Sunday, October 30, 2016

மோடியின் ராஜ்ஜியத்தில் வேலையின்மை



இந்தியா, வேலைவாய்ப்பை உருவாக்கு வதில் ஓர் ஆழமான நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நல வாரியம் (Labour Bureau) சமீபத்தில் வேலை வாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை குறித்து ஓர்ஆய்வினை நடத்தி அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் வேலை யில்லாத் திண்டாட்டம் கடந்த ஐந்தாண்டுகளில் இப்போது மிக அதிகமாக இருப்பதாகவும், உழைப்புசக்தியை தரக்கூடிய 15வயதுக்கு மேற் பட்டவர்களில் 5 சதவீதத்தினர் வேலையின்றி வாடுவதாகவும் தெரிவித்துள்ளது. மூவரில் ஒருவர் ஓராண்டுக்குக் கீழேதான் வேலை பார்ப்பதாக அது தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 சதவீதம் என்பது 2 கோடியே 30 லட்சம் பேர்களாகும். மேலும், தகுதிக்குக் குறை வான வேலையில் இருப்பவர்கள் (underemployed) 35 சதவீதத்தினர். அதாவது இது சுமார் 16 கோடி பேர்களாகும்.
தொழிலாளர் நல வாரியத்தின் மற்றுமோர் ஆய்வறிக்கை, தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு அல்லது வேலைவாய்ப்பின்மை என்ன என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. வேலை வாய்ப்பை மிகவும் முனைப்பாகத் தந்து கொண்டிருந்த எட்டு தொழில்பிரிவுகளில் -- அதாவது, ஜவு ளித்தொழில், தோல் பதனிடுதல், உலோகங்கள், மோட்டார், ரத்தினக்கற்கள் மற்றும் தங்க நகை ஆபரணங்கள், போக்குவரத்து, தகவல்தொழில்நுட்பம், கைத்தறி மற்றும் விசைத்தறி என்னும் எட்டு தொழில்பிரிவுகளில் -- வேலைவாய்ப்பு குறித்த காலாண்டு ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அவ்வாறு 2015 ஜூலை - செப்டம்பருக்கான காலாண்டிற்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் 1,34,000 வேலைகள் மட்டுமே உருவாக்கப் பட்டிருப்பதாகக் கண்டிருக்கிறது. இது மிகவும்குறைவான ஒன்றாகும். 2009 முதல் 2011 வரை யிலான ஆண்டுகளில் ஒவ்வோர் காலாண்டிலும் சுமார் 3 லட்சம் வேலைகள் உருவானது என்பதுடன் ஒப்பிட்டால் இப்போது ஏற்பட்டுள்ள சரிவினை புரிந்து கொள்ள முடியும்.
மோடி அரசாங்கத்தால் ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் வேலையின்மை வளர் ச்சிக்கே இட்டுச் சென்றிருக்கிறது. 2012-13ஆம் ஆண்டிற்கும் 2015-16ஆம் ஆண்டிற்கும் இடையே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு ஒரு சதவீத வளர்ச்சிக்கும், வேலைகளில் உயர்வு என்பது வெறும் 0.20 சதவீதம் மட்டுமேயாகும். மோடி அரசாங்கத்தின் தோல்விகளிலேயே மிகப்பெரிய படுதோல்வி, எதுவெனில் இதுவரை வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி இருப்பதே யாகும்.
பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில், அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு, ஒவ்வோராண்டும் இளைஞர்களுக்காக ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது. மோடியின் மிகவும் பிரியமான கோஷமான, ‘இந்தியாவில் உற்பத்தி செய்க (Make in India)’ என்னும் கோஷம், வெறும் வெற்றுக் கோஷம் என்பது மிகவேகமாக மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொது முதலீடு குறித்து நிதி அமைச்சர் என்னதான் வாய்ச்சவடால் அளித்திருந்தபோதிலும், அநேக மாக அவ்வாறு எந்த முதலீடும் இல்லை.
தனியார் துறையிலும் முதலீடு என்பது மிகமிகக் குறைவு. தொழில் உற்பத்தியும் கடுமையாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களிலும் முறையே 2,5 சதவீதம், 0.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் வேலைவாய்ப்பு வளர்ச்சியை முடக்குவதற்கான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. கடந்த மூன்றாண்டு காலமாக மத்திய அரசு சமர்ப்பித்த மூன்று பட்ஜெட்டுகளிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்டிருக்கிற வளர்ச்சியின் அளவிற்குக் கூட உண்மையான வளர்ச்சி என்பது இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் பங்கு குறைந்து கொண்டே வந்திருப்பதால், உள்நாட்டுத் தேவை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மோடி அரசாங்கம்தன்னுடைய ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் செலவினங்களை வெட்டியது. மறைமுக வரிகளை உயர்த்தி யது. (இது மறைமுகமாக செயற்கையான விதத்தில்மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்டியது.) இவ்விரு காரணிகளும் மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துள் ளன. மோடி அரசாங்கமானது வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு, தொழிலாளர் நலச் சட்டங்கள் குந்தகம் விளைவிப்பதாகக் குறை கூறிக் கொண்டிருக்கிறது. எனவே, இப்போது அது வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோதசட்டங்களாகவும், முதலாளிகள் நலச் சட்டங் களாகவும் மாற்ற நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. விவசாய நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும் இணைந்து பல மாநிலங்களில் சமூகப் பதற்ற நிலைமை மற்றும் மக்களிடையே அதிருப்தி ஆகியவற்றையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு சாதியினர் தங்கள் சாதியினருக்கு அதிகமான அளவில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றுபோராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசுத்துறை களில் மிகமிக அரிதாக உள்ள வேலைவாய்ப்புகளே இத்தகைய போராட்டங்களின் விளைவாகும்.எனவே, மோடி அரசாங்கத்தின் வேலை களைக் கொல்லும் கொள்கைகளுக்கு எதிராகவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்திலும், விவசாய வளர்ச்சி, பொருளாதாரத்தில் தேவைகளை அதிகரிக்கும் விதத்திலும், தொழிற் சாலைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்திலும் மாற்றுக்கொள்கைகளை அமல் படுத்த வேண்டும் என்பதற்காக போராடுவது இன்றைய தினம் கட்டாயமாக மாறி இருக்கிறது.
(அக்டோபர் 25, 2016)
தமிழில்: ச. வீரமணி


Tuesday, October 25, 2016

மோடியின் உண்மையான முகம் எது?


மோடியின் உண்மையான முகம் எது?
“”முஸ்லீம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டாமா? அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டாமா? என்பதற்கு நீங்கள்தான் (மக்கள்) பதில் கூற வேண்டும்.” (தினமணி, 25 அக்.2016)
என்று பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மஹோபா என்னுமிடத்தில் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறது,
இதே மோடி 2002இல் குஜராத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அங்கே அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் இருந்த முஸ்லீம் பெண்களைப் பார்த்து என்ன கூறினார் தெரியுமா?
“குஜராத்தில் உள்ளவை முஸ்லீம்கள் பாதிப்பு நிவாரண முகாம்களா? அல்லது குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளா?,” என்று கிண்டலடித்தார். இவரது பேச்சை என்டிடிவியும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேனும் வெளியிட்டிருந்தன.

அது எந்த மோடி? இது எந்த மோடி?

Monday, October 24, 2016

வரலாற்றுச் சாதனையாளர் ராணா அய்யூப் அ.மார்க்ஸ்



(குஜராத்தின் உள்துறை அமைச்சரும் நரேந்திர மோடியின் மிக மிக மிக நெருக்கமான அந்தரங்க நண்பருமான அமித்ஷா உத்தரவின் பேரில் எடுபிடி ஐ.பி.எஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் என்பதை அமித்ஷாவின் அந்த தொலைபேசி உரையாடல்களின் மூலம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்தியவர்தான் ராணா. ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனைக்குக் காரணமாக இருந்தவர்தான் அந்த முஸ்லிம் இளம் பெண் ராணா.)
குஜராத் தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு ஸ்டிங் ஆபரேஷன்களை (sting operation) தெஹல்கா செய்தது. ஆசிரியர்குழுவில் இருந்த அஷிஷ் கேதன் இந்துத்துவாச் சார்பான ஆய்வாளர் போலச் சென்று அந்தப் படுகொலைகளைச் செய்த பஜ்ரங் தள் தலைவன்கள், கொலை செய்த பழங்குடி அடியாட்கள் எனப் பலரையும் சந்தித்துப் பின்அந்த உரையாடல்கள், அவற்றில் பல நம்இரத்தத்தை உறைய வைப்பவை, தெஹல்காவில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. வெளிவந்த ஒரு வாரத்தில்அதன் முக்கியப் பகுதிகளை மொழியாக்கினேன். ‘குஜராத் 2002: தெஹல்கா அம்பலம்’ எனும்தலைப்பில் 140 பக்கங்களில் விரிவான முன்னுரைப்புகளுடன் நண்பர் விஜயானந்த் (பயணி வெளியீட்டகம்) அதை வெளியிட்டார்.தெஹல்கா செய்த இன்னொரு ஆபரேஷன்தான் இது. இந்த ஆபரேஷனில் இந்தக்கொலைகள் நடந்தபோது (2002) உயர்பதவிகளில் இருந்த காவல் அதிகாரிகள், அரசுச்செயலர்கள், உளவுத்துறைப் பெருந்தலைகள், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பின் இந்தக் கொலைகளில் அவருக்குரிய பாத்திரம் வெளிப்படுத்தப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் மாயாகோட்னானி முதலியவர்களை ஏமாற்றி, நட்பாகி, பின் அவர்களைப் பேச வைத்து, உண்மைகளைக் கறந்து வடிக்கப்பட்டதுதான் குஜராத் கோப்புகள். ஆனால் எல்லாம் முடிந்தபின் இறுதியில் தெஹல்கா இதை வெளியிட மறுக்க, இப்போது ராணாவே வெளியிட்டுள்ளார்.ராணா அய்யூப் ஒரு ‘முஸ்லிம் இளம் பெண்’.இதில் ஒவ்வொரு சொல்லும் முக்கியம். ஒருபெண், அதுவும் இளம் பெண், அதுவும் முஸ்லிம்இளம்பெண் இத்தனை துணிச்சலாய் இதைச் செய்துள்ளது நம்ப இயலாத ஒன்று. ராணா இதைச் செய்தபோது அவருக்கு வயது சுமார்26 தான்.. அவர் 1984ல், அதாவது தில்லியில்இந்திரா கொலையை ஒட்டி சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொடு வன்முறைகளின் காலத்தில் பிறந்தவர். குஜராத்தில் இந்தக் கொடு வன்முறைகள் அரங்கேறியபோது அவருக்குவயது 18. அதற்கு எட்டாண்டுகளுக்குப் பின் இந்த ஸ்டிங் ஆபரேஷனைச் செய்துள்ளார்.ராணாவின் தந்தையும் ஒருபோதில் பத்திரிகையாளராக இருந்தவர். உருது மொழியில் சில கவிதைகளையும் எழுதியவர். அவருடையஅன்னை பாசம் மிக்க எல்லா அன்னையரையும் போல ஒரு அன்னை. அவர்கள் இதன் ஆபத்துகளை அறிந்தனரோ இல்லையோ தடையேதும் செய்யவில்லை. ராணா சோர்ந்து னநயீசநளளiடிnக்கு ஆட்பட்ட தருணங்களில் அவருக்கு ஆறுதல் அளித்தவர்கள். என்ன அற்புதமான மனிதர்கள்.
ஆம், இது மிகவும் ரிஸ்க் ஆன செயல்தான்.ராணா அப்படி ஒன்றும் குஜராத்துக்கு அறிமுகம் ஆகாதவரும் அல்ல.. இந்த ‘ஆபரேஷனுக்கு’ம் கொஞ்சம் முன்னர் அவர், சொராபுதீன், கவுசர் பீவி, பிரஜாபதி ஆகியோரின் போலிஎன்கவுண்டர் என்பது அன்றைய குஜராத்தின் உள்துறை அமைச்சரும் நரேந்திர மோடியின் மிக மிக மிக நெருக்கமான அந்தரங்க நண்பருமான அமித்ஷா உத்தரவின் பேரில் எடுபிடிஐ.பி.எஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் என்பதை அமித்ஷாவின் அந்த தொலைபேசி உரையாடல்களின் மூலம்வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்தியவர்தான் ராணா. இந்தியாவிலேயே காவல்துறைக்குப் பொறுப்பான ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனைக்குக் காரணமாக இருந்தவர்தான் அந்த முஸ்லிம் இளம் பெண் ராணா.இப்படி எல்லோருக்கும் அறிமுகமான அந்த முகம், அந்த அழகிய முகம், அந்த அறக்கோபம் மிக்க இளம் முகம்தான் சற்றே தன்னைமாற்றிக் கொண்டு, இல்லை முற்றிலும் மாற்றிக் கொண்டு, மைதிலி தியாகி எனும் உயர்சாதி (காயஸ்தர்) அடையாளத்துடன் களம் புகுந்தது.
ராணா அய்யூப் மைதிலி தியாகி ஆன கதை
காயஸ்தர் வகுப்பைச் சேந்த மைதிலி தியாகியின் தந்தை சம்ஸ்கிருதப் புலமை உள்ளவர்; இந்துப் பண்பாட்டில் பற்றுள்ளவர். மகளுக்கு சீதாப் பிராட்டியின் திருப்பெயர்களில் ஒன்றை இட்டவர். அந்தக் குடும்பம் இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளது. மைதிலி ஒருஆவணப்படத் தயாரிப்பாளர். குஜராத்தின் வளர்ச்சி குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்காக அகமதாபாத் வந்துள்ளார். மைதிலிக்குஒரு உதவியாளன். மைக் எனும் ஒரு ஃப்ரெஞ்சுக்காரன். அவன் ஒரு சுவையான இளைஞன். முழுமையாக மைதிலியுடன் ஒத்துழைக்கிறான்.இப்படி ஒரு கதையை உருவாக்கினால் மட்டும் போதுமா? அதற்குத் தக ஓரளவு உருவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்க யஉஉநவே உடன் ஆங்கிலம் பேச வேண்டும். அவசரத்தில் நம் இந்தியன் இங்கிலீஷைப் பேசிவிடக் கூடாது. உடலெங்கும் ரகசியக் கேமராக்களைப் பொருத்திக் கொண்டு ‘மெட்டல் டிடெக்டர்களை’ ஏமாற்றி உள்நுழைந்துவேலை தொடங்குகையில் கேமராவின் பொத்தான்களை மறக்காமல் இயக்கி, அப்போது அது உமிழும் சிவப்பு வெளிச்சத்தை மேலங்கியால் லாவகமாக மறைத்து, அதே நேரத்தில் காமிராக்கள் சரியாக அவற்றின் பணியைச் செய்து கொண்டுள்ளனவா என கவனிக்க அவ்வப்போது ஏதாவது ஒரு பொருளைக் கீழே தவறவிட்டுப் பின் குனிந்து அதைஎடுப்பது போல காமிராவை நோட்டம் விட்டு அப்பப்பா, தெரிந்தால் என்ன ஆகும்?எதுவும் ஆகலாம். அவர்களில் பலர் ஏகப்பட்ட என்கவுண்டர்களைச் செய்து புகழ்பெற்றவர்கள். சிங்கால் எனும் அந்த அதிகாரிஇஷ்ரத் ஜெஹான் எனும் 19 வயதுப் பெண்ணைஇதர மூன்று இளைஞர்களுடன் பிடித்துச் சென்று தீர்த்துக் கட்டிய குழுவில் இருந்தவன். இப்படியான தீர்த்துக்கட்டல்களில், தீர்த்துக்கட்டினால் மட்டும் போதாது. தீர்த்துக்கட்டப்பட்டவர்கள் மீது அவதூறுகள் பொழியவேண்டும். ஆனால் அது எளிது. அவதூறுகளைச் சொன்னாலே போதும். அவற்றை நிறுவ வேண்டியதில்லை. அவை நிரூபிக்கப்பட்டவையாகவே ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் நம்புவீர்கள். பத்திரிகைகள் நம்பும். ஏன், நீதிமன்றங்களே நம்பும். இஷ்ரத் ஜெஹான் எனும்அந்த 19 வயதுப் பெண் லஷ்கர் ஏ தொய்பா எனச்சொல்லி ஒரு நாயைப்போலச் சுட்டுக்கொல்லப்பட்டது போல இந்த 26 வயதுப் பெண்ணை அவர்கள் சுட்டுக் கொல்லமுடியாதா?அதுவும் ராணா விஷயத்தில் இது இன்னும் எளிது. பெயரை மாற்றி, அடையாளத்தை மாற்றி சிம்கார்டு வாங்கியவள், பொய்ப் பெயரில் அகமதாபாத்தில் பல இடங்களில் தங்கியவள், முஸ்லிம்… இவை போதாதா கதை கட்ட… கதை முடிக்க.ராணாவின், பின் புகழ் பெற்ற தெஹல்கா இதழ் இருந்தது உண்மைதான். இப்படி அவர்கொல்லப்பட்டிருந்தால் அது உரத்தக் குரல்எழுப்பும் என்பது உண்மைதான். நாமெல்லோரும் கண்டித்து ஸ்டேடஸ் போடுவோம் என்பதும் உண்மைதான். கொஞ்சநாள் இதுபேச்சாகும். ஆனால் ராணா எனும் அந்த இளம்பெண்ணின் கதை… முடிந்தது முடிந்ததுதானே.ஒவ்வொரு ‘ரிஸ்க்கை’யும் தெஹல்காவின் ஷோமா சவுத்ரியையோ தருண் தாஜ்பாலையோ தொடர்பு கொண்டு கேட்டு முடிவெடுக்க இயலாது. அந்தக் கணத்தில் முடிவெடுத்தாக வேண்டும். ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் விளைவைச் சுமக்க வேண்டும். எது நடந்தாலும் அதற்கு அவரே பொறுப்பு. அந்தச் சிலமாதங்கள் அந்தப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்? இடையில் depression ஏற்பட்டு மருத்துவர்களையும் சந்திக்க நேர்கிறது.அப்படித்தான் ஒருமுறை உஷா என்றொரு உயர் போலீஸ் அதிகாரி. அவர் மைதிலியை முழுமையாக நம்பியவர்களில் ஒருவர். அவர் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு உடன் வரச் சொல்லி போன் செய்கிறார். எப்படி இருக்கும். ஒரு வேளை போகாவிட்டால் அந்தத் தொடர்புஅற்றுப் போகலாம். கொண்ட பணிக்கு அதுஒவ்வாது. போய்த்தான் ஆக வேண்டும். போகிறார். அதுவும் அவர் வரச் சொன்னது ஒரு மாதிரியான இடம். ஆட்டோகாரரே எரிச்சல் உறுகிறார். இறுதியில் விஷயம் சாதாரணமானதுதான். ஒரு திரைப்படத்திற்குப் போகலாம் என்கிறார். அதுவும் இதுபோல ஒரு அரசியல் படந்தான்.இன்னொரு முறை, ஒரு அதிகாரியுடன் மைதிலி போகும்போது ‘மெட்டல் டிடெக்டர்’க்கு ஆட்படவேண்டிய நிலை. இவர் உடம்பெங்கும் துடுக்குடன் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் அந்த உளவுக் காமிராக்கள்… இன்றோடு கதைமுடிந்தது என அவர் தடுமாறிய தருணம் ஒரு கீழ் மட்ட அதிகாரி ஓடி வந்து இவர்களுக்கு ‘சல்யூட்’ செய்து உள்ளே அழைத்துப் போகிறார்.2002ல் அந்தப் பெருங் கொடுமை நடந்ததோடு அங்கு எல்லாம் ஓய்ந்து விடவில்லை. இப்படியான பெருங் கொடுமைகளைத் தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேர்கிறது. அதற்கு இன்னும் சில கொலைகளைச் செய்தாக வேண்டும். இப்போது மேற்கொள்ளப்பட்டவை நேரடியான அரச கொலைகள். இதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள் உயர் காவல்துறை அதிகாரிகள். அவர்களுக்கான ஆணை நேரடியாக அன்றைய உள் துறைஅமைச்சர் அமித்ஷாவிடமிருந்து செல்கிறது.இணையாக நரேந்திரமோடியின் உயிருக்குஆபத்து; லஷ்கர் போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன என கதைகள் கட்டப்படுகின்றன. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், ஜி.சி. சிங்கால், அமின் ஆகிய உயர் அதிகாரிகள் களத்தில் இறக்கப்படுகின்றனர். இவை எதுவும் நமக்குத் தெரியாதவை அல்ல. பின் எந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது? இந்த ஸ்டிங் ஆபரேஷன் அளிக்கும் வாசடைட நம்மை வளைத்துப் போடுகிறதா?அது மட்டுமல்ல. சில நுணுக்கமான விவரங்கள் (microscopic details) இந்நூலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன.
நன்றி : புத்தகம் பேசுது (அக், 2016

Saturday, October 22, 2016

கூட்டாட்சியின் மீதான தாக்குதல்



நாட்டின் தலைநகரான தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருப்பவை உண்மையில் மிகவும் மானக்கேடானவைகளாகும். 2015பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று அரசாங்கம் அமைத்ததிலிருந்தே, அதற்கு எதிராக அனைத்துவிதமான தாக்குதல்களையும் மத்திய அரசாங்கம் கூச்சநாச்சமின்றி தொடுத்துக் கொண்டிருக்கிறது. தில்லி துணை ஆளுநர் மூலமாகவும், (மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள) தில்லி காவல்துறைமூலமாகவும் மத்திய அரசாங்கம் கிட்டத்தட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசையும், சட்டமன்றத்தையும் ஓரங்கட்டிவிட்டு தன்அதிகாரத்தை மிகவும் நாணமின்றி பிரயோகித்துக் கொண்டிருக்கிறது.

அரசமைப்புச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட, 69ஆவது திருத்தமானது தில்லி சட்டமன்றம் மற்றும் அரசாங்கம் அமைப்பதற்கு வகை செய்த அதேசமயத்தில், பொது சட்டம்- ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறைகளை மத்திய அரசே வைத்துக்கொள்ளும் என்கிற விதத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த 20 மாதகால ஆம்ஆத்மி கட்சியின் அரசாங்கம் எதிர்கொண்டது என்னவெனில், மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்துத் துறைகளிலுமே மத்திய அரசாங்கம் அத்துமீறி மூக்கை நுழைத்ததாகும்.
தில்லி சட்டமன்றம் 14 சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றியது. ஆனால் இந்த 14 சட்டமுன்வடிவுகளுமே மத்திய உள்துறை அமைச்சகத்தால் துணை ஆளுநரின் ‘முன் ஒப்புதல்’பெறவில்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.
துணை ஆளுநர் நஜீப் ஜங், மோடி அரசாங்கத்தின் முகவராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 2015 மே மாதத்தில் லஞ்ச ஊழல் எதிர்ப்புக்குழு (Anti-Corruption Bureau) வின் தலைவரை நீக்குவதில் அவர் தலையிட்டவிதமும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை அதில் அமர்த்தியதும், ஏஏபி அரசாங்கம் அமர்த்திய நிர்வாக ஏற்பாட்டை தூக்கி எறிந்திடவும், அந்த இடத்தில் தங்கள் ஆளை நியமித்திட மோடி அரசாங்கம் மேற்கொண்ட மோசமான நடவடிக்கையையும் தெளிவாகக் காட்டுகிறது.
மேலும், மின் வெட்டுஏற்படுத்தியதற்காக மின் விநியோக நிறுவனங்கள் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று ஏஏபி அரசாங்கம் பிறப்பித்த ஆணையையும் துணை ஆளுநர் ரத்து செய்துள்ளார். சமீபத்தில், ஏஏபி அரசாங்கம் தன் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்த அரசாணையையும்கூட அவர் புறந்தள்ளி இருக்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக, 2016 ஆகஸ்ட்டில் மிகவும் பிற்போக்குத்தனமான முறையிலும், தவறான முறையிலும் தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பொன்று தில்லி அரசாங்கத்தை உண்மையில் பெயரளவிலான ஒன்றாக குறைத்தது. அந்தத் தீர்ப்பானது, தில்லி தேசியத் தலைநகரம், ஒருமாநிலம் அல்ல என்றும், அது‘யூனியன் பிரதேசமாகவே தொடர்கிறது’ என்றும் எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் இருப்பது போன்று துணை ஆளுநர் மாநில அரசின் ‘உதவி மற்றும் அறிவுரை’யைக் கேட்க வேண்டியது இல்லை என்றும் கூறியது. மேலும் அது சிவில் சர்வீசஸ் நியமனங்களிலும் மத்திய அரசின் அதிகார வரம்பெல்லையை விரிவுபடுத்தியது. தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டை இப்போது உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இருப்பினும், மாநில அரசுக்கு சேதாரம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இந்தத் தீர்ப்பிற்குப்பின், துணை ஆளுநர் அனைத்து அதிகாரிகள் மீதும் ஆளுமை செலுத்துகிறார். அதிகாரிகள் எவரும் தன்னால் ஏற்பளிப்பு அளிக்கப்பட்டால் தவிர முதல்வரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை என்று துணை ஆளுநர் கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது,
தில்லி சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை ஏஏபி பெற்றிருக்கிறது. கடந்த இருபது மாதங்களில் இக்கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் பல்வேறு குற்றங்களின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கலகம் செய்ததாக, வழிப்பறியில் ஈடுபடுதல், மானபங்கப்படுத்துதல், குடும்ப வன்முறை, நிலப் பறிப்பு மற்றும் மோசடி போன்ற பல்வேறு குற்றங்களில் தில்லி போலீசார் இவர்களின்கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இதுவரை ஏஏபி எம்எல்ஏக்களில் 21 சதவீதத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் வேறெந்த மாநில சட்டமன்றத்திலும் இந்த அளவிற்கு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட தில்லை. சமீபத்தில் குஜராத்தில் குலாப் சிங்,எம்எல்ஏ கைது செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் காவல்துறையினரை கடிந்துகொண்டிருக்கிறது. காவல்துறையினர் கைது செய்வதில் அவசரம் காட்டி இருப்பதாகவும், முக்கியமான உண்மைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர் என்றும் சாடி இருக்கிறது. மோடி அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து,எதிர்க்கட்சிகள் அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் மிகவும் மோசமான கட்சி எது எனில் அது, இதற்கு முன் தில்லியை ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சிதான். மத்திய அரசின் ஜனநாயக விரோத தலையீடுகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக அது, எல்லாவற்றிற்கும் ஏஏபி கட்சியையே குறைகூறிக் கொண்டிருக்கிறது.
ஏஏபி தலைவரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் தலையீடுகளை தனக்கு எதிராக நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கை என்றே பார்க்கிறார். அதைவிட இச்செயல்களை ஜனநாயக மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசுமேற்கொண்டுள்ள ஆபத்தான தாக்குதல் என்றும், மத்திய ஆளும் கட்சியின் எதேச்சதிகார அணுகுமுறையையே இது பிரதிபலிக்கிறது என்றும் பார்க்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏஏபி அரசாங்கத்தின் செயல்பாடுகளில் குற்றங் குறைகள் இருக்கலாம். அவை விமர்சிக்கப்பட்டு எதிர்க்கப்பட வேண்டியவையாகும். ஆனால் அதனை சாக்காக வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதுமே எதேச்சதிகாரமான முறையில் மத்திய அரசாங்கம் தாக்குதல் தொடுப்பது அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மோடி அரசாங்கம் ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்க அனுமதிப்பது என்பது, அது மேலும் வெறித்தனமான முறையில் தாக்குதல்களை முன்னெடுத்துச்செல்லக் கூடிய விதத்தில், எதேச்சதிகாரம் என்னும் கத்தியை சாணை தீட்ட அனுமதிப்பது போன்றதேயாகும்.
(அக்டோபர் 19, 2016)
தமிழில்: ச.வீரமணி



Friday, October 21, 2016

ஜேஎன்யு மாணவர் நஜீப் எங்கே? மீண்டும் போராட்டக் களமானது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்




புதுதில்லி, அக். 21-
ஜேஎன்யு மாணவர் நஜீப் அகமது காணாமல் போனது தொடர்பாக மாணவர்கள் கிளர்ச்சிப்போராட்டங்கள் நடத்திவருவதைதொடர்ந்து அங்கே 144 தடை உத்தரவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர் கள் நாடாளுமன்ற காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல்துறைஆணையர் எம்.கே. மீனா செய்தியாளர்களி டையே இதனை உறுதி செய்தார்.
ஜேஎன்யு நிகழ்ச்சிப் போக்குகள் குறித்துஇந்திய மாணவர் சங்கம் ஓர் அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜேஎன்யு வளாகத்தில் ஜேஎன்யு மாணவர் நஜீப் அகமது காணாமல் போய் ஏழு நாட்களாகின்றன. இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்தேஜேஎன்யு நிர்வாகம் மிகவும் ஒருதலைப்பட்ச மாகவே நடந்துகொண்டு வருகிறது. நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் நஜீப் மீது மட்டுமே நிர்வாகம் குறைகூறிக் கொண்டிருக்கிறது.வளாகத்திற்குள் வன்முறையைத் தூண்டி யவர்கள் ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் என்பது அடிக்கோடிட்டுக் கூறப்படவேண்டிய ஒன்றா கும். ஆயினும் நிர்வாகம் ஏபிவிபியைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருக் கிறது, 
மாணவர்களை வகுப்புவாத அடிப்ப்படை யில் பிரித்திட அரை உண்மைகளும், வடிகட்டிய பொய்களும் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.நஜீப்பை விரைந்து கண்டுபிடித்திட வேண்டும். 14ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்திட வேண்டும்.ஜேஎன்யு துணைவேந்தர் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு ஜேஎன்யு மாணவர் பேரவை மீதும் அதன் இயக்கத்தின்மீதும் அவதூறு பொழிந்து வருகிறார். 
ஊடகங்களும் ஆர்எஸ்எஸ்/பாஜகவும் ஜேஎன்யுவையும், இடதுசாரி அமைப்புகளையும் மோசமாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.ஜேஎன்யு நிர்வாகம், ஆர்எஸ்எஸ்/பாஜகவின் அரசியல் கட்டளைகளின்கீழ் செயல்படுவ தால், ஜேஎன்யு மாணவர்கள் வெள்ளியன்று உள்துறை அமைச்சகத்தின் முன் கிளர்ச்சியில் ஈடுபட முடிவெடுத்தனர். ஆயினும் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தப் பிரச்சனையில் இப்போது தலையிட்டு நஜீப்பைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு தில்லி காவல்துறையினருக்குக் கட்டளை பிறப்பித் திருக்கிறார். காவல்துறை ஆணையர் தலைமையில் மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக் கிறது.
ஜேஎன்யு மாணவர்களுக்கு எதிராக சீர் குலைவாளர்கள் மற்றும் உள்கையாட்கள் மேற் கொள்ளும் தில்லுமுல்லுகளிலிருந்து உஷாராக இருந்து அவர்களைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்றும், ஜேஎன்யு மாணவர்கள் அனை வரும் ஜேஎன்யு மாணவர் பேரவைப் பதாகை யின்கீழ் அணிதிரண்டு, நஜீப்பிற்கு நீதி கோரும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.
 (ந.நி.)

Tuesday, October 18, 2016

‘தலாக்’ முறையை எதிர்க்கும் முஸ்லிம் பெண்களின் கோரிக்கையை ஆதரிக்கிறோம் பொது சிவில் சட்டத்தை உந்தித் தள்ளும் முயற்சியை எதிர்க்கிறோம் : சிபிஎம்


‘தலாக்’ முறையை எதிர்க்கும் முஸ்லிம் பெண்களின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்
பொது சிவில் சட்டத்தை உந்தித் தள்ளும் முயற்சியை எதிர்க்கிறோம் : சிபிஎம்
புதுதில்லி, அக். 18-
மூன்று முறை ’தலாக்’ சொல்லி தன்னிச்சையான முறையில் விவாகரத்து செய்யும் முறைக்கு எதிராக முஸ்லிம் பெண்கள்முன் வைத்திருக்கும் கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக மாதர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே வேளையில், இப்பிரச்சனையைக்கூறி பொது சிவில் சட்டம் என்ற தனது நிகழ்ச்சி நிரலை முன்வைக்கும் மோடி அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளன.
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு
இது தொடர்பாக, கட்சியின் அரசியல்தலைமைக்குழு செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மூன்று முறை தலாக் என்று சொல்லி தன்னிச்சையானமுறையில் விவாகரத்து செய்யும் முறைக்கு எதிராக முஸ்லிம் பெண்கள்வைத்திருக்கும் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. இந்தகுறிப்பிட்ட நடைமுறை, பெரும்பாலானஇஸ்லாமிய நாடுகளில் அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத்தைக் கொண்டுவரும்.பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கான சட்டங்கள் உட்பட பல்வேறு மதத்தினருக்கான தனிநபர் உரிமைச் சட்டங்களும் (personal laws ) சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டியவைகளாகும்.இந்தப் பின்னணியில், இந்து மகளிருக்கான உரிமையியல் சட்டங்கள் ஏற்கனவே சீர்திருத்தப்பட்டிருக்கின்றன என்று அரசின் செய்தித்தொடர்பாளர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலம் பெண்களின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பொருள் அல்ல. மாறாக, அதனை ஒருகேடயமாகபயன்படுத்திக்கொண்டு தற்போதுசிறுபான்மை சமூகத்தினரை,குறிப்பாக முஸ்லிம் இனத்தினரை தாக்குவது என்பதேயாகும்.இப்போதும் கூட, இந்து மதத்தின்கீழ் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளுதல், சொத்து உரிமைகள் மற்றும் தங்கள்சொந்த வாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை போன்றவை தொடர்பாக இந்துப் பெண்களுக்கு எதிராக இந்து சிவில் சட்டம் பாகுபாடு காட்டி வருகிறது.முஸ்லிம் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வகுப்புவாத சக்திகள் தாக்குதலைத் தொடுத்திருக்கும் நிலையில், பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) என்கிற நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளுவதற்காக, அரசாங்கம் நேரடியாகவும் தன் நிறுவனங்கள் மூலமாகவும் மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கையும் பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரை எதிர்விளைவுகளையே கொண்டுவரும். ஒரே சீரான தன்மை என்பதுசமத்துவத்திற்கான உத்தரவாதம் அல்ல.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
ஜனநாயக மாதர் சங்கம்
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு சார்பில்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மேற்கண்ட பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ( (All India Muslim Personal Law Board) ) எடுத்துள்ள படுபிற்போக்குத்தனமான நிலைப்பாட்டை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். அவர்களின் நிலைப்பாடு மத நம்பிக்கையுடன் எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல. பல முஸ்லிம் நாடுகள், உடனடியாகவும் தான்தோன்றித்தனமாகவும் விவாகரத்து செய்யும் இத்தகைய அருவருப்பான நடைமுறையைப் பெற்றிருக்கவில்லை.ஆயினும் இதனையொட்டி, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்காக மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர் அறிக்கைகள் மூலமாக மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைக் கண்டிக்கிறோம். பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள வினாப்பட்டியலுக்கு நிச்சயமாக அரசின் ஆதரவு இருந்திடும். இந்த சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று கூறுகிறசீர்திருத்தவாதிகளுக்கு இது பெரிய அளவில் பாதகம் விளைவித்திடும்.மோடி அரசாங்கமும், இந்துத்துவாசக்திகளும் பெண்களின் உரிமைகள்குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதில்லை. எனவேதான் சிவில் சட்டங்களில் பெண்களுக்குள்ள குறைந்தபட்ச உரிமைகளைக்கூட நீர்த்துப்போகச் செய்யக்கூடிய விதத்தில் நடவடிக்கை எடுத்துள்ளன; வரதட்சணை வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவைக்கூடதிருத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் மதவெறிச் சாயத்தைப் பூசுவதற்குப் பதிலாக, பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒருசட்டத்தை அவசரமாகக் கொண்டுவரவேண்டும். அப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதை சாதி அடிப்படையிலான கட்டப் பஞ்சாயத்துக்கள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மையினரைத் தாக்குவதற்காகத்தான் பொது சிவில் சட்டத்தை இப்போது அரசாங்கம் கையில் எடுத்திருக்கிறது என்பது தெளிவு.இந்து சட்டங்களில் இருக்கக்கூடிய நியாயமற்ற , சமமற்ற ஷரத்துக்களை நீக்குவதற்குக் கூட இந்த அரசாங்கம் தயாராக இல்லை. சொத்துக்கள், நிலம் அல்லது குழந்தைகளுக்கான பாதுகாவலர் ஆகியவற்றில் பெண்களுக்கு உரிமைகள் அளிப்பதில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பெண்களுக்கு இன்றளவும் திருமணம்சார்ந்த சொத்தில் (marital property) உரிமை கிடையாது.இந்தப் பின்னணியில், தனி நபர் உரிமைச் சட்டங்களில் (personal laws) சீர்திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே அனைத்துப் பெண்களுக்கும் சமத்துவத்திற்கான குறிக்கோளை எய்திட முடியும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. போதுமான அளவில் இல்லாத தற்போதைய சிவில் சட்டங்களை ஒரேசீராக்குவதன் மூலம் சமத்துவத்தைக் கொண்டுவர முடியாது. அதே சமயத்தில், இப்போதுள்ள மதச்சார்பற்ற சட்டங்களும் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.

(ச.வீரமணி.)

Sunday, October 16, 2016

இந்திய ராணுவத்திற்கு இந்துத்துவ சாயம் பூசுவதா?



விஜயதசமி தினத்தன்று இந்துத்துவாவாதிகள் இரு நடவடிக்கைகளை வழக்கமாக மேற்கொள்வார்கள். ஒன்று, நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் உரையாற்றும் நிகழ்ச்சி. மற்றொன்று, மும்பையில் சிவ சேனைத் தலைவர் உரையாற்றும் நிகழ்ச்சி. இந்த ஆண்டு மூன்றாவதாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அது, லக்னோவில் ராம்லீலா நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையாகும். இவ்வாறு இந்த ஆண்டு தசரா பண்டிகையின்போது மக்கள் மத்தியில் வெகு தந்திரமான முறையில் தங்கள் அரசியலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.பாகிஸ்தானில் எல்லைக் கோட்டுக்கு அப்பால் ராணுவத்தினரால் "அதிரடித் தாக்குதல்" நடைபெற்றதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும், சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயும் மோடியை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்கள்.
இந்துத்துவா முகாமில் மோடியின் செல்வாக்கைத் தூக்கிப் பிடிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்திருக்கின்றன.ஆர்எஸ்எஸ் தலைவர் எதிர்பார்த்தபடிதான் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட "பசுப் பாதுகாப்பு இயக்கத்தை" அவர் தூக்கிப்பிடித்திருக்கிறார். பசுவைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின்படி பசுவைப் பாதுகாத்திடும் நல்ல வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புகழ்ந்திருக்கிறார். இதனை மனதில் கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்தினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவரது கூற்றின்படி, நாட்டின் சட்டத்தை மீறியவர்கள் "பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர்" அல்ல. இவ்வாறு இவர் கூறியதன் மூலம், பசுப் பாதுகாப்பு இயக்கத்தின் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட வெறித்தன நடவடிக்கைகளை அவர் மறைக்க முயல்கிறார்.
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் பல பகுதிகளில் பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய மூர்க்கத்தனமான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு பேசியிருப்பது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக அவர்கள் மாட்டைக் கொல்கிறார்கள், மாட்டிறைச்சியை சாப்பிடுகிறார்கள் என்று கூறி, இதுபோன்ற வெறித்தனமான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அவர்களுக்கு மிகவும் தெளிவானமுறையில் சமிக்ஞை அளித்தது போன்றதாகும். லக்னோவில், நரேந்திர மோடியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை குறியாகக் கொண்டு, தங்கள் அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு இந்த மதப் பண்டிகையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
அவர் தன் உரையை, "ஜெய் ஸ்ரீராம்" என்ற கோஷத்துடன் துவங்கி, ராமாயணத்திலிருந்து உதாரணங்களைக் கூறி பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவது குறித்துப் பேசியிருக்கிறார். இவர்களின் நோக்கம் மிகவும் தெளிவானது. தங்களுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசியலுடன் மதத்தைக் கலந்து எப்படியாவது வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதேயாகும்.
ராணுவத்தினரின் "அதிரடித்தாக்குதல்கள்" கூட உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரின் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒன்றாக ஏற்கனவே மாறிவிட்டது.உண்மையில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்னவெனில், பாஜக, தன்னுடைய குறுகிய மதவெறி நடவடிக்கைகளுக்கு ராணுவத்தையும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகும். ராஜஸ்தானில், ராஜஸ்தான் சமஸ்கிருத அகாதெமி, "எதிரியிடமிருந்து துருப்புகளைப் பாதுகாக்க" ஸ்ரீ மாதேஷ்வரி தனோட் ராய் கோவிலில் "ராஷ்ட்ரா ரக்ஷா யாகம்" என்னும் மதச் சடங்கில் முதல்வர் வசுந்தரா ராஜே கலந்து கொண்டார். இந்த யாகம் 21 "நாட்டுப்பற்றுகொண்ட பிராமணர்களால்" அக்டோபர் 6-ஆம் தேதி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சமஸ்கிருத அகாதெமி தலைவர், ஜெயா தவே, "முன்பும்கூட, சத்திரிய மன்னர்கள் யுத்தங்களில் ஈடுபட்ட காலத்தில், அவர்களைப் பாதுகாப்பதற்காக பிராமணர்கள் இதுபோன்ற யாகங்களை நடத்தினார்கள்" என்று பேசினார். முன்னதாக, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகையில், "இந்தியத் துருப்புக்கள் அனுமான் போன்றவர்கள். அதிரடித் தாக்குதலை நடத்துவதற்கு முன்பு அவர்களுக்குத் தங்கள் பலம் முழுமையாகத் தெரியவில்லை" என்றார். இவ்வாறு, அரசாங்கமே ராணுவத்தினரை இந்துத்துவாவின் வார்த்தைகளில் சித்தரிக்கத் தொடங்கி இருக்கிறது. அவர்களின் பங்களிப்பை முழுக்க முழுக்க சாதிய மற்றும் மத அடிப்படையில் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சித்தரிப்புகள், ராணுவத்தினரின் நேர்மையான ஒருங்கமைவையும், மதச்சார்பற்ற அடிப்படையையும் அரித்து விடும் மிகவும் ஆபத்தான விஷயங்களாகும்.இவர்கள் மணியடிக்கும் விதங்கள் மிகவும் தெளிவானவை. ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்களின் கீழ் ராணுவம் உட்பட அரசின் எந்த நிறுவனமும் அவர்களின் இந்துத்துவா பாணி நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவில்லை. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் மிகவும் ஆழமான முறையில் கவலைப்பட வேண்டிய அம்சங்களாகும். நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைப் பாதுகாக்க விரும்பும் அனைவரும் ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்களுக்கு "இந்துத்துவாவின் வெறித்தன நடவடிக்கைகளுக்காக ராணுவத்தினரைத் துஷ்பிரயோகம் செய்யாதே" என்று உரத்த குரலில் கூறிட வேண்டும்.
(அக்டோபர் 12, 2016)
தமிழில்: ச.வீரமணி


Sunday, October 9, 2016

போர் வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக, பதற்றத்தைத் தவிர்த்திடுக


(People's Democracy தலையங்கம்) நாட்டின் நலன் மீது மோடி அரசாங்கத்திற்கு கொஞ்சமாவது கவலை இருக்குமானால், அது பாகிஸ்தானுடன் சிறுபிள்ளைத்தனமாகச் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதைக் கைவிட்டுவிட்டு, பாகிஸ்தானுடன் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் துவக்கிடவேண்டும். அதே சமயத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்தும் அரசியல்ரீதியாக கவனம் செலுத்த வேண்டியது அவசரமாகும்.
எல்லைக்கோட்டுக்கு அப்பால் அதிரடித்தாக்குதல்கள் நடத்தியது பற்றி அரசுத்தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்து ஒரு வாரம் கழிந்தபிறகும், அந்தத் தாக்குதல் குறித்தும், அதன்மூலம் நாம் அடைந்தவை என்ன என்பது குறித்தும்தெளிவான விஷயங்கள் எதுவும் தெரிய வில்லை. அரசுத்தரப்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிரடிப்படையினரின் இரு குழுக்களால் அங்கே இருந்த ஏழு பயங்கரவாத முகாம்கள்குறிவைத்துத் தாக்கப்பட்டு அழிக்கப் பட்டதாகவும், அதன்மூலம் 38 பயங்கரவாதி களும், அவர்களின் உதவியாளர்களும் கொல்ப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் ஊடகங்களில் ஒருசில, குறிப்பாக தொலைக்காட்சி அலைவரிசைகள், போர் வெறிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஆயினும், இந்த நிகழ்வு நடந்ததாகக் குறிப்பிடப்பட்டு ஒருசில நாட்கள் கழிந்தும்கூட, அன்றிரவு என்ன நடந்தது என்பது குறித்த சங்கதிகள் வெளிச்சத்திற்கு வராமல் இன்னமும் இருட்டாகவே இருக் கிறது. ராணுவரீதியான நடவடிக்கை என்ன வாக இருந்தபோதிலும், நடந்தவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சுற்றி நறுமணம் கமழக்கூடிய விதத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் செய்திகளை உருவாக்கி அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் போரில் வெற்றிபெற்று விட்டது போல் வெளியிடும் வெறித்தனமான அறிக்கைகள் சிறுபிள்ளைத்தன மானவைகளாக இருக்கின்றன.
அதிரடித் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பாகிஸ்தான் இன்னமும் வெளிவராமல் இருக்கிறது என்று மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பிரகடனம் செய்திருக்கிறார். திருடனுக்குத் தேள் கொட்டி அவன் கத்தமுடி யாத நிலையில் இருப்பதைப்போல பாகிஸ்தான்இருப்பதாக வெங்கய்ய நாயுடு வர்ணித்திருக்கிறார். இவ்வாறு அறிக்கைகள் வெளியிடு வதன்மூலம் பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டி அது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இவர்கள் விரும்பு கிறார்கள். அதன்மூலம் இங்கே ஒரு போர் நெருக்கடி சூழலை உருவாக்கி அதனைத் தங்கள் சுயலாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்ப்பதுபோல் தெரிகிறது.இந்திய அரசு கூறுவதுபோல எல்லைக்கோட்டைத் தாண்டி வந்து பாகிஸ்தானுக் குள் அதிரடித் தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற் காக பாகிஸ்தான் அரசு, சர்வதேச ஊடகவியலாளர்களை வரவழைத்து அந்த இடங்களைக்காண்பித்திருக்கிறது. ராணுவத்தினரின் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படும் இடங்களில் அமைதி மற்றும் இயல்பான சூழல் நிலவுவதை மெய்ப்பிக்கும் விதத்தில் சிஎன்என், பிபிசிமற்றும் மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்பு களைச் செய்திருக்கின்றன. மோடி அரசாங்கம், அதிரடித் தாக்குதல் நடைபெற்றது தொடர்பாக எவ்விதமான வீடியோ சாட்சியத்தையும் வெளியிடவில்லை. இந்திய மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு இடையே சொற்சண்டைகள் நடந்து கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், மேற்கொள்ளப் பட்ட ராணுவ நடவடிக்கையின் விதம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்திட வேண்டியது அரசின் கடமையாகும். அவ்வாறு எதுவும் அரசுத்தரப்பில் செய்யாததன் காரணமாக, அரசாங்கமும், ஆளும் கட்சியும் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே இவ்வாறு போர்வெறிப் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கின்றன என்கிற சந்தேகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எல்லைக்கோட்டின் இரு பக்கங்களிலும் கூடுதல் ஆயுதப் படையினர் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
ராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் எல்லைக்கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பஞ்சாப்பில் மட்டும் ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும்வாழ்நிலைகள் இந்த நடவடிக்கைகளால் கடுமையாக சீர்குலைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மக்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அதிரடித் தாக்குதல் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டபின்னர் ஒருசில நாட்கள் கழித்து, பாரமுல்லாவில் ராணுவம் மற்றும் எல்லைப்பாதுகாப்புப் படையினர் முகாம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இந்திய ராணு வத்தின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் பதில் நடவடிக்கை எப்படிஇருந்திடும் என்பதை இந்நிகழ்வு வெளிப் படுத்தி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்களும் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன. பாதுகாப்புப் படையினர் இந்த அச்சுறுத்தலை மிகவும் சிரமமான மற்றும் மக்கள் பகைமை பாராட்டும் சூழலில் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஏனெனில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரித் தாக்குதலுக்காக ராணுவரீதியாக பதிலடி கொடுத்தது வீண் செயல்; அது இருநாடுகளுக்கும் இடையேயான அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்காது என்றும் அதற்கு ஒருநீண்ட நெடிய அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் தேவை.மோடி அரசாங்கம், இப்பகுதியில் நிலவும் அரசியல்-பூகோள எதார்த்த நிலைமைகளை உதாசீனம் செய்திட முடியாது. உரி நிகழ்வு நடைபெற்றதற்குப்பின்னர் மூன்று நாட்கள் கழித்து, அமெரிக்க - பாகிஸ்தான் ராணுவ கலந்தாலோசனைக் குழுக் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்தக்கூட்டமானது, இந்தியாவிற்கும் அமெரிக்கா விற்கும் இடையே நடைபெற்ற இந்திய - அமெரிக்க ராணுவ கொள்கைக் குழுக் கூட்டத்திற்கு இணையான ஒன்றாகும். இஸ்லாமா பாத்தில் நடைபெற்ற அக் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பொதுவான போர்த்தந்திர குறிக்கோள்களை எய்துவதற்கு, அதிலும் குறிப்பாக பயங்கரவாதத்தை ஒடுக்கிட, பிராந்திய உறுதிப் பாட்டை நிலைநிறுத்திட, மற்றும் பாதுகாப்புஒத்துழைப்பு தேவைப்படும் இதர பகுதி களிலும் ஒரு வலுவான ராணுவ உறவினைமுடுக்கிவிட உறுதி எடுத்துக்கொள்வதாக அறிவித்திருக்கின்றன.
ஆப்கானிஸ்தானத்தில் அஸ்ரப் கானி தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசாங்கம் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. தலிபான் படையினர்தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின் றனர். இத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அமெரிக்கா அங்கீகரித்திருக் கிறது. உரி சம்பவத்திற்குப் பின்னர் ஒருசில நாட்கள் கழித்து, பாகிஸ்தானும், ரஷ்யாவும் சேர்ந்து பாகிஸ்தான் மண்ணில் கூட்டு ராணுவபயிற்சிகளை நடத்தி இருக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கூட்டாக ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருப் பதைத் தொடர்ந்து, இது நடந்திருக்கிறது என்பது பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். உலகின் பெரிய வல்லரசுகள் அனைத்தும்- அதாவது அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும்ஐக்கிய நாடுகள் அனைத்தும் - தன்னடக் க்கத்தைக் கடைப்பிடிக்குமாறும், நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறி போகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மோடி அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளன. இதேபோன்ற அறிவுரை பாகிஸ்தான் அரசுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 30 அன்று இந்தி யப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்டார் என்கிற தகவல், மோடி அரசாங்கம் சர்வதேச கருத்து குறித்து கவலைப்படவில்லை என்பதையே காட்டுகிறது. ஆனாலும், பாஜக அரசாங்கம் வரவிருக்கும் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்துக்கொண்டு, தங்களுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காகவே போர்வெறியை தூண்டிவிட்டிருக்கிறது என்றும், பதற்றத்தைத் தணிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தயாராயில்லை என்றுமே தெரிகிறது. நாட்டின் நலன் மீது மோடி அரசாங்கத் திற்குச் கொஞ்சமாவது கவலை இருக்கு மானால், அது பாகிஸ்தானுடன் சிறுபிள்ளைத் தனமாகச் சண்டை சச்சரவுகளில் ஈடுபடு வதைக் கைவிட்டுவிட்டு, பாகிஸ்தானுடன் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் துவக்கிடவேண்டும். அதே சமயத்தில் காஷ்மீர் பிரச் சனை குறித்தும் அரசியல்ரீதியாக கவனம் செலுத்த வேண்டியது அவசரமாகும்.
(அக்டோபர் 5, 2016)-
தமிழில்: . வீரமணி