Friday, November 5, 2010

பராக் ஒபாமா இந்தியப் பயணம்:பிரகாஷ் காரத்



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவிற்கு நவம்பர் முதல்வாரத்தில் வருகை தருகிறார். சென்ற முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வந்திருந்த போது, நாடு முழுதும் விரிவான அளவில் அவரது வருகைக்கு எதிராக எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்றன. அவரது பயணத்தின்போது பிரதானமாக இராக்கில் நடைபெற்ற யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது பயணத்திற்கு எதிராக உறுப்பினர்களின் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், புஷ் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதும் உலகம் முழுதும் ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்த்தப் பட்டது. அமெரிக்க செனட் சபையில் இராக்கில் நடைபெறும் யுத்தத்தினை எதிர்த்துக் குரல் கொடுத்த ஆப்ரிக்க-அமெரிக்கரான இளம் அதிபர் பராக் ஒபாமாவிடம் மக்களுக்குப் பெருமளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. புஷ் சகாப்தத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே உலகம் பார்த்தது. ஒபாமா நிர்வாகத்தின் சுமார் ஈராண்டு கால ஆட்சியானது, அவ்வாறான எதிர்பார்ப்புகளில் பெரும்பாலானவற்றைப் பொய்ப்பித்து விட்டன. ஆட்சி புரியும் விதம் மாறியிருக்கிறது என்றபோதிலும், அமெரிக்க அயல்துறைக் கொள்கையின் சாராம்சத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் எதுவும் இல்லை.
இராக்கில் போரிட்டுக் கொண்டிருக்கும் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்கா அறிவித்திருந்தபோதிலும், 50 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்களும் மற்றும் இதர கூலிப் படையினரும் இன்னமும் இராக்கிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ராணுவத் தலங்கள், அமெரிக்க நலன்களை மேற்பார்வையிடுவதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் அந்நாட்டின் எண்ணெய் வளங்களில் ஒரு பெரும் பங்கினைக் கைப்பற்றுவதுதான். ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து ஈரானை, அணுசக்திப் பிரச்சனையில் குறிவைத்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை நான்காவது முறையாகப் பெறுவதற்கான விஷயத்தில் முன்னணியில் நிற்கிறது. பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வுக்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கிட உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், ஒபாமா நிர்வாகம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. ஏனெனில் அது அமெரிக்காவில் வலுவாக விளங்கிடும் யூதர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப வில்லை. அது தொடர்ந்து இஸ்ரேலின் சட்டவிரோதமான ஆட்சியையும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அதன் விரிவாக்கத் திட்டங்களையும் கவனிக்காதது போலிருப்பது தொடர்கிறது.

ஆப்கானிஸ்தானத்தில், ஒபாமா 30 ஆயிரத்திற்கும் அதிகமான துருப்புக்களை அனுப்பியிருக்கிறார். அப்பிராந்தியத்திற்காக ‘‘ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்’’ போர்த்தந்திரத்தை (‘‘Af-pak’’ strategy)த் திட்டமிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க-நேட்டோ படையினரால் தாலிபான்களை நசுக்க முடியவில்லை, மாறாக ஆப்கான் மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதில்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒபாமா நிர்வாகம் கியூபாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள சட்டவிரோத பொருளாதாரத் தடை தொடர்கிறது. கியூபா மீதான வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டுமானால், அங்கு ‘‘ஜனநாயகத்திற்காக’’ நடைபெறும் தொடர் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமாம்.
ஒபாமா எடுத்திருக்கிற உருப்படியான நடவடிக்கை என 2009இல் பிரேக்கில் ஆற்றிய உரையைக் கூறலாம். அப்போது அவர் உலகம் முழுதும் முற்றிலுமாக அணுஆயுதங்களை ஒழித்திட அறைகூவல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் அது போர்த்தந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (Strategic Arms Reduction Treaty (START III)) செய்து கொண்டது. இதன்படி இரு நாடுகளும் தங்களுடைய அணுஆயுதங்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் சரியென்று ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டிய திருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்குப் பின், ஒபாமா நிர்வாகம் ஒன்றை உறுதிப்படுத்திவிட்டது. அது, ஆட்சியிலிருப்பவர்கள் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிராக உலக அளவிலான போர்த்தந்திர நடவடிக்கைகளிலும், அயல்துறைக் கொள்கைகளிலும் எவ்வித அடிப்படை மாற்றத்தையும் கொண்டுவர மாட்டார்கள் என்பதுதான்.
அமெரிக்கப் பொருளாதாரம் இன்னமும் மீளமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில்தான், வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 9.6 விழுக்காடு அளவிற்கு உச்சத்தில் இருக்கக்கூடிய நிலையில்தான், ஒபாமா இந்தியாவிற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலைமையானது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த ஆதரவைக் குறைத்திருக்கிறது. இது சமீபத்தில் அங்கே நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களில் டெமாக்ரடிக் கட்சி கடும் இழப்பினை அடைந்திருப்பதில் பிரதிபலிக்கிறது. எனவே, ஒபாமாவின் பயணம் இந்தியாவின் சந்தைகளை மிக அதிக அளவில் அமெரிக்காவின் பக்கம் திறந்திடவும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையிலும் வேளாண்துறையிலும் அதிக அளவில் முதலீடு செய்திட அனுமதிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஒபாமா நிர்வாகம் இந்தியாவுடன் ‘அவுட்சோர்சிங்’ வர்த்தம் வைத்துக்கொள்வதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், இந்தியா அமெரிக்காவிற்கு அதிக அளவில் வர்த்தக வாய்ப்புகளை அளித்திட வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

ஒபாமாவின் விஜயம் இந்தியாவில் பல்வேறுவிதமான சிந்தனைப் போக்குகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆள்வோர் மத்தியில் அதிக அளவில் அமெரிக்க ஆதரவு மனப்பாங்கு இருப்பதால், இவ்வாய்ப்பை அமெரிக்காவுடனான போர்த்தந்திரக் கூட்டணியை (strategic alliance) வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ராணுவத்துறையில் மேலும் விரிவான அளவில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், இந்தியாவில் புதிய துறைகளில் அமெரிக்காவின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்திடவும் ஒப்புக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, வலதுசாரிகளில் ஒரு பிரிவினரும், கார்பரேட் ஊடகங்களும் சீனாவிற்கு எதிராகச் சரியான போட்டியை அளித்திட வேண்டுமானால் இந்தியா, அமெரிக்காவின் கொள்கைகளோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கிளிண்டன் நிர்வாகத்தின்போது வாஜ்பாய் அரசாங்கத்தால் ‘‘ஜனநாயகங்களின் சமூகம்’’ (“Community of Democracies”) என்ற பெயரில் அமெரிக்கா வானளாவப் புகழப்பட்டதையெல்லாம் கடந்த காலத்தில் நாம் பார்த்தோம்.

இந்தியாவில் இன்றும் கூட, பலர் புஷ் சகாப்தம் மீது நாட்டம் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே இந்தியாவிற்கு மிகவும் சிறந்தவராக ஜார்ஜ் புஷ் இருந்திருக்கிறார் என்று அமெரிக்காவிற்கான முன்னாள் இந்தியத் தூதர் ரொனென் சென் கூறியிருக்கும் வாசகங்களே இதற்குச் சான்று. அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதற்காக ஏங்குபவர்கள் புஷ் சகாப்தத்தை இழந்துவிட்டதற்காக மிகவும் கவலைப் படுகிறார்கள். இந்தியா, அமெரிக்காவின் நம்பகமான போர்த்தந்திரக் கூட்டணி நாடாக மாறும்பட்சத்தில், இந்தியாவை ஒரு மாபெரும் வல்லரசாக உருவாக்க முடியும் என்று உறுதிமொழி அமெரிக்காவால் அளிக்கப்பட்டது. ஆயினும், புஷ்சும்கூட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்புநாடாக இந்தியா வருவதை ஏற்க மறுத்துவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, புஷ்சிற்கும் ஒபாமாவிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அங்கீகரிக்கிறோம். அதே சமயத்தில், ஒபாமா நிர்வாகமும் உலகை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற அமெரிக்காவின் அடிப்படை அணுகுமுறையின் தொடர்ச்சியே என்பதையும் நாம் அறிவோம். அதனால்தான் ஒபாமாவின் பயணத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர் தலையீடுகளுக்கு நாட்டு மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்திடுவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தத் தீர்மானித் திருக்கிறோம். நாட்டில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திட அமெரிக்க அரசாங்கம் அளித்திடும் நிர்ப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்ளுக்கு நாட்டின் கேந்திரமான துறைகளான வேளாண்மை, சில்லரை வர்த்தகம் மற்றும் உயர் கல்வித்துறைகளைத் திறந்துவிட வசதிசெய்து தருவதற்கும் மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான சிறிய கடைக்காரர்கள் மற்றும் வர்த்தகர்கள் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய விதத்தில் நாட்டிற்குள் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதித்திட ஒபாமா பயணம் பயன்படுத்தப் படக்கூடாது. மத்திய வர்த்தக அமைச்சரும் (Commerce Minister) ஐமுகூ அரசாங்கத்தின் ஒருசில பிரிவுகளும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு வகைசெய்திடும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2005இல் கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புத்துறை கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (Indo-US Defence Framework Pact) கீழ் அமெரிக்கா மேலும் பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. அவற்றின்படி இந்திய ராணுவம், அமெரிக்க பெண்டகனின் துணைப்படை போல் மாறிவிடுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்துதான் ஆயுதங்களைப் பெரிய அளவில் வாங்க வேண்டும் என்பதில் ஒபாமா மிகவும் குறியாக இருக்கிறார். ஏற்கனவே, இந்தியா சி-17 ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கிட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டன. அமெரிக்கர்கள் மேலும் 126 போர் விமானங்களை இந்தியாவை வாங்க வைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவற்றின் மதிப்பு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும். இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவுடன் இந்தியா ராணுவ ஒத்துழைப்பு வைத்திருப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இத்தகைய ஒத்துழைப்பானது நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையையும், போர்த்தந்திர சுயாட்சி (strategic autonomy)யையும் கடுமையாகப் பாதிக்கும்.

போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி உத்தவாதப்படுத்தப்படுவதற்கு அதிபர் ஒபாமா பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்குக் கூறப்பட வேண்டும். உலகில் நடைபெற்றுள்ள மிகமோசமான தொழிற்சாலைப் பேரிடர் விபத்துக்கு ஓர் அமெரிக்க நிறுவனம்தான் பொறுப்பாக இருந்திருக்கிறது. வளைகுடாக் கடற்கரையில் எண்ணெய்க் கசிவினை சுத்தம் செய்வதற்காக பல பில்லியன் டாலர்களை ஒபாமாவால் பெற முடியும் என்றால், போபால் நச்சுக் கசிவுக்குக் காரணமான டவ் கெமிகல்ஸ் (Dow Chemicals) நிறுவனத்திடமிருந்து இழப்புகளுக்கு ஈடான தொகை அவரால் ஏன் பெற முடியாது?

அமெரிக்க அரசு, கடந்த நாற்பது ஆண்டு காலமாக அரபு நாட்டின் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேல் அரசுக்கு அளித்து வரும் உதவியை நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. அதேபோன்று கியூபா மீதான பொருளாதாரத் தடையை நிறுத்த வேண்டும் என்றும், நிர்ப்பந்த நடவடிக்கைகள் எதுவும் எடுத்திடாது அணுசக்திப் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் கோருகிறார்கள்.

நவம்பர் 8 அன்று நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும் அவர் உரையைக் கேட்பார்கள். அதே நாளன்று, நாடு முழுதும் இந்திய மக்களின் எண்ணங்களைத் தெரிவிப்பதற்காக ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நடத்தப்படும். அவற்றை அதிபர் ஒபாமாவும் கேட்டிட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: