Friday, June 25, 2010

நீதிமன்றங்களும் அவற்றின் வழக்கு மொழியும்

தமிழகத்தில், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதிக்கவேண்டும் என்று கோரி வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி, சிறையேகி, தற்போது உயர்நீதிமன்ற நீதியரசர்களின் கருணையினால் தமிழில் வழக்காடலாம் என அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கோவையில் நடைபெறும் உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் உரையாற்றிய பலர், இந்தி ஆட்சி மொழியாக உள்ள வட இந்திய மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்கு மொழியாகச் செயல்படுவதாகப் பேசியுள்ளாரகள்.
ஆனால், உண்மை நிலை என்ன?

மத்தியஅரசின் அலுவல் மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப் பட்டிருப்பது உண்மை.
ஆனால், வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் தன் கட்டுரையில் தெளிவுபடுத்தியிருப்பதுபோல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவின்படி ஆங்கிலம் மட்டுமே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாகும்.
சமீபத்தில் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வழக்கறிஞர் ஒருவர் இந்தியில் வாதாடினார். இதனை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகிய நீதியரசர் ரேகா ஷர்மா அனுமதித்தார். ஆனால் அதே வழக்குரைஞர், அதே நீதிமன்றத்தில் நீதியரசர் ஏ.கே. பதக் முன்பு ஆஜராகி இந்தியில் வாதாடியபோது, நீதியரசர் ஏ.கே. பதக் அனுமதி மறுத்துவிட்டார். ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும், அதுதான் உயர்நீதிமன்ற அலுவல் மொழி என்று கூறியுள்ளார்.

நாட்டில் உள்ளஅனைத்து உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் அனைத்து வழக்குகளும், மனுக்களும் ஆங்கிலத்தில்தான் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒரு சில நீதிபதிகள், மொழி உணர்வுக்கேற்ப இந்தியில் நீதிமன்றத்தில் வாதாட அனுமதிக்கிறார்களே ஒழிய, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவ்வாறு அனுமதிக்க முடியாது.
எனவே, உண்மையில் அந்த அந்த மாநிலங்களில் உள்ள ஆட்சிமொழிகளே, அந்த அந்த உயர்நீதிமன்றங்களுக்கும் ஆட்சி மொழி என்ற முறையிலும், உச்சநீதிமன்றததில் நாட்டின் அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வழக்குகள் தாக்கல் செய்திடவும் அவறறை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திடக் கூடிய விதத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவு மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு மாற்றுவதற்கு ஐமுகூ-2 அரசு முன்வருமா? ஐமுகூ-2 அரசிற்கு ஆதரவு
அளித்து வரும் திமுக இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமா?
செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக ஓங்கிக் குரல் கொடுத்துள்ள கே. வி. தங்கபாலுவும், தமிழக முதல்வர் கலைஞரும்தான் கூற வேண்டும்.

-ச.வீரமணி

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி



தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜூன் 25 அன்று சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்:
பெருமதிப்பிற்குரிய கல்விமான்களே, என் அருமை நண்பர்களே,
உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக, மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியறிதலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும், இந்த ஒன்பதாவது மாநாடுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏனெனில், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டபின் நடைபெறும் முதல் மாநாடு இதுதான். அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சில கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில் ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில்தான் இவ்வாறு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது என்கிறபோது நாங்கள் கூடுதலாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

இங்கே உங்கள் முன் நிற்கையில் தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தெலுங்கு குடும்பத்தில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும் ஒரு பங்கினை நான் கோருவதற்கு எனக்கு உரிமை உண்டு. நான் பிறந்தது அன்றைய மதராஸ் எனப்படும் இன்றைய சென்னை மாநகரில்தான் அல்லது அந்தக் காலத்தில் பலராலும் அழைக்கப்பட்ட சென்னைப் பட்டணத்தில்தான். மேலும் மொழி மற்றும் பண்பாட்டு அம்சங்களில் நமக்குள் பல பொதுவான பண்புகள் உண்டு.

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’
அதாவது, உலகில் அனைத்து இடங்களும் என் சொந்த நகரம்தான், உலகில் உள்ள ஒவ்வொருவரும் என் உறவினர்கள்தான்.

பிபிசி தொடர்களில் ஓர் இனிய நிகழ்ச்சித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதன் பெயர் ‘இந்தியாவின் கதை’. அது ஆதிக் காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறித்துக் கூறியது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதகுல உயிரணுத் திட்டத்திற்கும் (Human Genome Project) நன்றி தெரிவித்துக் கொள்வோம். ஆதி காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் மிச்சசொச்சத்தில் காணப்பட்ட உயிரணு (gene M.130)க்கள், தமிழ்நாட்டின் மேற்கு மலைத்தொடர்ச்சிப் பகுதிகளில் வாழ்ந்த கள்ளர் மக்களிடம் காணப்பட்டதாக அந்நிகழ்ச்சித் தொகுப்பில் கூறப்பட்டது. மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ. பிச்சப்பன் அவர்கள், இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து, ஒரு வேளை இவர்கள்தான் நம் எல்லோருக்கும் மூதாதையர்களாக இருப்பதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்று கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதாம் - ஏவாள்தான் நம் மூத்த குடிமக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றால், ஆதாம் ஆப்ரிக்காவிலிருந்து வந்தார் என்றால், ஏவாள் இந்தியாவிலிருந்து வந்தாள் என்று கொள்ளலாம். எனவே உண்மையில் இது ‘தாய் நாடு’ (Mother India) தான். நாம் இன்றைய தமிழ்நாட்டில் இருப்பதற்கு உண்மையில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றைத்தான் இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மொழியின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் என்பது அதன் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்ததாகும்.


காரல் மார்க்ஸ், மொழி குறித்துக் கூறுகையில், அது ‘‘சிந்தனையின் உடனடி எதார்த்தநிலை’’ என்று அழைத்திட்டார். ஜெர்மன் சித்தாந்தம் (German Ideology) என்னும் நூலில் மொழியின் தோற்றுவாயை ஆராய்கையில் அவர் கூறியதாவது: ‘‘மொழி என்பது மனிதனின் உணர்வு தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்டது, மொழி என்பது உணர்வின் நடைமுறை. இது அனைத்து மனிதர்களிடமும் தோன்றியது. அதன் காரணமாகவே என்னிடமும் அது உளதாயிருக்கிறது. உணர்வைப் போன்றே மொழியும் தேவையின் அடிப்படையிலிருந்து, அத்தியாவசியததிலிருந்து, மற்ற மனிதர்களோடு உறவாடுதலிலிருந்து விளைந்தது.’’

மொழியின் பரிணாம வளர்ச்சி குறித்து ஸ்டாலின், தன்னுடைய ‘‘மார்க்சிசமும் மொழியியல் பிரச்சனைகளும்’ என்னும் நூலில் விளக்குகையில், கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
‘‘மொழி என்பது சமூகத்தின் அற்புதப்பொருள்களில் ஒன்று. அதன் மூலம் சமூகத்தின் உண்மை நிகழ்வுகளிலிருந்தே மொழியும் இயங்குகிறது. சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப, மொழியும் வளர்ந்தோங்குகிறது. சமூகம் மறையும்போது, மொழியும் மறைந்துவிடும். சமூகத்திற்கு அப்பால் மொழி கிடையாது. எனவேதான், மொழி என்பது அதன் சமூகத்தின் வரலாற்றுடன் பிரிக்கமுடியாதவகையில் பின்னிப்பிணைந்திருப்பதை, மொழி பேசும் மக்களின் வரலாற்றுடன், அதனை உருவாக்குபவர்கள் மற்றும் வளர்த்தெடுப்பவர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தால் மட்டுமே, மொழி குறித்தும் அதன் வளர்ச்சி விதிகள் குறித்தும் புரிந்துகொள்ள முடியும்.

‘‘மொழி என்பது ஒரு சாதனம், ஒரு கருவி. அதன் உதவியுடன் மக்கள் ஒருவர்க்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்கிறார்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். சிந்தனையுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதன் மூலம், மொழி வார்த்தைகளை உருவாக்கிப் பதிவு செய்கிறது, வார்த்தைகளிலிருந்து வாக்கியங்களைக் கோக்கிறது. இவ்வாறு மனிதனின் அறிவாற்றலுடன் கூடிய சிந்தனையும் சாதனைகளும் மனித சமூகத்தில் சிந்தனைகளைப் பரிவர்த்தனை செய்துகொள்வதை சாத்தியமாக்குகின்றன.

‘‘மொழி ஒட்டுமொத்தத்தில் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக, மக்களிடையே கலந்துறவாடுவதற்காக, சமூகத்தின் உறுப்பினர்களிடையே ஒத்திருப்பதற்காக, சமூகத்தின் தனிப்பட்ட மொழியினை ஏற்படுத்துவதற்காக, சமூகத்தின் மக்களின் வர்க்க நிலைப்பாட்டைப்பற்றிப் பொருட்படுத்தாமல் அவர்கள்அத்துணைபேர்களுக்கும் சமமாகச் சேவை செய்வதற்காக, மிகவும் நுட்பமான வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒட்டமொத்த மக்களுக்கும் பொதுவானதொரு மொழியாக இருப்பதிலிருந்து அது பிறழ்ந்து செல்லுமானால், மற்ற சமூகக் குழுக்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சில சமூகக்குழுக்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்குமானால், அது தன்னுடைய ஒழுக்கப்பண்பை இழந்துவிடுமானால், சமூகத்தில் மக்கள் மத்தியில் ஓர் உறவாடும் சாதனமாக இருப்பதிலிருந்து அது தன்னை அறுத்துக்கொண்டுவிடுகிறது, விரைவில் அது சில சமூகக் குழுக்களின் பிதற்றல்களாக மாறிப்போய்விடுகிறது, தரம்தாழ்ந்து கெட்டுவிடுகிறது, விரைவில் மறைந்து ஒழிந்துவிடுகிறது.’’

ஆனால், லத்தீன் போன்று உலகின் மற்ற செம்மொழிகளைப் போல அல்லாமல், தமிழ் மொழி தழைத்தோங்கி வளர்வது தொடர்கிறது என்றால், அது மக்கள் மத்தியில் -சாமானிய மக்கள் மத்தியில் - உயிரோட்டமுள்ள தொடர்பினை கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணமாகும்.

மாநாட்டின் இலச்சினையில் (‘logo’வில்), ஆழிப்பேரலைகளின் சீற்றத்தை எதிர்கொண்டு முறியடித்த கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலையும், அதனைச் சுற்றிலும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பறைசாற்றும் ஏழு அடையாளச் சித்திரங்களும் (icon) சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டின் சின்னத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் உருவச் சித்திரங்களைச் சித்தரித்திருப்பதால் அது தொடர்பாக ஒன்றைத் தெரிவிப்பது நலம்பயக்கும். பல்வேறு கலாச்சாரங்கள் ஒரு பொதுவான நூலால் இணைக்கப்பட்டிருப்பதை, தொடர்ச்சியை அது தெளிவுபடுத்துகிறது. பெருமதிப்பிற்குரிய தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர், டாக்டர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், முந்தைய மாநாடுகளின் போது சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையில், சிந்து சமவெளி நாகரிகக் கால கல்வெட்டுக்கள், திராவிடக் கலாச்சாரத்திற்குச் சொந்தமானவைகளாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். உண்மையில், சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் இடையேயிருந்த இணைப்பை நிறுவிட அவர் முயற்சித்தார். ‘சிந்து சமவெளி எழுத்துக்களின் பொருளைக் கண்டுபிடித்தல்’ என்னும் பணிக்காக, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை’ப் பெறுவதில் வெற்றி பெற்ற, டாக்டர் அஸ்கா பர்போலா அவர்களும் கூட, இந்து சமவெளி எழுத்துக்கள், பழைய தமிழுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள, திராவிட எழுத்துக்கள் என்று பரிந்துரைத்திருப்பதும் முக்கியத்துவம் உள்ளதாகும்.
அதுமட்டுமல்ல, மாநாட்டின் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற முகப்பு வாசகத்தில், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது ஒன்றே மனிதகுலம் என்பதை உரத்துச் சொல்கிறது. கலைஞர் அவர்கள் விளக்கியதுபோல் அது இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. ‘‘மனிதகுலம் அனைத்தும் குறுகிய சாதி, இன, பேதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும், அதுவே மனிதகுலத்தின் மகத்துவம்’’ என்று அழுத்தந்திருத்தமாகத் தெரிவிக்கிறது. நம் நாட்டின் வரலாறு , குறிப்பாக இப் பிராந்தியம், நமக்குப் போதிக்கும் முக்கியப் படிப்பினை இது.

பல்வேறு மொழிகளுக்கும் இடையே காணப்படும் பொதுமைப் பண்புகளும் மற்றும் அவை இன்றைய நாளில் பெற்றுள்ள வளர்ச்சிகளும், அவற்றின் செறிவான பண்பாட்டுப் பாரம்பர்யத்துடன், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி மேலும் வளர்த்தெடுத்திடவும் கவனம் செலுத்திடவேண்டும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையுமே எடுத்துக்காட்டிற்காக எடுத்துக்கொள்வோம். 2005இல் மிகவும் பொறுத்தமாகவே தமிழுக்கு செம்மொழிக்கான அந்தஸ்து அளிக்கப்பட்ட அதே சமயத்தில், தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கும் 2008இல்அதேபோன்று செம்மொழி அந்தஸ்துகள் அளிக்கப்பட்டன. தலைமுறை தலைலமுறையாக காப்பியின் மணத்தை நுகர்ந்துகொண்டும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பாடலை வானொலியில் கேட்டுக்கொண்டும் எழும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு நாம் வளர்ந்திருக்கிறோம். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய இம்மூவருமே - அவர்கள் தாய்மொழி வெவ்வேறாக இருந்தபோதிலும் - தங்கள் இசையை தெலுங்கில்தான் வடித்தார்கள். ஆயினும், இந்த இசை ‘கர்நாடக இசை’ என்றுதான் அழைக்கப்படுகிறது. இவ்வாறு நம் வேற்றுமைக்குள் இணக்கமான ஒற்றுமை காணும் பண்பு மிகவும் உன்னதமானது. தெலுங்கில் வடிக்கப்பட்ட இசையை எவ்விதச் சிரமமுமின்றி தமிழிலோ அல்லலது கன்னடத்திலோ மீள அளித்திட முடியும். இதுதான் நம்மிடையேயுள்ள மா மன்னுய்திக் கோட்பாட்டின் (universalism) மகத்துவமாகும். நம்முடைய பாரம்பர்யம் இதனை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இந்த எளிய உண்மையை அங்கீகரிக்க மறுத்து, ஒருசமயம் ஒருவர் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறில் நடைபெற்ற தியாகராசர் இசை விழாவின்போது ஒருவர் தமிழில் பாடியதற்காக அவர்மீது இசை வெறியர்கள் மிகவும் அசிங்கமாக நடந்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினாராம். மக்களைப் பிணைத்திடும் முகவராக வரலாற்றுரீதியாகச் செயல்பட்டு வரும் மொழி என்பது அதன் அடிப்படைச் சிறப்பியல்புக்கு எதிராக, தங்களுடைய வெறித்தனத்தையும் பிரிவினைகளையும் காட்டிட ஏவப்பட்டிருக்கிறது. வரலாறு நமக்குச் சொல்லித்தந்துள்ள உன்னதப் பண்புகளை மேம்படுத்துவதன் மூலம் இத்தகைய முயற்சிகள் தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.


கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், போராட்டத்தின்போது மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக, சமூகத்தின் வளர்ச்சிக் கருவியாக மொழியைப் பார்க்கிறோம். தேசிய இனத்தை வரையறுத்திடும் நான்கு அவசியமான நிபந்தனைகளில் ஒன்றாக, அதனை நாங்கள் பார்க்கிறோம். நாட்டில் விடுதலைப் போராட்டம் நடைபெற்று வந்த காலத்திலிருந்தே, இத்தகையப் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாங்கள் தெலுங்கு பேசும் மக்களுக்காக விசாலாந்திரா, மலையாளம் பேசும் மக்களுக்காக ஐக்கிய கேரளம், மராத்தி பேசுபவர்களுக்காக சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகிய மாகாணங்களுக்காகப் போராடினோம். அதேபோன்று தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட்டுகள் தமிழுக்காக, முனைப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். இங்கே, தியாகி சங்கரலிங்கம் பெயரைக் குறிப்பிடுவது சாலப்பொருத்தமுடையதாக இருக்கும். மதராஸ் ராஜதானி என்றிருந்ததை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதற்காக 64 நாட்கள் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, இறந்து போனார். அவர் இறந்தபின் தன் உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தினை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இம்மாநிலத்திலிருந்து வந்த முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், தொழிற்சங்கத் தலைவருமான பி. இராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் மற்றும் என். சங்கரய்யா ஆகியோர் மாநில சட்டமன்றத்தில் தமிழில் பேசுவோம் என்று பிரகடனம் செய்து, தமிழிலும் பேசினார்கள். அ. நல்லசிவம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில், தமிழில் தந்தி கொடுக்கும் முறைக்காகப் போராடினார். உண்மையில் இவர்கள் அனைவரும் தமிழுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கான போராட்டத்தில் நம் முன்னோடிகளாக விளங்கினார்கள். மக்களின் மொழியில் ஆட்சி அதிகாரம் நடைபெறாவிட்டால், ஜனநாயகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் எதுவும் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். ஐயன் திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் சொல்லியதுபோல,

காட்சிக் கெளியன் கடுஞ் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

(அதாவது, காட்சிக்கு எளிமையும், கடுங்சொல் கூறாத இனிய பண்போடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.) (அதிகாரம் 39, குறள்: 386)

ஜனநாயகம் வெற்றிகரமாக அமைந்திட, நிர்வாகத்துடன் எளிதில் அணுகத்தக்க தன்மை முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதற்கான பல அம்சங்களில் மொழி என்பது ஆட்சியாளர்களையும் ஆட்சிக்குட்பட்டவர்களையும் இணைத்திடுவதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள்/ஆளும் வர்க்கத்தினர் மக்களோடு கொண்டுள்ள உறவின் அளவையும் வரையறுக்கிறது. மொழி சமூகத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. ‘‘அரசியல் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும், சமூக வாழ்க்கையிலும், மக்களின் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளிலும்’’ அவர்களுக் கிடையேயான சிந்தனைகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் கருவியாக மொழி விளங்குகிறது.
இந்தப் பின்னணியில்தான், இன்றைய அரசாங்கங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. ‘மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்’ என்ற ‘நேரு மாதிரி’ என்கிற வலைப்பொறிக்குள் சிக்கிக்கொள்ளாமல், அந்தந்த மண்ணின் மொழி செயல்படுத்தப்படுவது உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். நிச்சயம் இதனை குறுகிய மொழிவெறி என்று எவரும் கருதிடக் கூடாது. அனைத்து மொழிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும், அனைத்து மொழிகளையும் தழைத்தோங்கச் செய்திட அனுமதித்திட வேண்டும்.
இன்றைய உலகில் எந்த ஒரு மனிதனும் தனியொரு அடையாளத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள்அடுத்தடுத்துப் பேசப்படக்கூடிய ஒரு நாட்டில் பல்வேறு அடையாளங்கள் விரிவடைந்திருக்கின்றன.

எழுதப்பட்ட வரலாறு நெடுகிலும், இன்றைய எதார்த்த நிலையிலும், இந்தியாவில் உள்ள நாம், தாய்மொழி, வேலை செய்யும் இடத்தில் புழங்கும் மொழி, படைப்புத்திறனை வெளிப்படுத்துவதற்கான மொழி என்று ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் மூன்று மொழிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்ட கர்நாடக இசை எடுத்துக்காட்டை இது விளக்குகிறது. இவ்வாறு நாட்டின் பல்வேறு அடையாளங்களை, எந்த ஒரு ‘குறிப்பிட்ட’ அடையாளத்திற்கும் தனி முக்கியத்துவம் தந்துவிடாமல், பேணி வளர்க்க வேண்டியது அரசின் கடமையாகும்.

நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், என் தாய்மொழி தெலுங்கு, இந்தி பேசும் டில்லியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் மேற்கு வங்க மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இங்கே உங்கள் முன் இம்மாமன்றத்தில் உலகம் முழுதுமிருந்து வந்துள்ள தமிழர்கள் முன்பாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். இதுதான் இந்தியா.

நான் உரையை நிறைவுசெய்வதற்கு முன், பரிசீலனைக்காக மாநாட்டை நடத்துவோருக்கு முன் சில ஆலோசனைகளை வைக்க விரும்புகிறேன். தமிழ் மிகவும் வளமான பாரம்பர்யத்தைக் கொண்ட ஒரு மொழி, இன்றைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இலக்கியங்களைப் படைத்த ஒரு மொழி. அதுமட்டுமல்லாமல், ஏட்டில் எழுதப்பெறாத, வாய்வழி வரலாற்றுச் செல்வங்களையும் (huge treasures of oral history) அபரிமிதமாகக் கொண்டுள்ள ஒரு மொழி. இவற்றை உடனடியாக ஆவணப்படுத்தி, என்றென்றைக்கும் நிலைபேறுடையதாக மாற்றக்கூடிய விதத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாட்டுப்புற இசை, நாடகம், நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கிஷங்களாக நாட்டுப்புற மக்கள் மத்தியில் விளங்கிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக இம்மாநாடு சில நடவடிக்கைகளைத் தொடங்கிடும் என்று நான் நம்புகிறேன். தமிழ்ச் சமூகமானது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் இயக்கம் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் என்று பல்வேறு இயக்கங்களால் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கிய வளங்களின் மூலம் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்தும் இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியத் தேவையாகும். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இம்மாநாட்டின் ஓர் அங்கமாக மட்டுமல்ல, இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளும்போது இணைத்துக்கொள்ளவும் பட வேண்டும்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

என்கிறது திருக்குறள். அதாவது அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமை உடையவர்கள் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
தமிழ் மொழியை மேலும் தழைத்தோங்கச் செய்வதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் அதன் வளமான பாரம்பர்யங்களிலிருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து கற்றுக்கொள்வோம்.

(ச.வீரமணி)

Monday, June 21, 2010

இந்நாள்; வரலாற்றில் ஒரு பொன்னாள்!



-பிரகாஷ் காரத்
மேற்கு வங்கத்தில் இடது முன் னணி அரசு ஆட்சிக்கு வந்து ஜூன் 21 ஆம் தேதியுடன் 33 ஆண்டு நிறைவ டைகிறது. இது வரலாற்றில் பொன் எழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். வேறெந்தவொரு மாநில அரசும் இத்தகு வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற தில்லை.

நீண்ட காலம் ஆட்சியில் இருந்ததி லும் மக்கள் நலன் சார்ந்த கொள்கை களை அமல்படுத்தியதிலும் வேறெந்த அரசியல் கட்சியும் இத்தகைய வரலாறு படைத்ததில்லை. இத்தகைய ஈடிணை யற்ற சாதனையை, கடந்த ஓராண்டில் மக்களவைத் தேர்தலிலும் சமீபத்தில் நக ராட்சி/மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், இடது முன்னணிக் கும் ஏற்பட்ட தேர்தல் பின்னடைவு களை வைத்துக் குறைத்து மதிப்பிட சில சக்திகள் முனைந்துள்ளன.

கடந்த முப்பதாண்டுகளில் இடது முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள் ளப்பட்ட அனைத்துச் சாதனைகளை யும் மறுதலித்திட இந்த சக்திகள், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள் கின்றன. “சிவப்பு ஆட்சி” யின் கீழ் “மூச் சுத்திணறிக் கொண்டிருக்கும்” ஒரு மாநி லமாக மேற்கு வங்கத்தைச் சித்தரிக்க வும், அங்கு உருப்படியாக எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது, அது பாலைவன மாக மாறிவிட்டது என்றும், மிகவும் மோசமான முறையில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இத்த கையப் பிரச்சாரங்கள் ஆளும் வர்க்கங்க ளாலும், பெரு நிறுவன ஊடகங்களாலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதில் ஆச்சரி யப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெ னில், இடது முன்னணி அரசாங்கத்தின் அனைத்துச் சாதனைகளுமே நாட்டை ஆளும் முதலாளித்துவ - நிலப்பிரபுத் துவ வர்க்கங்களின் நலன்களுக்கு உகந் தவை அல்ல என்பதும் அவற்றிற்கு எதி ராக கொண்டு வரப்பட்டவை என்பதும் ஆகும்.

மேற்குவங்க அரசு மேற்கொண்ட அளவிற்கு வேறெந்த மாநில அரசும் நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தவில் லை. நாட்டில் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலத்தில் ஐந்தில் ஒரு பாகம் மேற்கு வங்கத்தில் மட்டும் கையகப்ப டுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோ கிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துறை யில் வளர்ச்சியின் பயன்கள் அனைத் தும் நிலப்பிரபுக்களுக்கோ, பணக்கார விவசாயிகளுக்கோ சென்றடையாமல், முழுமையாக, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்குச் சென்றடைவதை உத்தரவாதப்படுத்தியதும் மேற்கு வங்கத் தைத் தவிர வேறெந்த மாநில அரசும் கிடையாது. பஞ்சாயத்து அமைப்புகள் முறைப்படுத்தப்பட்டதால் கிராமப்புற உழைக்கும் மக்கள், உள்ளூர் நலன் சார்ந்த விஷயங்களில் தாங்களே நேரடி யாகப் பங்கேற்க முடிந்தது. இடது முன் னணி தொடர்ந்து ஆட்சி செய்ததன் விளைவாக ஓர் உறுதியான பாதுகாப்புச் சூழ்நிலை அங்கே உருவாகி இருக்கிறது. உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவின ராலும் மேற்கொள்ளப்படும் ஜனநாயக உரி மைகள், அங்குள்ள அரசியலமைப்பு முறையின் உள்ளார்ந்த அம்சம் (inாநசநவே கநயவரசந) ஆகும். இடதுமுன்னணியின் முப் பதாண்டு கால ஆட்சி என்பது மேற்கு வங்கத்தின் முகத்தோற்றத்தை மிகவும் வலிவுடனும் பொலிவுடனும் மாற்றி அமைத்திருக்கிறது என்பதில் ஐய மில்லை.

இவ்வாறு கூறுவதன் மூலம், இடது முன்னணி அரசாங்கம் அங்கே முன் னேறி வந்ததற்கான பாதை மிகவும் எளி தான ஒன்று என்று பொருள் அல்ல. அதி லும் குறிப்பாக 1990களில், அகில இந் திய அளவில் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத் தப்பட்ட பின்னர், மக்கள் சார்புக் கொள் கைகளைப் பின்பற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. மாநில அரசு தன்னுடைய குறைந்தபட்ச அதிகா ரத்திற்குள் மாற்றுக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் கடும் சிரமத்திற்குள் ளாயின. நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகளையும், மத்திய ஆட்சி யாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்து டன் கூடிக் குலாவுவதையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் உறுதியாக எதிர்த்து வந்த தால், அவற்றின் மீதான தாக்குதல்களும் கடுமையாயின.

ஆளும் வர்க்கங்களுக்கும் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஓர் இடது முன்னணி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி செய்து வருவது என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிக ளும் 2004 மக்களவைத் தேர்தலின் போது தேசிய அரசியலில் ஆற்றிய செல் வாக்கான பங்களிப்பு இதனை மெய்ப்பித் தன. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் பல வீனப்படுத்த, மேற்குவங்க இடது முன் னணி அரசாங்கத்தைத் தனிமைப் படுத் துவது அவசியம் என்று அவை கருதத் தொடங்கியுள்ளன.

மேற்கு வங்கத்திற்குள்ளும், இடது முன்னணி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி யிலிருந்த போதும் வர்க்கப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வர்க்க உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இடது முன்னணி அரசாங்கம் பின்பற் றிய கொள்கைகளின் வரையறைக்குள் ளும் கூட புதிய முரண்பாடுகளும் பிரச் சனைகளும் முன்வந்துள்ளன. மாநிலத் தில் அரசியல் நிலைமைகளில் இவை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மிகவும் ஆழமாக ஆய்வு செய்து, புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பினை ஆராயும்போது சில அரசியல் உண்மை களை அவை வெளிப்படுத்துகின்றன. வலதுசாரி சக்திகள் கூட, தங்களுடைய கடுமையான கம்யூனிச எதிர்ப்பை மூடி மறைத்துக்கொண்டு, இடதுசாரி முகமூடி யை அணிந்துகொண்டு வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. மக்கள், வலது சாரிகள் மற்றும் பிற்போக்குவாதிகள் பக்கம் அணிதிரளமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு, இவை இவ் வாறு முகமூடிகள் அணியத் தொடங்கி இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் காங்கிரஸ் கட்சி தலை மையிலான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு முன் னணி சில அதிதீவிர முழக்கங்களை முன் வைத்து மக்களைத் திரட்ட முயற் சித்ததை நாம் கண்டோம். இதேபோன்று இப்போது மேற்குவங்கத்திலும் மார்க் சிஸ்ட் கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கில் சில கீறல்கள் விழுந்திருப் பதைப் பயன்படுத்திக்கொண்டு, வலது சாரி எதிர்க்கட்சிகள் அனைத்துக் கம்யூ னிச எதிர்ப்பு சக்திகளையும், பிரிவினை சக்திகளையும் ஒன்றுதிரட்டி தாக்குதல் தொடுக்க முனைந்திருக்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்குப்பின் கடந்த ஓராண்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஊழியர்கள் 245 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள் ளனர். விவசாயிகளும் குத்தகை விவ சாயிகளும் வலுக்கட்டாயமாக அவர் களது வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். கட்சி மற்றும் வெகு ஜன அமைப்புகளின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இடது முன்னணிக்கு எதிராக உள்ள அரசியல் சக்திகளின் உண்மையான கோர முகத் தை இத்தாக்குதல்கள் வெளிப்படுத்து கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகள் மீது மட்டுமல்ல, சாமா னிய மக்களுக்கு எதிராகவும் அவர்கள் இடதுமுன்னணி ஆட்சியில் அடைந்த ஆதாயங்களுக்கு எதிராகவும் அவர்கள் தொடுத்துள்ள தாக்குதல்களிலிருந்து அவர்களின் வர்க்கப் பின்னணியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. திரிணா முல் - காங்கிரஸ் கூட்டணியின் குறிக் கோள், இடது முன்னணி அரசாங்கத்தை அகற்றி, அதன் மூலம் “மோசமான சிவப்பு ஆட்சி”க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான்.

மேற்கு வங்கத்தின் நிலச்சீர்திருத்தங்கள் மூலமாக கிராமப்புறங்களில் ஏழை விவசாயி களுக்கு ஆதரவாக மாற்றியமைக்கப்பட்டுள்ள நில உறவுகளை, மீண்டும் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவான ஒன்றாக மாற்ற அனுமதிக்கப் போகிறோமா?

முதலாளித்துவ சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் மதவெறி, பிரிவினை வெறி சார்ந்த அரசியலை மேற்கு வங்கத்தில் மீண் டும் தலைதூக்க அனுமதிக்கப் போகிறோமா? என்பவையே இப்போது நம் முன் உள்ள முக்கிய கேள்விகளாகும்.

நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்களின் போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், தேர் தலுக்குப் பின் மாநிலத்தில் வகுப்புக் கல வரங்கள் வெடிக்கும் என்று அச்ச உணர்வை சிறுபான்மையினர் மத்தியில் கிளப்பியதை நாம் பார்த்தோம். கடந்த முப்பதாண்டுகளாக மேற்கு வங்கத்தில் மதநல்லிணக்கம் மூலம் நாம் ஏற்படுத்தியுள்ள அமைதிச் சூழலை, இவர்களின் குறுகிய அரசியல் லாபங்களுக் காக காவு கொடுத்திட அனுமதிக்கக்கூடாது.

கம்யூனிச எதிர்ப்புக் கூட்டணியானது, இனவெறி, மதவெறி, சாதிவெறி என்கிற அடையாள அரசியலை முன்னுக்குத் தள்ளி, அதன்மூலம் ஆதாயம் அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அரசியலா னது உழைக்கும் மக்கள் மத்தியில் உருவாகி யுள்ள ஒற்றுமையினைக் குலைத்து, சமூகத் தின் முன்னேற்றப் பாதையினை சீர்குலைத்து, மீண்டும் பின்னுக்குத் தள்ளும்.

இடது முன்னணி தொடர்ந்து ஆட்சியிலி ருந்ததன் மூலம் எண்ணற்ற சாதனைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், சில எதிர்மறை அம்சங்களையும் தோற்றுவித்திருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர்கிறது. நாட்டில் உள்ள அதிகாரங்களற்ற ஒரு மாநில அரசைத்தான் நடத்திக்கொண்டி ருக்கிறது என்ற அடிப்படைப் புரிதலுடன் தான் இதுநாள்வரையிலும் கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது. மாநில அரசின் கீழ் இயங்கும் அதிகாரவர்க்கம், காவல்துறை மற்றும் பல் வேறு நிறுவனங்கள் எவ்வித அடிப்படை மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு ஓர் அரசாங்கத்தில் செயல்பட்டதா னது, கட்சி மீதும் அதன் அமைப்பு மீதும் மோச மான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின் றன. இவ்வாறு ஓர் அரசாங்கத்தை ஆட்சி செய்யும் சமயத்தில், கட்சி ஊழியர்களின் கம்யூனிஸ்ட் குணங்கள் அரிக்கப்படுவதற் கான வாய்ப்புகள் ஏற்பட்டன. அவற்றைப் போக்கிட கட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய தேர்தல் முடிவுகள், மக்களின் சில பிரிவினர் நம்மிடமிருந்து தனிமைப் பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்கு இடது முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடு மட்டும் காரணம் என்று கூறுவதற்கில்லை. கட்சியில் உள்ள பலவீனங்களும், ஸ்தாபனக் குறைபாடுகளும் மற்றும் அங்குள்ள அரசியல் சூழ்நிலையும் அவற்றுக்கான காரணங்களா கும். பலவீனங்களைக் களைய, ஸ்தாபனக் குறைபாடுகளைப் போக்க மக்களுடன் மேலும் வலுவான பிணைப்பினை ஏற்படுத்த, கட்சி பல்வேறு முனைகளிலும் நடவடிக் கைகள் எடுத்திருக்கிறது.

இடது முன்னணி, சென்ற ஆண்டு பட் ஜெட்டில் அறிவித்த மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் அனைத்தையும் அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சியின் மோச மான கொள்கைகளால் கடுமையாக ஏறியுள்ள விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி மற் றும் பல்வேறு கொள்கைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

உண்மையில் பெரு நிறுவன ஊடகங்கள் சித்தரிப்பது போல் நிலைமை மேற்கு வங்கத் தில் கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் வெகுஜனத் தளம் உறுதியாகவும் விரிவடைந்தும் இருப் பது தொடர்கிறது. இடது முன்னணிக்கு எதி ராகக் கைகோர்த்துள்ள சக்திகளால் நிரந்தர மாக ஒன்றிணைந்து செயல்பட முடியாது. சரியான உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், மக்களிடம் சென்று தீர்மானகரமாகப் பணியாற்றுவதன் மூலமும், நிலைமைகளை மீண்டும் நமக்குச் சாதகமாக மாற்றியமைத் திட முடியும்.

பிற்போக்கு சக்திகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்திடவும் மக்களுடன் இணைப் பை மீண்டும் ஏற்படுத்தவும் மேற்கு வங்கத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் மேற்கொண்டுள்ள போராட்டத் திற்கு நாடு முழுவதும் உள்ள கட்சியும், இடது சாரி மற்றும் ஜனநாயக சக்திகளும் உடன் நிற் கின்றன. இடது முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதன் பொருள், உழைக்கும் மக்களின் உரிமைகளையும் அவர்கள் இதுவரை பெற்ற ஆதாயங்களையும் பாதுகாப்பது என்பதாகும். இடது முன்னணி அரசாங்கம் என்பது மேற்கு வங்கத்தில் உழைக்கும் மக்கள் நீண்ட நெடுங்காலமாக நடத்தி வந்த போராட்டங்களின் விளைபொ ருள் என்பதை நாம் எந்தக் காலத்திலும் மறந் திட முடியாது.

தமிழில்: ச. வீரமணி

அமெரிக்காவின் அடாவடித்தனம்



ஈரானுக்கு பொருளாதாரத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நான்கு நிரந்தர உறுப்பினர்களின் ஆதர வைப் பெறுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது. இதன்மூலம், அமெரிக் காவும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் அணுசக்தி பிரச்சனையில் ஈரானுடன் ஒரு மோதுதல் பாதையைத் தேர்ந் தெடுத்திருப்பது தெளிவாகிவிட்டது. பொருளாதாரத் தடைகள், ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தித் தொழில் களைக் குறி வைத்து மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. மேலும் தனிநபர்கள் மற்றும் பல நிறுவனங்களும் பொருளாதாரத் தடைக்கு உட்படும். சுமார் 40 கம்பெனி கள் கருப்புப் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.

பிரேசிலும் துருக்கியும் ஈரானுடன் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் செய்துகொண் டுள்ளன. அதன்படி ஈரான் 1200 கிலோ கிராம் எடையுள்ள குறைந்தளவு செறிவூட் டப்பட்ட யுரேனியம் எரிபொருளை துருக் கிக்கு மாற்றல் செய்திட ஒப்புக்கொண் டிருக்கிறது. இவ்வாறு ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டவுடனேயே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக் கிறது. டெஹ்ரான் ஆய்வு அணுஉலை மையம் மருத்துவப் பரிசோதனைகளுக் காக அணுசக்தி எரிபொருளைப் பயன் படுத்துவது வரை, அதற்கு மாற்றாக இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. பிரே சில் அதிபர் லூலாவும் துருக்கி பிரதமர் எர்டோகானும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக டெஹ்ரான் சென் றிருந்தனர். இந்த ஒப்பந்தம், 2008 அக் டோபரில் சர்வதேச அணுசக்தி முகமை மூலம் அமெரிக்கா முன்வைத்த நிபந் தனைகளின் அடிப்படையிலேயே மேற் கொள்ளப்பட்டது.

அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தை, போதுமான அளவிற்கு நல்லதாக இல் லை என்று இப்போது குறைகூறி இருக் கிறது. பாதுகாப்பு கவுன்சில் முன் பொரு ளாதாரத் தடை விதிக்கக்கோரி தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது, அமெரிக்கா சொன்ன வார்த் தைகளிலிருந்தே அது பின்வாங்கி இருப் பது, அதிபர் ஒபாமா, அதிபர் லூலாவுக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் நகலை பிரேசில் அரசாங்கம் வெளியிட்டிருப்ப தைக் பார்க்கும் எவரும் தெரிந்துகொள்ள முடியும். 2010 ஏப்ரல் 10 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், ஒபாமா, வாஷிங்டன்னில் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெற்ற சமயத்தில் லூலா மற்றும் எர் டோகான் ஆகியோருடன் ஏற்பட்ட சந்திப் பைக் குறிப்பிட்டிருக்கிறார். “எங்களைப் பொறுத்தவரை, 1200 கிலோகிராம் குறைந் தளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருளை அந்நாட்டிலிருந்து வெளி யேற்று வதற்காக செய்துகொள்ளப்படும் ஈரானுடைய ஒப்பந்தம், நம்பிக்கை ஏற் படுத்தும், பிராந்தியத்தில் நிலவும் பதட்ட நிலைமையைக் கணிசமாகத் தணிக் கவும் உதவும்” என்று அந்தக் கடிதத்தில் ஒபாமா மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டி ருக்கிறார். மேலும் அவர் அந்தக் கடிதத் தில், “மிகவும் முக்கியமான சமரசம் ஒன்று இதில் அடங்கியிருக்கிறது. சென்ற நவம்பரில், சர்வதேச அணுசக்தி முகமை ஈரானுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் ஈரான், துருக்கி நாட்டிற்கு 1200 கிலோ கிராம் குறைந்தளவு செறிவூட்டப் பட்ட யுரேனியம் எரிபொருளை அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டி ருக்கிறது.

அதன்படி பிரேசிலும் துருக்கியும் ஈரானிடமிருந்து குறைந்தளவு செறிவூட் டப்பட்ட யுரேனியத்தைப் பெறுவதற்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அமெ ரிக்கா மீண்டும் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமா மிகவும் மோசமாக நடந்துகொண்டிருக்கிறார். இது தொடர் பாக அமெரிக்கா முன்வைத்திடும் வாதம் என்னவெனில், 2008 அக்டோபரில் அமெரிக்கா அவ்வாறு கோரிய சமயத்தில், 1200 கிலோகிராம் என்பது ஈரானிடம் இருந்த குறைந்தளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பில் முக்கால் பங்கு என்றும், ஆனால் அதன்பின் ஈரான் அதிக அளவு உற்பத்தி செய்திருக்கிறது என்றும், எனவே, இப்போது, 1200 கிகி என்பது ஈரானில் உள்ள இருப்பில் பாதி அளவாகும் என்றும் சொல்கிறது. இவ் வாறு அமெரிக்கா இப்போது தன் நிலைக்கு தவறான முறையில் நியாயம் கற்பிக்கிறது.

ஈரானுக்குப் பொருளாதாரத் தடை விதித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மா னம் பாதுகாப்புக் கவுன்சிலில் ஒருமன தாக நிறைவேற்றப் படவில்லை. அதனை பிரேசிலும், துருக்கியும் எதிர்த்துள்ளன. லெபனான் வாக்களிக்கவில்லை. சீனா, பொருளாதாரத் தடைகள் தொடர்பாக தீர்மானத்திலிருந்த பல வாசகங்களை நீக்கச் செய்திருக்கிறது. எரிசக்தித் துறை யில் பொருளாதாரத் தடைக்கு அது ஒப்புக் கொள்ளவில்லை. மேற்கத்திய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்துகொண்டு மற்ற நிரந்தர உறுப்பினர் நாடுகளும் ஏன் வாக்களித்தன என்பது இன்னமும் விளங்காத புதிராகவே இருக்கின்றன.

இந்த நிகழ்வானது, ஒபாமா நிர்வாகத் தின் மத்தியக் கிழக்கு நாடுகள் கொள்கை தொடர்பாக நிறைய அம்சங்களை வெளிப் படுத்தி இருக்கின்றன. இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர் பாக கருத்துக்கள் வெளியிட்டபோதிலும், அதற்கு அமெரிக்காவின் கண்மூடித்தன மான ஆதரவு என்பது தொடர்கிறது. காசா விற்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்கள் குறித்தும், பலர் அதில் கொல்லப்பட்டிருப்பது குறித்தும் இன்னமும் அது வாய் திறக்கவில்லை. இது தொடர்பாக சர்வதேச விசார ணைக்கு எதிராகவும் அமெரிக்கா நிலை எடுத்திருக்கிறது. கடைசியாக, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுள்ள அதே அளவு பகைமை உணர்ச்சியுடன் அமெ ரிக்காவும் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்பது இப்போது தெளிவாகி விட்டது.

பிரச்சனைகளைத் தீர்த்திட பொருளா தாரத் தடைகள் வழியல்ல என்று இந் தியா பதிவு செய்திருக்கிறது. ஆயினும், சர் வதேச அணுசக்தி முகமையில் ஈரான் குறி வைத்துத் தாக்கப்படும் போதெல் லாம், அமெரிக்காவின் பக்கம்தான் இந் தியா நிலை எடுத்திருக்கிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் தீர்மானத்தின் அடிப்படையில்தான் இப்போது பாது காப்பு கவுன்சிலில் பொருளாதாரத் தடைக்கான வழிகள் திறக்கப்பட்டிருக் கின்றன. அமெரிக்காவின் பக்கம் நின்று ஆதரவு நிலை எடுத்ததற்காக இந்தியா வின் முதுகில் தற்போது அமெரிக்கா தட் டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் காரண மாக, இந்தியாவிற்கு ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை இன்னமும் இறுதிப்படுத்தா மல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இப் போதும்கூட, ஈரானுடன் உறவுகளை வலுப்படுத்துவதில்தான், அதனுடன் நம் முடைய பொருளாதார மற்றும் வர்த்தகப் பிணைப்புகளை, அதிலும் குறிப்பாக எரிசக்தித்துறையில் விரிவாக்கிக் கொள் வதில்தான் நாட்டின் உண்மையான நலன்கள் அடங்கியிருக்கின்றன என்ப தை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை ஒரு பொருட்டாக கருதாமல், இந்தத் திசை வழியில் சென்றிட இந்தியா முன்வர வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Thursday, June 10, 2010

நீதித்துறையிலிருந்து ஓர் அநீதித் தீர்ப்பு



உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்தான - போபால் விஷவாயுத் துயரத்தில் - கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின் இறுதியாக வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்தவர்களைத் தண்டித்து ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இத்தீர்ப்பு குறித்து உலகம் முழுதும் ‘தாமதிக்கப்பட்ட நீதி என்றும் மறுக்கப்பட்ட நீதி என்றும்’ கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. வெளிப்படையாக சொல்வதென்றால் இவ்வழக்கில் நீதி வழங்கப்படவில்லை. அநீதி -அதுவும் கிரிமினல் அநீதி - வழங்கப்பட்டிருக்கிறது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான வாரன் ஆண்டர்சன் நியூயார்க்கில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேற்படி யூனியன் கார்பைட் நிறுவனத்தின் நிர்வாகிகளில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு பேர்களுக்கு (அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்) மட்டும் வெறும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்டுக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்தும் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை வழங்கப்பட்ட அனைவருமே 20 ஆயிரம் ரூபாய்க்கு சொந்தமாக முறி எழுதிக்கொடுத்ததன் பேரில் உடனடியாக பிணையிலும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.

உலகின் மிக மோசமான இத்தொழிற்சாலை விபத்து குறித்து வாசகர்களுக்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். 1994 டிசம்பர் 2-3 இரவு இக்கோர விபத்து ஏற்பட்டது. போபாலில் இருந்த யூனியன் கார்பைட் தொழிற்சாலையின் ரசாயன உலையிலிருந்து 40 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான ‘டாக்சிக் வாயு’ கசிந்ததை அடுத்து, அந்தக் கணமே தொழிற்சாலையிலிருந்த நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள், போபாலிலும் அதனைச் சுற்றிலும் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் இருந்தபோதிலும், இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துவிட்டார்கள் என்பதும், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆயுள் பூராவும் அனுபவிக்கக்கூடிய விதத்தில் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதும் உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட உண்மைகளாகும். விபத்து நடப்பதற்கு முன்பாக, யூனியன் கார்பைட் நிறுவனத்திற்குப் பலமுறை எச்சரிக்கைகள் விடுத்தும், அது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததனால்தான் இப்பேரிடர் ஏற்பட்டது என்பது புலனாய்பு மூலம் மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.

யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டர்சன், விபத்து நடைபெற்றபின் நான்கு நாட்கள் கழித்து போபால் வந்த போது, தொழிற்சாலையை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் நடத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இறக்கக் காரணமாக இருந்ததற்காக, கைது செய்யப்பட்ட போதிலும், உடனடியாக அவர் 20 ஆயிரம் ரூபாய்க்கு சொந்த முறி எழுதிக்கொடுப்பதன் பேரில் விடுவிக்கப்பட்டு, மாநில அரசின் விமானம் ஒன்றில், புதுதில்லிக்கு அனுப்பப் பட்டு, அங்கிருந்து அமெரிக்காவிற்குத் தப்பித்துச் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுநாள் வரையில் அவர்
இவ்வழக்கில் ‘காணப்படாதவராகவே’க் கருதப்பட்டு வந்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்த பிணைமுறியில், வழக்கு விசாரணையின்போது இந்தியாவுக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராவதாக உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், அவர் அதனைச் செய்திடவில்லை, அவரை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கு இந்திய அரசும் முயற்சிகள் மேற்கொள்ள இதுவரை தவறிவிட்டது.

1989இல் இந்திய அரசும், இந்திய நீதித்துறையும் இணைந்து எவருக்கும் விளங்காத வகையில் யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக இருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிட்டுவிட்டன. இதற்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் 1991இல் இது தொடர்பான வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்தது, ஆயினும், 1996இல் மீண்டும் எவருக்கும் விளங்காத வகையில், உச்சநீதிமன்றமானது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்டியிருந்த பத்தாண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய வகையில் சாட்டியிருந்த கடுமையான கொலைக் குற்றச்சாட்டுக்களை, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் விதிக்கக்கூடிய ‘கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்’ என்ற குற்றச்சாட்டுகளாக மாற்றியது. இவ்வாறு மாற்றியமைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அதன்பின்னர் பதினைந்து ஆண்டுகள் கழித்து, இப்போது எவ்விதத்திலும் நியாயமற்ற ஓர் அநீதித் தீர்ப்பு, அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய அநீதியை ஏற்கமுடியாது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இந்தியாவில் நீதி வழங்கும் முறையை சீர்குலைத்திடவோ, மறுதலித்திடவோ அனுமதிக்க முடியாது. இது அனுமதிக்கப்பட்டால், பின் நம் நாட்டு மக்களுக்கு நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே சுக்குநூறாக உடைந்து தகர்ந்துவிடும். இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளமைக்குப் பரிகாரம் காண இந்திய அரசாங்கம் உளப்பூர்வமாக முன்வர வேண்டும். பல்லாயிரக் கணக்கானோர் மடியக் காரணமாக இருந்த கோரவிபத்திற்குக் காரணமானவர்கள் அனைவரும் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இக்கோர விபத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சராசரியாக வெறும் 12 ஆயிரத்து 410 ரூபாய் மட்டும் இழப்பீடாக வழங்கியிருப்பது எவ்விதத்திலும் ஏற்க முடியாததாகும்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுதும் மக்கள் கொந்தளித்து எழுந்துள்ளதற்குப் பதிலளிக்கும் விதத்தில் சட்ட அமைச்சர், ‘‘ஆண்டர்சன்னுக்கு எதிராக உள்ள வழக்கு சட்டரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இன்னமும் நிலுவையில் இருப்பதாகவும், ‘‘அவர் கொண்டுவரப்பட்டால், அவர் இப்போதும் விசாரிக்கப்பட முடியும்’’ என்று கூறியிருக்கிறார். இதனை அரசு உளப்பூர்வமாக செய்தால் மட்டுமே நாட்டு மக்களின் கோபத்தைத் தணிக்க முடியும். அதுமட்டுமல்ல, சட்ட அமைச்சர் மேலும், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இத்தகைய மோசமான தொழிற்சாலை விபத்துக்கள் நிகழுமானால் அத்தகைய விபத்துக்களுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான முறையில் பாயக்கூடிய விதத்தில் புதிய சட்டம் கொண்டுவர இருப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.
இவர் கூறுவது உண்மையெனில், ஐமுகூ-2 அரசாங்கமானது, மிகவும் ஆழமாக மறுபரிசீலனை செய்து, நாடாளுமன்றத்தில், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, அவசரம் அவசரமாக அறிமுகப்படுத்தியுள்ள (ராணுவம்சாரா) சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். போபால் விஷவாயு விபத்து தொடர்பாக, இத்தனை ஆண்டுகள் நீண்ட நெடிய வழக்கு விசாரணைகளுக்குப்பின் யூனியன் கார்பைட் நிறுவனம் இதுவரை வெறும் 713 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கியிருக்கிறது. இப்போது அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமாகிவிட்டால், பின்னர் அணுசக்தி கம்பெனிகள் விபத்து ஏற்படின் அளிக்கப்பட விருக்கும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையே வெறும் 500 கோடி ரூபாய்கள்தான். விபத்துக்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டால் இழப்பீட்டுத் தொகை என்பது 2100 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட முடியும். அணுசக்தி உலைகளில் விபத்து என்றால், அதனால் விளையும் பாதிப்புகள் பல மடங்கு இருக்கும் என்பது இன்றையதினம் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். ஆயினும் மேற்படி சட்டமுன்வடிவானது, போபால் விஷவாயு விபத்து வழக்குகளில் யூனியன் கார்பைட் நிறுவனம் கொடுத்த அற்பத் தொகையை விட அற்பமாக அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள அனுபவத்தின் வெளிச்சத்திலிருந்து இந்தச் சட்டமுன்வடிவு நிராகரிக்கப்பட்டாக வேண்டும் என்பது தெளிவு.
இப்போது வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பானது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ அரசுகளுக்கு மிகவும் தெளிவாக ஒரு செய்தியை இத்தீர்ப்பின்மூலம் அனுப்பியிருக்கிறது. அதாவது, அவை இந்தியாவில் தொழிற்சாலைகளை நிறுவி, கொள்ளை லாபத்தை அறுவடை செய்து கொள்ளலாம். தொழிற்சாலை விபத்துக்கள் நடைபெற்றால் அதன் காரணமாக அதிகமான அளவில் இழப்பீடு வழங்க வேண்டியிருக்குமோ என அவை கிஞ்சிற்றும் அஞ்சவேண்டியதில்லை. இத்தகைய சிந்தனையோட்டத்தைத்தான் அமெரிக்க அரசின் அமைச்சர் ஒருவர் பிரதிபலித்திருக்கிறார். யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக எதிர்காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஏற்கனவே அமெரிக்க அரசு கூறிவிட்டது.

ஐமுகூ-2 அரசாங்கமானது, எக்காரணம் கொண்டும் சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவை நிறைவேற்ற வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்திற்கு இரையாகிவிடக் கூடாது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர, சட்ட அமைச்சர் உறுதியளித்துள்ளபடி, உண்மையாகவே நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர் மீதான விசாரணையை விரைவுபடுத்திட வேண்டும், மேலும் அரசாங்கம் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திடவும் உச்சநீதிமன்றத்தை அணுகிட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய கோர விபத்துக்கள் நிகழும் சமயங்களில் அதற்குக் காரணமானவர்கள் மீது தாமதமின்றி வழக்கு தொடுத்து, நீதி வழங்கிடக் கூடிய வகையில் சட்டங்களை வலுப்படுத்திடவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Thursday, June 3, 2010

மேற்கு வங்க நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்கள்



மேற்கு வங்க மாநிலத்தில், 2010 மார்ச் 30 அன்று 81 நகராட்சி/ மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் இடது முன்னணி 18 நகராட்சி/மாநகராட்சிகளில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 26இலும், காங்கிரஸ் 7இலும், இடது எதிர்ப்புக் கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. 23 நகராட்சிகளில் தொங்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 3 இடங்களில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது வெற்றி தோல்வியற்ற (tie) நிலை ஏற்பட்டிருக்கிறது. யார் பக்கம் இது அமையும் என்பது எதிர்காலத்தில்தான் தெரிய வரும்.

ஜனநாயக நடைமுறைகளை உயர்த்திப் பிடிக்கும் உன்னத பாரம்பர்யத்தின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ள இடது முன்னணி, எதிர்காலத்தில் சரியான திசைவழியில் தன்னை தகவமைத்துக்கொள்ளக் கூடிய விதத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக முறையான மதிப்பீட்டையும் பரிசீலனையும் மேற்கொள்ளும் என்று பிரகடனம் செய்கிறது.
ஊடகங்கள், மேற்கு வங்கத்தில் நகராட்சிகளுக்காக நடைபெற்ற தேர்தல்கள் குறித்து, 2011 மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான ‘அரை இறுதி ஆட்டம்’ (‘ளநஅi-கiயேட’) என்று மிகப்பெரிய அளவில் தம்பட்டம் அடித்தன. அரசியல் உணர்வு அதிகம் உள்ள வங்க வாக்காளர்கள், ஒவ்வொரு தேர்தலையும் அதன் நோக்கத்தின் அடிப்படையில் தனித்தனியே நுணுகி அணுகும் குணம் கொண்டவர்களாவார்கள். மக்களவைத் தேர்தல் என்பது மத்தியில் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்றது. மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், மாநில அரசைத் தீர்மானிப்பதற்கான ஒன்று. அதேபோன்றுதான், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கெனத் தனித்தனிக் குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு தேர்தல்களுமே வெவ்வேறு நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

திரிணாமுல் காங்கிரஸ், முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதொரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்திட வேண்டும் என்றும், தேர்தல்களை முன்கூட்டியே நடத்திட வேண்டும் என்றும் அடிக்கடி காட்டுக் கூச்சலிட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, பகுத் தறிவுக்குப் பொருந்தாததுமாகும். நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 33 ஆயிரம் ஆகும். இவர்கள் மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 5 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தில் வெறும் 17 விழுக்காடேயாகும். மீதமுள்ள 83 விழுக்காட்டினர் கிராமப்புற வங்க வாக்காளர்கள். இவர்கள்தான் கடந்த காலங்களில் மேற்கு வங்க மாநில அரசின் குணத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய கூறாய் இருப்பவர்கள். எனவே, நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள்தான் ஒட்டுமொத்த மாநில வாக்காளர்களின் பிரதிபலிப்பு என்பது தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.
ஆயினும், இது நகர்ப்புற வங்கத்தின் பிரதிபலிப்பாகும். அந்த அளவிற்கு, இத்தேர்தல் முடிவுகள் குறித்து ஓர் ஆழமான ஆய்வினை மேற்கொள்ள இடது முன்னணி உறுதி பூண்டிருக்கிறது. 2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களின்போது, இடது முன்னணி பெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆழமான அளவில் சரிவு இருந்தது. அப்போது 1966 நகராட்சி வார்டுகளில் 525இல் (அதாவது 29.73 விழுக்காடு) அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது நடைபெற்றுள்ள தேர்தல்களில் இடது முன்னணி 1791 நகராட்சி வார்டுகளில் 603இல் (அதாவது 33.61 விழுக்காடு) வெற்றி பெற்றிருக்கிறது. எனவே. இப்போதுள்ள நிலைமை என்பது இடது முன்னணியின் செயல்பாட்டைப் பொறுத்த வரை சற்றே முன்னேற்றம் என்றுதான் கூறவேண்டும்.
எனவே, மக்களவைத் தேர்தல்களின்போது ஏற்பட்ட பின்னடைவு மீள மாற்றியமைக்கப்பட வில்லை, மாறாக அவ்வாறு ஏற்பட்ட பின்னடைவு தொடராமல் நிறுத்தப் பட்டிருக்கிறது.
2005இல் நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்களின்போது, இடது முன்னணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மொத்தம் உள்ள 81 நகராட்சி/மாநகராட்சிகளில் 50 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது. ஆயினும் 2009 மக்களவைத் தேர்தல்களில், இவற்றில் 19 இல் மட்டுமே அதிக அளவில் வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது நடைபெற்ற தேர்தல்களில் 18இல் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆயினும், நாம் முன்பே குறிப்பிட்டதைப்போல, 26 நகராட்சி/மாநகராட்சிகளுக்கான தலைமை இனிமேல்தான் தீர்மானிக்கப்பட இருக்கின்றன. இடது முன்னணிக்கு பிரதானமாகப் பின்னடைவு என்பது கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்பகுதிகளில் இருந்துதான் ஏற்பட்டிருக்கிறது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் 21 நகராட்சி/மாநகராட்சிகளும், ஹூக்ளி மாவட்டத்தில் 11ம் இருக்கின்றன. 2005இல் இடது முன்னணி இவற்றின் மொத்தம் உள்ள 32 நகராட்சி/மாநகராட்சிகளில் 26இல் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் இப்போது இடது முன்னணி நான்கில் மட்டும் வெற்றி பெற்றிருக்கின்றன, இரண்டில் எவருக்கும் வெற்றி தோல்வி இல்லா (tie) நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆழமான விஷயமாகும். சரியான படிப்பினைகளுக்கு வரக்கூடிய விதத்தில் இவை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் சரியான முறையில் இவற்றை மேற்கொள்ள உறுதி பூண்டிருக்கின்றன.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, June 1, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம்: மறு ஏலம் நடத்துக! ஊழல் அமைச்சர் ஆ.ராசாவை நீக்கவேண்டும்: சீத்தாராம் யெச்சூரி





புதுதில்லி, ஜூன் 1-

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு பெரும் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் முந்தைய விற்பனை ரத்து செய்யப்பட்டு, புதிதாக 3-ஜி ஏலம் விட்டதுபோல் ஏலம் விட வேண்டும் என்றும், 2ஜி ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவ தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அமைச்சர் ஆ.ராசா அமைச்சர வையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், 2ஜி ஊழலில் ஈடுபட்ட அதிகாரி கள் மீது போதிய அளவிற்கு குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி கூறினார்.

தலைநகர் புது தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் செவ்வாய் அன்று பத்திரிகையாளர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதம ருக்கு எழுதிய கடிதம் மற்றும் அஞ்சல் மற்றும் தொலைத்தகவல் தணிக்கை அலு வலகத்தின் தணிக்கைக் குறிப்புகளின் நகல்களை வெளியிட்டு, சீத்தாராம் யெச் சூரி கூறியதாவது:

சமீபத்தில் பிரதமர் அவர்கள் பத்திரி கையாளர்களைச் சந்தித்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாகவும், அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவும் சில கருத்துக் களைத் தெரிவித்திருக்கிறார். 2ஜி விற்ற போது கிடைத்த வருவாய்க்கும் 3ஜி ஸ்பெக்ட் ரம் விற்றபோது கிடைத்த வருவாய்க்கும் இடையில் உள்ள பெரிய அளவிலான வித் தியாசத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக நான் மீண்டும் இப்போது பிரத மருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கு முன்பும் இரு தடவைகள் இது தொடர்பாக அவருக்குக் கடிதங்கள் எழுதி யிருக்கிறேன்.

அமைச்சர் ஆ. ராசாவின் நடவடிக்கை களின் காரணமாக, அரசு கஜானாவிற்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர் சட்டத்திற்குப் புறம்பாகவும், அரசு விதி முறைகளுக்குப் புறம்பாகவும் எப்படி எல் லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதையும், ஒருசிலருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர் இவ்வா றெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் பிர தமரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக் கிறேன்.

சமீபத்தில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட் டதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அள வில் வருவாய் வந்திருக்கிறது. இதே நடை முறைப்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டி ருந்தால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அப்போது கூடுத லாக வருவாய் வந்திருக்கும். அமைச்சர் சட்டவிரோதமாக அரசு விதிகளைத் திருத்தி இருக்கிறார். அதன் காரணமாகத் தான் அரசிடமிருந்து 2ஜி உரிமங்களை வாங்கிய நிறுவனங்கள் ஒரு குறுகிய காலத் திற்குள்ளேயே தாங்கள் வாங்கியதின் ஒரு பகுதியை ஐந்தாறு மடங்கு விலைக்கு அந்நிய நிறுவனங்களிடம் விற்க முடிந்தி ருக்கிறது. எனவே அரசாங்கம் 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் இன்றைய சந்தை மதிப்பின் கீழான தொகையை முன்பு 2ஜி உரிமங்களை வாங்கிய கம்பெனிகளிட மிருந்து பெறத் தயங்கக் கூடாது. இவ்வாறு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களிடமிருந்து வாங்க வேண்டும். அவ்வாறு அவர்கள் தர மறுத்தால், அவர் களுக்கு அளித்துள்ள உரிமங்களை ரத்து செய்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியிருக்கிறேன்.

தவறான தகவல்

பிரதமர், பத்திரிகையாளர்களிடம் விவா திக்கையில் அமைச்சர் ஆ.ராசா ‘ட்ராய்‘ விதிமுறைகளின்படிதான் நடந்துகொண்டி ருப்பதாகத் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் தவறான தகவல் என்பதையும், எப்படியெல்லாம் அவர் ‘ட்ராய்’ விதிகளை மீறிச் செயல்பட் டிருக்கிறார் என்பதையும் பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன்.

எனவே, பிரதமர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்ற பழைய உரிமங்களை ரத்து செய்துவிட்டு, இப்போது 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்றதுபோல் மீண்டும் 2ஜி உரிமங்களை விற்று, அரசுக்கு ஏற்பட்ட இழப்பைச் சரி செய்திட வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்றது தொடர்பாக, மத்திய குற்றப்புலனாய்வுக் கழகத்தின் சார்பில் விசாரணை நடைபெற்றுக் கொண் டிருப்பதால், அவ்விசாரணைக்குக் குந்த கம் ஏற்படாத வகையில், அமைச்சர் ஆ. ராசா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குத் துணை போன அதிகாரிகள் பலர் தொடர்பாக போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண் டும் என்று கடிதத்தில் பிரதமரைக் கோரி யிருக்கிறேன்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆராய்ச்சித்துறையை சேர்ந்த பிரபிர் புர்காயஸ்தா உடன் இருந்தார்.

(ந.நி.)