Showing posts with label Liberan Commission Report. Show all posts
Showing posts with label Liberan Commission Report. Show all posts

Tuesday, December 8, 2009

மதவெறி சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது மக்களவையில் பாசுதேவ் ஆச்சார்யா பேச்சு



புதுதில்லி, டிச. 8-

மதவெறி சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 193ஆவது பிரிவின்கீழ் லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாசுதேவ் ஆச்சார்யா கூறியதாவது:

‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது சம்பந்தமாக லிபரான் ஆணையத்தின் அறிக்கை மீது அவையில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மககள் கொல்லப்பட்ட சம்பவங்களையும், வன்முறை வெறியாட்டங்கள் தலைவிரித்தாடியதையும் பார்த்தோம். டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதானது சங் பரிவாரக்கூட்டத்தால் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஒன்று.

பாபர் மசூதி இருந்த இடத்தில் பாபர் மசூதி - ராமஜன்ம பூமி தாவா எப்போது ஏற்பட்டது? இந்தத் தாவா உண்மையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரச்சனை. அது எப்படி தேசியப் பிரச்சனையாக உருவெடுத்தது? 1949 டிசம்பர் 23 அன்று பாபர் மசூதி இருக்கும் இடத்தில் கள்ளத்தனமாக ராமர் சிலை ஒன்று புதைக்கப்பட்டது. இது தொடர்பாக பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்தச் செயலைக் கண்டித்தும், இதனை ஏற்க முடியாது என்று கூறியும் உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு தந்தி அனுப்பினார். இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலும் கள்ளத்தனமாக ராமர் சிலையை அங்கு வைத்த செய்கையை ஏற்கவில்லை.

பாபர் மசூதி - ராமஜன்ம பூமி தாவா ஓர் உள்ளூர் பிரச்சனை. ஆனால் இது ஏன் தேசிய பிரச்சனையாக உருவெடுத்தது? 1986இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, இப்பிரச்சனை தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்கள் எங்கள் கட்சியின் சார்பில் பாபர் மசூதி இருக்கும் இடம் திறக்கப்படக் கூடாது என்று கூறினோம்.
அந்த சமயத்தில் பாஜகவின் சார்பில் நாடாளுமன்றத்தில் இருவர்தான் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஒருவர் குஜராத்திலிருந்தும் மற்றொருவர் ஆந்திராவிலிருந்தும் உறுப்பினர்களாகத் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் இந்த உள்ளூர் பிரச்சனையை நாடு தழுவிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயற்சித்தார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். இரண்டு உறுப்பினர்களாக இருந்த இந்த அவையில் அவர்களது எண்ணிக்கை 88ஆக உயர்ந்தது.
வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி உருவாகி ஆட்சியை அமைத்தது. இடதுசாரிகளாகிய நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். பாஜக தேசிய முன்னணியில் அங்கம் வகிக்க விருப்பப்பட்டது. ஆயினும் நாங்கள் கடுமையாக ஆட்சேபித்ததால், அதுவும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தது.,
அதன்பின்னர் பாஜக பாபர் மசூதி - ராமஜன்ம பூமி பிரச்சனையை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதற்காக அத்வானி தலைமையில் ரத யாத்திரையை நடத்தியது. ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் ரத்தக்களறி. மதக் கலவரங்கள், நான் சார்ந்துள்ள புருலியா மாவட்டம் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் மாவட்டமாகும். அங்கு அத்வானியின் ரதயாத்திரை வந்த சமயத்தில் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. 14 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அது பீகார் சென்றபோது, அங்கு முதல்வராக இருந்த லல்லுபிரசாத் யாதவ் அதனை அனுமதிக்கவில்லை. அத்வானியையும் கைது செய்தார். நாடு முழுதும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன.

உத்தரப்பிரதேசத்தில் அப்போது முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் பாபர் மசூதியை இடிக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முலாயம் சிங் யாதவ் உறுதியான நடவடிக்கை எடுத்து அதனைத் தடுத்துநிறுத்தினார். பாபர் மசூதி அப்போது பாதுகாக்கப்பட்டது. பாபர் மசூதி மட்டுமல்ல, நாடே பாதுகாக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்தியில் வி.பி. சிங் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொள்ளத் தீர்மானித்தது. அந்த சமயத்தில் காங்கிரசும் பாஜகவும் இணைந்து நின்று வி.பி. சிங் அரசைப் பதவி இழக்கச் செய்தன. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியானது மதவெறி சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டது. வி.பி. சிங் அரசு கவிழ்க்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியானது இந்துமத அடிப்படைவாதிகளுடன் மட்டுமல்ல, முஸ்லீம் மத அடிப்படைவாதிகளுடனும் சமரசம் செய்து கொண்டது. இவ்வாறு சமரசப் போக்கை காங்கிரஸ் பின்பற்றாமலிருந்திருந்தால் பாபர் மசூதி காப்பாற்றப்பட்டிருக்கும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் உத்தரப்பிரதேசம் உட்பட பாஜக ஆட்சியிலிருந்த நான்கு மாநிலங்களையும் அரசியலமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைத்திட மத்திய அரசு முன்வந்தது. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தினைப் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதில்லை. ஆயினும் முதன்முறையாக பாஜக ஆட்சியிலிருந்த இந்த நான்கு மாநிலங்களையும் கலைத்திட ஆதரவு அளித்தோம். ஏனெனில் இந்த நான்கு மாநில அரசுகளும் பாபர் மசூதி இடிப்புக்கு அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்திருந்தன. கர சேவகர்களை அனுப்பி வைத்திருந்தன. வன்முறை வெறியாட்டங்கள் நடத்திட அனுமதி அளித்திருந்தன. நாட்டின் மதச்சார்பற்ற மாண்பினை நசுக்கிட அனைத்து விதங்களிலும் உதவிகள் செய்து வந்தன.

பாபர் மசூதி இடிக்கப்படும் சமயத்தில் பிரதமர் நரசிம்மராவின் பங்கு எவ்வாறிருந்தது? அவர் அந்த சம்பவம் நடந்து முடியும் வரை தூங்கிக் கொண்டிருந்தார். அவர் தூக்கத்திலிருந்து திடீரென்று விழிக்கும் சமயத்தில், பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டிருந்தது.
பாபர் மசூதி இடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித், பிரதமர் நரசிம்மராவுக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பாபர் மசூதியை இடித்திட சங்பரிவாரக் கூட்டம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். எப்படியாவது மசூதியைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஜோதிபாசுவும் இதுபோல் நரசிம்மராவைக் கேட்டுக் கொண்டார்.
மத்திய உள்துறை செயலாளரும் இதனை உறுதி செய்திருந்தார். பாபர் மசூதியைக் காக்க வேண்டுமானால், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கருதியிருந்தது. இது தொடர்பாக நவம்பர் 20 அன்று அரசின் குறிப்பு கூட தயாராகிவிட்டது. ஆனாலும் உயர்மட்டத்திலிருந்த தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு நரசிம்மராவுக்கம் சாதுக்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.

நவம்பர் 23 அன்று புதுடில்லியில் தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளவில்லை. கலந்த கொள்ளாத மற்றொரு கட்சி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கூட்டத்தில் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அ ந்தத் தீர்மானம் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘பாபர் மசூதியைப் பாதுகாக்க எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்திட அத்தீர்மானம் பிரதமருக்கு முழு அதிகாரம் அளித்திருந்தது.’ ஆயினும் நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

இது குறித்து லிபரான் ஆணையம் ஏன் மவுனம் சாதிக்கிறது? பிரதமர் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தாரானால் பாபர் மசூதி காப்பாற்றப்பட்டிருக்கும். நாட்டின் மதச்சார்பற்ற மாண்பு இடிக்கப்பட்டிருக்காது.
நேற்ற அவையில் பேசிய பாஜக உறுப்பினர் ராஜ்நாத் சிங் சங் பரிவாரத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இவை தொடர்பாக நாடு முழுதும் பல வழக்குகள் பல நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி, விரைந்து விசாரணை மேற்கொண்டு, கயவர்கள் தண்டிக்கப்பட, உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இனியும் அவர்களைச் சுதந்திரமாக உலவ அரசு அனுமதிக்கக்கூடாது. அதன்மூலம் நாட்டின் மதச்சார்பற்ற மாண்பினை வலுப்படுத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

(சவீரமணி)

Saturday, November 28, 2009

லிபரான் ஆணைய அறிக்கை:குற்றவாளிகளைத் தண்டித்திடுக



பல்வேறு விதமான இக்கட்டுகளைக் கடந்து பதினேழு ஆண்டுகள் கழித்து, லிபரான் ஆணையம் கடைசியாகத் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைக்காக 48 தடவைகள் கால நீட்டிப்பு செய்து கொண்ட பின்னர் கடைசியாக அது சமர்ப்பித்துள்ள அறிக்கை யானது, 1992 டிசம்பர் 6 அன்று மிகவும் அரக்கத்தனமான முறையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வானது கடுஞ்சீற்றம் கொண்ட கும்பலால் தன்னெழுச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல, மாறாக மிகவும் உன்னிப்பாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று மக்களுக்கு நன்கு தெரிந்த விவரங்களை மீள அது உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேற்படி அறிக்கையின் சாராம்சங்களை, சில ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து, ஐமுகூ அரசாங்கமானது, நாடாளுமன்றத்தில், அதன்மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை அறிக்கையுடன் (ஹஉவiடிn கூயமநn சுநயீடிசவ) லிபரான் ஆணைய அறிக்கையையும் வைக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. மேற்படி நடவடிக்கை அறிக்கையில் மேற்படி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எவ்விதமான தண்டனை நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படுவது தொடர்பாக எதுவும் இல்லை என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதமில்லை. இத தொடர்பாக பல சட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், எனவே சட்டம் அதன் கடமையைச் செய்ய அதற்குரிய கால அவகாசத்தை அளித்திட வேண்டியிருக்கிறது என்றும் இதற்கு வக்காலத்து வாங்கப்படலாம். ஆயினும், இவ்வாறு பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஒருங்கிணைத்து, விரைவில் முடிவு காண்பதற்கு ஏதுவாக உச்சநீதிமன்றத்திற்கு அவற்றை மாற்றல் செய்திட, தன்னுடைய சட்ட அலுவலர்கள் மூலம் அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனைத் தடுத்திடுவோர் யாருமில்லை. அத்தகையதொரு நடைமுறையைப் பின்பற்ற ஐமுகூ-2 அரசாங்கத்திட்ம் ஆர்வமோ, விருப்பமோ இருப்பதாகத் தெரியவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவமானது மிகவும் அருவருப்பான முறையில் மதம் சார்ந்த ஓரிடத்தை இடித்த நிகழ்வு மட்டுமல்ல. இது நம்முடைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தினையே மிகவும் மோசமான முறையில் தாக்கியதொரு நிகழ்வாகும். இடிக்கப்பட்டது ஒரு கான்கிரீட் கட்டிடமாக இருக்கலாம், ஆனால் அதன் மூலமாக அவர்கள் இடித்திருப்பது அதனை மட்டுமல்ல, நவீன இந்தியாவின் உணர்வையும் உன்னதத்தையுமே உருக் குலைத்து விட்டார்கள். எனவேதான், இதனைச் செய்திட்ட கயவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது சுதந்திரமாக விட அனுமதிப்ப தென்பது, நவீன இந்தியக் குடியரசுக்கு விடப்பட்ட சவாலை எதிர்கொள்ள மறுக்கும் போக்காகும். தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். பதினேழு ஆண்டுகளாகியிருந்த போதிலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்வவமானது ஒரு நாள் நிகழ்வல்ல. அந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பும் அதற்குப் பின்பும் கூட நாடு முழுதும் மதவெறி விசிறி விடப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வெட்டிக்கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் உயரிய பண்புடன் வாழ்ந்த வந்த மக்களுக்கிடையே இருந்த மதநல்லிணக்க மாண்பை மிக மோசமான முறையில் சீர்குலைத்தனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இவ்வாறு பாபர் மசூதியை இடித்து, அதன்மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பைக் குலைத்திட்ட, கயவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதோடு, இந்த சம்பவத்தின் மூலம் நாட்டிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்வைச் சரி செய்யக்கூடிய வகையிலும் நீதி அமைந்திட வேண்டும். நவீன இந்தியாவை ஒருமுகப்படுத்தும் வகையில், லிபரான் ஆணையத்தின் பரிந்துரைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருந்துவிடக் கூடாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற மும்பை கலவரங்கள் தொடர்பாக விசாரணை செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் மீது உருப்படியாக நடவடிக்கை எதையும் எடுக்காததுபோல் இதனையும் விட்டு விடக் கூடாது.
லிபரான் ஆணையமானது, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது விநோதமாகத் தோன்றுகிறது. சம்பவ சமயத்தில் எல்லோரும் அறிந்த உண்மைகளுக்கு முற்றிலும் முரணான முறையில் இது அமைந்திருக்கிறது. அந்த சமயத்தில் மதச்சார்பின்மையைப் பாதுகாத்திட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டிலிருந்த அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மத்திய அரசின் பின்னால் அணிவகுத்து நின்றன. உண்மையில், பாபர் மசூதி இடிப்புக்கு ஒருசில நாட்களுக்கு முன்பு கூடிய தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில், (இக்கூட்டத்தை பாஜக-வும் அப்போது அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த அதிமுகவும் பகிஷ்கரித்தன), பாபர் மசூதியைப் பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நரசிம்மராவ் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தோழர் சுர்ஜித் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. ஆயினும், இவ்வாறு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தபோதிலும், அரசாங்கமானது வலுவான முறையில் செயல்படவில்லை.

சம்பவ இடத்தில் கொலையைச் செய்கிற ஒருவனுக்கும், சம்பவ இடத்தில் நின்று கொண்டிருக்கிற போலீஸ்காரன் அவ்வாறு கொலை நடைபெறாமல் தடுப்பதில் தவறுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டுதான். கொலைபுரிந்த கயவன் மீது கொலைக்குற்றத்திற்காக விசாரணை மேற்கொள்ளப்படும் அதே சமயத்தில், சம்பவ இடத்தில் நின்றிருந்தும் கொலை நடப்பதைத் தடுத்திடத் தவறிய போலீஸ்காரன் மீதும் கடமையைச் செய்யத் தவறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உண்மையில் 1993இல் இது தொடர்பாக நரசிம்மராவ் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. அப்போது ‘ஜார்கண்ட் லஞ்ச வழக்கு’ என்று எல்லோராலும் அறியப்பட்ட சம்பவத்தின் காரணமாக அரசாங்கம் கவிழாமல் தப்பிப் பிழைத்தது.
கடந்த அறுபதாண்டு கால குடியரசில், நவீன இந்தியாவினை ஒருமுகப்படுத்தும் நடவடிக்கையில் நாம் மற்றொரு தாக்குதலையும் எதிர்கொண்டோம். 1975இல் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் என்ற வடிவத்தில் அது இருந்தது. மக்கள் அதனை எதிர்கொண்டு முறியடித்து, ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தினார்கள், இந்திரா காந்தியைத் தோற்கடித்தார்கள். ஜனநாயகத்தை மதிக்காது அத்துமீறி நடந்துகொண்ட மேலும் சிலரையும் உரிய முறையில் தண்டித்தார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வும் நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீதான மிக மோசமான தாக்குதலாகும். நம்முடைய நவீன குடியரசின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் அழியாது காத்திட வேண்டுமானால், இவ்வாறு பாபர் மசூதியை இடித்தக் கயவர்கள் மீது உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டியது அவசியம். எனவே. லிபரான் ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் அதன்மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை அறிக்கை மீது நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, இந்தத் திசைவழியில் அது அமைந்திட வேண்டும். நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பு ஒருங்கிணைக்கப்படும் நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)