Tuesday, January 27, 2015

பராக் ஒபாமாவுக்கு பந்தி வைக்கும் மோடி அரசு!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 2015 குடியரசு தின அணிவகுப்பிற்கு, தலைமை விருந்தினராக வருவதை யொட்டி, ஏராளமான விஷயங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக் கின்றன. நாடு சுதந்திரம் அடைந்தபின், இந்தியக் குடியரசுத் தலைவர், `முப் படைகளின் தலைவர்என்ற முறையில்  ஆயுதப்படையினரின் அணிவகுப்பு மரியாதை’’யை ஏற்றுக்கொள்ளக்கூடிய சமயத்தில்அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பது இதுவே முதல்முறை. 
முப்படைகளின் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்பது என்பது, ராணுவத்தினரின் பேச்சுவழக்கில் சொல்வதெனில், “யுத்த பாணி’’யாகும். முப்படைகளின் தலைவர், முப்படைகளின் பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பை’’ பெற்றுக்கொள்ளும் வரை  முப்படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள். எனவே, குடியரசு தின அணிவகுப்பு முடிந்தவுடனேயே, இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக, “பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பும்’’ நடைபெறும்.  மோடி அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை அழைத்திருப்பது, இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் `அடிமைக் கூட்டாளியாக மாறியிருக்கிறது என்று, உலகிற்குத் தெரிவிக்கும் ஒரு வலுவான சமிக்ஞையாகும். இந்தியா இதுநாள்வரை பின்பற்றிவந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைப் புதைகுழிக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைகளில் அரசாங்கம் இறங்கிவிட்டது என்பதைக் காட்டும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். 
இந் தியா உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் உறவுகளை நட்புரீதியாக வளர்த்துக்கொள்ள வேண்டிய மற்றும் தொடரக்கூடிய அதே சமயத்தில், இந்தியாவின் அயல்துறைக் கொள்கை என்பது எப்போதும் அதன் தேசிய நலன்களைத் தெளிவுபடுத்தக்கூடிய விதத்தில்தான் அமைந்து வந்திருக்கிறது. அதாவது, உலக வல்லரசு எதுவும் வளரும் நாடுகளை ஆதிக்கம் செலுத்த முடியாத விதத்தில் வளரும் நாடுகளுக்குத் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாகவே இதுநாள்வரை இருந்து வந்திருக்கிறது. கடந்த காலங்களில், அடிக்கடி, தேசியஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு தார்மீகரீதியாகவும் துணிந்தும் ஆதரவு அளிக்கக்கூடிய நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறது.
ஆயினும், இந்திய ஆளும் வர்க்கங்கள், நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தழுவத் தொடங்கிய பின்னர், இந்தியாவின் நலன்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொங்கு சதையாக மாறிவிட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான், இந்தியாவின் கொள்கைத் திசைவழி என்பது சர்வ தேச நிதி மூலதனத்திற்கு, அவை கொள்ளைலாபம் ஈட்டுவதற்கு வசதி செய்துதரக் கூடிய விதத்தில்வாய்ப்புகள் அளிப்பது என்பது மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதுமட்டுமல்லாது, மோடி பிரதமராவதற்கான பிரச்சாரத்திற்காக மிகவும் தாராளமாக நன்கொடைகள்’’ தானம் செய்திட்ட இந்திய கார்ப்பரேட்டுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இருந்து கொள்ளை லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இத்தகைய சூழலில் 2016-17ஆம்ஆண்டில் சீனாவின் வளர்ச்சிவிகிதத்தை விட இந்தியா முன்னேறி விடும் என்று இப்போது மிகவும் ஊக்கத்துடன் கூறப்பட்டு வருகிறது.  நம்முடைய பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் முன்னறிவிப்புகளின் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு நல்ல காலம் பிறக்குது’’ என்ற முறையில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சர்வதேச ஏஜன்சிகள், 2016-17ஆம் ஆண்டில், இந்தியா (6.5 சதவீதம்), சீனத் தின் வளர்ச்சி விகிதத்தை (6.3 சதவீதத்தை) தாண்டிவிடும் என்று சித்தரித்து வருகின்றன.  மோடி அரசாங்கத்தால், “எல்லாம் நன்றாகவே நடக்கிறது’’ என்கிற இந்தப் புதிய முழக்கம் மிகவும் நன்றாகவே சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.
உண்மை நிலவரம் காட்டாத வளர்ச்சி
சில உண்மைகளை மீண்டும் நினைவு கூர்தல் அவசியம். 1978இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு140 பில்லியன் டாலர்களாகும். அப்போது சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 148 பில்லியன் டாலர்களாக இருந்தது. நாம் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களைப் பின்பற்றத் துவங்கியதற்குப்பிறகு, 1990களில் துவக்கத்தில் இந்தியா மற்றும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 327 பில்லியன் டாலர்கள் மற்றும் 357 பில்லியன் டாலர்களாகும். ஆயினும், 2014ஆம் ஆண்டுவாக்கில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.36 டிரில்லியன் டாலர்கள் மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.05 டிரில்லியன் டாலர்களாகும்.
ஒவ்வொரு நபருக்குமான மொத்த உள் நாட்டு உற்பத்தி என்று பார்த்தாலும் சீனா வில்தான் அதிகம். உலகப் பொருளாதார நிலையில் சீனாவின் 12 சதவீதப் பங்கினைவிட 2 சதவீதம் கூடுதலாகவே இந்தியாவின் பொருளாதார நிலை இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. எனவே, வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன்மூலம், அது உண்மையாகவே இருந்தாலும்கூட, உண்மையான நிலவரத்தை அது காட்டாது. (சர்வதேச நிதி நிறுவனமும், உலக வங்கியும் பங்குச்சந்தை வணிகத்தில் செயற்கையாக உயர்வினைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், “எல்லாம் நன்றாகவே நடைபெறுகிறது’’ என்று காட்ட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடும் என்பது உலகம் நன்குஅறிந்த ஒன்றேயாகும்.). மக்கள் மத்தியில் மாயைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே, “இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது,’’ என்று தம்பட்டம் அடிக்கப்பட்டு வரு கிறது. சீனப் பொருளாதாரம் தற்போது மந்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது உண்மை என்ற போதிலும், கடந்த முப்பதாண்டு காலமாக, தொடர்ந்து அது ஆண்டு வளர்ச்சி விகிதத்தைச் சுமார் 10 சதவீதமாகவே நிலைநிறுத்தி வந்திருக்கிறது. இது பலரும் எதிர்பார்த்திராத ஒன்றாகும். உலக முதலாளித்துவத்தின் வரலாற்றில் இதுபோன்று முன்னெப்போதுமே நடந்ததில்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  நாளேடு இது தொடர்பாக எழுதியுள்ள தலையங்கத்தில், “சீனப் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது தவிர்க்கமுடியாத புள்ளிவிவரத்தின் ஒரு பகுதி யேயாகும். கடந்த முப்பதாண்டுகளாக அதன் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 9 - 10 சதவீதமாக இருந்திருக்கிறது.  அதுஒரு குறிப்பிட்ட சமயத்தில் 6 - 7 சதவீத மாக அல்லது அதற்கும் கீழ் வீழ்ச்சி அடைந் திருக்கிறது. சீனம் அந்தக் கட்டத்தை எட்டிவிட்டது என்பது தெளிவு. மேலும் அது அதிகமான அளவில் புதிய உருக்கு ஆலைகள், அலுமினியத்தை உருக்கும் ஆலைகள் அல்லது விமானத் தளங்கள், விரைவுப்பாதைகள் மற்றும் அதிவேக ரயில் பாதைகள் கட்ட வேண்டிய அவ சியம் இல்லை. மாறாக, இந்தியாவிற்கு இவை அனைத்தும் இன்னமும் அதிக அளவில் தேவைப்படுகின்றன. (ஜனவரி 22, 2015)
முன்னறிகுறி தம்பட்டம்
மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக ஏற்றிக்கூறப்படும் கணக்கீடுகள் அனைத்தும் மக்களை மேலும் சுரண்டி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, கார்ப்பரேட்டுகள் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மேலும் பெரிய அளவில் உந்தித்தள்ளுவதற்கான முயற்சியேயாகும்.  தி இந்துஸ்தான் டைம்ஸ் தன் தலையங்கத் தில், மோடி அரசாங்கம் மிகவும் தெளிவான முறையில் கொள்கைக் கலவையை மேற்கொண்டிருக்கிறது,’’ என் றும், “இதற்கு இந்த ஆண்டு ஒரு படாடோபமான அணுகுமுறையுடன் கூடிய ஆண்டாக அமைந்திடும்,’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது (ஜனவரி 22, 2015). உலகஅளவில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து ஆறாவது ஆண்டும் நீடித்திருக்கக்கூடிய நிலையில், அமெரிக்க மூலதனமும், இந்திய கார்ப்பரேட்டுகளும் தங்கள் கொள்ளைலாப வேட்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளின் வெளிப்பாடுகளே இவைகளாகும். 
இதனை மனதில் கொண்டுதான், இந்தியா மேலும் பெரிய அளவில் சீர்திருத்தங்களை முன்னெடுத் துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், சர்வதேச நிதியமும், உலகவங்கியும் இவ்வாறான முன்னறிகுறிகளைத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய முன்னறி குறிகளை அமல்படுத்துவதற்கான திறவுகோலாக’’ மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. உலகமும், குறிப்பாக அமெரிக்காவும், அடிப்படையில் இந்த நோக்கத்தோடுதான் இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. எனவேதான், இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தன்னுடன் அமெரிக்க வர்த்தகப் புள்ளிகளின் ஒரு மாபெரும் பட் டாளத்தையே அழைத்துக்கொண்டு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஆகவே, இதில் அதிர்ச்சி அடைவதற்கு எதுவுமே இல்லை.
2008ல் உலக அளவில் பொருளா தார மந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகத் தொழில் உற்பத்தி வளர்ச்சி விகிதம்என்பது சராசரியாக 40  சதவீத அளவிற்கே இருந்து வருகிறது. பொருளா தார மந்தத்திற்கு முன்பு இதன் நீண்டகால சராசரி என்பது  60 சதவீத மாக இருந்து வந்தது. உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2012லும் 2013லும் கிட்டத்தட்ட 2.3 சதவீதமாகும். இதன் விளைவாக, உலகின் உண்மையான ஊதிய வளர்ச்சி (மக்களின் வாழ்க்கைத்தரம் இதனைக்கொண்டு தான் அளக்கப்படுகிறது) 2012இல் வெறும் 1.3 சதவீத அளவிற்கும், 2013இல் 1 சதவீத அளவிற்கும்தான் வளர்ந்தது. இவ்வாறாக வருமான ஏற்றத்தாழ்வு கூர்மையானது.  
மக்களை மேலும் சுரண்டுவதன் மூலமாக தங்கள் கொள்ளை லாப வேட்டையை இவ்வாறு உலக முதலாளித்துவமும், சர்வதேச நிதி மூலதனமும் உத்தரவாதம் செய்து கொண்டிருக்கின்றன.
பிரதான இலக்கு
எனவே, உலக முதலாளித்துவத்திற்கும், சர்வதேச நிதி மூலதனத்திற்கும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தங்கள் கொள்ளைலாப வேட்டைக்கான வாய்ப்புகள் சுருங்கிக்கொண்டிருப்பதன் காரணமாக, அவை புதிய வாய்ப்புவாசல்களை ஆராயத்தொடங்கி இருக்கின்றன. இவர்களின் பிரதான இலக்கு இந்தியாவாகும். துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசாங்கம், தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு தாராளமாக தானம் செய்ததற்கு நன்றிதெரிவிக்கும் விதத்தில், இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு முழுமையாக சரணடைவதுடன் மட்டுமல்லாது, அவர்கள் மக்களைக் கசக்கிப்பிழியக்கூடிய அத்தனை முயற்சிகளையும் அடிபணிந்து ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறது.
  அமெரிக்க அதிபரின் வருகையைத் தொடர்ந்து, பெரிய அளவில் நவீன தாராளமயச் சீர் திருத்தங்கள் பின்தொடரும் என்பது தெளிவு. ஏற்கனவேஆட்சிபுரிந்த முதல் ஆறு மாத காலத்திலேயே, மோடிஅரசாங்கம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அரித்து வீழ்த்தக் கூடிய விதத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவசரச் சட்ட ஆட்சியை’’யே நிறுவனமயமாக்கிக் கொண்டிருக்கிறது.  தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, இந்த ஆறு மாத காலத்தில், “சீர்திருத்தவாதத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சூறைக் காற்று’’ வீசியதாக  வர்ணித்திருக்கிறது. அது மேலும், “எரிபொருள்களின் விலைகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான நெறி முறைகள் தளர்த்தப்பட்டுவிட்டன, நம் பங்குச்சந்தை வணிகத்தில் மேலும்அதிக அளவில் பங்குகள் குவியக் கூடிய அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட விருக்கின்றன, ஒரு புதிய நிலக்கரி ஒதுக்கீட்டுக் கொள்கை உருவாக்கப் பட்டிருக்கிறது, மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஓர் ஒருங்கிணைக்கப்பெற்ற பொருள்கள் மற்றும் சேவைகள் வரி குறித்த விவாதங்கள் கடைசி கட்டத் திற்கு வந்துள்ளன.
... இவ்வாறாக நல்லதொடக்கத்துடன் அரசாங்கம் தன் இலக்கை அடையும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது’’ என்றும் குறிப்பிட் டிருக்கிறது. (ஜனவரி 22, 2015) அரசாங்கம் மேலும் பெரிய அளவில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்வந்திருப்பதன் காரணமாக, மக்கள் மீதான சுமைகள் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் முன் கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. 
இவர்களின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வலுவான போராட்டங்களை முன்னெடுத் துச் செல்வதன் மூலமாகத்தான், மோடிஅரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியை மாற்றி அமைத்திட முடியும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முடியும்.
(ஜனவரி 22, 2015)
தமிழில்: ச.வீரமணி