Friday, November 25, 2016

ரயில்வே பாதுகாப்பை உறுதிப்படுத்திடுக!



கான்பூர் அருகே புக்ராயன் என்னுமிடத்தில் நடைபெற்றுள்ள இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ்ரயில் விபத்தில் மிகவும் கொடூரமானமுறையில் பயணிகள் விபத்துக்குள்ளாகிஇருக்கிறார்கள். 146 பேர் ரயில் பெட்டிகளுக்கு அடியில் நசுங்கி இறந்துள்ளார்கள், 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள். பலர் இன்னமும் உயிருக்காக ஜீவமரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய ரயில்வேயில் இதுபோன்ற விபத்துக்கள் இப்போதெல்லாம் அபூர்வ நிகழ்வாக இல்லாமல்வழக்கமாக நடைபெறும் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. சென்ற ஆண்டு 69 விபத்துக்கள் நடந்துள்ள அதே சமயத்தில் இந்த ஆண்டு இதுவரைக்கும் 80 பெரிய ரயில் விபத்துக்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான சிறிய விபத்துக்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விபத்துக்கள் நடைபெறும்போதெல்லாம், காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படுவது வழக்கம். ‘குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுஉறுதிமொழி அளித்திருக்கிறார்.
ஆனால்,உண்மையில் யார் குற்றம்புரிந்தவர்கள்? ரயில்வேயில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ரயில்வேயில் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்கான துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வோராண்டும் ரயில்வே அமைச்சகம் குறைத்துக்கொண்டே வருவதிலிருந்தே பாதுகாப்பு குறித்த அதன் உறுதிமொழியின் லட்சணம் தெளிவாகத் தெரிகிறது. ரயில்வேயில் பாதுகாப்பு சம்பந்தமாக உள்ள தேய்மான ரிசர்வ்நிதி (depreciation reserve fund) தொடர்பாகஅரசின் ஒதுக்கீடு மற்றும் செலவினத்தைப் பார்த்தால், அவை ஒவ்வோராண்டும் எப்படித் தேய்ந்துக்கொண்டே வருகின்றன என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
2015-16 ரயில்வே பட்ஜெட்டில் 7,900 கோடி ரூபாய் இந்த நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டது. ஆனால், உண்மையில் இதன்கீழ் ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 5,500 கோடி ரூபாய் மட்டுமே என்று திருத்திய மதிப்பீடு காட்டுகிறது. 2016-17 ரயில்வே பட்ஜெட்டில், 3,200 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2008-09ல் இது 6,000 கோடிரூபாய் என்பதோடு ஒப்பிட்டோமானால், இது எந்தஅளவிற்கு வீழ்ச்சி என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பாதிக்கும் மேலான விபத்துக்கள் ரயில்கள் தடம்புரண்டதன் மூலமாக ஏற்பட்டவைகளாகும். இதிலிருந்து ரயில்பாதைகள் பராமரிப்பில் போதிய கவனமில்லை என்பதும், அவ்வப்போது ரயில்பாதைகள்செப்பனிடுதல் நடைபெறவில்லை என்பதும் நன்கு புலப்படும். ரயில்கள் தடம் புரள்கையில், இண்டக்ரல் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரயில்பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதாலேயே உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. விபத்துக்கள் ஏற்பட்டால் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படாதவண்ணம் புதிய பாணியில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் (LHB coaches)) ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்றசொகுசு ரயில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பழைய முறையில் தயாரிக்கப்பட்ட 40 ஆயிரம் பெட்டிகள் இன்னமும் புழக்கத்தில் இருந்து வருகின்றன.
ஆனால், ரயில்வே அமைச்சகமோ அல்லது ரயில்வே வாரியமோ எதிர்வருங்காலங்களில் இவற்றை மாற்றி அமைத்திடும் எண்ணத்திலேயே இல்லை.2012ல் ரயில்வே பாதுகாப்பு தொடர்பாகஅறிக்கை அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப்பட்ட அனில் ககோட்கர் குழு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அடுத்தஐந்தாண்டுகளுக்குள் அனைத்து ரயில்பெட்டிகளையும் புதிய முறையிலான ரயில்பெட்டிகளாக மாற்றிடவேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால்,இவ்வாறு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்சமயம், 2016-17ஆம் ஆண்டில் 1,253 ரயில்பெட்டிகள் மட்டுமே புதிய முறையில் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வேகத்தில் உற்பத்தி மேற்கொள்ளப்படுமானால், அனைத்து பெட்டிகளையும் மாற்றிட இன்னும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகும்.
ரயில்வேயைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் எதற்கு முன்னுரிமை கொடுத்துவருகிறது என்பதை அனைவரும் அறிவோம். பிரதமர் மோடி, உயர்வேபுல்லட் ரயில்களைப் பெறுவது குறித்துமுன்னுரிமை கொடுத்துப் பேசிவருவதைப் பார்க்கிறோம். அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம், ஜப்பான்நாட்டுடனான கூட்டுறவுடன் 98 ஆயிரம்கோடி ரூபாய் செலவினத்தில் மேற்கொண்டிட திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இவ்வாறு இந்த அரசு பழைய இண்டக்ரல் கோச் தொழிற்சாலையில் தயார்செய்த பெட்டிகளுக்குப் பதிலாக, விபத்துக்குள்ளானால் ரயில்பெட்டிகள் மோதிஅதிக பாதிப்பு ஏற்படாத புதிய பாணியிலான எல்எச்பி ரயில் பெட்டிகளைத் தயாரித்திட முன்னுரிமை அளித்திடவில்லை. மாறாக, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடிய விதத்தில் மக்கள் தொகையினரில் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே பயன்படக்கூடிய திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் அவற்றையும் அது தனியாரிடம் தாரைவார்த்துவிடும்.
மற்றபடி பாசஞ்சர் ரயில்கள் குறித்தோ, பழைய பெட்டிகளைப் புதிய பாணியில் விபத்து ஏற்பட்டால்பாதிப்பு ஏற்படாத வகையிலான பெட்டிகளாக மாற்றுவது குறித்தோ, ரயில் தண்டவாளங்களைப் பராமரிப்பது குறித்தோ, சேவைகள் மிகவும் மோசமாக இருப்பது குறித்தோ இவற்றின் காரணமாக ரயில்கள் தாமதமாக வருவது குறித்தோ கவலைப்படவில்லை. ஆகையால், புக்ராயன் ரயில் விபத்திற்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டுமானால் அதுநேரடியாக அரசாங்கத்தை இயக்கக்கூடிய தலைவர்கள் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர்களையே கைகாட்டும். மாறாக, கீழ்மட்டத்தில் பணிபுரியும் கேங்மேன் அல்லது பராமரிப்பு ஊழியர்களைக் காட்டாது. ரயில்வே பாதுகாப்பு ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு பொறுப்பேற்க வேண்டிய நபர் என்று ஒருவர் இருப்பாரேயானால் அது ரயில்வே அமைச்சர்தான். ரயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பொது பட்ஜெட்தான் இனிமேல்ரயில்வேக்கும் நிதி ஒதுக்கீடும். ரயில்விபத்துக்கு இனி மோடி அரசாங்கம்தான் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். இந்திய ரயில்வேயை மக்கள்பாதுகாப்புடன் பயணம் செய்யக்கூடியவிதத்தில் மாற்றி அமைத்திடுக. இல்லையேல், கடமையைச் செய்யத் தவறியவர்களாவீர்கள்.
(தமிழில்: ச.வீரமணி)



No comments: