Thursday, February 14, 2008

2008-09ஆம் ஆண்டு பட்ஜெட்: இப்போதாவது செயல்படுக




நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 25 அன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் தன்னுடைய முதல் உரையை நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்வில் ஆற்ற இருக்கிறார்.
‘‘தன்னுடைய அரசாங்கம்’’ முன்னுரிமை அளித்துள்ள திட்டங்களின் மீது அவர் கவனம் செலுத்துவார் என்பதில் ஐயமேதுமில்லை. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் ‘‘ஆம் ஆத்மி’’ என்கிற ‘‘சாமானியர்கள்’’ சார்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் சொல்லியிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும், அரசால் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை என்றாலும் இப்போதாவது நிறைவேற்றிட முன்வரும் என்று நாம் நம்புவோமாக. மேலும், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பு மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை தொடர்பாக பரவலாக எழுந்துள்ள ஐயுறவுகளைக் களைந்திடவும் அரசின் சார்பில் அவர் முன்வருவார் என்றும் நாம் நம்புவோமாக.
எது எப்படி இருந்தபோதிலும், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றிட, ஐமுகூ அரசாங்கத்திற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். ஐமுகூ அரசாங்கத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி பட்ஜெட்டாகும் இது.விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள துயாரார்ந்த விளைவுகளைச் சரி செய்திட தீவிரமான முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். விவசாயத்துறையில் பொது முதலீட்டைக் கணிசமான அளவில் அதிகரிப்பதாக குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது எதிர்பார்த்த அளவிற்கு நடந்திடவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடராது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால், கந்து வட்டிக்காரர்களின் வலையில் சிக்கி மீளமுடியாது மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் விவசாயிகளை அவர்களது வலைப்பின்னலிலிருந்து விடுவித்தாக வேண்டும். இதற்கு அரசு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடனுதவி அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, விவசாயத் துறையில் அரசு நிதிநிறுவனங்கள் மூலமான நிதி உதவியினை இருமடங்கிற்கும் மேல் உயர்த்தி இருக்கிறது என்பது உண்மைதான். ஆயினும், விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கினர், இன்னமும் கந்துவட்டிக்காரர்களின் வலையில்தான் சிக்கிக்கொண்டுள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. மேலும், விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று கோரினோம். அரசும் கடனுக்கான வட்டிவீதத்தை 11 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி அது 4 சதவீதமாகக் குறைக்கப்படவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குப் பிரதான காரணம் அவர்கள் கடன் சுமைதான் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு அரசின் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மூலமாகக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் உதவி அளிப்பது மிகவும் முனைப்பான முறையில் அதிகரிக்கப்படாவிட்டால், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமே இல்லை. இதற்குக் கிராமப்புற வங்கி அமைப்பு முறையைப் புரட்சிகரமான முறையில் விரிவாக்கி மாற்றி அமைத்திட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஐமுகூ அரசாங்கமோ, கிராமப்புற வங்கிகளை மேலும் பலவீனப்படுத்தக் கூடிய அளவிற்கு, முரணான திசைவழியில் பயணம் மேற்கொண்டிருக்கிறது. இதனைத் திருப்பிவிட வேண்டியது இன்றைய தேவையாகும்.
மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு, அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP-Minimum Support Price) உயர்த்துவதும் தேவையாகும். இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு 1200இலிருந்து 1600 ரூபாய் வரை தரும் இந்திய அரசு, இந்திய விவசாயிகளுக்கு வெறும் 850 ரூபாய் மட்டுமே தருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, இடதுசாரிக் கட்சிகள் நிர்ப்பந்தம் அளித்ததை அடுத்து, அதனை அரசு 1,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆயினும், நெல்லைப் பொறுத்தவரை, நெல் விவசாயிகள் கோரிக்கையை செவிமடுத்து அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் அளித்திட அரசு இதுவரை முன்வரவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை நெல்லுக்கும் அதிகரித்திட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை அளித்திடும் விவசாயப் பொருள்களின் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட வேண்டும்.
தொடரும் விவசாய நெருக்கடியைத் தடுத்து நிறுத்திட இந்நடவடிக்கைகள் அனைத்தும் அவசியம்.விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்வது மனிதாபிமான அடிப்படையில் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. ஆனால், இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில், இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் முறியடிக்கப்பட வேண்டும், அதற்கு விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை போக்கப்பட்டு, இந்திய விவசாயத் துறை மீண்டும் வலிவும் பொலிவும் பெற்றதாக மாற வேண்டும்.
விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதுடன், குறைந்த பட்ச பொது செயல் திட்டம் பல்வேறு சமூகத் துறைகளிலும் பொது செலவினங்களை அதிகரிக்க இருப்பதாகவும் உறுதிமொழி அளித்திருந்தது. கல்விக்கான செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும், பொது சுகாதாரத்திற்கான செலவினம் குறைந்தபட்சம் 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் உறுதி கூறியிருந்தது. ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.உண்மையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு கல்விக்கும், பொது சுகாதாரத்திற்கும் செலவழிப்பதற்கு அரசாங்கத்திடம் போதுமான வருவாய் இல்லை என்று இனியும் அரசு சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஏனெனில், அரசின் கடந்த நான்கு பட்ஜெட்டுகளிலும், சராசரியாக, அரசின் வருவாய் வளர்ந்துகொண்டுதான் வந்திருக்கிறது. தற்சமயம் அரசு எதிர்பார்த்த இலக்கைவிட குறைந்தபட்சம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகவே வருவாய் வந்திருக்கிறது. இந்த ஆண்டு, பட்ஜெட்டுக்கு முந்தைய மதிப்பீடுகளின்படி, அரசின் வருவாய் இலக்கு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் 40 சதவீத அளவிற்கு இருந்திடும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, பொது முதலீட்டை விரிவான முறையில் செய்திடுவதற்கு ஐமுகூ அரசாங்கத்திடம் வளமில்லை என்று சொல்ல முடியாது. ஏராளமான அளவிற்கு வாய்ப்பும் வளமும் பெற்றிருக்கிறது. பொதுப் பணிகளை விரிவாக்கி, இவ்வாய்ப்பு வளங்களை ஒழுங்காகப் பயன்படுத்துவதன் மூலமும், மிகப் பெரிய அளவில் வேலையில்லா இருக்கும் இளைஞர்களுக்கு வேலை அளிக்க முடியும். அது நம் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி, பல்வேறு வழிகளில் உயர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். இவ்வாறு நம் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் விரிவாக்கமானது, ஒட்டுமொத்த உள்நாட்டுத் தேவையை உயர்த்தி, ஆக்கத் தொழில்துறை(Manufacturing Sector)யின் வளர்ச்சிக்கும் உந்துவிசையாக அமைந்திடும். இப்போது அதன் வளர்ச்சி என்பது சரிந்து கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டு அரசு பொது முதலீட்டைச் செய்யாததைச் சுட்டிக்காட்டி நம் ஆழ்ந்த ஏமாற்றத்தினையும் அரசுக்குத் தெரிவித்திருந்தோம். இந்த ஆண்டும் அரசு அதே பாதையிலேயே செல்லலாம். காரணம், ஆளும் வர்க்கங்களின் நவீன-தாராளமயக் கொள்கை அடிப்படையில் உள்ள கண்ணோட்டம்தான், வரிவருவாயின் மூலம் கிடைத்துள்ள அபரிமிதமான உபரித் தொகையைப் பொது முதலீட்டுக்குப் பயன்படுத்தாதது மட்டுமல்ல, அரசு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு மேலும் வரிச் சலுகைகளை அளித்து அவை நம் நாட்டிலிருந்து கொள்ளை லாபம் அடித்துச் செல்ல துணைபுரிந்து வருகிறது. விளைவு, பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கான வரி விகிதம், அரசு அறிவித்துள்ள வரிவிகிதத்தை விட கணிசமான அளவு குறைந்திருக்கிறது.
ஆட்சியாளர்களின் இத்தகு கொள்கைநிலைபாட்டினால் இரு விஷயங்கள் நடந்துள்ளன. ஒன்று, வரிச் சலுகைகள் மூலம், உயர் வருமானங்களின் பயன்கள், நாட்டின் பணக்காரர்களுக்கே மீண்டும் திரும்பிச் சென்றுள்ளன. இரண்டாவதாக, இத்தகைய வரிச் சலுகைகளின் விளைவாக, எதிர்காலத்தில் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய்களும் இல்லாமல் போய்விடுகிறது. இவற்றால், ‘ஒளிர்கின்ற’ இந்தியனுக்கும் ‘அவதியுறுகின்ற’ இந்தியனுக்கும் இடையேயுள்ள இடைவெளி மேலும் விரிவடைந்திருக்கிறது.
ஆட்சியாளர்களின் இத்தகு நிலைபாடுதான், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டதின் அமலாக்கத்தை சுமார் மூன்றாண்டு காலத்திற்குத் தாமதப்படுத்தியது. அதேபோன்று, அரசாங்கம் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கழிந்த பின், தேவையான விதிமுறைகளை அரசிதழில் அறிவித்திட காலதாமதம் செய்ததன் காரணமாக, பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இப்போதுதான் நடைமுறைப்படுத்த முடிந்திருக்கிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளின்பால் ஆட்சியாளர்களுக்கு இருக்கக்கூடிய பாசம்தான், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைவிட, பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்திட ஊக்குவிக்க வேண்டுமென்கிற கொள்கை நிலைக்குத் துரதிர்ஷ்டவசமான முறையில் ஆட்சியாளர்களைத் தள்ளி இருக்கிறது. எனவேதான் குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மக்கள் நலஞ்சார்ந்த உறுதிமொழிகள் அனைத்தும் கடந்த நான்காண்டு காலமாக தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.
இந்த ஆண்டு பட்ஜெட் ஐமுகூ அரசாங்கம், தான் போய்க்கொண்டிருக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்த இறுதியாக ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. ஐமுகூ அரசாங்கம் பட்ஜெட்டில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இடதுசாரிக் கட்சிகளும் ஒரு மனுவை அரசுக்கு அளித்திருக்கிறது. தற்சமயம் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்விலிருந்து ஏதேனும் நிவாரணம் கிடைத்திடலாம் என்று மக்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடைந்திட வேண்டுமானால் ஊக வணிக சந்தையிலிருந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்கும் தடை விதித்திட வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் பொது விநியோக முறையின் கீழான கடைகளில் விற்கப்பட்டு, பொது விநியோக முறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் மறுத்துக் கொண்டிருக்கிறது. நாம் கொடுத்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மட்டும் ஊக சந்தையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் இது போதுமானதல்ல. பொது விநியோக முறையைப் பொறுத்தவரை, அரசு எதிர் திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது. பொது விநியோக முறைக்கு விடுவிக்கப்படவேண்டிய உணவு தான்யங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வைப் பொறுத்தவரை மிகவும் கேடுபயக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, கேரளாவில், வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள ரேஷன் அட்டைதாரர்களான 49.4 லட்சம் பேருக்கு, மத்திய அரசு 1 லட்சத்து 13 ஆயிரத்து 420 டன்கள் அரிசி விடுவிப்பது இதுகாறும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அது 21 ஆயிரத்து 334 டன்களாக, கடுமையான முறையில் - அதாவது சுமார் 90 சதவீதம் வெட்டப்பட்டிருக்கிறது. கேரளாவில் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அட்டைதாரருக்கும் கேரள அரசு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ அரிசி கொடுத்து வருகிறது. இதற்கு மாதத்திற்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 டன்கள் அரிசி தேவை. ஆனால் மத்திய அரசே வெறும் 20 ஆயிரத்திற்கும் கொஞ்சம் அதிகமான அளவில் அரிசியை விடுவித்திருக்கிறது. பொது விநியோக முறையைச் சின்னாபின்னப்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை மேலும் இடருக்கு உட்படுத்துவதற்கும் இதைவிட சிறந்த வழி வேறெது இருக்க முடியும்? மேலும், இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும்.அரசு இத்தகைய போக்குகளை முழுமையாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, விரிவான வலுவான போராட்டங்களைச் சந்திக்க அரசு தயாராக இருக்கட்டும்.
தமிழில்: ச. வீரமணி

1 comment: