Saturday, July 22, 2017

இந்தியாவில் மிகவும் சிறப்பாக ஆளப்படும் மாநிலம் குஜராத் அல்ல--சயீத் நக்வி

இந்தியாவில் மிகவும் சிறப்பாக ஆளப்படும் மாநிலம் குஜராத் அல்ல
--சயீத் நக்வி
பகலைத் தொடர்ந்து இரவு வரும் என்ற முதுமொழிக்கேற்ப காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுக்கும் மாநிலங்களில் அதற்குப் பதிலாக அநேகமாக அதனை பாஜக கைப்பற்றும். ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான  திரிபுரா இதற்கு முற்றிலும் மாறுபட்டு நிகரற்ற முறையில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய மாநிலமாக விளங்குகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அங்கே ஆட்சி அதிகாரத்தில் 32 ஆண்டுகளாக கோலோச்சுகிறது. அதன் வாக்கு சதவீதம் 50க்கும் மேலாகும். காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அப்படி ஒன்றும் குறைவானது அல்ல. அதற்கு 36 சதவீதம் வாக்குகள் உண்டு. இப்போது அதன்மீது பாஜக கண் வைத்திருக்கிறது. மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரசையும் தகர்த்தபோது, அதன் பாதிப்பு திரிபுராவிற்கும் சென்றது. அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சுதிப் ராய் பர்மான் திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவினார். ஏதேனும் ஆதாயம் கிடைக்காதா என்ற ஆசையில் இவ்வாறு காங்கிரசிலிருந்து திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவிய பர்மானுக்கு, இப்போது வேறெங்கிருந்தாவது அதைவிடக் கூடுதலாக ஆதாயம் கிடைக்குமெனில் தாவாமல் இருப்பாரா? மிகப்பெரிய அளவில் அவருக்கு அனுகூலங்கள் கிடைத்துள்ளது என்கிற வதந்தி அகர்தலா முழுவதும்  பரவியிருக்கிறது. தற்சமயம் திரிபுரா சட்டமன்றத்தில் பாஜகவிற்கு என்று  ஓர் உறுப்பினர் கூட கிடையாது. பர்மான் தன்னுடன் உள்ள 5 உறுப்பினர்களுடன் பாஜகவிற்குத் தாவ இருக்கிறார். இதனை அம்மாநில ஆளுநரான தத்தாகடா ராய் வரவேற்றிருக்கிறார்.  அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக ஊழியர்களே முஸ்லீம்களுக்கு எதிராக இவர் கக்கிய வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.   முஸ்லீம்கள் பொது இடத்தில் பன்றிக் கறியைச் சாப்பிடத் தொடங்கினார்கள் என்றால்தான்,  அவர்கள் நம்முடன் “முறையாக ஒருங்கிணைவார்கள்” என்று தான் நம்புவதாக ஆளுநர் கூறுகிறார்.  பன்றியுடன் அவருக்குள்ள சித்திரங்கள் அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைக்கின்றன. உதாரணமாக, முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு அவர் விரும்பும் தண்டனை என்ன தெரியுமா?  அவர் கூறும் யோசனையைக் கேட்பவர்கள் தங்கள் மூக்கைப் பிடித்துக்கொள்வார்கள். “பன்றித்தோலுடன் அவர்களைச் சுற்ற வேண்டும், பன்றிகளின் மலத்துவாரத்தில் அவர்களின் முகம் இருக்கும்படி வைத்து அவர்களைப் புதைக்க வேண்டும்.”
இத்தகைய இழிவான வசைமாரிக் கூற்றுகள் குறித்து கடந்த 17  ஆண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மாணிக் சர்க்கார் அலட்டிக்கொள்ளவில்லை. எனினும்,  மாநிலத்தில் 7 சதவீதம் அளவிற்கு இருக்கின்ற முஸ்லீம்கள் இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.  இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக ஆளப்படும் மாநிலமாக திரிபுரா விளங்குவதை என் அனுபவத்தில் நான் கண்டுள்ளபோதிலும், ஊடகங்கள் அதனைக் வெளிக்கொணர விரும்பாததால், நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இது குறித்து ஒன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள்.  மத்திய சட்ட அமைச்சரான ரவி சங்கர் பிரசாத், “நான் மிகவும் வியந்து பாராட்டும் முதல்வராக மாணிக் சர்க்கார் விளங்குகிறார்” என்று ஒரு சமயம் கூறியதை அனைவருக்கும் சொல்லியாக வேண்டும்.
