Thursday, June 25, 2015

எதேச்சதிகார ஆபத்து உள்ளது



பிரகாஷ் காரத்
ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 40ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் மோசமான இருண்ட அத்தியாயமாகும். 1971ஆம் ஆண்டு அபரிமிதமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த இந்திரா காந்தி மிக விரைவிலேயே மக்களின் அதிருப்திக்கு ஆளானார். அது குஜராத்தில் நவ நிர்மாண் இயக்கமாகவும் மற்றும் நாடு முழுதும் ஜேபி இயக்கமாகவும் பல்வேறு வடிவங்களில் வெடித்துக் கிளம்பியது.
இக்காலத்தில்தான் 17 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் 1974 மே ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது. இந்திரா காந்தி அரசாங்கமும், காங்கிரஸ் கட்சியும் அதிகரித்துவரும் மக்களின் எதிர்ப்பினை ஒடுக்குமுறை மூலம் சமாளிக்க முயன்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர இடதுசாரி சக்திகளுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரைப் பாசிச அராஜகத்தின் விளைவாக இந்திராகாந்தியின் “முற்போக்கு முகமூடி’’ ஏற்கனவே கிழிந்து, அவரது சுயரூபம் வெளி உலகத்திற்குத் தெரியத் துவங்கிவிட்டது. அவசரநிலைப் பிறப்பிக்கப்பட்ட தற்கான உடனடிக்காரணம்,
அரசாங்கத்திற்கு ஜேபி இயக்கம் பிரதிநிதித் துவப்படுத்திய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அதிகரித்துக் கொண் டிருந்ததும், மக்களவைக்கு இந்திராகாந்தி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுமாகும். சுற்றி வளைக்கப்பட்டு, மூலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்ந்த இந்திரா காந்தி உள்நாட்டு அவசர நிலையைத் திணிப்பதன்மூலம் இதனை முறியடித்திடத் தீர்மானித்தார். அவசரநிலைப் பிரகடனம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலைவர் களும் முன்னணி ஊழியர்களும் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டார்கள், சிவில் உரிமைகள் நசுக்கப்பட்டன. பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.
`மிசா’ என்கிற உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (MISA-Maintenance of Internal Security Act) என்பதன்கீழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றுக்கணக்கான தலைவர்களும், முன்னணி ஊழி யர்களும் கைது செய்யப்பட்டார்கள். இந்திரா காந்திக்குப் பிரதமராகத் தொடர் வதற்கு ஏற்பட்ட ஆபத்து இத்தகைய கொடூரமான நடவடிக்கையை எடுப்பதற்கு உடனடிக் காரணமாக இருந்த அதே சமயத்தில், இதை மட்டுமே காரணம் என்று கருதினோமானால் அது பிழையாகும். எதேச்சதிகாரத்தை நோக் கிய பாதையில் அவசர நிலை உச்சகட்ட நடவடிக்கை யாகும்.
ஆளும்கட்சி எதிர்கொண்ட சவால்களிலிருந்து அதுமீள்வதற்கு வழிதெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தது. 1967 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஒரு கட்சி ஆதிக்கம் வீழ்ச்சியடையத் தொடங்கியதை அடுத்து, அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. இவை அனைத்தும் முதலாளித்துவ ஜனநாயகத் தின் மீதே தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்குப் பங்களிப்பினைச் செலுத் தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1972இல் நடத்திய 9ஆவது அகில இந்தியமாநாட்டில்தான் முதன்முதலாக இத் தகைய ஒரு கட்சி எதேச்சதிகார ஆபத்துக்கு எதிராக எச்சரித்தது. இவ்வாறு எச்சரித்த முதல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.அவசரநிலை, ஆழமாகியிருந்த நெருக்கடியைத் தீர்த்திட மேலும் எதேச்சதி காரமான முறையில் செல்வதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவசரநிலைக் காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட அரசமைப்புச்சட்ட 42 ஆவது திருத்தமானது அரசாங்கம் (executive), நீதித்துறை மற்றும் நாடாளுமன் றத்திற்கு இடையிலான அதிகார வரம் பெல்லையை மாற்றுவதற்கு வகை செய் தது. எடுத்துக்காட்டாக, இதில் ஒரு திருத்தமானது, நாடாளுமன்றத்தில் திருத்தப்படும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் எதையும் நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய முடியாது என்பதாகும்.
அரசியல் அமைப்பு முறையில் எதேச்சதிகார அம்சங்களை அறிமுகப்படுத்திட அரசுத்தரப்பில் மேற்கொள்ளப் பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்விஅடைந்தன. ஏனெனில், மக்கள் அவசர நிலையை நிராகரித்தனர், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலைச் சகித்துக்கொண்டு அதனுடன் இணைந்துசெல்ல மறுத்தனர். அவசரநிலை, சிவில் உரிமைகளை ரத்துசெய்தது மட்டுமல்ல, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு முயற்சிகள், நகர்ப் புறங்களில் இருந்த ஏழை மக்களின் குடிசைகள் தரைமட்டமாக்கப்பட்டது மற்றும் அதிகார வர்க்கத்தினரின் தான்தோன்றித்தனமான ஆணைகள் மூலமாக மக்கள் மீது மிகவும் கொடூர மான முறையில் தாக்குதல்கள் தொடுக் கப்பட்டன.
இந்திராகாந்தி 1977 மார்ச் சில் தன்னுடைய எதேச்சதிகார ஆட்சியை சட்டப்பூர்வமானதாக்கிட தேர்த லில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவசரநிலையை ரத்து செய்தார். ஆனால், தேர்தலில் மக்கள் இந்திராகாந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மீண்டும் எழமுடியாத அளவிற்கு மரண அடி கொடுத்து அவர்களைப் படுதோல்வி அடையச்செய்து விட்டார்கள். அவசர நிலைப் பிரகடன நாற்பதாம்ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் சூழலில், இந்தியாவில் மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் செய்யப் படும் நிலை வருமா என்று ஒரு கேள்விவிவாதத்தின்போது முன்வந்தது. இந்தக் கேள்வி தவறான முறையில் முன்னிறுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு முறையில் எதேச்சதிகார அச்சுறுத்தல் மீண்டும் வருமா?
எதேச்சதிகார ஆட்சியைக் கொண்டுவரக் கூடிய விதத்தில் அவசரநிலை அதிகாரங்களை அன்றைக்குப் பிரயோகித்ததுபோல் இன்றைக்குப் பிரயோகிக்க முடி யாது எனினும், எதேச் சதிகாரம் இதர வடிவங் களில் நம் ஜனநாயக அமைப்பு முறையை அச்சுறுத்தக்கூடும். நாற்பது ஆண்டு களுக்கு முன் அவசர நிலைப் பிரகடனம் செய் யப்பட்ட சமயத்தில் அதற்கான அடிப்படைக் காரணங்களாக அமைந்தவை, அரசியலமைப்பு முறையின் நெருக்கடி (crisis of the political system), பொருளாதார நிலைமையில் அதிருப்திமற்றும் ஸ்திரமற்ற தன்மை ஆகியவைகளாகும். இப்போதும்கூட எதேச்சதிகாரம் தலைதூக்குவதற்கான இக்காரணிகள் அனைத்தும் நன்கு கனிந்திருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகள், இந்துத்துவா மதவெறி சக்திகள் தலை தூக்கி இருப்பது, அரசியல் கட்சிகளின் தரம் தாழ்ந்திருப்பது,
அரசு அமைப்புகள் அனைத்துமே அரிக்கப்பட்டுக் கிடப்பது - இவை அனைத்தும் சேர்ந்து எதேச்சதிகாரம் சூல்கொண்டிருப்பதை முன்னறிவிக்கின்றன. 1978 ஏப்ரலில் ஜலந்தரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10ஆவது அகில இந்திய மாநாட்டில் எதேச்சதிகாரம் குறித்து கட்சி எச்சரித் திருப்பதை நினைவுகூர்க. “பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசி யலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தொடரும் வரை எதேச்சதிகாரத்தின் ஆபத்து இருக்கும்; ஓர் அரசியல் சேர்மானமோ அல்லது வேறொன்றோ தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சர்வாதிகாரத்தை நிறுவிட முயற்சிகளை மேற்கொள்ளும்,’’ என்று கட்சி எச்சரித்திருந்தது.நவீன தாராளமயம்,
அரசாங்கம் மேற் கொண்டுவந்த பல்வேறு துறைகளை - உற்பத்தி சார்ந்த துறைகளை மட்டு மல்ல, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளைக்கூட சந்தைசக்திகளிடமும் பெரும் வர்த்தகநிறுவனங்களிடமும் ஒப்படைத்து விட்டது. இது முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு ஏற்றத்தாழ்வையும், சமத்துவமின்மையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ள ஊழல் மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமைகளையே அரித்துவிட்டது. நவீன தாராளமயம், சந்தை சக்திகளை மக்களுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் மேலானவைகளாக மாற்றியிருப்பதோடு, ஜனநாயகத்தை மிகவும் சுருக்கி, மிகவும் குறுகிய வரை யறைக்குள் கொண்டுவந்துவிட்டது. பெரும் மூலதனம் அரசியலமைப்புக்குள் ஊடுருவி, அனைத்துப் பெரிய முதலாளித் துவ கட்சிகளையும் தங்களின் பண பலத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஏவ லாட்களாக மாற்றி இருக்கிறது. இது நாடாளுமன்ற அமைப்புமுறையையும் அரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக விளங்கும் பாஜக முழுமையாக ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குக் கட்டுப்பட்டு, அதன் கட்டளைப்படி செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. இது அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளின் கீழும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலையும் அதன் நபர்களை யும் அறிமுகப்படுத்துவதற்கு வழி யேற்படுத்தித் தந்திருக்கிறது. இது, நம் அரசமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோதமான, தன்னுடைய அரைப்பாசிச சித்தாந்தத் தையும் லட்சியங்களையும் முன் னெடுத்துச்செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்துத்துவா அமைப்புகள் அரசாங்கத்தின் அனைத்துவிதமான ஆதரவுடனும் மதச்சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் மீதும் அவர்கள் புனித மெனக் கருதும் மாண்புகளின்மீதும் வன் முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இவ்வாறு, எதேச்சதிகாரம் நம் சமூக மற்றும் கலாச்சார அமைப்புகளுக்குள் நுழைந்து கொண்டிருப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நவீன தாராளமயச் சந்தை அடிப் படைவாதம் மற்றும் இந்துத்துவா ஆகியஇரண்டின் கலவையானது எதேச் சதிகாரம் விரும்பும் உணவாகி இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒரு பக்கத்தில், தொழிற்சங்கங்களை தொழிலாளர்நலச் சட்டங்களில் மோசமான அளவில் திருத்தங்களைக் கொண்டுவந்து பலவீனப்படுத்த நடவடிக்கை களை எடுத்திருக்கிறது. மறுபக்கத்தில், நாடாளுமன்ற மாண்புகளையே காலில்போட்டு மிதித்துத் துவைத்து ஓரங் கட்டிவிட்டு அவசரச் சட்டங்கள் மூலம் சந்தை-சார்பு சட்டங்களை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது. இதற்குச்சரியான உதாரணம், நிலம் கையகப் படுத்தலுக்காக அச்சட்டத்தில் அது கொண்டுவந்துள்ள மாற்றங்களாகும். மக்களவையில் பெரும்பான்மை இருப்பதைப் பயன்படுத்தி, மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் காரியங்களைத்தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அடுக்கடுக் காக அவசரச்சட்டங்கள், மாநிலங் களவையை இழிவாய்க் கருதும் முயற்சி, பிரதமரின் கைகளில் அனைத்துஅதிகாரங்களும் குவிதல் ஆகிய அனைத்தும் ஜனநாயகத்தை அடைத்துவைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைப்புகள் மூலமாக முக்கியமான முடிவுகளையும் கொள்கை களையும் உருவாக்குவதை ஒழித்துக் கட்டுவதற்காக தாராளமயத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியேயாகும்.
இவ்வாறு, நாம் இன்றைய தினம் எதேச்சதிகாரத்திற்கான காரணிகள் சூழ் கொண்டிருக்கும் நிலையைப் பார்க்கிறோம். இந்நிலையில் நமக்குத் தேவைப்படுவது என்னவெனில், நவீன தாராளமயம், இந்துத்துவா வகுப்புவாதம் மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவற்றிற்கு எதிராகப் பலமுனைகளிலும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே யாகும். இவை அனைத்தும் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நிற்கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையிலிருந்து சரியான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது இப்போது நாம் மேற்கொள்ள விருக்கும் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்திடும்.
தமிழில்: ச.வீரமணி


Sunday, June 14, 2015

மாநிலங்களின் உரிமைகள் மீது ஆணவத்துடன் தாக்குதல்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் விதம் உண்மையில் மிகவும் நாணமற்றதும் ஆணவமிக்கதுமாகும். கடந்த சில வாரங்களாக, தில்லி துணைநிலை ஆளுநர், நஜீப் ஜங், தில்லி முதலமைச்சரையும், அமைச்சரவையையும் புறந்தள்ளிவிட்டு ஒன்றன்பின் ஒன்றாக தன்னிச்சையான முறையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடி அரசாங்கம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டளைக்கிணங்கவே துணைநிலை ஆளுநர் இவ்வாறு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தில்லியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்று, மொத்தம் உள்ள70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றிய பின்னர், கெஜ்ரிவால் அரசாங்கம் தில்லியில் அமைந்தது.
.மிகவும் பரிதாபகரமான முறையில் வெறும் மூன்றே இடங்களைப் பெற்ற பாஜக மக்களின் தீர்ப்பை மதித்து நடந்திட வேண்டும். மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்துடன் சுமுகமான முறையிலும் சமத்துவமான முறையிலும் உறவுகளை உத்தரவாதப்படுத்திட வேண்டும். தில்லி நாட்டின் தலைநகர் என்கிற உண்மையின் பின்னணியில் இது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், நடப்பது என்ன? தில்லி அரசாங்கம் மற்றும் தில்லி சட்டமன்றப் பேரவையின் உரிமைகள் மீதும் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் குலைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் மத்திய அரசாங்கத்தால் மிகவும் கேவலமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப் பட்டிருக்கிறது. துணை நிலை ஆளுநர், முதலமைச்சரையே கலந்தாலோசிக்காமல், தலைமைச் செயலர் பத்து நாட்கள் விடுப்பில்போனபோது பொறுப்பு தலைமைச் செயலரை நியமித்தார்.
பின்னர், அதனைத் தொடர்ந்து முதுநிலை (சீனியர்) அதிகாரிகள் நியமனங்களையும் மேற்கொண்டார். முதலமைச் சரும் அமைச்சரவையும் வெளியிடுகிற நியமனங்களையெல்லாம் ரத்து செய்கிறார். துணைநிலை ஆளுநர் கடைசியாக செய்த நிகழ்வு, லஞ்ச ஒழிப்பு பீரோவின் முதன்மை அதிகாரியை நியமனம் செய்ததாகும். அதேபோன்று சட்ட அமைச்சர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டின்மீது அவரைக் கைது செய்தது தொடர்பாகவும் முதலமைச்சரைக் கலந்தாலோசிக்கவில்லை. தில்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதும், அதற்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடையாது என்பதும் உண்மைதான். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 239-ஏஏ பிரிவின்கீழ் மத்தியஅரசுக்கு பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் ஆகியவை தொடர்பாக மட்டுமே அதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. மற்ற துறைகள் அனைத்துமே மாநிலப் பட்டியலில்தான் வருகின்றன. எனவே அவை அனைத்தும் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு உட்பட்டவை களாகும்.
மேலும் அதே பிரிவானது, அமைச்சரவை துணைநிலை ஆளுநருக்கு உதவிட வேண்டும் மற்றும் அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறுகிறது. துணைநிலை ஆளுநர் முதலமைச்சரின் அறிவுரையின் படிதான் செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் கட்டளைகளுக்குப் பொருந்தக்கூடிய விதத்திலேயே தில்லி தேசியத் தலைநகர் பிரதேசச் சட்டமும்  கூறுகிறது. ஆயினும், மோடி அரசாங்கமானது, துணைநிலை ஆளுநரின் மூலமாக, தலைமைச் செயல ராக யாரை நியமனம் செய்வது என்பது தொடர்பாக முதலமைச்சருக்கு உள்ள உரிமையைப் பறித்துள்ளது. தன்னுடைய சட்டவிரோத நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக, உள்துறை அமைச்சகம் மே 21 அன்று ஓர் அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ‘பணிகள்’ (`services’) மத்திய அரசாங்கத்தின் வரையறைக்குள் வருமாம். இதன் பொருள், தில்லி அரசாங்கத்தின் ஊழியர்கள் அனைவருமே மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள்தான் வருவார்களாம்.
இவ்வாறு மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிற அறிவிக்கைக்கு அரசமைப்புச்சட்ட அடிப்படையும் கிடையாது, அது எவ்விதச் சட்டத்தின் கீழும் வராதுஎன்று அரசமைப்புச்சட்ட வழக்கறிஞர்கள் பலர்மத்திய அரசின் இந்நடவடிக்கையைக் கண்டித்திருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டம் தொடர்பான புகழ்பெற்ற வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் இந்த அறிவிக்கை, “அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது, சட்டத்திற்கு விரோதமானது மற்றும் செல்லத்தக்கதல்ல,’’ என்று கூறியிருக்கிறார். கெஜ்ரிவால் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அரசியல் கோட்பாடுகள் குறித்து ஒருவர் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ள லாம். ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் கட்டுக்கோப்பிற்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு மாநில அரசாங்கத்திற்கு உள்ள உரிமைகள் பற்றி எவருக்கும் எவ்வித ஐயப்பாடும் இருக்கக்கூடாது.
நரேந்திர மோடி அரசாங்கம் “கூட்டுறவு கூட்டாட்சித்தத்துவ’’ (“cooperative federalism”) சகாப்தத்தை முன்னறிவித்திருக்கி றோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக் கிறது. தில்லியில் அது நடந்துகொள்ளும் விதம்இதனை கொடூரமான கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசாங் கத்திடமும், நிர்வாகம் பிரதமரின் கைகளிலும் குவிந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய - மாநில உறவுகளும் இவர்களது எதேச்சதிகார நடவடிக்கைகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. திட்டக் கமிஷனும் அதன் கீழ் பல்வேறு மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்துடன் சிறப்பு செலவுத்தொகைகள் பெற்றுவந்த ஏற்பாடுகளும் ஒழித்துக் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ஒழிக்கப்பட்டதால் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரதமருக்கோ அந்த ஏழு மாநில முதல்வர்களை யும் சந்திப்பதற்காக தேதி ஒதுக்குவதற்கு நேரமே இல்லை.தில்லிப் பிரச்சனையை ஏதோ துணைநிலைஆளுநருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான சில்லரை சச்சரவு என்று பார்க்கக்கூடாது. மாநிலங்கள் குறித்து மத்திய அரசின் எதேச்சதிகார அணுகுமுறையையே இது பிரதிபலிக்கிறது. தில்லி மாநில அரசின் உரிமைகள் மீதான தாக்குதல்களும், கூட்டாட் சித் தத்துவத்தின் மீதான தாக்குதல்களும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய வைகளாகும். அரசமைப்புச்சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் துணைநிலைஆளுநர் நீக்கப்பட வேண்டும். நரேந்திர மோடியும், பாஜக அரசாங்கமும் நம் நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறை மற்றும் அரசமைப்புச் சட்டக் கட்டுக்கோப்பின் மீது தாக்குதல்கள் தொடுத்திருப்பது அனுமதிக்கப்பட முடியாத வைகளாகும்.
 தமிழில் : ச.வீரமணி



Saturday, June 13, 2015

ஆர்எஸ்எஸ் - அம்பேத்கரின் எதிரி



சென்னை ஐஐடி-இல் செயல்பட்டுவந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையும் பின்னர் அத்தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள விதமும் மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் சகிப்புத்தன்மையின்மையையும் கபடவேடத்தையும் நன்கு அம்பலப்படுத்திவிட்டன. மதிப்புமிக்க பி.ஆர். அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாள் ஆண்டைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.


இதனைச் செய்வதற்காக இக்கூட்டம் டாக்டர் அம்பேத்கர் இந்துத்துவாவின் ஆதரவாளர் என்றும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் விசுவாசி என்றும் காட்டக்கூடிய விதத்தில் வரலாற்றையே திரித்துக் கூறிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுதும் பிராமணியத்தை உயர்த்திப் பிடிக்கும் நால்வர்ண சாதிய அமைப்புமுறைக்கு எதிராகப் போராடியவர். சமூக ஒடுக்குமுறைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவது மனுஸ்மிருதி என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். 1936ஆம் ஆண்டில் வெளியான சாதியை ஒழித்துக்கட்டுவோம் என்கிற அவரது நூல், சாதிய அமைப்புமுறையையும், பிராமணிய மேலாதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது. இறுதியில் அவர், இந்துமதத்திற்குள்ளேயே இருந்து கொண்டு சாதிய அமைப்புமுறைக்கு எதிராகப் போராடுவது சாத்தியமில்லை என்று தீர்மானித்து,
இந்து மதத்திலிருந்தே அவரும் அவரைப் பின்பற்றுவோரும் விலகி புத்தமதத்தைத் தழுவினார்கள்.ஆனால் இப்போது ஆர்எஸ்எஸ் அவரது தத்துவார்த்த மற்றும் சமூகப் போராட்டங்களைத் திரித்துக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் ஓர் உண்மையான இந்துவாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துயிசத்தை சீர்திருத்தம் செய்து, தீண்டாமையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றுதான் விரும்பினாராம். அவர் புத்திஸ்ட்டாக மாறியதுகூட இந்து தர்மத்தைப் பின்பற்றும் மற்றொரு வழியாம். மேலும், ஆர்எஸ்எஸ், “அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டுகளின் எதிரியாக இருந்தார்’’ என்றும், “கம்யூனிசத்தை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காது எதிர்த்து வந்தார்,’’ என்றும் திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இங்கேயும்கூட, ஆர்எஸ்எஸ் அம்பேத்கரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களில் ஒருசிலவற்றைத் தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கரின் எழுத்துக்களை ஒருங்கிணைந்து படிக்கும் எவரும், மார்க்சிஸ்ட் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத அதே சமயத்தில், காரல் மார்க்சின் சிந்தனைகளில் சிலவற்றை அவர் ஒத்துக்கொண்டார் என்பதை அறிவார்கள். அம்பேத்கர் கருத்தோட்டமும் கண்ணோட்டமும் அவர் தாராள சமூகக் கருத்துக்களுடனான ஒரு சமூக ஜனநாயகவாதி என்பதை நன்கு காட்டும். இந்துத்துவாவை டாக்டர் அம்பேத்கர் வெறுக்கத்தக்க ஒன்றாகவே பார்த்தார். அவர் இஸ்லாமிய பழமைவாதத்தை வெறுத்த அதே அளவுக்கு இந்து ராஷ்ட்டிரம் என்கிற சித்தாந்தத்தையும் எதிர்த்தார். அவர் கூறியிருப்பதாவது: “இந்து ராஜ்ஜியம் என்பது உண்மையாகும்பட்சத்தில், சந்தேகமே இல்லை,
நாட்டிற்கு அது மிகப்பெரிய கேடாகும். ஓர் இந்து என்ன சொல்கிறார் என்பது அல்ல பிரச்சனை, இந்துயிசம் என்பது சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் கேடு பயக்கக்கூடியதாகும். அதனால் ஜனநாயகத்துடன் ஒத்திசைந்து வாழ முடியாது. என்னவிலைகொடுத்தேனும் இந்து ராஜ்ஜியம் தடுக்கப்பட வேண்டும்.’’மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சென்னை ஐஐடி-இல் செயல்பட்டுவந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மொட்டைக் கடிதம் ஒன்றைத் தாங்கள் பெற்றிருப்பதாகக்கூறி அதன் நகலை ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பி, அதுதொடர்பாக என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள் என்று கேட்டதைத் தொடர்ந்து, ஐஐடி அதிகாரிகள் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை விதித்தார்கள்.
மொட்டைக்கடிதத்தின் சாராம்சம் என்னவெனில், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம், மோடி அரசாங்கம் குறித்தும் அதன் பொருளாதார மற்றும் காவிமயக் கொள்கைகள் குறித்தும் விமர்சித்திருந்ததேயாகும். இந்தத் தடைக்கு எதிராக நாடு முழுதும் மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் விரிவான அளவில் கிளர்ந்தெழுந்தனர். ஆர்எஸ்எஸ் சார்பான வலதுசாரி அமைப்புகள் உட்பட பல மாணவர் அமைப்புகள் செயல்படக்கூடிய அதே சமயத்தில் இதற்கு மட்டும் தடை ஏன் என்பதற்கு ஐஐடி நிர்வாகத்தால் விளக்கம் அளிக்க முடியவில்லை. இறுதியாக, ஐஐடி நிர்வாகம் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு அங்கீகாரத்தை மீண்டும் வழங்கியது.
ஆர்எஸ்எஸ்-சும் அதன் இந்துத்துவா சக்திகளும் தங்கள் காவிமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உயர்கல்வி அமைப்புகளைக் குறிவைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னதாக, தில்லி ஐஐடி நிர்வாகம் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பரிமாற வேண்டும் என்று தீர்மானித்தது. பல்கலைக்கழக அளவில் உள்ள பாடத்திட்டங்களில் புராதன இந்தியாவில் விஞ்ஞானம் என்னும் தலைப்பின் கீழ் வேத கால விஞ்ஞானத்தை சொல்லிக் கொடுக்கப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக் கின்றன. இந்து சாஸ்திரங்கள் வானளாவப் புகழப்படுகின்றன. குருமார்கள் ஆட்சி மற்றும் படுபிற்போக்கு நால்வர்ண சாதிய அமைப்புமுறை, இந்துத்துவா சித்தாந்தத்தின் ஒரு பகுதி என்று உயர்த்திப்பிடிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், அம்பேத்கரின் சமூகநீதிப் பார்வையை சூழ்ச்சியுடன் அழித்துவிட்டு அவரது கொள்கைகளும் தங்களது கொள்கைகளே என்று பாசாங்குடன் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களது இத்தகு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட முடியும் என்பதற்கு சென்னை ஐஐடி-இல் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தகர்த்தெறிந்து சிறிய அளவிலானவெற்றியை ஈட்டியிருப்பது, குறிப்பாய்த் தெரிவிக்கிறது.
தமிழில்: ச. வீரமணி


Friday, June 5, 2015

இஸ்ரேலுக்காக பாலஸ்தீனத்தை கைவிடும் மத்திய அரசு



பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய இருப்பதாகவும், இந்தியாவும் இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய தேதியில் இது நடைபெறும் என்றும் அயல்துறை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலுக்கு ஓர் இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை. இத்தகைய பயணத்தின் முக்கியத்துவம் என்னவெனில், இருநாடுகளுக்கும் இடையே இதுநாள்வரை இருந்து வந்த ராணுவ உறவுகளுக்கு அதிகாரப்பூர்வ முத்திரை அளிப்பதேயாகும்.
சில விமர்சகர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போன்று, இந்திய - இஸ்ரேல் உறவுகள் “மிகவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.’’இஸ்ரேல் மற்றும் யூத தேசியஇன இயக்கத்துக்கும் பாஜக-வின் தத்துவார்த்தப் பின்புலத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமையை அறிந்தவர்கள், இஸ்ரேலுக்கு நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாகப் பயணம் செய்ய இருப்பது குறித்து ஆச்சரியப்பட மாட்டார்கள். முந்தைய தேஜகூட்டணி அரசாங்கத்தின்போதும், அன்றைய துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி 2000ம் ஆண்டு இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் ஏராளமான எண்ணிக்கையில் கையெழுத்தாயின.
இந்தியா 1992ல் நரசிம்மராவ் அரசாங்கம் இருந்தபோதே இஸ்ரேலுடன் முழுமையான அளவில் தூதரக உறவுகளை நிறுவிவிட்டது. நரேந்திரமோடி அரசாங்கம் அமைந்தவுடனேயே இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகள் மேற்கொள்ளப்படும் என்று பறைசாற்றப்பட்டது. இஸ்ரேல் ராணுவ அமைச்சர் மோஷே யாவ்லான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு வந்தார். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக வருவதென்பது இதுவே முதல் தடவை. அவர் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, “இரு நாடுகளும் திரைமறைவுக்குப்பின்னால் பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களில் ஒத்துழைப்பை நல்கிட வழிவகைகளைக் கண்டறிந்திருக்கின்றன,’’ என்று கூறி, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் வெளிச்சத்திற்கு வராத வகையில் விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
இந்தியாவிற்கு அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை விநியோகம் செய்யும் நாடுகளில் இஸ்ரேல் தற்சமயம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இஸ்ரேலில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகூ தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வலதுசாரி மற்றும் யூதவெறிக் கட்சிகள் இவரது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாலஸ்தீனத் தலைவர்களுடன் ஓர் அரசியல் தீர்வுக்கு எவ்விதமான சாத்தியக்கூறு இருந்தாலும் அதனைச் செல்லாததாக்கக்கூடிய விதத்தில் நேதன்யாகூ அரசாங்கம் அரக்கத்தனமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இஸ்ரேல் துணை அயல்துறை அமைச்சராக இருக்கும் ஜிப்பி ஹோடோவெலி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் மேற்கு கரைப் பகுதி இஸ்ரேலுக்குச் சொந்தமானவை என்றும் ஏனெனில் அவை கடவுளால் கொடுக்கப்பட்டவை என்றும் பகர்ந்திருக்கிறார்.
அமைச்சரவையில் `விரிவான இஸ்ரேல்’ பகுதியைச் சார்ந்த வழக்குரைஞர்கள் மிகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் மேற்கு கரைப் பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதிலேயே ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் எடுத்துக்கொள்ளப்பட, ஒரு மார்க்கமாக, மேற்கு கரைப் பகுதியில் யூதர்கள் குடியேற்றத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இஸ்ரேல் யூதர்களின் நாடு என்று பிரகடனம் செய்வதற்கான ஒரு சட்டமுன்வடிவு முந்தைய நாடாளுமன்றத்திலிருந்து நிலுவையில் இருந்து வருகிறது. இத்தகைய வெறிபிடித்த பிற்போக்கான இஸ்ரேல் அரசாங்கத்திற்கு ஆதரவினை விரிவுபடுத்திக் கொள்வதில் மோடி அரசாங்கத்திற்கோ, பாஜக-விற்கோ எவ்விதமான மன உளைவும் இருக்கப் போவதில்லை.
இந்தியாவின் நிலைப்பாடு இதுநாள்வரை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்தது. அத்தகைய நிலைப்பாட்டினைக் குழிதோண்டிப் புதைத்திட இந்த அரசு இப்போது வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கிவிட்டது.எதிர்பார்த்ததைப்போலவே, கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியின் இஸ்ரேல் பயணத்தை வரவேற்றுத் தலையங்கங்கள் தீட்டி இருக்கின்றன, உண்மையான அரசியல் நடவடிக்கை என்று போற்றிப் புகழ்ந்திருக்கின்றன. இந்திய - இஸ்ரேல் உறவுகள் புதிய பரிணாமம் எடுத்திருப்பது இந்தியாவின் ஒட்டுமொத்த அயல்துறைக் கொள்கையையும் அமெரிக்காவின் பூகோள-அரசியல் கேந்திர நடவடிக்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போகச் செய்திடும் சூழ்ச்சியேயாகும். இந்த அடிப்படையில்தான் மோடியின் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியப் பயணங்களும் அமைந்திருந்தன. இவ்விரு நாடுகளும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான முறையில் கூட்டணிகள் வைத்திருக்கும் நாடுகளாகும். இவ்விரு நாடுகளுடனும்தான் மோடி அரசாங்கம் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக்கிறது.அமெரிக்காவின் போர்த்தந்திர நிலைப்பாட்டின்படி, இந்தியா கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான நாடு இஸ்ரேல் ஆகும். அமெரிக்காவின் தலைமையின் கீழ் அத்தகையதொரு போர்த்தந்திரக் கூட்டணியை உருவாக்குவதற்கான மற்றொரு நடவடிக்கைதான் தற்போதைய மோடியின் இஸ்ரேல் பயணம். இந்தப் பயணம், இதுநாள்வரை இந்தியா, சுதந்திர பாலஸ்தீனத்திற்கு எவ்விதமான நெகிழ்வுத்தன்மையுமின்றி அளித்துவந்த ஆதரவு கைவிடப்பட இருப்பதற்கான அறிகுறியுமாகும்.
 ஜூன் 3, 2015
தமிழில்: ச.வீரமணி



Wednesday, June 3, 2015

நவீன தீண்டாமை



-சீத்தாராம் யெச்சூரி

`மொட்டைக் கடிதங்கள், பொய்ப் பெயர்களில் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது’
சென்னை ஐஐடி-யில் இயங்கி வந்த மாணவர்களின் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டம் தடை செய்யப்பட்டிருப்பது, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிபிடித்த- சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளின் ஒரு பகுதியேயாகும்.மேற்படி வாசிப்பு வட்டத்திற்கு எதிராக மொட்டைக் கடிதம் ஒன்றைப் பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டளையின் அடிப்படையில் இந்தத் தடை மேற்கொள்ளப்பட்டிருக் கிறது.
வாசிப்பு வட்டத்தில், `பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களைக் கூறினார்கள்’ என்றும், அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்றும் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாகச் வெளியிட்டிருக்கின்றன. மத்திய கண்காணிப்பு ஆணையம் “மொட்டைக் கடிதங்கள், பொய்ப் பெயர்களில் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது,’’ என்று அறிவுரைகள் வழங்கியுள்ள போதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் “அறிவார்ந்த முறையில் நடைபெறும் சிந்தனைகளை’’ மழுங்கடிக்கும் விதத்தில், நாட்டில் பல்வேறு மதத்தினர் வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களுக்கிடையே இருந்து வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை இந்துமதப் புராண, இதிகாசங்களுக்கேற்ப மாற்றியமைக்க முயலும் விதத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தடைகள் அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற உரிமைகளின் ஆணிவேரையே பிடுங்கி எறியும் இழிசெயல்களாகும்.
நாட்டை நவீனத்துவத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமத்துவம் அளிப்பது என்பதும் ஒரு பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஆண்டாண்டு காலமாக முழக்கங்களை வாயளவில் முழங்கி வந்த போதிலும், இந்தக் கேவலமான அமைப்புமுறை இன்னமும் நம்மைப் பீடித்திருப்பது தொடர்கிறது. தலித் - பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடுகள் வழங்கியிருக்கின்ற போதிலும், ஒட்டுமொத்தத்தில் அவர்கள் இன்னமும் மிகவும் இருளடைந்த நிலையிலிருப்பது தொடர்கிறது. பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் சிறார்களில் தலித்-பழங்குடியினர் சதவீதம் இன்றளவும் அதிக அளவில் இருக்கிறது. அதேபோன்று உயர்கல்வி நிறுவனங்களிலும் அரசுப் பணிகளிலும் இவர்களது பிரதிநிதித்துவம் என்பது இன்றளவும் மிக மிகக் குறைவான நிலையிலேயே தொடர்கின்றன.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியாகி இருக்கும் சில புள்ளிவிவரங்கள் உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியவைகளாகும். அதாவது, ஒவ்வொரு வாரமும் சராசரியாக 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்; 6 பேர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்லப்படுகிறார்கள்; 21 தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நாட்டிலுள்ள விவசாயத் தொழிலாளர்களில், நகர்ப்புறங்களில் வாழும் ஆதரவற்ற மக்களில், மலம் அள்ளும் இழிதொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் தலித் - பழங்குடியினர்களே யாவார்கள்.
இத்தகைய பிரச்சனைகளை எழுப்பி, சாதிய வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்க முயன்ற ஒரு மாணவர் குழுவினரைத் தடை செய்ய முடியுமா? முடியும் என்று ஐஐடி நிர்வாகம் கூறுகிறது. இந்து `தர்மத்தின்கீழ்’ இந்து தேசத்தை மேன்மைப்படுத்திட வேண்டுமாயின், ஏணிப்படிகள் போன்று இருக்கும் சாதியக் கட்டமைப்பைக் கட்டிக்காக்க வேண்டியது அவசியம் என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளையாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருவாகக் கருதப்படும் கோல்வால்கர், “சிந்தனைக்கொத்து’’ என்னும் தன்னுடைய நூலில், “பிராமணன் தலையிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன் மற்றும் சூத்திரன் கால்களி லிருந்து பிறந்தவன். இதன்பொருள், மக்கள் என்போர் இவ்வாறு நான்கு அடுக்குகளாக ஆக்கப்பட் டிருக்கிறார்கள் என்பதே’’ என்கிறார்.
நம் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நம் நாட்டின் பொருளாதார சமத்துவமின்மையை மிகப்பெரிய அளவில் விரிவடைய வைத்திருக்கின்றன. நம் நாட்டின் மொத்தவளத்தில் அதிகபட்சம் வைத்திருக்கும் ஒரு சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டில் 36.8 சதவீதமாக இருந்தது, 2014ல் அது 49 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கையின்படி, 2015ம் ஆண்டில் உலகில் பசி - பஞ்சம் - பட்டினியால் வாடுவோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா கீழ்த்தரமான இடத்தைப் பிடித்திருக்கிறது.
அதாவது நம் நாட்டில் பசி - பஞ்சம் - பட்டினியால் வாடுவோர் 19 கோடியே 40 லட்சம் பேர்களாவர். நம் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைத்து வந்த உணவின் அளவு சுருங்கி விட்டதால், கிடைக்கும் உணவைப் பங்கு போட்டுக் கொள்ளும் சண்டை சாதிய மோதலுக்கும் பகைமைக்கும் இட்டுச் செல்கிறது. சமூகத்தில் ஒதுக்கிவைத்தல் என்னும் இழி செயல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு திடுக்கிடும் சில உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
“சமூகத்தில் ஒருசில பிரிவினரை ஒதுக்கிவைக்கும் போக்கு என்பது கடந்தகால மிச்ச சொச்சம் மட்டும் அல்ல; கல்வியறிவற்றவர்களிடம் மட்டும் இத்தகைய புத்தி நிலைகொண்டிருக்கவில்லை; மாறாக, சாதிக்காரர்களுக்கு சலுகை அளிப்பது என்பதும், தலித் மற்றும்முஸ்லிம்களை ஒதுக்கி வைத்தல் என்பதும் இந்தியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் வகிக்கக் கூடிய நிலையில் உள்ள தனியார் நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்படுவதாவே தெரிகிறது’’ என்று அந்த ஆய்வு கூறுகிறது. இவ்வாறு, காலங்காலமாக சமூகத்தில் ஒருசில பிரிவினரை ஒதுக்கி வைத்தல், சாதிய ஒடுக்கு முறை, வகுப்புவாத அடிப்படையில் பாரபட்சம் காட்டுதல், ஆண் - பெண் பாலினப் பாகுபாடுகள் முதலானவை இருந்து வருகின்றன.
இவைதான், நவீன இந்தியாவில் மிகவும் நளினமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.`பிரதமருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புகிறார்கள்’ என்று கூறுவோரால் இந்த உண்மைகளை மறுக்க முடியுமா? கடந்த சில ஆண்டுகளில், சாதிகளுக்கிடையேயும் மற்றும் சாதிகளுக்குள்ளேயும் அரிதாரம் பூசும் வேலைகள் சில நடை பெற்றிருந்தபோதிலும், சமூக ஒடுக்குமுறையின் அடிப்படைக் கட்டமைப்பு இன்னமும் அப்படியே தான் இருக்கிறது என்கிற எதார்த்தத்தை நாம் உணர வேண்டிய தருணம் இது.
மகாத்மா காந்தி, “கடவுளின் மக்கள்’’ என்றபொருள்படும் ஹரிஜன் என்ற சொல்லை உருவாக்கி, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களின் மனப்பான்மையில் மாற்றம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சாதி ஒழிப்பு இயக்கங்களை வலுவாக நடத்தியவர்களுள் ஜோதிபா பூலே ஒருவராவார். அவர் நடத்திய சத்யசோதாக் இயக்கம் இன்றளவும் செல்வாக்குடன் விளங்குகிறது. சாதியச் சுரண்டலுக்கு எதிராக ஓய்வு ஒழிச்சலின்றி போராடிய பாபா சாகேப் அம்பேத்கர், கடைசிக் காலங்களில் தன்னைப் பின்பற்றியோரை, இந்துசமூகத்தின் சாதிய அநீதிகளிலிருந்து தப்பிப்பதற்காக, புத்தமதத்தைத் தழுவுமாறு கேட்டுக் கொண் டார்.
தந்தை பெரியாரால் தலைமை தாங்கப்பட்ட வலுவான திராவிட இயக்கம் சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வலுவான உணர்வுகளை உருவாக்கியது. ஆயினும், இவ்வாறு அளப்பரிய தலைவர்களும் அவர்களுடைய வலுவான இயக்கங்களும் செயல் பட்டிருந்த போதிலும், சாதிய ஒடுக்குமுறை இன்னமும் நம்மைப் பீடித்திருப்பது தொடர்கிறது. மனதை மாற்றிக் கொள்ளுங்கள், பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று வெறுமனே வேண்டுகோள் விடுப்பதோ அல்லது இத்தகைய சமூக ஒடுக்குமுறைக்கான மூல வேர்களைச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதோ மட்டும் இத்தகைய அருவருப்பான அமைப்பினை ஒழித்துக்கட்டப் போதுமானதல்ல.
இவ்வாறு ஒடுக்கப்பட்டு அடித்தட்டில் இருப்போரைப் புரட்சிகரமான முறையில் பொருளாதார ரீதியாக மேம்படுத்தாதவரை இக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட முடியாது. ஆனால் பாஜக அரசு, இக்கொடுமைகள் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதற்காகப் பணியாற்றுகிறது.
வரைவு அரசமைப்புச் சட்டத்தை ஏற்பளிப்புக்காக சமர்ப்பிக்கையில் டாக்டர் அம்பேத்கர் கூறியவார்த்தைகளை மீண்டும் ஒருமுறை நாம் நினைவு கூர்வது அவசியம்:
“1950 ஜனவரி 26 அன்று முரண்பாடுகளின் மத்தியில் ஒரு வாழ்க்கையை வாழ்வதற்காகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற இருக்கிறோம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையைப் பெற இருக்கிறோம். அரசியலில், ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு மற்றும் ஒரு வாக்கிற்கு - ஒரு மதிப்பு என்பதைக் கொள்கைரீதியாக அங்கீகரித்திருப்போம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில், நம் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக, ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்னும் கொள்கையை மறுக்கும் நிலையைத் தொடரப் போகிறோம். இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரப் போகிறோம்?
நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுக்கும் போக்கை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரப் போகிறோம்? இவ்வாறு நாம் வெகுகாலத்திற்கு மறுப்பது தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையே இடருக்குள்ளாக்கிடும்.’’
இத்தகைய பிரச்சனைகளை விவாதித்திடும் மாணவர் வாசிப்பு வட்டங்களைத் தடைசெய்வ தென்பது, எதிர்காலத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா மிகப்பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாக இருக்கிறது என்பதற்கு  நிச்சயமான அடையாளமாகும்.

நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு
தமிழில்: ச.வீரமணி


Tuesday, June 2, 2015

வெற்றுப் பிரச்சாரம் வயிற்றை நிரப்பாது!

பாஜக தலைமையிலான தேஜகூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி அதன் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் தொடங்கி இருக் கின்றன. பிரதமர் மோடி ஊடகங்களின் படாடோபமான பிரச்சாரங்களுக்கிடையே முதலாமாண்டு கொண் டாட்டத்தை மதுராவில் தொடக்கி வைத்திருக்கிறார். நாடு முழுதும் இதனையொட்டி 200 பொதுக் கூட்டங்கள் நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் தலா குறைந்தது மூன்று பொதுக் கூட்டங்களையும், மூன்று பத்திரிகை யாளர் மாநாடுகளையும் நடத்திட வேண்டும் என்றும், அதாவது நாடு முழுதும் குறைந்தபட்சம் 200 பொதுக்கூட்டங்களிலும், 200 பத்திரிகையாளர் மாநாடுகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும் கட்டளை யிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்கள் பங்கேற்கும் 200 கூட்டங்களுடன் மேலும் 200 கூட்டங்கள் கூடுதலாக இருந்திடும். பிரதமர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அயல்நாடுகளில் பயணம் செய்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் தன்னுடைய பகட்டு ஆரவாரத்தன்மையை நன்கு காட்டிவிட்டு வந்திருக்கிறார். இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜக அதேபோன்று நாட்டு மக்கள் மத்தியில் தங்கள் வாய்வீச்சுக் கலையைக் காட்ட விருக்கின்றன.
ஊடகங்களுக்கு விளம்பரம் வாரியிறைப்பு
பிரதமர் தன் பிரச்சாரத்தை மதுராவிலிருந்து தொடங்கியிருப்பது கள்ளங்கபடமற்ற ஒன்று அல்ல. நாடு முழுதும் மதக்கலவரங்களை உருவாக்க வேண்டும் என்கிற மிகவும் மோசமான இழிநோக்கத்துடன்தான் அங்கிருந்து இது தொடங்கப்படுகிறது. ராமன் பிறந்த இடம் (அயோத்தி), கிருஷ்ணன் பிறந்த இடம் (மதுரா) மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவை `விடுவிக்கப்படும்’ என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் பேசி வருவதை நினைவுகூர்க. அதற்குப் பொருத்தமான வகையில் பிரதமர் மோடிக்கு மதுராவின் உள்ளூர் பாஜக எம்பியான ஹேம மாலினியால் கிருஷ்ணன் சிலை பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பிரச்சாரம், பல நூறு ஆண்டு காலமாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதற்கும் அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் மதவெறி விஷப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வைப் பலிகொள்வதற்கும், நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினர் மத்தியில் ஓர் ஆழமான பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்குவதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது.
பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினராக இரு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின், தன் சொந்த மாநிலமான குஜராத்தில் வென்ற தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, உ.பி. யில் வென்ற பனாரஸ் தொகுதியை மட்டும் இருத்தி வைத்துக்கொண்டிருக்கிறார். இப்போது ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தை மதுராவில் இருந்து தொடங்குகிறார். உண்மையில் இவை அனைத்தும் கெட்ட சமிக்ஞைகளேயாகும்.தனக்கு விசுவாசமாக இருக்கும் அனைத்துவகை ஊடகங்களுக்கும் பல வண்ண விளம்பரங்களை அரசாங்கம் வாரி இறைத்திருப்பது அதிகமாகி இருக் கிறது. எனவே, ஊடகங்கள் பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கம் தன் முதலாம் ஆண்டில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அதிக வித்தியாசத்துடன் தேறிஇருக்கிறது என்று அளந்திருப்பதில் ஆச்சரியப்படு வதற்கு எதுவும் இல்லை.
(தி டைம்ஸ் ஆப் இந்தியா) ஒருவர் தேர்விற்கு அமரும்போதுதான் மதிப்பெண்கள் கொடுக்கப்படும். இங்கே, இந்த அரசாங்கம் எந்தவிதமான தேர்வையும் எழுதாமல் இருக்கும் நிலையிலேயே, ஊடகங்கள் இந்த அரசாங்கத்திற்கு மதிப் பெண்களை வாரி வழங்கி இருக்கின்றன. ஊடகங்களின் வாயிலாக ஊட்டி, வளர்க்கப் படுவதன் காரணமாக எழுந்துள்ள `செல்வாக்கி’ன் தாக்கம் எப்படி இருந்தபோதிலும், சொந்தமாகவே ஊடக நிறுவனங்களை வைத்திருக்கும் கார்ப்பரேட்டுகள் இந்த அரசாங்கத்திற்குத் துதிபாடுவதில் போட்டிபோடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
கார்ப்பரேட்டுகள் ஊடகங் களை விலைக்கு வாங்கியிருப்பது அவற்றின் மூலம் தங்கள் செல்வாக்கை செலுத்துவதற்கான முயற்சியேயாகும். கார்ப்பரேட்டுகள் ஊடகங்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்தி, துதிபாடுவது என்பது எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதன் காரணமாக, மக்கள் மத்தியில் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.
முதல் பக்கத்தில் துதி தலையங்கத்தில் விமர்சனம்
இதன்காரணமாகத்தானோ என்னவோ, பத்திரிகைகளின் முதல் பக்கத்தலைப்புச் செய்தியில் அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு விழா குறித்து `ஓகோ’ என்று துதி பாடியிருந்தாலும், அதன் தலையங்கங்களில் இந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பது என்பதும் தொடர்ந்துள்ளது. ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். மேலே கூறியதுபோன்று தி டைம்ஸ் ஆப் இந்தியா இந்த அரசாங்கத்தைத் தூக்கி வைத்துப் பாராட்டியுள்ள அதே சமயத்தில், அதன் தலையங்கப்பகுதியோ, “... தேஜகூட்டணி அரசாங்கத்தின் முதல் ஓராண்டு ஆட்சிக் காலத்தில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது கடினம்தான். ஏற்றுமதிகளும் தொழில்உற்பத்தியும் தேக்க நிலையில் இருக்கின்றன.
2014-ல் சற்றே உயர்ந்திருந்த `சென்செக்ஸ்’ புள்ளிகள் மீண்டும் இறங்குமுகத்தில் வீழத் தொடங்கிவிட்டன. போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒவ்வோராண்டும் ஒரு கோடி பேர் வேலைதேடி வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைந்து கொண்டிருப்பதால் `நல்லகாலம் பிறப்பதற்கான’ நம்பிக்கைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன,’’ என்று எழுதியிருப்பதுடன் இதேபோன்று மேலும் பல கருத்துக்களையும் அளித்துள்ளது.தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, “இந்த அரசாங்கம் எவ்விதத்திட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலோ செயல்படுவதுபோலத் தோன்றவில்லை,’’ என்று கூறுகிறது.
மேலும் அது, “இந்த அரசாங்கம் தன்னிடம் உள்ள தகவல்தொழில்நுட்பங்கள் வழியாக மக்களிடம் நேரடியாகப் பிரச்சாரம் மேற்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் ஒரு கருத்தொற்றுமையை உருவாக்க தன் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறது.
ஆதரித்தவர்களே குறைகூறுகிறார்கள்
தி ஆசியன் ஏஜ் நாளேடு, “... ஆட்சியிலிருப்போர் மக்களுக்கு அளித்துள்ள வானளாவிய வாக்குறுதிகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர் மத்தியிலும் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இவை நிறைவேற்றப்படுவதென்பது மிகவும் ஒளிமங்கிய நிலையிலேயே இருப்பதால், இந்த அரசாங்கத்தை வலுவாக ஆதரித்தவர்களே இப்போது இந்த அரசாங்கம் எந்தத் திசைவழியில் செல்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருப்பதாகக் குறைகூறத் தொடங்கி விட்டனர்,’’ என்று கூறுகிறது. மேலும் அது, “நாடு முழுதும் விவசாயத்துறை கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்த அரசாங்கம் யாரைத் தூக்கிநிறுத்த வேண்டும் என்று விரும்புகிறதோ அந்தக் கார்ப்பரேட் துறையே, அதிலும் குறிப்பாக பெரும் வர்த்தக நிறுவனங்களே, இப்போது இந்த அரசாங்கத்தைக்குறைகூறத் தொடங்கி இருக்கின்றன,’’ என்றும் கூறுகிறது.
தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு கூட, “இந்த அரசாங்கத்தின் கொள்கையைத் தீர்மானிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள்கூட இப்போது இந்த அரசாங்கம் தங்களுக்கு நம்பிக்கை மோசம் செய்துவிட்டதோ என சந்தேகம் கொள்ளத் தொடங்கி, எதிர்ப்பினைக் காட்டும் போக்கு உருவாகி இருக் கிறது. எதிர்க்கட்சிகள் குறித்து மோதல்போக்கைக் கடைப் பிடிப்பதற்குப் பதிலாக அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும். அடுத்த நான்கு ஆண்டு கால நிகழ்ச்சிநிரல் அப்படித்தான் அமைந்திட வேண்டும். வருடாந்திரக் கொண்டாட்டங்கள் குறித்து வாக்காளர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்,’’ என்று எச்சரித்திருக்கிறது. தி பிசினஸ் ஸ்டாண்டர்டு தலையங்கமும் இதேதொனியை எதிரொலித்திருக்கிறது. தன் தலையங்கத்தில் அது இறுதியாக, “இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடந்த ஓராண்டின் செயல்பாடுகளிலிருந்து கற்றுக்கொண்டு, 2016 மே 26 அன்று விளம்பரம் செய்து தான் தங்கள் பெருமையைப் பீற்றிக்கொள்ள வேண் டும் என்கிற அவசியம் இல்லாத அளவிற்கு, சிறந்தமுறையில் செயலாற்ற வேண்டும்,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
நிறைவேறா வாக்குறுதிகள்
தி இந்து நாளேடு, “இந்த அரசாங்கத்தின் முதலாம் ஆண்டின் இறுதியில், இவை கூறிய வாக்குறுதிகளில் பல இன்னமும் முன்மொழிவுகளாகவே நீடிக்கின்றன. பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக எதுவுமே நடக்காததன் காரணமாக, இவையெல்லாம் அடுத்த நான்காண்டுகளில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பே கிடையாது அல்லது வாய்ப்பு அபூர்வம் என்றே தோன்றுகிறது,’’ என்று கூறியிருக்கிறது. அது மேலும், “இந்த அரசாங்கத்தின் அரசியல் வரவு செலவுப் பதிவேட்டில் வரவுப் பக்கத்தைக் காட்டிலும் செலவுப் பக்கமே நீண்டதாக இருக்கிறது,’’ என்று தன் தலையங்கத்தை முடித்திருக்கிறது.
இவ்வாறு நாட்டின் முக்கிய பத்திரிகைகள் தங்கள்தலையங்கங்கள் மூலம் கொஞ்சம் நம்பகத்தன் மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண் டிருக்கின்றன. ஆயினும், `நான்காவது தூண்’ என்று அழைக்கப்படும் ஊடகங்களின் நம்பகத்தன்மை, அரசாங்கத்திடமிருந்து கணிசமான அளவிற்கு விளம்பரங்களைப் பெறக்கூடிய நிலையில், நீடிக்குமா என்பது சந்தேகமே.வெறும் பிரச்சாரங்கள் மூலமாக மட்டும் மக்கள் வயிறு நிரம்பிடாது மற்றும் எப்போதும் நிரப்பிடவும் முடியாது என்பதை பெரும்திரளாக மக்களை அணி திரட்டுவதன் மூலம் பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கத்திற்கு நன்கு உறைக்கும் விதத்தில் சொல்ல வேண்டும்.
இன்றைய எதார்த்த நிலைமைகள் நம் வயிற்றை நிரப்பிடப் போதுமானதல்ல என்பதால், இந்த அரசாங்கம் தன் மக்கள் விரோதக் கொள்கைகளை மாற்றியமைத்திடவும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையே மறுதலிக்கக்கூடிய விதத்தில் மதவெறிப் பிரச்சாரங்களைக் கூர்மைப் படுத்து வதைத் தவிர்த்திடவும் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
(மே 27, 2015)
(தமிழில்: ச.வீரமணி)