Friday, August 12, 2016

2016 தேசிய கல்விக் கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கல்விக் கொள்கையே தவிர வேறல்ல மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு


2016  தேசிய கல்விக் கொள்கை என்பது
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கல்விக் கொள்கையே தவிர வேறல்ல
மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
புதுதில்லி, ஆக. 12-
2016 தேசியக் கல்விக் கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கல்விக் கொள்கையே தவிர வேறல்ல என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை அன்று மாலை மாநிலங்களவையில் 2016ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை மீது குறுகிய கால விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் துவக்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
நாட்டின் எதிர்காலத்தில் கடும் விளைவுளை ஏற்படுத்தக்கூடிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நான் விவாதத்தைத் தொடக்கி வைக்கிறேன். கல்விக் கொள்கை அல்லது கல்வி அமைப்பு என்பது ஒரு நாட்டின் குணத்தை வரையறுப்பதற்கான அடிப்படையாகும். தேசத்தின் குணத்தை அதுதான் வரையறுக்கிறது.
நாம், நமக்காக நாமே அமைத்துக் கொண்டுள்ள அரமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசை, ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றுதான் வரையறை செய்திருக்கிறது. அந்த மாண்பை, அந்த மதிப்பை, அந்த குணத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்தில்தான் நம் கல்வி அமைப்பு பேணிப்பாதுகாத்து வலுப்படுத்தப்பட வேண்டும். இதுவே என் முதல் அம்சமாகும்.
இரண்டாவதாக, கல்விக் கொள்கை என்பது நம் நாட்டிலுள்ள நம் சக்தியை, நம் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய விதத்தில், அமைந்திட வேண்டும்நாட்டின் மக்கள் தொகையில் 54 சதவீதத்தினர் 25 வயதுக்குக் குறைந்தவர்களாவார்கள். இந்த இளைய சமுதாயம் முறையாகப் பேணி வளர்க்கப்பட்டால், முறையாகக் கல்வி அளிக்கப்பட்டால்முறையான சுகாதார வாழ்க்கை அளிக்கப்பட்டால் மற்றும் முறையான வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டால், உலகில் எவரொருவரும் இந்தியாவை நாம் இன்றைக்கிருப்பதிலிருந்து மேலும் உயரக்கூடிய விதத்தில் சிறந்ததோர் இந்தியாவாக மாறுவதைத் தடுத்திட முடியாதுஇவ்வாறு நம் இளைய சமுதாயத்தின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு உருவாக்கி, நம் அரசமைப்புச்சட்டம் உருவாக்கித்தந்துள்ள மதக்சசார்பற்ற ஜனநாயகக் குடியரசின் குணத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு தேசிய கல்விக் கொள்கை மூன்று `சி’-களை உள்ளடக்கி இருக்கிறது. அவை மத்தியத்துவம் (centralization), வணிகமயம் (commercialization) மற்றும் மதவெறிமயம் (communalization)ஆகியவைகளாகும். இவை மூன்றும் ஒட்டுமொத்த இந்த வரைவின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனை நீங்கள் நுணுகி ஆராந்தீர்களானால் அறிந்துகொள்ள முடியும்.
இன்றைய தினம் அனைவருக்குமான கல்வி முறையைக் கொண்டுவராமல், நம் இளைஞர்களிடையே பொதிந்து கிடக்கும் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.  
வளர்ந்த நாடுகள் அனைத்தின் வரலாற்றையும் சற்றே ஆராய்ந்து பாருங்கள். பள்ளிக் கல்விமுறையை அனைவருக்குமானதாக மாற்றாமல் எந்த ஒரு வளர்ந்த நாடும் கிடையாது, மாணவக் குழந்தைகள் பக்கத்திலேயே அமைந்துள்ள பள்ளிக்கூடங்களுக்குச் செல்கிறமாதிரிதான் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இருக்கின்றன, அமெரிக்காவிற்குச் சென்றுள்ள இந்தியர்கள் அந்நாட்டின் சட்டத்தின்படி தங்கள் பள்ளிகளைப் பக்கத்தில் உள்ள பள்ளிகளில்தான் சேர்த்திட வேண்டும்.
அமெரிக்காவின் அடித்தளங்கள் எவற்றால் அமைக்கப்பட்டிருக்கின்றன? தாமஸ் ஜெஃபர்சன் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது, பொதுக் கல்விக்கு அரசாங்கம் ஏன் அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற விவாதம் நடைபெற்றதுஅப்போது மேதகு வாஷிங்டன் என்பவர் (அதிபர் வாஷிங்டன் அல்ல) மிகவும் வலுவாக வாதிடுகையில், “நாம் இப்போது படிக்காத இளைஞர்களை சட்டம் ஒழுங்கு ரீதியாகக் கட்டுப்படுத்துவதற்கான சார்ஜண்டுகளைத் தெரிவுசெய்வதற்காக அதிகம் செலவழித்துக் கொண்டிருக்கிறோம், அதற்குப் பதிலாக படிக்காத இளைஞர்களைப் படிக்க வையுங்கள், அது நாட்டை வளர்ப்பதற்கு மட்டும் அல்ல, அது சமூகக் கட்டுப்பாட்டையும் கொண்டுவரும்,’’ என்றார்.
அவ்வாறுதான் அங்கே பொதுக் கல்வி முறை உருவானது.
இதேபோன்றுதான் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் என அனைத்து நாடுகளிலும் கல்வி முறை இருக்கிறது. அனைவருக்குமான கல்வி முறையை நாம் பெற்றிராவிட்டால், நாட்டின் குழந்தைச் செல்வங்களை முறையாகப் பயிற்றுவித்து அவர்களின் ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாடு முன்னேறுவது என்பது சாத்தியமில்லை. இதற்காகத்தான் நாம் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக இங்கே விவாதம் நடைபெற்றபோது பக்கத்திலேயே பள்ளிகளை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது நம் நாட்டில் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பது குறித்து விவாதித்தோம், ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் குறித்தும் விவாதித்தோம். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பல பள்ளிகளில் கரும் பலகைகள் கிடையாது. இவ்வாறிருந்தால் எப்படி நாம் நம்  குழந்தைகளின் ஆற்றல்களை முழுமையாக வெளிக்கொணர முடியும்?
கல்வி உரிமைச் சட்டம் என்னாயிற்று? அது எப்படி அமல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுகுறித்து ஏதேனும் பரிசீலனை செய்திருக்கிறோமா? எவ்விதத் திசையுமின்றி இன்றையதினம் செயல்பட்டுக் கொண்டிருக் கிறோம்இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இப்போது இந்த தேசியக் கல்விக் கொள்கை வந்திருக்கிறது.
இன்றையதினம் நம் நிலை என்ன? உலக அளவில் எழுத்தறிவற்றோர் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறோம்நம் இளைஞர்களில், அதாவது 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 86 சதவீதத்தினர் படித்தவர்கள். அதற்குக் கீழ் உள்ளவர்களில் 69.3 சதவீதத்தினர் படித்தவர்கள். இது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சமாகும்.
குறைந்த வயதுள்ள குழந்தைகளின் படிப்பறிவு விகிதமும் குறைவாக இருக்கின்றன. அடுத்து படிப்பறிவின் தரம் எந்த நிலையில் இருக்கிறதுஎட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட எளிய கணக்கைப் போட முடியவில்லைபள்ளித் தேர்வுகளில் மிக உயர்ந்த அளவில் மதிப்பெண் எடுத்த மாணவர்கள்கூட மோசடியாக  மதிப்பெண் எடுத்திருப்பதைப் பார்க்கிறோம்இவ்வாறு நாட்டின் கல்வித்தரம் இருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்ற பின், இந்த அவையின் (மாநிலங்களவையில்) முதல் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன்,உயர் கல்வி குறித்து ஓர் ஆணையத்தைப் பெற்றிருந்தார். ஒட்டு மொத்த பள்ளிக் கல்வி குறித்தும் கோத்தாரி ஆணையத்தைப் பெற்றிருந்தோம். அது அளித்த பரிந்துரைகளை இதுநாள்வரையிலும் நாம் அமல்படுத்தவில்லை.
தொழில் கல்வி குறித்து முதலியார் ஆணையத்தைப் பெற்றிருந்தோம். சுயேட்சையாக வளர்ச்சி மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை உச்சத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற முறையில்   சுய சார்பு பொருளாதாரத்தை நிறுவுவதே நம் குறிக்கோளாக இருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்தபின் நாம் இவ்வாறு மூன்று ஆணையங்கள் அமைத்திட்டோம். ஆயினும் இவை பரிந்துரைத்திட்ட எதையும் நாம் எய்திட வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கவில்லை என்றால் இந்தப் பரிந்துரைகள் எதையும் நிறைவேற்றவும் முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை இதனை நாம் செய்திடவில்லை. இப்போதாவது செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக மேற்படி ஆணையங்கள் அளித்திட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவை உண்மையில் இந்த வரைவு கல்விக் கொள்கையில் பிரதிபலித்திடவில்லை.
இன்றைய இந்திய நிலைமைகளில் நம் கல்வி அமைப்புக்கு என்ன தேவை? தரம் - எண்ணிக்கைநியாயம் (quality-quantity-equity) என்னும் மூன்றின் மேல் நம் கல்வி அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. இம்மூன்றும் இன்றையதினம் எந்த நிலையில் இருக்கின்றன?
இம்மூன்றுக்கும் இடையேயுள்ள உறவுகளை ஆராய்வதற்கு முன், இன்றையதினம் நம் நாட்டில் நாம் பார்ப்பது தனியார்மயம்தான். எவ்விதக்கடிவாளமுமின்றி அது அமலாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் உயர் கல்வி பயிலும் நம் மாணவர்களில் 62 சதவீதத்தினர் தனியார் நிறுவனங்களில் கல்வி பயிலுகின்றனர்
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. இது ஏன்? ஏனெனில் அங்கே கல்வித் தரம் இல்லை. அங்கேயுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் அளிக்கப்படுகிறதா என்றே நமக்குத் தெரியவில்லைகல்வி என்ற பெயரில் வணிகக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இது அங்கிங்கெனாதபடி எங்கும் ஊடுருவியிருக்கிறது.
நான் எந்தவிதமான பயிற்சியை மாணவர்களுக்கு அளித்துக் கொண்டிருக்கிறோம்? அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் பயிற்சி அளிக்கிறோமா? உற்பத்தி நடைமுறையில் கருவிகளைப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் நாம் பயிற்சி அளிக்கிறோமா? கல்வி வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும், சரிதான். ஆனால் மாணவர்களின் குணத்தை உருவாக்கும் விதத்தில் பயிற்சி என்பது? இந்த வரைவில் காணப்படவில்லைஇந்த அம்சங்கள் பலவற்றைக் குறித்து இதில் காணப்படவில்லை.
எண்ணிக்கை - தரம் - நியாயம் என்னும் என்பதை உருவாக்குவதற்குப் பதிலாக, இதில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை ஏற்படுத்தப்பட்டிருப்பதை, இந்த வரைவு கல்விக் கொள்கை ஒப்புக் கொள்கிறது. மாநிலங்கள் ரீதியான சமத்துவமின்மையும் இருக்கிறது, சமூக ரீதியான சமத்துவமின்மையும் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, உயர்கல்வியில் மொத்த அனுமதி விகிதம் (GER-Gross Enrolment Ratio) ஜார்கண்ட் மாநிலத்தில் 8.4 சதவீதமாக இருக்கும் அதே சமயத்தில், சண்டிகார் யூனியன் பிரதேசத்தில் அது 53 சதவீதமாகும். இது மாநில ரீதியான வித்தியாசமாகும். சமூகரீதியான வித்தியாசம் எப்படி? உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களில் 22.7 சதவீதம் பெண்கள். தலித், பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஆனால் பெரும்பாலான இடங்களில் இது அமல்படுத்தப்படுவதில்லை. சதவீதம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. நியாயத்திற்கு(equity)ப்பதிலாக, அநியாயம் (inequity) வளர்ந்து கொண்டிருக்கிறது. 
அரசாங்கம் தன் சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிக்குமானால், நம் நிலை எங்கே போய் முடியும்?
இது குறித்து இந்தக் கல்விக் கொள்கை என்ன கூறுகிறது? புதிய நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்குப் பதிலாக இருக்கும் நிறுவனங்கள் கொள்ளவு விரிவாக்கப்படும் என்று கூறுகிறது. புதிய நிறுவனங்கள் அமைப்பது என்றாலும் இருக்கும் நிறுவனங்களை விரிவாக்குவது என்றாலும் இரண்டும் ஒன்றுதான். பெரிய வித்தியாசம் கிடையாது. இரண்டுக்கும் நிதி தேவை. ஆனால் அரசு நிதி இல்லை என்று சொன்னால், என்ன நடக்கும்? தனியாரிடம் தாரை வார்ப்பீர்கள். இத்தகு வணிகக் கடைகள்தான் பெருகும்அவர்கள் எவ்விதமான கல்வியை அளித்து வருகிறார்கள் என்று நமக்குத் தெரியும்.
ஆர்எஸ்எஸ் ஆவணத்தின் நகல்தான்
இந்தப் புதிய கல்விக் கொள்கை வரைவு என்பது புதிய கல்வி கொள்கை  தொடர்பாக ஜூலை 12, 13,14 தேதிகளில் அமர்கந்தக் என்னுமிடத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆவணத்தின்  நகல்தான்.
நான் ஆரம்பத்திலேயே மத்தியத்துவம், வணிகமயம் மற்றும் மதவெறிமயம் என்று குறிப்பிட்டேன், அல்லவா? இது முழுக்க முழுக்க மதவெறிமயம்தான்இக்கல்விக் கொள்கையின் மேல் வேத உலகக் கண்ணோட்டம்  (vedic world view) அல்லது வேதக் கல்வி (vedic education) எழுப்பப்பட்டிருக்கிறது.
வேதக் கல்வி என்றால் என்ன என்பது குறித்து பின்னால் வருகிறேன்.
பிரச்சனை என்னவென்றால், 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் இதனைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது என்றும், இந்தியா உலக வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும், இந்தியா மிக உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது என்றும், கூறும் அதே சமயத்தில், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்தியாவை நவீனப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த நாட்டை எங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?
மாணவர்களுக்கு என்ன சொல்லித்தர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
வரலாற்றுக் கல்வியை, இந்து புராணங்களின் கல்வியாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இந்திய தத்துவஞானத்திற்கு ஒரு நீண்ட நெடிய வளமான பாரம்பர்யம் உண்டு. அதனை வளர்த்து மேலெடுத்துச் செல்வதற்குப் பதிலாக இந்திய தத்துவஞானத்தை இந்திய இந்து வேத வேதாந்த சாஸ்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். வரலாறு என்பது உங்களுடைய புராணமாக மாறுகிறது, தத்துவஞானம் என்பது உங்களுடைய வேத வேதாந்த சாஸ்திரமாக மாறுகிறதுஇவற்றைப் படிப்பதால் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல நம் உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களில் மாற்றங்களைக் கொண்டுவர பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம்ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். தலித் மாணவர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டார்கள். இதேபோன்று அலகாபாத் பல்கலைக் கழகம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், மும்பை டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசல் சயின்சஸ், சென்னை ஐஐடி, பிலிம் இன்ஸ்டிட்யுட். என அனைத்து நிறுவனங்களிலும் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம்.
இவ்வாறு இந்நிறுவனங்கள் அனைத்தையும் மதவெறி மயமாக மாற்ற அரசாங்கம் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.
பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி மாணவர்கள் எண்ணிக்கையை நீங்கள் குறைக்க முடியுமா?
நாடு சுதந்திரம் அடைந்தபின் நம் உயர்கல்வி நிறுவனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஜவஹர்லால் நேரு என்ன சொன்னார்?
ஒரு பல்கலைக்கழகம் மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு, சிந்தனைப் புரட்சி, உண்மையைத் தேடும் பண்பு ஆகியவற்றை தங்கள் லட்சியங்களாகக் கொண்டிருக்க வேண்டும். மனித குலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றிட வேண்டும். பல்கலைக்கழகங்கள் தங்கள் கடமைகளை செவ்வனே ஆற்றுமானால், அது நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நல்லவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.’’
ஆனால் இன்றைய தினம் பல்கலைக்கழகங்களை எப்படி நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்?
பல்கலைக்கழகங்களின் நிர்வாகம்  எப்படி இருக்கின்றன. பல்கலைக் கழக மானியக் குழு என்பது இப்போது கல்வி ஆணையம் என்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள சில நபர்கள் அரசாங்கத்திற்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார்கள்நாட்டின் கல்வித்துறையை மத்தியத்துவப் படுத்தப்படுவதற்காக, ஒட்டமொத்த உயர்கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் தொழில்கல்வி அமைப்புகள் கலைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது என்பதை நாம் நினைவுகூர்வோம். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அது மாநிலங்களின் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பு அது மாநிலங்களின் பட்டியலில்தான் இருந்ததுஅனைத்து மாநில அரசுகளுடனும் கலந்தாலோசனை எதுவும் செய்யாமல், இவ்வாறு மத்தியத்துவப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஏற்கப்பட முடியாததாகும்.
வேத பாடம் என்றால் என்ன?
இப்போது நான் வேதக் கல்விக்கு வருகிறேன். நாம் ஆர்யபட்டாக்களைப் பெற்றிருக்கிறோம், நாம் நம்முடைய புரதான நாகரிக அறிவியல்களில் அளப்பரிய சாதனைகளைப் படைத்திருக்கிறோம். `பூஜ்யத்தின்மதிப்பை நாம்தான் கண்டுபிடித்தோம். இவற்றை நான் ஒரு பிரெஞ்சு அறிவுஜீவி முன்பு சொன்னேன். இது கண்டுபிடிக்கப்பட்டது ஆறாம் நூற்றாண்டில்.
அதன்பின் என்ன நிலை? ஆரியர்கள் வந்தார்கள். அதற்குமுன்புவரை அனைவருக்குமான கல்வி முறை இருந்தது. அதுதான் அவ்வாறு  சிந்தனைகள் அனைவரிடமும் ஊற்றெடுக்க வழிவகுத்தது. ஆரியர்கள் வந்தபின் நிலை என்ன? அறிவு பெறுவோர் சாதி அடிப்படையில் வடிகட்டப்பட்டனர். இதற்கு ஏகலைவன் மிகச் சிறந்த உதாரணம்கீழ்சாதியில் எவரும் படிப்பாளிகள் வந்துவிடக்கூடாதுஅதைத்தான் இப்புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்திருக்கிறது.
வேத அறிவு என்ற பெயரால், வேத கணிதம் என்ற பெயரால் மற்றும் வணிகமயம், தனியார்மயம் போன்றவற்றால், கல்வியை அனைவருக்கும் கிடைப்பதைக் கட்டுப்படுத்துகிறீர்கள்.
இன்று நம் நாட்டில் 60 கோடிக்கும் மேல் இளைஞர்கள் இருக்கிறார்கள், 80 கோடிக்கும் மேல் வளர்ந்த மக்கள்தொகையினர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டால், உலகில் அறிவில் சிறந்த சமுதாயமாக நம் சமுதாயம் மாறுவது எவரும் தடுத்திட முடியாதுஆனால் இந்தக் கல்விக் கொள்கை அதற்கான வாய்ப்பை மறுக்கிறது.
எனவேதான் நான் கேட்டுக் கொள்கிறேன், தயவுசெய்து கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அதற்காக கடந்த காலத்திற்குப் போய்விடாதீர்கள்
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகளை நாம் பாராட்டினோம், வாழ்த்தினோம். அவர்களைப் பாராட்டி அவையில் மாண்புமிகு தலைவர் படித்தபோது நாம் அனைவரும் மேசைகளைத் தட்டி வரவேற்றோம். அவர்கள் எல்லாம் இங்கே படித்தவர்கள்தான். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், .சிதம்பரம், கபில்சிபல், அவைத் தலைவர், நான் என அனைவருமே இங்கே படித்தவர்கள்தான்.அறிவாளிகள் வெளிநாடுகளி லிருந்துதான் வருவார்கள் என்று கூறி எங்களை மட்டம்தட்டாதீர்கள்.
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வருமாயின் கல்வி என்பது சேவை என்ற நிலையிலிருந்து, ஒரு பண்டம் என்ற நிலைக்கு மாறிவிடும்இந்த வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் தங்கள் நாட்டில் உள்ள மாணவர்களுக்குச் சொல்லித்தர முடியாதவைகளை இங்கே இறக்கமதி செய்ய விழைகின்றனமாந்த்ரீகத்தை இங்கே பயிற்றுவிக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
எனவே கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை மிகவம் எச்சரிக்கையாக இருங்கள். இத்தகைய தனியார்மயம், மத்தியத்துவப்படுத்துதல், வணிகமயம், மதவெறிமயம் ஆகியவற்றைத் தடுத்திடுங்கள்
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(.நி.)





No comments: