Wednesday, June 8, 2016

பகாசுரன் - எட்டாம் நாள்



‘‘வானத்தைப் பார். என்னுடைய உள்ளுணர்வு, விரைவில் மழை வரும் என்று சொல்கிறது,’’ என்று அபி ஊகித்தான். ‘‘அப்படியென்றால் நாம் எழுந்ததும் `வாக்கிங்’ போகிறோமா, இல்லையா?’’ என்று ரவி கேட்டான். ‘‘போய்தான் பார்ப்போமே,’’ என்று பிரதீப் வலியுறுத்தினான். தயங்கிக்கொண்டே மூவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள்.
அவர்கள் வீட்டை விட்டுக் கொஞ்சதூரம்தான் வந்திருப்பார்கள். மேகங்கள் இருட்டிக்கொண்டு இடிமுழக்கங் களுடன் வந்தன. விரைவில் மழையாகக் கொட்டப்போகிறோம் என்று பயமுறுத்தின. எனவே அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வேகமாகத் திரும்பிவிட்டார்கள்.  அவர்கள் வீட்டுக்குத் திரும்புவதற்குள்ளேயே மேகங்கள் மேலும் காத்துக் கொண்டிருக்காமல் பொத்துக்கொண்டு ஊற்றத் தொடங்கி விட்டன. அவர்கள் முழுதும் நனைந்துவிட்டார்கள்.  `ஓ, மழைதான் எப்படிப் பெய்கிறது?’
சுமன் பையன்களை மிகவும் கடிந்து கொண்டார். ‘‘என்ன இது? வெளியே போவதற்கு முன் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? துண்டை எடுத்து நன்கு துவட்டிக்கொள்ளுங்க. உடையையெல்லாம் மாற்றிக்கொள்ளுங்க,’’ என்றார். அவரை, குறும்புத்தனமாகப் பார்த்துக்கொண்டே, பையன்கள் விரைவாகத் தங்களைத் துவட்டிக் கொண்டார்கள்.  அப்போது பிரதீப் ஒரு புதிர் போட்டான். ‘‘ஈரத்தை மிக விரைவாக உறிஞ்சக்கூடிய பொருள், எது?’’ ‘‘நிறுத்துடா, நீயும் உன் புதிர்களும். துண்டுதான் அந்தப் பொருள்,’’ என்று ரவி அவனைப் பார்த்துக்கொண்டே, தனக்கென்று ஒரு துண்டை எடுத்துத் தலையைத் துவட்டிக்கொண்டான்.
மழை சுமார் இரண்டு மணி நேரம் பெய்தது. இப்போதைக்கு நிற்கும் என்றே தோன்றவில்லை.  ஒருவேளை இன்று மாலை வரை கூட அது பெய்யலாம் என்று சேகர் கூறினார்.  இன்று வெளியே போக முடியாதோ என்று பையன்கள் மிகவும் நொந்து போனார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சேகரும் வெளியே எங்கும் போகவில்லை. அனைவரும் டிவியைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்கள்.
கேதார்நாத் பேரிடர் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தலைப்புச் செய்திகளாக ஓடிக்கொண்டிருந்தன. அனைத்து அலைவரிசைகளுமே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பேரிழப்பு என்று போட்டி போட்டுக்கொண்டு கூறிக்கொண்டிருந்தன.  இப்பேரிடம் குறித்து வல்லுநர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள் என்றும் ஆனால் அரசாங்கத்தரப்பில் எவ்வித முன்னெச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சில அலைவரிசைகள் அலறிக் கொண்டிருந்தன.  வல்லுநர்கள் திரும்பத் திரும்ப எச்சரித்தும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தை குற்றம்சாட்டிக்கொண்டிருந்தன.  ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நெஞ்சு வலி வந்துவிட்டதாகவும் ஓர் அலைவரிசை அறிவித்தது.
வீட்டில், நாய்க்குட்டிகளை எங்கும் பார்க்க முடியவில்லை. கடைசியில் அவை அனைத்தும், அவர்களின் கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொண்டிருந்தன. பிரதீப் அவற்றை வெளியே வருமாறு அழைத்தான். அவை வெளியே வரவில்லை. வெளியே இடியோசை சத்தத்தைக்கேட்டு பயந்துகொண்டும், நடுங்கிக் கொண்டும் அவை உள்ளேயே இருந்தன. ‘‘பாவம் இவைகள்,’’ என்று சொல்லிக்கொண்டே, அவன் அவற்றைக் கூப்பிடுவதைக் கைவிட்டான்.
உத்தரகாண்டில் இயற்கை வெறியாட்டம் போடுவதைப் பார்த்துக்கொண்டே, ரவி, ‘‘மாமா, இந்தப் பேரிடர் உண்மையிலேயே மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் நம்புகிறீர்களா?’’ என்று கேட்டான்.
‘‘நேரடியாக அப்படிச் சொல்வதற்கில்லை, ரவி. ஆனாலும், தங்கள் சுயநலத்தின் காரணமாக, சுற்றுச்சூழல் அறிஞர்கள் எவ்வளவோ எச்சரித்திருந்தும், அவற்றைக் கொஞ்சம்கூட காதில் வாங்கிக்கொள்ளாமல், காடுகள் அழிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சுற்றுச்சூழல் அறிஞர்கள் சொன்னதையெல்லாம் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தார்கள். இருப்பினும், சிபிஐ(மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம்)தான் இதனை நிறுவிட வேண்டும்,’’ என்று சேகர் கருதினார்.
‘‘சிபிஐ இதனைச் செய்திட முடியும் என்று நிச்சயமாகவே நீங்கள் நினைக்கிறீர்களா? எனக்கு அதில் சந்தேகம்தான். ஏற்கனவே உயர் பீடங்களில் காணப்படும் ஊழல்கள் தொடர்பாக  சிபிஐ அந்த அளவிற்கு நேர்மையாகச் செயல்படுவதில்லை என்று மக்கள் ஏற்கனவே பேசத் தொடங்கிவிட்டார்கள்.’’
வெளியே மழை நின்றபாடில்லை. அவை ஜன்னல் மீது தொடர்ந்து சலசல என்று ஒலியெழுப்பிக்கொண்டே இருந்ததைப் பார்த்த சேகர், ‘‘ஒருவிதத்தில் நீ சொல்வதும் சரிதான். அங்கேயும் ஏராளமான ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன,’’ என்றார்.  மாயாவதிக்கு எதிராக நடைபெற்ற தாஜ் கொரிடார் வழக்கை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு அவர் கூறினார்:
அவர் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்தபோது, தாஜ் மகால் அருகே சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதற்காக 175 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தைத் துவக்கினார். இதில் கையாடல் நடந்ததாகக் கூறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதில் சிபிஐ-இன் நிலைப்பாடு என்பது மத்தியில் ஆட்சியில் உள்ளோர் கட்டளைக்கிணங்க அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்தது. வழக்கு விசாரணை சில சமயங்களில் மெதுவாக நகரும், சில சமயங்களில் வேகம் எடுக்கும், இதில் அனைத்துவிதமான சறுக்கல்களும் உண்டு. கடைசியில் அவருக்கோ அல்லது அவரால் சலுகை பெற்றவர்களுக்கோ எதுவும் நடந்திடவில்லை. அந்தத் திட்டமே இப்போது செயலற்றுக் கிடக்கிறது. மேலும் அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டுமானப் பணிகளை அகற்றுவதற்கும்கூட திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
இதே சங்கதிகள்தான் முலாயம்சிங் யாதவ் வழக்கிலும் நடந்தது.
‘‘நம்பவே முடியவில்லை. இல்லையா?’’ அவநம்பிக்கை யுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பையன்களைப் பார்த்து சேகர் கேட்டார்.
ரவி, ‘‘ஒருவேளை இதனால்தானோ என்னவோ உச்சநீதிமன்றம் சமீபத்தில் சிபிஐ ஆட்சியிலிருப்போரின் கூண்டுக்கிளியாக மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்கள் போலிருக்கிறது,’’ என்று கருத்துத் தெரிவித்தான்.
‘‘ஆம், இல்லாவிட்டால் அப்படி ஏன் அவர்கள் மிகக் கடுமையான முறையில் விமர்சனத்தை முன்வைக்க வேண்டும்? 2ஜி ஊழல் வழக்கிலும் கூட, உச்ச நீதிமன்றத்தின் கட்டளைப்படிதான் வழக்கு இந்த அளவிற்கு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது,’’ என்றும் சேகர் கூறி, அது தொடர்பாக சில விவரங்களையும் பையன்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவரித்தார்.
2ஜி ஊழல், டெலிகாம் அமைச்சராக ஆ.ராசா இருந்த சமயத்தில் அவருக்கும், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு கூட்டத்தால் மிகவும் கவனமுடன் மேற்கொள்ளப்பட்டது. உரிமங்கள் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 122 உரிமங்களில் 85 உரிமங்கள் இவ்வாறு பெறப்பட்டவை களாகும். இதனை மத்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவர் (சிஏஜி) அவர்களின் உன்னிப்பான அறிக்கை வெளிக்கொணர்ந்தது.
மத்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரால்(சிஏஜி-யால்) அமைச்சர் ஆ. ராசா, வழிகாட்டும் நெறிமுறைகளை மீறியமைக்காகவும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டியமைக்காகவும், ஸ்வான் போன்ற அனுபவமற்ற புதிய நிறுவனங்களுக்கு (இது, இண்டஸ்ட்ரியல் ஜாம்பவான் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலயன்ஸ் டெலிகாம் கம்பெனியின் கீழ் இயங்கும் ஒன்று) ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள் அடிமாட்டு விலைக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியமைக்காகவும் கடுமையாகப் பழிசுமத்தப்பட்டார். அதேபோன்று, ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள் யூனிடெக் ஒயர்லஸ் மற்றும் பல நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த உண்மைகளை மத்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவர் மட்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்த ஊழல்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டிருந்திருக்காது.  இதேபோன்று இன்னும் எத்தனை எத்தனை ஊழல்களோ, யாருக்குத் தெரியும்?
தில்லி குடிநீர் வடிகால் வாரியத்தில்,  வடிகால் மேலாண்மை தொடர்பாக வந்த புகார் ஒன்றை சிபிஐ அதிகாரி ஒருவர் எப்படிப் பூசி மெழுகினார் என்பது எனக்கு நன்கு தெரியும். மிகவும் கவனமாக நன்கு ஆய்வு செய்து நான் ஓர் அறிக்கை தயார் செய்திருந்தேன்.  பல்வேறு முறைகேடுகள் மேற்கொண்டும், பட்ஜெட் தொகையை உயர்த்திக்காட்டியும் பலநூறு கோடி ரூபாய் சூறையாடப்பட்டது.  இதனைச் செய்திட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இருந்த போதிலும், அவ்வாறு எதுவும் செய்யப்படாது விஷயம் பூசி மெழுகி மூடப்பட்டுவிட்டது.  தில்லி குடிநீர் வடிகால் வாரியம் என்பது ஊழல் சாக்கடைக்குழி என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். ஆயினும் அதே சமயத்தில் அதில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித வழக்கும் வராதபடி தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக்கூடிய அளவிற்கு சர்வ வல்லமை படைத்தவர்களுமாவார்கள்.
நல்லது, அடுத்து ஆந்திராவில் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஓர் உன்னதமான ஊதாரணமாகும்.  காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட அளவில் அவரும் அவரது மகனும் நல்ல பிள்ளைகளாக இருந்தவரையில் அவர்கள் எது செய்தாலும் நன்றாகத்தான் இருந்தது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.  ராஜசேகர ரெட்டி மறைந்து அவரது மகன் அந்த நாற்காலியைக் கேட்டவுடன் அனைத்தும் மாறிவிட்டது. ராபர்ட் வாத்ராவை மிகவும் வெறித்தனமாகப் பாதுகாத்திடும் அதே காங்கிரஸ் கட்சி, ராஜசேகர ரெட்டியின் குடும்ப உறுப்பினர்கள் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டது. சிபிஐ எப்போதும் ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புக்குத் தகுந்த மாதிரி செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது, இல்லையா?  ராஜசேகர ரெட்டி ஊழல் பேர்வழி என்றால், அவர் எப்போதுமே ஊழல் பேர்வழியாகத் தான் இருந்திருப்பார். சிபிஐ-க்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.  அவர்களுக்கு எதிராக வெகு காலத்திற்கு முன்பே, அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்து ஆயிரமாயிரம் கோடி ரூபாய் சூறையாடியபோதே,  சிபிஐ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இப்போதாவது ஊழல் பேர்வழிகளான இத்தகைய பகாசுரன்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவதற்குப் பதிலாக, மக்கள் இப்போதும் அந்தக் குடும்பத்தினருடனேயே இருக்கிறார்கள்.  நாட்டை வேறு யாராலும் ஆள முடியாது என்கிற முறையில் இக்குடும்பத்தினரைத் தங்களின் மகத்தான தலைவர்களாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?   கிரிமினல்தனமாக நடந்து கொள்வதும், ஊழல் புரிவதும் தலைவர்களுக்கான தகுதிகள் என்று மக்கள் கருதுவது போல் தோன்றுகிறது.
இதற்கிடையில், தொலைக்காட்சி அலைவரிசைகள் தில்லியில் விடாது பெய்துகொண்டிருக்கும் மழை குறித்தும், தில்லியில் பல இடங்களில் போக்குவரத்து  ஸ்தம்பித்துள்ளதையும் காட்டிக்கொண்டிருந்தன.  யமுனையின் நீர்மட்டம் அபாய எல்லையைத் தாண்டி அதிகரித்துள்ளதன் காரணமாக, யமுனை நதிக்கரையில் குடியிருந்த சேரிவாசிகள் அவசர அவசரமாக தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதையும் கூறிக்கொண்டிருந்தன. ரேகா அவ்வப்போது கொறிப்பதற்காக சில தின்பண்டங்களையும், பழங்களையும் கொண்டு வந்து கொடுத்த வண்ணமிருந்தார்.
சேகர் தான் கூறிய விஷயங்கள் தொடர்பாக மீண்டும் பேச ஆரம்பித்தார். ‘‘அனைத்துப் புலன் விசாரணைகளும் பாரபட்சமற்று இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவ்வாறு இருந்திருக்கும்பட்சத்தில் போபோர்ஸ் ஊழல் வழக்கில் ராஜீவ் காந்தி அப்பழுக்கற்றவர் என்றும், ஒட்டாவா குட்ரேச்சி எவ்விதக் குற்றத்துடனும் சம்பந்தப்படாதவர் என்று விடுவிக்கப்பட்டிருப்பதும் நடந்திருக்குமா?’’ என்று சேகர் கேட்டார். அவர் மேலும் தொடர்ந்து, ‘‘இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவெனில், மக்கள் அந்தக் குடும்பத்தின் மீது இன்னமும் பெரும் மதிப்பு வைத்திருப்பதும், இவர்களை விட்டால் நாட்டினை ஆள்வதற்கு நல்ல தலைமை கிடைக்காமல் நாடு வீணாகிவிடும் என்று கருதுவதும் ஆகும்,’’ என்று கூறி மனம் வெதும்பினார். நாட்டில் உயர்மட்டங்களில் உள்ள பலரது வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்கள் இதேபோன்று சிபிஐ-இன் புலனாய்வில் தலையிட்டுத் தங்களுக்குச் சாதகமாக விசாரணையைத் திருப்பக்கூடிய வல்லமையைப் பெற்றுத்தான் இருக்கிறார்கள். அதன்பின்னரும், சிபிஐ-இன் உயர்பீடத்தில் இருப்பவர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் முடிவு அமைந்திடும். எல்லாம் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களைப் பொறுத்துத்தான். சில சமயங்களில் தவறான முடிவுகளை எடுத்த பின்னர், அவற்றைச் சரியானமுறையில் திருத்திக்கொள்வதும் நடைபெறுவது உண்டு. இவை யெல்லாம் ஆட்சி அதிகாரத்திலிருப்போரைச் சார்ந்தே இருக்கிறது.’’  அவர் கூறும் அனைத்தையும் மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருக்கும் பையன்களைப் பார்த்து, மத்திய கலால்துறை தலைமை ஆணையருடன் நன்கு தொடர்பு வைத்திருந்த முகமது அலி என்பவர் புரிந்திட்ட மோசடி குறித்து சுருக்கமாகக்கூறத் தொடங்கினார்.
தொழில்முனைவோர் செய்திடும் வரி ஏய்ப்பு வழக்குகள் இரண்டில் நேர்மையான மத்திய கலால் அதிகாரிகள் எவ்விதக் கருணையும் காட்டாமல் மிகப் பெரிய அளவில் அபராதம் விதித்தை நான் அறிவேன்.
அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட தொழில்முனைவோர் அலியிடம் மேல்முறையீடு செய்தார்கள். அப்போது அலி அந்தத்துறையில் மேன்முறையீடுகளுக்குத் தீர்வு காணும் அதிகாரியாக இருந்தார். இவ்வாறு மேல்முறையீட்டிற்கென்று ஒரு சில நடைமுறைகள் இருக்கின்றன. மேல்முறையீடு முதலில் பதிவு செய்யப்பட வேண்டும். பின்னர், இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கேட்கப்பட வேண்டும். அவ்வாறு கேட்கப்படும்போது அபராதம் விதித்த அதிகாரியும் துறையின் சார்பில் ஆஜராகி தான் செய்த விசாரணை குறித்து முறையாகக் கூறிட வேண்டும். இவ்வாறு மேல்முறையீடுகள் நடைபெற்று, இறுதியில் அலி தொழில்முனைவோருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர், அலி மேற்படி தொழில்முனை வோருடன் சேர்ந்துகொண்டு தான் மாறுதல் ஆனதற்குப் பிறகு முன்தேதியிட்டு அவர்களுக்கு ஆதரவாக தன் வீட்டிலிருந்தவாறே உத்தரவு பிறப்பித்திருப்பது குறித்து மிகவும் ரகசியமான முறையில் தகவல்கள் சிபிஐ-க்குக் கிடைத்தன.  எனவே அவர்மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்  ஏராளமான விஷயங்கள் வெளி வந்தன.
முதலாவதாக, மேல்முறையீட்டைப் பதிவு செய்த தேதியாகும்.   அப்போது அக்டோபர் மாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனினும் பதிவேட்டில் மார்ச் மாதம் வரவு வைக்கப்பட்ட வழக்கு எண்களுக்கு இடையே சிறிது இடம் இருந்த இடத்தில்,  நசுக்கி நசுக்கி எழுதி வரிசை எண் 28(ஆ), 28(இ) என எண்ணிட்டு மேல்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். 
பின்னர், மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான வாய்தா தேதிகளையும் திட்டமிட்டிருக்கிறார். ஆரம்பத்தில் அக்டோபர் 13ஐ வாய்தா தேதியாகக் காட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு அக்டோபர் 12 அன்றே மாற்றலாகிச் செல்ல மாற்றல் ஆணை வந்துவிட்டது. எனவே அவரால் இம்மேல்முறையீடுகளைக் கேட்க முடியாது. எனவே, அந்தத் தேதியை அக்டோபர் 10 என்று திருத்தி இருக்கிறார். இந்தத் தேதியும்கூட அவருக்கு ஒத்துவரவில்லை. ஏனெனில் அன்றைக்கென்று வேறுசில வேலைகள் வந்து குறுக்கிட்டுவிட்டது. எனவே அதனை மீண்டும் அக்டோபர் 3 என்று திருத்தினார். அவை அனைத்தையும் அவர் எப்படிச் செய்தார் தெரியுமா?  எழுதியதன் மீது வெள்ளை வொயிட்டனரைக் கொண்டு பூசிவிட்டு,  அதன் மேலேயே எழுதியிருக்கிறார்.
கடைசியாக, இரு வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு ஆதரவாக தன் வீட்டிலிருந்த படியே உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். இதனை அவர் அப்பதவியின் பொறுப்புகளிலிருந்து வெளியேறியபின் செய்திருக்கிறார்.
இப்போது சாட்சியங்களைப் பாருங்கள். மேல் முறையீடுகளுக்கான எண் வரிசை எண்கள்  28(ஆ), 28(இ) என்று கொடுத்திருப்பதே சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. அடுத்து, இவ்வாறு அவர் தேதிகளைத் திருத்தியதும், தடய அறிவியல் பகுத்தாய்நரின் ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அபராதம் விதித்த கீழ்நிலை அதிகாரிகள் மேல்முறையீட்டின்போது சாட்சியம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் தேதிகளில் உண்மையில் அவர்கள் ஒரு பயிற்சிக்காக சென்றிருந்ததும், அன்றையதினம் அவர்களால் சாட்சியம் அளிக்க வாய்ப்பே இல்லை என்பதுமாகும்.
இவ்வாறு இந்தப் புலனாய்வில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரியுமே, அலி மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றே ஒருமனதாக பரிந்துரைத்திருந்தார்கள்.
ஆனாலும் கூட, சிபிஐ-இன் தலைமையகம் என்ன முடிவு எடுத்தது தெரியுமா? அலி மீது வழக்குத் தொடரக்கூடிய அளவிற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி வழக்குகளை முடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி.
மற்றொரு சமயத்தில், இது தொடர்பாக நிறைய நிர்ப்பந்தங்கள் தரப்பட்டு, நேர்மையற்ற அதிகாரிக்கு எதிராக  தடய அறிவியல் பகுத்தாய்நரின் சாட்சியம் உட்படப் போதுமான அளவு சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டிருக்கிறது என்றும், அவை வீணாக்கப்படக்கூடாது என்றும், நேர்மையற்ற அதிகாரிக்கு எந்தப் பயனும் அளிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. கடைசியில் சிபிஐ தலைமையகம் இதற்கு இணங்கியது.
இந்த சம்பவம் குறித்து  ரவி, ‘‘மாமா, சிபிஐ தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அநேகமாக சீனியர்களாகவும் மற்றவர்களைவிட நன்கு அனுபவம் வாய்ந்தவர்களாகவும்தான் இருக்க வேண்டும். அதே சமயத்தில், அவர்கள் தங்களுக்கு வழிகாட்டுவதற்காக, மூத்த சட்ட ஆலோசகர்களையும் பெற்றிருக்க வேண்டும், இல்லையா?’’ என்று கேட்டான்.
‘‘ஆம், நிச்சயமாக.’’
‘‘அப்படியெனில், ஆரம்பத்தில் எப்படி இவ்விரு வழக்குகளையும் முடிக்க உத்தரவிட்டார்கள். பின்னர் இதற்கெதிராக வலுவாகக் குரல் எழுப்பப்படவில்லையென்றால், தவறு செய்த அனைவருமே தப்பித்திருப்பார்களே, அது சரியா?’’
‘‘நீ சொல்வது முற்றிலும் உண்மை. இதற்கான பதில் மிகவும் எளிதானது. ஆட்சியாளர்களிடமிருந்து வந்த நிர்ப்பந்தம்தான் இதற்குக் காரணம்,’’ என்று சேகர் கூறினார். பையன்களை நம்பிக்கையிழந்து அவரையே பார்த்தனர். ஆனால், அவர் தொடர்ந்தார்: ‘‘உங்களுக்குத் தெரியுமா, எப்போதுமே சிபிஐ-இல் மிக அற்புதமான நபர்கள் இருப்பார்கள். அவர்கள் விசாரணைகளும் மிகவும் வியக்கத்தக்கவிதத்தில் இருந்திடும். அதனால்தான் எல்லாவற்றையும்தாண்டி சிபிஐ-க்கு மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு நற்பெயர் இருந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, புதிய ஊழல்கள் தலைதூக்குகிறபோது,  மக்கள் அதனையெல்லாம் மறந்துவிடுகிறார்கள்.’’
டி.வி.யை நிறுத்திவிட்டு பையன்கள் அனைவரும் தங்கள் அறைக்குள் சென்று முடங்குவதற்காக சென்றுவிட்டனர். பெரியவர்களும் தங்கள் தங்கள் அறைகளுக்குள் சென்று குடும் விஷயங்களைப் பேசி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
அறைக்குள் சென்ற பையன்கள் தங்கள் பேராசிரியர்களைப் பற்றியும், சக மாணவர்களைப்பற்றியும் கிண்டலும் கேலியுமாக ஏராளமான கதைகளைச் சொல்லிப் பொழுதைக் கழித்தனர்.  அபி, அவர்களுக்கு கிளினிக்கிற்கு ஒரு பிரச்சனையுடன் வந்த வயதான மூதாட்டி ஒருவருடைய கதையைச் சொன்னான். ‘‘முதுமையால் தளர்ச்சியுற்றிருந்த அந்த மூதாட்டி டாக்டரைக் கண்டபடித் திட்டிக்கொண்டே, அவரது அறையினுள்ளிருந்து வெளியே ஓடி வந்தார். அதிர்ச்சியடைந்த நர்ஸ், அவரை சமாதானப்படுத்தி, என்ன நடந்தது என்று கேட்டாள். மூதாட்டி கூறியதைக்கேட்டு அவளும் அதிர்ச்சியடைந்து டாக்டரின் அறைக்குள் சென்று, எண்பது வயது மூதாட்டியிடம் ‘‘நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்’’ என்று சொல்லி இருக்கிறீர்களே, உங்களுக்கே வெட்கமாக இல்லையா?’’ என்று கடிந்து கொண்டிருக்கிறாள்.  அதற்கு அந்த டாக்டர் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல், ‘‘இன்னும் அந்தப் பாட்டியம்மாவுக்கு நிற்காது வந்துகொண்டிருந்த விக்கல் நின்றுவிட்டதா, இல்லையா என்று பார்த்துச் சொல்லுங்க’’ என்றார்.
சிறிது நேரம் கழித்து, பிரதீப் கட்டிலுக்குள் சென்று முடங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டிகளை வெளியே கொண்டுவர மீண்டும் ஒரு முயற்சி மேற்கொண்டான். அவை அசையவே இல்லை. ‘‘அவற்றை ரொம்பவும் நச்சரிக்காதே. அப்படிச் செய்தால் அவை இங்கேயே சிறுநீர் கழித்துவிடும்,’’ என்று அபி அறிவுறுத்தினான். அந்த சமயத்தில் ஞாபகத்திற்கு வந்த ஒரு பழைய ஜோக்கை ரவி சொன்னான்: ‘‘ஒரு சமயம் ஒரு மூதாட்டி ஒருவர் பிராணிகளுக்கான கூண்டில் அடைக்கப்பட்ட தன் நாய்க்குட்டியுடன் விமானம் ஒன்றிற்குள் நுழைந்திருக்கிறார்.  இதனை விமானப் பணிப்பெண் ஆட்சேபித்திருக்கிறாள். நாய்க்குட்டி இருக்கும் கூண்டினை பார்சல்கள் வரும் `கார்கோ’வில்தான் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறாள். அதேமாதிரியே செய்யப்பட்டது. பின்னர் அந்த மூதாட்டி போய்ச்சேர வேண்டிய ஊர் வந்ததும், விமானப்பணிப்பெண் அந்த நாய்க்குட்டி கொண்டுவந்த கூண்டைப்போய்ப் பார்த்தபோது அதிர்ச்சி. அந்த நாய்க்குட்டி செத்துக் கிடந்தது. அதிர்ச்சியடைந்த அந்த விமானப்பணிப்பெண்  தன் உதவியாளரின் முயற்சியால் வேறொரு நாய்க்குட்டியை, செத்த நாய்க்குட்டிக்குப் பதிலாக மாற்றிக்கொண்டு வந்து தந்திருக்கிறாள். அந்தக் கூண்டினைப் பெற்றவுடனேயே மூதாட்டி, ‘‘இது என் நாய்க்குட்டிஅல்ல’’ என்று கூறி வாங்க மறுத்துவிட்டார். விமானப்பணிப்பெண் எவ்வளவோ கெஞ்சியும் மூதாட்டியை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியவில்லை. ஆயினும், அவள் வாங்க மறுத்துவிட்டு, ‘‘இல்லை, நிச்சயமாக இது என் நாய்க்குட்டி இல்லை. நான் என்னுடைய செத்துப்போன நாய்க் குட்டியை அல்லவா, எங்கள் சொந்த ஊரில் புதைப்பதற்காக எடுத்து வந்தேன்,’’ என்றாராம்.
மேகங்கள் வெகுநேரமாகப் பிடித்து வைத்திருந்த மழையைத் திறந்துவிட்டது.  அந்த சமயத்தில், ரேகா லட்டுகள் மற்றும் தின்பண்டங்கள் தயார் செய்து, பயணத்தின்போது எடுத்துச்செல்வதற்காக பொட்டலங்களாகக் கட்டிக்கொடுப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். ஏனெனில் அடுத்தநாள் சுமனும் அவரது குழந்தைகளும் ஊருக்குத் திரும்புவதாக இருந்தனர்.  நாய்க்குட்டிகள் கட்டிலுக்குக் கீழ் ஒன்றின்மேல் ஒன்று படுத்துக்கொண்டு அன்று முழுவதும் வெளியே வரவே இல்லை. மாலை மழை நின்றுவிட்ட போதிலும்கூட அவை வெளியே வரவில்லை. 
பின்னர், அவர்கள் அனைவரும் தங்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே மழைபெய்து ஈரப்பசையுடனும் ஒருவித நறுமணத்துடனும் இருந்த புல்வெளியில் காப்பி அருந்தியவண்ணம் குளிர்ந்த காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.  மெதுவாக நாய்க்குட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் சுறுசுறுப்புடன் தங்கள் வால்களை ஆட்டத்தொடங்கி விட்டன. இனிமேல் தங்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்ற நம்பிக்கையுடன், ஈரமான புல்தரையில் புரண்டு விளையாட ஆரம்பித்துவிட்டன. ஆயினும், இவ்வாறு விளையாடினால் தன்னுடைய விலைமதிப்பற்ற கம்பளிக் கோட்டு வீணாகிவிடலாம் என்று பயந்து ஃப்ரூட்டி மட்டும் விளையாடாமல் சற்றே தூரத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
மேலே நிலாவைச் சுற்றிலும் வெண்மேகங்கள் சுற்றி இருப்பதைப் பார்த்துக்கொண்டே, ரவி காலையில் நடந்த சம்பாஷணைகளையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து அசைபோட்டுக்கொண்டிருந்தான்.  சிபிஐ பல வழக்குகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தபோதிலும் சிலவற்றில் வழுக்கல் ஏற்பட்டிருப்பதையும் எண்ணிப்பார்த்தான். பின்னர் தன் மாமாவிடம் சிபிஐ குறித்து மேலும் கூறுமாறு கேட்டுக் கொண்டான்.
காப்பியை உறிஞ்சிக் குடித்துக்கொண்டே சேகர் தயக்கத்துடன், ‘‘ஏற்கனவே உனக்கு நான் பல வழக்குகளைக் குறித்து  சொல்லிவிட்டேன். உனக்கு வேறென்ன வேண்டும்? உண்மையில் உனக்கு நான் சொன்னவை `போர்’ அடித்திருக்க வேண்டும்,’’ என்றார். ‘‘இல்லை மாமா. இல்லவே இல்லை. எனக்கு மேலும் கேட்க வேண்டும் என்று ஆசை,’’ என்றான் ரவி. ரவி மிகவும் அக்கறையுடனும், வலியுறுத்தியும் கேட்டான்.  பிரதீப்பும் அவனுக்கு வக்காலத்து வாங்கி, ‘‘எப்படியோ மாமா, இன்றைக்குத்தான் எங்களுக்குக் கடைசி மாலை நேரம்.  இரவு பூராவும் விழித்திருந்து நீங்கள் கதைகளைச் சொன்னாலும் நாங்கள் கேட்கத் தயாராக இருக்கிறோம்.  நாளைக்கு ரயிலில் ஏறியபின் நாங்கள் தூங்கிக் கொள்வோம்,’’ என்றான். இவர்களிடம் காணப்பட்ட ஆர்வத்தைப் பார்த்து சேகர் புன்னகைத்து, தன் கடுமையைக் குறைத்துக் கொண்டார்.  ‘‘அப்படியானால் சரி,’’ என்று கூறிக்கொண்டே அவர் மேலும் சில நிகழ்வுகள் குறித்துக் கூறத் தொடங்கினார்.
காமன்வெல்த் விளையாட்டுகள் நம் நாட்டிற்குப் பெருமையைத் தேடித்தரும் என்று நாம் எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம்.ஆனால், அமைச்சர் சுரேஷ் கல்மாடியும் மற்றவர்களும் ஸ்விஸ் நிறுவனம் ஒன்றுடன் விளையாட்டு தொடர்பான சாதனங்களை 141 கோடி ரூபாய் என்று செலவினத்தை அதீதமாக உயர்த்திக்காட்டியதன் மூலம் அரசாங்கத்திற்கு 95 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக சிபிஐ-ஆல் மோசடி, சதி மற்றும் ஊழல் குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்வதுடன் முடிவடைந்தது.
பீகாரில் கால்நடைத் தீவன ஊழல் சம்பந்தமாக 60க்கும் மேலான வழக்குகளில் லல்லு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டப்பட்டிருப்பார் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? 2ஜி ஊழலில் நடைபெற்ற பேரங்களில் கனிமொழிக்கும் ஆ.ராசாவிற்கும் இடையிலான தொடர்பு, முண்டாவின் 2000 கோடி ரூபாய் சட்டவிரோத சாம்ராஜ்ஜியம், எரிசக்தித்துறை, நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றிலான  ஊழல்கள் என எண்ணமுடியாத அளவிற்கு எண்ணிலடங்கா ஊழல்கள்.
பத்திரிகைகளில் வந்த செய்திகளே நம்மை மிகவும் பயமுறுத்துகின்றன. கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களில்  ஊழல்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன. நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்ததில் ஒவ்வொரு படுகைக்குமான விகிதம் 2.25 கோடி ரூபாய் என்று சிபிஐ வெளிப்படுத்தி இருக்கிறது. ஆயினும் இது தொடர்பான முக்கிய கோப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன.  சில்லரை வர்த்தகத்தில் ஜாம்பவானாகத் திகழும் வால்மார்ட் பல லட்சம் கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள சீட்டு நிதி நிறுவன ஊழல் அங்கே அரசியல்வாதிகளுக்கும், போலீசுக்கும், வரிவசூலிக்கும் அதிகாரிகளுக்கும் மாதா மாதம் கையூட்டுகள் அளிக்கப்பட்டு வந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.  இதற்கு முன்பு முக்கிய பிரமுகர்களுக்காக ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் 362 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியிருப்பதாக செய்தி வந்தது.
கர்நாடகாவிலும் ஆளும் பாஜக மாபெரும் ஊழலில் சிக்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. ஆனால் தேசிய அளவில் அதன் தலைவர்கள் தில்லியில் அண்ணா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு தங்களை யோக்கியசிகாமணிகளாகக் காட்டிக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறார்கள். கர்நாடகா லோகாயுக்தா மாநிலத்தில் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை செய்து, கனிமங்களை வெட்டி எடுக்கும் ஊழலில் மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதை தோலுரித்துக்காட்டியது. இவர்கள் இரும்புத்தாது வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததில் அடித்த கொள்ளையில் மட்டும் அரசின் கருவூலத்திற்கு 161 பில்லியன் (16100 கோடி) ரூபாய்கள் இழப்பு என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.  இதன்மீது உயர்நீதிமன்றம் தலையிட்டதன் காரணமாக வேறு வழியின்றி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ரயில்வே வாரியத்தில் மிக முக்கியமான உயர்ந்த பதவி ஒன்றிற்கு பத்து கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டிருக் கிறது. ஆயினும் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்தவரை எதுவும் செய்யாது தண்டனை எதுவுமின்றி விட்டுவிட்டார்கள். அவருக்கு ஒன்றுமே தெரியாதாம். ஓர் அமைச்சருக்குத் தெரியாமல் அவருடைய முதுகுக்குப் பின்னாலேயே இவ்வளவு பெரிய பேரம் நடந்ததாகக் கூறுவதை எவராவது நம்ப முடியுமா?
ரவி உடனடியாக, ‘‘இது சாத்தியமே இல்லை. உண்மையிலேயே அமைச்சருக்கு இது தெரியாமல் இருந்திருக்குமானால்,  அவர் அமைச்சராக இருப்பதற்கே இலாயக்கில்லாதவர் என்று அர்த்தம். இத்தகைய நபர்கள் எப்போதும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது,’’ என்று கூறியபோது, அதனை ஆமோதிப்பதுபோல சேகர், ‘‘நீ சொல்வது ரொம்பவும் சரி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மக்கள் செம்மறியாட்டுக் கூட்டம் போன்று தலைவர்கள் எது சொன்னாலும் அதனை அப்படியே நம்பிவிடுகிறார்கள். அவர்கள் மிகவும் முட்டாள்தனமாக இத்தகைய பகாசுரன்களை நம்புவதும், தொடர்ந்து அவர்களுக்கு வாக்களித்து அவர்களை ஆட்சியில் அமர வைக்கிறார்கள். இவ்வாறு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக்கூடிய விதத்தில் சட்டங்களையும் இயற்றிக் கொள்கிறார்கள். தங்கள் நலன்களை மேலும் விரிவாக்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் அரசாங்க எந்திரத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய விஷச் சுற்று தொடர்கிறது. இவர்களுக்கான முகவர்களும், தரகர்களும் இரவு பகல் பாராது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான், எவரும் புரிந்துகொள்ள முடியாதவிதத்தில் திடீர் பணக்காரர்கள் நாள்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்,’’ என்று கூறி அதற்கு சில உதாரணங்களையும் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் வசிக்கும்  ஒரு மருந்தாளுநர் இப்படித்தான் தன் ஒன்பது ஆண்டு கால பணிக்காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாறினான்.  தலைநகரில் செயல்பட்ட அத்தனை தனியார் மருத்துவமனைகளுக்கும் தரகராகச் செயல்பட்டு, அமைச்சர்களையும் அதிகார வர்க்கத்தாரையும் சந்தித்து, அந்த மருத்துவமனைகள் எல்லாம் நர்சிங் கல்லூரிகள் நடத்திட அனுமதியும் வாங்கிக் கொடுத்தான். இதில் அவனுக்கு கிடைத்த வருமானம் என்ன தெரியுமா? கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு, அதாவது 200 கோடி ரூபாய்க்கும் மேலாக,  சொத்து சேர்த்து விட்டான்.  இதேபோன்று பீகார் மாநிலத்தில்  கல்வித்துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி, பல கோடி ரூபாய்க்கு அதிபதியானான்.  அவன் தன்னுடைய மனைவியை தங்க நகைகளாலேயே அலங்கரித்து அழகு பார்த்தான்.  பல கோடி ரூபாய் பங்குச்சந்தை வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் மீதான புலன் விசாரணையின்போது அந்நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வதற்காக ஒரு வருவாய்த்துறை அதிகாரி 60 கோடி ரூபாய் கேட்க முடிகிறது. மத்தியப் பிரதேசத்தில் இருந்த  ஐஏஎஸ் தம்பதிகள் இருவரின் சொத்து மதிப்பு 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். மருத்துவக் கவுன்சில்கள் மிக அதிகத் தொகைகளைப் பெற்றுக்கொண்டுதான் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கிறது. இவ்வாறு நாடு முழுதும் ஊழல்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எப்போதாவது, அத்தி பூத்தாற்போல் சிலர் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. ஹர்யானா மாநிலத்தில் வேலை வாங்கித்தருவதாக நடைபெற்ற ஊழலில் உயர்மட்ட தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். மிகவும் அபூர்வமாகத்தான் இதுபோன்று நடக்கிறது.
எல்லோரும் மிகவும் ஆழமாக உரையாடிக் கொண்டிருப் பதைப் பார்த்த பிரதீப் குறுக்கிட்டு, ‘‘கடைநிலை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தித்தருமாறு அவர்களுடைய முதலாளி களிடம் யாசித்துக் கொண்டிருந்தார்கள்,’’ என்றான்.  ‘‘நீ யாரையோ மனதில் வைத்துக்கொண்டு பேசுவதுபோல் தெரிகிறது,’’ என்று சேகர் கொஞ்சம் சீரியசாகவே கேட்டார்.  ‘‘ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கடைநிலை ஊழியன் ஒருவன் தன்னுடைய முதலாளியிடம் சென்று தான் மூன்று கம்பெனிகளை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும், எனவே தன் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்குமாறும் கேட்டிருக்கிறான். ஒருசில நிமிடங்கள் பேரம் பேசியபின்பு, அந்த முதலாளித்து அவன் சம்பளத்தில் 5 சதவீதம் உயர்த்தினார்.  பின்னர் அந்த முதலாளி ஆர்வத்துடன், ‘‘நீ கவனித்துக்கொள்ள வேண்டிய அந்த மூன்று கம்பெனிகள் எவை எவை’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன் மிகவும் பவ்யமாக, ‘‘மின்சார வாரியம், குடிநீர் வாரியம் மற்றும் தொலைபேசித்துறை’’ என்று கூறினானாம். பிரதீப் கூறியதைக் கேட்டு அனைவரும் `கொல்’ என்று சிரித்துவிட்டனர்.
பின்னர் மீண்டும் சீரியசான முறையில் ரவி, ‘‘மாமா, சிபிஐ-இன் வேலைகள் குறித்து மீண்டும் சில சந்தேகங்கள். இத்தகைய மாபெரும் ஊழல்களையெல்லாம் அவர்களால் ஏன் தடுக்க முடியவில்லை?’’ இதற்கு சேகர், ‘‘ஊழல்கள் மலையளவு, சிபிஐ நிறுவனமோ கடுகளவு. இவ்வாறு நாடு முழுதும் நடைபெறும் ஊழல்களையெல்லாம் தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு அந்த நிறுவனம் அப்படியொன்றும் பெரிதான ஒன்று அல்ல. மேலும், ஆட்சியிலிருப்போரின் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டுத்தான் அவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் உச்சநீதிமன்றம், அரசாங்கத்தின் கூண்டுக் கிளியாக சிபிஐ இருப்பது மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.   உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கையில் சிபிஐ இயக்குநர் அடைந்த மனவேதனையை நாம் சரியானமுறையில் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு நேற்றே கூறியதுபோல, சிபிஐ, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியே பிரிக்கப்பட வேண்டும்.  அதனை லோக்பால் சட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும்.  அதேசமயத்தில், அரசியல்வாதிகள், லோக்பால் அமைப்பை சிபிஐ போன்று மற்றொரு கூண்டுக்கிளியாக மாற்றிடக் கூடாது.’’ அவர் மேலும், ‘‘அதே சமயத்தில், பல்வேறுவிதமான நுண்ணிய ஆய்வுகளும் அவசியம். ஊழலை நம்முடைய கலாச்சாரத்திலிருந்து நிச்சயமாக ஒழித்துக் கட்ட முடியும். ஆனால், இன்றுள்ள நிலைமை என்ன? எல்லோருமே உயர்மட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் பெரிய மனிதர்களுக்கு அநேகமாக எந்தப் பாதிப்புமே இல்லை என்பதால், அவர்களுக்குக் கீழ் பணியாற்றுவோரும் தங்களால் முடிந்த அளவிற்கு மக்களைக் கசக்கிப் பிழியத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால்தான் மக்கள் மிகவும் கடுமையானமுறையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.’’
‘‘பகாசுரன்கள் இவ்வாறு நாட்டைக் கொள்ளையடிப்பதோடு மட்டும் நிற்கவில்லை, நாட்டின் வளர்ச்சிக்கும் முட்டுக் கட்டையாகத் திகழ்கிறார்கள். இவர்கள்தான் நாட்டின் உண்மையான எதிரிகள்,’’ என்று கடுiமான வார்த்தைகளை ரவி உதிர்த்தான். அவனது வார்த்தைகளில் நாட்டின் மீதான பற்றும் நன்கு வெளிப்பட்டது.
அவனை அன்புடன் பார்த்த சேகர், ‘‘நீ மிகச் சரியாகச் சொல்கிறாய். உனக்குத் தெரியுமா? ஆன்மீகவாதிகள், ‘‘சுயம்’’ என்பதை ‘‘ஆத்மா’’ என்று கருதி, அதன்மூலம் நல்லதொரு மனிதனாக, ‘‘பரமாத்மா’’-வுக்கு அதாவது கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக மாற வேண்டும் என்று முயற்சிப்பார்கள். அவர்களைப் போல் அல்லாமல்,  இந்தப் பகாசுரன்கள் இருக்கிறார்களே, ‘‘சுயம்’’ என்பதை ‘‘சுயநலம்’’ என்று அர்த்தப் படுத்திக்கொண்டு, கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் எந்த அளவிற்கு சுருட்ட முடியுமோ அந்த அளவிற்கு சுருட்டுவதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்,’’ என்றார்.
‘‘உண்மைதான், மாமா. பாமர மக்களைப்பற்றி அவர்களுக்குக் கிஞ்சிற்றும் கவலை இல்லை,’’ என்று பிரதீப் கூறினான்.
‘‘இல்லாவிட்டால், அவர்கள் ஏன் நம் நாட்டின் செல்வங்களை - கனிம வளங்களைக் - கொள்ளையடிக்கும் கூட்டாத்தாருடன் கைகோர்த்து, அப்பாவி பழங்குடியின மக்களை அவர்களது நிலங்களிலிருந்தும், அவர்களது வாழ்வாதாரங் களிலிருந்தும் விரட்டி அடித்திட வேண்டும். இவ்வாறு அவர்களைக் கொடூரமான முறையில் ஒழித்துக்கட்ட முயல்வதன் காரணமாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவி மடுக்க மறுப்பதன் காரணமாகவும்தான் அவர்கள் நக்சல்களாக மாறி, வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள், இல்லையா?’’
பிரதீப் இவ்வாறு கூறுவதைக் கேட்டவுடன் சேகர், இவனும் சாதாரணமானவன் இல்லை, இவனும் ஒருவிதமான கொள்கைப் பிடிப்புள்ளவன்தான் என்பதைப் புரிந்துகொள்கிறார். அதைப்பற்றி விசாரிப்பதற்காகத் தன் புருவங்களை உயர்த்தி அவனைப் பார்க்கிறார்.
‘‘இந்த அரசியல்வாதிகளுக்கெல்லாம் நல்ல காதுகேட்கும் கருவிகள் தேவை. இல்லாவிட்டால், மக்கள் சத்தம்போட்டே தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வார்கள்,’’ என்று கூறி இது தொடர்பாக ஒரு நகைச்சுவையையும் கூறினான்.
பல்பீர் கொஞ்ச நாட்களாகக் காது சரியாகக் கேட்காமல் திணறிக்கொண்டிருந்தான். அவனது மனைவி, நல்ல காது-மூக்கு-தொண்டை நிபுணர் ஒருவரைப் பார்த்து சரிசெய்து கொண்டு வாருங்கள் என்று நாள்தோறும் நச்சரித்துக்கொண்டே இருந்தாள்.  எனவே, பல்பீர் ஒரு காது-மூக்கு-தொண்டை நிபுணரைச் சென்று தன் காதுகளைப் பரிசோதனை செய்து கொண்டான்.  ‘‘நீங்கள் காது கேட்கும் கருவி பொருத்திக்கொள்ள வேண்டும். அவற்றின் விலை 100 ரூபாயிலிருந்து 50ஆயிரம் ரூபாய் வரைக்கும் இருக்கின்றன. ‘‘நான் 100 ரூபாய்க்கான கருவியையே முயற்சித்துப் பார்க்கிறேன்,’’ என்று பல்பீர் கூறினான்.
நர்ஸ் ஒரு காதுகேட்கும் கருவியை அவனது இரு காதுகளிலும் பொருத்தியதுடன், அவன் கழுத்தைச் சுற்றி ஒரு ஒயரையும் தொங்க விட்டாள். ‘‘இந்த ஒயர் என் கழுத்தைச் சுற்றி உண்மையிலேயே இருக்க வேண்டுமா?’’ என்று பல்பீர் கேட்டான்.
‘‘ஆம், நிச்சயமாக,’’ என்று கூறிய நர்ஸ், ‘‘உங்கள் காதுகளில் வைத்துள்ள கருவிகள் ஒன்றும் உங்கள் செவித்திறனை அதிகப்படுத்திடாது. மாறாக, கழுத்தில்  தொங்கும் இந்த ஒயரைப் பார்த்தபின்னர், உங்களுடன் பேசுபவர்கள், நீங்கள் செவிடர் என்பதைத் தெரிந்து கொண்டு சத்தமாகப் பேசுவார்கள்,’’ என்றாள்.
பலத்த சிரிப்பிற்கு இடையில் சேகர் கூறினார், ‘‘இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு  ஒரு வலுவான சுதந்திரமான லோக்பால் மற்றும் லோகாயுக்த அமைப்புகள்தான். அப்பொழுதுதான் உயர்மட்டத்தில் நடக்கும்  ஊழலை தடுக்க முடியும்.  அதன் விளைவாக, கடைமட்டத்தில்  இருக்கும் வெட்கங்கெட்ட தன்மையை அது தடுக்கும். ’’ என்றார் சேகர்.
புன்னகைத்துக்கொண்டே சொன்னான் பிரதீப், ‘‘மாமா, நன்மைக்கு எதிர்ச்சொல் தீமை என்றால், காங்கிரஸ் என்பதன் எதிர்ச்சொல் முன்னேற்றமாகும். அந்தக் கட்சி முழுவதும் ஊழல்தான் என்பது குறித்த குறுந்தகவல் ஒன்றை இப்பொழுது என் நண்பன் ஒருவன் அனுப்பியிருக்கிறான். படிக்கிறேன் கேளுங்கள். ‘அன்புள்ள தீபிகா. நீ யுவராஜ்ஜூடன் சென்றாய். அவனது உடல்நிலை பாதித்தது. நீ ரன்வீருடன் சென்றாய். அவனது திரைப்படம் படுத்தது. நீ மால்யாக்களுடன் சென்றாய்.அவர்களது விமானச்சேவை நிறுத்தப்பட்டது. தயவு செய்து தற்போது காங்கிரசுடன் சேர்ந்து இந்தியாவைக் காப்பாற்று.  தீபிகா படுகோனே இப்படி ஒவ்வொரு ஊழல் கட்சியிலும் சேர்ந்து இந்தியாவைக் காப்பாற்றினால் நல்லது,’’ என்றது அந்த குறுந்தகவல்.  நல்ல விஷயங்களை விவாதிக் கொண்டிருக்கும் போது இத்தகைய  துணுக்குகளை அளித்ததற்காக ரவி பிரதீப்பை கோபித்துக்கொண்டான். 
‘‘நம் நாட்டில் ஊடகங்களாவது இத்தகு ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனவே. நம் நாட்டில் பத்திரிக்கைச் சுதந்திரம் இருப்பதால்தானே இதெல்லாம் சாத்தியமாகிறது,’’ என்று நம்பிக்கையுடன் சொன்னான் ரவி. ஆனால் சேகர் இல்லையென்று தலை அசைத்தார்.
அவர்கள் சில விவகாரங்களில் நன்கு செயல்பட்டிருக்கலாம். ஆனால் எப்போதுமே அப்படி அல்ல. பத்திரிகையின் சுதந்திரம் என்பது அதை நடத்துபவர்களின் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது. பத்திரிகைகளை நடத்துபவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?   பெரும்பாலும் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசியல் குடும்பங்கள், வணிகர்கள், ஏன் கொள்ளை கும்பல்கள் கூட பத்திரிகை நடத்துகின்றன.  அவர்களது அரசாங்கத் தொடர்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை.  அரசாங்கம் தனது வசதிக்கேற்ப அவர்களை வளைக்க முடியும். பத்திரிகையாளர்கள் நேர்மையாக இருந்தாலும்  அவர்கள் அனுப்பும் செய்தியின் மீது பதிப்பகத்தார்களின் ஆதிக்கம் இருக்கும். இது உண்மையில் நேர்மையான அரசு ஊழியரின் நிலையைப் போல்தான். ஒரு அரசு ஊழியன் நேர்மையான நடக்கவேண்டும் என்று நினைத்தாலும் அவனது உயரதிகாரி  ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நேர்மையான அதிகாரியின் சுதந்திரத்தின் மீது  நடவடிக்கை எடுக்க முடியும்.  அது மட்டுமல்ல, சில கறுப்பு ஆடுகள் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் உள்ளன. அவர்கள் ஊழல் பேர்வழிகளுடன் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு தில்லுமுல்லு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் புலனாய்வு செய்து கிடைக்கும்  சாட்சியினை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டுவதும் உண்டு. ஜீ டிவி ஆசிரியர்களின் சமீபத்திய வழக்கு குறித்து நீங்கள் படித்திருப்பீர்கள். அதனால் பத்திரிகைகளுக்கு உண்மையிலேயே சுதந்திரம இருக்கிறது என நாம் நினைத்துவிடக் கூடாது, ’’ என்றார் சேகர்.
நிலைமை மிகவும்  சோகமாக போய்கொண்டிருப்பதைப் பார்த்து பிரதீப் சொன்னான், ‘‘அரசியல்வாதிகள் மிகவும் மோசமானவர்கள் என்று நான் சொல்லவில்லை. 99 சதவீதம் அரசியல்வாதிகள் மோசமானவர்களாக இருந்தாலும் 1 சதவீதம் நல்லவர்களாகவும் உள்ளனர். அதிகாரிகளைப் பொறுத்தவரை இந்த சதவீதம் வேறுபடலாம்.’’
‘‘உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். நீங்கள் அனைவரும் தனித்துவம் மிக்கவ்ர்கள்,’’ என்றார் சேகர். உடனே பிரதீப் தனது கடி ஜோக்கை மீண்டும ஆரம்பித்தான். ‘‘யாருமே நல்லவர்களில்லை. நான்  ஒன்றுமே யில்லை. எனவே நான் நல்லவனாக இனி மாறுவேன். எங்களது புத்திசாலி ஆசிரியர் சொன்னபடி நான் நல்லவனாக மாறுவேன்.’’ என்றான் ரவி.  எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர். ‘‘நீங்கள் நன்றாக வளரவேண்டும் என்று சொன்னஆசிரியரின் அறிவுரை மோசமானதாக இருக்கது,’’ என்றான் ரவி. ஒட்டுமொத்த குடும்பமும் சிரிப்பில் மூழ்கியது.
இந்த உற்சாகமான சூழலில் அவர்களது செல்லப் பிராணிகளும் உற்சாகமாகின. தோட்டத்தில் குதித்த  இரண்டு குரங்குகளைப் பார்த்து அவை குலைத்தன. இந்த குரங்குகளைப் பார்த்துப் பரிதாபப்பட்டு பிரதீப் சொன்னான், ‘‘நல்ல மழை பெய்துள்ளதால் இவற்றிற்கு உணவே கிடைக்கவில்லை. மிகவும் பசியோடிருக்கின்றன. எனவே எதையாவது திருட வந்திருக்கின்றன. சிறு கள்வர்களைப்போல வயிற்றுக்காக திருடுபவi இவை. ஆனால் இவைகள் பகாசுரன்கள் அல்ல,’’ என்று சொன்ன பிரதீப். ‘‘மாமி. இவர்களுக்கு நீங்கள் ஏதாவது பழமோ உணவோ அளிக்க முடியுமா?’’ என்று ரேகாவைப் பார்த்துக் கேட்டான்.
‘‘நான் இவ்வளவு நாட்களாக பேசியது எனது மருமகன்களுக்கு நன்கு அறிவூட்டியுள்ளது,’’ என்றார் சேகர். எல்லோரும் சிரித்தனர். அபி இரண்டு வாழைப்பழங்களை எடுத்து வந்து குரங்குகளைப் பார்த்து தூக்கி எறிந்தாள்.
நாங்கள் ஊருக்கு கிளம்புவதற்கு முன்  பிரியாவிடையாக ஒரு ஜோக் சொல்லேன் என்று அபியைப் பார்த்துக் கேட்டான் ரவி.
‘‘ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். திருமணமாகி இருபது ஆண்டுகளுக்குப் பிறகுவிவாகரத்து வழக்கில் சிக்கி அதன் உளைச்சல்களுக்கு ஆளானாள்.  அவளது ஊருக்கு சென்ற அவள், தனது இளமைப் பொலிவு குறையாமல் இருக்க என்ன செய்யவேண்டுமென்று ஒரு மனநல நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறலாம் என முடிவெடுத்தாள்.
அந்த மருத்துவரின் பெயர்ப்பலகையைப் பார்த்ததும் அவர் அவளது சகவகுப்பு மாணவனா, 25ஆண்டுகளுக்கு முன் அவளுடன் ஒரே வகுப்பில் பயின்றவனா என்று அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அவள் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தபோது நன்கு வழுக்கை தலை உள்ள, உருண்டையான தொப்பைப் பெருத்த மனிதர் உட்கார்ந்திருந்தார்.  எனவே இவர் நம்முடன் படித்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தாள் அந்தப் பெண்.
ஆலோசனை எல்லாம் முடிந்தவுடன் தயங்கிக்கொண்டே அவரிடம், ‘‘நீங்கள் எப்போதாவது புனித சேவியரில் படித்ததுண்டா?’’ என்று கேட்டாள். அவர், ‘‘ஆம், ஏன் கேட்கிறீர்கள்?’’ என்றார். ‘‘எந்த ஆண்டு படித்தீர்கள்? 1985ஆம் ஆண்டிலா?’’ என்று மீண்டும் அந்தப் பெண் கேட்டாள். அதற்கும் அவர், ‘‘ஆம், அந்த ஆண்டுதான் படித்தேன்.’’ என்று சொல்லி இருக்கிறார்.
‘‘நானும் அந்த வகுப்பிற்கு வந்துள்ளேன்,’’ என்றாள் அந்தப் பெண்.  தன்னுடைய சக வகுப்புத் தோழனை விட தான் மிகவும இளமையாக தோற்றம் அளிப்பதாக அவளுக்கு எண்ணம் இருந்தது.
‘‘ஓ. மன்னிக்க வேண்டும். உங்களைப் போன்ற ஆசிரியர் யாரையும் சந்தித்ததுபோல் எனக்கு நினைவில்லை, ’’ என்றார் மருத்துவர்.

------

No comments: