புதுடில்லி, டிச. 4-
இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட இந்திய அரசு முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோரினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் இலங்கைத் தமிழர் அவல நிலை குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன்மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:
இலங்கையில் இலங்கை ராணுவத்திற்கும் எல்டிடிஇ-இனருக்கும் இடையே கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பது மட்டுமல்லாமல், பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றி, சொல்லொண்ணா துன்பத்திற்குத் தள்ளியுள்ளது.
இன்றைய தினம் இலங்கையில், உள்ள மக்கள் தொகையில் 75 சதவீதத்தினர் சிங்கள மொழி பேசுபவர்கள். 69 சதவீதத்தினர் புத்தமதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்தப் பின்னணியில் ஆளும் கட்சியினர் தங்கள் மக்களை என்றென்றும் பிரித்து வைத்துக் குளிர் காய்ந்திட, சிங்கள மொழியையும், புத்த மதத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.
இத்தகைய ஏறுமாறான வளர்ச்சிப் போக்கில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் எண்ணற்றப் போராட்டங்கள் வெடித்தன. 1956, 1958, 1978, 1981 மற்றும் 1983களில் நடைபெற்ற இத்தகைய போராட்டங்ள் அனைத்தும் அக்காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களால் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. இவற்றில் மிகவும் மோசமான நிகழ்வு, 1983 ஜூலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகும். இக்கொலைபாதகச் செயல்களில் ஈடுபட்டக் கயவர்களில் ஒருவர் கூட இன்றுவரை, சட்டத்தின்முன் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப் படவில்லை என்பது வெட்கக்கேடாகும்.
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி
1972ஆம் ஆண்டு இலங்கை அரசமைப்புத் திருத்தச் சட்டமானது, இலங்கை அரசின் சிங்களப் பேரினவாத நலன்களுக்கான ஒன்று என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.
இன்றைய நிலை
எல்டிடிஇ-இன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன், தனி ஈழத்தை ஆயுதப்போராட்டத்தின் மூலம் அமைத்திடுவோம் என்று பலமுறை அறிவித்திருக்கிறார். இதற்கான போராட்டம் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. ஆனால், கடைசியாக, இலங்கை அரசாங்கம் எல்டிடிஇ-இனரின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது. இவ்வாறு அங்கு நடைபெற்று வந்த யுத்தம், பல லட்சக்கணக்கான மக்களைக் காவு கொடுத்தபின், பல லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக, அகதிகளாக, அடையாளமற்றவர்களாக ஆக்கியபின் மிகவும் முடிவுக்கு வந்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலுக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய பிரதான கேள்வியாகும்.
ஆனால், அவற்றில் பல ஷரத்துகள் அமல்படுத்தப்படவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த - இருக்கும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கும் - சிங்களர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளுக்கு எவ்விதத் தீர்வும் காணப்படாது, இவ்வாறு இனத் துவேஷம் தொடர்வதே தங்கள் அரசியல் எதிர்காலம் நீடித்திருப்பதற்குப் பாதுகாப்பு என்று கருதின. இலங்கையில், இந்திய முதலாளிகள் பெருமளவில் முதலீடு செய்தனர். இருந்தும் கூட, இந்திய அரசாங்கம் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பலி வாங்கியுள்ள யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த நிலைமைகளையும் இவ்வாறு பரிசீலனை செய்து, மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள் என்னென்ன என்பனவற்றை உடனடியாகக் கண்டறிய வேண்டும். அதுவே, இலங்கை முழுதும் வியாபித்திருக்கிற அனைத்து மக்களுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் நன்மை பயக்கும்.
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ளவர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு உள்ள நியாயமான கோரிக்கைகளை, குறைபாடுகளை ஆட்சியாளர்கள் செவிமடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்னும் எளிய உண்மையை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்துவிடுவார்களேயானால், அது மாபெரும் முட்டாள்தனமாகும். சொந்த மண்ணிலேயே புலம்பெயர்ந்து, தங்களுடைய கவுரவத்தை இழந்து நிற்கும் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை அம்சங்களையாவது அளித்திட உடனடியாக முன்வர வேண்டும். இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை வலுப்படுத்தப்பட வேண்டுமானால், இலங்கையின் பெரும்பான்மையாக உள்ள சிங்கள இனத்தவர்கள், யுத்தத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது அன்பாதரவான அணுகுமுறையை மேற்கொள்வதே இன்றைய அவசியத் தேவையாகும்.
(1) சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுகளும் அனைத்து உரிமைகளும் சமமான அளவில் அளிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட, இலங்கைஅரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
(2) இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிட, இந்திய அரசு தன் ராஜதந்திர உறவுகளைப் பயன்படுத்தி, நிர்ப்பந்தித்திட வேண்டும்.
(3) யுத்தத்தில் துயருற்று வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஐ.நா.ஸ்தாபனம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அளித்திட உரிய நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
(4) சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக மாறியிருக்கும் மக்களுக்கு இப்போது அளித்துள்ள வசதிகள் மிக மிகக் குறைவானவை. இவர்களுக்கு நிவாரணம் அளிப்பது மிகவும் அவசியமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், இவ்வாறு வீடற்று நிர்க்கதியானவர்களை, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் சொந்த ஊரிலேயே வீடுகள் கட்டித் தந்து, புனரமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டியதும் அவசியமாகும். தற்போது வீடுகளை இழந்து, அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு அவ்வாறே வைத்திருக்க, அரசு கருதியிருப்பதுபோல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. மேலும், புதிதாகக் குடியமர்த்தப்படும் சமயத்தில் அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திடவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மக்கள் விரைவாகத் தங்கள் பழைய இடங்களில் குடியமர்த்தப்படுவதே இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும்.
(5) அரசாங்கம், தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்திட வேண்டும். கடந்த காலங்களில் அது தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்தது. இப்போது எல்டிடிஇ-இனரின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளைப் பிடித்ததோடு நின்றுவிடாமல், அங்கு வாழ்ந்த மக்களின் மனங்களிலும் இடம் பிடித்திட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும்.
(6) தமிழர் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண்டும். விசாரணையின்றி சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். பாதுகாப்பு சோதனைகளைப் படிப்படியாகத் தளர்த்திட வேண்டும்.
(7) வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள பொருளாதாரத்தை மீட்டிட அங்கு வாழும் மக்களுக்கு சிறப்புப் பொருளதாரத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.
(8) இலங்கையின் ஆட்சிமொழியாக சிங்களம் இருந்தது. பின்னர் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழி என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயினும் இது இன்னும் முழுமையாக அமல்பத்தப்படவில்லை. நாடு முழுதும் இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்பது உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அரசாங்க வேலைகளில் போதிய அளவில் தமிழர்கள் அமர்த்தப்பட வேண்டும்.
(9) நியாயமான மற்றும் நேர்மையான முறையில் அதிகாரப் பரவலாக்கும் திட்டத்தை அரசு அமல்படுத்திட வேண்டும். கடந்த காலங்களில் காலத்தை வீணடித்ததுபோல் இனியும் காலத்தை வீணடிக்கக்கூடாது.
(10) இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியா, முக்கிய பங்காற்றிட வேண்டும். இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கு உதவக்கூடிய அதே சமயத்தில், இலங்கைப் பொருளாதாரம் மேம்படுவதற்கும் உதவிட வேண்டும். யுத்தத்தில் சிதிலமாகிப்போயுள்ள வட கிழக்குப் பகுதிகள் அயல்நாடுகளின் உதவியுடன் விரைந்து மீள உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற தூதுக்குழுவில் ஆளும் கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அனுப்பப்பட்டதால், உண்மை நிலையை அறிய முடியவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி இருக்க வேண்டும்.
இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவே ஓர் ஒன்றுபட்ட இலங்கையை விரைவாகக் கட்டியமைப்பது சாத்தியம். யுத்தம் நடைபெற்று முடிந்துள்ள சூழ்நிலையில், அதனால் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ள மக்கள் மீண்டும் தங்களைப் புனரமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் - இலங்கையின் பிரிக்கப்படமுடியாத ஓர் அங்கமாக மீண்டும் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிட வேண்டும்.
இவ்வாறு பி.ஆர். நடராசன் பேசினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல்தீர்வு காண்பதில்
மேலும் காலதாமதம் கூடாது
நாடாளுமன்றத்தில் டி.கே.ரெங்கராஜன் பேச்சு
புதுதில்லி, டிச. 4-
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதில் மேலும் காலதாமதம் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளியன்று இலங்கையின் வடபகுதியில் தற்போதுள்ள வளர்ச்சிப் போக்குகள் என்ற தலைப்பில் மத்திய அயல்துறை அமைச்சர் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:
‘‘மாண்புமிகு அமைச்சர் அளித்துள்ள அறிக்கை எந்தவிதத்திலும் மனநிறைவை அளித்திடவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சனையை மத்திய அரசும், அயல்துறை அமைச்சரும் இந்தியப் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதனை வெறும் தமிழர் பிரச்சனையாக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரச்சனையாக பார்க்காதீர்கள். 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் மிகவும் துயரார்ந்தவைகளாகும்.நம் கண்முன்னால் நடைபெற்றுள்ள துயர நிகழ்வுகளாகும். சரியான நேரத்தில் மத்திய அரசு தலையிட்டிருந்தால், இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்த்திருக்கமுடியும், அங்கே ஏற்பட்டுள்ள ரத்தக்களரியைத் தவிர்த்திருக்க முடியும். மத்திய அயல்துறை அமைச்சர் தன் அறிக்கையில், புலம் பெயர்ந்த மக்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் தங்கள் இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள் (resettled) என்று சொல்லியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவ்வாறு மீள தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள் என்றும், சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் இன்னமும் முகாம்களில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
அவர்கள் அவ்வாறு மீள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றால், எங்கே மீள்குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்? அவர்களுடைய கிராமங்களிலா? அங்கே வீடுகளே இல்லை. கூரை கிடையாது. அங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கும் சேவை அமைப்புகள் மூலமாக எனக்குக் கிடைத்த தகவல் என்னவெனில், அவர்கள் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். இதுதான் மீள்குடியமர்வா? மீள்குடியமர்வு என்றால் அவர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் தங்களின் சொந்த உடைமைகளைப் பெற வேண்டும்.
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பி.எச்டி. படித்த டாக்டர்கள் இருக்கிறார்கள், மருத்துவ டாக்டர்கள் இருக்கிறார்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் என்று அனைத்துத் தரப்பினரும் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகக் கடுமையான துன்பதுயரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கமானது, முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிக்கப்போவதில்லை என்று எனக்குத் தகவல்கள் வந்துள்ளன. ஏனெனில் அவர்கள் உடலில் எல்டிடிஇ ரத்தம் ஓடுகிறதாம். இதுதான் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை. அந்த அரசாங்கமானது தங்கள் நாட்டின் சொந்தப் பிரஜைகளையே கிரிமினல்களை விட மோசமான விதத்தில் நடத்திக்கொண்டிருக்கிறது. இதனை மத்திய அரசு குறித்துக் கொள்ள வேண்டும். தயவுசெய்து நாங்கள் கூறுவதை நம்புங்கள். நாங்கள் அங்கே பல்வேறு பிரிவினருடன் விவாதித்திருக்கிறோம்.
பல்வேறு சேவை அமைப்புகள் நடைபெற்ற யுத்தத்தில் அநாதைகளாகிவிட்ட குழந்தைகளை எடுத்து வளர்க்கத் தயாராக இருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, இலங்கைத் தமிழர் அவலத்தைச் சரியான முறையில் முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இதுதொடர்பாக அரசு தன் நிலையினை அவைக்கும் நாட்டுக்கும் தெரிவிக்க வேண்டும்,
முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் 180 நாட்களுக்குள் தங்கள் இல்லங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்முடைய அயல்துறை அமைச்சரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் கூறினார்கள். இப்போது 180 நாட்கள் ஓடிவிட்டன. இன்னமும் அவர்கள் அவலங்கள் தொடர்கின்றன. இதற்கு நாட்டு மக்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் அவர்களது சொந்த இல்லங்களுக்கு இன்னமும் ஏன் அனுப்பப்படவில்லை?
அடுத்ததாக, இலங்கைக்கு மத்திய அரசின் சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்தது, மீனவர்கள் பிரச்சனை. இலங்கை நம்முடைய நட்பு நாடு. நம்முடைய கடலோரக் காவல்படையினர் இலங்கைக் கடலோரக் காவல் படையினருடன்மிகவும் நட்புரீதியாக பழகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்விரு நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினரும் மீனவர்களுக்கு உதவ வேண்டுமேயொழிய, அவர்களைத் துரத்திடக் கூடாது. மீனவர்களுக்கு மீன்பிடிப்பது வாழ்வாதாரம். 1983க்கு முன்பு இருந்ததுபோல் தொடர்ந்து அவர்கள் உரிமைகளுடன் மீன்பிடித் தொழிலைத் தொடர வேண்டும்.
நாம் நம் தொழில்முனைவோரை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறோம். ஏற்கனவே 250 பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கிறோம். நாம் பள்ளிக்கூடங்களை அங்கே திறந்திருக்கிறோம். அவர்களுடைய சிமெண்ட் தொழிற்சாலைகளையும் மற்ற தொழிற்சாலைகளையும் மீளவும் புனரமைத்துக் கொடுத்திருக்கிறோம். நம் மத்திய அரசு அங்கு ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறது. ஆயினும் அங்குள்ள தமிழ் மக்களுக்கும் உதவிடுங்கள். அப்போதுதான் அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
இலங்கை அரசுடன் இந்திய அரசு பேசி, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காண்பதில் மேலும் காலதாமதம் கூடாது.
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் பேசினார்.
(ந.நி.)
Friday, December 4, 2009
இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட - இந்திய அரசு முக்கிய பங்காற்றிட வேண்டும் - நாடாளுமன்றத்தில் பி.ஆர். நடராஜன் - டி.கே.ரெங்கராஜன் பேச்சு
Thursday, December 3, 2009
மேற்கு வங்கத்திற்கு மத்தியக்குழு

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமைகள் தொடர்பாக மேற்கு வங்க அரசின் அதிகாரிகளுடன் விவாதங்கள் மேற் கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தினை இது முழுமையாக மீறும் செயல் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கடுமையான முறையில் எதிர்த்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசின் கீழ் வருகின்ற, ‘‘மாநிலப் பட்டியலின்’’ கீழ் வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசின் தலையீடு எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தின் கலந்தாலோசனை மற்றும் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது.
மத்தியக் குழு மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை, திரிணாமுல் காங்கிரஸ், ‘மேற்கு வங்க மாநில அரசை அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் டிஸ்மிஸ் செய்து அங்கே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை இது’ என்கிற முறையில் வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் விரைவில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் திரும்பத் திரும்ப வெளிப்படையாகவே கோரி வருகிறது. உண்மையில், இதனை எய்தும் விதத்திலேயே அதன் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளைப் பயன்படுத்திக்கொண்டு, வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்திடவும் அது முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதனை சாக்காக வைத்துக்கொண்டுதான் மத்திய அரசின் தலையீட்டை அது கோரிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான அவர்களது கீழ்த்தரமான சூழ்ச்சியின் காரணமாகத்தான் மேற்கு வங்கத்தில் மக்கள் மீது இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதல்களை அவர்கள் தொடுத்துள்ளார்கள், நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் - மாவோயிஸ்ட்டுகள் இடையேயுள்ள தொடர்பு, இவர்களால் மார்க்சிஸ்ட் ஊழியர்கள் மற்றும் மக்கள் மீது 2008 நவம்பரில் இவர்கள் தொடுத்த தாக்குதல்கள், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைக் கொல்ல இவர்கள் மேற்கொண்ட முயற்சி தனியே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில், உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். மேற்கு வங்கத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கக்கூடிய விதத்தில் அந்த அறிக்கை இருந்தது. மத்திய அரசாங்கத்தால் நான்கு விஷயங்கள் அதில் தெள்ளத்தெளிவாக்கப் பட்டுவிட்டன: (1) அதிகாரிகள் குழு அங்கு செல்வது மோதல் போக்குடன் அல்ல, (2) அவர்கள் மாநில அரசின் அதிகாரிகளுடன் மட்டும்தான் விவாதங்களை மேற்கொள்வார்கள். (3) மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டால் அல்லது வசதிசெய்து கொடுத்தால் மட்டுமே அவர்கள் மோதல் நடைபெறும் மாவட்டங்கள் அல்லது பகுதிகளுக்குச் செல்வார்கள், (4) அவர்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து மனுக்களைப் பெறலாம். ஆனால் அவர்களுடன் அதிகாரிகள் எவ்விதப் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையானது, மத்தியக் குழுவின் விஜயம், மாநில அரசுக்கு உதவத் தானே யொழிய, திரிணாமுல் காங்கிரஸ் சொல்வதுபோல் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை மதிப்பிடுவதற்காக அல்ல. தற்சமயம் மத்திய - மாநிலப் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிட்னாபூர் மாவட்டத்தில் லால்கார் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. அப்பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டு, மாநில அரசின் நீதி நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கு அவை முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
நாம் இப்பகுதியில் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பதுபோல, காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய கூட்டணியில் திரிணாமுல் காங்கிரசை ஓர் அங்கமாக இணைத்துக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பலமுறை வெளிப்படையாகவே, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, மாவோயிஸ்ட் வன்முறை என்று பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், திரிணாமுல் காங்கிரசோ நேரடியாகவும், வெளிப்படையாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விடுகின்ற, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கின்ற, அராஜகத்தை உருவாக்குகின்ற, எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்களைக் கொன்று குவிக்கின்ற மாவோயிஸ்ட்டுகளுக்கு உடந்தை யாக இருந்து வருகிறது. இத்தகைய மோசமான முரண்பாடுகளுடன் இருக்கின்ற ஒரு கட்சியுடன் எப்படிக் கூட்டு வைத்துக்கொண்டு, தங்கள் அமைச்சரவையில் நீடிக்க அனுமதிக்கிறோம் என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்.
கொலைபாதகத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் வங்கத்தில் பலவீனப்படுத்த முயற்சிப்பதே தங்கள் அரசியல் குறிக்கோள் என்று கருதுவார்களானால், அவர்கள் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள வில்லை என்றே நாம் கூற முடியும். மார்க்சிஸ்ட்டுகளைத் தாக்க இடது அதிதீவிரவாதிகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது மேற்கு வங்கத்திற்கு புதிதல்ல. 1972க்கும் 1977க்கும் இடையே ஓர் ஐந்தாண்டு காலம், இதுபோன்றதோர் அரசியல் சேர்மானத்தால், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஓர் அரைப் பாசிச அராஜகமே கட்டவிழ்த்துவிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி அதனை எதிர்த்து முறியடித்தது மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து கடந்த முப்பதாண்டு காலமாக அங்கே எவரும் வெல்லமுடியாத அளவிற்கு,தேர்தல்களில் வெற்றிபெற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உருக்கு போன்று உருவாக்கப்பட்டுள்ள இடது முன்னணியை உடைக்க முடியாததாலும், மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கை எதையும் முன்வைக்க முடியாததாலும், திரிணாமுல் காங்கிரசானாது, மாவோயிஸ்ட்டு களிலிருந்து சில முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் உட்பட அனைத்துப் பிற்போக்கு சக்திகளுடனும் சேர்ந்துகொண்டு, வன்முறை மூலமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரசின் இத்தகைய புனிதமற்ற கூட்டணிதான் மேற்கு வங்கத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாகும். இத்தகைய ஜனநாயக விரோத கும்பல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், மேற்கு வங்க மக்களுக்கு எதிராகவும் அவை மேற்கொண்டுள்ள வன்முறைத் தாக்குதல்கள் அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம்.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Posts (Atom)

