Wednesday, August 31, 2016


2010 கோடைக்காலம் என் இதழியல் வாழ்வை மாற்றி அமைத்தது. நக்சல்களின் மையமான தளமாக இருந்த கட்சிரோலி என்ற இடத்தில் எனக்கு எங்கள் ஊடக நிறுவனம் அளித்திருந்த பணியை முடித்து அப்போதுதான் திரும்பியிருந்தேன். என் வாழ்க்கையில் என்னை மிகவும் உலுக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, என் அருமை நண்பர் சாகித் அஸ்மி படுகொலை செய்யப்பட்ட தகவல் வந்தது. அன்று மாலை நான் அவரைச் சந்திப்ப தாக இருந்தேன். பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டிருக்கும் பழங்குடியினர் பற்றியும், அவர்களுக்காக வாதாடிய அறிவுத்தளத்தினர் குறித்தும் அவருடன் உரையாடுவதாக இருந்தேன். ஆனால் என் அண்ணனின் ஏழு வயது மகள் மிகவும் வற்புறுத்தியதால் நான் வீட்டிலேயே தங்க வேண்டியதாயிற்று. அன்று அவளு டையபிறந்த நாள்.
என் கைப்பேசியில் ஏராளமான ‘மிஸ்டு கால்’ அழைப்புகள் பதிவாகியிருந்தன. நிறைய எஸ்எம்எஸ் தகவல்கள் வந்திருந்தன. ‘சாகித் அஸ்மி தொடர்பான தற்போதைய செய்தி என்ன’என்று கேட்ட அந்தத் தகவல்களை நான் பின்னர்தான் பார்த்தேன். ‘பிரேக்கிங் நியூஸ்’’ அளித்துக் கொண்டிருந்த சேனல்களும் அந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்தன. ‘தேச விரோதிகள்’ எனப்படு வோரின் வழக்குகளை எடுத்துக்கொண்டதற்காக, அடையாளம் தெரியாத நபர்களால் சாகித் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பை ரயில் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் பிணைக்கப்பட்டிருந்த அப்பாவிகள் சாகித்தின் வாதத்திறமையால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். சாகித் கொலை செய்யப்பட்ட திட்டத்திற்கு மூளை யார் என்பது இன்று வரையிலும் புரியாத புதிர்.

ஒருவரின் இழப்பை மறக்க பல வழிகள் இருக்கின்றன. அழலாம், துக்கம் அனுசரிக்கலாம், அதிலிருந்து விலகிச் செல்லலாம், வேலையில் கூடுதலாக ஈடுபட்டு ஆறுதல் காண முயலலாம். நான் கடைசி வழியைத் தேர்ந்தெடுத்தேன். அஸ்மி இறந்த மூன்றாவது நாள், நான் நாக்பூருக்குச் சென்று கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இதழியலாளர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான செய்திக்கதையை மேற்கொள்ளத் தயாரானேன். மாணவர்களின் கைது சம்பந்தப்பட்டது அது. அவர்கள் அனைவரும் நக்சலைட்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதற்கு ஆதாரமாக காவல்துறை தாக்கல் செய்த சாட்சியத்தை சொன்னால் சிரித்துவிடுவீர்கள். அவர்கள் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் எழுதிய புத்தகங்களை வைத்திருந்தார்களாம்! அவர்களைப் பற்றி எழுதுவது, அஸ்மியின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிற செயலாக எனக்குத் தோன்றியது.

எனினும், எதிர்பாரா வகையில் என்னை ஒரு நோய் தாக்க, அது என்ன நோய் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாமல்போன நிலையில் விரைவில் நான் வீட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.நல்வாய்ப்பாக, புகழ்பெற்ற மருத்துவர் சிட்னிஸ் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பரிசோதனை அறிக்கைகளைப் படித்துப்பார்த்த அவர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி கேட்டார்: ‘‘உங்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனை என்ன?’’‘‘ஒன்றுமில்லை டாக்டர். நான் மிகவும் வறண்டு போய் நலிவடைந்ததாக உணர்கிறேன், என்னில் என்ன நடக்கிறது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை,’’ என்றேன் நான்.ஒரு மெல்லிய புன்னகையுடன் அவர், ‘‘இதுபோல உங்களுக்கு நீங்களே பரிதாபப்படுவதிலிருந்து விடுபடுங்கள். இதுபோன்ற பரிசோதனைகளில் உங்கள் காசைக் கரியாக்குவதையும் விட்டுவிடுங்கள். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்.
மறுபடி பணிக்குச் செல்லுங்கள். அதுதான் உங்களுக்கு மருந்து.’’ என் அம்மா என்னை சுறுசுறுப்பாக்கத் தீர்மானித்தார். என் அம்மா என்னுடைய உற்ற நண்பர்களில் ஒருவராகத் திகழ்பவர். படுக்கையில் எனக்கு அருகே அமர்ந்தபடி ‘இன்குலாப்’ (முன்னணி உருது நாளேடு) இதழைப் படிக்கத் தொடங்கிய அம்மா, ‘இந்த சொராபுதீன்செய்தியைப் படித்தாயா’ என்று கேட்டாள். அந்தப் பெயர் என் ஆர்வத் தைத் தூண்டியது. நம் காலத்தில் மிகவும் பிரச்சனைக்குரியவரான நரேந்திர மோடியுடன் என் முதல் சந்திப்பின்போதே ஒருவித மோதல் போன்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணமான பெயர் அது. 2007-ல் சிறிய ரவுடியான சொராபுதீன் ஒரு போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக, ரஜ்னிஷ் ராய் என்கிற காவல்துறை அதிகாரியால் குஜராத் காவல்துறையின் உயர்நிலை அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டார்கள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் இருவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டார்கள். நரேந்திரமோடி முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக செயல்பட்டவர்கள்.
அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும்வரை ஊடகங்கள் அவர்களைப் புகழ்ந்துகொண்டிருந்தன. தினசரி செய்தியாளர் சந்திப்புச் செய்திகளில் அவர்களது படங்கள் இடம்பெற்றன. இவர்கள் 2004ல் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்திருந்த ஜிகாதிஸ்ட்டுகளை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துக் கொல்லக்கூடிய அளவுக்கு வல்லமை படைத்த அதிகாரிகளாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டது இயல்பாகவே தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

2007ல் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் வேலை கிடைத்தது. எனக்குத் தரப்பட்ட முதல் பணி, அவ்வாண்டின் குஜராத் தேர்தல்கள் குறித்து செய்திகள் அனுப்புவதாகும். 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்கள் சமுதாயத்தை மதரீதியாகப் பிரித்து, பெரும்பான்மையான இந்துக்களின் மனங்களில் நரேந்திர மோடியை ஒரு மாபெரும் நாயகராக நிறுத்தியிருந்தன.

எங்கள் ஒளிப்பதிவாளருடன் மோடியின் தேர்தல் பிரச்சாரப் பேரணிச் செய்திக்காகச் சென்றிருந்தேன். நரேந்திர மோடி மேடையில் அவரது வலதுகரமாக விளங்கிய அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களுடன் வீற்றிருந்தார். தில்லியில் உள்ள என்னுடைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள், மோடி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசுவதில் வல்லவர் என்று கூறியிருந்தார்கள்.‘...சொராபுதீன்! சொராபுதீன் போன்ற பயங்கரவாதியை நான் என்ன செய்ய வேண்டும்?’ இப்படி மோடி உணர்ச்சி பொங்கக் கேட்கக் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.‘அவனைக் கொல்லுங்கள், அவனைக் கொல்லுங்கள்,’ என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினார்கள். மோடி தன் பேச்சை முடித்து மேடையிலிருந்து இறங்கியபோது அவருடைய பாதுகாப்பு வளையத்திற்குள் நான் என்னைத் திணித்துக்கொண்டேன். ஒளிப்பதிவாளரும் கஷ்டப்பட்டு உள்ளே வந்தார்.‘மோடிஜி, மோடிஜி, ஒரு சவாலான கேள்வி’ என்று கத்தி னேன்.
தன்னுடைய விசிறிகளாலும், பரிவாரங்களாலும் பாது காப்பாக அழைத்துச் செல்லப்பட்ட மோடி என்னைத் திரும்பிப் பார்த்தார். ‘மோடிஜி, மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சொராபுதீனை போலி என்கவுண்ட்டரில் கொன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் ஆற்றியஉரையில் சொன்ன கருத்துகளை இப்போதும் நியாயப்படுத்துகிறீர்களா?’பதிலை எதிர்பார்த்து அவர் முன் மைக்கை நீட்டினேன். ஆனால் ஒளிப்பதிவாளர்கள் படமெடுப்பதற்கான நிகழ்வாக அந்த சில நிமிடங்கள் அமைந்துவிட்டன. என்னை சுமார் பத்து நொடிகள் முறைத்துப் பார்த்த மோடி எதுவும் செல்லாமல் சென்றுவிட்டார்.

இன்று நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவருடன் எனக்கு ஏற்பட்ட முதல் என்கவுண்ட்டர்’ இவ்வாறு அமைந்தது. சொராபுதீன் கதை தெளிவாகக் கூறப்பட வேண்டியது. சொராபுதீன் தொடர்பான அனைத்துக் கண்ணிகளும் சிபிஐ புலனாய்வு பற்றியும், குஜராத் காவல்துறையின் உயரதிகாரிகளில் ஒருவரான அபய் சூடாசாமா கைது குறித்தும் பேசின. ஓராண்டுக்கு முன்பு, குஜராத் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் அவருடைய நட்சத்திர சாட்சிகளில் ஒருவரது ஒப்புதல் வாக்குமூலத்தை நான் வெளியிட்டிருந்தேன். அதற்காக தொலைபேசியில் சூடாசாமாவின் மிரட்டலுக்கு உள்ளானேன். அவர் அப்போது மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு நெருக்கமானவர். புகழ் பெற விரும்புகிற மற்றவர்களின் வழிகளிலிருந்து சூடாசாமா வித்தியாசமானவர். வஞ்சக வழிகளில் ஹவாலா கணக்குகளுடன் வசதியாக வாழ்ந்தவர். அவரது நம்பிக்கையைப் பெற்றவர்களில் ஒருவராக இருந்து வந்த சொராபுதீன்தான் என்கவுண்ட்டர்’ செய்யப்பட்டிருந்தார்.எங்கள் நிகழ்ச்சிப் பொறுப்பாசிரியர்களுக்கு இந்த வழக்கு குறித்துத் திரும்பவும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அனுப்புவது அவசியம் என்றும் ஒரு குறிப்பு அனுப்பினேன். அவர்கள் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே ஊக்கப்படுத்தினார்கள். நான் மீண்டும் அகமதாபாத்திற்குச் சென்றேன்.
நான் அங்கு சென்ற ஒரு மாதத்திற்குள்ளேயே, இரண்டு முக்கிய ரகசியங்களை வெளிப்படுத்தினேன். தங்கள் பெயர்களை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்ட சில அதிகாரிகளின் உதவியுடன் உயர்மட்ட தொலைபேசி அழைப்பு விவரங்களையும் ரகசியக் குறிப்புகளையும் தோண்டி எடுத்தேன். விளைவுகள் எந்தஅளவுக்குப் போகும் என்று தெரிந்தேதான் கவனமாக இந்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனாலும் கடமை உணர்வோடு செயல்பட விரும்பும் அதிகாரிகளுக்கு, ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளாகநேரிடக்கூடிய ஒரு மாநிலத்தில், அவ்வளவு எளிதாக நம்பிக்கை வந்துவிடாது.

விஷயத்தை மேலும் சிக்கலாக்கிய அம்சம் என்னவெனில், நான் ஒரு ‘தெஹல்கா’ செய்தியாளராகச் சென்றிருந்தேன் -அதாவது நான் எங்காவது ரகசியக் கேமரா மறைத்து வைத்திருக்கக்கூடுமே! (தெஹல்கா நிறுவனம் ரகசிய கேமராவில் பல பேட்டிகளைப் படம்பிடித்து வெளியிட்டு ஊழல்களையும் பல்வேறு கொடுமைகளையும் அம்பலப்படுத்தி வந்தது.)மனித உரிமை அக்கறையாளர்களும், சிலஅதிகாரிகளும் செய்த உதவிகளுடன், 2010ல் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் தொடர்பான ஆவணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தேன். அது, என்கவுண்ட்டர்கள் நடந்த சமயங்களில், அப்போதைய மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கும் உயரதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் பதிவாகும்.

அந்தப் பதிவில், அரசாங்க ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ், இந்தக் குறிப்பு எழுதப்பட்டிருந்தது: ‘என்கவுண்ட்டர் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொன்று அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்த வேண்டும் என்கிற கபடத்தனமான சதித்திட்டம்.’ இது அம்பலமானதும் அரசியல் அரங்கில் அதிர்வலைகள் எழுந்தன. தெஹல்காவிற்கு சிபிஐ அலுவலகத்திலிருந்து எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அந்தப் பதிவுகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு சிபிஐ கேட்டு வாங்கியது. பின்னர் அவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நான் அகமதாபாத்தில் ஓட்டல் அம்பாசடர் அறையில் தங்குவது தொடர்ந்தது. அது என்னுடைய இரண்டாவது வீடாகியிருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்தப் பகுதி, நான் தங்கியிருப்பதற்கு ஏற்ற, அதிகமாகக் கவனத்தை ஈர்க்காத இடமாக இருக்கும் எனக் கருதினேன். மாநில பாஜக அலுவலகம் மிக அருகில் இருப்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன்.பலராலும் பேசப்படுவதாக எனது பெயர் பிரபலமடைந்தது. சதித் திட்டத்தை அம்பலப்படுத்திய அய்யூப் என்கிற இளைஞன் யார் என்றுபாஜக தலைவர்கள் விசாரித்தார்கள். அதை எழுதியவர் ஒருபெண்ணாக இருக்கக்கூடும் என்று அவர்கள் மனதிற்குப்படவில்லை. அது எனது வேலையில் கவனம் செலுத்துவதற்குத் தோதாகவே இருந்தது. ஆனாலும் அது நீடிக்கவில்லை. சில நாட்களிலேயே எனக்குத் தெரியாத ஒரு எண்ணிலிருந்து இப்படியொரு குறுஞ்செய்தி வந்தது: ‘நீ எங்கே இருக்கிறாய் என்று எங்களுக்குத் தெரியும்.’ அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறத் தொடங்கியது. அதன்பின்னர் மூன்று நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நான் தங்குவதில்லை. இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளத் தொடங்கினேன். பின்னர் மும்பையில் தங்கி, என் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடத் தீர்மானித்தேன்.

ஆனால், காலம் எனக்கு வேறு வேலைகளை வைத்திருந்தது. என்கவுண்ட்டர் சதி வெளிச்சத்திற்கு வந்த சில வாரங்களுக்குள், சிபிஐ அதிகாரிகளால் அமித் ஷா கைது செய்யப்பட்டார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பதவியில் இருந்த உள்துறை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது அதுவே முதன்முறை. ஒரே இரவில் அது பெரும் பரபரப்புச் செய்தியானது. தேசிய ஊடகங்கள் அனைத்தும் காந்திநகரில் சிபிஐ தலைமையகம் முன்பாகக் குவிந்தன. நான் குஜராத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று -அமித் ஷா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமைகள் குறித்து எழுதுவதற்காக. அமித் ஷா கைது, அவரது நிர்வாகத்தில் அவதிகளைச் சந்தித்த பல காவல்துறை அதிகாரிகள், முன்பு செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தவர்கள், இப்போது பேசுவதற்குத் துணிச்சல் பெற்றார்கள். அதுவரையில் வெளியாகியிருந்த என்கவுண்ட்டர் தகவல்கள் அதற்கு முன் நடந்த, பதிவு செய்யப்படாத கொடுமைகளின் ஒரு சிறு துளியே என்பது தெரிய வந்தது.
இதைக் காட்டிலும் மோசமான சதித் திட்டங்கள் பல்வேறு கோப்புகளில் புதைக்கப்பட்டுவிட்டது என தெரிய வந்தது. குஜராத்தின் கலவரங்கள் - என்கவுண்ட்டர்கள் - அரசியல் படுகொலைகள் இவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் கசப்பான உண்மைகள் வெளி வரக் காத்துக்கொண்டிருந்தன.இதழியலின் அடிப்படை விதியே ஆதாரம்தான். என்னிடமோ எந்த ஆதாரமும் இல்லை. அந்த கசப்பான உண்மைகளை நிரூபிப்பது எப்படி? இதைப் பற்றி யோசித்தபோதுதான் நான் என் அடையாளத்தை மாற்றிக் கொள்ள முடிவு எடுத்தேன். ராணா அய்யூப் ஆகிய நான், கான்பூரில் இருந்து வந்த மைதிலி தியாகி என்ற ஒரு காயஸ்தா சமூகப் பெண்ணாக மாறினேன். அமெரிக்கன் திரைப்படக் கல்லூரியில் பயில்வதாகவும், மோடி செல்வாக்கு உலகம் முழுவதும் இந்தியர்களிடையே பெருகிவருவது குறித்து ஒரு திரைப்படம் தயாரிக்க வந்துள்ளதாகவும் கூறிக்கொண்டேன்.
(தொடரும்)
நன்றி: தீக்கதிர்


Tuesday, August 30, 2016

குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு கேலிக்கூத்து மற்றும் ஏமாற்றும் சூழ்ச்சியாகும்


குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு
கேலிக்கூத்து மற்றும் ஏமாற்றும் சூழ்ச்சியாகும்
மாபெரும் வேலைநிறுத்தத்தின் மூலம் அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்
தபன்சென் அறிக்கை
புதுதில்லி, ஆக. 31-
குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு கேலிக்கூத்து மற்றும் தொழிலாளர்களை ஏமாற்றும் சூழ்ச்சியாகும். செப்டம்பர் 2 மாபெரும் வேலைநிறுத்தத்தின் மூலமாக அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் கூறினார்.
இது தொடர்பாக அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:
"செவ்வாய்க்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் தொழிலாளர்துறை அமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தின் சார்பில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது, அதில் அரசாங்கம், தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே 2016 செப்டம்பரி 2 வேலைநிறுத்தத்திற்குப் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களை ஏமாற்றும் கேலிக்கூத்தே தவிர வேறல்ல என்றே சிஐடியு கருதுகிறது. 
அரசாங்கம், குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று நிதி அமைச்சர் கூறியிருப்பது உண்மையல்ல. குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு 2016 ஆகஸ்ட் 30 அன்று சந்தித்தது. அனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதைத்தொடர்ந்து கூட்டம் எவ்வித முடிவும் மேற்கொள்ளாமல் முடிந்தது.  இந்தநிலையில் அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது வேலைநிறுத்தத்திற்கு முன்பு தொழிலாளர்களை திசைதிருப்பி, குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியேயாகும். 
அரசாங்கம் நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 350 ரூபாய் (அதாவது மாதத்திற்கு 26 நாட்களுக்கு 9,100 ரூபாய்) தர தயாராயிருப்பதாகவும், இதன்மூலம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருப்பது குரூரமான ஜோக் ஆகும். தொழிற்சங்கங்கள் இதனை கேலிக்கூத்து என்று கூறி நிராகரித்துவிட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு போனசை விடுவித்திருப்பதும் ஏதோ அரசாங்கத்தின் கருணையால் ஒன்றுமல்ல. போனஸ் வழங்குதல் சட்டத்தின்படி உச்சவரம்பைக் கூடுதலாக்கி இருப்பதை அரசாங்கம் இப்போது அமல்படுத்தி இருக்கிறது. இதனை இந்த அரசாங்கம் எப்போதோ செய்திருக்க வேண்டும்.  இப்போது அதனை அரசாங்கம் விடுவித்துவிட்டு, அரசாங்கம் ஊழியர்களின் எண்ணற்ற விஷயங்களைப் பரிசீலனை செய்துகொண்டிருப்பதாக வஞ்சகமான முறையில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. இதனை ஏதோ சாதனை போல சித்தரித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில்தான் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கங்கள்  2014-15ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குதல் சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன. இதற்கு அவை கேரளம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் அந்தத் தீர்ப்புகள் இந்த அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தாது. இவ்வாறு இவர்களின் உண்மை நோக்கங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
பத்திரிகையாளர் கூட்டத்தில் அரசாங்கத்தின் திட்டப் பணிகளில் பணியாற்றும் அங்கன்வாடி, மதிய உணவு, `ஆஷா` போன்றவற்றில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் பற்றிக் கேட்கப்பட்டபோது, திட்டப்பணிகளில் பணியாற்றுவோர் எல்லாம் தொண்டர்கள் (volunteers) என்றும் அவர்கள் ஊழியர்கள் (workers) அல்ல என்றும் நிதி அமைச்சர் கூறி அந்தக் கேள்வியை தள்ளுபடி செய்துவிட்டார். ஆனால் இதே தேஜகூ ஆட்சிக்காலத்தின்போதுதான், 46ஆவது  இந்தியன் தொழிலாளர் மாநாட்டின்போது, திட்ட ஊழியர்கள் அனைவரும் ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்கிற முந்தைய ஐஎல்சி மாநாட்டின் பரிந்துரைகளை மீளவும் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்ந்திட வேண்டும். 
அமைச்சர் மேலும் திட்ட ஊழியர்கள் அனைவரும் சமூகப் பாதுகாப்புப் பயன்களின் வருவதற்கான வழிவகைகளைக் காண ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஓராண்டுக்கு முன்பு 2015 ஆகஸ்ட் 26-27 தேதிகளில் இதே அமைச்சர் இதேபோன்று சென்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்பாக திருவாய் மலர்ந்தருளினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இதுதொடர்பாக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. 
எதார்த்தத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் அரசாங்கம் அறிவித்துள்ளவை ஏமாற்றும் வேலையை தவிர வேறல்ல. இதனை ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கம் நிராகரித்திட வேண்டும். வேலைநிறுத்தம் தொடங்க இருக்கும் இச்சமயத்தில் தொழிலாளர்களைக் குழப்புவதற்காகவே, தவறாக திசைதிருப்புவதற்காகவே இத்தகைய விளையாட்டில் இந்த அரசாங்கம் இறங்கி இருக்கிறது. இத்தகைய கபடத்தனமான மற்றும் வஞ்சனையான அரசாங்கத்தின் சூழ்ச்சியை தொழிலாளி வர்க்கம் 2016 செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்வதன் மூலம் முறியடித்திட வேண்டும்."
இவ்வாறு தபன்சென் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,
(ந.நி.)


Monday, August 29, 2016


கம்யூனிஸ்ட்டுகளின் இருக்க வேண்டிய
   நான்கு முக்கிய அம்சங்கள்
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழக்கூடிய விதத்தில், தங்களை உருக்குபோன்று ஆக்கிக் கொள்ளக்கூடிய விதத்தில்,  தங்களை வலுவான மற்றும் அர்ப்பணிப்புடனான உறுப்பினர்களாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால் அதற்குத் சித்தாந்த ரீதியாகத் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியை சுயமாகவே தொடர்ந்து மேற்கொண்டு வரவேண்டும்.
இதற்கு நான்கு முக்கிய அம்சங்கள் நமக்குத் தேவையாகும். அவையாவன:
1. மார்க்சிசம்-லெனினிசத்தைக் கற்பதன் மூலமாகவும், புரட்சிகரப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமாகவும் நாம் நம்முடைய கம்யூனிஸ்ட் உலகக் கண்ணோட்டம் மற்றும் ஓர் உறுதியான கட்சி மற்றும் தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
2. நம் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை நமக்கு நாமே ஆய்வு செய்து கொள்ள, நம் அனைத்துவிதமான பிழையான சிந்தனைகளையும் சரி செய்து  கொள்ள மற்றும் அதே சமயத்தில் நம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் மற்றும் இதர தோழர்களின் பிரச்சனைகளையும், நம் கம்யூனிஸ்ட் உலகக் கண்ணோட்டம் மற்றும் நம் உறுதியான கட்சி மற்றும்  தொழிலாளிவர்க்க நிலைப்பாட்டின்கீழ் நின்று, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
3. கட்சியில் பிழையான  சிந்தனைக்கு எதிரான, அதிலும் குறிப்பாக நடப்பு புரட்சிகர போராட்டத்தைப் பாதிக்கக்கூடிய விதத்தில் பிழையான  சிந்தனைக்கு எதிரான, போராட்டத்தில் ஒரு சரியான அணுகுமுறை மற்றும் பொருத்தமான வழிமுறைகளை எப்போதும் பின்பற்றிட வேண்டும். 
4. சிந்தனை, பேச்சு மற்றும் செயல்களில் நமக்கு நாமே ஓர் உறுதியான கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.  குறிப்பாக, நடப்பு புரட்சிகர போராட்டத்தை ஒட்டிய அரசியல் சிந்தனைகள், அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை சரியான கொள்கை வழிநின்று உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொண்டிட வேண்டும். மேலும் கூடுதலாக, நாம் நம்முடைய சில (நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, அணுகுமுறை, போன்ற)  "அற்ப விஷயங்கள்" குறித்தும் மிகவும் கவனமாக இருப்பதும் தேவை. ஆனால், இதர தோழர்களின் கோரிக்கைகள் குறித்த பிரச்சனைகள் வரும்போது, அதாவது அவர்களின் கொள்கை மற்றும்  பெரிய அளவிலான அரசியல் பிரச்சனைகளுக்கு அப்பால், சொந்தமான கோரிக்கைகள் குறித்த பிரச்சனைகள் வரும்போது நாம் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது அல்லது அவர்களின்  "அற்ப விஷயங்களை" பூதாகரப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.  
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த சுய பயிற்சி குறித்து பேசும்போது, அடிப்படையில் மேற்கண்ட நான்கு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
(தோழர் லியு ஷோசி)

The aim of ideological self-cultivation by members of the Communist party is to temper themselves to become staunch and utterly devoted members and cadres of the Party who make constant progress and serve as examples for others. What is required of us is the following:

1. To build up our communist world outlook and a firm Party and proletarian class standpoint through the study of Marxism-Leninism and participation in the revolutionary struggle.

2. To examine our own thinking and behaviour, to correct all erroneous ideas and at the same time to judge questions and judge other comrades on the basis of our communist world outlook and our firm Party and proletarian class standpoint.

3. Always to adopt a correct attitude and appropriate methods in the struggle against erroneous ideology in the Party, and especially against the erroneous ideology which affects the current revolutionary struggle.

4. To keep a firm control over ourselves in thought, speech and action, especially to take a firm standpoint and adhere to correct principles with regard to political ideas, statements and activities which are related to the current revolutionary struggle. In addition, it is as well to be careful even over “trifles” (in one’s personal life, attitude, etc.). But as for making demands on other comrades, apart from matters of principle and major political questions, we should not be too severe or fault finding over “trifles”.
In my opinion, the above is what we mean, fundamentally, when we talk about ideological self-cultivation by members of the Communist Party.
(Comrade Liu shaoqi pronounced as Liu shochi)
  


Thursday, August 25, 2016

விளையாட்டுத்துறைக்கு முன்னுரிமை அளித்திடுக



ரியோ ஒலிம்பிக்சில் இந்திய விளையாட்டு வீரர்கள் மிகவும் மோசமாகப் பங்களிப்பினைச் செய்திருப்பது சர்வதேச ஊடகங்கள் உட்பட மிகவும் விரிவான அளவில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.  120 கோடி மக்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருப்பதாகப் பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில், கடைசியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம்தான் பெற முடிந்ததா என்று கிண்டலடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
விளையாட்டுத்துறையில் நம்மால்  முன்னேற முடியாமல் போயிருப்பதற்குத் தனிப்பட்ட முறையில் விளையாட்டு வீரர்கள் காரணமல்ல. நாட்டில் விளையாட்டுத்துறை சம்பந்தமான உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக இருப்பதும், விளையாட்டுத்துறைக்கான பொதுச் செலவினம் மிகவும் பெயரளவிலானதாகவே இருப்பதும். விளையாட்டுவீரர்களைத் தெரிவு செய்வதிலும் அரசியல்-அதிகாரவர்க்க உறவினர்களை மட்டுமே தேர்வு செய்கிற மிக நாசகரமான நடைமுறைகள் இருப்பதும்தான் காரணங்களாகும்.
பி.வி.சிந்து, சக்சி மாலிக் மற்றும் தீபா கர்மாகர் போன்ற வீராங்கனைகள் ஒலிம்பிக்சில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு இவர்கள் மேலேகூறியவாறிருந்த அனைத்துத் தடைகளையும்  தங்கள் தனிப்பட்ட விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின்மூலம் விஞ்சி முன்னேறியிருப்பதே காரணமாகும்.
வில்-அம்பு வீராங்கனை தீபிகா குமாரி ரிக்ஷா இழுப்பவரின் மகளாவார். ஓட்டப்பந்தய வீராங்கனை லலிதா பாபர் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர்கள் தங்கள் குடும்ப வறுமையைக் கடந்து ஒலிம்பிக்சில் உறுதியாகக் கலந்துகொள்ளக்கூடிய அளவிற்கு அரசின் ஆதரவு அவர்களுக்கு இல்லை. இவர்கள் தங்கள் சொந்த முயற்சி மற்றும் உறுதி காரணமாகவே இந்த அளவிற்கு அவர்களால் வர முடிந்திருக்கிறது.
விளையாடுமிடங்கள், உடற்பயிற்சி மையங்கள் (ஜிம்னாசியங்கள்) மற்றும் நீச்சல் குளங்கள் போதுமான அளவிற்கு இந்தியாவில் இல்லை. மேலும் விளையாட்டுத்துறைக்கு போதுமான அளவிற்கு மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படுவதில்லை. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவிப் பணம் என்பது மிகவும் அற்பம். இவற்றின் மூலமாக இவர்களால் விளையாட்டு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் எடுத்துக்கொள்ள முடியாது.
தேசிய அளவிலான கைப்பந்தாட்ட வீராங்கனை (handball player)யான, இருபது வயதே நிரம்பிய பூஜா, தற்கொலை செய்து கொண்டிருப்பது, நாட்டில் விளையாட்டுத்துறை எந்த அளவிற்கு இருள்சூழ்ந்திருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணமாகும். பூஜாவிற்கு பட்டியாலாவில் அவர் கல்லூரியில் இலவச விடுதிவசதி மறுக்கப்பட்டதே அவர் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமாகும். ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் ரியோவில் தொடங்கிய சமயத்தில்தான் இந்தத் துயரார்ந்த சம்பவமும் நடந்துள்ளது.
மாநில அரசுகள் இப்போது பதக்கங்களைப் பெற்று வந்துள்ள இரு வீராங்கனைகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் மற்றும் பல பரிசுகளை அள்ளித்தந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு பரிசுகள் பெறுவதற்கு இவர்கள் பொருத்தமானவர்கள் என்று கூறும் அதே சமயத்தில், இவை மட்டும் இதில் உள்ள அடிப்படைப் பிரச்சனையைத் தீர்த்திட உதவாது. விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மிகப் பெரிய அளவில் கட்டுவதற்கான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் தீட்டிடவேண்டும்.விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் போதுமான அளவிற்கு நிதி உதவி அளித்து அவர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள ஊக்குவித்திட வேண்டும். எல்லா விளையாட்டுகளையும் ஓரங்கட்டிவிட்டு, கார்ப்பரேட்டுகளின் (ஸ்பான்சர்ஷிப்) ஆதரவுடன், கிரிக்கெட்டை மட்டும் தூக்கிப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
தற்போது நாட்டில் இயங்குவதாகக் கூறிக்கொள்ளும் அனைத்து விளையாட்டுத்துறை அமைப்புகளும் முழுமையாக பழுதுபார்க்கப்பட வேண்டும். அரசியல் தலையீட்டிலிருந்து இவை கத்தரித்து விடப்பட வேண்டும். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த விற்பன்னர்கள் சுதந்திரமாகத் தலையிடக்கூடிய விதத்தில் இவைகள் ஜனநாயகபூர்வமான அமைப்புகளாக மாற்றப்பட வேண்டும். இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் சமூகத்தின் நலன் சார்ந்தும் விளையாட்டுத்துறை கருதப்படக்கூடிய விதத்தில் ஓர் ஒருங்கிணைந்த விளையாட்டுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.  
(தமிழில்: ச. வீரமணி)

செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்வோம்


நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கம் வரும் செப்டம்பர் 2 அன்று பொது வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தயாரிப்புப்பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. இது,  1991இல் தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கத் துவங்கியபின் நடைபெறும் 17ஆவது பொது வேலைநிறுத்தமாகும். தாராளமயத்தை அமல்படுத்தத் துவங்கிய கடந்த 25 ஆண்டுகளில், இந்த 17 வேலைநிறுத்தங்களும் தொழிலாளி வர்க்கத்தால் நவீன தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான  எதிர்ப்பு நடவடிக்கைகளாகும். 
உழைக்கும் மக்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய அனைத்து முக்கிய பிரச்சனைகளையும் உள்ளடக்கி ஒரு 12 அம்ச கோரிக்கை சாசனம் உருவாக்கப்பட்டு அதன்கீழ் இவ்வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் விலைவாசியைக் கட்டுப்படுத்து, பொது விநியோக முறையை வலுப்படுத்து, தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றாதே, தனியார்மயத்தை நிறுத்து, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே, ஒப்பந்த வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு, மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடு, அணிதிரட்டப்படாத முறைசாரா ஊழியர் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடு முதலான கோரிக்கைகளும் அடங்கும்.
சரியாக ஓராண்டுக்கு முன்பு 2015இல் இதே செப்டம்பர் 2 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேட்சையான மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் இணைந்து ஒரு வேலை நிறுத்தத்தை நடத்தின. ஆனால், மோடி அரசாங்கம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை எதையும் நிறைவேற்றத் தவறிவிட்டது.  அப்போது வேலைநிறுத்தத்திற்கு முன்பு, தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரகக் குழு அதன்பின்னர் இந்த சங்கங்களுடன் ஒரு தடவை கூட பேச்சுவார்த்தை நடத்திடவில்லை. மாறாக, மோடி அரசாங்கம், தன்னுடைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  அதுமட்டுமல்ல, சில முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கும் முன்மொழிவுகளை மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றுவதற்கான வரைவுகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.  ஏற்கனவே சில பாஜக மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. 
தொடர்ந்து விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உயர்வும், உணவுப் பணவீக்கமும் உண்மையான ஊதியங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன.  உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 11.82 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதே மாதத்தில் நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்ணும் 6.07 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 23 மாதங்களில் அதிகபட்ச உயர்வாகும். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்று இவர்கள் அடித்த தம்பட்டத்தால் புதிய வேலைகள் எதையும் எந்தவிதமான தொழிற்சாலைகளிலும் இவர்களால் உருவாக்க முடியவில்லை. 2015இல் வெளியாகியுள்ள தரவுகளின்படி உலகில் உழைக்கும் பெண்களின் பங்களிப்பினை நல்குகிற, மிகவும் கீழான நிலையில் இருக்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். வேலைநிறுத்தத்திற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொழிலாளர்களின் கோபம் உக்கிரமடைந்திருப்பதையும், தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராட அவர்கள் உறுதியுடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இவ்வாறு தொழிலாளர்களின் மத்தியில் உருக்குபோன்று ஒற்றுமை வளர்ந்து வரும் பின்னணியில், ஆர்எஸ்எஸ்-இன்  கட்டளைக்கிணங்க பாரதீய மஸ்தூர் சங்கம் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாது என்று அறிவித்துள்ள போதிலும், அதன்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களும் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை அதனால் தடுத்திட முடியாது. மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்திட மதவெறி சக்திகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வேலைநிறுத்தம் மரண அடி கொடுப்பது போல அமைந்திடும். 
நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இதர பகுதி உழைப்பாளி மக்களிடமிருந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர் அமைப்புகளின் தொழிலாளர்கள் ஆதரவினைப் பெற்றிருக்கிறார்கள். வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் ஆதரவினைப் பிரகடனம் செய்திருக்கின்றன.  தங்கள் தார்மீக மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர். கல்வி நிறுவனங்களில் அன்றைய தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மாணவர் அமைப்புகளும் அறைகூவல் விடுத்திருக்கின்றன.
செப்டம்பர் 2, உழைக்கும் மக்களின் பெரும் திரளான போராட்டத்தை முன்னறிவிக்கும் விதத்திலும், உரிமைகளை உறுதிப்படுத்தும் விதத்திலும், மாற்றுக் கொள்கைகளைக் கோரும் விதத்திலும் மாறும்.  
(தமிழில்: ச. வீரமணி)

Wednesday, August 24, 2016

பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே ஜம்மு – காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவர முடியும் சீத்தாராம் யெச்சூரி பேட்டி




பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே ஜம்மு – காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவர முடியும்
சீத்தாராம் யெச்சூரி பேட்டி

(ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மட்டுமே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

தி இந்து ஆகஸ்ட் 25 நாளிதழில் அந்நாளேட்டின் செய்தியாளர் விகாஷ் பதக், சீத்தாராம் யெச்சூரியிடம் காஷ்மீர் பிரச்சனை, குஜராத் தலித் எழுச்சி உட்பட பல விஷயங்கள் குறித்து பேட்டி கண்டுள்ளார். அவை வருமாறு:)

கேள்வி: காஷ்மீர் நெருக்கடி இப்போது எங்கே மையம் கொண்டிருப்பதாகத் தாங்கள் கருதுகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 45 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நெருக்கடி எங்கே மையம் கொண்டிருக்கிறது என்பது அரசின் நிலைப்பாட்டை சார்ந்தே இருக்கிறது. இதனை நீங்கள் வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என்று மட்டுமே கருதினால், இது ஒரு சீரியசான நிலைமையை ஏற்படுத்தும் என்றே நான் நினைக்கிறேன். அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அறிவிப்புகள் உடனடியாகப் பிறப்பிக்கப்பட வேண்டும்.

கேள்வி: இப்பிரச்சனை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய தூதுக்குழு சந்தித்த பின்னர், பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இப்பிரச்சனைக்கு இறுதித் தீர்வு அல்லது இறுதி அமைதி காண்பது குறித்து முதல்முறையாக அவர் பேசி இருக்கிறார். ஆனால், எப்படி? அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இதனை நீங்கள் மேற்கொண்டிட முடியும்.

கேள்வி: மோடி இறுதி அமைதி குறித்து வாய் திறந்து இவ்வாறு கூறியதற்கு ஒரு நாளைக்கு முன்பு அருண் ஜெட்லி, கல்லெறிபவர்களுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?  

சீத்தாராம் யெச்சூரி: குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் வேலையை, முயல்களையும் ஓடவிட்டு, வேட்டை நாய்களையும் அவிழ்த்துவிட்டுள்ள வேலையை இந்த அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறதா? நிதி அமைச்சர் சொல்வது என்ன? பிரதமர் கூறுவது என்ன? நாடாளுமன்றத்தில் நான் ஓர் உதாரணம் சொன்னேன். சடலங்களிடமிருந்து ரத்த வாடை வீசுவதைஅறியும்போதுதான் வல்லூறுகள் அவற்றைக் கொத்தித் தின்பதற்காக வரும்.  காஷ்மீர் முழுவதும்  மக்களின்  ரத்தம்  சிந்தப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொத்தித் தின்பதற்காக வல்லூறுகள் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வருகின்றன. 
ஏன் இப்படி மக்கள் ரத்தம் சிந்தப்பட வேண்டும்? இது குறித்து முதலில் பேச வேண்டும்.

கேள்வி: குஜராத் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலித்துகள் கிளர்ச்சி அலைகள், அரசியல்ரீதியாகவும் சமூக ரீதியாகவும்,  எழுந்திருக்கிறதே, இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: உனாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். குஜராத்தில் மட்டும் இவ்வாறு நடைபெறவில்லை. தலித்துகள் ஒடுக்குமுறைக்கு எதிராக கலகம் புரிகிறார்கள் என்பதன் பிரதிபலிப்பே இது. தலித்துகள், இனி நாங்கள் இறக்கும் விலங்குகளின் தோல்களை உரிக்க மாட்டோம், கையால் மலம் அள்ள மாட்டோம். என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும் எங்களுக்கு நிலம் மறு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள். நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். உண்மையில், தலித்துகளை பொருளாதாரரீதியாக மேம்பாடு அடையச் செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.

கேள்வி: தலித்துகளை பொருளாதாரரீதியாக மேம்பாடு அடையச்செய்வது குறித்து காலங்காலமாகவே பேசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் தலித் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல், உணர்வுகள் மற்றும் பெருமிதம் கொள்ளுதல் தொடர்பாக மாற்று தலித் அரசியலும் இருக்கிறது. உங்கள் வர்க்க அணுகுமுறையை இத்தகைய அடையாள அரசியலுடன் எப்படி பொருத்துகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: இந்தியாவில் சாதிக்கு எதிராக வர்க்கம் என்ற நிலை இல்லை. மாறாக சாதி – வர்க்கம் ஒன்றின்மீது மற்றொன்று என்ற முறையில் இருக்கிறது. இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களும், சுரண்டலுக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களிலும் பெரும்பகுதியினரும் தலித்துகளாவார்கள். இந்தியாவில் வர்க்கப் போராட்டம் என்பது  இரண்டு கால்களின் மீதும் நிற்கிறது. ஒரு கால் பொருளாதார சுரண்டல் என்றால், மற்றொரு கால் சமூக ஒடுக்குமுறை. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டுமானால், இவ்விரண்டு கால்களாலும் நடந்தாக வேண்டும்.

கேள்வி: எனவே, தலித்துகளை அடித்தட்டு வர்க்கத்தினர் என்று பார்க்க வேண்டுமா அல்லது பிரத்யேகமான கலாச்சாரக் குழுவினர் என்ற பார்க்க வேண்டுமா?

சீத்தாராம் யெச்சூரி: தலித்துகளுடன் ஒரு கலாச்சார அடையாளப் பிரச்சனை இருக்கிறது. சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் இலக்கியம் மற்றும் கலகக் கலாச்சாரம் என்பது வரவேற்கப்பட வேண்டிய அம்சம்தான். ஆனால், சமூக ஒடுக்குமுறைப் பிரச்சனைக்கு அவ்வாறு அடையாளப் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியாது. பிரதானமாக இதனை அவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டு நிலையை உருவாக்குவதன் மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும். அத்துடன், அடையாளப் பிரச்சனைகளும் முக்கியமாகும். எனவே, சாதிய ஒடுக்குமுறைப் பிரச்சனைக்குத் தீர்வு அடையாளப் பிரச்சனை அல்ல. எங்களைப் பொறுத்தவரை அது ஒரு வர்க்கப் பிரச்சனை.

கேள்வி: கேரள முதல்வரின் ஆலோசகராக பொருளாதார மேதை கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து அச்சுதானந்தன் விமர்சனம் செய்திருக்கிறாரே, இது குறித்து ஏதேனும் கருத்துக்கள்?

சீத்தாராம் யெச்சூரி: இது குறித்து கேரள அரசு தீர்மானித்திடும். கேரள அரசாங்கம், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவைகளை நிறைவேற்ற உறுதிபூண்டிருக்கிறது.
(தமிழில்: ச.வீரமணி)







Tuesday, August 23, 2016

ஜம்மு காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர்கள் - சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு


ஜம்மு – காஷ்மீரிலிருந்து உமர் அப்துல்லா தலைமையில் வந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தூதுக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு, திங்கள் அன்று மாலை வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம். ஏ. பேபி உட்பட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப்பின்னர், நாங்கள்
அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்தது பின்வருமாறு:
காஷ்மீரில் இயங்கிடும் அனைத்து அரசியல் சக்திகளுடனும் அரசாங்கம் அரசியல்ரீதியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும்.
காஷ்மீர் மக்கள் மத்தியில் நம்பிக்கைகளைக் கட்டி எழுப்பும் விதத்தில் உடனடியாக சமிக்ஞைகளை அனுப்பிட வேண்டும்.
பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும்.
மக்கள் வாழும் பகுதிகளில் சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவினை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இந்தியாவிற்குள்ளான பிரச்சனைகளை இவ்வாறு நாங்கள் பேசித்தீர்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற முறையில் பாகிஸ்தானுடனும் பேச்சு வார்த்தைகளை துவங்கிட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Sunday, August 21, 2016

இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குழம்பிய குட்டையாகி இருக்கிறது -சீத்தாராம் யெச்சூரி




இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குழம்பிய குட்டையாகி இருக்கிறது
-சீத்தாராம் யெச்சூரி
{சீத்தாராம் யெச்சூரி (வயது 64) சென்ற ஆண்டு ஏப்ரலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1974இல் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்த காலத்திலேயே, அரசியலுக்கு வந்துவிட்டார். 1975இல் அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பைக் கைவிட்டு விட்டார்.
சென்னையில் தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்த சீத்தாராம் யெச்சூரி, ஹைதராபாத்தில் வளர்ந்தார்.
1969இல் நடைபெற்ற தெலங்கானா கிளர்ச்சி அவரை தில்லிக்குக் கொண்டு வந்தது. இங்கே அவர் சிபிஎஸ்இ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவராக வந்தார். பின்னர் தில்லியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டத்தையும், ஜேஎன்யு-வில் எம்ஏ பட்டத்தையும் பெற்றார்.
சீத்தாராம் யெச்சூரி 1974இல் இந்திய மாணவர் சங்கத்தில் (எஸ்எப்ஐ) தன்னை இணைத்துக் கொண்டார். ஓராண்டுக்குப்பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவசரநிலைப் பிரகடனத்திற்குப்பின், ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணியைக் கட்டுவதில் சீத்தாராம் யெச்சூரி, முன்னாள் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்துக்கு உண்மையான வாரிசாகத் திகழ்கிறார். 2005 ஜூலையில் மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகளிடையே மிகவும் பிரபல்யமான பேச்சாளர்களில் ஒருவராக அவர் மாறி இருக்கிறார்.
அவர் கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி ஸ்டேட்ஸ்மேன் நாளிதழுக்கு பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவை ஆகஸ்ட் 21 இதழில் வெளிவந்துள்ளன. அவற்றின் சாராம்சங்கள் வருமாறு:}
கேள்வி: சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்தபின்னர், இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தின் நிலை என்னவாக இருக்கிறது?
பதில்: இன்றைய தினம் நாட்டில் மோடி அரசாங்கத்தால் மிகவும் வெறித்தனமாகப் பின்பற்றப்பட்ட வரும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி இயக்கத்தின் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகள், மக்கள் விரோதக் கொள்கைகள் என்று நாங்கள் சொல்வதற்குக் காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பின்பற்றிய கொள்கைகள் அந்நிய மூலதனம் நம் நாட்டிற்குள் நுழைவதற்காக கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டிருப்பதை வைத்தும்,  அந்நிய மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டும் விதத்தில் நம்முடைய வளங்கள், நம்முடைய மூலப் பொருள்கள் மற்றும் நம்முடைய உழைப்பாளிகளின் திறன்கள் அந்நிய நிதி மூலதனத்திடம் அடகு வைக்கப்பட்டிருப்பதை வைத்திருப்பதை வைத்தே அவ்வாறு கூறுகிறோம். இதன் நிகர விளைவு என்பது, நாட்டில் உள்ள இருவிதமான இந்தியர்களுக்கும் இடையே (அதாவது ஒளிரும் இந்தியர்களுக்கும், வறுமையில் வாடும் இந்தியர்களுக்கும் இடையே) பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைந்திருக்கிறது என்பதேயாகும். இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையும் கடுமையாகக் குறைந்துவிட்டது. இது, தொழில் உற்பத்தியில் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றிருப்பதுடன், எதிர்மறை உற்பத்தி (negative manufacturing) அல்லது குறைந்த வேலைவாய்ப்புக்கும் இட்டுச் சென்றிருக்கிறது.
விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வின் காரணமாகவும்,  அதிக அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாகவும் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் இடதுசாரிகள் பின்னே அணிவகுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதாவது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்காக அல்லாமல் நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காக மக்கள் இடதுசாரிகளின் பின்னே அணிவகுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, நாட்டில் தற்போது மதவெறி சக்திகள் தலைதூக்கி இருப்பதை எதிர்த்து முறியடிக்க வேண்டியதும் இடதுசாரிகளின் முக்கிய அம்சமாக மாறி இருக்கிறது. இடதுசாரிகளின் மதச்சார்பற்ற மாண்புகள் குறித்து அனைவரும் நன்கு அறிவார்கள்.  போலி தேசியவாதம் என்ற பெயரில் இருந்தாலும் சரி, அல்லது, தேசியவாதம் என்ற பெயரில் மதவெறி சிந்தனைகளை நுழைத்தாலும் சரி, பல்கலைக்கழகங்களில் தாக்குதல்களைத் தொடுத்தாலும் சரி அங்கெல்லாம் முன்னணியில் நின்று போராடுவது இடதுசாரிகள்தான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், தலித்துகள் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது இடதுசாரிகள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும், பசுப் பாதுகாப்பு, புனித ஜிகாத் காதல் அல்லது கர் வாப்ஸி (வீட்டிற்குத் திரும்புவோம்) என்ற பெயர்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது இடதுசாரிகள்தான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனினும் தேர்தல் கண்ணோட்டத்தில் மக்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை, பலவீனமாகவே இருக்கிறோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறோம். இந்தப் பலவீனத்தைக் களைந்து முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்கான முயற்சிகளில் இப்போது நாங்கள் இறங்கி இருக்கிறோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடனான ஒற்றுமை கீழ்மட்ட அளவில் (ground level) வலுவாக வளர்ந்துகொண்டிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இடதுசாரிகள் ஓர் அரசியல் சக்தியாக கேந்திரமான பங்கினைச் செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.


கேள்வி: காஷ்மீர் பள்ளத்தாக்கு தொடர்ந்து கொதித்துக் கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில் இந்தோ - பாகிஸ்தான் உறவுகள் குறித்து விவாதித்திடுவதில் பிரதமர் நரேந்திர மோடி பலுசிஸ்தான் மற்றும் கில்ஜிட் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறாரே? 
பதில்: காஷ்மீர் பிரச்சனையை இந்த அரசாங்கம் கையாளும் விதம் மிகவும்மோசமான முறையில் விமர்சிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.
காஷ்மீரத்து மக்கள் நாட்டின் இதர பகுதி மக்களிடமிருந்தும் தில்லியில் உள்ள அரசியல் தலைமையிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போல் ஏன் உணர்கிறார்கள் என்று நாடாளுமன்றத்திலும் நான் கேட்டேன். எங்கள் கட்சியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனை சரி செய்திடாமல், இதரர்கள் மீது குறை கூறுவது பிரச்சனையைத் தீர்த்திட உதவாது.
மக்களின் மனதில் இடம்பிடித்திட, மக்கள் மீது மிருகத்தனமான முறையில் பெல்லட் குண்டுகளை வீசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறிக்கொண்டிருக்கிறோம். மேலும் மக்கள் வாழும் பகுதிகளில்  ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) அமல்படுத்தாது திரும்பப் பெறுங்கள் என்றும் அச்சட்டத்தை எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடைபெறும் எல்லைப் பகுதிகளில் மட்டும் பயன்படுத்துங்கள் என்றும் வலியுறுத்திக்  கொண்டிருக்கிறோம். இதுபோன்று சில நடவடிக்கைகளை எடுங்கள்.  அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது பிரதமரிடம் நான், பாகிஸ்தான் பிரதமரிடம் எங்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள், அந்நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று  ஹாட் லைனில் பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
கடந்த பல ஆண்டுகளாக, காஷ்மீர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகள் மீதும், அதாவது அரசமைப்புச் சட்டம் 370 குறித்தும், சுயாட்சி மற்றும் வளர்ச்சி குறித்தும், பல்வேறு குழுக்கள் எண்ணற்ற அறிக்கைகளை அளித்திருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. 2010இல் நடைபெற்ற சம்பவங்களுக்குப்பிறகு காஷ்மீர் பிரச்சனைகள் குறித்து ஒரு விவரமான அறிக்கையை பல்துறை அறிஞர்கள் குழு ஒன்று அளித்தது. அந்த அறிக்கையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்த அரசாங்கம் விவாதம் நடத்தத் தயாராக இருந்தால் அவை அனைத்தையும் கொண்டுவாருங்கள் என்று அரசாங்கத்திடம் நாங்கள் கூறிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒத்துழைப்போம். இல்லாவிடில், அம்மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் சில நடவடிக்கைகள் எடுங்கள். அதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நம்பிக்கைகளையும்  பெற வேண்டியது அவசியமாகும். இதேபோன்று கடந்த காலங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அரசாங்கம், காஷ்மீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் தூதுக்குழுவிற்கு தலைமை ஏற்று செல்ல முடியும். ஆனால் அரசாங்கமோ இதில் எதையுமே கேட்க மறுக்கிறது. இதில் எதையும் பரிசீலனை செய்யக்கூட அது தயாராயில்லை என்பது போலவே தோன்றுகிறது.
நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, சடலங்களிடமிருந்து ரத்த வாடை வீசுவதை அறியும்போதுதான் வல்லூறுகள் அவற்றைக் கொத்தித் தின்பதற்காக வரும் என்ற உதாரணத்தைக் கூறினேன். ரத்தம் இங்கே சிந்தப்படுவதால், எல்லை தாண்டி வல்லூறுகள் வருகின்றன. எனவே முதலில் அங்கே ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துங்கள் என்று பேசினேன். பாகிஸ்தானைக் குற்றம் சொல்வதால் மட்டும் இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டிட முடியாது. இங்கேயுள்ள பிரச்சனைகளை நாம் தீர்த்திட வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த ஜம்மு – காஷ்மீரும் சுதந்திரம் அடைந்த சமயத்தில் நாட்டின் ஓர் அங்கமாக இருந்தது என்றும், இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும் என்றும் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே இப்போது இதில் என்ன புதிய விஷயம் இருக்கிறது? இந்த அரசாங்கம் திடீர் திடீர் என்று கொள்கை நிலையை மாற்றிக்கொண்டே இருக்கிறது. திடீரென்று பிரதமர் பாகிஸ்தான் பிரதமருடன் அவரது பிறந்த நாள் அன்று  மதிய உணவு அருந்துவதற்காகப் பறந்து செல்வார். பின்னர் திடீரென்று அதிகாரிகள் மற்றும் அயல்துறை அமைச்சர்கள் அளவிலான இந்தோ – பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும். என்னே, இவர்கள் கொள்கை? முழங்காலுதறல் கொள்கை, இது நாட்டிற்கு நல்லதல்ல, மிக மோசமான ஒன்றாகும். பலுசிஸ்தான், கில்ஜிட் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தெல்லாம் பேசுவது இதற்கு விடையல்ல. நாம் நம்முடைய காஷ்மீர் பகுதி குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோமா, அவர்கள் பகுதி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோமா? இது என்ன தீர்வினைக் கொண்டுவரும்? அரசியல் ரீதியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள். முதலில் இந்தியாவிற்குள் பேச்சுவார்த்தையை நடத்துங்கள். பின்னர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொள்ளலாம். இதுவே முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழியாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த அரசாங்கம் அதனைச் செய்ய வில்லை.
கேள்வி: இந்த அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையைக் கையாள்வது தொடர்பாக என்ன கருதுகிறீர்கள்? அது தொடர்பாக கடும் விமர்சனம் வந்திருக்கிறதே.
பதில்: இந்த அரசாங்கத்தின் கீழ் அயல்துறைக் கொள்கை குழம்பியக் குட்டையாகிக் கிடக்கிறது.  தீவிரமாக உலகத்தைச் சுற்றிவரல்தான் அயல்துறைக் கொள்கை என்ற ஒரு மாயையில் நம் பிரதமர் இருப்பதுபோல் தோன்றுகிறது.  அவர் பல நாடுகளுக்குச் சென்று தலைவர்களை ஓர் அரை நாளில் அல்லது முழு நாளில் பார்ப்பது அயல்துறைக் கொள்கை அல்ல. நிறைய அம்சங்கள் அதில் அடங்கி இருக்கின்றன. இரு நாடுகளின் தூதரகங்களுக்கு இடையே எண்ணற்றவை நடந்தாக வேண்டும். அயல்துறைக் கொள்கை என்பதும் உள்நாட்டுக் கொள்கையின் ஒரு விரிவாக்கம்தான்.  இவற்றையெல்லாம் இந்த அரசு முறையாகச் செய்வதாக நாங்கள் நினைக்கவில்லை.
மாறாக. கடந்த ஈராண்டு காலமாக மிகவும் ஆபத்தான போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் அயல்துறைக் கொள்கை என்பது அமெரிக்க அரசின் முந்தானை முடிச்சாக வேமாக மாறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் கையெழுத்திட்ட இந்தோ – அமெரிக்க ஒப்பந்தங்கள் இந்தியாவை, அமெரிக்காவின் போர்த்தந்திர கூட்டாளியாக மாற்றி இருக்கிறது. எந்தவொரு நாடும், இன்னொரு நாட்டுடன் தங்களுக்கு ஒரு பொது எதிரி இருந்தால் அவரை எதிர்ப்பதற்காக கூட்டணி வைத்துக் கொள்ளும்.  இப்போது கூறுங்கள், இரு நாடுகளுக்கும் யார் பொது எதிரி? அவ்வாறு பொது எதிரி என்று எவரும் இல்லை என்றால் இதர நாடுகளுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீங்கள் என்ன கூற விழைகிறீர்கள்? தென் சீனக் கடலில் அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும் இணைந்து கடற்படை பயிற்சி மேற்கொள்வதற்கு என்ன அர்த்தம்? இதற்கு மலபார் பயிற்சி என்று வேறு பெயர் வைத்திருக்கிறீர்கள். மலபார் என்றால் என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியும். இதன்மூலம் நீங்கள் சீனாவிற்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன? அமெரிக்காவும், ஜப்பானும் சீனாவைக் குறி வைத்தால் இந்தியா அவர்களுடன் இருக்கும் என்று இதற்கு அர்த்தமா?
கேள்வி: மாநிலங்களவையில் தோல்வி அடைவதைத் தவிர்ப்பதற்காக இந்த அரசு சரக்கு சேவை வரி சட்டமுன்வடிவை நிதி சட்டமுன்வடிவாக கொண்டுவர இருப்பதாக தங்கள் கட்சி ஐயுறுகிறதே. இதில் உங்கள் நிலை என்ன?
பதில் : மாநிலங்களவையை ஓரங்கட்டுவதற்காக பாஜக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. எனவே,  மக்களவை சபாநாயகரால் சரக்கு சேவை வரி சட்டமுன்வடிவை நிதி சட்டமுன்வடிவு என்று கூற வைத்து, மக்களவையில் நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  மக்களவையில் பெரும்பான்மை இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, நவீன தாராளமய சீர்திருத்தங்களைத் திணிப்பதற்காக அரசு மேற்கொண்டிடும் இத்தகைய திருகு வேலைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்திடும்.
(தமிழில்: ச. வீரமணி)






