Tuesday, July 31, 2018

சாமானிய மக்களை மொழி-மத அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்படும்: முகமது சலீம்




சாமானிய மக்களை மொழி-மத அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சி
முறியடிக்கப்படும்: முகமது சலீம்

புதுதில்லி, ஆக.1-
“சாமானிய மக்களை, மொழியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், எம்.பி., கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் சமீபத்தில் வெளியாகியுள்ள குடியுரிமை தேசியப்பதிவேடு பாஜகவின் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அப்பட்டமானதோர் எடுத்துக்காட்டு என்று கூறிய முகமது சலீம், “இவ்வாறு பாஜக செய்திருப்பதன் மூலமாக, ஏற்கனவே அஸ்ஸாமுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே விரிசல் கண்டிருக்கிற ஒற்றுமையுணர்வு இதனால் மேலும் மோசமாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது,” என்றும் கூறினார்.
இதுதொடர்பாக மக்களவையில் எதிர்ப்பினை வெளிப்படுத்திய பின்பு, முகமது சலீம், செய்தியாளர்களிடையே மேலும் கூறியதாவது:
”இதன் விளைவுகள் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. அம்மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லைகள் மற்றும் இணைய சேவைகள் மூடப்பட்டிருக்கின்றன அல்லது உன்னிப்பாக மேற்பார்வைக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தியாவின் குடியுரிமை என்பது வங்காளி, இந்து, முஸ்லீம் என்கிற அடிப்படையில் ஏற்படுத்தப்படுவதில்லை.   நம்முடைய நாட்டில் இந்திய அரசமைப்புச்சட்டத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் குடியுரிமை என்பது மொழியின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ அல்லது இனத்தின் அடிப்படையிலோ அமையக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் மட்டுமே 40 லட்சம் மக்களை வெறுப்பு அரசியல் மற்றும் பிளவுவாத அரசியல் என்ற பெயர்களில் பதிவேட்டிலிருந்து நீக்கியிருப்பது விந்தையிலும் விந்தையாகும்.
அஸ்ஸாமில் நிலைமை மிகவும் பதட்டத்துடன் காணப்படுகிறது. துணை ராணுவப் படையின் 220 கம்பெனிகள்  மற்றும் போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.  அஸ்ஸாமின் குடியுரிமை தேசியப் பதிவேட்டில் அஸ்ஸாம் மொத்தம் மக்கள் தொகையினரான 3 கோடியே 29 லட்சம் பேர்களில், 2 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரத்து 668 பேர் மட்டுமே குடிமக்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ளவர்களை பதிவேட்டிலிருந்து நீக்கியிருப்பதுடன், அவர்கள் மேன்முறையீடு செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு 40 லட்சம் மக்களை நீக்கக்கூடிய அளவிற்கு வல்லமையும் உறுதியும் மற்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகளும் உடையதுதானா குடியுரிமைக்கான தேசியப் பதிவேடு என்பதில் எனக்கு ஐயம் இருக்கிறது. இதன்பின்னணியில் பாஜக மூளையாக இருந்து செயல்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
அஸ்ஸாம் நம் நாட்டின் ஒரு பகுதிதான். அது ஒன்றும் தனி நாடல்ல. அஸ்ஸாமில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் வசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இதர மாநிலங்களில் வசிக்கக்கூடாதா? ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இன்னொரு மாநிலத்தில் வசித்தால் அவர்கள் இந்தியப் பிரஜைகள் கிடையாதா? ‘
இப்போது பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டிருப்போரில் பலர் பல நூற்றாண்டுகளாக அங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களை சட்டரீதியாகக் கையாண்டிட வேண்டும். ஆனால்,  அதற்காக இவ்வாறு அவர்களின் பெயர்களையே நீக்கக்கூடாது. இது நம் அரசமைப்புச்சட்டத்திற்கு முரணானதாகும். இவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்பிட சீர்குலைவு சக்திகள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதைக் கண்டிக்கிறோம்.
அஸ்ஸாம் முழுவதும் அதிருப்தி நிலவுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அஸ்ஸாம் மாநிலக்குழு, இதர கட்சிகளுடன் கலந்துபேசி அரசின் இம்முடிவினை முறியடித்திட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.”
இவ்வாறு முகமது சலீம் கூறினார்.    
(ந.நி.)


Thursday, July 26, 2018

குண்டர்கள் கொலை செய்திடும் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தை முறியடிப்போம்: சீத்தாராம் யெச்சூரி



குண்டர்கள் கொலை செய்திடும் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தை முறியடிப்போம்
-சீத்தாராம் யெச்சூரி
நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பதிலளித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்ட நெடிய உரை நிகழ்த்திக்கொண்டிருந்த அதே ஜூன் 20 அன்றுதான் ரக்பார் என்கிற அக்பர் கான், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பசுக் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு, குண்டர்களால் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தார்.  
பாஜக அரசாங்கங்களின் ஆட்சியில் புற்றீசல்கள் போல் முளைத்துக்கொண்டிருக்கும் தனியார் ராணுவங்கள் இவ்வாறு கொலைகள் புரிவது தொடர்பாக கவலை தெரிவித்து, பிரதமர், இப்போதுவரை, உதட்டளவில்கூட எதுவும் கூறிடவில்லை. பாஜகவின் கீழ் உள்ள அரசாங்கங்கள் ‘பசுப்பாதுகாப்பு’(‘cow protection’), ‘அறநெறிப் போலீஸ்’(‘moral policing’), ‘புனிதக் காதல்’(‘love jihad’), ‘பிள்ளை பிடிப்பவர்கள்’(‘child lifters’), முதலான பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டர் குழுக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருவது  தொடர்கின்றன.  2017 ஏப்ரலுக்குப் பின்னர் ஆல்வார் மாவட்டத்தில் குண்டர்கள் கொலை செய்திடும்  கொடூரம் மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது. பெஹுலுகான் முதலாவதாகவும், அதனை அடுத்து உமர் கானும், இப்போது அக்பார் கானும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெஹுலுகானும் அக்பர் கானும் கொல்லப்படுவதற்கு இடையே குறைந்தபட்சம் 46 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  குறைந்தபட்சம் 12 மாநிலங்களில்  பிரதானமாக முஸ்லீம்களும், தலித்துகளும் இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள கடும் விமர்சனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நம்பிக்கையில்லாத்தீர்மானத்திற்குப் பதிலளிக்கையில் பிரதமர், நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே, “குண்டர்கள் கொலைசெய்வதற்கு” எதிராக புதிதாக ஓர் ஒருங்கிணைந்த சட்டத்தைக் கொண்டுவருவார் என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். உச்சநீதிமன்றம் இப்பிரச்சனை தொடர்பாக, “மதச்சார்பின்மை மாண்புகளைப் பாதுகாப்பது மற்றும் கும்பல் குண்டர்களின் ஆட்சியைத் தடுத்து நிறுத்துவது ஆகியவற்றிற்கு ஏதுவாக சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்துவதை உத்தரவாதம் செய்வது அரசுகளின் கடமையாகும்,” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு எவ்விதமான  அறிவிப்பும் அரசிடமிருந்து வரவில்லை. அதேபோன்று, ஜார்கண்ட் மாநிலத்தில்  மிகவும் கொடூரமானமுறையில் ஸ்வாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு எதுவுமே செய்யாது, இப்போது ஜூலை 23 அன்று மோடி அரசாங்கம் இது தொடர்பாக புதியதொரு சட்டத்தை வடிவமைப்பதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இவ்விஷயத்தை ஆறப் போடுவதற்காகவும், உச்சநீதிமன்றத்தின் கட்டளையை ஒன்றுமில்லாததாக ஆக்குவதற்காகவும்தான் அரசாங்கம் இவ்வாறு அமைச்சர்கள் குழுவை இப்போது அமைத்திருக்கிறது. 
அருவருப்பான விளக்கங்கள்
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு மத்திய  அமைச்சர், “பிரதமர் மோடிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கின் காரணமாக” குண்டர்கள் கொலைகள் என்னும் “ஒரு சதி” உருவாக்கப்படுவதாக மிகவும் இழிவானமுறையில் பேசியிருக்கிறார். உள்ளூர் பாஜக எம்எல்ஏ,  பசுக் கடத்தல் அல்லது பசுவை இறைச்சிக்காக வெட்டுதல் போன்ற செயல்களில் எவர் ஈடுபட்டாலும்  அவர் கொல்லப்படுவார் என்று சென்ற டிசம்பரில் எச்சரித்திருந்ததைப் பார்த்தோம். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவதாக, பொய்யாகவே கூறப்பட்டாலும், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் கூறுவதுடன் இவரது கூற்றை இணைத்துப் பார்க்க வேண்டும்.  
இப்போது ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்து மிகவும் ஆட்சேபணைக்குரிய விளக்கம் வந்திருக்கிறது. அதன் முன்னணி செய்தித்தொடர்பாளரான இந்த்ரேஷ் குமார், ”மக்கள் மாட்டிறைச்சியை உண்ணவில்லை என்றால், குண்டர்கள் மூலமாகக் கொலை செய்யப்படுவது நிறுத்தப்படும்,” என்று அறிவித்திருக்கிறார். இவ்வாறெல்லாம் கூறுவதென்பது, அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்திட்ட உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறும் செயல் என்பதைத்தவிர வேறெதுவும் இல்லை. இதன்னியில், “பிள்ளை பிடிப்பவர்கள்”, “புனிதக் காதல்” என்ற பெயர்களின்கீழ் கொல்லப்படுவது குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரதமர் மவுனம் அனுசரிப்பது அவர் எதுவும் சொல்லாமல் இருப்பதைவிட அதிகமாகவே அர்த்தம் அளிக்கிறது. பிரதமர் மவுனம் அனுசரிக்கிறார் என்பது, இயற்கையாகவே, முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும்  இத்தகைய இழிசெயல்களுக்கு அரசாங்கம் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது என்றே அர்த்தமாகும்.
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவதற்கு மிகச்சரியான உதாரணம்
இந்துத்துவா வெறியர்களில் ஒரு பிரிவு இவ்வாறு கொலைபாதக செயல்களில் ஈடுபடும் தனியார் ராணுவத்தினருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதும், அவர்களைப் போற்றிப் புகழ்வதும் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், மற்றொரு பிரிவு,  இவ்வாறு கொலைசெய்கிறவர்கள் சம்பவ சமயத்தில் மக்களால் பிடிக்கப்பட்டு,  அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டப்பட்டால்,  இத்தகைய நபர்களுடன் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்ற மறுப்பதும் தொடர்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில், இத்தகைய கிரிமினல்களுக்கு மத்திய அமைச்சர் ஒருவர்,  மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் அதே சமயத்தில், இதுபோன்ற மறுப்பு அறிக்கைகளும் வருகின்றன. ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் அமைப்புகள்  அனைத்தும் இத்தகைய கிரிமினல்களைப் பாதுகாப்பதுடன், சமயங்களில் அந்தக் கிரிமினல்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதும் பார்த்துக் கொள்கின்றனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவாவில் மிகவும் பயங்கரமான முறையில் ஒரு சிறுமியைக் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கயவர்களைப் பாதுகாத்திடவும், அக்கிரிமினல்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தடுத்திடவும், உள்ளூர் பாஜக தலைவர்களும், வழக்குரைஞர்களும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். பெஹுலுகானைக் கொலை செய்தவர்கள் குறித்து மரண வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருந்தபோதிலும்கூட அவர்கள் கைது செய்யப்படாது சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில், மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஷே கூட சில இடங்களில் போற்றிப் பாராட்டப்பட்டு, மாபெரும் “ஹீரோ”வாக கும்பிடப்பட்டிருக்கிறான். எனினும், நாதுராம் கோட்ஷே, மகாத்மா காந்தியைச் சுட்டபோது, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் இல்லை என்றுதான் ஆர்எஸ்எஸ் கூறிக்கொண்டிருக்கிறது. இதனை நாதுராம் கோட்ஷேயின் சகோதரர் கடுமையாக மறுத்துவருகிறார்.  நாதுராம் கோட்ஷேயின் சகோதரரான கோபால் கோட்ஷே, ஓர் ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், “சகோதரர்களாகிய நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில்தான் இருந்தோம். நாதுராம், தத்தரேயா, நான் மற்றும் கோவிந்த். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ்-இல் வளர்ந்ததுதான் அதிகம் என்று நீங்கள் கூற முடியும். அது எங்களுக்கு ஒரு குடும்பம் போன்றது.  நாதுராம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஓர் அறிவுஜீவியாக (intellectual worker) மாறியிருந்தார். அவருடைய அறிக்கையில், தான் ஆர்எஸ்எஸ்-ஐ விட்டு விலகிவிட்டதாகக் கூறியிருக்கிறார். காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோல்வால்கரும், ஆர்எஸ்எஸ்-உம் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொண்டதால், அவர் அவ்வாறு கூறியிருந்தார். ஆனாலும் அவர் ஆர்எஸ்எஸ்-ஐவிட்டு விலகிடவில்லை. (ஃப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994). ஒருவர் தற்சமயம் ஓர் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல பிரச்சனை.   இவ்வாறு வன்முறை தீவிரவாதத்தை மேம்படுத்தக்கூடிய, விஷத்தைக் கக்கும் தத்துவார்த்தக் கொள்கையை ஆர்எஸ்எஸ் இயக்கமும், அதன்கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளும்  தன்னகத்தே கொண்டு, அதனை ஊட்டி வளர்த்தனவா, இல்லையா  என்பதேயாகும்.
தீவிரவாதப் பயிற்சி – பரம்பரை பரம்பரையாகவே அளிக்கப்படுகிறது
ஆர்எஸ்எஸ், இந்துக்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளித்து வருவதற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. “இந்துத்துவா”  முழக்கத்தை உருவாக்கிய நபர், வி.டி. சாவர்க்கர்தான். இந்துத்துவா என்பதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்றும், இந்துக்களின் ஆட்சியை நிறுவுவதற்கான ஓர்  அரசியல் திட்டம்தான் என்றும் இதில் அவர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இக்குறிக்கோளை எய்துவதற்கு அவர் முன்வைத்த முழக்கம்,அனைத்து அரசியலையும் இந்துமயமாக்கு, இந்துக்களை ராணுவமயமாக்கு” (Hinduise all politics and militarise Hindudom) என்பதாகும். இதில் உத்வேகம் அடைந்த, ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் ஹெக்டேவாரின் மூளையான, டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்திப்பதற்காக, இத்தாலிக்குப் பயணமானார். இவர்களுடைய சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. இத்தாலிய பாசிசம் எப்படித் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கிறது என்பதை, மிகவும் வானளாவப் புகழ்ந்து அவர் தன்னுடைய மார்ச் 20ஆம் தேதிய நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.  பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்பியபின்னர், டாக்டர் மூஞ்சே 1935இல் நாசிக்கில் மத்திய இந்து மிலிட்டரி கல்வி சொசைட்டி என்பதை நிறுவினார்.  இதுதான் 1937இல் நிறுவப்பட்ட, இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்துவருவதாகத் தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருவான கோல்வால்கர், 1939இல், நாசி பாசிசத்தின் கீழ் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், “இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும், ஆதாயம் அடைவதற்கும் நல்லதொரு படிப்பினையாகும்,” என்று கூறியிருக்கிறார். இதன் பின்னர் மிகவும் காலம் கடந்து, 1970இல்தான், அவர், “பொதுவாகக் கூறுமிடத்து, தீய சக்திகளால் (இந்த இடத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் என்று வாசித்துக்கொள்க) நம்முடைய சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வலுக்கட்டாயமாகத்தான் கட்டுப்படுத்தப்பட  வேண்டும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பொதுவான அனுபவமாகும்,” என்று கூறுகிறார்.
வகுப்புவாதமும், அடிப்படைவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பவை. ஆர்எஸ்எஸ், தன்னுடைய குறிக்கோளை எய்துவதற்காக, “அடக்குமுறை மூலமாக தங்களுக்கு எதிரானவர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக,” அது அளித்திடும் மிலிட்டரி பயிற்சியின்போது, வெறுப்பு, வன்முறை மற்றும் பயங்கரவாத சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஏற்றவிதத்தில் நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. இது, பல சமயங்களில், வகுப்புக்கலவரங்களாக வெடிப்பதற்கு இட்டுச் செல்கின்றன.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற வகுப்புக்கலவரங்கள் தொடர்பாக ஒவ்வொரு நீதித்துறை விசாரணை அறிக்கைகளும் – 1969இல் அகமதாபாத்தில் நடைபெற்ற கலவரங்களில் ஆரம்பித்து, 1970இல் நடைபெற்ற பிவண்டி, ஜல்கான், மஹாத் கலவரங்கள் வரை, 1971 டெல்லிச்சேரி கலவரங்கள், 1979இல் நடைபெற்ற ஜாம்ஷெட்பூர் கலவரங்கள், 1982இல் நடைபெற்ற கன்னியாகுமரி கலவரங்கள் குறித்த விசாரணை அறிக்கைகளும்  மற்றும் 1992-93இல் நடைபெற்ற மும்பை கலவரங்கள் தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையும், மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2002 குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளும் – என அனைத்து அறிக்கைகளுமே ஆர்எஸ்எஸ் என்று பெயரைக் குறிப்பிட்டு, அதுதான் சிறுபான்மையினருக்கு எதிராக பதட்டத்தைக் கொளுத்திப்போட்டு, மிகப்பெரிதாக எரியச்செய்து, சிறுபான்மையினருக்கு எதிராக குண்டர்களை அழித்தொழிக்கும் செயல்களில் ஈடுபட வைத்தது என்று குறிப்பிட்டிருக்கின்றன. இந்த ஆணையங்கள் அனைத்துமே நீதித்துறையின் உயர் நிலையில் உள்ள நீதிபதிகளால் தலைமை தாங்கப்பட்டவை என்பதையும், அவர்கள் அனைவருமே இந்துக்கள்தான் என்பதையும், எனவே இதில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கினார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.   
வன்முறைக் கலாச்சாரம்
இந்த சமயத்தில் இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை  அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் என்ன கூறினார் என்பதை நினைவு கூர்வது அவசியம். ஏனெனில் அவரை ஆர்எஸ்எஸ்/பாஜக பேர்வழிகள் இன்றையதினம் அடிக்கடி (தவறாக) மேற்கோள் காட்டுவதைப் பார்க்கிறோம். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடைசெய்து அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை கூறுவதாவது: “ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் கொண்டிருக்கும் வன்முறைக் கலாச்சாரத்தின் கீழ் மேற்கொண்டுவரும்  ஆட்சேபகரமான மற்றும் தீங்கு விளைவிக்கத்தக்க நடவடிக்கைகள் பலரைக் காவு கொண்டிருக்கிறது. இதில் சமீபத்தில் மிகவும் மோசமானமுறையில் பலியாகி இருப்பது நம் காந்திஜியாகும்.” இவ்வாறு 1948 பிப்ரவரி 4 அன்று சர்தார் பட்டேல் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அன்றையதினம் அவர் குறிப்பிட்ட அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. தனியார் ராணுவத்தினரின் வன்முறைக் கலாச்சாரத்தின்கீழ் நாட்டின் சூழ்நிலை மிகவும் தரம் தாழ்ந்து சென்றுகொண்டிருக்கிறது.  அன்றையதினம் ஹிட்லரும், முசோலினியும் முறையே தங்களுடைய கருப்பு நிறச் சட்டையினர் மற்றும் பழுப்புநிறச் சட்டையினர் மூலமாக உயர்த்திப்பிடித்த பாசிஸ்ட் குண்டர்கள் படை மேற்கொண்டதைப்போன்ற கொலைபாதக செயல்களை, இன்றையதினம் ஆர்எஸ்எஸ் தன்னுடைய தனியார் ராணுவத்தினர் மூலமாக செய்து கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக தங்களுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட்  ‘இந்து ராஷ்ட்ரத்தை’ அமைத்திட, இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அமைந்துள்ள மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசை மாற்ற வேண்டும் என்று கோருகிறது. அதற்காகத்தான் இத்தகைய வன்முறை, பயங்கரவாத மற்றும் அராஜக நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.  ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக இக்குறிக்கோளை எய்திடத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு இவர்களிடமிருந்து வந்திருக்கிற ஆபத்து முறியடிக்கப்பட்டாக வேண்டும். நாளையதினம் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்கிட வேண்டுமானால்,  இவர்களின் பிடியிலிருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும். இவர்களின் இழிசெயல்களைத் தடுத்து நிறுத்திட நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பற்றி நிற்கும், நாட்டிலுள்ள தேசபக்தர்கள் அனைவரின் ஒற்றுமை அவசியமாகும்.
(தமிழில்: ச. வீரமணி)


Monday, July 23, 2018

மோட்டார் வாகனத் திருத்தச் சட்டமுன்வடிவின் மீது டி.கே.எஸ்.இளங்கோவன்




நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மாலை மோட்டார் வாகனத் திருத்தச் சட்டமுன்வடிவின் மீது விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக) பேசியதாவது: இந்தச் சட்டமுன்வடிவைக் கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில் இது மாநிலஅரசுகளின் அதிகாரங்களின் கீழ் இயங்கும் பொதுப் போக்குவரத்துக் கழகங்களையை ஒழித்துக்கட்டிவிடும். போக்குவரத்துகளில் விமானப் போக்குவரத்து தற்சமயம் மத்திய அரசிடம் இருக்கிறது. கடல் போக்குவரத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. ரயில்வே போக்குவரத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. சாலைப் போக்குவரத்துமட்டும்தான் மாநில அரசுகளிடம் இருக்கிறது. இப்போது இந்தச்சட்டமுன்வடிவின்மூலம் அதுவும் பறிக்கப்படுகிறது. மாநில அரசின் அதிகாரங்களைப் பறித்து தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறீர்கள். இது இந்தச் சட்டமுன்வடிவில் காணப்படும் மிகவும் நகைக்கத்தக்க அம்சமாகும்.
இதுதான் இந்த அவையில் நடந்துகொண்டிருக்கம் மிகப் பெரிய விபத்தாகும். மாநில அரசுகள் இதன்மூலம் முடமாக்கிட மத்திய அரசு முன்வந்திருக்கிறது. பாஜக அரசாங்கத்தின் ஒரேயொரு நிகழ்ச்சிநிரல், மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றன்பின்ஒன்றாகப் பறிப்பது என்பதுதான். அந்த அடிப்படையில் இப்போது இந்தச் சட்டமுன்வடிவையும் கொண்டுவந்திருக்கிறது. இது  நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.
நாட்டிலேயே முதன்முறையாக 1969இல் தமிழ்நாட்டில்தான் சாலைப் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டது. எங்கள் கட்சியின் தலைவர் டாக்டர் கலைஞர் மாநிலப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது இதனை மேற்கொண்டார். அதன்பின்னர் தமிழகத்தின் அனைத்து முனைகளும் சாலைகளால் இணைக்கப்பட்டன., இப்போது போட்டி காரணமாக தனியார் பேருந்துகளும் அதிக  அளவில் ஓடுகின்றன. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேறிவிட்டால் இப்போதுள்ள போக்குவரத்தில் பாதி குறைந்துவிடும். மக்கள் மீண்டும் கட்டைவண்டியில் போகவேண்டிய நிலைமை ஏற்படும்.
இந்தச்சட்டமுன்வடிவின் மூலமாக மாநில அரசுகள் வசூலிக்கும் வரி வருவாயை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட மத்திய அரசு முன்வந்திருக்கிறது. இது ஏன்? என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது மாநிலங்களைத் தாக்கும் விபத்து மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச்சட்டத்தையும் தாக்கும் ஒரு சட்டமுன்வடிவாகும். எனவே இந்தச் சட்டமுன்வடிவானது இவர்கள் சொல்வதுபோல சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்படவில்லை. மாறாக, மாறாக மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறது. எனவே இது அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது, கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது.”
இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.

ரக்பார் கான் குண்டர் கும்பலால் கொலை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்



புதுதில்லி, ஜூலை 23-
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ரக்பார் கான் என்னும் பால்பண்ணை வியாபாரி குண்டர் கும்பலால் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாஜகவின் ஆட்சியில் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் என்னும் பகுதியில் குண்டர் கும்பலால் முஸ்லீம்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெஹல்கான், உமர்கானை அடுத்து இப்போது ரக்பார் கான் கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு விலங்கின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படும் கொடுமை இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம்.
பாஜக ஆட்சியின் கீழ் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் பல்வேறுவிதமான  அமைப்புகளும் முஸ்லீம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருவதன் விளைவே இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கொலைகளாகும். கொலை செய்யும் குண்டர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக பாஜக அமைச்சரால் அவர்கள் மாலை அணிவித்து பாராட்டப்படுகிறார்கள். இத்தகைய இழி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. பசுவின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளபின்னரும் இத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பாஜக அரசாங்கங்களும், அதன் கீழ் இயங்கும் குழுக்களும் மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றங்கள் புரிவதை மாற்றிக்கொள்ளவில்லை.
ரக்பார் கான் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்துக் கிரிமினல்களும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் விசாரணை தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது. மேலும், ரக்பார் கானின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இத்தகைய இழி சம்பவங்கள் இனியும் தொடராது இருக்கும்விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  ராஜஸ்தான் மாநில அரசை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.
இவ்வாறு ஹன்னன்முல்லா அறிக்கையில் கோரியுள்ளார்.
(ந.நி.)



Sunday, July 22, 2018

ரக்பார் கானைக் கொலை செய்தது எழுவர் கும்பல்



ரக்பார் கானைக் கொலை செய்தது எழுவர் கும்பல்
புதுதில்லி, ஜூலை 23-
ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தில் உள்ள கொல்கான் கிராமத்திலிருந்து சென்ற முஸ்லீம் பால் பண்ணை உரிமயாளர் ரக்பார் கானை, வெள்ளியன்று இரவு, ராஜஸ்தான் ஆல்வார் மாவட்டத்தில்  கொலை செய்தது ஏழுபேர் அடங்கிய கும்பல் என்று ரக்பார் கானுடன் சென்று, கொலைபாதகர்களிடமிருந்து தப்பித்த அஸ்லாம்  கூறியுள்ளார்.  இது தொடர்பாக அஸ்லாம், ராஜஸ்தான் மாநிலக் காவல்துறையினரிடம் கூறியபோது, அவர்களில் ஐந்து பேர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் மூவரைக் கைது செய்திருப்பதாக, காவல் துறையிர் கூறியிருக்கின்றனர்.

அஸ்லாமின் வாக்குமூலம்
நடந்த சம்பவம் குறித்து அஸ்லாம், காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:   
“நானும், ரக்பாரும் கான்பூரிலிருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, ராம்கார் அருகிலுள்ள லாலாவண்டி கிராமத்தில் ஏழு பேர் அடங்கிய கும்பல் ஒன்று எங்களைத் தாக்கியது. தாக்குதல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் முயன்றபோது, வெடிகுண்டுகளுடனும், கம்புகளுடனும் இருந்த அவர்கள், எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலேயே எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் ஓட்டிவந்த கால்நடைகள் சாலையோரம் இருந்த வயல்களில் ஓடிச்சென்று நின்றன. இவ்வாறு அவர்கள் எங்களைத் தாக்கும்போது, அவர்களில் ஒருவன், “விஜய், அவன் கால்களை உடை,” என்றும், “தர்மேந்தர், அவன் தலையில் அடி” என்றும். “நரேஷ், அவன் கைகளை உடை” என்றும் ஒருவர்க்கொருவர் கத்திக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மொத்தம் ஏழு பேர். அவர்களில் ஐந்து பேரின் பெயர்கள் ஞாபகத்தில் இருக்கிறது.”
இவ்வாறு அஸ்லாம் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். தினக்கூலித் தொழிலாளியான  அஸ்லாம், மாட்டை வாங்கிக்கொண்டு ஓட்டிவருவதற்கு உதவிடுமாறு ரக்பார் கான்  கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருடன் சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்திருக்கிறார். பசுப்பாதுகாப்புக்குழுவைச் சேர்ந்த குண்டர்கள் கொலை செயல்களில் ஈடுபட்டுவருவதால், இரவிலேயே பயணம் செய்வோம் என்று ரக்பர் கான் கூறி, அவ்வண்ணமே இரவில்தான் திரும்பி வந்திருக்கிறார்கள். இரண்டு பசுக்களுடனும் அவற்றின் கன்றுக்குட்டிகளுடனும், ராம்காரின் லாலாவண்டி கிராமத்தின் உள்ள காட்டுப்பகுதி வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தபோது, சாலையில் மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டு, மாடுகள் மிரண்டிருக்கின்றன. பின்னர் பயந்துசாலையின் ஓரமாக வயல்களுக்குள் ஓடி நின்றிருக்கின்றன.
மாடுகளின் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்த ரக்பார் கான் அவற்றை மீண்டும் சாலைக்கு இழுத்துவர முயற்சித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர்கள், எங்களைச் சூழ்ந்துகொண்டு, வானத்தில் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இரண்டு பேர் என்னை நோக்கி ஓடிவந்தனர். மற்றவர்கள் ரக்பார் கானைப் பிடித்துக்கொண்டனர். அஸ்லாம் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு, வயல்களுக்குள் ஓடிச்சென்று ஒளிந்துகொண்டுவிட்டார். ஆனால் ரக்பார் கான் பயங்கரமாகக் கத்தினார். எனினும் அவரால் அவர்களிடமிருந்து தப்பிவர முடியவில்லை.
பின்னர் அஸ்லாம் அங்கிருந்து எப்படியோ தப்பித்து, வழி தெரியாமல் சுற்றி சுற்றித் திரிந்துவிட்டு சனிக்கிழமை காலையில் 10 மணிக்கு ஊருக்கு வந்திருக்கிறார். அதற்குள் காவல்துறையினர், ரக்பார் கான் கொல்லப்பட்ட சம்பவத்தை ரக்பார் கானின் குடும்பத்திற்குத் தெரிவித்திருந்தனர்.

கிராமத்தினரும், உள்ளூர் மக்களும் ரக்பாரின் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தவர்கள், அங்கு வந்த காவல்துறையினரிடம், ராஜஸ்தானிலிருந்து கால்நடைகளை வாங்கிக்கொண்டு திரும்புகிற முஸ்லீம்கள் இவ்வாறு அடிக்கடி தாக்கப்படுகிறார்கள், அவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கிறாத்ரகள், அவர்களைக் கொலையும் செய்துவிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
”நான் பால்பண்ணைத் தொழிலில் கடந்த இருபது ஆண்டுகளாக இருந்து வருகிறேன். இதற்கு முன்பெல்லாம் இப்படி நடந்தது கிடையாது. இரண்டு, மூன்று ஆண்டுகளாகத்தான் இத்தகைய கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது இது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது. உண்மையில், ஆல்வாரில் இது மிகவும் மோசமான ஒன்று. சோதனைச் சாவடிகளில் நின்றுகொண்டிருக்கின்ற போலீசார், எங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டபின்னர் எங்களை அனுப்பிவிடுவார்கள்.   பசுப்பாதுகாப்புக் குழுவினர் என்று சொல்லிக்கொள்ளும் குண்டர்கள்தான் எங்களை வழிமறித்து, பணமும் பெற்றுக் கொண்டு, சில சமயங்களில் எங்கள் கால்நடைகளையும் ஓட்டிச்சென்றுவிடுவார்கள்,” என்று ரக்பாரின் மாமா முகமது லியாஸ் கூறியிருக்கிறார்.
ரக்பாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குருகிராம் – ஆல்வார் நெடுஞ்சாலையில் பல மணி நேரம் அமர்ந்து, குண்டர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும், சனிக்கிழமையன்றிரவு,  சாலை மறியலில் ஈடுபட்டனர்.   அதன்பிறகு ராஜஸ்தான் மற்றும் ஹிரியானா மாநில அரசு அதிகாரிகள் செயலில் இறங்கி, மறியலில் ஈடுபட்டவர்களை வந்து சந்தித்துள்ளர். அவர்களிடம் ரக்பார் கானின் குடும்பத்தார், “ரக்பார் கானைக் கொலை செய்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்குக் கிஞ்சிற்றும் கருணை காட்டக்கூடாது. எங்கள் குடும்பத்தில் ரக்பார் கான் மட்டும்தான் சம்பாதித்து வந்து, குடும்பத்தில் இருந்த ஒன்பது பேரைக் காப்பாற்றி வந்தார். எனவே எங்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர்கள் குடும்பத்தின் சார்பாக அவருடைய மாமா முகமது உமர் கோரினார்.
கொலை செய்யப்பட்ட ரக்பார் கானின் வயது 31. எழுதப்படிக்கத் தெரியாத ரக்பார் கான், கால்நடைகளைப் பராமரிப்பதுடன், கல்குவாரியிலும் பகுதிநேர தொழிலாளியாக வேலைபார்த்து, ஒன்பது பேர்கள் அடங்கிய தன் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார். அவருடைய மனைவியும் எழுதப்படிக்கத் தெரியாதவர்தான். அவருக்கு ஏழு குழந்தைகள். மூத்த பெண்ணின் வயது வெறும் 12தான்.  கடைசி குழந்தையின் வயது வெறும் 1. ரக்பார் கான் இருந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டாதவிதத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். இப்போது என்னசெய்வதென்றே தெரியவில்லை,” என்று ரக்பார் கானின் மாமா முல்தான் கூறினார்.
அஸ்லாம் இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், ”ரக்பார் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. இதில் மிகவும் கொடுமையான அம்சம் என்னவென்றால் எவ்விதத் தப்புமே செய்யாத நிலையில் அவர் கொல்லப்பட்டிருப்பதுதான். எனக்கு  அவரை சிறுவயதிலிருந்தே தெரியும்,” என்றார்.
அவர்களின் நூ கிராமத்தில் உள்ள  600 குடும்பங்களில் பெரும்பாலானவை கால்நடை வளர்ப்பையும் கல் குவாரிகளில் வேலைசெய்வதையும்தான் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. கிராமத்தில் மூன்றில் ஒரு பங்கினர் இந்துக்கள். உண்மையில் இரு சமூகத்தினரும் மிகவும் நல்லிணக்கத்துடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இருதரப்பினரும் இரு தரப்பினரின் திருமணங்கள் மற்றும் இதர விழாக்களிலும் பரஸ்பரம் பங்கேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், நூ கிராமத்திலிருந்து வெளியே செல்லும்போது,  நாங்கள் இந்த நாட்டையே சேர்ந்தவர்கள் அல்ல என்பதுபோல் நாங்கள் நடத்தப்படுகிறோம்,’’ என்று பெரோஸ் என்பவர் மிகவும் மனம் நொந்துகொண்டார்.
(ந.நி.)
(படக்குறிப்புகள்: 1. அஸ்லாம். 2. ரக்பார் கான் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வந்த உள்ளுர் மக்கள்.

இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை. -சந்தன் கர்மே


இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை,
அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை.
-சந்தன் கர்மே

நாசிசம், 1930களின் முற்பகுதிகளில் ஆர்யர்கள்தான் ”உயர்ந்த இனம்’ என்கிற சிந்தனையை உயர்த்திப்பிடித்து உலக அளவில் பிரகடனம் செய்தது. நாசிசம். ஐரோப்பியாவில் ஆட்சி செய்த பாசிஸ்ட்டுகள் இதனை ’சமூக டார்வினிசம்’, போன்ற போலி அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்தினார்கள். ஆரியர்கள், உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகத் தங்களைப் பாவித்துக்கொண்டு, மற்ற இனத்தவர்களின் உழைப்பின் மூலம் அனைத்து அம்சங்களிலும் முன்னுரிமை  அளிக்கப்பட்ட அதேசமயத்தில் மற்ற இனத்தினர் எல்லாருமே வெறும் ஒட்டுண்ணி பூச்சிகளாகத்தான் கருதப்பட்டார்கள்.

நாம் புரிந்தகொண்டவரையில், இந்துத்துவா கொள்கையைத் தோற்றுவித்தவர். வீ.டி. சாவர்க்கர், ஆவார்.   1939இல் அவர் சாவித்திரி தேவி என்பவரால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஒரு முன்னுரை எழுதினார். 1905இல் பிறந்த மேக்சிமைன் போர்டாஸ்  (Maximine Portaz—1905-1982) என்கிற பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்தவர்,. தன் பிரெஞ்சுப் பெயரை, சாவித்திரி தேவி என மாற்றிக்கொண்டார்.   இவர், அடால்ப் ஹிட்லரால் கலியுகத்தில் மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைக் களைவதற்காக கடவுளின் விருப்பத்திற்கிணங்க பூலோகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டவர். நாசிசத்தின் பிரச்சாரகரான சாவித்திரி தேவி, மகா விஷ்ணுதான் அடால்ப் ஹிட்லர் என்கிற மனித உருவத்தில் இருக்கிறார் என்று நம்பினார். இந்துக்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று தலைப்பிட்டு, சாவர்க்கர் அவருடைய புத்தகத்திற்கு எழுதியிருந்த முன்னுரையில் எழுதி இருந்ததாவது:
“இந்துக்கள் வெகு காலமாகவே வாழ்க்கையில் எவ்விதமான குறிக்கோளுக்காகவும் சுறுசுறுப்பாக இயங்கமுடியாத அளவிற்கு செயலற்றவர்களாக மாறிவிட்டார்கள். இவர்களின் ஒரேயொரு குறிக்கோள், இந்த உலகத்திலிருந்து தப்பி,  “மோட்சத்திற்கு” செல்வது என்பதுதான். ஆனால் எப்படிச் செல்வது? கடவுளுக்கே தெரியும். பல நூற்றாண்டுகளாக நம்முடைய இந்து ராஷ்ட்ரம் அடிமைத்தளையில் தொடர்ந்து இருந்து வருவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.”
சாவர்க்கர் ஒரு நாத்திகவாதி. அவருக்கு இந்து மதத்தின்மீது நம்பிக்கை கிடையாது. அவருடைய ஒரே குறிக்கோள், மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு அதன்கீழ் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதேயாகும்.
இந்துயிசம் என்பது அவரைப் பொறுத்தவரை இந்துத்துவா என்கிற தன்னுடைய பெரிய அளவிலான அரசியல் சிந்தனையின் ‘ஒரு சிறு பகுதி’தான். 
சாவர்க்கரின் இந்துத்துவா தத்துவத்தின்படி, ஓர் இந்து இந்தியாவை தன்னுடைய தாய்நாடாகக் (மாத்ருபூமியாகக்) கருதுபவன், தன்னுடைய மூதாதையர்களின் பூமியாக (பித்ருக்களின் பூமியாகக்) கருதுபவன், மற்றும் அவனுடைய ஒரு புண்ணிய பூமியாகக் கருதுபவன். இந்தியாவில் இந்துக்களின் நம்பிக்கைகள் தோன்றிய இடமாக இருப்பதால், இந்தியா, இந்துக்களின் நாடாகத்தான் இருந்தது. இஸ்லாமும், கிறித்தவமும் இந்தியாவிற்கு வெளியே தோன்றியதால், சாவர்க்கரின் இந்து அல்லது ‘இந்து தேசம்’ என்னும் வரையறைக்குள் அவற்றால் எளிதாகப் புகமுடியவில்லை.
மிகவும் இழிவான இனவெறி சிந்தனையில் ஊறிப்போயிருந்த சாவர்க்கர், இந்து என்னும் சொல் எப்படி உருவானது என்பதையெல்லாம் கண்டுபிடிக்க பெரிய அளவிற்கு முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்து என்ற சொல் சிந்து நதி என்பதில் உள்ள சிந்துவிருந்து உருவானது என்றுதான் நாம் இதுவரை தெரிந்து வைத்திருக்கிறோம். சிந்து நதியின் அருகே வாழ்ந்த மக்களைக் குறிப்பிட அச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களால் பின்பற்றப்பட்ட மதங்களைக் குறிக்கும் சொல்லாகவும் மாறியது. இவர்களின் பழக்க வழக்கங்களைக் குறிக்கும் விதத்தில் தனிப்பட்ட முறையில் எந்தப் பெயரும் கிடையாது, எந்தவிதமான புனித புத்தகமும் கிடையாது,  மதக்குழுக்கள் எதுவும் இதுதொடர்பாக எதுவும் எழுதி வைத்திடவில்லை.
1940-1973வரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், சாவர்க்கரின் சிந்தனைகளை எடுத்துக்கொண்டு, அதனை இன ரீதியாகத் தங்களுக்குச் சாதகமான முறையில் மேலும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.   கோல்வால்கர், நாம், அல்லது வரையறுக்கப்பட்ட நம்முடைய தேசம் (We, or Our Nationhood Defined) என்னும் நூலில் எழுதியிருப்பதாவது: “இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை நிலைநிறுத்திட, யூத இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழித்திட  வேண்டும் என்று ஹிட்லர் கூறியது ஜெர்மனி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமை பேசுவது அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்தது. மேலும் ஜெர்மனி நமக்கு அடிப்படையாக பல்வேறு வித்தியாசங்களுடன் உள்ள இனங்களையும் கலாச்சாரங்களையும் ஒரே இனமாக மாற்றியமைத்திட வேண்டும் என்பதையும் நமக்கு நல்லதொரு படிப்பினையாக அமைத்துத் தந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்துஸ்தானத்தில் நாம் படிப்பினைகளைக் கற்று, ஆதாயம் அடைந்திட வேண்டும்.”
கோல்வால்கர் இதனை எழுதியபோது, ஹிட்லர் உச்சத்தில் இருந்தார். ஹிட்லர் இப்போது வரலாறாகிப் போய்விட்டார். ஆனாலும், வரலாற்றைத் திரித்துக்கூறிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் இந்துத்துவாவாதிகளுக்கு பெரிதாக ஒன்றும் மாறிடவில்லை. இந்திய வரலாற்றில் காலனியாதிக்கத்தின் பிரிவுகள் பல ஆட்சி செய்ததையெல்லாம்பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குப்பதிலாக புராதன காலம் ‘நம்முடைய’ காலமாக இருந்தது என்றும், இடையில்தான் ’நாம் தாக்குலுக்கு உள்ளானோம்’ என்றும் நம்மை நம்ப வைத்திட, எண்ணற்ற சொற் புரட்டு மற்றும் போலி வாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.    ஓர் இனம், மற்றோர் இனத்தை ஆக்கிரமிப்பதற்கான செயல்களில் இறந்கி இருந்தது என்கிற விதத்தில் தங்கள் விசாரணைகளைத் தொடர்கிறார்கள். வரலாற்றில் மதரீதியான தேசியவாதங்கள் குறித்து வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் கூறுவதையெல்லாம் அவர்கள் மேற்கோள் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும், மக்களைத் தொடர்ந்து மதரீதியாகப் பிளவுபடுத்தி வைத்திருப்பதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே யுத்த களம் தொடர்ந்து இருந்திட வேண்டும் என்பதேயாகும்.
ஒரு சமூகத்தினர், மற்றோர் சமூகத்தினரை வன்முறை மூலமாக அடக்கி ஆண்டார்கள் என்று கூறவரும் அதேசமயத்தில், பெரும்பாலான வன்முறைகள் இயற்கையில் அரசியல்ரீதியானவை என்று அவர்கள் எப்போதுமே குறிப்பிடுவதில்லை. வன்முறை மேற்கொண்டவர்களின் அரசியலை ஒதுக்கித்தள்ளிவிட்டு, இவை அனைத்தும் மதரீதியான செயல்கள் என்று கூறுவது சரியல்ல. ஆனால் இந்துத்துவாவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் இந்துத்துவா மதவெறிக் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று விரும்புவதால், வரலாற்றின் உண்மைகள் அனைத்தையும் சொல்வது என்பது அவர்களின் நிகழ்ச்சிநிரலுடன் ஒத்துப்போகாது.
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் பல்வேறு ஆழமான மோதல்கள் நடந்துள்ளன.  மாமன்னர் அசோகரையே உதாரணமாக  எடுத்துக்கொள்ளுங்கள்,  பல்வேறு விதமான மோதல் போக்குடன் இருந்த மத மற்றும் தத்துவார்த்தக் குழுக்கள் இணைந்து வாழக்கூடிய ஒரு பொதுவான அடித்தளத்தை அளித்திட முயற்சிகளை மேற்கொண்டார். மாமன்னர் அசோகரின் கட்டளைகள், சகிப்புத்தன்மை மீதான படிப்பினைகளைப் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதைவிட முக்கியமாக இதர மதப் பிரிவினர் மீது மரியாதை செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
ரோமிலா தாப்பர் அவர்கள் ‘தேசியவாதம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் மீதான பிரதிபலிப்புகள்’ என்கிற தன்னுடைய அதியற்புதமான கட்டுரையில், எழுதியிருந்ததாவது:
“சையது இப்ராகிம் அவர்கள் இயற்றிய பாடல்களும் பஜனைகளும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு 16ஆம் நூற்றாண்டில் மிக விரிவாக அனைத்துத்தரப்பினராலும் விரிவானமுறையில் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. இப்போதும்கூட அவை பாடப்படுகின்றன.   மொகலாய மாமன்னர்கள் மகாபாரதம், ராமாயணம் உட்பட பலவற்றை சமஸ்கிருதத்திலிருந்து, பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்திடும் புரவலர்களாக மாறி இருந்தார்கள். மதச்சார்பற்ற நாட்டில் மதம் மறுக்கப்படக்கூடாது என்றும், பாரம்பர்யம் என்பது ஆண்டாண்டுகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும், பல்வேறு மதப்பிரிவினரிடமும் உள்ள பன்முகத்தன்மையைக் கொண்டாடிட வேண்டும் என்கிற முறையிலேயே அக்பரின் நம்பிக்கை அமைந்திருந்தது.”
அதியற்புதமான இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை ஆகிய இரண்டுமே இந்து மன்னர்களாலும், மொகலாய மாமன்னர்களாலும் போற்றிப் பாராட்டப்பட்டிருப்பதுடன் அவற்றின் வளர்ச்சிக்காக உதவிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. மத நல்லிணக்கத்தைப் அனைத்து மதப்பிரிவுகளில் உள்ள மத போதகர்களும் (குருக்களும், பிர்களும், ஃபக்கீர்களும்) போதனை செய்திருக்கிறார்கள். முனுதீன் சிஸ்டி, பாபா பரீத், கபீர், குரு நானக் மற்றும் மீரா பாய் (Muinuddin Chishti, Baba Farid, Kabir, Guru Nanak and Mira Bai) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பக்தி இயக்கங்களும், சுஃபி இயக்கங்களும் மதம் மற்றும் சாதிய நிலைப்பாடுகளைக் கடந்தவைகளாகவே அமைந்திருந்தன.
இத்தகைய இந்தியாவில் இவ்வாறு  அதியற்புதமாக நுட்பங்களுடன் கூடிய இந்திய நாகரிகத்தை முழுமையாக கிரகித்துக்கொண்டு, போற்றிப் பாராட்டிட சாவர்க்கர் வெளிப்படையாகவே தவறிவிட்டார்.  கோல்வால்கரும் அந்தப் பாரம்பர்யைத்தையே தொடர்ந்தார். இன்றையவரைக்கும், இந்துத்துவா சிந்தனையாளர்கள், 1947இல் இந்தியா ஓர் இஸ்லாமிய பாகிஸ்தான் என்றும் ஓர் இந்து இந்தியா என்றும் பிரிவினையடைந்திடவில்லை என்கிற உண்மையை, ஏற்க மறுக்கிறார்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத்தான் உருவானது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.    
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதுதொடர்பாக, முப்பது ஆண்டுகள் ஆர்எஸ்எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வால்கரின் எழுத்துக்களுக்கும்,  பாகிஸ்தானை உருவாக்குவதற்கு உதவி புரிந்திட்ட முகமது இக்பால் என்பவரின் சிந்தனைக்கும்  இடையே உள்ள ஒற்றுமை விசித்திரமானதாகும். இக்பால் ‘மசாப்’ (Mazhab) என்று தலைப்பிட்டுள்ள தன்னுடைய கவிதையில், “மேற்கத்திய நாடுகளுடன் உங்களுடைய நாட்டை ஒப்பிடாதீர்கள். இது இஸ்லாமிய தீர்க்கதரிசியின் நாடாகும். அவர்களுடைய ஒருமைப்பாடு அவர்களின் தேசிய எல்லையின் அடிப்படையிலானவைகளாகும். உங்களுடைய ஒருமைப்பாடு உங்கள் மதத்தின் வலுவில் அடங்கியிருக்கிறது.”
கோல்வால்கரும் ‘தேசிய எல்லை’ என்கிற கருத்தாக்கத்தை நிராகரிக்கிறார். கோல்வால்கர், தன்னுடைய சிந்தனைத் துளிகள் (Bunch of Thoughs) என்னும் நூலில், ”எல்லை தேசியவாதம்” என்பது காட்டுமிராண்டித்தனமானது. ஏனெனில், தேசம் என்பது வெறுமனே அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளின் ஒரு மூட்டை அல்ல. மாறாக அது தேசிய கலாச்சாரத்தை உள்ளடக்கியது. இந்தியாவில் அது ‘புராதன மற்றும் கம்பீரமான’ இந்துயிசத்தை சார்ந்திருக்கிறது.” என்கிறார்.
இவ்வாறு வகுப்புவாதிகளின் சிந்தனைகள் ஒரேமாதிரி இணையாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.  ஆனாலும் இத்தகையவர்களின் சிந்தனைகளை நிராகரிக்கக்கூடிய விதத்தில்தான் மத ரீதியாக பாகிஸ்தானுடன் இணைந்த வங்க தேசம் 1971இல் அதனிடமிருந்து தன்னைக் கத்தரித்துக் கொண்டது. ‘
இந்திய தேசமும் இத்தகையவர்களின் தவறான நம்பிக்கைகளுக்கு எக்காலத்திலும் பலியாகிவிடக்கூடாது. நம் நாடு, எந்தவொரு இனத்தாலோ அல்லது மதத்தாலோ ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. மாறாக, மனிதர்களாகப் பிறந்த அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் உருவானது. பெனிடிக்ட் ஆண்டர்சன் என்பவர் எழுதிய ‘கற்பனை செய்யப்பட்ட சமூகத்தினர்’ (Imagined Communities) என்கிற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல நாம் ‘ஒரு கற்பனை செய்யப்பட்ட சமூகத்தினராக’ இருந்திட முடியும்.
இந்துத்துவா, இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்தல் என்பதைத்தான் தன்னுடைய தேசியவாதத்தின் அத்தியாவசிய மூலக்கூறாகக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இது, இந்தியாவை உருவாக்கிய பெருமைமிகு சிந்தனையாளர்களின் கருத்துக்களையெல்லாம் எதிர்க்கிறது.
இந்துயிசத்திற்கும் இந்துத்துவாவிற்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக, சாவர்க்கர் (ஒரு வேளை தெரியாமல்கூட) கூறியிருக்கும் கீழ்க்கண்ட கூற்றை நாம் கவனிக்க வேண்டும்: ”இந்துத்துவாவையும், இந்துயிசத்தையும் வேறுபடுத்திப்பார்த்திட நாம் தவறினோமால், அது மிகவும் புரிந்துணர்வின்மைக்கும், பரஸ்பரம் சந்தேகம் கொள்வதற்கும் வழிவகுத்திடும்.” (“Failure to distinguish between Hindutva and Hinduism, has given rise to much misunderstanding and mutual suspicion”.)  
இந்துத்துவா மற்றும் இதுபோன்ற இதர மதவெறி  அடையாளங்களும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட வேண்டியவைகளாகும். இதனை ஒரேநாளில் செய்துவிட முடியாது. ஆனாலும் இதற்கான நடவடிக்கைகளை சிறிய அளவிலாவது நாம் தொடங்கிட வேண்டும். அமைதிக்காவும், சகிப்புத்தன்மைக்காகவும் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், இந்தியா என்னும் நம்முடைய சிந்தனையை நோக்கி நம்மை நெருக்கமாக்கிட கொண்டு செல்லும்.
இந்திய மக்களாகிய நாம், தனிப்பட்டமுறையில் நாம் எவராக இருந்தாலும், ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள். இதனை மறுக்கக்கூடியவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள்தான் உண்மையில் ’தேச விரோதிகள்’.  அவர்களை எதிர்த்திடுவதற்கான தருணம் வந்திருக்கிறது.  
  (கட்டுரையாளர், ஒரு சார்ட்ர்ட் அக்கவுண்டண்ட் ஆவார். அகமதாபாத் ஐஐஎம்-இன் முன்னாள் மாணவராவார். )
நன்றி: The Wire
தமிழில்: ச.வீரமணி.

Friday, July 20, 2018

1 சதவீதத்தினரின் நலனுக்காக, 99 சதவீதத்தினர் தாக்கப்படுகிறார்கள்: முகமது சலீம்




1 சதவீதத்தினரின் நலனுக்காக, 99 சதவீதத்தினர் தாக்கப்படுகிறார்கள்: முகமது சலீம்
புதுதில்லி, ஜூலை 20-
நாட்டில் உள்ள 1 சதவீதத்தினரின் நலனுக்காக, 99 சதவீதத்தினர் தாக்கப்படுகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் முகமது சலீம் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று முகமது சலீம் கூறியதாவது:
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கறுப்புப் பணம் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதனை நம் நாட்டிற்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, நம் இந்திய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தீர்கள்.
பிரதமர் மோடி, அடிக்கடி தன் உரையில், கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரசார் செய்ததை நாங்கள் எங்கள் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்திருக்கிறோம் என்று கூறுவார். மேலும் தொடர்ந்து அவர், காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டிற்கு நாசத்தை மட்டும்தான் விளைவித்திருக்கிறது என்றும் கூறுவார்.
இந்த அரசாங்கம், திரும்பவும் விவசாயிகளிடம் தேர்தல் சமயத்தில் சென்றுதான்  ஆகவேண்டும். ஜியோ நிறுவனம் ஓர் ஆவணத்தைத் தாக்கல் செய்ததை வைத்தே, அதற்கு உயர்வல்லமை மிக்க நிறுவனம் என்று கூறி மத்திய அரசு நிதி அதற்கு  வழங்கியிருக்கிறது. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பள்ளிக்கூடத்தைத் தன் தொகுதியில் கட்ட வேண்டும் என்றும், நிதி தாருங்கள் என்றும் கோரினால், அவர் அதற்கான நிலம், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திட வேண்டும்.
“சுதேசி” என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் ஒவ்வொரு துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துக்கொண்டிருக்கிறீர்கள். ராணுவத்தையும் விட்டுவைக்கவில்லை.
நாட்டின் செல்வத்தில் 90 சதவீதம் ஒரு சதவீதத்தினரிடம் இருக்கிறது. இவர்களைப் பாதுகாப்பதற்காக, நாட்டில் உள்ள  99 சதவீதத்தினரிடையே மதவெறியைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மொழியின் பெயராலும் மோதவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
இவ்வாறு முகமது சரீம் பேசினார். முகமது சலீமின் பேச்சிற்கு, பாஜகவினர் ஆட்சேபணை தெரிவித்தபோது, “நீங்கள், பொய்களைக் கூறுவதன்மூலம் தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனாலும் நாங்கள் எங்களிடமுள்ளதை இழந்தாலும் நாங்கள் உண்மை பேசுவதைத் தொடருவோம்,” என்று பதிலளித்தார்.  
(ந.நி.)



நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது ராகுல் காந்தி பேசுகையில் மக்களவையில் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்



நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது ராகுல் காந்தி பேசுகையில்
மக்களவையில் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்
புதுதில்லி, ஜூலை 20-
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய பாஜக அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவரைப் பேசவிடாது தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை சபாநாயகர் அவையை ஒருசில நிமிடங்களுக்க ஒத்தி வைத்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது ராகுல் காந்தி பேசியதாவது: 
“மத்திய பாஜக-வினரின் ஆட்சியில் நாம்  அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். 21ஆம் நூற்றாண்டின் ஆயுதமாக, பாஜகவினரின் ஜூம்லா என்னும் தேர்தல் வாக்குறுதிகள் என்னும் அரசியல் ஆயுதம் நம் மீது ஏவப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிலுள்ள விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்களாவார்கள். எண்ணற்ற வாக்குறுதிகள். முதலாவது வாக்குறுதி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார்கள். இரண்டாவது வாக்குறுதி ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை அளிப்போம் என்றார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? வெறும் 4 லட்சம் இளைஞர்களுக்குத்தான் இப்போது வேலை கிடைத்திருக்கிறது.
சீனா, 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கிறது. நம் அரசாங்கமோ வெறும் 400 இளைஞர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கிறது. பகோடா விற்பதும் வேலைதான் என்று பிரதமர் கூறுகிறார்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறேன் என்று கூறி, இரவு எட்டு மணிக்கு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.  ஏழைகள்தான் ரொக்கப்பணத்துடன் இருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லை. இன்றையதினம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. பிரதமரின் அறிவிப்பால் கிடைத்த பலன் இதுதான்.
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடிசெய்யப்படும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் நிதி அமைச்சரோ விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்று பின்னர் கூறுகிறார். பெட்ரோலின் விலைகள் உலகம் முழுதும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் அது உயர்ந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, தன்னுடைய பணக்கார நண்பர்களுக்காக பணத்தைக் களவாடிக் கொண்டிருக்கிறார்.
ஜிஎஸ்டி வரியை காங்கிரஸ் கொண்டுவந்தபோது, நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, கடுமையாக எதிர்த்தார். இப்போது அவர்களே கொண்டுவந்திருக்கிறார்கள். பிரதமரின் ஜிஎஸ்டி ஐந்து விதமான விதங்களில் இருக்கின்றன. வருமான வரித்துறை, சிறிய வியாபாரிகளை நோக்கித்தான் அனுப்பி வைக்கப்படுகிறது. நமது பிரதமர் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மட்டும்தான் இருக்கிறாரோயொழிய, சிறிய வர்த்தகர்களுக்காக இல்லை.  
நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் பிரதமருக்கும் ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கும் இடையேயுள்ள நெருக்கத்தை நன்கு புரிந்துவைத்திருக்கிறார்கள். ரபேல் ஒப்பந்தம் அத்தகைய நபர்களில் ஒருவருக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நபர் அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பயன் அடைந்திருக்கிறார். இவ்வாறு நான் கூறும்போது, அவர் (பிரதமர்) புன்னகைத்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனாலும் உள்ளுக்குள் நடுக்கம் இருப்பதும் தெரிகிறது. மேலும் இப்போது என் கண்களை அவரால் நேராகப் பார்க்க முடியாது.
பிரதமரும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் நாட்டிற்கு பொய்யுரைத்திருக்கிறார்கள். அவர், பிரெஞ்சு அதிபரைச் சந்தித்ததாக பிரதமர் கூறுகிறார். ஆனால் பிரெஞ்சு  அதிபரோ இந்தியாவுக்கம் பிரான்சுக்கும் ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று கூறுகிறார். ரபேல் ஒப்பந்தம், எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து எடுக்கப்பட்ட பின்னர்,  பிரதமருக்கு மிகவும் நெருக்கமான வர்த்தகப் பிரமுகர்களில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதா என்பதை பிரதமர் இந்த அவையில் கூறிட வேண்டும். எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது? 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள ஒரு வர்த்தகப்பிரமுகரிடம் ஏன் அது கொடுக்கப்பட்டது?
பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வரும்போது உங்களின் சௌக்கிதாரராக (பாதுகாவலராக) இருப்பேன் என்று கூறினார். உண்மையில் அவர் அவர் கார்ப்பரேட்டுகளின் பங்குதாரராகத்தான் (பாகிர்தாரர்-ஆகத்தான்) இருக்கிறார்.
இவ்வாறு ராகுல் காந்தி  பாஜக ஆட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துவந்ததைத்தொடர்ந்து பாஜகவினர் அவரைப்  பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டார்கள்.  இதனால் மக்களவை சபாநாயகர் அவையை ஒருசில நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
(ந.நி.)




Thursday, July 19, 2018

ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை மாநிலங்களவைக் கண்டித்திட வேண்டும்: டி.கே. ரெங்கராஜன்



ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை
மாநிலங்களவைக் கண்டித்திட வேண்டும்: டி.கே. ரெங்கராஜன்
புதுதில்லி, ஜூலை 19-
ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை இந்த அவை கண்டித்திட வேண்டும். அவர்கள் அனைவரையும் கைது செய்து, சிறையில் அடைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கோரினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:
இந்த அவை, ஸ்வாமி அக்னிவேஷ் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜார்கண்ட் மாநிலத்தில் பாகூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஸ்வாமி அக்னிவேஷ் பாஜகவின் யுவ மோர்ச்சா என்னும் இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்களாலும், பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்களாலும், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக கறுப்புக்கொடிகள் காட்டி, முழக்கங்கள் எழுப்பி இருக்கின்றனர். அங்கிருந்து பொதுமக்கள் அவரைப் பாதுகாத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.  அவர்களின் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்தினரையும், காவல்துறையினரையும் அவர் அழைத்திருக்கிறார். ஆயினும் எவரும் அவருக்கு உதவிட முன்வரவில்லை.
இவ்வாறு ஸ்வாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டதை இந்த அவை கண்டித்திட முன்வர வேண்டும். உச்சநீதிமன்றம் இதுபோன்று குண்டர்கள், பசுப் பாதுகாப்பு என்ற பெயராலும், ஜிகாத் காதல் என்ற பெயராலும், அறநெறிக் காவல்துறை (Moral Police) என்ற பெயராலும், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதையும்,  கொலை செய்வதையும் கண்டித்திருக்கிறது. இவ்வாறு வன்முறை வெறியாட்டங்களும்,  கொலைகளும் புரிவது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்டன.
இவற்றை இந்த அவை கண்டித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அக்னிவேஷ் அவர்களைத் தாக்கிய பாஜக யுவ மோர்ச்சா அமைப்பினர், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கோரினார்.
(ந.நி.)

Wednesday, July 18, 2018

“குண்டர்கள் கும்பல் கொலை செய்வதற்கு” எதிராக நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை


 குண்டர்கள் கும்பல் கொலை செய்வதற்கு எதிராக
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றுக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
புதுதில்லி, ஜூலை 18-
குண்டர்கள் கும்பல் அப்பாவி தலித்துகள் மற்றும் முஸ்லீம்களைக் கொலை செய்து வருவதற்கு எதிராக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜார்கண்ட் மாநிலத்தில் பாகூர் என்னுமிடத்தில் ஸ்வாமி அக்னிவேஷ் மீது மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. இத்னைச் செய்தவர்கள் பாஜகவின் யுவ மோர்ச்சா என்னும் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் என்று  அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள். பாஜக அரசாங்கங்கள் தற்போது கடைப்பிடித்துவரும் நெறிமுறைகளின் அடிப்படையில் இந்தக் கயவர்களும், அங்குள்ள பாஜக மாநில அரசாங்கத்தால் மிகவும் மென்மையாகவே நடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஸ்வாமி  அக்னிவேஷ் அவர்களுக்கு முறையான மற்றும் போதுமான மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், அவரைத் தாக்கிய குண்டர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இத்தகைய கும்பல்களின் வன்முறையை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளபோதிலும், ஸ்வாமி அக்னிவேஷ் மீதான தாக்குதல் நடந்துள்ளது. குண்டர்களின் கும்பல்கள் கொலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கள், பிரதமர் மற்றும் பாஜக மத்திய அரசாங்கத்தின் கீழ்தான் இத்தகைய குற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதையும், இத்தகைய வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட தனியார் ராணுவங்கள் முழுமையாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நன்கு பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகின்றன. இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடும் கயவர்கள், யார் என்று  நன்கு  அடையாளம் காட்டப்பட்ட பின்னரும், எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் சுதந்திரமாக செல்வதற்கு அனுமதிக்கப்படுவதானது, அவர்களுக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் அளித்துவரும் ஊக்கத்தையும், உதவியையும் நன்கு வெளிப்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தொடர்ந்து, மதச்சார்பின்மை என்னும் நாட்டின் சிறப்புப்பண்பினைப் பாதுகாத்திட, கும்பல்கள் வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் கொலைகள் செய்வதைத் தடுத்திடக்கூடிய விதத்தில் சட்டம் – ஒழுங்கு பேணப்படுவதை உத்ததரவாதப்படுத்துவது அரசாங்கங்களின் கடமையாகும்என்று உச்சநீதிமன்றம் கட்டளையிட்டிருப்பதனை நிறைவேற்றக்கூடிய விதத்தில் நாடாளுமன்றத்தின் நடப்புக்கூட்டத்தொடரிலேயே ஓர் ஒருங்கிணைந்த சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.
(ந.நி.)