Friday, December 11, 2009

இடிக்கப்பட்டது பாபர் மசூதி மட்டுமல்ல,நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடித்தளமுமாகும்-மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

பாபர் மசூதி மட்டும் இடிக்கப்படவில்லை, நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடித்தளமும் இடிக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் லிபரான் ஆணைய அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘இன்று நாம் பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாக லிபரான் ஆணையம் என்ன கூறியிருக்கிறது என்பது குறித்தே இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பாபர் மசூதி எப்படி இடிக்கப்பட்டது? அது இடிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் என்ன? லிபரான் ஆணையம் தன் அறிக்கையில் இடையில் என்னவெல்லாம் கூறியிருந்தாலும், முடிவாக ‘‘பாபர் மசூதியானது கரசேவகர்களால் மேற்கொள்ளப்பட்டது, இதனை இடிப்பதற்கு இவர்கள் எண்ணற்றவர்களைப் பயன்படுத்தினார்கள், மசூதியின் மாடங்களுக்குள் நுழைந்தார்கள், சிலைகளையும் அங்கிருந்த ரொக்கப் பணத்தையும் அள்ளிச் சென்றார்கள், பின்னர் அங்கே திடீர் கோவிலை (அயமந ளாகைவ வநஅயீடந) அமைத்தார்கள். இந்த இடிப்பு நிகழ்வானது மிகவும் நன்கு திட்டமிடப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகளுடன் மேற்கொள்ளப்பட்டது.’’ என்று கண்டிருக்கிறது. ஆணையம் இவ்வாறுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. தன்னிடமிருந்து சில சாட்சியங்களின் அடிப்படையில் ஆணையம் இவ்வாறு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆணையத்தின் மையக் கருத்து, மசூதி எப்படி தரைமட்டமாக்கப்பட்டது, எப்படி இது செயல்படுத்தப்பட்டது, இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பவைகளேயாகும். அதனால்தான், 17 ஆண்டுகளான பிறகும் இது வந்திருக்கிறது. தாமதம் குறித்து நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆம், மேற்படி ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கியதற்கு இங்குள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. அவர்களால் 14 முறையும் மற்றவர்களால் 32 முறையும் கொடுக்கப்பட்டது. உண்மையில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் கூட காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இதற்கு யார் காரணம் என்று ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாட்டின் நலன், எதிர்காலத்தின் நலனைக் கணக்கில் கொண்டு இந்த ஆணையத்தின் அறிக்கை முன்னமேயே வந்திருக்க வேண்டும்.

இரு முரண்பட்ட அம்சங்களின் அடிப்படையில் இதன்மீதான விவாதத்தைத் தொடங்க விரும்புகிறேன். முதலாவது அம்சம், அறிக்கையானது பாபர் மசூதி மிகவும் துல்லியமாக முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது என்பதை சட்டபூர்வமாக உறுதி செய்துள்ளது. எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது. இது பதிவுருக்களால் முழுமையாக அப்போதே நன்கு மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. தோழர் ஜோதிபாசு ஆணையத்தின் முன் வாக்குமூலம் அளிக்கையில் இது தொடர்பாக ஒரு குறுந்தகட்டையும் அளித்திருக்கிறார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கல்யாண்சிங் அந்த சமயத்தில் கொல்கத்தா சென்றபோது, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ‘‘பாபர் மசூதியை இடிக்கும் பொறுப்பை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்திருந்தால், அவர்கள் அதனைச் செய்து முடிக்க சில நாட்கள் ஆகியிருக்கும். ஆனால் எங்களுடைய கரசேவகர்கள்ஐந்தே மணி நேரத்தில் இதனைச் செய்து முடித்து விட்டார்கள். இது உலக வரலாற்றில் மாபெரும் சாதனையாகும்.’’ என்று பீற்றிக்கொண்டார். இவ்வாறு அனைத்தும் அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவைகள்தான். நம் அனைவருக்கும் இது தெரியும். ஆயினும் அதனைச் சட்டபூர்வமாகச் சொல்வதற்கு இத்தனை ஆண்டு காலம் ஆகியிருக்கிறது.

‘‘தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும்’’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆயினும், இப்போதாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம் அமைப்பின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை தகர்க்கப்படாதிருக்க வேண்டுமானால் நீதி இனி மேலாவது காலங்கடத்தாது வழங்கப்பட வேண்டும்.

இதுபோன்ற ஆணையங்கள் எண்ணற்றவைகளை கடந்த காலங்களிலும் நாம் கண்டிருக்கிறோம். அவைகள் பரிந்துரைத்த எதுவும் அமல்படுத்தப்பட்டதில்லை. ஏன், அயோத்தியா நிகழ்வு குறித்து 1997இலேயே குற்ற அறிக்கை ஒன்று லக்னோ கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நபர்கள் அத்தனைபேர் மீதும் அப்போதே அமர்வு நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆயினும் 1997க்குப்பின் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து, வழக்கும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. எனவே, தாமதம்குறித்துப் பேசுவதில் அர்த்தமே இல்லை. இதனை நான் கூறுகிறேன் என்றால், நம் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையே நாளுக்கு நாள் வீழ்ந்து கொண்ருக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்றீர்கள். அதன்மீது எதுவும் நடக்கவில்லை. இதுபோல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலகங்கள்குறித்து ஒன்பது ஆணையங்களின் அறிக்கைகள் அரசிடம் உள்ளன . அவற்றின் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பார்த்தோமானால் நீதியரசர் ஜகன்மோகன் ரெட்டி ஆணையம், நீதியரசர் டி.பி. மதன் ஆணையம், நீதியரசர் விதைதால் ஆணையம், நீதியரசர் ஜிதேந்திர நாராயண் ஆணையம், கன்னியாகுமரி கலகம் தொடர்பாக நடைபெற்ற நீதியரசர் வேணுகோபால் ஆணையம் - இப்படி எண்ணற்ற ஆணையங்கள். ஆயினும் எந்த ஆணையத்தின் பரிந்துரைகளும் அமல்படுத்தப்படவில்லை.

இப்போது நாம் தெரிந்துகொள்ள விரும்புவது என்னவெனில், இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான்.

அரசாங்கம் இதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை (ஹகூசு - ஹஉவiடிn கூயமநn சுநயீடிசவ) தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அது முற்றிலும் திருப்தியற்ற நிலையிலேயே இருக்கிறது. இதில் நீதி எப்படி வழங்கப்படவிருக்கிறது என்பது குறித்து எதுவுமே இல்லை.

நாட்டின் பல பகுதிகளில் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆயினும், இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் முடிவு எதுவும் எடுக்கும்வரை, எதுவும் செய்திட முடியாது. உண்மையில் அரசாங்கம் இதில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இவ்வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக்கி, உச்ச நீதி மன்றத்திற்குக் கொண்டுவந்து, விரைவில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இல்லாவிடில் இன்னும் பல ஆண்டுகளுக்கு இவை இழுத்தடிக்கப்படலாம்.

முக்கியமான அம்சம் என்னவெனில், நம் அமைப்பின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது முக்கியம். இதனையே நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இடிக்கப்பட்டது வெறும் பாபர் மசூதியோ அல்லது ஒரு கட்டிடமோ அல்ல, மாறாக நவீன இந்தியாவின் தூண்கள் மற்றும் அடித்தளங்களே இடிக்கப்படுவதற்கான முயற்சி என்றே நான் கருதுகிறேன். இதனை இடிப்பதற்கு முன் இவ்வாறு இடிக்கப்படுவதற்கு ஆதரவாக நாடு முழுதும் அரசியல் பிரச்சாரமே மேற் கொள்ளப்பட்டது. நாடு முழுதும் மதவெறித் தீ விசிறிவிடப்பட்டது. இறுதியாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

அவற்றை லிபரான் ஆணையம் பட்டியலிட்டிருக்கிறது. அப்போது பிரதமராக இருந்தவரே இதனை ஒப்புக்கொண்டு, கூறியதாவது: ‘‘ 1989இல் மட்டும் மதவெறி நிகழ்வுகளால் 505 பேர் கொல்லப்பட்டனர், 768 பேர் காயமடைந்தனர். 1990இல் அத்வானி ரத யாத்திரை சென்றபோது, 312 மதவெறி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 483 பேர் கொல்லப்பட்டனர், 2000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர், 210 மசூதிகளும் 35 கோவில்களும் சேதமடைந்தன அல்லது தரைமட்டமாக்கப்பட்டன.’’
இவற்றை அடுத்துத்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பின்னரும் நாடு முழுதும் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

நவீன இந்தியாவின் அடித்தளமே இடிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான், இவற்றி லிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும். நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலை அப்படியே தொடர நாம் அனுமதித்திடக் கூடாது.
மசூதியை இடித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு ஏன் மசூதி இடிக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலின் மிகக் கேவலமான வெளிப்பாடே இது. இதற்கு ஆணையத்தின் அறிக்கையோ அல்லது எந்தவிதச் சான்றும் தேவையில்லை.

நம் நாட்டில் மூன்று விதமான அரசியல் கண்ணோட்டங்கள் 1920களில் தொடங்கின. ஆர்எஸ்எஸ் இயக்கம் அப்போதுதான் தொடங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போதுதான் துவங்கப்பட்டன. மோதிலால் நேரு குழுவின் பரிந்துரைகள், காங்கிரஸ் என்னும் அமைப்பை வரையறுத்தன. பின்ன அது 1928இல் அமைக்கப்பட்டது. அதன் பிறகு நவீன இந்தியா எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதில் இம்மூன்று விதமான அரசியல் முகாம்களுக்கும் இடையே போராட்டங்கள் நடைபெற்று வந்தன. நாம் சுதந்திரம் பெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு என்கிற கண்ணோட்டம் இருந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தின் மீது நவீன இந்தியா கட்டப்பட்டது.

அதேபோன்று இடதுசாரிகள் கண்ணோட்டம். இதன் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வெறுமனே மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை நிறுவினால் மட்டும் போதாது, நாட்டிற்குக் கிடைத்துள்ள அரசியல் சுதந்திரத்தை, மக்களின் பொருளாதார சுதந்திரம் கிடைப்பதற்கான முறையில் மாற்றவில்லை என்றால், இப்போது நாம் பெற்றிருக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று நாங்கள் கூறுகிறோம். எனவே, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இதனை மாற்றியமைத்தாக வேண்டும் என்று கூறி, அத்தகையதோர் சமூக மாற்றத்திற்காகவும், மக்களுக்கு உண்மையான பொருளாதார சுதந்திரம் கிடைத்திடவும் நாங்கள் போராடி வருகிறோம்.

ஆனால், இவ்விரண்டுக்கும் பகையான ஒரு கண்ணோட்டம் மதவெறி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டன. அது, சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் மதப் பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிற கண்ணோட்டமாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மக்களவையில் கூறியதுபோல் இரு விதமான கண்ணோட்டங்களுக்கிடையே போராட்டம் அல்ல, இவ்வாறு மூன்று விதமான கண்ணோட்டங்களுக்கிடையே போராட்டம் நடந்து வருகிறது.
முஸ்லீம் லீக் தனி இஸ்லாம் நாடு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது, ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்ட்ரம் என்று கூறி வந்தது.

முகமது அலி ஜின்னா, ‘இரு தேசக் கொள்கையை’ அறிவித்தார். சாவர்கரும் இந்து மகாசபையில் தலைமையுரையாற்றுகையில் இதனை ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார். ‘‘இந்தியா ஒரே கடவுளின் கீழ் இருக்க முடியாது. மாறாக இங்கு இந்துக்கள் ஒரு தேசமாகவும், முஸ்லீம்கள் ஒரு தேசமாகவும் இருக்கிறார்கள்.’’ என்றார். 1943இல் மீண்டும் சாவர்கர், ‘‘எனக்கு ஜின்னாவின் ‘இரு தேசக் கொள்கை’யுடன் எந்த சண்டையும் கிடையாது. இந்துக்களாகிய நமக்கு ஒரு தேசம் உண்டு. இது வரலாற்று உண்மை. முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் உண்டு,’’ என்றார்.

இத்தகைய மதவெறிக் கிருமி நம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இன்றளவும் அது நம் வாழ்வில் பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மூன்று கண்ணோட்டங்களுக்கு இடையே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டின் வேற்றுமைப் பண்புகளுக் கிடையே ஒற்றுமையுடன் வாழும் மக்கள் மத்தியில் மதவெறியைக் கிளப்பி ஆதாயம் அடைய நினைக்கும் அரசியல் சக்திகளைத் தனிமைப்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம்.எனவேதான் பாபர் மசூதி இடிப்பு என்பது பெறும் ஒரு கட்டிடத்தை - ஒரு மசூதியை- இடித்த செயல் அல்ல, மாறாக ‘நவீன இந்தியா’வின் அடித்தளத்தையை இடித்த ஒரு செயலாகும் என்று நான் கூறவிரும்புகிறேன்.
எனவேதான் பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாகவும் அதனையொட்டி எழுந்துள்ள வழக்குகளிலும் நீதி விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்,

Tuesday, December 8, 2009

மதவெறி சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது மக்களவையில் பாசுதேவ் ஆச்சார்யா பேச்சு



புதுதில்லி, டிச. 8-

மதவெறி சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 193ஆவது பிரிவின்கீழ் லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாசுதேவ் ஆச்சார்யா கூறியதாவது:

‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது சம்பந்தமாக லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீது அவையில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மககள் கொல்லப்பட்ட சம்பவங்களையும், வன்முறை வெறியாட்டங்கள் தலைவிரித்தாடியதையும் பார்த்தோம். டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதானது சங் பரிவாரக்கூட்டத்தால் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஒன்று.

பாபர் மசூதி இருந்த இடத்தில் பாபர் மசூதி - ராமஜன்ம பூமி தாவா எப்போது ஏற்பட்டது? இந்தத் தாவா உண்மையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரச்சனை. அது எப்படி தேசியப் பிரச்சனையாக உருவெடுத்தது? 1949 டிசம்பர் 23 அன்று பாபர் மசூதி இருக்கும் இடத்தில் கள்ளத்தனமாக ராமர் சிலை ஒன்று புதைக்கப்பட்டது. இது தொடர்பாக பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்தச் செயலைக் கண்டித்தும், இதனை ஏற்க முடியாது என்று கூறியும் உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு தந்தி அனுப்பினார். இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலும் கள்ளத்தனமாக ராமர் சிலையை அங்கு வைத்த செய்கையை ஏற்கவில்லை.

