Saturday, November 6, 2010

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பயங்கரவாதத் தொடர்புகள்


ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆட்கள் பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப் பட்டிருப்பது வெளியுலகத்திற்குத் தெரிய வருவது அதிகரித்திருக்கும் சூழலில், ஆர்எஸ்எஸ் இயக்கமானது ‘தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தாக்குதல்’ (‘Offence as the best form of defence’) கொள்கையைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருக்கிறது. அது நவம்பர் 10 அன்று அதன் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்புடன் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பான விவரங்களைப் பின்னர் தருவோம்.

2007 அக்டோபர் 27 அன்று நடைபெற்ற ஆஜ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவரான இந்த்ரேஷ் குமார் மட்டும் அல்ல என்று ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2010 அக்டோபர் 22 அன்று குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஹகூளு-ஹவேi-கூநசசடிசளைஅ ளுளூரயன), குற்ற அறிக்கையில் இந்த்ரேஷ் குமார் ஒரு சதிகாரர் (உடிளேயீசையவடிச) என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவரை எதிரியாக (யஉஉரளநன) குற்ற அறிக்கையில் சேர்க்கவில்லை. அவர் அல்லாது, குற்ற அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்ற ஐந்து எதிரிகளில், நான்கு பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என்று பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சதியுடன் தொடர்புடைய ஆறாவது முக்கியமான நபர் இறந்து விட்டதால் எதிரியாக சேர்க்கப்படவில்லை. அவ்வாறு இறந்த நபரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ளவரென்றும் அது குறிப்பிட்டிருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2008 செப்டம்பர் 8 அன்று மாலேகான் பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதலுக்கு, ஒருசில வாரங்களுக்குப்பின், மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, பலரைக் கைது செய்தது. அவற்றில் ஒரு ராணுவ அதிகாரியும், இந்துத்வா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சாமியாரிணியும் உண்டு. தேச விரோத பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்டமைக்காக இந்துத்வா வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது சமீபகாலங்களில் இது முதல் தடவையாகும். இதனைத் தொடர்ந்து மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மேற்கொண்ட புலனாய்வுகளின் அடிப்படையில் தற்போதைய குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆஜ்மீர் தாக்குதல் மற்றும் ஹைதராபாத்தில் 2007 மே 18 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இடையேயும் தொடர்புகள் இருப்பதாகப் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. 2007 பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற தில்லி - லாகூர் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் மீதான பயங்கரவாதத் தாக்குதலிலும் இந்த எதிரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றவுடனே, 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் கவனத்திற்குக் கீழ்க்கண்ட சம்பவங்களைக் கொண்டுவந்தது. ‘‘நாடு முழுதும் நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களில் பஜ்ரங் தளம் அல்லது இதர ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் காவல்துறையினரின் புலனாய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. மகாராஷ்ட்ராவில் 2003இல் பர்பானி, ஜால்னா மற்றும் ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம், 2006இல் நாண்டட் சம்பவம், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம், கான்பூரில் 2008 ஆகஸ்ட்டில் நடைபெற்ற சம்பவம், மற்றும் பல சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டிருந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் முழுமையாக புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இவற்றிற்குக் காரணமான கயவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தது.
ஆரம்பத்தில், மாலேகான் கைதுகளுக்குப் பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ‘கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கேயுரிய பாணியில் பதிலளித்துக் கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய பிரச்சார பிரமுகர், மன்மோகன் வைத்யா, அப்போது ஊடகங்களுக்கு, ‘‘சங்பரிவாரத்தின் சித்தாந்தங்களிலிருந்து அவர்கள் உத்வேகம் பெற்றிருந்திருக்கலாம், ஆயினும் அவர்கள் சங் பரிவாரத்தின் செயலாற்றும் உறுப்பினர்கள் அல்ல’’ என்று கூறியிருந்தார். இவ்வாறு இவர் கூறுவதும் ஒரிஜினல் அல்ல. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நாதுராம் கோட்ஷே குறித்து சொல்லப்பட்ட வாசகங்கள்தான் இவைகள். ஆயினும் கோட்ஷேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்திட்ட நேர்காணலில் தங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று பதிவு செய்திருக்கிறார். வேறு சிலர், இந்து அடிப்படைவாதத்தின் உதிரி அமைப்புகள் சில, பொறுமையிழந்து, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள். இதே தொனியில், வேறு சில ஆர்எஸ்எஸ் தலைவர்களும்கூட, ‘இயக்கத்திலிருந்து விலகிச்சென்ற சிலர்’ வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம் என்று ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆனால், அதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக பயங்கரவாத அமைப்பு என்று கூறுவது சரியல்ல என்று வாதிட்டார்கள். இதுவும் மகாத்மா காந்தியின் கொலை வழக்கு நடைபெற்ற சமயத்தில் ஆர்எஸ்எஸ் கூறியவைதான். இத்தகைய அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் அன்றும், ‘‘பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியது.

ஆயினும், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற அறிக்கைகளிலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகள் நன்கு வெளிப்பட்டுள்ளன. எனவேதான் ஆர்எஸ்எஸ் தன் உத்தியை மாற்றிக்கொண்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தவறாகக் கூறப்பட்டிருப்பதாகக் கூறி நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மூன்று நாட்கள் நடைபெற்ற அதன் அகில பாரதீய கார்யகாரி மண்டல் (Akhil Bharatiya Karyakari Mandal) மாநாட்டில் கடைசி நாளான அக்டோபர் 31 அன்று இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுதும் நடைபெறும் என்றும், லக்னோவில் அதன் தலைவரும், ஹைதராபாத்தில் அதன் பொதுச் செயலாளரும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதன் பொதுச் செயலாளர் மிரட்டும் தொனியில், பயங்கரவாதத்துடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொடர்புபடுத்தியிருப்பதற்கு எதிராக ‘‘இந்து சமூகம் சீற்றம் அடைந்திருக்கிறது’’ என்றும், ‘‘தேசியவாத’’ ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நற்பெயரைக் கெடுத்திட மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சியும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார். இத்தகைய எதிர்ப்புகள், அரசாங்கங்களையும், புலனாய்வு அமைப்புகளையும் மேலும் இதில் தொடரா வண்ணம் தடுப்பதற்கான நிர்ப்பந்தங்கள் என்பது தெளிவு.
பயங்கரவாதம் என்பது தேச விரோதம் என்றும், அதற்கு எதிராக நாடு கிஞ்சிற்றும் சகிப்புத் தன்மை காட்டக்கூடாது என்றும் நாம் அடிக்கடியும் தொடர்ந்தும் இப்பகுதியில் கூறிவந்திருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. அனைத்து விதமான பயங்கரவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன, அதன் மூலம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அழிக்க முயற்சிக்கின்றன. எனவே, தற்போதைய புலனாய்வுகள் எவ்விதமானத் தடங்கலுமின்றி நடைபெற்று, நாட்டின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றுத் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: