Monday, February 25, 2008

இளைஞர்களுக்கான முதலீட்டை அதிகரித்திடக் கோரி-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாபெரும் பேரணி

புதுடில்லி, பிப். 25-
இளைஞர்களுக்கான முதலீட்டை அதிகரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்த கொண்ட பேரணி - ஆர்ப்பாட்டம் புதுடில்லியில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் காலக் கூட்டத் தொடர் புதுடில்லியில் திங்கள் அன்று தொடங்கியது. இதனை யொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி திங்களன்று காலை டில்லி ராம்லீலா மைதானத்திலிருந்து புறப்பட்டு நாடாளுமன்றம் நோக்கி வந்தது. பேரணியில் கேரளம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், அர்யானா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இளைஞர்களும் இளம் பெண்களும் பெரும் திரளாகக் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியாவின் எதிர்காலம் செம்மையாக அமைந்திட, இளைஞர்களுக்கான முதலீட்டை அதிகரிக்கக் கோரியும், வேலை நியமனத் தடை ஆணையை ரத்து செய்யக்கோரியும், அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடக்கோரியும், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றிடக் கோரியும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரியும், தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்கக்கோரியும், இத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவாக்கக் கோரியும் பேரணியில் முழக்கமிட்டு வந்தனர், பேரணி நாடாளுமன்ற வீதி வருகையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, இந்திய மாணவர் சங்க பொதுச் செயலாளர் ராகேஷ் முதலானோர் உரையாற்றினார்கள்.
பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பிரதமரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளடங்கிய மனுவைக் கொடுத்தனர்.
(தொகுப்பு:ச.வீரமணி)

No comments: