Tuesday, November 8, 2016

நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்


அன்பார்ந்த முகநூல் நண்பர்களுக்கு,
வணக்கம். தீக்கதிர் நாளிதழுக்காக அக்டோபர் புரட்சி குறித்து தந்தை பெரியார் கூறியவற்றை குடிஅரசு இதழ்களில் தேடியபோது, நாகரிகம் குறித்து அவர் ஆற்றிய உரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
என் உள்ளத்தில் திருவள்ளுவர் குறித்தும் தந்தை பெரியார் குறித்தும் என் ஆழ்மனதில் நன்கு பதித்ததில் என் அண்ணனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. பல திருக்குறள்களை அவர் பொருளோடு கூறி என் மனதில் பதிய வைத்தார். அவ்வாறு கூறும்போது, தந்தை பெரியாரையும் ஒரு குறளோடு ஒப்பிட்டார்.
தந்தை பெரியாரிடம் யார் வந்து எது கொடுத்தாலும் அவர் கொடுத்தவரின் மனம் கோணாதவாறு அதை வாங்கி சாப்பிடுவாராம். அதற்கு அவர் ஒரு குறளை ஒப்பிட்டிருப்பார்.
பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்பதே அந்தக் குறள்.
இது ஒருபுறமிருக்க குடி அரசு இதழ்களை நான் மேய்ந்தபோது. நாகரிகம் என்றால் என்ன என்று
ஓர் உரை நிகழ்த்தியிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதில் தந்தை பெரியார் அவர்கள் அந்தக் குறளை மேற்கோள்காட்டியிருப்பார்.
அதை நான் படித்தபோது நான் அடைந்த இன்பத்தை, முகநூல் நண்பர்களும் அடையட்டும் என்று 
இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
தோழமையுடன்
ச. வீரமணி.
நாகரீகமென்றால் என்ன?
தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான - முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது.
விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப் படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன்.
நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத் தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்தாகிவிடுமா? அது போல் உங்கள் வாய் அடங்கும்படி நான் பதில் சொல்லி விட்டதாலேயே நான் சொன்னது சரி என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாததாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.
இன்றைய தினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம் “இந்தியா வின் தற்கால நாகரீகம்” என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகரமானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத் தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
“நாகரீகம்” என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ‘நாகரீகம்’ என்பதற்கு ஒரு தனிப்
பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ் குறளில் நாகரீகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப்பட்டி ருக்கிற தாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாக்ஷண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் எனக்கு ஞாபகம். நாகரீகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவனை களிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டு வது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்த காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரீகம். இப்பொழுதோ என்றால் ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரீகமென்று தான் கருதுகிறோம். நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும் பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டு (குசநந யாக) சுயேச்சையாக சீர்தூக்கிப் பார்த்தால் தான் விஷயங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுது தான் விளங்கும். ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவ சிவா என்று ஜெபிப்பது தான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள் மேல் சொன்ன விஷயத்தை கேலி செய்கிறது. புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டா லும், முன்பு கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவி யானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக் கிரதையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்த°தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்
களையே நாகரீகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவது தான் வித்வத் தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக் கத் தக்கதாக ஆகிவிட்டது. Òபுத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததை சிலாகித்துப் பேசி னோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியக்ஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும்-விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம். நாகரீகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான-வழக்கத்தையேயொட்டி “நாகரீகம்” காணப்படுகிறது. காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும்-புரட்சி ஏற்படவும் செய்கிறது. மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர் கள். எது நாகரீகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கின்றது. ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத்தினால் செலவாணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம். நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபடவேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரீகம் என்பது சதா உழைத்துத் தான் உண்ண வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரீகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம். இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரீகமாக பாவிக்கப் பட்டி ருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப் படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும்-தக்ளி நூல் நூற்பதும் நாகரீகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது. நாம் ஓர்காலத்தில் தேசம், தேசீயம்-தேசப்பற்று என்பதை நாகரீக மாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள்அபிமானம் என்று கருதுவதையே பெரிதும் நாகரீக மாகக் கருத முன் வந்துவிட்டோம். ஒருகாலத்தில் நாகரீகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக்கொண்டு ஒவ்வொரு வரும் தாங்கள் அதிக மேல் சாதிக்காரனாவதற்குச் சைவ-வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்திகெட்ட தனமென்றும், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனித் தத்துவம் நாகரீகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி நன்மையும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப் பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்கு பொல்லாங்கு என்ப தையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம். தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை-மக்கள் சமூகத்தின் நலனைக் கொடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவா தேவிக்காரர்களை-மனித சமூக நாசகர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினர்களையும்-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக் கின்றோம். நாகரீகம் என்பது பிடிபடாத ஓர் விஷயமென்று முன்பே கூறினேன். நம்நாட்டு பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சீலைகட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களை சேர்த்து முடிந்துகொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை  எப்படி சிலவு செய்கிறோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களை கேட்பவரையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையை சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாக கருத நேரிடுகிறது. நம்மிடையேயுள்ள சாதி அபிமானம் சொந்தகார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாதுகாந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடை யின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும் சௌகரியத்திற்காவும்- நன்மைக்காவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோப°துக்காக அணிந்து கொள்ளாமல் பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துபோக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்? புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக்கொண்டு ஜனசமுதாய நன்மையை தேடி பாடு பட முன்வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும்கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருத்தகூலி தரும் என்றுசொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன் நம்பிக்கைகொண்டுமக்களின் விடுதலைக்கு சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக்கொண்டு போராட வாருங்கள்.
///



No comments: