Monday, February 4, 2008

வரதட்சணை வரையறை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு அநீதியானது-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

வரதட்சணை வரையறை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு அநீதியானதுஉச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு

புதுடில்லி, பிப். 4-

மாப்பிள்ளை வீட்டாரால் திருமணத்திற்குப் பின் கேட்கப்படும் வழக்கமான வெகுமதிகள் வரதட்சணை என்கிற வரையறையின் கீழ் வராது என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது, இதனை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்திட உள்ளோம் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் கூறினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், சங்கத்தின் சட்டத்துறை அமைப்பாளர், கீர்த்தி சிங், உதவி செயலாளர் ஆஷாலதா, புரவலர் பிரமிளா பாந்தே ன்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:
உச்சநீதிமன்றம், திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வெகுமதிகள் வரதட்சணை வரையறையின் கீழ் வராது என்று சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு அநீதியானது. திருமணத்திற்குப்பின் பெண் வீட்டாரிடம் இருந்து கேட்கப்படும் வெகுமதிகள் வரதட்சணை வரையறையின் கீழ் வராது என்று நீதிமன்றம் தீர்ப்பளிப்ப்து இது மூன்றாவது முறை. வரதட்சணை வரையறையை முழுதுமாக திரித்து இத்தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். 1961ஆம் ஆண்டு வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் வரையறை (definition) தொடர்பான இரண்டாவது பிரிவின்கீழ், திருமணம் சம்பந்தமாக திருமணத்திற்கு முன்பும், திருமணத்தின்போதும், திருமணத்திற்குப் பின்பும் கொடுக்கப்படும் பணம் அல்லது ம்திப்புள்ள சொத்துக்கள் எதுவாக இருந்தாலும் வரதட்சணையாகும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடந்த 25 ஆண்டு கால அனுபவம் என்னவெனில், வரதட்சணைக்காக பெண்களை இம்ஷிப்பது என்பது திருமணத்திற்குப் பின் வரும் பண்டிகைக் காலங்கள், பிள்ளைப்பேறு, ஆண்டுவிழாக்கள் மற்றும் இதுபோன்று பல நிகழ்வுகளின் சமயங்களில்தான். வரதட்சணைக்காகப் பெண்கள் தொடர்ந்து இம்ஷிக்கப்படுவதன் விளைவாகத்தான் வரதட்சணைச் சாவுகள், தற்கொலைகள் மற்றும் பெண்கள் சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகின்றனர். நாட்டில் 7500க்கும் மேற்பட்ட வரதட்சணை சாவுகள், பல்லாயிரக்கணக்கான தற்கொலைகள், 40 ஆயிரத்திற்கும் அதிகமான துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகள் எந்த அளவிற்கு வரதட்சணைக் கொடுமைகள் நாட்டில் இருக்கின்றன என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. வரதட்சணை என்பது ஆண்-பெண் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு முன்னுரிமை, பெண் மகவு கருவிலேயே சிதைக்கப்படுதல், பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுதுல் அனைத்துடனும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் பெண் மகவு பிறப்பு குறைந்திருப்பதும், காணாமல் போக்கும் பெண் குழந்தைகள் அதிகரித்திருப்பதும் வரதட்சணைக் கொடுமையின் விளைவுகளே. இந்தியாவில் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் அதிகமான பெண் சிசுக் கொலைகள் நடைபெறுவதாக யூனிசெப் நிறுவனம் அபாப அறிவிப்பை அளித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது ஓர் ஆரோக்கியமற்ற அநீதியான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றும் வரதட்சணைக் கொடுமை புரிவோரை சுதந்திரமாக உலாவவிடுவதற்கு வழி செய்திடும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. எனவே உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்திட வேண்டும். இதற்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மறுஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திட உள்ளது. இவ்வாறு சுதா சுந்தரராமன் கூறினார்.

செய்தியாளர்கள் தீர்ப்பின் விவரங்கள் குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கு சட்டத்துறை அமைப்பாளர் கீர்த்தி சிங் விளக்கமளித்தார்.

No comments: