Friday, February 8, 2008

வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் - நீதியரசர் கற்பக விநாயகம்



புதுடில்லி, பிப். 9-

வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்பது இன்றைய காலகட்டத்திலே மிகவும் தேவையான சொற்களாக மாறிவிட்டன என்று ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் கற்பக விநாயகம் கூறினார்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று மாலை ‘‘வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள்’’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். பின்னர் சிறப்புச் சொற்பொழிவாற்றியபோது நீதியரசர் கற்பக விநாயகம் பேசியதாவது:

‘‘இங்கே சிறப்புச் சொற்பொழிவாற்ற தில்லித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் என்னைக் கேட்டுக்கொண்டபோது நான் சில தலைப்புகளைச் சொன்னேன். அதில் ‘‘வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள்’’ என்கிற தலைப்பை பொதுச்செயலாளர் இரா. முகுந்தன் தேர்ந்தெடுத்து அதிலேயே உரையாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். வாழ்க்கை ஒரு மலர்ச்சோலை என்று சொல்லாமல், வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்று சொல்லாமல், வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்? வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்ற சொற்கள் விவேகானந்தர் சொன்ன சொற்கள். அதுவும் இங்கே பள்ளிக் குழந்தைகள் இருக்கிறபோது, இளைஞர்கள் இருக்கிறபோது இளைஞர்களை மிகவும் விரும்பிய விவேகானந்தர் கூறிய சொற்கள் அவை. இன்றைய உலகமய காலகட்டத்திலே மிகவும் தேவையான சொற்களாக அவை மாறிவிட்டன. வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள், வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள், வாழ்க்கை ஒரு சோகம் - முறியடியுங்கள், வாழ்க்கை ஒரு பாடல் - இசைத்துப் பாருங்கள், வாழ்க்கை ஒரு பயணம் - முடித்து வையுங்கள், வாழ்க்கை ஒரு பரிசு - பெற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு அழகு - ஆராதியுங்கள், வாழ்க்கை ஒரு கடமை - செய்து முடியுங்கள், வாழ்க்கை ஒரு லட்சியம் - அடைந்து விடுங்கள், வாழ்க்கை ஒரு சக்தி - உணர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு சரித்திரம் - பகிர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு வரலாறு - படைத்துவிடுங்கள், நீங்களே வரலாறாக மாறி வரலாற்றைப் படையுங்கள். இந்தச் சொற்கள் அத்தனையும் என்னுடைய சொற்கள் அல்ல. இவை அனைத்தும் விவேகானந்தர் கூறிய சொற்களாகும். நாம் ஏன் விவேகானந்தரை எண்ணிப் பார்க்க வேண்டும்? இன்றைய இளைஞர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? உலகமயக் கொள்கைகள் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்போது, மனிதாபிமானம் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியதாக இருக்கிறது. மணி (money) தா, அபிமானம் தருகிறேன் என்ற நிலையிருக்கிறது. அடுத்தவரிடம் அன்பு பாராட்டுவது, அன்புசெலுத்துவது, திருப்தியாக இருப்பது, மகிழ்ச்சியாக இருப்பது, சுறுசுறுப்பாக இருப்பது அவசியம்.சுறுசுறுப்பான மனிதர்களைப் பார்க்கும்போது நமக்கும் சுறுசுறுப்பு வரும். மகிழ்ச்சியான மனிதர்களைப் பாருங்கள், நமக்கும் மகிழ்ச்சி வரும். இளைஞர்கள் என்பது வயதில் இல்லை, மனதில்தான் இருக்கிறது. இருபது வயது கிழவர்களும் உண்டு, 70 வயது இளைஞர்களும் உண்டு. வேலையை நினையுங்கள், துடிப்பாகச் செய்யுங்கள், அப்போதுதான் இளைஞர்களுடைய மனம் வரும். எதையாவது செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றல், ஆர்வம் இருக்க வேண்டும்.

If you engage yourself, your will become young age.

ஒருவரிடம் அன்பு செலுத்தி பாராட்டுவது என்பது, அவருக்கு வெள்ளித் தட்டில் தங்கக் கனியை அளிப்பது போலாகும். இந்த உற்சாகத்தை அடுத்தவருக்குக் கொடுங்கள். அதிலிருக்கிற இன்பம் வேறெதிலும் இல்லை. யார் இளைஞன்?

எவன் ஒருவன் தன் லட்சியத்தை நோக்கிய பயணத்தை நிறுத்தாதவனோ அவனே இளைஞன். லட்சியத்தை நோக்கி முன்னேறு, முன்னேறிக் கொண்டே இரு. அவ்வாறு முன்னேறிக்கொண்டிருப்பவனே இளைஞன்.

எவன் ஒருவன் லட்சியத்திற்காகப் போராடுகிறானோ, எவன் ஒருவன் அடுத்தவர் மகிழ்ச்சிக்காகப் போராடுகிறானோ அவனே இளைஞன். தன்னைத் தியாகப்படுத்திக் கொண்டு, அடுத்தவருக்காக வாழ்கிறவனே இளைஞன். உயர்ந்த எண்ணங்களுடன் வாழ்பவன், தன்னையும் உயர்த்திக் கொள்கிறான், அடுத்தவர்களையும் உயர்த்துகிறான். அப்படி நாம் வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவன் உயர்ந்தவன் என்று எதை வைத்துச் சொல்கிறோம். அவன் உயரத்தை வைத்து அல்ல. மரம் கூட உயர்ந்திருக்கிறது. மரங்களின் உயர்வு உயரத்தைப் பொறுத்தது அல்ல. அது மக்களுக்கு அளிக்கும் பழங்களைப் பொறுத்தது, பயன்பாட்டைப் பொறுத்தது. அதேபோன்று மனிதர்களுக்குப் பெருமை எப்படி வருகிறது? பதவியை வைத்தா? நாம் எந்தப் பதவியிலிருக்கிறோம் என்பது முக்கியமல்ல, அந்தப் பதவியிலிருந்து கொண்டு மனிதகுல முன்னேற்றத்திற்கு என்ன உதவி செய்கிறோம் என்பதைப் பொறுத்தே நமக்குப் பெருமை. இவ்வாறு நான் இந்த மனிதகுல முன்னேற்றத்திற்கு உருப்படியாக எதையேனும் செய்திருக்கிறேனா? நல்லவனா இருந்திருக்கிறேனா? வல்லவனாக இருந்திருக்கிறேனா? இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்லி நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.நம்மில் பலர் நம் தலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மூளைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதயத்திற்குக் கொடுப்பதில்லை. மனிதநேயத்திற்குக் கொடுப்பதில்லை. வாழ்க்கை என்றால் என்ன? What is LIFE. Live for love. Ignore bad habits. Fight against troubles. Enjoy the life. This is LIFE. அனைவரிடமும் அன்பு செலுத்து. தீயதைப் புறக்கணி. இன்னல்களுக்கு எதிராகப் போராடு. வாழ்க்கையை அனுபவி.

இதுதான் வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கை அனுபவிப்பதற்கே. எழு, விழி, லட்சியம் நிறைவேறும் வரை துவண்டு விடாதே. Arise, awake and stop not till the goal is reached. இதுவே விவேகானந்தர் நமக்குச் சொல்லித்தந்துள்ள வாழ்க்கை.

வாழ்க்கை என்பது போராட்டம். போராட்டத்தின்போது பல்வேறு சோதனைகள் வரலாம், தோல்விகளும் வரலாம். அவற்றைக் கண்டு துவளாதீர்கள். இறுதி வெற்றி கிட்டும்வரை போராடுங்கள். வெற்றி பெற்ற பிறகு கிடையாது வாழ்க்கை. வெற்றிக்காகப் போராடுகிறோமே அதுதான் வாழ்க்கை. போராடுவதில் இருக்கிற சுவை வேறெதிலும் இல்லை.

இவ்வாறு நீதியரசர் கற்பக விநாயகம் பேசினார். பின்னர் திருக்குறள், பாரதியார், பாவை விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தில்லித் தமிழ்க் கல்விக் கழக, தில்லி மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். துணைத் தலைவர் எஸ். துரை நன்றி கூறினார்.

(தொகுப்பு: ச. வீரமணி)

No comments: