கவலைப்பட்டதுண்டா? தங்கள் கருத்துக்களை இவை தொடர்பாகக் கூறியதுண்டா?
மேலும், சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், அத்தகைய போராட்டங்களின் போது அவர்களின் வர்க்க ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய ஒற்றுமை ஏற்படாது தடுத்திட, மக்கள் மத்தியில் மதவெறி சக்திகள் மத உணர்வைத் தூண்டி அவர்களின்ஒற்றமையைச் சீர்குலைக்கின்றன. நாட்டு மக்களை புரட்சிகரமான முறையில் அணிவகுக்க வைத்திட வேண்டுமானால், இத்தகைய மதவெறி சக்திகளின் முயற்சிகள் பலவீனப்படுத்தப்பட்டு, முறியடிக்கப்பட்டாக வேண்டியது அவசியம். இவ்வாறு மதவெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள்? அவர்கள், எதிர்கால மேற்கு வங்க முதல்வராகக் கொண்டுவர முயலும் நபர், வாஜ்பாய் அரசாங்கத்தின்போது மத்திய அமைச்சராகப் பணியாற்றியவராவார். அப்போது அவர், குஜராத் மாநிலத்தில் அரசே முன்னின்று நடத்திய முஸ்லீம் மக்களுக்கு எதிரான மதவெறிக் கொலைகள் குறித்து வாயே திறக்காது மவுனியாக இருந்து, அதன் வாயிலாக அக்கொலைபாதக சம்பவங்களுக்கு ஆதரவாக இருந்தவர்தான். அதே நபர்தான் இப்போது மக்மோகன்சிங் தலைமையில் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்து வருகிறார். இத்தகைய சந்தர்ப்பவாதியைத்தான், அரசுக்கு எதிராக ‘வர்க்க தாக்குதல்’ தொடுப்பதாகக் கூறும் மாவோயிஸ்ட்டுகள் ஆதரிக்கிறார்கள். இவ்வாறான மாவோயிஸ்ட்டுகளின் ‘சந்தர்ப்பவாதத்தை ’ என்னென்பது?

1967இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் 1969இல் சாரு மஜும்தார் தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என்ற பெயருடன் ஒரு கட்சியை ஆரம்பித்தனர். இவர்களும் அதற்கடுத்த முப்பதாண்டுகளில் எண்ணற்ற குழுக்களாகப் பிரிந்தனர், பிரிந்த குழுக்களில் சில மீண்டும் சேர்ந்தன. அத்தகைய குழுக்களில் பீகாரிலிருந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டர் என்ற குழுவும், ஆந்திராவிலிருந்த மக்கள் யுத்தக் குழுவும் ஒன்றிணைந்து, 2004இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்று ஒரு கட்சியைத் துவங்கினர். அவ்வாறு இணைந்தவர்கள்தான்
இப்போதுள்ள மாவோயிஸ்ட்டுகள்.

இந்திய ஆளும் வர்க்கங்களின் குணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்த மதிப்பீட்டை நிராகரித்துத்தான் மாவோயிஸ்ட்டுகள் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார்கள். அவர்களின் கூற்றின்படி, இந்திய ஆளும் வர்க்கங்கள் வெறும் ‘தரகு முதலாளிகள்’தான். அதாவது, இவர்கள் ஏகாதிபத்தியத்தின் வெறும் ஏஜண்டுகள்தானேயொழிய, இந்திய மக்கள் மத்தியில் இவர்களுக்கென்ற எவ்விதமான அர்த்தமுள்ள சமூக மற்றும் அரசியல் தளமும் கிடையாது. எனவே, நமக்குத் தேவையானதெல்லாம் இந்திய மக்களை ஆயுதபாணிகளாக்குவது மற்றும் புரட்சிகர விடுதலையை எய்திட ‘மக்கள் யுத்தத்தை’ நடத்துவது என்பதுதான். இவ்வாறு உருவான நக்சலைட் இயக்கத்தை முற்றிலுமாக நசுக்கிட அரசு நடவடிக்கைகளில் இறங்கியது.
கடந்த நாற்பதாண்டுகளின் அனுபவமானது, முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ இந்திய ஆளும் வர்க்கங்கள் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு வலுவான அரசியல் மற்றும் சமூக அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிந்துணர்வு சரியானது என மெய்ப்பிக்கப்பட்ட போதிலும் கூட, நக்சல்/மாவோயிஸ்ட்டுக் குழுக்கள் தங்களது முந்தைய மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இன்னமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, நாட்டில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, நாட்டு மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானங்களை மாற்றியமைத்திடுவதற்காக, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு முறைகளில், செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் ஆதரித்து நிற்பதன் காரணமாகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளைத் தங்கள் பிரதான எதிரியாக மாவோயிஸ்ட்டுகள் கருதி, மார்க்சிஸ்ட்டுகளைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள்.
துல்லியமான நிலைமைகளை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்வதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்றார் லெனின். நிலைமைகள் சரியாகப் புரிந்துகொள்ளப் படாவிட்டால், பின் தவறான ஆய்வானது, ஒரு தவறான அரசியல் நிலைப்பாட்டுக்கு இட்டுச் செல்லும். மக்களைத் திரட்டும் பணி மற்றும் மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானங்களை மாற்றியமைத்தல் ஆகியவற்றை துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டிப் பணியவைப்பதன் மூலமாகக் கொண்டு வந்திட முடியாது. ‘‘நீரில் வாழும் மீன்களைப் போல மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகள் இரண்டறக் கலக்காவிட்டால் எந்த ஒரு புரட்சியும் வெற்றி பெற முடியாது’’ என்று நம் அனைவருக்குமே மாவோ கற்பித்திருக்கிறார். இதனை துப்பாக்கி முனையில் மிரட்டுவதன் மூலம் எந்தக் காலத்திலும் செய்திட முடியாது.
இவ்வாறாக மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பார்க்கையில் இறுதியாக வரக்கூடிய முடிவு என்னவெனில், ஏகாதிபத்தியம் அல்லது வகுப்புவாதத்திற்கு எதிராக எவ்வித எதிர்ப்பையும் காட்டாது, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பிற்போக்கு சக்திகளுக்குத் துணை போகக் கூடிய நிலைக்குத்தான் சென்றிருக்கிறார்கள் என்பதேயாகும். அதன்மூலம் நாட்டில் வர்க்க சுரண்டல் என்னும் அமைப்பு தொடர்ந்திடவே அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1967இல் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்றபோதிலிருந்தே, நாம் அவர்களிடம் ‘வன்முறை மற்றும் பயங்கரவாத அரசியலைக் கைவிடு’மாறும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திடுமாறும், புரட்சிகர மாற்றத்திற்காக மக்களை அணிதிரட்ட முன்வருமாறும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். மாவோ கூறியது என்ன என்பதை அவர்கள் மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்கட்டும்:
‘‘நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் சிந்தனைகள் முட்டிமோதட்டும்.’’

தமிழில்: ச.வீரமணி

Friday, October 16, 2009

தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும்
தித்திக்கும்
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
இந்நன்னாளில்
மங்கிய இருளகற்றி
மங்கள ஜோதியாக
வாழ்வு சுடர்விட
வீடு வளம்பெற
வாழ்த்துக்கள்.
அன்பின் அஸ்திவாரத்தில் -அனைவரும்
ஆனந்தமாக
இனிப்புகள் உண்டு
இல்லாதோர்க்கும்
ஈந்து
உள்ளம் உவகையும்
ஊக்கமும் பெற்று
என்றென்றும் புன்னகையும்
ஏற்றமிகு வாழ்வும் பெற
ஐப்பசி நன்னாளாம் இன்று
ஒளி விளக்கேற்றி கொண்டாடுவோம்.
ஓயாமல் நிகழ்ச்சி வழங்கும்
தொலைக்காட்சியதனை இன்று
தொலைவில் வைத்து,
சுற்றமும் நட்பும் சூழ
உண்டு மகிழ்ந்து
மத்தாப்புச் சிரிப்பொலியும்
பட்டாசுப் பேச்சுகளும்
நிறையட்டும் இல்லத்தில்
என்றே வாழ்த்தும்
உங்கள் ச. வீரமணி

Tuesday, October 13, 2009

மக்கள் சீனத்தின் மணி விழா -பிரகாஷ் காரத்

அறுபதாண்டுகளுக்கு முன், 1949 அக்டோபர் 1 அன்று சீன மக்கள் குடியரசு பிரகட னம் செய்யப்பட்டது. தோழர் மாசே துங் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த அறி விப்பைத் தெரிவிக்கையில், ‘‘சீனமக்கள் எழுந்து நிற்கத் தொடங்கிவிட்டார்கள்’’ என்றார். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது கடந்த அறுபதாண்டு காலத் தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் எண் ணிலடங்காதவையாகும்.

சீனப் புரட்சி ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்த நிகழ்வாகும். அந்த சம யத்தில் சீனம், 47.5 கோடி மக்கள் தொகை யுடன் உலகிலேயே மாபெரும் நாடாக விளங்கியது. ஆசியக் கண்டத்தின் ஜாம்ப வனான சீனம், 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகின் மிகப்பெரிய பொரு ளாதார நாடாக விளங்கிய சீனம், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற் கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானின் கொத் தடிமை நாடாக மாறியது. முதல் உலகப் போர் முடிந்த பின்னர், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அங்கிருந்த நிலப்பிரபுத்துவ யுத்த பிரபுக் களுடன் கைகோர்த்துக்கொண்டு, சீனா வைப் பங்குபோட்டு ஆட்சி செய்தன. சீன மக்கள் நிலப்பிரபுத்துவம் மற்றும் அரைக் காலனியாதிக்கத்தின் சங்கிலி களால் பிணைக்கப்பட்டு அவற்றை உடைத்தெறிய வழிதெரியாது விழிபிதுங்கி, புலம்பிக் கொண்டிருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் 1921ஆம் ஆண்டு உருவான சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுத்துவத்தையும், காலனி யாதிக்கத்தையும் வெறுத்து எதிர்த்து வந்த சக்திகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ யுத்த பிர புக்கள் மற்றும் காலனியாதிக்கத் திற்கு எதிராக, சீன மக்கள் தங்கள் விடுதலைக் காக முப்பதாண்டு காலம் மிகக்கடின மான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜப் பான் ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் ஊழலில் திளைத்த வலது சாரி கோமிங்டாங்கைப் புறந்தள்ளி விட்டு, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி தேசிய எதிர்ப்புப் போராட்டத்தின் தலைவனாக உயர்ந்தது. ஜப்பான் சரணடைந்தபின், இறுதிப் போர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கோமிங்டாங் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்றது. இந்த உள்நாட்டுப் போரில், மக்கள் விடுதலை ராணுவம் மகத்தான வெற்றிபெற்றதையடுத்து சீனப்புரட்சி அங்கே வெற்றி வாகை சூடியது.

ரஷ்யப் புரட்சி உலகத்தின் மத்தியில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியி ருந்தது. அதன்பின் முப்பதாண்டு காலம் கழித்து, சீனப்புரட்சி வெற்றி பெற்றது.

இன்றைய சீனம், மக்களின் ‘வாங்கும் சக்தி சமநிலை’ (யீரசஉாயளiபே யீடிறநச யீயசவைல) அடிப்படையில் அமெரிக்காவிற்கு அடுத்து உலகின் மிகப்பெரிய பொருளா தார நாடாக விளங்குகிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பரிவர்த்தனை விகிதத்தில் அளந்தோமானால் பொருளா தார ரீதியாக உலகின் மூன்றாவது பொரு ளாதார நாடாக சீனம் விளங்குகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக, அமெரிக்கா வையும் முந்திக்கொண்டு சீனம் விஞ்சி முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவில் புரட்சி ஏற்பட்ட சம யத்தில் அது இந்தியாவைவிட தொழில் துறையிலும் மற்றும் பல்வேறு துறைகளி லும் மிகவும் பின்தங்கியிருந்தது. ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் சீனாவில் ஏற் பட்டுள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகும்.

இத்தகைய மகத்தான வளர்ச்சிக் கான அடித்தளங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் திட்டமிடப்பட்டவையாகும். சீனப்புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து, அங்கு புரட்சிகரமான நிலச்சீர்திருத்தங் கள் மூலமாக நிலப்பிரபுத்துவம் முற்றிலு மாக ஒழித்துக்கட்டப்பட்டது. கனரகத் தொழில்களுக்கு அடித்தளமிடப்பட்டது. மக்களுக்கு அடிப்படைக்கல்வி, சுகாதா ரம், சமூக நலத்திட்டங்களை அளிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. விவசாயிகளை நிலப்பிரபுத்துவத் தின் நுகத்தடியிலிருந்து முற்றிலுமாக விடுவித்து, சுயசார்பு முறைகளில் பொரு ளாதாரத்தைக் கட்டி வளர்த்திட்ட ஜன நாயகப் புரட்சியின் சீனப் பாதையானது, காலனியாதிக்கத்திடமிருந்து சமகாலத் தில் விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்தது.

சீனாவின் இன்றைய முன்னேற்றத் திற்கு முதலாளித்துவம்தான் உந்து சக்தி யாக இருந் தது என்று பேசக்கூடிய பேர் வழிகள், மக்கள் சீனத்தில் எத்தகைய அடித்தளங்களின்கீழ் இன்றைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி மேற் கொள்ளப்பட் டது என்பதைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறார்கள். மக்கள் சீனம், நிலச்சீர்திருத்தங்கள் மூலமாக நிலப்பிர புத்துவத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட் டியது. பின்னர் அரசுத்துறைகள் மூலமாக தொழில்மயத்தை ஏற்படுத்தியது. கல்வி மற்றும் சமூக நலத்துறைகளில் சீர்திருத் தங்களைக் கொண்டு வந்தது. அரசுத் துறைகள் மற்றும் தனி யார் துறையுடன் இணைந்து கூட்டுத் துறைகளின் மூல மாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் சீனத்தில் வியத்தகு வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.

புதிய சீனத்தின் கடந்த அறுபதாண்டு கால வரலாறு என்பது முன்னேற்றத்தை நோக்கி நடைபெற்ற மலர்ப்பாதை அல்ல; ‘கலாச்சாரப் புரட்சி’ என்றும், அதற்கும் முன்னதான ‘பாய்ச்சல் வேக முன்னேற் றம்’ என்றும் தவ றான நடைமுறைகளும் கருத்தோட்டங் களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தான் செய்த தவறு களையும், தவறான கண்ணோட்டங் களையும் சரியான முறையில் அங்கீக ரித்து, அவற்றைச் சரிசெய்திட நடவடிக் கைகள் மேற்கொண்டது. கடந்த இருப தாண்டுகளில் அங்கு ஏற்பட்ட அபரி மித மான முன்னேற்றம் நாட்டில் புதிய பிரச் சனைகளையும் கொண்டுவந்திருக் கிறது. வருமான ரீதியாகவும், பிராந்திய ரீதி யாகவும், நகர்ப்புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் இடையில் அதிகரித்து வந்துள்ள சமத்துவமின்மையால் ஏற்பட் டுள்ள பிரச்சனைகளை சீனக் கம்யூ னிஸ்ட் கட்சியின் 17வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை யும் அது பரிந்துரைத்துள்ளது.

ஒரு பிற்பட்ட நாட்டில் சோசலிசத் தைக் கட்டும் பணி என்பது ஒரு நீண்ட நெடிய பாதை என்பதை சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டது. மேலும், 1980களின் பிந்தைய ஆண்டுகளில் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின், சோசலிச அமைப்பு முறைக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்ட சூழ்நிலையில், சர்வதேச நிலைமைகளிலேயே மிக வேக மாக மாற்றங்கள் ஏற்பட்ட பின்னணியில் சீனாவின் வளர்ச்சித்திட்டங்கள் செயல் பட்டுக் கொண்டிருந்தன. சோசலிசத் தின் உயர்ந்த கட்டத்தை எய்துவதற்கு முன்னதாக அரசியல் ரீதியாகவும், தத்து வார்த்த ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

சென்ற ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், உலகப் பொருளாதாரத்தில் சீனா பெற்றிருந்த வளர்ச்சியை, உலகமே கண்டு வியந்தது. சீனம், தன்னுடைய பொருளாதாரத்திற் காக அரசின் கருவூலத்திற்கு 585 பில்லி யன் டாலர்கள் ஊக்குவிப்புத் தொகை யாக அளிக்கப்படும் என்று அறிவித்தது. பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத் துச் செல்ல இது பெரிதும் உதவியது. 2009இல் உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர் மறையில் -3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், சீனாவின் வளர்ச்சியோ 7.7 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு ஆசிய ஜாம்பவான்களாகத் திக ழும் சீனாவும் இந்தியாவும் பொருளாதார வல்லமையில் உயர்ந்து வருவது இதுநாள் வரை உலகப் பொருளாதாரத்தை இயக்கி வந்தவர்களால் விரும்பப்படாமல் போவ தில் வியப்பதற்கேதுமில்லை. எனவே தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சிண்டுமுடிந்து விட அவை முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட் ஊடகங்கள் வாயிலாக ஏகாதிபத்திய ஆதரவு வல்லுநர்கள் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து என்கிற பூச்சாண்டியைக் கிளப்பி விட்டி ருக்கிறார்கள். சீனா இந்தியாவுக்கு எதி ராகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பட்டியலிடுகிறார் கள். எல்லைப் பகுதியில் சீனத் துருப்புக் கள் அத்துமீறி நுழைந்ததாக ஊடகங்கள் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற் கொண்டன. எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கும் சீன ராணுவத்தினருக் கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடை பெற்றதாகவும், இதில் இருவர் காயமடைந் ததாகவும் கூட அறிக்கை வெளியிடப்பட் டது. இவை அனைத்திற்கும் எந்த அடிப் படையும் இல்லை அல்லது கடுகு போன்ற விஷயங்கள் மலைபோல் சித்தரித்துக் காட்டப்படுகின்றன. இந்திய அரசும், இந்திய ராணுவத்தின் தலை வரும் இந்த அறிக்கைகளை தவறென மறுத்திருக்கிறார்கள், துப்பாக்கிச் சண் டை எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு அரசுகளுமே எல்லைப் பகுதியில் எவ்விதப் பதட்ட நிலைமையும் கிடையாது என்று கூறி யிருக்கின்றன.

நாட்டிலுள்ள வலதுசாரி சக்திகள் சீனாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடத் துவங்கியிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் தலைவர், விஜயதசமி நாளன்று ஆற்றிய உரையின்போது, ‘சீனாவிடமிருந்து அச் சுறுத்தல்’ என்று பேசியிருக்கிறார். இவ் வாறு இந்த சக்திகள் டமாரமடிப்பதற்குக் காரணம், சீனாவிற்கு எதிராக இந்தியா ராணுவரீதியாக மிகவும் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என்பதும், அதற் காக அமெரிக்காவிடம் மேலும் ஆழமான முறையில் ராணுவ உறவுகளை ஏற்படுத் திக் கொள்ள வேண்டும் என்பதுமேயாகும்.

அமெரிக்காவிடமிருந்து ஆயுதங் களை வாங்கிட வேண்டும் என்று பிரச் சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அதற் கான முயற்சிகளையும் அமெரிக்க ராணு வத்திலிருந்து ஓய்வுபெற்ற ராணுவ அதி காரிகள் புதுடில்லியில் தங்கி செய்து வரு கிறார்கள்.‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு சமீ பத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், “அநேகமாக ஒவ்வொரு வார இறுதி நாட் களிலும், புதுடில்லியில் உள்ள ஐந்து நட் சத்திர ஓட்டல்களில் காக்டெயில் பார்ட் டிகளும், திரை மறைவு கலந்துரையாடல் களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அட் மிரல்களும், ஜெனரல்களும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நபர்கள் அமெரிக்காவின் ராய்தியான் (சுயலவாநடிn), நார்த்ராப் கிரம்மான் (சூடிசவாசடியீ ழுசரஅஅயn) போன்ற இராணுவ யுத்தத் தளவாடங் களை உற்பத்தி செய்திடும் நிறு வனங்க ளுக்காக இவ்வேலைகளில் ஈடுபட்டுள் ளனர்,” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதி காரிகள் இந்தியாவிற்குத் தொடர்ந்து விஜயம் செய்த வண்ணம் உள்ளனர். இந்தியாவுக்கு சீனாவால் இராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக, இவர்கள் சொல்லத் தவறுவதில்லை.

இந்தப் பின்னணியில்தான் சமீபத் தில் இந்திய-சீன உறவுகளுக்கிடையே மோதலை உருவாக்குவதற்கான முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்த் திட வேண்டும். நம் நாட்டிற்குள்ளும் இந் திய-சீன ஒத்துழைப்பைக் குலைத்திட விரும்பும் சக்திகள் அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டணியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன.

ராஜீவ் காந்தி 1988இல் சீனத்திற்கு பயணம் செய்ததைத் தொடர்ந்து இரு நாடு களுக்கும் இடையிலான உறவுகள் உறுதி யாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்பின்னர் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் சீனாவுடனான உறவு களை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுத்து வந்திருக்கின்றன. வெகு ஆண்டு களாக இரு நாடுகளுக்கிடையே இருந்து வரும் எல்லை தாவாவை பேச்சுவார்த் தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையி லான ஒத்துழைப்பு என்பது இரு நாட்டின் நலன்களுக்கும் தேவை. அந்த அடிப் படையில் அது இயற்கையாகவே அமைந் திருக்கிறது. இதனை இரு நாடுகளுக்கும் இடை யிலான வர்த்தக உறவுகள் மிகவும் வேகமாக வளர்ந்திருப்பதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும். 2008இல் வர்த் தகத்தின் அளவு (எடிடரஅந டிக வசயனந) 52 பில்லியன் டாலர்களை எய்தியிருக்கிறது. உண்மையில் 2010ஆம் ஆண்டிற்குள் 40 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் புரிந்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கு 2008ஆம் ஆண்டிலேயே பூர்த்தி செய்யப் பட்டு, அதனையும் விஞ்சி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பல்வேறு வித மான உராய்வுகள் இருந்தபோதிலும், இந்த வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சீன மக்கள் குடியரசு புதிய முன்னேற் றப்பாதையில் சென்று கொண்டிருக்கக் கூடிய சூழலில், 21ஆம் நூற்றாண்டில் உலக விவகாரங்களில் கேந்திரமான பங் களிப்பினைச் செலுத்தக்கூடிய சூழலில், சீனப்புரட்சியின் அறுபதாம் ஆண்டு மணிவிழா கொண்டாடப்பட்டுக்கொண் டிருக்கிறது. சீன மக்கள் கடந்த அறுப தாண்டு காலத்தில் தாங்கள் நடந்து வந்த பாதை குறித்து பெருமிதம் கொள்ளலாம், அதேபோன்று எதிர்காலத்தை மிகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளலாம்.

தமிழில்: ச.வீரமணி

Thursday, October 1, 2009

மக்கள் சீனத்தின் மகத்தான மணிவிழா - -சீத்தாராம் யெச்சூரி

இந்த அக்டோபர் 1, மகத்தான சீனப் புரட்சியின் அறுபதாம் ஆண்டு நிறைவு நாள். இருபதாம் நூற்றாண்டில் மனிதகுல நாகரிக வரலாற்றில் நடைபெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது கருதப்படு கிறது. 1917இல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் பாசிசம் அடைந்த படுதோல்வியும் அதனைத் தொடர்ந்து உலகில் பல நாடுகள் காலனி யாதிக்கத்திலிருந்து விடுபட்டமை, சீனப் புரட்சி ஆகிய மூன்றும் மனிதகுல நாகரிக வரலாற்றில் என்றென்றும் அழிக்கமுடி யாத வகையில் முத்திரையைப் பதித் துள்ளன.

கடந்த அறுபதாண்டுகளில், சீனா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மகத்தான சாதனைகளை எய்தியிருக் கிறது. சம கால வரலாற்றில் வேறெந்த நாடும் இந்த அளவிற்கு சாதனைகளைப் படைத்திடவில்லை. சராசரியாக ஒவ் வோராண்டும் ஏற்பட்ட இரட்டை இலக்க வளர்ச்சி விகிதமானது சோசலிஸ்ட் சீனா வை உலகின் வல்லமை வாய்ந்த பொரு ளாதார நாடாக மாற்றி இருக்கிறது. சீனா, 1978இல் தன்னுடைய சீர்திருத்த நட வடிக்கைகளைத் தொடங்கிய சமயத்தில், ‘சோசலிச சீனா தன்னுடைய வளர்ச் சிக்கு முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாக’ப் பலர் கிண்டல டித்தார்கள். ஆனால், இன்று முதலாளித் துவ உலகம் கடும் பொருளாதார மந்தத் தால் நிலைகுலைந்து போயிருக்கக் கூடிய சூழ்நிலையில், முதலாளித்துவ உலகமே தன்னுடைய நெருக்கடியிலிருந்து மீள சீனா உதவ வேண்டும் என்று எதிர் பார்க்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய மகத்தான சாதனை எவ்வாறு சாத்தியமானது? குறிப்பாக, இருபதாண்டுகளுக்கு முன்பு மகத்தான சோசலிஸ்ட் சோவியத் யூனியன் தகர்ந்து விட்ட நிலையில் இது எப்படி முடிந்தது? ‘சோசலிசத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டுவிட்டது, இனி முதலாளித் துவமே சாசுவதமானது’ என்றெல்லாம் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் அலறிக் கொண்டிருக்க, அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் சட்டை செய் யாமல் சோசலிஸ்ட் சீனம் தன் பொரு ளாதார வெற்றிகளைத் தொடர்ந்து ஏற்ப டுத்தி வந்தது. ‘சோசலிச சித்தாந்தத் திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது’ என்று கூறி வந்த வலதுசாரி அறிவுஜீவிகள் இத னால் உண்மையில் அதிர்ச்சியடைந்து, இப்போது சீனாவின் வெற்றிகளுக்கும் மார்க்சியம் அல்லது சோசலிசத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வரு கிறார்கள். இடதுசாரி அறிவுஜீவிகளில் சிலர் கூட, சீனாவின் வெற்றி, முதலாளித் துவத்தை மீண்டும் ஏற்றுக்கொண்டதால் தான் என்கிற முறையில் கருதுகிறார்கள். “மாவோவின் சீனம் கைகழுவப்பட்டு விட்டதா?, ‘முதலாளித்துவப் பாதையில் செல்வோர்’ சீனத்தை மீண்டும் ஆளத் தொடங்கிவிட்டார்களா? சீனாவில் சோச லிசத்தின் எதிர்காலம் என்னவாகும்?” என்று சிலர் கேட்கிறார்கள்

சீனப் புரட்சியின் அறுபதாம் ஆண்டு விழாக் கொண்டாடப்படக்கூடிய இத்தரு ணத்தில் இக்கேள்விகளில் சிலவற்றை ஆராய்வது அவசியமாகும்.

எந்த ஒரு நாட்டிலும் சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்ற உடனேயே அந்நாட் டின் பொருளாதாரப் பிற்போக்கு நிலை மையும், உற்பத்தி சக்திகளின் கீழ்மட்ட நிலைகளும் மாறிவிடும் என்பதோ, முதலாளித்துவத்தை விடவும் உயர்வான நிலைக்கு உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சி உயர்ந்துவிடும் என்பதோ சாத்தி யம் அல்ல என்பதை மாமேதை லெனின், ரஷ்ய சூழல்களின் பின்னணியில் சுட்டிக் காட்டினார்.

மக்கள் சீனத்திலும், உற்பத்தி சக்திக ளின் கீழ்மட்ட நிலைக்கும், சோஷலிசத் தின் கீழான உற்பத்தி உறவுகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவ தற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கலாச்சாரப் புரட்சிக் காலத்தில், மக்கள் சீனத்தில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டது. பின்னர், அங்கு ‘நால்வர் கும் பல்’ தூக்கி எறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளா தாரப் பிரச்சனைகள் தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி ஓர் ஆழமான சுய பரிசோதனையை மேற்கொண்டது. அதன் விளைவாக ஒரு விரிவான தத்து வார்த்த நிலைபாடு உருவாக்கப்பட்டது.

ஒரு மையமான கடமை, இரண்டு அடிப்படை அம்சங்கள்,(டீநே ஊநவேசயட கூயளம. வாந யௌiஉ ஞடிiவேள) என்ற பெயரில், பொருளா தார வளர்ச்சியை ஒரு மையமான கட மையாகவும், மார்க்சிய-லெனினியம் மற் றும் திறந்த கதவுக்கொள்கை (டீயீநn னடிடிச ஞடிடiஉல) என்பவை இரண்டு அடிப்படை அம்சங்களாகவும் வரையறுக்கப்பட்டன.

மக்கள் சீனத்தில் மார்க்சிய-லெனி னியம் என்பது, மா சே துங் சிந்தனைகள், சோஷலிசப்பாதை, மக்கள் ஜனநாயகம் என்னும் வர்க்க சர்வாதிகாரம், கம்யூ னிசக் கட்சியின் தலைமை என்ற நான்கு முக்கிய கோட்பாடுகளை முதன்மை யாகக் கொண்டிருந்தது. திறந்த கதவுக் கொள்கை பொருளாதார சீர்திருத்தத் தைக் குறித்தது.

இந்த சீர்திருத்தங்கள் 1982இல் தொடங்கி மேற்கொள்ளப்பட்டன. இது குறித்த டெங் சியோ பிங் கூறியதாவது :

“ஒரு பிற்பட்ட நாடு சோசலிசத்தைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, ஆரம்பகாலத்தில் அந்நாட்டின் உற்பத்திச் சக்திகள், முன்னேறிய முத லாளித்துவ நாடுகளில் உள்ள உற்பத்திச் சக்திகளுக்கு இணையாக இருக்க முடி யாது என்பதும், முழுமையாக வறுமை யை ஒழிக்கக்கூடிய அளவிற்கு இருக் காது என்பதும் இயற்கையே. எனவே தான், சோசலிசத்தைக் கட்டும் முயற்சி களை மேற்கொள்ளும்போது நாங்கள், எங் கள் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக் கவும், வறுமையைப் படிப்படியாக ஒழித் துக்கட்டவும், அதனைத் தொடர்ந்து மக்க ளின் வாழ்க்கைத்தரத்தைப் படிப்படியாக உயர்த்திடவும், எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இவ்வாறு செய்யாவிடில், எங்ஙனம் முத லாளித்துவத்தை, சோசலிசம் வெற்றி கொள்ளும்?

எனவேதான், எங்களுடைய பணி யின் குவிமையம், பொருளாதார வளர்ச் சியை நோக்கித் திரும்பிட வேண்டும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. அம் முடிவு ஒரு திருப்புமுனையாகும். அதன் பின் நடைபெற்ற நடைமுறைகள், நாம் மேற்கொண்ட நிலைப்பாடு மிகச் சரி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தன. ஒட்டுமொத்த நாட்டின் முகத்தோற்றமே மாறிவிட்டது.’’ (டெங் சியோ பிங்கின் தேர்வு நூல்கள், தொகுதி 3, பக். 21-22).

இதுதான், சோசலிசத்தின் ஆரம்பக் கட்டம் தொடர்பான புரிந்துணர்வாகும்.

இதோடு சோஷலிச சந்தைப் பொரு ளாதாரத்தைக் கட்டுதல் என்ற நிலை பாட்டையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி வடித்தெடுத்தது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடுவது, சந்தை சக்திகளையும் - கருவிகளையும் பயன்படுத்தி உற்பத்தி சக்திகளை வலிமை வாய்ந்ததாக வளர்த் தெடுப்பது, அதன்மூலம் மக்கள் நலன் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பதே இந்த நிலைபாடாகும்.

மக்கள் சீனம், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இத்தகைய மிகப்பெரிய நாட்டின் நவீன சோஷலிசப் பொருளாதார அமைப்பைக் கட்டுவதென்பது, பிரமிக்கத்தக்க பணியா கும். சீனத்தின் தனித்துவ அடையாளங் களுக்கேற்ப சோசலிசத்தைக் கட்டுதல் என்று இந்த நடைமுறையை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சீன சோசலிச அரசின் கட்டுப்பாட் டின் கீழ் உருவாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில், உற்பத்திச் சாதனங் கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம். மூலதனத்தில் பெரும் பங்கு அரசுக்கே சொந்தம். அரசுப் பொருளாதாரமே பொரு ளாதாரத்தின் ஜீவநாடியைக் கட்டுப்படுத் திடும், தேசியப் பொருளாதாரத்தில் ஆதிக் கம் செலுத்திடும். இவற்றின் மூலமாக சீன அரசு, தனியார் சந்தைப் பொருளா தாரத்தால் ஏற்படுத்தப்படும் சமத்துவ மின்மையைக் குறைத்திடவும், தொழிலா ளர் வர்க்கத்திற்கு செல்வம் சென்ற டைவதையும் உத்தரவாதப்படுத்தியது.

இத்தகைய சீர்திருத்தங்களின் விளை வாக, 1978க்குப்பின் சீனம் மகத்தான வெற்றிகளைக் குவித்தது. சீன மக்களின் வாழ்க்கைத்தரம், பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியது. வறுமை மட்டம் மிகக் கூர்மையான முறையில் குறைந்தது. சுகா தாரம், உயர் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் சீனம் மிகவும் பிரமிக் கத் தக்க விதத்தில் முன்னேறியுள்ளது. 1978இல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 364.5 பில்லியன் யுவான்களா கும். ஆனால் 2007இல் அது 68 மடங்கு உயர்ந்து, 25.1 டிரில்லியன் யுவான்களாக வளர்ந்திருக்கிறது. 1978இல் நகர்ப்புற மக்களின் ஆண்டு சராசரி வருமானம் 343.4 யுவான். 2007இல் அது 13,786 யுவான்களாக 40 மடங்கு அதிகரித்திருக் கிறது. கிராமப்புற மக்களின் வருமானமும் 133.6 யுவான்களிலிருந்து 31 மடங்கு உயர்ந்து 4,140 யுவான்களாக அதிகரித் திருக்கிறது. நாட்டின் ஏழைகளின் எண் ணிக்கை 1978இல் 250 மில்லியன்களாக இருந்தது. 2007இல் 14.79 மில்லியன் களாகக் குறைந்துள்ளது.

2008ஆம் ஆண்டில், மொத்த உள் நாட்டு உற்பத்தி, சென்ற ஆண்டை விட 9 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஐந் தாண்டுகளாக தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்க ளின் தனிநபர் ஆண்டு வருமானம் 8 சத விகிதம் உயர்ந்திருக்கக்கூடிய அதே சம யத்தில், நகர்ப்புற மக்களின் தனிநபர் ஆண்டு வருமானம் 8.4 சதவிகிதம் அதி கரித்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு சீனா வில் மிகவும் வெற்றிகரமாக நடந்துமுடிந்த கண்கவர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக் களில் தங்கப்பதக்கங்கள் பெற்றதில், அமெரிக்காவை முந்திக்கொண்டு வந்து, முதல் நாடாக உயர்ந்து நின்றது. உலகத் திலேயே மிக அதிக அளவில் இணையத் தைப் பயன்படுத்துவோரும் சீனத்தில் தான் இருக்கிறார்கள். 300 மில்லியனுக் கும் அதிகமான அளவில் இணையத் தைப் பயன்படுத்துவோரில் 270 மில் லியன் பேர் பிராட்பேண்ட் வசதியைப் பெற்றிருக்கிறார்கள். சீனா, அறிவியல் தொழில்நுட்பத்திலும் சாதனைகள் படைத்து வருகிறது. சீன விண்வெளி விஞ்ஞானிகள், தங்களுடைய சென்சௌ 7 விண்தளத்திலிருந்து ஏவப்பட்ட விண் கலத்தின் மூலமாக விண்ணில் நடந்து சாதனை படைத்திருக்கிறார்கள். சமீபத் தில் சீனாவின் வென்சுவான் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோ ருக்கு நிவாரணப் பணிகளை விரைந்து அவர்கள் மேற்கொண்டதைப் பார்க்கை யில் சீனம் பல துறைகளிலும் முன் னேறியிருப்பதோடு மட்டுமல்லாமல், எந்த அளவிற்கு மக்களின் சமூகப் பொறுப்புகளிலும் அக்கறை கொண்டிருக் கிறது என்பதை உலகுக்கு மெய்ப்பித்தது. இவை அனைத்தும் எப்படிச் சாத்தியமா னது? இவை அனைத்திற்கும் காரணம் நிச்சயமாக சீனம் ‘மாவோயிஸ்ட் பாதை’ யிலிருந்து விலகிச் சென்றதால் அல்ல, மாறாக சீன மக்கள் குடியரசு கடந்த முப் பதாண்டு காலமாக மத்தியத்துவப்படுத் தப்பட்ட திட்டத்தின் மூலம் உருவாக்கி யுள்ள உறுதியான அடித்தளங்களை வளர்த்தெடுத்ததன் காரணமாகவே இவ்வளவும் சாத்தியமாகியது.

ஆயினும், மக்கள் சீனம் மகத்தான சாதனைகளைப் படைத்திட்ட போதி லும், வளர்ச்சியின் காரணமாக புதிய பிரச் சனைகளும் எழுந்துள்ளன. பிரதானமாக அதிகரித்துவரும் சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் லஞ்ச ஊழல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை நன்கு உணர்ந்துள்ள சீனக் கம் யூனிஸ்ட் கட்சி இவற்றைச் சமாளித்திட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் வேலை முறையினை நவீனப் படுத்தி வருவதால் நிறைய ஊழியர்கள் வேலையிழக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு அரசு குறைந்தபட்ச வாழ்க் கை ஊதியம் அளிப்பதுடன், மாற்று வேலைக்கான திறமைகளை வளர்க்க மறு கல்வியும் அளித்த போதிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அரசின் முன் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சனை யேயாகும்.

வளர்ந்துவரும் சமத்துவமின்மை கார ணமாக புதிய முதலாளித்துவ வர்க்கம் சீனத்தில் உருவாகி வருகிறதா என்ற ஒரு கேள்வியும் இப்போது எழுகிறது.

டெங்சியோபிங், தெற்கு சீனத்திற்கு விஜயம் செய்தபோது பேசியதாவது: “இன்று நாம் பரிசீலிக்க வேண்டிய முக் கிய அம்சம் என்ன? நாம் செல்லும் பாதை முதலாளித்துவப் பாதையா, சோச லிசப் பாதையா என்பதேயாகும். நாம் மேற்கொள்ளும்பாதை சரியானதா என் பதை சோசலிஸ்ட் சமூகத்தின் உற் பத்திச் சக்திகளை வளர்த்து மேம்படுத் திட அது உதவுகிறதா, சோசலிஸ்ட் அர சினை ஒட்டுமொத்தமாக அது வலுப் படுத்துகிறதா மற்றும் மக்களின் வாழ்க் கைத்தரத்தை உயர்த்திட அது உதவு கிறதா என்பனவற்றைக் கொண்டே கணித்திட முடியும்.” (சீனாவில் சமூக அறிவியல்கள், தொகுதி 20, எண் 2, பக். 29)

மேலும், 1985இல் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் சமத்துவமின்மை குறித்து எழுந்த ஐயங்கள் தொடர்பாக டெங்சியோ பிங் கூறியதாவது: ‘‘வளர்ந்து வரும் பொரு ளாதார சமத்துவமின்மை தொடர்பாக நாம் ஆழ்ந்து பரிசீலித்திருக்கிறோம். நம்மை மீறி இன்னொரு வேறுபட்ட கோட்பாடு கொண்ட வர்க்கம் உருவாகுமானால், நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் தோல்விய டைந்துவிட்டதென்றே பொருள். ஒரு புதிய முதலாளித்துவ வர்க்கம் உருவா வது சாத்தியமா? விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒருசில முதலாளிகள் உருவாகிடலாம். ஆனால் அவர்கள் ஒரு வர்க்கமாக உருவாக மாட்டார்கள்.

“சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது, நம் பொதுத்துறை நிறுவனங்களின் உடைமையுரிமைதான் ஆதிக்கம் செலுத்தி, முதலாளிகள் ஒரு வர்க்கமாக உருவாவதற்கு எதிராகக் காத்து நிற்கும். கடந்த நான்காண்டுகளில், இந்த நிலைப் பாட்டின் அடிப்படையிலேயே நாம் பய ணித்துக் கொண்டிருக்கிறோம். அதாவது, சோசலிசத்தை எப்போதும் நாம் உயர்த் திப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்.’’ (டெங்சியோ பிங்கின் தேர்வு நூல்கள், தொகுதி 3, பக். 142-143)

சீனாவின் தனித்துவ அடையாளங் களுக்கேற்ப சோசலிசத்தைக் கட்டும் ஆழமான முயற்சியில் சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி ஈடுபட்டிருக்கிறது என்பது மிகத் தெளிவானதாகும். சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி, உற்பத்திச் சக்திகளை வேகமாக விரிவாக்கிடவும், இத்தகைய சீர்திருத்தங்கள் மூலமாக சீனாவில் சோசலிசத்தை வலுப்படுத்திடவும் ஒருமுகப்படுத்திடவும் பெருமுயற்சி செய்துகொண்டிருக்கிறது.

அவ்வாறு நடவடிக்கைகள் மேற் கொள்ளும் அதே சமயத்தில், இத்தகைய முயற்சிகளின் விளைவாக சோசலி சத்தையே வலுவிழக்கச்செய்து அழித் திடக்கூடிய விதத்தில், சில போக்குகள் தோன்றியிருப்பதும் உண்மை. அதன் காரணமாக சோசலிசத்திற்கு எதிரான சிந்தனைகளும் மேலோங்கி வருவதைக் காண்கிறோம். சீனத்தில் உள்ள ஏகாதி பத்தியவாதிகளின் நிதி மூலதனம் சோசலிசத்தை வலுப்படுத்திட விரும் பாது, மாறாக தன் லாபத்தை அதிகப்படுத் திடவும், சோசலிசத்திற்கு எதிரான அம் சங்களை உருவாக்குவதற்கான வேலை களைச் செய்திடவுமே முயலும். சோசலி சத்தை பலவீனப்படுத்திட நிச்சயமாக அவை முயலும். தாங்கள் கொள்ளை லாபம் அடையக்கூடிய விதத்தில், சோச லிசத்தைத் தகர்த்திடவும் முயற்சிக்கும். மக்கள் சீனத்தில் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே நடைபெற்று வரும் இன்றைய போராட்டம் இதுதான். சீனப் புரட்சியின் அறுபதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இத்தருணத் தில், சோசலிசத்தை வலுப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்காக சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திவரும் இந்தப் போராட்டத்திற்கு, இந்தியாவில் உள்ள நாமும், உலகம் முழுவதும் உள்ள கம்யூ னிஸ்ட்டுகளும் என்றென்றும் ஆதரவாக நிற்போம்.

(ஆங்கில மூலத்திலிருந்து தமிழ்ச்சுருக்கம் : வீரமணி