லண்டனிலிருந்து வெளிவரும் இண்டிபெண்டெண்ட் ஏட்டின்  இதழியலாளர் ஆண்ட்ரு பன்கோம்ப் (Andrew Buncombe), அகர்தலா சென்றுவிட்டு, புதுதில்லி திரும்பியபின்,  திரிபுரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மிகவும் வியந்து போற்றிப் புகழ்ந்தார். “ஒழுங்கமைதி, நேர்த்தி, களங்கமற்ற, நிர்வாகத்தில் எவ்விதமான  அபத்தமும் நிகழாக மாநிலம்.”  பார்வையாளர்கள் பலரும் பார்த்திருப்பதைப்போல, அவரும் பார்த்திருக்கிறார். “சிலசமயங்களில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார்.” “நானே, அவரது துணைவியார், ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருப்பவர், பள்ளிக்கூடத்திற்கு சைக்கிள் ரிக்சாவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன்.”  
திரிபுராவின் மனிதவள வளர்ச்சி அட்டவணை குறித்து எவருக்கேனும் தெரியுமா? அம் மாநிலத்தின் மக்கள் தொகை குறைவுதான். 40  லட்சம்தான்.  நாட்டில் இதன்னியில் கோவா மற்றும் சிக்கிம் ஆகியவைதான் சிறிய மாநிலங்களாகும். எனினும்கூட, இம்மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 96 சதவீதம் ஆகும். நாட்டில் மிக உயர்ந்த நிலையில் உள்ள மாநிலமாகும். குஜராத்தில் எழுத்தறிவு எவ்வளவு தெரியுமா? 83 சதவீதம் மட்டுமே. (நான் கேரளாவை இதில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஒருசமயம் அது நிகரற்று விளங்கிய மாநிலமாகும்.)
தனிமனித ஆயுட்காலம் ஆண்கள் 71 ஆண்டுகள், பெண்கள் 73 ஆண்டுகளாகும்.  இதிலும் இம்மாநிலம் நாட்டில் வரலாறு படைத்துள்ளது.  குஜராத்தில் இது முறையே 64,  66 ஆகும். திரிபுராவில் பழங்குடியினரிடையே பாலின பாகுபாடு என்பது அரிதிலும் அரிதாகும்.
   இதற்கெல்லாம் காரணம் என்ன? இங்கு ஆட்சியில் உள்ள தலைமையின் மேதைமைதான். மாநிலத்தில் உள்ள முக்கியமான அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு,  தாங்கள் தங்கள் அரசியலில் செயல்படுத்துவதைப் போலவே, நல்லாட்சி வழங்குவதிலும் ஒரு கலையாக செயல்படுவதுதான் காரணம். தங்கள் மார்பை விரிவாக்கிக் காட்டுவதற்குப் பதிலாக, ஏதேனும் பிரச்சனை என்றால் கையைப் பிசைந்துகொண்டு நிற்பதற்குப் பதிலாக,  மாநிலத்திற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, மேலிருந்து கீழ் வரை ஆராய்கிறார்கள், அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்கள், கட்சி ஊழியர்களை அழைத்துப் பேசுகிறார்கள், மாநிலத்தில் இயங்கும் மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஈடுபடுத்துகிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சுயாட்சி  கவுன்சில்களையும் பங்கேற்க வைக்கிறார்கள், (இவை மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்காகும், மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளில் இயங்குபவைகளாகும்) இவ்வாறு அனைவரது உண்மையான பங்களிப்பினையும் உணர வைத்து, செயல்படுத்துகிறார்கள்.  இதனை நாம் பற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து, இந்த மாநிலத்தில் மிக முக்கியமான பிரச்சனை, பழங்குடியினரையும், பழங்குடியினரல்லாதவர்களையும் மோத விடும் பிரச்சனையாகும்.  இங்கே மன்னராட்சி இருந்த சமயத்தில், பழங்குடியினர்தான் அதிகமாக இருந்தார்கள். ஆனால், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) உருவான பின்னர், அண்டைப் பகுதிகளிலிருந்த இந்து வங்காளிகள்  திரிபுராவிற்கு புலம்பெயர்ந்து வந்தார்கள். இதன் காரணமாக இங்கிருந்த பழங்குடியினர் (மொத்தம் 19 பழங்குடியினத்தவர்கள் இருக்கிறார்கள்), மாநிலத்தில் சிறுபான்மையினராக மாறிவிட்டார்கள்.  இப்போது மாநிலத்தின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் வங்காளிகள், 30 சதவீதத்தினர் பழங்குடியினராவார்கள்.
அதிகாரப் பசி கொண்ட காங்கிரஸ், வங்காளிகளின் வாக்கு வங்கியை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக  வங்காளிகள் – பழங்குடியினர் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தது. இத்தகைய இழிவான அரசியலில் பாஜக மட்டும்தான் செயல்படுமா என்ன? எங்காவது எண்ணிக்கையில் குறைவு ஏற்படுமானால், ஒரு பழங்குடியினத்தவர், இன்னொரு பழங்குடியினத்தவருக்கு எதிராக பயன்படுத்தப்படுவார். இவ்வாறுதான் இந்த மாநிலம் முன்பு இருந்தது.
மாபெரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்  தலைவரான தசரத் தேவ், எதிர்காலம் குறித்து திட்டமிட்டார். பழங்குடியினர் மத்தியில் எழுத்தறிவை ஏற்படுத்துவதற்காக 1945இல் மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை (ஜன சிக்சா அபியான்) தொடங்கினார்.  அன்றைக்கு ஆட்சியிலிருந்த மகாராஜாவிற்கு நிர்ப்பந்தம் கொடுத்து, 500 ஆரம்பப் பள்ளிகளுக்கு  அங்கீகாரத்தைப் பெற்றார்.  அது இப்போது பல்கிப் பெருகி, மாநிலத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற அளவில் வியாபித்திருக்கிறது.  
இத்தகைய அடித்தளத்தின் காரணமாகத்தான் பழங்குடியினர் இம்மாநிலத்தில் கம்யூனிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் வங்காளிகள், காங்கிரஸ் பக்கம் சென்றார்கள்.  காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிளவுவாத நிலைப்பாட்டில் திருப்தி அடைந்துவிட்டது. ஆனால், நிருபன் சக்ரவர்த்தி போன்ற ஒரு  தலைவர்  இம்மாநிலத்திலிருந்த சிக்கலான சமூக எதார்த்தத்தை நன்குணர்ந்தார். பழங்குடியினரின் ஆதரவு இல்லையென்றால், வங்காளிகளின் நிகழ்ச்சிநிரலை ஒரு கட்டத்திற்கு மேல் எடுத்துச் செல்லமுடியாது. அதேபோல், வங்காளிகளின் உதவியில்லலாமல் பழங்குடியினர் முன்னேற முடியாது. எனவே, பழங்குடியினர்—பழங்குடியினரல்லாதவர் ஒன்றுபட்ட போராட்டம், ஒன்றே நமது துயரோட்டும் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. அது இரு தரப்பினர் மத்தியிலும் ஆழமாக எடுத்துச் செல்லப்பட்டது.
1940களிலும், 50களிலும் கம்யூனிசத்தைக் கையில் எடுத்துக் கொண்ட பழங்குடியினர் மத்தியில் இந்த முழக்கத்தை உடனடியாகப் பற்றிக்கொண்டுவிட்டார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக வங்காளிகளும் இம்முழக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.  இவ்வாறு இடதுசாரிகள் தங்கள் ஒற்றுமைக்கான மேடையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிய அதேசமயத்தில், காங்கிரஸ் வங்காளிகள் இடையே கவனம் செலுத்துவதில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள்.  இதன்காரணமாக கொஞ்சம் தேர்தல் ஆதாயம் என்பது அவர்களுக்கு இல்லாமல் இல்லை. ஆயினும் வாக்காளர்கள் மத்தியில், உண்மையில் மக்கள் மத்தியில், இடதுசாரித் தலைவர்கள் அனைவருமே மிகவும் எளிமையுடனும், எவ்விதமான லஞ்ச லாவண்யங்களுக்கும் இடம் கொடுக்காமலும் இருந்ததானது, வாக்காளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கத் தொடங்கியது.  காங்கிரஸ்  எம்எல்ஏ-யான கோபால் ராய் அவர்களே, “தனிப்பட்டமுறையில் இவர்கள் லஞ்சலாவண்யத்திற்கு இடம் கொடுக்காதவர்கள் என்பதை மறுக்க முடியாது,” என்று ஒப்புக்கொள்கிறார்.
1978-88இல் முதல் இடது முன்னணியின் முதலமைச்சராக இருந்த நிருபன் சக்ரவர்த்தி, முதலமைச்சரின் அலுவலக பங்களாவிற்குள் நுழைந்துவிட்டு, பின்னர் வெளியேறிய போது, இரண்டு டிரங்கு பெட்டிகளில் – தன்னுடைய துணிமணிகள், புத்தகங்கள் மற்றும் ஒரு ஷேவிங் செட்டுடன் வெளியேறினார். முதல்வரின் வீட்டிற்குத்  தேவையான மளிகை சாமான்கள் அவருக்கான ரேஷன் அட்டையிலிருந்துதான் பெறப்பட்டன. நவீன முதலாளித்துவம் அவரை அநேகமாக ஒரு தீண்டத்தகாதவராகவே கருதியிருக்கும். ஏனெனில் அவருக்கென்று ஒரு வங்கிக் கணக்கு கூட கிடையாது. அவரது சீடரான, இப்போதைய முதலமைச்சரான மாணிக் சர்க்காரும், மிகவும் சிக்கனமானவர்தான். முதலமைச்சர் மத்திய, மாநிலத் திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்துள்ளார் என்பது நம்பமுடியாததாகத்தான் இருந்தது.  நான் அவரை, தாகூரின் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த  அவருடைய மிகவும் எளிமையான அலுவலகத்தில் அவரை சந்தித்தபோது, அவர் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அமலாக்கம் குறித்த பரிசீலனை அறிக்கையை முடித்து வைத்திருந்தார்.   
திட்டங்களை அமல்படுத்துவதில் இம்மாநிலத்திற்கு இணையாக வேறெந்த மாநிலத்தையும் சொல்லமுடியாது. கிளினிக்குகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், தாய்-சேய் பாதுகாப்பு இல்லங்கள், மின்சார விநியோகம், எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தின் உள்பகுதிகளைக்கூட இணைத்திடும் சாலைகள் அமைத்தல் – என அனைத்தும் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவை அனைத்தும், மாநிலத்தை ஒரு பொதுவான அமைதிப் பூங்காவாக மாற்றி அமைத்திருந்தன.
அப்போது மாநிலத்தின் காவல்துறைத் தலைவராக இருந்த கே.நாகராஜ், “மாநிலத்தில் குற்றங்கள்  நடப்பவை என்பது மிகவும் குறைவாகும்” என்று கூறி வியந்தார். மூன்றாண்டுகளுக்கு முன்னாள் ஆட்சிக்கெதிராக பிரிவினைவாதிகளின் கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருந்த மாநிலத்தில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டே வெளியே வர பயந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தில், இது ஓர் அதிசயமாகும். “காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பரிபூரண ஒருங்கிணைப்பு நிலவுவதே இதற்கு ஒரே காரணமாகும்.”  பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தூய்மை பாரதம் திட்டத்தில் என்ன கூறுவாரோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம், ஆனால், அவர் தன்னுடைய அதிகாரிகள் எவரையாவது திரிபுராவின் உள்ளடங்கிய பகுதிகளுக்கு அனுப்பினார் என்றால், இவ்வளவு குறுகிய காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று  அவர்கள் ஆச்சர்யத்தில் தங்கள் கண்களைக் கசக்கிக் கொள்வார்கள்.
(நன்றி-தி டெக்கான் கிரானிக்கிள், 21.07.17)
(தமிழில்: ச. வீரமணி)



1 comment:

Palani velu said...

அடிமை ஆக்குவதுதான் நோக்கம். ஜாதி மொழி மதம் நாகரீகம் என அவர்களுடையதை மட்டும் உயர்த்தி நம்முடையதை அடியோடு இல்லாமல் பண்ண அனைத்தும் செய்கிறார்கள். கீழடி நிலமையை பாருங்கள். நீட் தேர்வில் நடப்பதை பாருங்கள். அவர்கள்தான் கணிசமாக பாஸ் ஆயினர். தங்கள் நலம் பேணவே இந்தி திணிப்பு. இதனால் பண்முகம் கொண்ட இந்தியா மிக பலவீனமாகுமே ஒழிய சீர்படாது. எல்லோரையும் சமமாக நடைமுறையில் அநுசரித்து போகும் சிங்கப்பூரை பாருங்கள். அதில்தான்ற முன்னேற்றத்தின் இரகசியம் இருக்கிறது. நான்தான் பெரிசு என்பவன் கீழே இருப்பவனை மேலே வராதபடி தடுப்பதில் கவணமாய் இருப்பான். இருவரும் சேர்ந்தால் இந்த உலகத்தையே அதிர வைக்கலாம். ஆனால் இவனும் முன்னுக்கு வரான். ஏற்கனவே முன்னேறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா விழுந்துவிட்டது. காரணம் இந்தியா முழுமையும் முன்னேற கூடாது முக்கியமாக தென் பகுதிகள் தங்கள் பகுதி மட்டும் குஜராத் மகாராஷ்ட்ராதான் முன்னேற வேண்டும் என்ற ஈகோதான். நைஜீரியாவும் வியட்நாமும் முந்திவிட்டன. நம்மை பலவீனப்படுத்தும் காரியங்களை களையாவிட்டால் நம்மை அழிக்க வேறொரு எதிரி வேண்டாம். மொழி ஜாதி மதம் ஒரு கருவியே ஒழிய அதனால் வேறு பயனில்லை. அதைக் கொண்டு சமத்துவத்தை கலைக்கவும் முடியும். அது விரோதங்களையே வளர்க்கும். சமத்துவம் இல்லா நாடு காட்டு மிராண்டிகளின் கூட்டம்தான். அங்கு எல்லாம் இருந்தாலும் அமைதி மட்டும் இருக்காது.