Sunday, April 30, 2017

மே தின சபதம் ஏற்போம் - People's Democracy Editorial



மே தினம், தொழிலாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் பாரம்பரிய தினமாக, உலகம் முழுதும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்த அரசியல் கட்சிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய அரசியல் நிலைமைகள் உலக அளவில் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும், அவை தொழிலாளர் வர்க்க இயக்கத்துடனும் இடதுசாரி அரசியலுடனும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும் இது மிகவும் பொருத்தமான தருணமாகும்.
சென்ற ஆண்டு, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பல, வலதுசாரிகளின் பக்கம் சாய்ந்தன. ஐரோப்பாவில் அந்நியர்கள்மீது வெறுப்பை உமிழும் கட்சிகளும் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளும் செல்வாக்குப் பெற்றுவரும் சூழ்நிலையில்தான் அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டில் மேரின் லீ பென் (Marine Le Pen) தலைமையில் தேசிய முன்னணிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதையும், நெதர்லாந்தில் சுதந்திரக் கட்சி (The Freedom Party), ஜெர்மனியில் ஜெர்மனிக்கான மாற்று (The Alternative for Germany) என்பவை முன்னுக்கு வந்திருப்பதும் இத்தகைய போக்குகளைக் குறிப்பாகத் தெரிவிப்பவைகளேயாகும்.
மேலும் இலத்தீன் அமெரிக்காவிலும் இடதுசாரிகளுக்கு எதிராக வலதுசாரி எதிர்த் தாக்குதல் (rightist counter offensive) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரேசிலிலும், அர்ஜெண்டினாவிலும் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததற்குப்பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் தூக்கிப்பிடிக்கும் வலதுசாரிகள் வெனிசுலாவில் உள்ள நிலைமையை பலவீனப்படுத்திட பகீரதப்பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு ஐரோப்பாவில் வலதுசாரிகள் பக்கம் நகர்வு ஏற்பட்டிருப்பதற்கான காரணிகளில் ஒன்று, அங்கே பிரதானமாகவுள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளின் திவாலாகிப் போன அரசியலாகும். பாரம்பரியமாகத் தொழிலாளர்களுடன் நல்ல பிணைப்பை வைத்திருந்த இக்கட்சிகள், ஐரோப்பாவில் கடந்த முப்பது முதல் நாற்பது ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாறியிருப்பதே, இந்த சூழ்நிலைமை எழுவதற்குக் காரணம் ஆகும்.
இந்த கட்சிகள்ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் போது, இவை கடைப்பிடித்திடும் சிக்கன நடவடிக்கைகள், தொழிலாளர் வர்க்கத்தையும், உழைக்கும் மக்களின் இதர பகுதியினரையும் கடுமையாகப் பாதிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இக்கட்சிகளின் அரசுகள் வேலை வாய்ப்புகள் மீதும், சமூக நலத் திட்டங்கள் மீதும் தொடர்ந்து ஏவிவந்த தாக்குதல்கள்தான். ஆதரவு அளித்து வந்த தொழிலாளர் வர்க்கத்தை இத்தகைய சமூக ஜனநாயகக் கட்சிகளிடமிருந்து விலகிச் செல்வதற்கு இட்டுச் சென்றன. பல இடங்களில், நம்பகமிக்க இடதுசாரி மாற்று இல்லாத நிலையில், தொழிலாளர்களின் கோபமும் தற்போதுள்ள அமைப்பிற்கு எதிராகத் தனிமைப்படுதலும் அவர்களை வலதுசாரி தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்திட இட்டுச்சென்றன. டிரம்ப் வெற்றிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்திட்ட வலதுசாரி தேசியக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் இவை ஒரு காரணமாக அமைந்தன.
எனினும், சென்ற ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சிகளின் சமரசக் கொள்கைகளுக்கு எதிராக ஒருசில இடங்களில் தேவைப்படும் மாற்றம் நிகழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.
பிரிட்டனில், பிளேரிசத்தால் (Blairism)(அதாவது டோனி பிளேரின் தலைமையில் இருந்த போது போர் வெறி பிடித்திருந்த) கறைபடிந்திருந்த தொழிலாளர் கட்சி, ஜெர்மி கோர்பின் அதன் தலைவராக வந்தபின் கடந்த கால கறைகளைப் போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அமெரிக்காவில், சென்ற ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக சோசலிஸ்ட்மேடையைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், தொழிலாளர் வர்க்கம், மாணவர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில் கணிசமான அளவில் ஆதரவினைப் பெற்றதைப் பார்த்தோம். இது, ஜனநாயகக் கட்சியின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு எதிரான ஒரு கலகமாகும்.
சமீபத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முடிவடைந்த முதல் சுற்றில், இடதுசாரிகளின் மேடையான லா இன்சௌமைஸ் சார்பில் நின்ற ஜீன் லக் மெலென்சான் 19.62 சதவீத வாக்குகள் பெற்று வலுவான விதத்தில் முன்னேறியிருக்கிறார். சமூக ஜனநாயக சோசலிசக் கட்சியின் வேட்பாளர் மிகவும் குறைந்த அளவில் வெறும் 6.35 சதவீத வாக்குகளே பெற்றிருக்கிறார்.
இந்த அனைத்து நிகழ்வுகளிலுமே, இடதுசாரி மேடையைச் சேர்ந்த தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்க முடிந்திருக்கிறது; மற்றும் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளின் நிலைப்பாடுகளுடன் முறிவினை ஏற்படுத்தக்கூடிய அளவில் கடும் தாக்குதலைத் தொடுக்க முடிந்திருக்கிறது. அவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, அங்கே நிலவும் வெற்றிடத்தைக் காட்டுகிறது. அது ஒரு வலுவான இடது மாற்றால் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும்.
தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் ஆட்சியாளர்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் எதிர்ப்பினை மேற்கொண்டுவரும் அதே சமயத்தில், இத்தகைய எதிர்ப்பினை ஒரு நம்பகமான அரசியல் மாற்றாக மாற்றக்கூடிய அளவிற்கு அரசியல் சக்தி எதுவும் அங்கே இல்லை. சமூக ஜனநாயகக் கட்சிகளிடமும், சோசலிசம் என்று கூறிவிட்டு சமரசம் செய்து கொள்பவர்களிடமும் விலைபோகாமல் கறைபடியாமல் இடதுசாரி மேடைமூலம் உருவாகி இருக்கக்கூடியவர்கள் இதற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். இவர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களையும், நவீன தாராளமய முதலாளித்துவத்தை எதிர்த்து சமர்புரிந்து வரும் இதர இயக்கங்களையும் ஒன்றிணைந்து ஒரு தெள்ளத்தெளிவான இடதுசாரி மேடையை உருவாக்க வேண்டும். இதனால் மட்டும்தான் ஒரு வலுவான வீரியமிக்க அரசியல் மாற்றை அளித்திட முடியும்.
இந்தியாவில், 2016 செப்டம்பர் பொது வேலைநிறுத்தத்திற்குப்பின்னர் கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. தொடர்ந்து பல வேலைநிறுத்த நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுதும் நடந்து கொண்டிருக்கின்றன. மிகப் பெரிய அளவில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் பல நடந்துள்ள போதிலும், குறிப்பாக இவற்றில், 2017 பிப்ரவரி 28 அன்று வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்திய வேலைநிறுத்தம், இந்திய மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கங்களின் சம்மேளனம் (FMRAI) பிப்ரவரி 3 அன்று நடத்திய ஒரு லட்சம் ஊழியர்களின் வேலைநிறுத்தம், மார்ச் 16 அன்று 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தம் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.
தனியார்மயத்திற்கு எதிராக சேலம், துர்காபூர், பத்ராவதி உருக்காலை தொழிலாளர்கள் ஏப்ரல் 11 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். சிஐடியுவின் அறைகூவலுக்கிணங்க 2017 ஜனவரி 20 அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அங்கன்வாடி, ‘ஆஷா’, மதிய உணவு ஊழியர்கள், ‘அனைவருக்கும் கல்விஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
ஹரியானாவில் நடைபெற்ற சாலைப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், மாருதி சுசுகி நிகழ்வில் தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து அவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து மாருதி தொழிற்பிரிவுகளில் நடைபெற்ற அடையாள வேலைநிறுத்தமும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
கர்நாடகாவில் 20 ஆயிரம் அங்கன்வாடி பெண் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டமும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர்கள் அனைவரும் பெங்களூருவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டார்கள். நான்கு நாட்கள் தொடர்ந்து சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசு தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்ததற்கும் மேலாக, அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும், உதவியாளர்களுக்கு 500 ரூபாயும் கூடுதலாக அறிவித்தது.
மேலே குறிப்பிட்ட தொழிலாளர் வர்க்கத்தின் நடவடிக்கைகள், பிரதானமாக தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய விதத்திலும், தங்கள் வாழ்வாதாரங்களையும், தங்கள் வருமானத்தையும் பாதிக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தன. இவைகள் தொழிற்சங்கங்களின் அமைப்புரீதியான போராட்டங்களின் குணத்தைப் பெற்றிருந்தன.
எனினும், நாட்டில் வலதுசாரிகளின் தாக்குதல்களை எதிர்த்திட தொழிலாளர் வர்க்கம் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. தொழிலாளர் வர்க்கம் அவற்றை அரசியல்ரீதியாக எதிர்த்திட வேண்டிய நிலையில் இருக்கிறது. வலதுசாரி அரசியலின் பிரிக்கமுடியாத பகுதி, இந்துத்துவா மதவெறி தாக்குதல்களாகும். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தொழில்மையங்களில் கணிசமான அளவிற்குத் தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாக்குகளை பாஜகவிற்கு அளித்திருப்பதைக் காண முடிகிறது.
பொருளாதாரப் போராட்டங்கள் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் அரசியல் உணர்வை ஏற்படுத்திவிடாதுஎன்கிற மாமேதை லெனினின் பொருள்பொதிந்த வாசகத்தை இங்கே நினைவுகூர்தல் அவசியம். அவ்வாறு நம்பினோமானால், அது பொருளாதாரவாதத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்றே அர்த்தமாகும். இது, தற்போதுள்ள நிலை குறித்து சீர்திருத்த மாயைகளையே ஊட்டி வளர்த்திடும்.
தொழிற்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுடன் தொழிலாளர்களை வீரஞ்செறிந்த போராட்டங்களுக்குத் தயார்படுத்திடும் அதே சமயத்தில், அவர்கள் மத்தியில் இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான கூர்மையான அரசியல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டியது இன்றைய அவசர அவசியத் தேவையாகும். இதனைத் தொழிற்சங்கங்கள் மட்டும் செய்துவிட முடியாது. இதனை, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில், அவர்களுடைய பணியிடங்களில், அவர்களுடைய குடியிருப்புப் பகுதிகளில், அவர்களுடைய குடும்பத்தார் மத்தியில், தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தை, கம்யூனிஸ்ட் கட்சி நடத்திட வேண்டும்.
நாடு முழுதும் பல பகுதிகளில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இந்துத்துவா குண்டர்கள் தங்கள் கருத்துகளுக்கு எதிராகப் பேசுபவர்களை நசுக்கிட முனைகிறார்கள்.
மாமேதை லெனின், தன்னுடைய புகழ்பெற்றஎன்ன செய்ய வேண்டும்என்ற நூலில் தெரிவித்துள்ளபடி, தொழிலாளி வர்க்கம் அனைத்துவிதமான ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கும் எதிராகத் தக்க பதிலடி கொடுக்கக்கூடிய விதத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதனை, சோசலிச உணர்வுடன் ஊட்டி வளர்த்திட வேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்திச்செல்லக்கூடிய வல்லமையை அதற்கு ஏற்படுத்தித்தர வேண்டும்.
இன்றையதினம் இந்தியாவில், இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, தொழிலாளர் வர்க்கம் தலைமைதாங்க வேண்டும் என்கிற உணர்வை அதனிடம் ஊட்டி வளர்த்திட வேண்டும்.
கம்யூனிஸ்ட்டுகள், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்த்திட வேண்டும். அப்போதுதான், நவீன தாராளமய முதலாளித்துவம் மற்றும் வகுப்புவாதம் என்னும் இரண்டையும் எதிர்த்துப் போராடி முறியடிக்கக்கூடிய அளவிற்கு தொழிலாளர் வர்க்கம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.


(தமிழில்: .வீரமணி)