Thursday, June 23, 2016

பணக்காரர்களின் வளர்ச்சிக்கான ஆட்சி

பணக்காரர்களின் வளர்ச்சிக்கான ஆட்சி

ஷ்யாம்
பிரதமர் நரேந்திர மோடி, ஈராண்டுகள் நிறைவுபெற் றதைக் கொண்டாடும் விதத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த நேர்காணலில், ஐமுகூ அரசாங்கம் கடந்தபத்தாண்டுகளில் செய்யாத அளவிற்கு சீர்திருத்தங்களை தன்னுடைய அரசாங்கம் கடந்த ஈராண்டுகளில் செய் திருக்கிறது என்று பீற்றிக் கொண்டார். அவர் கூறிடும் இந்த சீர்திருத்தங்கள் எல் லாம் என்னவென்று தெரிகிறதா?
அவரே குறிப்பிட்டிருப்பதைப்போல, இன்சூரன்ஸ் மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறை போன்றவற்றை அந்நிய முதலீட்டுக்கு வெளிப்படையாகத் திறந்துவிட்டிருப்பதாகும். உலக அளவில் மிகவும் அதிகம் விற்பனையாகும் நிதி நாளேடு (financial daily) ஒன்றிற்கு மோடிஅளித்துள்ள பேட்டியில், தங்கள் அரசுவர்த்தகத்துறையினருக்கு அதிகம் செய்திருப்பதாகவும், குறிப்பாக அந்நிய வர்த் தகத்துறையினருக்கு ஐமுகூ செய்யாததைவிட அதிகமாகத் தங்கள் அரசு செய் திருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
மேலும்அவர், இந்தத் திசைவழியில் தான் செய்த அளவிற்குத் துணிச்சல் வேறெந்த அரசாங்கத்திற்கும் இல்லை என்றும் பீற்றிக் கொண்டார். மோடி வாய்ச்சவடால் வீரர் என்று எல்லோருக்கும் தெரிந்த போதிலும், இந்த ஒன்று மட்டும் உண்மையாகும். உண்மையில், மோடி அரசாங்கம்,இதற்குமுன் இந்தியாவில் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் இருந்ததை விட அதீதமாகவே கார்ப்பரேட் ஆதரவு அரசாங்கமாக மிகவும் நாணமின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கான இரண்டு முழு பட்ஜெட்டு களிலும் காணப்படும் வரி வருவாய் முன்மொழிவுகளே இவற்றை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
2016ஆம் ஆண்டில், நிதி அமைச்சரால் மதிப்பிடப்பட்ட பட்ஜெட் முன்மொழி வுகள் அரசாங்கத்திற்கு நேரடி வரியில் 1,060 கோடி ரூபாய் நிகர இழப்பு (net loss) இருக்கும் என்றும், அதே சமயத் தில் மறைமுக வரி மூலமாக 20,670 கோடிரூபாய் நிகர ஆதாயம் (net gain) இருக்கும் என்றும் கூறியிருந்தது. 2015இல் நேரடிவரி மாற்றங்கள் 8,315 கோடி ரூபாய் வருவாய் இழப்பிற்கும், மறைமுக வரிகள் 23,383 கோடி ரூபாய் ஆதாயத்திற்கும் இட்டுச்செல்லும் என்றும் மதிப்பிடப் பட்டிருந்தது. இரண்டையும் ஒருங் கிணைத்தால், கடந்த ஈராண்டுகளில், நேரடி வரியில் 9,375 கோடி ரூபாய் நிகர இழப்பும், மறைமுக வரியில் 44,053 கோடி ரூபாய் நிகர லாபமும் என்றாகிறது. இதன் பொருள் என்ன என்று தெரிகிறதா?
நேரடி வரிகள் என்பது பிரதானமாக கார்ப்பரேட்டுகளிடமிருந்து அல்லது முதலாளிகளிடமிருந்து பெறப்படும் பிரதானமான வரிகள் ஆகும். பணக்காரர்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு அளிக்கின்ற வரியாகும். நீங்கள் பணக்காரர்களாக இருந்தால் நீங்கள் அதிகமாக வரி செலுத்த வேண்டும். மோடி அரசின் வரிமுன்மொழிவுகள் இவர்கள் செலுத்த வேண்டிய வரிகளில் வெட்டினை ஏற்படுத்தி இருக்கின்றன.
இவ்வாறு கார்ப்ப ரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மிகவும் தெளிவான முறையில் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில், மறைமுக வரிகள் என்பவை பொருள்களை அல்லது சேவைகளை வாங்கு கின்ற ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய வரியாகும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவ்வாறு பொருள்களை வாங்குபவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழை மக்களாவர். இவ்வாறு நேரடி வரிகளை வெட்டுவது என்பது மற்றும் மறைமுக வரிகளை உயர்த்துவது என்பதன் பொருள் ஏழைகளிடமிருந்து வருமானங்களைப் பெற்று, பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் மாற்றுவது என்பதாகும். 