Thursday, February 7, 2008

விவசாயிகள் கடன் நிவாரண ஆணையம் அமைக்கப்பட வேண்டும்:பிரகாஷ்காரத்

புதுடில்லி, பிப்.7-

வரவிருக்கும் பட்ஜெட் உரையில் விவசாயிகள் கடன் நிவாரண ஆணையம் அமைப்பது குறித்து அரசின் முடிவு தெரிவிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.

இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சார்பில் பத்திரிகையாளர்கள் கூட்டம் வியாழன் அன்று மாலை புதுடில்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் மற்றும் தேசிய செயலாளர் து. ராஜா, ஆர்.எஸ். பி. சார்பில் அபனிராய், பார்வர்ட் பிளாக் சார்பில் தேவபிரதா பிஸ்வாஸ் மற்றும் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அவ்வமயம் 2008-09ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்காக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை விளக்கி பிரகாஷ்காரத் கூறுகையிலேயே இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாகவே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பட்ஜெட் குறித்து முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டும் அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியிருக்கிறோம். சில முக்கியமான அம்சங்கள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவது இது சரியான தருணம் என்று கருதுகிறோம். சமர்ப்பிக்கப்படவிருக்கும் பட்ஜெட் நாடு எதிர்நோக்கியுள்ள உண்மையான மற்றும் அவசரமான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் அமைந்திட வேண்டும். விவசாய நெருக்கடியால் விளைந்துள்ள பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்குத் தீர்வு காணக்கூடிய வகையில் பட்ஜெட் அமைந்திட வேண்டும். மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தன்னுடைய குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் பட்ஜெட் அமைந்திட வேண்டும். குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளில் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு அவற்றை நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் மற்றும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அரசு அளித்துள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில் எங்கள் முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி இருக்கிறோம்.

அடுத்ததாக, அரசு தன்னுடைய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை எவ்வாறெல்லாம் ஒதுக்கிட வேண்டும் என்றும் நிதி வருவாயைப் பெருக்கிட அரசு எவ்விதங்களில் வரி விதிக்க வேண்டும் என்றும் சில யோசனைகளை அளித்திருக்கிறோம். குறிப்பாக விவசாயிகள்/விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் அறிவித்துள்ளபடி விவசாயத்திற்கான பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக விவசாயிகளின் கடன்களிலிருந்து அவர்களை விடுவிக்க அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை பட்ஜெட் அறிவித்திட வேண்டும். சிறிய நடுத்தர விவசாயிகள் கடன்களை ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் அளித்திட்ட பரிந்துரையின் அடிப்படையில் தேசிய கடன் நிவாரண ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு கேரள அரசு கொண்டுவந்துள்ள கடன் நிவாரணச் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டிடலாம். கேரளாவில் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கியுள்ள கடன்களைக்கூட அரசே கட்டி, விவசாயிகளை கடன் வலையிலிருந்து விடுவித்திருக்கிறது. அதேபோன்று எதிர்காலத்தில் விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் பரிந்துரைத்திருப்பதுபோல் 4 சதவீத வட்டிவிகிதத்தில் கடன் கொடுத்திட அரசு முன்வர வேண்டும். விலைவாசி உயர்ந்திருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், அரசு கொள்முதல் சமீப காலங்களில் முறையாக இல்லாததால் விவசாயிகளும் சாமானிய மக்களும் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே அரசு கொள்முதலை மீண்டும் முறைப்படுத்தி, பொது விநியோக முறையையும் செம்மையாக்கிட வேண்டும். மீண்டும் பொது விநியோக முறையில் ஒரே சீரான முறையை (Universal Public Distribution System) கொண்டுவரப்பட வேண்டும். அதற்குத் தேவையான வகையில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனைத்திற்கும் மான்யங்கள் வழங்கிட வேண்டும்.குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அளித்துள்ள உறுதிமொழிகள், கல்வி, சுகாதாரம், சச்சார் கமிட்டி பரிந்துரைகள், தேசிய கிராமப்புற உறுதித் திட்டம் ஆகிய அனைத்திற்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அடுத்ததாக, அரசு தேவையற்ற முறையில் பலருக்கு வரி விலக்கு அளித்திருக்கிறது. அவற்றை அரசு கைவிட வேண்டும். குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தின்கீழ் பெரும் நிறுவனங்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகளை வாபஸ் பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் சிறப்புப் பொருளாதார மண்டனலச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். நீண்டகால மூலதன ஆதாய வரியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். பத்திரம் பரிவர்த்தனை வரி விகிதமும் (Securities Transaction Tax) அதிகரிக்கப்பட வேண்டும். எங்கள் முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பிவிட்டோம். இவை அனைத்தையும் அரசும் நிதி அமைச்சரும் கணக்கில் எடுத்துக் கொண்டு பட்ஜெட் தயாரித்திட வேண்டும். இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

இது தொடர்பாக நிதி அமைச்சரை சந்திப்பீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, கடந்த இரு ஆண்டுகளாக அந்த நடைமுறை கைவிடப்பட்டுவிட்டது என்றும் இந்த ஆண்டும் அவ்வாறு இருக்காதென்றே கருதுகிறோம் என்றும் பிரகாஷ் கூறினார்.



No comments: