Friday, February 10, 2023

புத்தகங்களும் நானும்

அன்பார்ந்த நண்பர்களே, இன்றைய தினம் என் வாழ்நாளில் நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இதுநாள்வரையிலும் என்னைக் கவர்ந்த புத்தகங்கள், இன்றளவும் என் நினைவில் உள்ள புத்தகங்களில் ஒருசிலவற்றைப் பட்டியலிடுகிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, தமிழ்வாணனின், மணிமொழி நீ என்னை மறந்துவிடு. சங்கர்லால் துப்பறிகிறார். இருண்ட இரவுகள். கருநாகம் முதலியவை என்னைக் கவர்ந்த கதைகளாகும். அப்போது நான் கண்ணன் என்னும் கலைமகள் குழுமத்தின் சார்பில் மாதம் இருமுறை வெளியான சிறுவர் இதழையும், தமிழ்வாணனின் கல்கண்டு இதழையும் தொடர்ந்து வாங்கிப் படித்து வந்தேன். நூலகத்தில் அம்புலிமாமா இதழைப் பார்த்திருக்கிறேன். பின்னர் பதினோராம் வகுப்பு படிக்கும் காலத்தில் பழைய புத்தகக் கடையில் எவரோ ஒருவர், சாண்டில்யனின் யவன ராணி கதையை, குமுதத்தில் வெளிவந்து கொண்டிருந்ததை - ஒரு 89 இதழ்களில் வந்த கதையைத் - தனியே பிரித்து வைத்திருந்து, பின்னர் அவர் என்ன நினைத்தாரோ அல்லது அவருக்கு என்ன சிரமமோ அப்படியே பழைய புத்தகக் கடையில் கொண்டுவந்து எடைக்குப் போட்டிருந்தார். அதைக் கண்ணுற்ற நான் அதை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். ஆனால் யவன ராணி மொத்தம் 114 வாரங்கள் தொடராக வந்ததாகும். பின்னர் என் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து மீண்டும் பழைய புத்தகக் கடைகளில் அவை வந்த குமுதம் இதழ்களைத் தேடி 114 இதழ்களையும் தொகுத்து ஒரு புத்தகமாகப் பைண்டிங் செய்துவிட்டோம். நான் படித்த முதல் சாண்டில்யனின் சரித்திர நாவல் இது. பின்னர் அதனை இரவு – பகல் என்று இரண்டே நாட்களில் படித்து முடித்தேன். பின்னர் அவருடைய மன்னன் மகள், கடல் புறா உட்பட வேறுபல சரித்திர நாவல்களையும் படித்திருக்கிறேன். அடுத்து பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஜெயகாந்தன் கதைகளை என் நண்பன் அறிமுகப்படுத்தினான். முதலில் ‘யாருக்காக அழுதான்’, அடுத்து தேடிப்பிடித்து ‘உன்னைப்போல் ஒருவன்’ படித்தேன். பின்னர் அவர் கதைகள் வந்த ஆனந்த விகடன் இதழ்கள் அனைத்தையும் வாங்கிவிடுவேன். அநேகமாக ஒவ்வொரு ஆண்டிலும் சுதந்தர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் ஆனந்த விகடன் சிறப்பிதழ்கள் வெளியிடும். அவற்றில் ஜெயகாந்தன் முத்திரைக் கதை இடம் பெறும். இதனைத் தொடர்ந்து நூலகத்தில் மறைமலையடிகளார் எழுதிய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை (இரு பாகங்கள்), தொலைவிலுணர்தல், முதலானவற்றைப் படித்திருக்கிறேன். சாகுந்தலம், சாகுந்தலம் ஆராய்ச்சி முதலான நூல்களையும் படித்ததாக நினைவு. அதேபோன்று டாக்டர் மு.வ. அவர்கள் எழுதிய கதைகளையும் படித்திருக்கிறேன். அகல் விளக்கு, நெஞ்சில் ஒரு முள், கயமை, கி.பி.2000 போன்ற கதைகள். இவர் கதைகள் குறித்து என் அண்ணன் கிண்டலாகக் கூறும் விமர்சனம் என்னவென்றால் மு.வ.வின் கதைகளில் வரும் டாக்டர்கள், பொறியாளர்கள் எல்லாரும் அயோக்கியர்களாக இருப்பார்கள். ஓர் ஆசிரியர் அல்லது பேராசிரியர் வருவார். அவர் மட்டும் எவ்விதக் கெட்டப் பழக்கமுமில்லாத ஒழுக்கசீலராக இருப்பார் என்பதாகும். அகிலன் எழுதிய சித்திரப்பாவை, பாவை விளக்கு படித்திருக்கிறேன். பின்னர் வேலைக்கு வந்தபின், திருத்துரைப்பூண்டியில், நூலக உறுப்பினரானேன். அங்கே ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்புகளையும், டால்ஸ்டாய் கதைத் தொகுப்பையும் ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைத் தொகைப்பையும் படித்த ஞாபகம் இருக்கிறது. இவை அனைத்தும் பதின்பருவக் காலத்தில் படித்தவைகளாகும். அப்போதெல்லாம் அரசியலறிவு என்பது அநேகமாகக் கிடையாது. சினிமா பைத்தியம் என்றுகூட சொல்லலாம். சபரிமலைக்கு 40 நாள் விரதம் இருந்து எரிமேலி பாதையில் அய்யப்பனைத் தரிசிக்கச் சென்றிருக்கிறேன். ஆனால் என்ன ஆச்சர்யம்! மலையிலிருந்து திரும்பியபின் முழுமையாக கடவுள் நம்பிக்கை என்னிடம் இருந்து அகன்றுவிட்டது. அதன்பின்னர் தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி. சுருக்கெழுத்துப் புத்தகங்களை தில்லியிலிருந்து வரவழைத்துப் படித்திருக்கிறேன். பயிற்சி செய்திருக்கிறேன். பின்னர் மன்னார்குடியில் பணியிலிருந்த காலத்தில் கோட்டூர் இரங்கசாமி முதலியார் நூல் நிலையத்தில் ஓர் அற்புதமான நூலகர். ராமம் போட்டுக்கொண்டு குடுமி வைத்துக்கொண்டு இருப்பார். பகத்சிங் எழுதிய ‘நான் நாத்திகன் ஏன்’ என்னும் பிரசுரத்தை, தோழர் ஜீவா மொழியாக்கம் செய்து, தந்தை பெரியார் வெளியிட்ட அந்தச் சிறு பிரசுரத்தை –அந்த நூலகரிடமிருந்துதான் பெற்றுப் படித்தேன். அதனைத் தட்டச்சு செய்து விடுதலை ஏட்டிற்கு அனுப்பி வைத்தேன். கவிஞர் கலிபூங்குன்றன் அவர்கள் அதனை உண்மை மாத இதழில் தொடராக வெளியிட்டார். பின்னர்தான் ‘நான் நாத்திகன் ஏன்?’ மீண்டும் தமிழகத்தில் பிரபல்யமானது. அதேபோன்று சாக்ரடீஸ், அரிஸ்டாடில் ஆகியோர் வரலாறுகளையும் அங்கேதான் படித்தேன். Men is born free, but everywhere he is in chains என்னும் பிளாட்டோவின் சமுதாய ஒப்பந்தம் (Social Contract) நூலில் வரும் வரிகளை இங்கே இருக்கும்போதுதான் மனப்பாடம் செய்தேன். அதுமட்டுமல்ல, காண்டேகரின் கிரௌஞ்சவதம், அதில் கதாநாயகன் தினகரன் என்னும் திலீபன், கதாநாயகி சுலோசனாவிற்கு அன்பளிப்பாகக் கொடுத்திடும் ‘எரிநட்சத்திரம்’, அதன் நாயகியின் பெயர் ‘உல்கா’, புயலும் படகும், கருகிய மொட்டு, வெறும் கோயில், மனோரஞ்சிதம், இருமனம் முதலான அனைத்துக் கதைகளையும் அந்த நூலகத்திலிருந்து பெற்றுத்தான் படித்தேன். பம்பாயிலிருந்து வந்துகொண்டிருந்த Blitz வார இதழின் வாசகனாகவும் இருந்தேன். கே. ஏ. அப்பாஸ் அவர்களின் கடைசிப் பக்கக் கட்டுரையையும், அதன் ஆசிரியர் ஆர்.கே. கரஞ்சியாவின் கேள்வி – பதில் பகுதியையும் படித்துவிடுவேன். ஒருதடவை ஒருவர் இந்திரா காங்கிரசுக்கும், சிண்டிகேட் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா: Tweedledom and Tweedle dee என்பதாகும். பெயரில்தான் வித்தியாசம், வேறு எந்த வித்தியாசமும் கிடையாது என்று இது குறித்து அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அதேபோல் கே.ஏ. அப்பாஸ், ஒருதடவை சோ, தந்தை பெரியாரைச் சற்றே இழிவுபடுத்தி எழுதியிருந்ததைக் கண்டிக்கும் விதத்தில் 32 vs. 92 என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தந்தை பெரியார் குறித்து அவர் பதிவு செய்த வாக்கியங்களை அப்படியே மனனம் செய்துவிட்டேன். அது வருமாறு: “Whatever his senile idiosyncracies, there is no doubt that he is an iconoclast from his well beginning of his age.” (இப்போது அவருடைய வயதான சுபாவம் எப்படி இருந்தபோதிலும், அவர் தன்னுடைய வயதின் தொடக்க காலத்திலிருந்தே, மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிபவராக, கடவுள் சிலைகளைத் தகர்ப்பவராக இருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை, என்பது இதன் பொருள். Iconoclast என்பதற்கு அகராதியில் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிபவர் என்றும், கடவுள் சிலைகளைத் தகர்ப்பவர் என்றும் பொருள் விளக்கம் கூறப்பட்டிருந்தது-) என் அரசியல் சிந்தனை என்பது மாறத் தொடங்கியது. தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – மூன்று பாகங்களையும் வாங்கினேன், படித்தேன். அப்போது தந்தை பெரியார் சிந்தனைகளில் என்னை மிகவும் பாதித்து என்னுடன் ஒட்டிக்கொண்டுள்ள சிந்தனை என்பது வருமாறு: “நான் ஒரு பூரண பகுத்தறிவுவாதி. எனக்கு நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது. ஓர் உண்மையான பகுத்தறிவுவாதிக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு எந்தப்பற்றும் இருக்கவும் கூடாது.” தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளில் குறிப்பாக இரண்டாம் தொகுதிதான் என்னைப் புரட்டிப்போட்டது. பெரியார் சிந்தனையாளனாக இருந்த என்னை, மெல்ல மெல்ல சிவப்புச் சிந்தனையாளனாக மாற்றுவதற்கு என்னைத் தள்ளியது. அதன்பின் சோவியத் பிரசுரங்கள் அறிமுகமாகின்றன. முதலில் தாய், இளைஞர் படை, பின்னர் வீரம் விளைந்தது, உண்மை மனிதனின் கதை. தொடர்ந்து எண்ணற்ற நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள். இன்றளவும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற நூல்கள் என்றால் வானவில், சாவுக்கே சவால், விடிவெள்ளி, அன்னை வயல், முதல் ஆசிரியர், சிறுவர்களுக்கான கதையான பள்ளிக்கூடம், அவன் விதி, அதிகாலையின் அமைதியில் என அடுக்கிக் கொண்டே போகலாம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, பல தடவை வாங்கி இருக்கிறேன். படிக்க முயற்சித்திருக்கிறேன். பின்னர் சென்னை புக் ஹவுஸ் வெளியிட்ட நிரஞ்சனாவின் ‘நினைவுகள் அழிவதில்லை’, என் வாழ்க்கையில் மட்டுமல்ல, இதைப்படித்த என் நண்பர்கள் பலரைத் தோழராக மாற்றிய புத்தகம் என்றே கூறலாம். இந்தசமயத்தில் என் வாழ்க்கையில் அரசு ஊழியர் இயக்க வாழ்க்கையும் பின்னிப் பிணைந்தது. இதன்பின்னர் அரசியல் புத்தகங்களும் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இதில் என்னை மிகவும் கவர்ந்தது ஜூலியஸ் பூசிக்கின், தூக்குமேடைக் குறிப்பு. தோழர் இஷ்மத்பாஷா அவர்கள் மிக அற்புதமாகத் தமிழாக்கம் செய்திருப்பார். அதனைத் தொடர்ந்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு (போல்ஷ்விக்), உலகைக் குலுக்கிய பத்துநாட்கள், பின்னர் சீன இலக்கியங்களில் மாவோவின் சிறுபிரசுரமான நடைமுறையைப்பற்றி, லியோசௌசியின் சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி, உள்கட்சிப் போராட்டம், கட்சியைப் பற்றி ஆகியவை. சென்னையில் பணியாற்றிய சமயத்தில் தோழர் எஸ்.எஸ்.கண்ணனின் காரல் மார்க்ஸ் நூலகத்தில் டி.செல்வராஜ் அவர்களின் மூலதனம் நாவலைப் படித்தேன். கிறித்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டிருந்த டி.செல்வராஜின் தேநீர், மலரும் சருகும் போன்ற நாவல்களையும் முன்னரே படித்திருந்தேன். இதற்கிடையில் தோழர் கு.சி.பா.வின் சங்கம் நாவலை முதலிலும், பின்னர் தாகம் நாவலையும், தொடர்ந்து சர்க்கரை நாவரையும் படித்திருக்கிறேன். அதேபோன்று கே. முத்தையா அவர்களின் உலைக்களம் நாவலின் இரு பாகங்களையும் படித்திருக்கிறேன். கம்பீரமான மனிதனின் கதை என்கிற தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் சரிதையை தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதியதையும், பண்ணை அடிமையாக இருந்து தலைவராக உருவாகிய பி.எஸ். தனுஷ்கோடியின் வரலாறையும் அதனைத் தொடர்ந்து அவர் எழுதிய அனைத்து நூல்களையும் படித்திருக்கிறேன். இடையில் கணையாழி வாசகனாக இருந்து சுஜாதா, இந்திரா பார்த்தசாரதியின் சுதந்திர பூமி மற்றும் தந்திரபூமி போன்ற தொடர்கதைகளையும், பின்னர் குருதிப்புனல் தொடர்கதையையும் படித்திருக்கிறேன். நான் திருவையாற்றில் நீதிமன்றத்தில் பணியாற்றிய சமயத்தில் அருமை நண்பர் கு.கைலாசம் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர், தமிழ்நாட்டில் வெளிவரும் இதழ்கள் அனைத்தையும் வாங்கி, இலங்கையில் ஒரு நண்பருக்கு அனுப்பிவைப்பார். அங்கேயுள்ள நண்பர், இலங்கையில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் வாங்கி அவருக்கு அனுப்பி வைப்பார். அவ்வாறுதான் செ.கணேசலிங்கனின் குமரன் இதழ்கள் (கிட்டத்தட்ட 26 இதழ்கள் என்று நினைவு) அனைத்தையும் படித்திருக்கிறேன். அப்போது அதில், செம்மலரின் த.சா.இராசாமணி திருக்குறள் குறித்து எழுதிவந்த ‘பாட்டில் தெறித்த பொறி’, அப்படியே வெளிவந்திருக்கும். அதில் ஒரு புதுக்கவிதை. வரதபாக்கியான் என்பவர் எழுதியிருந்தார். ஒரு தோழிக்கு, ஒரு தோழனின் காதல் கடிதம் என்று தலைப்பு. நான் பொதுவுடைமை இயக்கத்தில் முழுநேர ஊழியனாகச் செல்ல இருப்பதால் எனக்குக் காதல் செய்வதற்கு நேரம் கிடையாது. எனவே என்னை விட்டுவிடு என்பது போன்று அந்தக் கடிதம் இருக்கும். இதற்கு தோழியின் பதில் கடிதம் அடுத்த இதழில் வந்திருக்கும். அதில் அந்தத் தோழி, எந்த நாட்டில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி மலர்ந்தது என்று எனக்குச் சொல் என்று அவர் கேட்டிருப்பார். நான் உன்னை வரச்சொன்னதே அதற்காகத்தான் என்கிற முறையில் அந்தப் பதில் கடிதம் அமைந்திருக்கும். இதன்பிறகு நான் தீக்கதிர் செய்தியாளனாக வந்தபிறகு, படிப்பது என்பதும், படைப்பது என்பதும் இரண்டறக்கலந்துவிட்டது. தில்லிக்கு வந்தபின்னர், தோழர் வி.பரமேஷ்வரன் தில்லி வந்திருந்த சமயத்தில், இனி ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழின் தலையங்கத்தைத் தொடர்ந்து தமிழாக்கம் செய்து அனுப்புகிறேன் என்று கேட்டுக்கொள்ள, உடனடியாக அவர் அதற்கான உத்தரவும் பிறப்பித்தார். இனி தீக்கதிரில் நீ அனுப்புகிற தமிழாக்கம் தொடர்ந்து வெளிவரும் என்றும் கூறினார். அவ்வாறு கடந்த 20 ஆண்டுகளாக, பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கத்தை அநேகமாகத் தொடர்ந்து அனுப்பி வந்திருக்கிறேன். இத்துடன் மத்திய அரசின் கீழ் இயங்கும் பப்ளிகேஷன் டிவிஷன் சார்பாக நவபாரதச் சிற்பிகள் என்னும் தொடர் வரிசையில் நேஷனல் ஹெரால்ட் ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்த சலபதி ராவ் எழுதிய ஜவஹர்லால் நேருவின் வரலாறையும், டபிள்யு.என்.குபேர் எழுதிய பி.ஆர்.அம்பேத்கர் வரலாறையும் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதுவல்லாமல் பாரதி புத்தகலாயத்திற்காக எண்ணற்ற புத்தகங்களையும் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவை மோடி அரசாங்கம் – வகுப்புவாதத்தின் புதிய அலை, குஜராத் கோப்புகள் – ரானா அயூப், குஜராத்:திரைக்குப்பின்னால் – ஆர்.பி. ஸ்ரீகுமார்,, சீத்தாராம் யெச்சூரியின் மாநிலங்களவை உரைகள், தீஸ்தா செதால்வத்தின் நினைவோடை, தோழர் சவுகத் உஸ்மானியின் புரட்சியாளனின் அனுபவங்கள், டி.கே.ரெங்கராஜனின் மாநிலங்களவை உரைகள் மற்றும் கட்டுரைகள், பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் எழுதிய முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் ஆவணங்களிலிருந்து ஆர்எஸ்எஸ்-ஐ அறிந்துகொள்வோம் முதலானவைகளாகும். தோழமையுடன் ச.வீரமணி.

Wednesday, December 21, 2022

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும் மாநிலங்களவையில் எஸ். கல்யாணசுந்தரம் வலியுறுத்தல்

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும் மாநிலங்களவையில் எஸ். கல்யாணசுந்தரம் வலியுறுத்தல் புதுதில்லி, டிச.22- 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்றும், 100 நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் திமுக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் கோரினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நிதி சட்டமுன்வடிவு மீது பேசிய திமுக உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் தன்னுடைய கன்னிப்பேச்சில் கூறியதாவது: மாண்புமிகு தலைவர் அவர்களே, எங்கள் இயக்கத்தின் தோற்றுணர் பேரற
ிஞர் அண்ணா அவர்கள் உரை நிகழ்த்திய இந்த சரித்திரப் புகழ்பெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில் எனக்குப் பேச வாய்ப்பளித்து ஓர் உறுப்பினராக்கி, பெருமை சேர்த்திருக்கும் எங்களுடைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்ற தலைவர்களோடு பயணம் செய்த எனக்கு, இந்த மாநிலங்களவையில் வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். மாண்புமிகு தலைவரவர்களே, நாடாளுமன்ற மாநிலங்களவையில்இது என் முதல் உரையாகும். எனவே, நாடாளுமன்ற மரபினைக் கருத்தில் கொண்டு, எனக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கியும், இடையூறு எதுவும் இல்லாமல் என் உரையை முடிக்கவும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாக ஒரு போலி வேடம் இட்டு மூன்று சட்டங்களைக் கொண்டு வந்து, திரும்பப் பெற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்ததைவிட, உரங்களின் விலை, பொட்டாஷ், யூரியா, டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் போன்றவைகளின் விலைகள் பத்து மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், விவசாயிகளின் உற்பத்திப் பொருளான நெல் விலையோ, கோதுமை விலையோ, கரும்பின் விலையோ அல்லது சிறு தானியங்களின் விலையோ அந்த அளவுக்கு உயரவில்லை. இதற்கு ஈடுகட்டும் அளவிற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி விவசாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை. இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி, உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடும் துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை மீட்டெடுக்கவும், இந்த அரசு எந்தவொரு தேவையான, சரியான, தெளிவான திட்டங்களைக் கொண்டுவரவிலிலை. ஒட்டுமொத்தமாக இந்த அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. அடித்தட்டு மக்களுக்கு உஜாலா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமையல் எரிவாயு அளிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ஒரு பக்கத்தில் 400 ரூபாய்க்கு விற்ற ஒரு சிலிண்டர் விலை, இப்பொழுது 1250 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. இப்பொழுது பொது மக்களுக்கு உஜாலா திட்டம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல நாட்டு மக்களின் அத்தியாவசியப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டீசல், பெட்ரோல் விலையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல்களை மனதில் கொண்டு, சில நேரம் விலையை உயர்த்தாமல் ஏமாற்றி, பின்னர் இரண்டு மடங்காக உயர்த்தியது. இதனால் போக்குவரத்து செலவுகள் கூடுதலாகி, விலைவாசியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதே போல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருக்கும்போது அனைவருக்கும் பயன்படும் வகையில் செல்லிடப் பேசி வசதியை அடித்தட்டு மக்கள் பயன்பெறும் ஒரு சாதனையைப் படைத்தது. ஆனால் இந்த அரசு வந்த நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி வழங்கப்படவில்லை. 5ஜியும் வழங்கப்படவில்லை. இவை இரண்டையும் தனியாருக்கு வழங்கியுள்ளது. ஆனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது எந்தவொரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பணிபுரிவதில்லை. பிஎஸ்என்எல் மட்டுமே தன் பணியைச் செம்மையாகச் செய்து வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தை அழிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகரான தில்லியில் பிஎஸ்என்எல் சேவை முழுமையாகக் கிடைப்பதில்லை. நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஏழை மக்களுக்கு வேலை கொடுக்கும் உரிமையை அடிப்படையாகக் கொண்டு, 100 நாள் வேலை என்கிற மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை உலகப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டி, அதற்கு ஒதுக்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் அவ்வாறு நிதியை காலத்தே ஒதுக்காமல் அந்த ஏழை எளிய மக்களுக்கு உள்ள உரிமையை இந்த அரசு பறித்து வருகிறது. அவர்களுக்கு 100 நாட்களுக்குப் பதிலாக 150 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் கும்ப மேளா என்று அழைக்கப்படும் மகா மகம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அடுத்த மகாமகம், 2028இல் நடைபெறவுள்ளது. பல லட்சம் மக்கள் வந்து செல்லும் கும்பகோணம் நகரத்தை மேன்மைப்படுத்தி பொது மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்திட தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்து ஆலயங்களை மாநில அரசு, புதுப்பித்து வருகின்றது. இதற்கும் ஒன்றிய அரசு சிறப்பு நிதி ஒதுக்கி ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நான் சார்ந்த தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான ரயில்வே பாதை, விழுப்புரம்-தஞ்சை இரயில்பாதை இரட்டை இரயில்பாதையாக இன்னமும் மாற்றப்படவில்லை. அதே போல் மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதையைப் புதுப்பிக்கும் கோரிக்கையும், சென்னை-தஞ்சாவூர் இடையே இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் விட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிலுவையில் இருந்து வருகின்றன. இவற்றை உடனே முடிக்க வேண்டுமென இந்த மன்றத்தில் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும் ஒன்றிய அரசு நிறுவனங்களான ரயில்வே, நெய்வேலி, பெல் போன்ற நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தங்கள் மூலமாக வைக்க விரும்புகிறேன். தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான கைவினைப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவைகள் அனைத்தையும் அரசே கையகப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் கைவினை கலைஞர்களுக்கு ஒரு போனஸ் வழங்குவது போன்ற வாய்ப்பு கிடைக்கும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், அங்கு தொழில் துவங்குவது சாத்தியம் இல்லை. அதனால் விவசாயம் சார்ந்த மாடு வளர்ப்பு, பால் பதப்படுத்துதல், மீன் வளர்த்தல், உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், நெல் அரவை தொழிற்சாலை, கடலை, தேங்காய், எள் போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைகளை மேற்கொள்ள மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக ஒன்றிய அரசு இருந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை தனிநபர் தீர்மானமாக இந்த அவையில் நான் தாக்கல் செய்திருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளின் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஈட்டியுள்ளபோதிலும் அவற்றை சி.எஸ்.ஆர். முறை மூலமாக சரியான விகிதத்தில் அவை தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளித்திடவில்லை என்பதை நான் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், சி.எஸ்.ஆர். திட்டத்தை அமல்படுத்தும்போது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுக்களை உருவாக்கி இந்தப் பணிகளைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொருள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபின், கலால் வரி எடுக்கப்பட்டுவிட்டதால், கரும்பு வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக கரும்பு பயிரிடுவதால், நெல்லைப் போல் கரும்பு விவசாயிகளுக்கும் மானியங்கள் வழங்கிட கரும்பு வளர்ச்சி நிதியைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் தனியார் கரும்பாலைகள் மூடப்பட்டுவிட்டதால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதிப்பைப் போக்கும் விதத்தில் மூடப்பட்ட கரும்பாலைகளைத் திறப்பதற்கு, மாநில அரசுடன் கலந்து பேசி ஒன்றிய அரசு நிதி உதவி செய்திட வேண்டும். தஞ்சை டெல்டா மாவட்டத்தில் ரயில்வே நிலையங்கள் அருகே பயன்படுத்தப்படாத நிலங்கள் உள்ளன. அதில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும். நெல் மற்றும் இதர பொருட்களை ரயில்வே மூலம் எடுத்துச் செல்ல வசதியாக ரயில்வே துறை மூலம் குடோன் அமைத்தால் ரயில்வேக்கு வருமானம் கிடைத்திடும். அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் தஞ்சை மாவட்டத்தில் 20 கிராமங்களை டிஜிடல் கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எஸ். கல்யாணசுந்தரம் பேசினார். (ந.நி.)