காஷ்மீர் மீது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள்


காஷ்மீர் கடந்த ஆறு வாரங்களாக மிகவும் குழப்பமான நிலையில் இருந்து வருகிறது. ஹிஸ்புல் இயக்கத்தின் கமாண்டர் புர்கான் வானி மரணத்திலிருந்து, மக்கள் பெரும் திரளாக வீதிகளில் இறங்கி கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு 58 பேர் இறந்திருக்கிறார்கள், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருக்கிறார்கள். கடைசியாகக் கொல்லப்பட்டவர், ஆகஸ்ட் 15 அன்று ஸ்ரீநகரில் 16 வயதுள்ள முகமது யாசிர் ஷேக் என்பவராவார். இவர் போலீசாரால் பட்டமாலு பகுதியில் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வரும் பெல்லட் குண்டுகள் பலரைக் கண்பார்வையற்றவர்களாக்கி இருக்கிறது, பலரை ஊனப்படுத்தி இருக்கிறது. ஆயினும், நிலைமைகளைத் தணிப்பதற்கு, மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, காஷ்மீர் நோக்கி மேலும் மேலும் துருப்புக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
மனிதாபிமானமற்றது
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, அரசாங்கம் ஆகஸ்ட்  12 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மேற்கொண்ட நிலைப்பாடு மிகவும் பிற்போக்குத்தனமானதாகும். அவர் மத்தியப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 9 அன்று பேசியபோதுகூட அடல் பிகாரி வாஜ்பாயி கடைப்பிடித்த இன்சானியட் (மனிதாபிமானம்). காஷ்மீரியட் (காஷ்மீர் மக்களின் பல்வேறுவிதமான மாண்புகள்), ஜமூரியட் (ஜனநாயகம்) பின்பற்றப்படும் என்று கூறினார். அதனைக் கூட இக்கூட்டத்தில் அவர் கூறவில்லை. மாறாக. பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் "காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்றைய சூழ்நிலைமையில், பாதுகாப்புப் படையினர் தங்களை  மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதற்காகப் பாராட்டு"வதாக வேறு கூறினார். மனிதாபிமானமற்ற முறையில்    நூற்றுக்கணக்கான இளைஞர்களையும், இளைஞிகளையும் கொன்று, ஊனப்படுத்தி, குருடாக்கிய சூழ்நிலையைப் பார்த்தபின்னர் மோடி இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர், அங்கே "தற்போதைய அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணம் பாகிஸ்தான்" என்றும் பிரகடனம் செய்திருக்கிறார். இதன்மூலம் அவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில், மக்கள் மத்தியில் தன்னெழுச்சியாக எழுந்துள்ள கோபத்தையும் அமைதியின்மையையும் அவர் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்துள்ளார். மேலும் அவர், "வன்முறை, பயங்கரவாதம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" என்றும் எச்சரித்திருக்கிறார்.
இந்தக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் வாழும் அனைத்துப் பகுதி மக்கள் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும் என்று,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் முன்வைத்த முன்மொழிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இக்கூட்டத்திற்குப்பின் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இதற்கு நேரடியாக எதுவும் கூறாது,  நிலைமைகளுக்குத் தக்கபடி அரசாங்கம் தீர்மானித்திடும் என்று தெரிவித்திருக்கிறார்.
வேறுபடுத்திப் பார்க்கும் எண்ணம் இல்லை
அரசாங்கமும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஒரு சண்டைக்காரன் மனோநிலையிலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா பாகிஸ்தானுடன், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது என்றும் ஜம்மு - காஷ்மீர் மீதான விவாதங்கள் பற்றி கேள்வியே எழவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
பிரதமரும் தன்னுடைய சுதந்திர தின உரையின்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நிலைமைபற்றியோ அங்கு மக்கள் படும் துன்ப துயரங்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மாறாக அவர், பலுசிஸ்தான், கில்ஜித் பால்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதாகவும், அங்குள்ள மக்கள் தனக்கு நன்றி தெரிவித்து செய்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் பேசினார். பாகிஸ்தான், பலுசிஸ்தானத்திலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் மேற்கொண்டுள்ள அட்டூழியங்களுக்குப் பதில் கூற வேண்டும் என்று கூறி, இதே பல்லவியை அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பாடினார்.     
இவ்வாறு மோடி அரசாங்கமானது காஷ்மீரில் உள்ள அமைதியின்மையை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகத்தான் பார்க்கும் என்று சமிக்ஞையை அளித்திருக்கிறது.  அங்கேயுள்ள பெரும் திரளான மக்களுக்கும், பாகிஸ்தான ஆதரவு தீவிரவாதிகளுக்கும் இடையே  பாகுபடுத்திப்பார்க்கும் தன்மை அதனிடம் இல்லை. காஷ்மீர் பிரச்சனையும் பிரச்சனைகளில் ஒன்றாக விவாதிக்கப்பட வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் இந்திய - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின்போது ஏற்படுத்தப்பட்ட ஆய்வெல்லையிலிருந்து அது பின்வாங்கிக்கொண்டது. 
வெறித்தனமும் விசித்திரமும்
மோடி அரசாங்கம் காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் தீர்த்து வைப்பதற்குப் பதிலாகவும், அவர்கள் இவ்வாறு தனிமைப்பட்டுச் சென்று கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாகவும், இதனை இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்சனையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனையான பலுசிஸ்தான் பிரச்சனையை எழுப்பி இருப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுடன் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று வேண்டும் என்றே சமிக்ஞையை அனுப்பி இருக்கிறார். காஷ்மீர் மீதான பாகிஸ்தான் நிலைப்பாட்டிற்குப் போட்டியாக, பலுசிஸ்தானில் மனித உரிமைகள் மீறல் பிரச்சனையை, இந்தியப் பிரதமர் ஒருவர் முதன்முறையாக இவ்வாறு கையில் எடுத்திருக்கிறார். அதிதீவிர தேசியவெறிபிடித்த நபர்கள் இத்தகைய வெறித்தனமான நிலைப்பாட்டை வரவேற்றிருக்கிறார்கள்.
பலுசிஸ்தான் மீதான மோடியின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான  செய்தித்தொடர்பாளரும் சரியென்று ஏற்றுக் கொண்டிருப்பதும் மிகவும் விசித்திரமாக இருக்கிறது.  காங்கிரஸ் கட்சியும் காஷ்மீர் பிரச்சனை குறித்து இரண்டகமான சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது. 1948இல் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தபோது காஷ்மீரத்து மக்களுக்கு இந்தியா அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றி அவர்களை கவுரவித்திட வேண்டும் என்று மிகவும் விவேகமான முறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார். ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் சமயத்தில் அவர்களுக்கு சுயாட்சி உரிமைகள் அளிக்கப்படும் என்று உறுதிமொழிகள் கூறப்பட்டிருந்தன. அவ்வாறு அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறிய கூற்றை, அவருடைய சொந்தக் கருத்து என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் கட்சியையே ஒதுக்கி வைத்துள்ளார்.
பகடைக்காய்கள் அல்ல
காஷ்மீர் தொடர்பாக மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு, ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும். இந்தியாவிற்கும் பேரழிவினை உருவாக்கக் கூடியதாகும். மோடி அரசாங்கத்தின் இத்தகைய பெரும்பான்மை கண்ணோட்டம் மற்றும் நாட்டை தேசப் பாதுகாப்பு நாடாக மாற்றும் நிலைப்பாடுகளைத் தீர்மானகரமான முறையில் எதிர்த்திட வேண்டும். காஷ்மீர் மக்கள் மீது ஏவப்பட்டுள்ள ஒடுக்குமுறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று நாட்டிலுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் கோர வேண்டும். இத்துடன் மாநிலத்தில் இயங்கும் அனைத்து அரசியல் சக்திகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிடவும் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் காஷ்மீரத்து மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திடக் கூடாது. தேசிய வெறி நிலைப்பாட்டை மேற்கொள்வதற்குப் பதிலாக,  மோடி அரசாங்கம், சென்ற ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தீர்மானித்தபடி, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை மீளவும் தொடங்கிட வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)