பாபர் மசூதி - ராமஜன்ம பூமி தாவா ஓர் உள்ளூர் பிரச்சனை. ஆனால் இது ஏன் தேசிய பிரச்சனையாக உருவெடுத்தது? 1986இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, இப்பிரச்சனை தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்கள் எங்கள் கட்சியின் சார்பில் பாபர் மசூதி இருக்கும் இடம் திறக்கப்படக் கூடாது என்று கூறினோம்.
அந்த சமயத்தில் பாஜகவின் சார்பில் நாடாளுமன்றத்தில் இருவர்தான் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஒருவர் குஜராத்திலிருந்தும் மற்றொருவர் ஆந்திராவிலிருந்தும் உறுப்பினர்களாகத் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் இந்த உள்ளூர் பிரச்சனையை நாடு தழுவிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயற்சித்தார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். இரண்டு உறுப்பினர்களாக இருந்த இந்த அவையில் அவர்களது எண்ணிக்கை 88ஆக உயர்ந்தது.
வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி உருவாகி ஆட்சியை அமைத்தது. இடதுசாரிகளாகிய நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். பாஜக தேசிய முன்னணியில் அங்கம் வகிக்க விருப்பப்பட்டது. ஆயினும் நாங்கள் கடுமையாக ஆட்சேபித்ததால், அதுவும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தது.,
அதன்பின்னர் பாஜக பாபர் மசூதி - ராமஜன்ம பூமி பிரச்சனையை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதற்காக அத்வானி தலைமையில் ரத யாத்திரையை நடத்தியது. ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் ரத்தக்களறி. மதக் கலவரங்கள், நான் சார்ந்துள்ள புருலியா மாவட்டம் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் மாவட்டமாகும். அங்கு அத்வானியின் ரதயாத்திரை வந்த சமயத்தில் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. 14 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அது பீகார் சென்றபோது, அங்கு முதல்வராக இருந்த லல்லுபிரசாத் யாதவ் அதனை அனுமதிக்கவில்லை. அத்வானியையும் கைது செய்தார். நாடு முழுதும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன.

உத்தரப்பிரதேசத்தில் அப்போது முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் பாபர் மசூதியை இடிக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முலாயம் சிங் யாதவ் உறுதியான நடவடிக்கை எடுத்து அதனைத் தடுத்துநிறுத்தினார். பாபர் மசூதி அப்போது பாதுகாக்கப்பட்டது. பாபர் மசூதி மட்டுமல்ல, நாடே பாதுகாக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்தியில் வி.பி. சிங் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொள்ளத் தீர்மானித்தது. அந்த சமயத்தில் காங்கிரசும் பாஜகவும் இணைந்து நின்று வி.பி. சிங் அரசைப் பதவி இழக்கச் செய்தன. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியானது மதவெறி சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டது. வி.பி. சிங் அரசு கவிழ்க்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியானது இந்துமத அடிப்படைவாதிகளுடன் மட்டுமல்ல, முஸ்லீம் மத அடிப்படைவாதிகளுடனும் சமரசம் செய்து கொண்டது. இவ்வாறு சமரசப் போக்கை காங்கிரஸ் பின்பற்றாமலிருந்திருந்தால் பாபர் மசூதி காப்பாற்றப்பட்டிருக்கும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் உத்தரப்பிரதேசம் உட்பட பாஜக ஆட்சியிலிருந்த நான்கு மாநிலங்களையும் அரசியலமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைத்திட மத்திய அரசு முன்வந்தது. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தினைப் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதில்லை. ஆயினும் முதன்முறையாக பாஜக ஆட்சியிலிருந்த இந்த நான்கு மாநிலங்களையும் கலைத்திட ஆதரவு அளித்தோம். ஏனெனில் இந்த நான்கு மாநில அரசுகளும் பாபர் மசூதி இடிப்புக்கு அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்திருந்தன. கர சேவகர்களை அனுப்பி வைத்திருந்தன. வன்முறை வெறியாட்டங்கள் நடத்திட அனுமதி அளித்திருந்தன. நாட்டின் மதச்சார்பற்ற மாண்பினை நசுக்கிட அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்து வந்தன.

பாபர் மசூதி இடிக்கப்படும் சமயத்தில் பிரதமர் நரசிம்மராவின் பங்கு எவ்வாறிருந்தது? அவர் அந்த சம்பவம் நடந்து முடியும் வரை தூங்கிக் கொண்டிருந்தார். அவர் தூக்கத்திலிருந்து திடீரென்று விழிக்கும் சமயத்தில், பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டிருந்தது.
பாபர் மசூதி இடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித், பிரதமர் நரசிம்மராவுக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பாபர் மசூதியை இடித்திட சங்பரிவாரக் கூட்டம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். எப்படியாவது மசூதியைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஜோதிபாசுவும் இதுபோல் நரசிம்மராவைக் கேட்டுக் கொண்டார்.
மத்திய உள்துறை செயலாளரும் இதனை உறுதி செய்திருந்தார். பாபர் மசூதியைக் காக்க வேண்டுமானால், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கருதியிருந்தது. இது தொடர்பாக நவம்பர் 20 அன்று அரசின் குறிப்பு கூட தயாராகிவிட்டது. ஆனாலும் உயர்மட்டத்திலிருந்த தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு நரசிம்மராவுக்கம் சாதுக்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.

நவம்பர் 23 அன்று புதுடில்லியில் தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளவில்லை. கலந்த கொள்ளாத மற்றொரு கட்சி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கூட்டத்தில் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அ ந்தத் தீர்மானம் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘பாபர் மசூதியைப் பாதுகாக்க எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்திட அத்தீர்மானம் பிரதமருக்கு முழு அதிகாரம் அளித்திருந்தது.’ ஆயினும் நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

இது குறித்து லிபரான் ஆணையம் ஏன் மவுனம் சாதிக்கிறது? பிரதமர் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தாரானால் பாபர் மசூதி காப்பாற்றப்பட்டிருக்கும். நாட்டின் மதச்சார்பற்ற மாண்பு இடிக்கப்பட்டிருக்காது.
நேற்ற அவையில் பேசிய பாஜக உறுப்பினர் ராஜ்நாத் சிங் சங் பரிவாரத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இவை தொடர்பாக நாடு முழுதும் பல வழக்குகள் பல நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி, விரைந்து விசாரணை மேற்கொண்டு, கயவர்கள் தண்டிக்கப்பட, உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இனியும் அவர்களைச் சுதந்திரமாக உலவ அரசு அனுமதிக்கக்கூடாது. அதன்மூலம் நாட்டின் மதச்சார்பற்ற மாண்பினை வலுப்படுத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

(சவீரமணி)

Thursday, December 3, 2009

மேற்கு வங்கத்திற்கு மத்தியக்குழு



மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமைகள் தொடர்பாக மேற்கு வங்க அரசின் அதிகாரிகளுடன் விவாதங்கள் மேற் கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தினை இது முழுமையாக மீறும் செயல் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கடுமையான முறையில் எதிர்த்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசின் கீழ் வருகின்ற, ‘‘மாநிலப் பட்டியலின்’’ கீழ் வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசின் தலையீடு எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தின் கலந்தாலோசனை மற்றும் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது.

மத்தியக் குழு மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை, திரிணாமுல் காங்கிரஸ், ‘மேற்கு வங்க மாநில அரசை அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் டிஸ்மிஸ் செய்து அங்கே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை இது’ என்கிற முறையில் வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் விரைவில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் திரும்பத் திரும்ப வெளிப்படையாகவே கோரி வருகிறது. உண்மையில், இதனை எய்தும் விதத்திலேயே அதன் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளைப் பயன்படுத்திக்கொண்டு, வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்திடவும் அது முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதனை சாக்காக வைத்துக்கொண்டுதான் மத்திய அரசின் தலையீட்டை அது கோரிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான அவர்களது கீழ்த்தரமான சூழ்ச்சியின் காரணமாகத்தான் மேற்கு வங்கத்தில் மக்கள் மீது இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல்களை அவர்கள் தொடுத்துள்ளார்கள், நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் - மாவோயிஸ்ட்டுகள் இடையேயுள்ள தொடர்பு, இவர்களால் மார்க்சிஸ்ட் ஊழியர்கள் மற்றும் மக்கள் மீது 2008 நவம்பரில் இவர்கள் தொடுத்த தாக்குதல்கள், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைக் கொல்ல இவர்கள் மேற்கொண்ட முயற்சி தனியே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில், உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். மேற்கு வங்கத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கக்கூடிய விதத்தில் அந்த அறிக்கை இருந்தது. மத்திய அரசாங்கத்தால் நான்கு விஷயங்கள் அதில் தெள்ளத்தெளிவாக்கப் பட்டுவிட்டன: (1) அதிகாரிகள் குழு அங்கு செல்வது மோதல் போக்குடன் அல்ல, (2) அவர்கள் மாநில அரசின் அதிகாரிகளுடன் மட்டும்தான் விவாதங்களை மேற்கொள்வார்கள். (3) மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டால் அல்லது வசதிசெய்து கொடுத்தால் மட்டுமே அவர்கள் மோதல் நடைபெறும் மாவட்டங்கள் அல்லது பகுதிகளுக்குச் செல்வார்கள், (4) அவர்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து மனுக்களைப் பெறலாம். ஆனால் அவர்களுடன் அதிகாரிகள் எவ்விதப் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையானது, மத்தியக் குழுவின் விஜயம், மாநில அரசுக்கு உதவத் தானே யொழிய, திரிணாமுல் காங்கிரஸ் சொல்வதுபோல் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை மதிப்பிடுவதற்காக அல்ல. தற்சமயம் மத்திய - மாநிலப் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிட்னாபூர் மாவட்டத்தில் லால்கார் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. அப்பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டு, மாநில அரசின் நீதி நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கு அவை முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

நாம் இப்பகுதியில் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பதுபோல, காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய கூட்டணியில் திரிணாமுல் காங்கிரசை ஓர் அங்கமாக இணைத்துக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பலமுறை வெளிப்படையாகவே, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, மாவோயிஸ்ட் வன்முறை என்று பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், திரிணாமுல் காங்கிரசோ நேரடியாகவும், வெளிப்படையாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விடுகின்ற, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கின்ற, அராஜகத்தை உருவாக்குகின்ற, எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்களைக் கொன்று குவிக்கின்ற மாவோயிஸ்ட்டுகளுக்கு உடந்தை யாக இருந்து வருகிறது. இத்தகைய மோசமான முரண்பாடுகளுடன் இருக்கின்ற ஒரு கட்சியுடன் எப்படிக் கூட்டு வைத்துக்கொண்டு, தங்கள் அமைச்சரவையில் நீடிக்க அனுமதிக்கிறோம் என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்.

கொலைபாதகத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் வங்கத்தில் பலவீனப்படுத்த முயற்சிப்பதே தங்கள் அரசியல் குறிக்கோள் என்று கருதுவார்களானால், அவர்கள் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள வில்லை என்றே நாம் கூற முடியும். மார்க்சிஸ்ட்டுகளைத் தாக்க இடது அதிதீவிரவாதிகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது மேற்கு வங்கத்திற்கு புதிதல்ல. 1972க்கும் 1977க்கும் இடையே ஓர் ஐந்தாண்டு காலம், இதுபோன்றதோர் அரசியல் சேர்மானத்தால், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஓர் அரைப் பாசிச அராஜகமே கட்டவிழ்த்துவிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி அதனை எதிர்த்து முறியடித்தது மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து கடந்த முப்பதாண்டு காலமாக அங்கே எவரும் வெல்லமுடியாத அளவிற்கு,தேர்தல்களில் வெற்றிபெற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உருக்கு போன்று உருவாக்கப்பட்டுள்ள இடது முன்னணியை உடைக்க முடியாததாலும், மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கை எதையும் முன்வைக்க முடியாததாலும், திரிணாமுல் காங்கிரசானாது, மாவோயிஸ்ட்டு களிலிருந்து சில முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் உட்பட அனைத்துப் பிற்போக்கு சக்திகளுடனும் சேர்ந்துகொண்டு, வன்முறை மூலமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரசின் இத்தகைய புனிதமற்ற கூட்டணிதான் மேற்கு வங்கத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாகும். இத்தகைய ஜனநாயக விரோத கும்பல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், மேற்கு வங்க மக்களுக்கு எதிராகவும் அவை மேற்கொண்டுள்ள வன்முறைத் தாக்குதல்கள் அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

மாவோயிஸ்ட்டுகளுக்குத் துணைபோகிறவர்களைத் தனிமைப்படுத்திடுவோம்-சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லி டிச. 3-
மாவோயிஸ்ட்டுகளுக்குத் துணை போகிறவர்களைத் தனிமைப்படுத்திடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் தலைப்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘பயங்கரவாதம் தொடர்பாக, ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற சமயத்தில், ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷார் தனக்கு அளித்த கவுரவப் பட்டத்தைத் திருப்பி அளித்து, கூறிய சொற்றொடரே என் நினைவுக்கு வருகிறது.

இப்போது நடைபெறும் பயங்ரவாத அச்சுறுத்தல்களுக்கும் எதிராக அதுவே மிகச் சரியான மிக வலுவான வெளிப்பாடு என்று கருதுகிறேன். தாகூர் சொன்னார்: ‘‘எனக்கு இடியோசை போன்ற குரலைக் கொடுங்கள், இத்தகைய தன் இனத்தையே தின்னும் இத்தகைய அரக்கர்களுக்கு எதிராக என் கருத்தை வீசியெறிகிறேன். இவர்களது கொலைபாதக நடவடிக்கைகள் தாயையும் விட்டுவைக்காது, குழந்தையையும் விட்டுவைக்காது.’’ இவ்வாறு பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது தேசவிரோத, மனிதகுல விரோத நடவடிக்கைகளாகும். இது தாயையும் விட்டு வைக்காது, குழந்தையையும் விட்டுவைக்காது. இதுபோன்ற செயல்களை நானோ என் கட்சியோ ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. எனவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்தியாவில் பயங்கரவாதம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட பிரிவிற்குள்ளும் வகைப்படுத்த முடியாது. அதேபோல் இதனை எந்த ஒரு எல்லைக்குள்ளும் அல்லது எந்த ஒரு மத வரையறுக்குள்ளும் முடக்கி விடவும் முடியாது.

நாம் நம்முடைய நாட்டில் மகாத்மா காந்தியை ஒரு மதவெறியனின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்தோம்; நாம் நம் பிரதமர் ஒருவரை சீக்கிய வெறியனின் குண்டுகளுக்கு இரையாக்கியுள்ளோம்; தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நம் பிரதமர் ஒருவரை எல்டிடிஇ-இனரின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பலி கொடுத்தோம். இப்போது ஒவ்வொரு நாளும் எண்ணற்றோரை இழந்து கொண்டிருக்கிறோம். நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களின் நடவடிக்கைகளின் காரணமாக நூற்றுக்கணக்கானோரை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்துவிதமான மத அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தினையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய நிலையில் நாம் இருந்து வருகிறோம். இந்துத்வா பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

நாட்டில் பயங்கரவாதம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்திற்கு, அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவினருக்குச் சொந்தமானது அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மதவெறிக் கண்ணோட்டத்துடனோ அல்லது அரசியல்சாயத்துடனோ பார்த்தால், அதன் முழு பரிணாமத்தை உணரத்தவறிவிடுவோம்.
இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பிரதமர் கூறியிருக்கிறார். இதனை எதிர்த்து முறியடித்திட வேண்டுமானால், நாம் அனைவரும் அவரது கூற்றை ஐயமற ஏற்றுக்கொள்ள வேண்டும். அது வளர்வதற்கான சூழ்நிலையை எந்தவிதத்திலும் அனுமதித்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையெனில் இதனை நாம் முறியடித்திட முடியாது.

அடுத்ததாக, நாட்டில் வளர்ந்துவரும் பொருளாதார சமத்துவமின்மை. ஆம், பயங்கரவாதம் வளர்வதற்கான வளமையான மண்ணாக பொருளாதார சமத்துவமின்மை இருந்திடும். இன்று ஒருபக்கத்தில் நாம் ஆசியாவிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் பில்லியனர்களைப் பெற்றிருக்கிறோம். தங்கள் வீட்டைக்கட்டுவதற்காக 4000 கோடி ரூபாய் செலவு செய்யக்கூடிய நபர்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். அதே சமயத்தில் மறுபக்கத்தில் ஒரு நாளைக்கு 20 ரூபாய்கூட வருமானம் இல்லாத நபர்களும்இருக்கிறார்கள். இவ்வாறு இருப்பவர்கள் நாட்டில் 77 சதவீதமாகும். இத்தகைய பொருளாதார சமத்துவமின்னை மேலும் மேலும் விரிவாகிக்கொண்டே போனால், அதுதான் பயங்கரவாத நடவடிக்கைகள் வளர்வதற்கான வளமான அடிப்படையாகும்.

அடுத்து சில மாநிலங்களில் ஆட்சி யாளர்களே கொடுங்கோலர்களாக இருத்தல். சொராபுதீன் வழக்கு உங்களுக்குத் தெரியும், இஸ்ரத் ஜஹான் வழக்கு உங்களுக்குத் தெரியும், இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் விரக்தியின் விளைவாக இத்தகைய பயங்கரவாத செயல்களில் இறங்கிடத் தள்ளப்படுகிறார்கள். அதுபோன்று நடைபெற அனுமதிக்கக் கூடாது. எனவே, மக்களை வகுப்புவாத ரீதியாகவோ, மதரீதியாகவோ, சாதிய ரீதியாகவோ, வேறெந்த விதத்திலுமோ பிரித்திட அனுமதிக்கக் கூடாது.
26/11 தாக்குதலின் ஓராண்டு தினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கிறோம். 26/11 தாக்குதல் நடைபெற்றதை அடுத்து இந்த அவையில், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் அரசுக்குப் போதிய அதிகாரங் களை அளிக்கும் வகையில் இரு புதிய சட்டங்களை நிறைவேற்றினோம். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் கூட்டாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அதில் சில வழிகாட்டும் நெறிமுறைகள் கூறப்பட்டிருந்தன. ஆனால் அவை இதுநாள் வரை பின்பற்றப்படவில்லை. கடந்த ஓராண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அதனை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும். பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஏராளமாகப் பேசினோம். ஆனால் எடுத்த முடிவின் அடிப்படையில் அநேகமாக எதுவுமே செய்யப்பட வில்லை. மத்திய - மாநில அரசுகளின் கீழ் இயங்கிடும் உளவு அமைப்புகளுக்கிடையே எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை. அதேபோல் நம் கடல் எல்லையைப் பாதுகாத்திட பல்வேறு விதமான ரோந்துப் படைகள் உள்ளன. அவற்றிற்கிடையிலும் எந்தவிதமான ஒருங் கிணைப்பும் கிடையாது.

நாம் நாடு முழுதும் கடைப்பிடித்து வரும் 1861ஆம் ஆண்டு போலீஸ் சட்டம், ‘மிகவும் மோசமான’ ஒன்று. ‘மிகவும் மோசமான’ என்று நான் கூறுவதற்குக் காரணம் இச்சட்டமானது நம் ‘நாட்டு மக்களை’ (இப்படித்தான் பிரிட்டிஷார் அதனை அழைத்தார்கள்) ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். ஆனால் அதனை அப்படியேதான் பின்பற்றுகிறோமேயொழிய எந்தவிதமான புதிய மாற்றத்தையும் அதில் கொண்டுவரவில்லை. ஐ.நா. ஸ்தாபனமானது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, குறைந்தபட்சம் 222 போலீசார் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால் நம் நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 145 போலீசார் என்பதுதான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் உள்ள விகிதம் என்பது ஒரு லட்சம் பேருக்கு 117 என்பதேயாகும். இவை அனைத்திலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திடாமல், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதென்பது நடைமுறை சாத்தியமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக துல்லியமான முறையில் நடவடிக்கைகள் எடுத்திட முன்வர வேண்டும். அரசு, 26/11 தாக்குதல் தினத்தை அனுசரித்துக்கொண்டிருக்கும் இப்போதாவது இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட வேண்டும்.

மாவோயிஸ்ட் வன்முறை

மாவோயிஸ்ட் வன்முறை வளர்ந்து வருவது தொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையிலிருந்து சில வாக்கியங்கi மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
‘‘இடதுசாதி அதிதீவிரவாதம் என்பது மாபெரும் சவாலாக எழுந்திருக்கிறது. சமீப காலங்களில் நக்சலைட் குழுக்களால் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மோசமான வகையில் தாக்கக்கூடும் என்று தகவல்கள் வந்துள்ளன. இடதுசாரி அதிதீவிரவாதம் என்பது உண்மையில் மிகவும் சிக்கலான ஒன்று. இதனை மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பக்கத்தில் நக்சலைட் வன்முறைக்கு ஆளாகியுள்ள பகுதிகளில் சட்ட ஆட்சியை ஏற்படுத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அதே சமயத்தில் நக்சலிசம் போன்ற பிரச்சனைகள் உருவாவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்திட வேண்டும்.’’
பிரதமர் இவ்வாறு இரு அணுகுமுறைகளை அடிக்கோடிட்டிருக்கிறார். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மற்றும் நக்சலிசம் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைதல். பிரதமர் தன் உரையில் பல புள்ளிவிவரங்களை அளித்திருக்கிறார். 2009 இல் நவம்பர் 16 வரை கிடைத்துள்ள தகவல்களின்படி, நாட்டில் கொல்லப்பட்டுள்ள 1979 நபர்களில் மாவோயிஸ்ட் வன்முறையாளர் களால் மட்டும் 873 பேர் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். நாட்டில் செயல்படும் அனைத்துவிதமான பயங்கரவாத அமைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யும்போது, மாவோயிஸ்ட்டுகள்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தெரியவருகிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இது நிறுவப்பட்டிருக்கிறது. பிரதமர் கூறும் இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இதனை முறியடித்திட முன்வர வேண்டும். மாறாக, வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்களை அரசியலாக்கியதுபோல் இதனையும் நீங்கள் அரசியலாக்க முயற்சித்தால், நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகிறோம் என்றே நான் சொல்வேன். நான் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன?
மேற்கு வங்கத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வருகிறோம். இப்போதுதான் அங்கே மாவோயிஸ்ட் வன்முறை தோன்றியிருக்கிறது. காரணம் என்ன?

இன்று (புதன்கிழமை) காலைகூட எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்கள் முன்னாலேயே மாவோ யிஸ்ட்டுகளால் வெட்டிக் கொல்லப் பட்டிருக்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின் நடைபெற்றுள்ள மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்களால் எங்கள் முன்னணி ஊழியர்கள் 130 பேரை நாங்கள் இழந்திருக்கிறோம். எனவே மிகுந்த மன வலியோடும், மனவேதனையோடும் இங்கே இதனை நான் பேசிக் கொண்டிருக் கிறேன்.

மாவோயிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட்டுகளும் ஒன்றுவிட்ட அண்ணன் - தம்பிகள் என்றும் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக மிகவும் தாமதமாக மார்க்சிஸ்ட் விழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
மக்கள் வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 1967இல் ‘நக்சலைட்’ என்கிற வார்த்தை உருவானது. மேற்கு வங்கத்தில், நக்சல்பாரி என்னும் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த சென்ற ஒருசிலர் பிரிந்து சென்றனர். பின்னர் தங்கள் கட்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என்று அமைத்துக் கொண்டனர். ‘‘நாங்கள் பூர்ஷ்வா ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறோம்’’ என்று கூறி அவர்கள் எங்களைவிட்டு விலகிச் சென்றனர். நாங்கள் இடதுசாரி சக்திகளை ஜனநாயக நீரோடைக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கும் அதேசமயத்தில், மாவோயிஸ்ட்டுகள் அவர்களை அராஜகம் மற்றும் வன்முறை வலைக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் அதே சமயத்தில், அவர்கள் அதனை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் ‘‘பூர்ஷ்வா ஜனநாயகத்தை’’ உயர்த்திப் பிடிக்கிறோமாம். அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள்தான் அவர்களின் பிரதான இலக்காக இருந்து வந்திருக்கிறோம். நாங்கள் அவர்களின் தாக்குதலுக்கு ஆயிரக்கணக்கான தோழர்களைப் பலிகொடுத்திருக்கிறோம். நக்சலைட்டுகளின் தாக்குதலில் எங்கள் கட்சி ஊழியர்களை இழந்த அளவிற்கு வேறெந்தக் கட்சியும் இழந்ததில்லை. வங்கத்தில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் எண்ணற்றவர்களை இழந் திருக்கிறோம். ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கிட்டத்தட்ட மூன்று பகுதிகளாகப் பிளவுண்டது.
மார்க்சிய தத்துவத்தைத் தவறான வகையில் புரிந்துகொண்டதன் அடிப்படையில் நக்சலைட் இயக்கம் (இன்று அது மாவோயிஸ்ட் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது) உருவானது. இவர்களது தவறான சித்தாந்தத்திற்கு எதிராக இவ்வியக்கம் தோன்றிய நாளிலிருந்தே நாங்கள் கடுமையாகப் போராடி வருகிறோம். அதனைத் தொடர்ந்து நாங்கள் மேற்கொள்வோம். எனவே எங்கள் இவர்களுடன் இணைத்து, ஒருவர்க்கொருவர் ‘ஒன்றுவிட்ட அண்ணன் தம்பிகள்’ என்று விழிப்பதென்பது, வரலாற்றை வேண்டுமென்றே திரித்துக்கூறும் செயலேயாகும். உண்மையை வேண்டுமென்றே மறைத்திடும் செயலேயாகும்.

இன்று மிகமுக்கியமான கேள்வி என்னவெனில், மேற்கு வங்கத்தில் உருவான நக்சலைட்டுகள் 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கே வந்தது எப்படி என்பதேயாகும். இதனை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம்.
காங்கிரஸ் உறுப்பினர் கேசவ ராவ் பேசியதுபோல், நிலச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முழக்கமிட்டபோதிலும், உண்மையில் அவர்கள் அதனைச் செய்திடவில்லை. இதனை அவர் தன் உரையின்போது ஒப்புக்கொண்டுள்ளார். நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால்தான் நக்சலிசம் வளர்ந்ததென்று அவர் கூறினார். இதனை அவர் ஒப்புக்கொண்டு பதிவு செய்துள்ளார். அதற்காக நான் அவருக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் மேற்கு வங்கத்தில் நிலச் சீர்திருத்தங்கள் முழுமையாக அமல் படுத்தப்பட்ட பின்னணியில் 32 ஆண்டுகள் கழித்து அவர்கள் எப்படி மீள நுழைய முடிந்தது? இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, மேற்கு வங்கத்தில்தான். நாட்டில் மேற்கு வங்கம், கேரளா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில்தான் நிலச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப் பட்டிருக்கின்றன.

துணைத் தலைவர்: கர்நாடக மாநிலத்திலும் ...

சீத்தாராம் யெச்சூரி: அந்த அளவிற்குக் கிடையாது. நான் நிலச்சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘உழுபவனுக்கு நிலம் அளிப்பது’ குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். ‘சுரங்க உடைமை யாளர்களுக்கு (அiநே டிறநேசள) அளிப்பது குறித்து அல்ல. (குறுக்கீடு). கர்நாடகாவில் நடந்திருப்பது அதுதான். நான் உழுபவனுக்கு நிலம் அளிப்பது குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

மாண்புமிகு உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார். எப்படி மாவோயிஸ்ட்டுகள் மேற்கு வங்கத்திற்குள் மீள வந்தார்கள்? புறச் சூழ்நிலைகள் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் அவர்கள் அங்கு வரவில்லை. அவர்கள் அங்கே இறக்குமதி செய்யப்பட்டு, கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி இறக்குமதி செய்யப்பட்டார்கள் என்பதை உங்களுக்கு இப்போது கூறவிரும்புகிறேன்.

உங்கள் அரசாங்கத்தில் கூட்டணியாக உள்ள ஒரு கட்சியால் அவர்கள் அங்கே இறக்குமதி செய்யப்பட்டார்கள். (குறுக்கீடு)

இது உண்மை.
(குறுக்கீடு)

மாவோயிஸ்ட்டுகளின் நந்திகிராம் மண்டலக் குழு, வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையை படிக்கிறேன்.

(பின்னர் சீத்தாராம் யெச்சூரி படித்தவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.)

துணைத்தலைவர்: பெயரைக் கூறாதீர்கள். அதனை அடித்துவிடுங்கள்.
‘‘...நீங்கள் சொனாசுராவில் நடைபெற்ற பேரணியில், 2007இல் மார்க்சிஸ்ட்டுகள்தான் நந்திகிராமுக்கு எங்களைக் கொண்டுவந்ததாகக் கூறியிருக்கிறீர்கள். இது பொய் என்று உங்களுக்குத் தெரியும்.’’ இது மாவோயிஸ்ட்டு மண்டலக் குழுவின் மாவோயிஸ்ட் தலைவரால் கூறப்பட்டது. மேலும் அவர் கூறுகிறார்...(குறுக்கீடு)

அவர் பேசிய உரையிலிருந்து எப்படி, ஒரு கட்சியைச் சேர்ந்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களுடன் சேர்ந்து நின்று பேசியிருக்கிறார்கள் என்பதையும் காட்டவே இதனைக் கூறுகிறேன்.
(குறுக்கீடு)

துணைத்தலைவர்: பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்.

சீத்தாராம் யெச்சூரி:
பிரதமர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பலமுறை கூறியிருக்கிறார்கள். இந்த வன்முறையாளர் களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதனைத்தான் நான் கூற விரும்புகிறேன். ஆனால் அவ்வாறு கூறவிடாமல் பொறுமையின்றி என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பேச்சை முடித்துக் கொள்ளுமாறு கேட்கிறீர்கள்.

துணைத் தலைவர்: இல்லை, இல்லை, நான் ஒன்றும் பொறுமையின்றி இல்லை.
விவாதத்தை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.

சீத்தாராம் யெச்சூரி:
இந்த அவையின் மூலமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாம் உருவாக்கிய நம் சொந்த ஃபிரான்கன்ஸ்டீன்களால் அதாவது ஆக்கியவர்களையே அழிக்கும் அரக்கர்களால் - நம் தலைவர்கள் பலரை நாம் இழந்திருக்கிறோம். குறிப்பாக காங்கிரஸ் பல தலைவர்களை இழந்திருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் ஃபிரான்கன்ஸ்டீன்களால் கொல்லப்பட்டார்கள். மேலும் இதேமாதிரி ஃபிரான்கன்ஸ்டீன்களை உருவாக்காதீர்கள். ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஃபிரான்கன்ஸ்டீன்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஆதரிக்காதீர்கள். (குறுக்கீடு). மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடும் நபர்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள். (குறுக்கீடு)
நம்முடைய சொந்த அனுபவங்களிலிருந்து அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் ஐந்தாண்டு காலம் ஆட்சிபுரிய மக்கள் உங்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்கள். ஃபிரான்கன்ஸ்டீன்களுக்கு ஆதரவு அளிப்பவர்களின் ஆதரவு உங்களுக்குத் தேவையே இல்லை. இருந்தும் ஏன் நீங்கள் அத்தகைய அணுகுமுறையைக் கையாளு கிறீர்கள்? (குறுக்கீடு)

இங்குள்ள அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களையும், அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாத நடவடிக்கைகளை மதவெறிக் கண்ணோட்டத்தோடு அணுகாதீர்கள், சொந்த குறுகிய அரசியல் லாப நோக்கோடு அணுகாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக நின்று போராடுவோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(ச.வீரமணி)

Tuesday, December 1, 2009

லிபரான் ஆணையத்தின் மீதான விவாதம் ஒத்தி வைத்திருப்பதை ஏற்கமுடியாது:சீத்தாராம் யெச்சூரி

புதுதில்லி, டிச.1-

மத்தியஅரசு லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதத்தை ஒத்தி வைத்திருப்பதை ஏற்பதற்கில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

‘‘முதலாவதாக, லிபரான் ஆணைய அறிக்கை மீதான விவாதத்தை அரசு ஒத்தி வைத்திருப்பது தொடர்பாகக் குறிப்பிட விரும்புகிறோம். அரசின் இந்த முடிவு மிகவும் விசித்திரமானது. லிபரான் ஆணையம் அரசுக்கு அறிக்கைஅனுப்பி ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இப்போது அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அதன் இந்தி மொழிபெயர்ப்பு இல்லை என்று காரணம் கூறி அதன் மீதான விவாதத்தை அரசு ஒத்தி வைத்திருக்கிறது. இது முற்றிலும் ஏற்புடையதல்ல. அரசின் இந்த முடிவானது, அரசின் நம்பகத்தன்மையையே சந்தேகிக்க வைக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசாங்கம்தான். லிபரான் ஆணையம் நரசிம்மராவ் அரசாங்கம் மீது மிகவும் மேலோட்டமான முறையிலேயே கருத்து தெரிவித்திருக்கிறது. இப்போது அரசு விவாதத்தை ஒத்திவைத்திருப்பதும். இதன் மீதான விவாதத்தைத் தவிர்க்கும் ஒன்றாகவே தெரிகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற மதவெறி சம்பவங்கள் அனைத்திலும், சம்பவங்களுக்குக் காரணமான கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், அவர்கள் மீதான விசாரணைகளை விரைந்து நடத்தி, அவர்களுக்கு எதிராக நீதி வழங்குவதில் மிகுந்த மந்த நிலையே நீடிக்கிறது. இது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பை உயர்த்திப் பிடிக்க உதவாது. குஜராத் மதக் கலவரமாக இருந்தாலும் சரி, பம்பாயில் நடைபெற்ற கலவரம் மீதான ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை மீதான நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி - எதுவாக இருந்தாலும் சரி இவற்றின் மீதான நீதி விசாரணைகள் நத்தை வேகத்திலேயே நடைபெறுகின்றன. இது மக்களுக்கு நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீதுள்ள நம்பிக்கையையே அரித்துவிடும். எனவே இதனைப் போக்கி, இதனை வலுப்படுத்தக்கூடிய வகையில் நீதி விசாரணைகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.

அடுத்ததாக, மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை தொடர்பாக மத்தியக் குழு ஒன்றை அனுப்பியிருப்பது தொடர்பாகக் குறிப்பிட விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கள் கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் மற்றும் பல கட்சிகளும் இரு அவைகளிலும் இது தொடர்பாக பிரச்சனையை எழுப்பியதை அடுத்து, மத்திய அரசின் சார்பில் மிகத் தெளிவான முறையில், மத்தியக் குழுவானது மேற்கு வங்க அரசுக்கு உதவுவதற்காகத்தான் (assist) அனுப்பப்பட்டிருக்கிறதேயொழிய, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மதிப்பிடுவதற்காக (assess)அல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. இதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மாநில அரசுடன் மத்திய அரசு எவ்விதமான மோதல் போக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் அங்கே மேற்கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மத்தியக்குழு அங்கு சென்றிருக்கிறது என்றும், மாநில அரசின் ஆலோசனைப்படிதான் அது அங்கு செயல்படும் என்றும் மாநில அரசுக்கு உதவுவதற்காகவும். வசதி செய்து தருவதற்காகவும்தான் அது சென்றிருக்கிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மத்தியக்குழு எந்த அரசியல் கட்சியுடனும் எவ்விதமான விவாதத்தையும் மேற்கொள்ளாது என்றும், எந்த அரசியல் கட்சியாவது மனு எதுவும் கொடுத்தால் அதனைப் பெற்றுக்கொண்டு அதனை மத்திய அரசிடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிடும் என்றும் மாறாக அந்த அரசியல் கட்சிகளுடன் எவ்விதமான விவாதத்தையும் மேற்கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த நான்கு அம்சங்களும் விவகாரத்தைத் தெளிவுபடுத்திவிட்டது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். மத்தியக் குழு அனுப்பப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பின் ஏன் அமளியில் ஈடுபட்டார்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அரசு இப்போது அளித்துள்ள விளக்கத்தை முன்பு அளிக்கவில்லை என்றும் ஊடகங்களில் வந்த செய்திகளில் மாநில அரசுக்கு உதவுவதற்காக அது அனுப்பப்பட்டதாகக் கூறப்படவில்லை என்றும், மாநில அரசின் அனுமதியின்று மத்தியக்குழு சென்றிருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும் எனவேதான் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவேசமடைந்தார்கள் என்றும், இப்போது அரசு தெளிவுபடுத்திவிட்டது, சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

Monday, November 30, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாட்டின் முக்கியத்துவம் - சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு தன்னுடைய நிகழ்ச்சிநிரலை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மாநாடு தில்லி பிரகடனத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. அடுத்து நடைபெறவேண்டிய 12ஆவது மாநாட்டை தென் ஆப்ரிக்கக் குடியரசில் நடத்திடவும், அதனை தென் ஆப்ரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி 2010 இல் கடைசி காலாண்டில் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் இம்மாநாடு பல வழிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போதுள்ள உலகப் பொருளாதார மந்தம் தொடர்பாக உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆய்வினை இம்மாநாட்டில் சமர்ப்பித்து, முதலாளித்துவமானது ஒரு வரையறைக்கு மேல் வளர முடியாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று கூறி, இதற்கெதிராக மனித சமூகத்திற்கு விடுதலையை அளிக்கக்கூடியது சோசலிசமே என்றும் அதனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டு வலியுறுத்தின. இடைப்பட்ட காலத்தில், உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து தன்னைக் காப்பாற்றி மீண்டெழுவதற்காக உலக முதலாளித்துவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் அவைகள் விளக்கின. உதாரணமாக, கார்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமென்பதற்காக அவை கேட்டுக்கொண்டபடி முதலாளித்துவ அரசுகள் 14 டிரில்லியன் டாலர்கள் உதவி இருக்கின்றன. இதற்குப் பதிலாக, இவ்வளவு பெரிய தொகையை பல்வேறு நாடுகளிலும் பொது முதலீட்டில் செலவழித்திருந்தால், அது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினையும் பெருக்கி அந்தந்த நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பையும் எழுப்பியிருக்கும். அதன் மூலமாக மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையும் மீண்டெழுந்து வலிவும் பொலிவும் பெற்றிருக்கும், உலகப் பொருளாதாரமும் இப்போது ஏற்பட்டுள்ள மந்தத்திலிருந்து மீண்டெழுந்திருக்கும். ஆயினும், இந்தப் பாதையில் செல்வதென்பது கார்பரேட் நிறுவனங்களைப் பொறுத்த வரை, தாங்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கு முன்பு லாபமீட்டியதுபோல் லாபமீட்ட வெகு காலமாகும். எனவே இதனை அவை விரும்பவில்லை. நெருக்கடிக்குள்ளான நிதி ஜாம்பவான்கள் அத்தொகையை நேரடியாகவே விழுங்கி தங்களுக்கு லாபத்தில் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்து கொண்டன. ஆனால், இந்தப் பாதையானது மிகப் பெரிய அளவில் வேலையிழப்பினை ஏற்படுத்தி, மக்களை உலக அளவில் வறுமை மற்றும் பட்டினிக் கொடுமைக்குள் தள்ளி இருக்கிறது. இவ்வாறு உலக முதலாளித்தவம் மக்களைப் பற்றிக் கவலைப்படாது தன் நலன்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு, மக்களைக் காப்பாற்றிட ஒரு மாற்றுப் பாதையைக் காட்டியிருக்கிறது. வெகுஜன இயக்கங்களின் மூலம் அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் அடிப்படையில் இந்த மாற்று இருந்திட வேண்டும். வெகுஜன இயக்கங்கள் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிராக, சோசலிசத்திற்கான ஓர் அரசியல் மாற்றுக்கான போராட்டம் வலுப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.

பெர்லின் சுவர் அகற்றப்பட்ட 20ஆம் ஆண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தருணத்தில் இம்மாநாடு நடைபெற்றது. மேற்கத்திய நாடுகள் அனைத்திலும், இக்கொண்டாட்டத்தை, கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டன. உலகப் பொருளாதார மந்தத்தால் மக்கள் படும் துன்ப துயரங்களை மறக்கடிக்கவும் முதலாளித்துவ உலகம் இதனைப் பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பா கண்டம் முழுவதுமே கம்யூனிசத்தை பாசிசத்துடன் ஒப்பிட்டு மிகவும் கேவலமான முறையில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

பெர்லினில் உள்ள ரெய்ச்ஸ்டாக் கோட்டையில் செங்கொடியை உயர்த்தியதன் மூலம் பாசிசமும் ஹிட்லரும் தோற்றதை உலகுக்கு அறிவித்தது, சோவியத் யூனியன்தானே தவிர, அமெரிக்காவோ அல்லது இங்கிலாந்தோ அல்லது பிரான்சோ அல்ல. இந்த வரலாற்று உண்மையை மீளவும் நாம் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டியிருக்கிறது. கம்யூனிச எதிர்ப்பு என்பது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் இழிவான நிலைக்குச் சென்றிருக்கிறது. கிரீஸில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஓர் இளைஞன் சோசலிசத்திற்கு ஆதரவாக இருந்தான் என்பதற்காகப் பள்ளி நிர்வாகம் அவனை இடைநீக்கம் செய்திருக்கிறது. இவ்வாறு உலகம் முழுதும் வரலாற்றைத் திரித்திடும் போக்கு முன்னுக்கு வந்துள்ள சூழ்நிலையில்தான் இதற்கெதிராக கம்யூனிச அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், இத்தகைய முதலாளித்துவத்தின் சித்தாந்தரீதியான தாக்குதலை முறியடிக்கக்கூடிய வகையிலும் நடைபெற்றுள்ள சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

மாநாட்டின்போது அமெரிக்காவிலிருந்தும் கியூபாவிலிருந்தும் வந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளும், இஸ்ரேலிலிருந்தும் பாலஸ்தீனத்திலிருந்தும் வந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளும், ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டதைப் பார்த்தோம். இதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் உணர்வு என்பதாகும். மாநாட்டின் துவக்கத்தில் சர்வதேசிய கீதம் இந்தியில் இசைக்கப்பட்டு அது முடிவுறும் சமயத்தில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் தங்கள் தங்கள் மொழியில் சர்வதேசிய கீதத்தை இசைத்தனர். இதுவே மனிதகுலத்தின் சகோதரத்துவம். இன்றைய உலகில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் ஒன்றால்தான் இத்தகைய அரசியல் உணர்வைப் பிரதிபலிக்க முடியும்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு சிரமமான சூழ்நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை மாநாட்டில் பகிர்ந்துகொண்டார்கள். இவ்வாறு செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். அரபு நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்திருப்பதுடன், அரசின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி அணிதிரட்டி வருகிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலைமைகளிலும் கூட, இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியானது, 150 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று உறுப்பினர்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இம்மூவரில் இருவர் யூதர்கள் என்பதும், ஒருவர் அராபியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் உள்ள கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றில்தான் யூதர்களும், அராபியர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, மக்கள் ஆதரவு வெகு குறைவு என்று ஒரு துஷ்பிரச்சாரம் அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பிரச்சாரத்தை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அந்தந்த நாடுகளில் அவை ஆளும் வர்க்கங்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களை எதிர்த்து நின்றே தங்களின் அரசியல் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பல நாடுகளில் அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் முதலாளித்துவத்திற்கு எதிராக கூர்மையான மற்றும் தெளிவான மாற்றை முன்வைத்திருக்கின்றன.

இத்தகைய கம்யூனிஸ்ட் அடையாளம் இன்றைய நிலையில் மிகவும் அவசியமாகும். மாநாட்டில் பங்கேற்ற கட்சிகளில் பல, தங்கள் நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மேடைகளில் முன்னணியில் உள்ள கட்சிகளாகும். சர்வதேச அளவில் நடைபெறும் இத்தகைய மாநாடுகளில் பங்கேற்பதும், வலுப்படுத்துவதும் முதலாளித்துவத்திற்கு எதிராக மாற்றை ஏற்படுத்துவதற்கு அவசியம். இத்தகைய நடைமுறையானது இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்ததைப்போல் ‘கம்யூனிஸ்ட் அகிலத்தை‘ உருவாக்குவதற்கான முயற்சி அல்ல என்பதில் நாம் தெளிவாகவே இருக்கிறோம். அந்தக் காலங்கள் இப்போது வரலாறாகிப் போய்விட்டன. இப்போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும், பல்வேறு நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே பெருமளவில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதும், தார்மீக ஆதரவினை வெளிப் படுத்தவதும்தான். இத்தகைய கம்யூனிச அடையாளம்தான், ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணிகளுக்கு அடித்தளங்களாக அமைந்திடும்.

இத்தகைய சர்வதேச மாநாடுகள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆய்வுப் பொருள் மீது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கவனத்தை ஈர்ப்பதுடன், சோசலிசத்திற்கு ஆதரவாக ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு மட்டும் நிற்காமல், இத்தகைய மாநாடுகள்தான் சுரண்டலுக்கும், மனித குலத்தின் துன்பதுயரங்களுக்கும் மாற்று சோசலிசமே என்றும் உரத்துப் பிரகடனம் செய்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, November 28, 2009

லிபரான் ஆணைய அறிக்கை:குற்றவாளிகளைத் தண்டித்திடுக



பல்வேறு விதமான இக்கட்டுகளைக் கடந்து பதினேழு ஆண்டுகள் கழித்து, லிபரான் ஆணையம் கடைசியாகத் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைக்காக 48 தடவைகள் கால நீட்டிப்பு செய்து கொண்ட பின்னர் கடைசியாக அது சமர்ப்பித்துள்ள அறிக்கை யானது, 1992 டிசம்பர் 6 அன்று மிகவும் அரக்கத்தனமான முறையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வானது கடுஞ்சீற்றம் கொண்ட கும்பலால் தன்னெழுச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல, மாறாக மிகவும் உன்னிப்பாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று மக்களுக்கு நன்கு தெரிந்த விவரங்களை மீள அது உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேற்படி அறிக்கையின் சாராம்சங்களை, சில ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து, ஐமுகூ அரசாங்கமானது, நாடாளுமன்றத்தில், அதன்மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை அறிக்கையுடன் (ஹஉவiடிn கூயமநn சுநயீடிசவ) லிபரான் ஆணைய அறிக்கையையும் வைக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. மேற்படி நடவடிக்கை அறிக்கையில் மேற்படி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எவ்விதமான தண்டனை நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படுவது தொடர்பாக எதுவும் இல்லை என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதமில்லை. இத தொடர்பாக பல சட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், எனவே சட்டம் அதன் கடமையைச் செய்ய அதற்குரிய கால அவகாசத்தை அளித்திட வேண்டியிருக்கிறது என்றும் இதற்கு வக்காலத்து வாங்கப்படலாம். ஆயினும், இவ்வாறு பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஒருங்கிணைத்து, விரைவில் முடிவு காண்பதற்கு ஏதுவாக உச்சநீதிமன்றத்திற்கு அவற்றை மாற்றல் செய்திட, தன்னுடைய சட்ட அலுவலர்கள் மூலம் அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனைத் தடுத்திடுவோர் யாருமில்லை. அத்தகையதொரு நடைமுறையைப் பின்பற்ற ஐமுகூ-2 அரசாங்கத்திட்ம் ஆர்வமோ, விருப்பமோ இருப்பதாகத் தெரியவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவமானது மிகவும் அருவருப்பான முறையில் மதம் சார்ந்த ஓரிடத்தை இடித்த நிகழ்வு மட்டுமல்ல. இது நம்முடைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தினையே மிகவும் மோசமான முறையில் தாக்கியதொரு நிகழ்வாகும். இடிக்கப்பட்டது ஒரு கான்கிரீட் கட்டிடமாக இருக்கலாம், ஆனால் அதன் மூலமாக அவர்கள் இடித்திருப்பது அதனை மட்டுமல்ல, நவீன இந்தியாவின் உணர்வையும் உன்னதத்தையுமே உருக் குலைத்து விட்டார்கள். எனவேதான், இதனைச் செய்திட்ட கயவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது சுதந்திரமாக விட அனுமதிப்ப தென்பது, நவீன இந்தியக் குடியரசுக்கு விடப்பட்ட சவாலை எதிர்கொள்ள மறுக்கும் போக்காகும். தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். பதினேழு ஆண்டுகளாகியிருந்த போதிலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்வவமானது ஒரு நாள் நிகழ்வல்ல. அந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பும் அதற்குப் பின்பும் கூட நாடு முழுதும் மதவெறி விசிறி விடப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வெட்டிக்கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் உயரிய பண்புடன் வாழ்ந்த வந்த மக்களுக்கிடையே இருந்த மதநல்லிணக்க மாண்பை மிக மோசமான முறையில் சீர்குலைத்தனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இவ்வாறு பாபர் மசூதியை இடித்து, அதன்மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பைக் குலைத்திட்ட, கயவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதோடு, இந்த சம்பவத்தின் மூலம் நாட்டிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்வைச் சரி செய்யக்கூடிய வகையிலும் நீதி அமைந்திட வேண்டும். நவீன இந்தியாவை ஒருமுகப்படுத்தும் வகையில், லிபரான் ஆணையத்தின் பரிந்துரைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருந்துவிடக் கூடாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற மும்பை கலவரங்கள் தொடர்பாக விசாரணை செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் மீது உருப்படியாக நடவடிக்கை எதையும் எடுக்காததுபோல் இதனையும் விட்டு விடக் கூடாது.
லிபரான் ஆணையமானது, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது விநோதமாகத் தோன்றுகிறது. சம்பவ சமயத்தில் எல்லோரும் அறிந்த உண்மைகளுக்கு முற்றிலும் முரணான முறையில் இது அமைந்திருக்கிறது. அந்த சமயத்தில் மதச்சார்பின்மையைப் பாதுகாத்திட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டிலிருந்த அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மத்திய அரசின் பின்னால் அணிவகுத்து நின்றன. உண்மையில், பாபர் மசூதி இடிப்புக்கு ஒருசில நாட்களுக்கு முன்பு கூடிய தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில், (இக்கூட்டத்தை பாஜக-வும் அப்போது அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த அதிமுகவும் பகிஷ்கரித்தன), பாபர் மசூதியைப் பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நரசிம்மராவ் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தோழர் சுர்ஜித் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. ஆயினும், இவ்வாறு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தபோதிலும், அரசாங்கமானது வலுவான முறையில் செயல்படவில்லை.

சம்பவ இடத்தில் கொலையைச் செய்கிற ஒருவனுக்கும், சம்பவ இடத்தில் நின்று கொண்டிருக்கிற போலீஸ்காரன் அவ்வாறு கொலை நடைபெறாமல் தடுப்பதில் தவறுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டுதான். கொலைபுரிந்த கயவன் மீது கொலைக்குற்றத்திற்காக விசாரணை மேற்கொள்ளப்படும் அதே சமயத்தில், சம்பவ இடத்தில் நின்றிருந்தும் கொலை நடப்பதைத் தடுத்திடத் தவறிய போலீஸ்காரன் மீதும் கடமையைச் செய்யத் தவறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உண்மையில் 1993இல் இது தொடர்பாக நரசிம்மராவ் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. அப்போது ‘ஜார்கண்ட் லஞ்ச வழக்கு’ என்று எல்லோராலும் அறியப்பட்ட சம்பவத்தின் காரணமாக அரசாங்கம் கவிழாமல் தப்பிப் பிழைத்தது.
கடந்த அறுபதாண்டு கால குடியரசில், நவீன இந்தியாவினை ஒருமுகப்படுத்தும் நடவடிக்கையில் நாம் மற்றொரு தாக்குதலையும் எதிர்கொண்டோம். 1975இல் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் என்ற வடிவத்தில் அது இருந்தது. மக்கள் அதனை எதிர்கொண்டு முறியடித்து, ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தினார்கள், இந்திரா காந்தியைத் தோற்கடித்தார்கள். ஜனநாயகத்தை மதிக்காது அத்துமீறி நடந்துகொண்ட மேலும் சிலரையும் உரிய முறையில் தண்டித்தார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வும் நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீதான மிக மோசமான தாக்குதலாகும். நம்முடைய நவீன குடியரசின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் அழியாது காத்திட வேண்டுமானால், இவ்வாறு பாபர் மசூதியை இடித்தக் கயவர்கள் மீது உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டியது அவசியம். எனவே. லிபரான் ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் அதன்மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை அறிக்கை மீது நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, இந்தத் திசைவழியில் அது அமைந்திட வேண்டும். நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பு ஒருங்கிணைக்கப்படும் நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Wednesday, November 25, 2009

மனித குலத்திற்கு சோசலிசமே மெய்யான மாற்று!



முதலாளித்துவத்தை தூக்கி எறிவோம்! மனித குலத்திற்கு சோசலிசமே மெய்யான மாற்று! சர்வதேச கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் 11-வது மாநாட்டுப் பிரகடனம்
மனித குலத்தின் வருங்காலத் திற்கு சோசலிசமே ஒரே மெய்யான மாற்று என்று பிரகடனப்படுத்துவதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதில் உலக மக்கள் கம்யூனிஸ்ட்டுக ளுடன் இணைந்து நிற்க வேண்டு மென்று தில்லியில் நடந்த உலக கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் 11-வது மாநாடு பிரகடனம் செய்துள்ளது.

47 நாடுகளைச் சேர்ந்த 55 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11-வது சர்வதேச மாநாடு புதுதில்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்றது.

இம்மாநாடு தனது தில்லிப் பிரகடனத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. பிரகடனம் வருமாறு:-

“சர்வதேசப் பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்கள், மக்கள் ஆகியோரின் போராட்டம், இதற்கான மாற்றுக்கள், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்கு” என்ற அடிப் படையில் இம்மாநாடு தனது பிரகடனத்தை நிறைவேற்றியது.

பிரகடனம்

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவத்தின் வர லாற்று எல்லைகளை வரையறுத்துக் காட்டியுள்ளதோடு, புரட்சிகரமான நட வடிக்கைகள் மூலம் முதலாளித் துவத்தைத் தூக்கி எறிய வேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தியின் சமூகத்தன்மைக்கும் முதலாளித்துவச் சுரண்டலுக்கும் இடையே உள்ள முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் அது எடுத்துக் காட்டுகிறது. மூலதனத்தின் அரசியல் பிரதி நிதிகள், இந்த நெருக்கடியின் மைய மாக உள்ள மூலதனத்திற்கும், உழைப் பிற்கும் இடையேயான தீர்க்க இயலாத முரண்பாட்டை மூடிமறைக்க முயற் சிக்கின்றனர். மூலதனத்தின் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் நெருக்கடிக்கான தங்களது தீர்வுகளை அவர்கள் முன்வைக்கின்றனர். உலக அமைப்புக்களான சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றோடு இச்செய லில் ஈடுபட்டு வரும் ஏகாதிபத்திய சக்திகளிடையே நிலவும் போட்டி களை இந்நெருக்கடி தீவிரப்படுத்து கிறது. ராணுவ அரசியல் தீர்வுகள், தீவிர மாக முன்வைக்கப்படுகின்றன.

நேட்டோ ராணுவக் கூட்டணி அமைப்பும் தனது தீவிர நடவடிக்கை களை அதிகரித்து வருகிறது. அரசியல் அமைப்புக்கள், ஜனநாயக, சிவில் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்ற மிகவும் பிற்போக்கான தன்மைக்கு மாறி வருகின்றன என்பதை இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது.

தற்போதைய நெருக்கடி, 1929-ம் ஆண்டில் ஏற்பட்ட மகத்தான பொருளா தார நெருக்கடிக்குப் பின்னர் அனைத்துத் துறைகளையும் பாதிக்கின்ற ஒன்றாக உள்ளது என்பதை இம்மாநாடு உறுதிபடக் கூறுகிறது. விவசாயமும், கிராமப் பொரு ளாதாரங்களும் பெரும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளன. உலகளவில் கோடிக் கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் துன்பத்தையும் வறுமை நிலையையும் அதிகரித்து வருகி றது. கோடிக்கணக்கானோர் வேலைக ளையும் வீடுகளையும் இழந்து நிற்கின் றனர். வரலாறு காணாத அளவில் வேலை யின்மையின் அளவு அதிகரித்து வருகி றது. அதிகாரப்பூர்வமாகவே வேலையில் லாதோரின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி வருகின் றனர். நூறு கோடி மக்களுக்கும் அதிக மானோர், அதாவது மனித குலத்தில் ஆறில் ஒரு பகுதியினர் பட்டினியால் வாடுகின்றனர். இளைஞர்கள், பெண்கள், நாடு பெயர்ந்தோர், இடம்பெயர்ந்த தொழி லாளர்கள் ஆகியோர் இதற்கு முதல் பலியாகின்றனர்.

இயற்கையான தங்களின் வர்க்க நிலைக்கேற்ப, முதலாளித்துவ நாடுக ளின் அரசுகள் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு இத்தகைய அடிப்படையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தவறி யுள்ளன. நவீன தாராளமயத்தின் ஆதர வாளர்களும், முதலாளித்துவத்தின் சமூக ஜனநாயக நிர்வாகிகளும் இதுநாள்வரை அரசைக் குறை கூறி வந்தனர். இப்போது தங்களை நெருக்கடியிலிருந்து மீட்க அரசைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முதலாளித்துவ அரசமைப்பு எப்போ துமே முதலாளிகளின் பெருத்த லாபத் திற்கான பாதைகளை விரிவுபடுத்தவும், அதனைப் பாதுகாக்கவும் எப்போதும் துணை நிற்கும் என்ற அடிப்படையான உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ நிறுவனங்களை நெருக் கடியிலிருந்து மீட்பதற்கான மீட்பு நடவ டிக்கைகள் பொதுமக்களின் பணத் திலிருந்து செய்யப்படுகின்றன; ஆனால் இதனால் பயனடைவோர் சிலரே. நெருக் கடியில் உள்ள முதலாளிகளை மீட்பதற் கான நடவடிக்கைகள் முதலில் மேற் கொள்ளப்பட்டதோடு, அவர்களின் கொழுத்த லாபத்திற்கான பாதைகள் விரிவுபடுத்தப்பட்டன. வங்கிகளும், நிதிக் குழுமங்களும் மீண்டும் தொழில்களில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகின்றன. கார்ப் பரேட் நிறுவனங்களை மீட்கப் பெருந் தொகையை அரசுகள் பரிசாக வழங்கின.

ஆனால் அதிகரித்துவரும் வேலை யின்மையும், உண்மையான ஊதியத்தின் வீழ்ச்சியும்தான் உழைக்கும் மக்களுக்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சிலரின் பேரா சையின் அடிப்படையில் உருவான பிறழ்ச் சியாலோ அல்லது முறையான ஒழுங்கு முறைகள் இல்லாமையாலோ இந்த நெருக்கடி உருவாகவில்லை. உலகமய மாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சில பத்தாண்டுகளில் முதலாளித் துவத்தின் அடிப்படையான லாபத்தைப் பெருக்குதல், நாடுகளுக்கிடையிலும், ஒரு நாட்டிற்குள்ளேயும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கூர்மையாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக உலக மக்களின் மிகப்பெரும்பான்மையோரின் வாங் கும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளது. தற் போதைய நெருக்கடி முதலாளித்துவத் தின் உள்ளார்ந்த நெருக்கடியாகும். முதலா ளித்துவ அமைப்பு உள்ளார்ந்த வகையில் நெருக்கடியில் உழலும் ஒன்று என்ற மார்க்சிய பகுப்பாய்வு சரியானதே என்று மீண்டும் நிரூபணமாயுள்ளது.

முதலாளித்துவம் லாப வேட்டைக் காக எல்லைகளைத் தாண்டிச் செயல் படுகிறது. எல்லாவற்றையும் மிதித்து நாச மாக்குகிறது. இந்த நிகழ்வுப் போக்கில் அது தொழிலாளி வர்க்கத்தையும் இதர உழைக்கும் மக்களையும் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துகிறது. அவர்கள் மீது கூடு தல் துன்பங்களைச் சுமத்துகிறது. முதலா ளித்துவத்திற்கு உண்மையில் ஒரு நிரந்தர உழைப்பாளர் படை தேவைப்படுகிறது.

மெய்யான மாற்று அமைப்பை, அதா வது சோசலிசத்தை நிறுவுவதன் மூலமே இத்தகைய முதலாளித்துவக் கொடுங் கோன்மையிலிருந்து விடுதலை பெற முடியும். இதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்புப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு மாற்றுப்பாதைக்கான நமது போராட்டம் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தாகும். ஒரு மாற்றுக்கான நமது போராட்டம் மக்களை மக்கள் சுரண்டுவதும் ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதும் இல்லாத ஓர் அமைப்பாகும். இது வேறொரு உலகத்திற்கான, ஒரு நியாய மான உலகத்திற்கான, ஒரு சோசலிச உலகத்திற்கான போராட்டமாகும்.

இரண்டாவதாக, சுற்றுச்சூழல் தூய்மை கெட்டிருப்பதற்குக் காரணமான முதலாளித்துவம், உலகம் வெப்பமய மாவதைத் தடுப்பதற்கான சுமை முழுவ தையும் தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்கு முயல்கின்றது. உலகத்தின் வெப்பம் அதி கரிப்பதற்கு அவர்களே காரணமாவர். வெப்ப மாற்றத்தைத் தடுப்பது என்ற பெயரால் உலகக் கட்டமைப்பை மாற்றி யமைப்பதற்கான முதலாளித்துவத்தின் ஆலோசனை, சுற்றுச்சூழலைப் பாது காப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லா ததாகும். பசுமை வளர்ச்சி, பசுமைப் பொரு ளாதாரம் என்பனவற்றைப் புதிய அரசு ஏகபோக விதிமுறைகளைச் சுமத்துவ தற்கே பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிகபட்ச லாபத்திற்காகவும், மக்கள் மீது புதிய துன்பங்களைச் சுமத்துவதையும் ஆதரிக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் அதிகபட்ச லாபமானது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மக்களின் உரிமைகளுக் கும் இசைவானதல்ல.

ஆதிக்க ஏகாதிபத்திய வல்லரசுகள் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உழைக் கும் மக்கள் மீது கூடுதல் சுமைகளைச் சுமத்துவதற்கு முயல்கின்றன. நடுத்தர அல்லது கீழ்மட்ட முதலாளித்துவ வளர்ச்சி நிலையிலுள்ள, அதாவது வள ரும் நாடுகளின் சந்தைகளில் ஊடுருவ வும், ஆதிக்கம் செலுத்தவும் முயல்கின் றன. முதலாவதாக, உலக வர்த்தகக் கழக தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் மூலம் இதைச் செய்ய முயல்கின்றன. இவை இந்த நாடுகளின் மக்களுக்குப் பாதகமான முறையில், குறிப்பாக விவசாயத் தரங்கள், விவசாயப் பொருட் கள் அல்லாத பிற பண்டங்களுக்குச் சந்தை அனுமதி மூலம் செய்ய முயல்கின்றன.

இந்த நிலைமைகளில், நிலையான முழு வேலைவாய்ப்புக்காகவும், எல்லோ ருக்கும் இலவச மருத்துவ வசதி, கல்வி மற்றும் சமூக நல்வாழ்விற்கும், பாலின வேறுபாட்டிற்கு எதிராகவும், இன வெறிக்கு எதிராகவும், இளைஞர்கள், பெண்கள், குடியேறித் தொழிலாளர்கள் மற்றும் இன, தேசிய சிறுபான்மையோர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் அனைத்துப் பகுதிகளின் உரிமைகளின் பாதுகாப்புக்காகவும் போராட்டத்தில் மக்கள் சக்திகளின், முடிந்த அளவு பரந்த பகுதிகளைத் திரட்டுவதற்கு கம்யூ னிஸ்டு - தொழிலாளர் கட்சிகள் செய லூக்கமாகப் பாடுபட வேண்டும்.

கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் தமது நாடுகளில் இந்தப் பணியை மேற்கொண்டு, மக்களின் உரிமைகளுக் காகவும், முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும் பரந்த போராட்டங்களை நடத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கம் தனது பலத்தைத் திரட்டி, முதலாளித் துவத்தின் முயற்சிகளை எதிர்க்கும் போது, தனது உரிமைகளைப் பாதுகாப் பதில் வெற்றியடைய முடியும் என்று அனு பவம் காட்டுகிறது.

முதலாளித்துவ அமைப்பு இயல்பா கவே நெருக்கடி சூழ்ந்ததாக இருந்த போதிலும், அது தானாகவே வீழ்ச்சி யடைந்துவிடுவதில்லை. கம்யூனிஸ்ட் தலைமையிலான எதிர் தாக்குதல் இல்லா விட்டால் பிற்போக்கு சக்திகள் தலை தூக்கும் அபாயத்தை ஏற்படுத் தும். தமது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்வதற் காக ஆளும் வர்க்கங்கள் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு முழுமூச் சான தாக்குதலைத் தொடுப்பார்கள். முதலாளித்துவத்தின் மெய்யான தன்மையைச் சமூக ஜனநாயக வாதிகள் தொடர்ந்து பிரமைகளை வளர்க்கிறார் கள். இதற்காக அவர்கள், ‘முதலாளித்து வம் மனித நேயமடைந்து வருகிறது. முறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக ரீதியான நிர்வாகம்’ முதலிய முழக்கங் களை முன்வைக்கின்றனர். இவை உண்மையில், வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்ற முதலாளித்துவத்தின் தந்தி ரத்தை ஆதரிக்கின்றன.

மக்களுக்கு எதிரான கொள்கை களைக் கடைப்பிடிப்பதற்கு ஆக்கமளிக் கின்றன. எந்த அளவு சீர்திருத்தமும் முதலாளித்துவத்தின் கீழான சுரண் டலை அகற்ற முடியாது. முதலாளித் துவம் தூக்கியெறியப்பட வேண்டும். இதற்குத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனப் போராட் டங்கள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முனைப்பாக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு வேறு மாற்று இல்லை என்பது போன்ற பல வகைப்பட்ட தத்துவங்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அவற்றை முறிய டிப்பதற்கு நமது பதில் ‘சோசலிசம்தான் அவற்றுக்கு மாற்று’.

உலகின் அனைத்துப் பகுதிகளிலி ருந்தும் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் சமூகத்தின் இதர உழைக்கும் மக்கள் அனைவரின், உலக மக்களின் மிகப் பெரும்பான்மையோரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளாகிய நாம், கம்யூ னிஸ்ட் கட்சிகளின் மாற்றப்பட்ட முடி யாத பாத்திரத்தை வலியுறுத்துகிறோம்.

மனித குலத்தின் வருங்காலத்திற்கு சோசலிசம்தான் ஒரு மெய்யான மாற்று. அதாவது நமது வருங்காலத்திற்கு சோசலிசம்தான் ஒரே மாற்று என்று பிரகடனப்படுத்துவதற்கான போராட்டங் களை வலுப்படுத்துவதில் எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள் என்று மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

Sunday, November 22, 2009

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலகளாவிய போராட்டம் - சர்வதேச கம்யூனிஸ்ட் - தொழிலாளர் கட்சிகள் மாநாடு முடிவு



புதுதில்லி, நவ.22-

புதுதில்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது.

இதையொட்டி வெளி யிடப்பட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது:-

48 நாடுகளைச் சேர்ந்த 57 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 83 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். “சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, உழைப்பாளர்கள் மற்றும் மக்கள் போராட்டம், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மாற்று மற்றும் பங்கு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்தின.

மாநாட்டின் முத்தாய்ப்பாக நிறைவேற்றப்பட்ட தில்லி பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த சர்வதேச இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வங்கதேச தொழிலாளர் கட்சியின் கோரிக்கையை மாநாடு ஏற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்தக் கட்சியும் இதில் இணைத்துக் கொள்ளப்படும்.

12-வது சர்வதேச மாநாட்டை ஆப்பிரிக்க கண்டத்தில் நடத்துவது என்றும், மாநாட்டை நடத் தும் பொறுப்பை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் செயற்குழு கூடி மாநாட்டின் ஆய்வுப் பொருள், தேதி மற்றும் இடம் குறித்த விபரத்தை முடிவு செய்யும்.

அமைதி, இறையாண்மை, ஜனநாயகம், சமூக நீதிக்காக உலகம் முழுவதும் தொழிலாளர்கள் நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு இந்த மாநாடு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

நேட்டோ மற்றும் உலகளாவிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏகாதிபத்திய போர்த் தந்திரங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவது என்று மாநாடு முடிவு செய்துள்ளது.

டமாஸ்கசில் 2009 செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுப்படி, நவம்பர் 29-ம்தேதியை பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தினமாக அனுஷ்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டை பாசிசத்தை முறியடித்த 60-ம் ஆண்டாக அனுஷ்டிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்த முறையில் போராடுவது என்றும், சிறைபிடிக்கப்பட்டுள்ள கியூப குடிமக்கள் 5 பேரை விடுவிக்கக்கோரி சர்வதேச அளவிலான ஆதரவுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும், வேலை செய்யும் உரிமையை வலியுறுத்தி இளைஞர் இயக்கங்களோடு சேர்ந்து அந்தந்த நாடுகளில் மக்கள் போராட்டத்தை தொழிற் சங்கங்கள் வலிமையாக முன்னெடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட் டுள்ளது.

Saturday, November 21, 2009

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள - பொது முதலீட்டை அதிகப்படுத்துக - சீத்தாராம் யெச்சூரி பேட்டி



புதுடில்லி, நவ. 21-

முதலாளித்துவ உலகம் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால், கார்பரேட் முதலாளிகளுக்கு பொருளாதார உதவிகளை அள்ளி வழங்குவதற்குப் பதிலாக, அத்தொகையை பொது முதலீட்டில் ஈடுபடுத்தினால், நெருக்கடியும் தீரும் வேலைவாய்ப்பும் அதிகரித்திடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு புதுடில்லியில் வெள்ளியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பல்லவ சென் குப்தா சனிக்கிழமையன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாட்டிற்கு 47 நாடுகளிலிருந்து 55 கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 87 பேர்இதுவரை வந்து பங்கேற்றுள்ளனர். இன்று அதிகாலை ஆப்ரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி வந்து சேர்ந்தார். ‘‘சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்னும் ஆய்வுப் பொருளின் மீது பிரதிநிதிகள் விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்கள் ஞாயிறு காலையும் தொடர்கிறது.

இன்றையதினம் ஏற்பட்டிருக்கிற முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு இரு வழிகளில் தீர்வு காண முடியும். முதலாவது வழி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை அள்ளிக்கொடுப்பது. இதனைத்தான் உலகம் முழுதும் உள்ள முதலாளித்துவ அரசுகள் செய்துள்ளன. நாம் முன்வைக்கும் மற்றொரு மாற்று வழி என்பது, அத்தகைய பொருளாதார உதவிகள் மூலமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள நாடுகளில் பொது முதலீட்டை அதிகரித்து, அதன்மூலம் வேலைவாய்ப்பினைப் பெருக்கி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, அதன் மூலமாக பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது. இதற்குக் கொஞ்ச கால அவகாசம் ஆகலாம். ஆயினும் முதலாளிகள் லாபத்தை நேரடியாகவும் உடனடியாகவும் அதீதமாகவும் துய்க்கமுடியாது என்பதால் இதனை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் இந்தத் திசைவழி நோக்கி மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துள்ள கார்பரேட் முதலாளிகளுக்கு 14 டிரில்லியன் டாலர்கள் உதவியினை அளித்துள்ளது. இதனை பொது முதலீட்டில் செலுத்தியிருந்தால் அதன் மூலம் வேலைவாய்ப்புப் பெருகியிருக்கும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும், அதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முடியும். ஆயினும் முதலாளித்துவ முறை நேரடியாக லாபத்தைத் துய்க்கவே விரும்பும்.
எனவே, மாற்று வழியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் மத்தியில் அவற்றை விளக்கிட வேண்டும். அதன் மூலமாக 3 கோடியே 70 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெருக்கிட முடியும். தற்போது வறுமையிலும் பட்டினியிலும் வாடும் அவர்களை அதிலிருந்து மீட்க முடியும். வேலைவாய்ப்பினை அவர்களுக்கு அளித்திட முடியும்.

எனவே தங்கள் தங்கள்நாடுகளில் இந்தத் திசைவழியில் மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி, ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தம் அளித்திட எத்தகைய உத்திகளை வகுப்பது என்று விவாதிக்கப்பட்டது. விவாதங்கள் நாளை காலையுடன் நிறைவுடையும். அதன்பின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு பிரகடனம் இறுதி செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

மாலையில் மாவலங்கார் அரங்கில் பொது அமர்வு நடைபெறுகிறது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் உரையாற்றுகிறார்கள்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி, பல்லவசென் குப்தா கூறினார்கள்.

(ச.வீரமணி)

Friday, November 20, 2009

உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மாற்று சோசலிசமே -சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி - அறைகூவல்





புதுதில்லி, நவ. 20-
உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மாற்று சோசலிசமே என்றும், மார்க்சிச லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகளின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கம் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச்செல்ல அணிதிரள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்தார்.
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வெள்ளியன்று காலை புதுதில்லியில் உள்ள ராமடா பிளாசா ஓட்டலில் உள்ள ரீகல் அரங்கில் தொடங்கியது. உலகம் முழுதுமிருந்து 48 நாடுகளிலுள்ள 58 கட்சிகளைச் சேர்ந்த 87 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாடு, புரட்சிகர மற்றும் சர்வதேச கீதம் இசைத்தபின் தொடங்கியது. மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய செயற்குழு உறுப்பினர் பல்லவ சென்குப்தா வரவேற்றார். பின்னத் மாநாட்டின் வரைவு பிரகடனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
‘‘சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாட்டை முதன்முறையாக ஆசியக் கண்டத்தில் நடத்துகிறோம். இம்மாநாட்டின் ஆய்வுப் பொருளாக, மாநாட்டு வழிநடத்தும்குழு, ‘‘ சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்று வரையறுத்திருக்கிறது. இன்றைய உலக நிலைமையில் இது மிகவும் சரியான கருப்பொருளாகும்.
இன்றையதினம் ஏற்பட்டிருக்கிற உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது ஒரு சில முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் கூறுவதுபோல், ‘ஒருசிலரின் பேராசையின் விளைவாக ஏற்பட்டதல்ல’, மாறாக இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது மார்க்ஸ் குறிப்பிட்டதைப்போல, ‘‘மனிதசமுதாயத்தைச் சுரண்டுவதையே அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புமுறையில் முடிவு அப்படித்தான் அமைந்திடும்’’. இப்போது அதற்கு ஏற்பட்டிருக்கிற மரண அடியிலிருந்து எவரும் அதனைக் காப்பாற்றிட முடியாது. உலகின் பல நாடுகளில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் அதனைக் காப்பாற்றிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அவற்றால் அது சவக்குழிக்குச் செல்வதை ஒரு சில நாட்களுக்குத் தள்ளிப்போட முடியுமே தவிர, நிச்சயமாக அதனைத் தடுத்து நிறுத்திட முடியாது.
சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தகர்ந்த நிகழ்வுகளானது உலக சோசலிச சக்திகளுக்கு ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஏகாதிபத்தியம் கடந்த இருபதாண்டுகளில் உலகை ஆளும் தன் மேலாதிக்க நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தி, தன் ஆதிக்கத்தை உலகம் முழுதும் செலுத்தியது. ஆயினும் அதனால் அது விரும்பிய அளவிற்கு முன்னேற முடியவில்லை. உலகில் பல நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கெதிராக வளர்ந்து வந்த எதிர்ப்பு இயக்கங்கள், அதனை வேகமாக முன்னேற விடவில்லை.
லெனின், ஏகாதிபத்தியத்தை, ‘‘சோசலிசப் புரட்சிக்கு முந்தைய நிலையில் உள்ள’’ முதலாளித்துவத்தின் இறுதி மற்றும் உச்சகட்டம் என்று வரையறுத்தார். முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்றும் சோசலிசம் மலர்ந்துவிடும் என்றும் இதனைப் பலர் இயந்திரரீதியாக எடுத்துக்கொண்டனர். ஏகாதிபத்தியத்தை வீழ்த்திட பல கட்டங்கள் வரலாற்று ரீதியாக உண்டு. அதற்கு சோசலிச ஒழுங்கு வளர்ந்தாக வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில், ஏகாதிபத்தியமும் உலக முதலாளித்துவமும், பிரம்மாண்டமான முறையில் மூலதனக்குவிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உச்சபட்ச லாபத்தை எட்டிட முயன்றுகொண்டிருக்கின்றன. இது சர்வதேச நிதி மூலதனத்திற்கு இட்டுச் சென்றது. சர்வதேச நிதிமூலதனம் நவீன தாராளமயக் கொள்கையை வரையறுத்தது. முதலில் இது நாடுகளுக்கிடையேயிருந்த தடைகளை நீக்கியது. இத்தகைய வர்த்தக தாராளமயம், நாடுகளுக்குள் செயல்பட்டு வந்த உள்ளூர் உற்பத்தியாளர்களையும், சிறிய அளவில் நாட்டிற்குள் மட்டுமிருந்த தொழில்களை ஒழித்துக்கட்டியது. இவ்வாறு மூலதனம் தாராளமாக உலகம் முழுதும் சென்றதானது, பன்னாட்டு நிறுவனங்களை பல நாடுகளிலும் உற்பத்திச் சொத்துக்களைப் பெற்று, மூலதனக் குவிப்பைப் பல்மடங்கு பெருக்கியது.
அடுத்ததாக, சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் மூலமாக அனைத்து நாடுகளுக்கும் கடன்களை வழங்கி, உலகையே ஏகாதிபத்தியத்தின் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது.
மூலதனத்தின் வரலாற்றின் நெடுகிலும் அத மூலதனக் குவிப்பை இரு வழிகளில் மேற்கொண்டு வந்திருக்கிறது. முதலாவதாக, அபரிமிதமான உற்பத்தி மூலமாக மூலதன விரிவாக்கம். இரண்டாவதாக, பலாத்காரம் மூலமாக. இதன் கொடூரத்தன்மையை மார்க்ஸ் மூலதனத்தின் ஆரம்பநிலையிலான குவிப்பு என்று வரையறுக்கிறார்.
உலகமயத்தின் காரணமாக, பெரும் பகுதி மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக, நிதி மூலதனம் விரைவாக லாபத்தை எட்ட வேண்டும் என்பதற்காக, தவணைமுறையில் அதிகமான நபர்களுக்கு கடன்கள் அளிக்க முன்வந்தது. ஆயினும் கடனைப் பெற்றவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் கடன்களை மீள செலுத்த முடியாது, கடனாளிகள் மிகவும் இடிந்துபோனதானது, இந்த முதலாளித்துவ முறையையும் முடமாக்கியுள்ளது. இதுவே இப்போது மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது.
சரியானமுறையில் ஒரு வலுவான அரசியல் மாற்று உலக அளவில் இல்லாத நிலையில், முதலாளித்துவம் தனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து மீண்டுவிடும். ஆனாலும் அதற்காக அது மக்களை மேலும் கடுமையான முறையில் சுரண்டலுக்குள்ளாக்கும். மக்களின் உடைமைகளை மேலும் வலுக்கட்டாயமாக பறித்திட முயலும்.
ஏகாதிபத்தியம், தன்னுடைய தகவல் - தொலைத்தொடர்பு - கலைநிகழ்ச்சிகளைப் பரப்பிடம் கார்பரேட் ஊடகங்களால் முதலாளித்துவத்திற்கு மாற்றைக் கூறிடும், நமக்கு எதிராக வலுவான முறையில் தத்தவார்த்த தாக்குதலைத் தொடுத்துள்ளன. உலகமயத்தின் கலாச்சாரம் என்பது மக்களைத் தங்களுடைய அன்றாடப் பிரச்சனைகள் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அறிந்து கொள்ளாமல் வைத்திருப்பதேயாகும். இவர்களது கண்ணோட்டத்தில் கலாச்சாரம் என்பது மக்களை, தங்களுடைய வறுமை மற்றும் துன்ப துயரங்களுக்கான காரணங்களை அறிய முடியாமல் செய்து, திசை திருப்புவதேயாகும்.
சமீபத்தில் உலகம் முழுதும் நடைபெற்றுவரும் தொழிலாளர்வர்க்கத்தின் போராட்டங்கள் என்பதை அநேகமாகத் தாங்கள் பெற்ற உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான் நடைபெற்றிருக்கின்றன.
ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டிருந்த போதிலும், அது உலகைப் பல்வேறு முனைகளில் தாக்கியபோதிலும், அது முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் சிக்கி அதன் விளிம்புநிலைக்கு வந்துவிட்டது. இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்தைவிட மேலும் கடுமையான முறையில் அது நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது.
இவ்வாறு நாம் சொல்வதனால், முதலாளித்துவம் தானாகவே நிர்மூலமாகிவிடும் என்று பொருளல்ல. அது தூக்கியெறியப்பட்டாக வேண்டும். இதற்கு மார்க்சிச லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகளின் தலைமையில் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் புரட்சிகர சித்தாந்தப் போராட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் அணிதிரள வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
(ந.நி.)

Wednesday, November 18, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு



புதுடில்லி, நவ. 18-

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு புதுடில்லியில் வெள்ளியன்று காலை தொடங்குகிறது. 47 நாடுகளிலிருந்து 55 கட்சிகளைச் சேர்ந்த 87 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இது தொடர்பாக புதுடில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் இயங்கும் ஏ.கே.கோபாலன் பவனில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, மத்திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசியக்குழு உறுப்பினர்கள் டி.ராஜா மற்றும் பல்லப் சென் குப்தா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வரும் 2009 நவம்பர் 20 - 22 தேதிகளில் புதுடில்லியில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றன. இம்மாநாட்டில் 47 நாடுகளிலிருந்து 55 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளைச் சேர்ந்த 87 பேர் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். அவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் பிரகாஷ்காரத் மற்றும் ஏ.பி.பரதன் ஆகியோரும் அடங்குவர்.

11வது மாநாட்டின் ஆய்வுப் பொருள் ‘‘ சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்பதாகும்.

மாநாட்டில் சீனா, ரஷ்யா, வியட்நாம், கியுபா, உக்ரேன், லெபனான், ஸ்வீடன், பாலஸ்தீனம், லக்சம்பர்க், ஸ்பெயின், ஈராக், பின்லாந்து, பிரேசில், டென்மார்க், பாகிஸ்தான், ஹங்கேரி, இங்கிலாந்து, செக்கோஸ்லேவேகியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிரியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், கனடா, வடகொரியா, அயர்லாந்து, சிரியா, போர்த்துக்கல், லாட்வியா, ஜெர்மனி, இத்தாலி, கயானா, யுகோஸ்லேவியா, ஈரான், கிரீஸ், இலங்கை, வங்கதேசம், சைப்ரஸ், பெரு, டென்மார்க், மெக்சிகோ, துருக்கி, இஸ்ரேல், கிர்கிஸ்தான், நேபாளம், தென் ஆப்ரிக்கா, அர்ஜன்டினா ஆகிய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் மாநாட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிமன் பாசு, மாணிக் சர்க்கார், எம்.கே. பாந்தே மற்றும் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆகிய ஐந்து பிரதிநிதிகளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிலிருந்து டி.ராஜா, எஸ். சுதாகர்ரெட்டி, பல்லப் சென் குப்தா, சி.திவாகரன் மற்றும் குருதாஸ் தாஸ் குப்தா ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

மாநாடு வெள்ளியன்று காலை 11 மணியளவில் தொடங்குகிறது. மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்புரை நிகழ்த்தப்படுகிறது. ஆய்வுப் பொருள் தொடர்பான வரைவு பிரகடனத்தை சீத்தாராம் யெச்சூரி முன்மொழிகிறார். அதன் பேரில் பிரதிநிதிகள் விவாதம் நடைபெறுகிறது. காலையில் பொது அமர்வுக்கு பத்திரிகையாளர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலை அமர்வும் 21ஆம் தேதி அமர்வுகளும் 22ஆம் தேதி காலை அமர்வும் பிரதிநிதிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு பொது அமர்வு புதுதில்லி, மாவலங்கார் அரங்கில் நடைபெறுகிறது. அங்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களும் மற்றும் சில உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். தற்போதுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, மாநாடு அதுகுறித்து விவாதித்து 22ஆம் தேதி உங்களுக்குத் தெளிவுபடுத்தும் என்று சீத்தாராம் கூறினார்.

இடதுசாரிக் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனவா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, நடைபெறும் மாநாடு உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு என்பதால் இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகளை அழைக்கவில்லை, ஆயினும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் 22ஆம் தேதி மாலை பொது அமர்வில் கலந்து கொள்கிறார்கள் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(ச.வீரமணி)

Monday, November 16, 2009

ஊழலுக்குத் துணைபோகும் ஐமுகூ அரசு - கே. வரதராசன் பேட்டி



புதுதில்லி, நவ. 16-
போபோர்ஸ் ஊழலைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல், நீதிபதி தினகரன் ஊழல் என்று ஊழல்களுக்குத் துணைபோகும் ஐமுகூ அரசு குறித்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் கூறினார்.

தலைநகர் தில்லியில் திங்கள்அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் ஜெயா டிவி செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து அத்தியவாசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்திட அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிட உள்ளோம்.

ஐமுகூ அரசாங்கமானது ஆசியன் நாடுகளுடன் செய்துகொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், கேரளா விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள், ஆந்திரா விவசாயிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களுக்குக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒப்பந்தமாகும். இதுபோன்று விவசாயிகளைப் பாதிக்கிற, சாதாரண மக்களைப் பாதிக்கிற, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக விரோத செயலாகும். இதனை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருக்கிறோம்.
அதேபோன்று மக்களைக் கடுமையானப் பாதிப்புக்கு ஆளாக்கக்கூடிய மரபணு மாற்றம் செய்து கத்தரிக்காய் மற்றும் பல்வேறு பயிர்களைப் பயிரிட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே தெரியாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிறுவனங்களுக்கு அனுமதி தந்திருக்கிறது. இது கடும் பிரச்சனைகளை உருவாக்கி உள்ளது. இதனையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப இருக்கிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது போபோர்ஸ் ஊழல் தொடர்பான விசாரணைகளைக் கைகழுவி விட்டது. அதேபோன்று தொலைத் தகவல் தொடர்புத் துறையில் நடைபெற்றுள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை தொலைத் தகவல் தொடர்புத்துறை அலுவலகங்களில் சோதனை செய்துள்ள போதிலும், அதன் அமைச்சர் ஆ. ராசா அவர்கள் இன்னமும் அதே துறையில் அமைச்சராக நீடிப்பதற்குத் தார்மீக ரீதியாகவும் உரிமை இல்லை, சட்டரீதியாகவும் உரிமை இல்லை. ஆயினும் அது தொடர்பாக பிரதமர் அவர்கள் தன் விளக்கத்தை அளித்திட வேண்டும். அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிட உள்ளோம்.
அதேபோன்று, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன், சுமார் 200 ஏக்கருக்கு மேல் அரசு நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளார். இதனை வெளிக்கொண்டுவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் இயக்கங்களை நடத்தி வருகிறோம். மத்திய மாநில அரசுகள் இந்த நீதிபதிக்குத் துணைபோகும் விதத்தில் நடத்துகொண்டு வருகின்றன. தமிழக அரசு, இது தொடர்பாக பேச்சு வார்த்தைக்குச் சென்ற எங்கள் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சரித்திரம் படைத்திருக்கிறது. அல் உமா, மாவோயிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூட பேச்சுவார்த்தையின் போது கைது செய்யப்பட்டதில்லை. ஆனால், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்குச் சென்றவர்களைக் கைது செய்து சரித்திரம் படைத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இயக்கம் நடைபெற்ற சமயத்தில் ஆறாயிரம் காவல்துறையினர், ஒரு ஐ.ஜி,. 3 டி.ஐ.ஜி. என்று அனுப்பி தமிழகத்தில் போலீஸ் ராஜ்யம் நடப்பதைப்போன்ற ஒரு சித்திரத்தை தமிழக அரசு மேற்கொண்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நீதிபதிக்கு அரசு ஏன் இவ்வாறு துணை போகிறது என்று தெரியவில்லை.

இப்படி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை உச்சநீதிமன்ற நீதிபதிப் பொறுப்புக்குப் பரிசீலிப்பது என்பதும், உயர்நீதிமன்ற நீதிபதியாக நீடிப்பது என்பதும். பெரும் கேள்விகளுக்குரிய பிரச்சனைகளாகும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்கிற குழு வெறுமனே சில நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கக்கூடாது என்றும் பலதரப்பினரும் கொண்ட குழுவாக அது மாற்றப்பட்டு அக்குழு உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கக்கூடிய வகையில் மாற்றப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்திருக்கிறோம். இதனை மீண்டும் வலுவாக எழுப்பிட இருக்கிறோம்.

இவ்வாறு கே. வரதராசன் கூறினார்.

(ச.வீரமணி)

Sunday, November 15, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு-20ஆம் தேதி தொடங்குகிறது: சீத்தராம் யெச்சூரி பேட்டி





புதுடில்லி, நவ. 15-
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலார் கட்சிகளின் மாநாடு வரும் நவம்பர் 20, 22, 22 தேதிகளில் நடைபெறுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

இம்மாநாடு தொடர்பாக ஞாயிறு அன்று கட்சி செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வரும் 2009 நவம்பர் 20 - 22 தேதிகளில் புதுடில்லியில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றன.
1993களில் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மார்க்சிசம் - லெனினிசம் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பதில் நம்பிக்கை யுள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கருத்தரங்கத்திற்கு கட்சி அழைத்தது, இதனைஅடுத்து கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது, சோவியத் யூனியனிலும் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசுகள் வீழ்ந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தது. மாநாட்டின் முடிவில் இரு முக்கிய அடிப்படை அம்சங்கள் குறித்து மறுபடியும் உத்தரவாதமான முடிவினை மேற்கொண்டது. அதாவது, சோவியத் யூனியன் சோசலிசத்தைக் கைவிட்டதால், மார்க்சிசம் - லெனினிசமும் சோசலிச சிந்தனைகளும் தவறாகிவிடாது, மாறாக அந்நாடுகள் மார்க்சிசம் - லெனினிசத்தின் புரட்சிகர சாராம்சத்தையும், சோசலிச சிந்தனைகளையும் கைவிட்டதே காரணம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது.

எனவே மார்க்சிச-லெனினிசம் மற்றும் சோசலிசத்தின் சாதனைகள் மீது நம்பிக்கை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். நாம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட 30 நாடுகளில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். அவற்றில் 25 கட்சிகள் கலந்து கொண்டன. ஐந்து கட்சிகள் கலந்துகொள்ள முடியாத தங்கள் இயலாமையைத் தெரிவித்திருந்தன.

அந்தக் கருத்தரங்கில் இத்தகையதொரு கூட்டத்தை தொடர்ந்து நடத்திடுவது என்றும் உலகில் உள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கூட்டங்களுக்கு அழைப்பது என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.

அதனை அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்காக ஒரு செயலாற்றும் குழு (working group) அமைக்கப்பட்டது. அதில் கியுபா, பிரேசில், ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ், லெபனான், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, செக்கோஸ்லேவேகியா மற்றும் நம் கட்சி ஆகியவை அதில் அங்கம் வகித்தன. 1998ல் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியானது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடுகளை நடத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியது. அதன் அடிப்படையில் முதல் ஏழு மாநாடுகளை கிரீஸில் ஏதன்ஸ் நகரில் நடத்தியது. இம்மாநாடுகளில் கலந்து கொள்ளும் கட்சிகளின் பங்கேற்பது என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்தது.

நாம் இம்மாநாட்டினை உலகின் பல பகுதிகளிலும் நடத்திட வேண்டும் என்று பரிந்துரைத்தோம். அதன் அடிப்படையில் அதன்பின்னர் இம்மாநாடு வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் எட்டாவது மாநாடு போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனிலும், ஒன்பதாவது மாநாடு பெலாரஸ், மின்ஸ்க்கிலும், பத்தாவது மாநாட பிரேசில், சாவோ பாலோவிலும் நடத்தப்பட்டன. 11வது மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இந்தியாவில் நடத்துகின்றன.12ஆவது மாநாடு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கிறது. அதன் மூலம் அனைத்துக் கண்டங்களிலும் இம்மாநாடு நடைபெற்று முடிந்துவிடுகிறது.

ஒவ்வொரு மாநாட்டின்போதும் ஒரு சில ஆய்வுப்பொருள்களின் அடிப்படையில் மாநாட்டை நடத்தி வருகிறோம். இப்போது நாம் நடத்தவிருக்கும் 11வது மாநாட்டின் ஆய்வுப் பொருள்களாக, சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு என்பனவற்றை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

செயலாற்றும் குழுவின் முடிவின்படி மாநாட்டிற்கு 87 நாடுகளிலுள்ள 111 கட்சிகளை அழைத்திட முடிவு செய்து அழைப்பிதழ்கள் அனுப்பியிருக்கிறோம். இவற்றில்இதுவரை 43 நாடுகளிலிருந்து 53 கட்சிகள் தங்கள் ஒப்புதலை தெரிவித்துள்ளன. அடுத்த சில நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்திடும்.

மாநாட்டின் அடிப்படை நிகழ்ச்சிநிரல் குறித்து சொல்ல வேண்டுமானால், மாநாட்டில் ஒரு வரைவு தீர்மானம் ஆரம்பத்தில் முன்மொழியப்படும். அதனைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று அது இறுதி செய்யப்படும். விவாதங்களில் கலந்துகொண்டுள்ள நாடுகள் ஆங்கில அகரவரிசையில் பங்கேற்றிடும்.

மாநாட்டை நாமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்துவதால், மாநாட்டின் தொடக்க நாள் அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்புரை அளிக்கப்படவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் வரைவு தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

மாநாட்டில் மூன்று நாட்களும் மொத்தம் ஐந்து அமர்வுகள் நடைபெறவுள்ளன. மாநாட்டின் இறுதிநாளன்று மாலை 5 மணிக்கு மாவலங்கார் அரங்கில் பொது மாநாடு நடைபெறும். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களும் மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து சிலரும் உரை நிகழ்த்துகிறார்கள்.

சீனம், கியுபா, வியட்நாம், கொரியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

மாநாட்டின் முதல் நாளன்று முதல் அமர்விற்கும் இறுதி நாளன்று மாலை நடைபெறவிருக்கும் பொது அமர்விற்கும் அனைத்துப் பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற அமர்வுகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பத்திரிகையாளர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

Friday, November 13, 2009

பெர்லின் சுவர் தகர்ப்பு: நெருக்கடியின் பாதிப்புகளை மறைத்திட கோலாகலக் கொண்டாட்டங்கள்



வெற்றி வீரர்களே எப்போதும் வரலாற்றை எழுதுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள் மிகவும் தாமதமாகத்தான் போராட்டங்களின்போது அவற்றில் சிக்கிக்கொண்ட மக்களின் துன்ப துயரங்கள் பற்றி ஆவணப்படுத்துகிறார்கள். இது பெர்லின் சுவர் அகற்றப்பட்ட 20ஆம் ஆண்டு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இப்போதும் நன்கு புலப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெர்லின் இரண்டாகப் பிரிவதற்கான உண்மையான வரலாற்றை இருட்டடிப்புச் செய்திடுவதற்காக, இத்தகைய ஆரவார நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

பாசிசம் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வினை அடையாளப்படுத்தும் வண்ணம் ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் கட்டிடத்தின் உச்சியில் செங்கொடி ஏற்றப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டனின் கொடி எதுவும் ஏற்றப்படவில்லை.

யுத்தம் முடிவுற்றபின்னர், பெர்லின் நகரை நான்கு நேச நாடுகளும் (யடடநைன யீடிறநசள) கூட்டாக நிர்வகிக்கத் தீர்மானித்தன. கிழக்கு பெர்லின் சோவியத் செம்படையின் நிர்வாகத்தின்கீழ் இருந்த அதேசமயத்தில், மேற்கு பெர்லின் நகரானது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் கூட்டு நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பெர்லினை கூட்டாக நிர்வகித்திடலாம் என்று சோவியத் யூனியன் சார்பில் விடுக்கப்பட்ட அனைத்து வேண்டுகோள்களையும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்துவிட்டன. ஏனெனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சோசலிச ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பெர்லின் நகரையே முழுமையாக ஈர்த்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். பல ஆண்டுகள் பெர்லின் நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மேற்கு பெர்லின் தனியே தனித்துவத்துடன் இருந்து வந்தது. இப்பகுதியை மேற்கத்திய ஆட்சியாளர்கள் சோசலிசத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கான பனிப்போரின் நீரூற்றாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சோசலிசத்தின் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கை சீர்குலைத்திட அவை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து பதினாறு ஆண்டுகள் கழித்து, 1961 ஆகஸ்ட்டில்தான், வார்சா ஒப்பந்த நாடுகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பெர்லின் சுவரை எழுப்பிடத் தீர்மானித்தன. ஆனால் பெர்லின் பிரிக்கப்பட்டு சுவர் எழுப்பப்படுவதற்கு சோசலிசமும் சோவியத் யூனியனும்தான் காரணம் என்கிற முறையில் இப்போது வரலாறு திரிக்கப்பட்டு கூறப்படுகிறது.

நிச்சயமாக எதிர்காலத்தில் உண்மை வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்வார்கள். ஆயினும், ஏகாதிபத்தியத்திற்குத் தன்னுடைய பங்குச்சந்தை (றுயடட ளுவசநநவ) நிலைகுலைந்து வீழ்ந்தகொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில், இவ்வாறு பெர்லின் சுவர் தொடர்பாக வரலாற்றைத் திரித்துக்கூற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது எந்தவிதமான வெளியார் தாக்குதலாலும் ஏற்படவில்லை. முதலாளித்துவத்தின் உள்ளீடான மாற்றங்களே ஏகாதிபத்தியத்தின் உலகமயத்தில் இத்தகைய நெருக்கடியைக் கொண்டுவந்திருக்கின்றன. இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் குணம் குறித்த இப்பகுதியில் ஏற்கனவே நாம் பல முறை ஆய்வு செய்திருக்கிறோம். எனவே இப்போது அதனை மீண்டும் கூறவேண்டிய தேவையில்லை.

உலகில் உள்ள பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை, தங்களுடைய வாழ்வில் மிகக் கொடூரமான முறையில் தாக்குதலைத் தொடுத்திட்ட ஏகாதிபத்திய பங்குச்சந்தைதான் (wall street) நிலைகுலைந்துள்ளது. இந்த ஆண்டு, தற்போதைய உலக முதலாளித்துவ மந்தம் தொடங்கியதிலிருந்து, உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீழ்ச்சியடைந்திருப்பது மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதன்முறையாக, மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பசிக்கும் பட்டினிக்கும் தள்ளப்பட்டு, ஆதரவற்றவர்களாகி இருக்கிறார்கள். பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 102 கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது உலகில் வாழும் மக்களில் ஆறில் ஒருவர் பசியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் மட்டும், பசியால் வாடும் பட்டியலில் 10 கோடியே 30 லட்சம் மக்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து தன்னை மீண்டும் எழுந்து நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஒரு தூண்டுகோலாகவே பெர்லின் சுவர் தகர்வு தொடர்பான கோலாகலக் கொண்டாட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. இப்போதைய உலக பொருளாதார நெருக்கடிக்கு எந்த கார்பரேட் நிறுவனங்கள் காரணமாக இருந்தனவோ அவற்றுக்கே மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கான டாலர்கள் உதவிகளை அளிப்பதன் மூலம், அவற்றின் இருப்பு நிலைக் குறிப்பையும், லாபத்தையும் நல்லமுறையில் வைத்திட முன்வந்திருக்கிறது. ஆனால் இந்நெருக்கடியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி அது கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. முதலாளித்துவத்தின் வர்க்கக் குணத்தைத் தெரிந்து கொண்டுள்ளவர்களுக்கு இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உலக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனம் (OECD) வெளியிட்டுள்ளஅறிக்கையின்படி இந்தக் காலகட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் மக்கள் வேலையில்லாப் பட்டாளத்தில் இணைந் திருக்கிறார்கள். அமெரிக்காவில் வேலையில்லாதோரின் விகிதம் அதிகாரபூர்வ அறிக்கையின்படியே இரண்டு இலக்கத்தை - அதாவது 10.2 சதவீதத்தை - தொட்டிருக்கிறது. அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் இதனை 20 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அமெரிக்காவில் வறுமை விகிதம் 13.2 சதவீதமாகும். இதன்பொருள் சுமார் 4 கோடி மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். அதேசமயம் மறுபக்கத்தில், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கத்தால் தரப்பட்ட அதீதமான நிதி உதவியின் காரணமாக, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மார்கன் சேஸ் என்னும் இரு பெரிய வங்கிகள் அபரிமிதமான லாபம் ஈட்டியிருப்பதாகப் பிரகடனம் செய்து, தன் நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கான டாலர் போனஸ் அளித்து அதனைக் கொண்டாடி யிருக்கிறது. முதலாளித்துவம் எப்படி இயங்கும் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணமாகும். ‘மக்கள் எக்கேடுகெட்டால் என்ன எனக்கு வேண்டியது லாபம்’ என்பதே அதன் குறிக்கோளாகும்.

எனவே, பெர்லின் சுவர் தகர்வை கோலாகலமாகக் கொண்டாட ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அதனால் உலகம் முழுதுமுள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிட முடியாது. மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளின் உண்மை சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டக்கூடிய வகையில் வெகுஜன இயக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

(தமிழில்: ச.வீரமணி)