2016-17 பட்ஜெட் ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், 2015-16 ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகள் மற்றும் நேரடி வரிச் சலுகைகள் 68,711 கோடி ரூபாயாகும். அதாவது அரசாங்கத்திற்கு இவர்களிடமிருந்து வரவேண்டிய இத்தொகை இவர்களிடமிருந்து வசூலிக்கப்படாமல் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு 68,711 கோடி ரூபாய். அதாவது இந்தத் தொகையை வசூலித்திருந்தால் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு ஈராண்டுகளுக்கு இன்றைய நடப்பு அளவுகளில் நிதி ஒதுக்கப் போதுமான தொகையாகும். அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தேசிய சுகாதாரத் திட்டங் களுக்குப் போதுமான தொகையாகும். இவ்வாறு நேரடி வரிச் சலுகைகள் மட்டுமல்லாது, மறைமுக வரிச்சலுகைகளையும் சற்றே ஆராய்ந் தோமானால், சுங்கத் தீர்வை சலுகைகளில் (மொத்தத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு அல்லது 61,126 கோடி ரூபாய்)ஆபரணக் கற்கள் மற்றும் நகைகள் ((gems and jewellery)) துறைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கலால் வரியில் உப்புக்கு சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. உப்பு என்பது ஏழைகள் நுகர்வது அதற்கு வரிச்சலுகை, புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆபரணக் கற்கள் மற்றும் நகை களுக்கு வரிச்சலுகை ஏன்? இவ்வாறு மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அல்லது சுகாதாரத் திட்டத்திற்கு ஈராண்டுகளுக்கு தாராளமாக ஒதுக்கக்கூடிய தொகை, கார்ப்பரேட்டு களிடமிருந்து வசூலிக்கப்படாமல், அயல்நாட்டுப் பணக்காரர்கள் நகைகள் வாங்குவதற்காக அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் பட்ஜெட் உரையும் கூட நிலம் உட்பட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடக்கூடிய விதத்தில், அதன் பங்குகளை தனியாருக்கு விற்பதற்குத் திட்டமிடப் பட்டிருக்கிறது. தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கார்ப்பரேட்டுகளுக்கு அபரிமிதமான சலுகைகள் அளிக்கக்கூடிய விதத்தில் கதவுகள் அகலமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
உணவுப் பொருள்களை சந்தைப் படுத்துதலிலும் 100 சதவீதஅந்நிய நேரடி முதலீடு உருவாகிக் கொண்டிருக்கிறது. வேளாண் உற்பத்திப் பொருட்களை இணையம் (e-platform) மூலம் சந்தைப்படுத்துவதற்காக, வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டம் (APMC Act)) திருத்தப்படுவதற்கும் முன்மொழிவுகள் தயாராயிருக்கின்றன. நுகர்வோருக்கு சிறந்த சேவை என்ற பெயரில் ஏகபோக வர்த்தகம் மற்றும் வேளாண் வர்த்தகநலன்களில் ஆதிக்கம்செலுத்துவோருக்கு வசதி செய்து கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த நடவடிக்கை இருக்கும் என்பதில் ஐயமில்லை.இதேபோன்றே இனி மத்திய அரசு வேளாண் உற்பத்திப் பொருள்களைக்கொள்முதல் செய்வதையும் பரவலாக்கல்’’ (““decentralisation என்ற பெயரில் கைவிடவும் முன்மொழியப்பட்டிருக்கிறது.
இதன் பொருள் என்னவெனில் மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய உணவுக் கழகம் (FCI) இனி வேளாண் உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யாது. இந்தப் பொறுப்பை ஆங்காங்கேயுள்ள மாநிலஅரசுகள் மற்றும் தனியாரிடம் ஒப்படைத்துவிடுகிறது. வேளாண் உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்திடும் வல்லமையை ஒருசில மாநில அரசுகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், இதனால்ஆதாயம் அடையப்போவது தனியார் வர்த்தக நிறுவனங்கள் என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. பாதுகாப்புத் துறையில், 49 சதவீதம் வரையிலான அந்நியமுதலீட்டுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை, அதுதானியங்கி மார்க்கத்தின் automatic route))கீழ் வந்துவிடுகிறது. 49 சதவீதத்திற்கும் மேலான முதலீடு என்றால்தான் அந்நிய முதலீடு மேம்படுத்தல் வாரியத்தின் மூலம் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் அமைச்சர் அலுவல்துறை முதலீடு (portfolio investment)), அந்நிய நிறுவனங்களுடனான மூலதனமுதலீடு (foreign venture capital investment) ) போன்றவற்றிற்கு இதுவரை24 சதவீதம்வரைக்கும் தானியங்கி மார்க்கத்தின் மூலம் என்று இருந்தது, தற்போது49 சதவீதம் என்று உயர்த்தப்பட்டிருக்கிறது. தனியார் துறை வங்கிகளுக்கு அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு (FII - Foreign Institutional Investor investment))ஆகியவற்றின் கீழான உச்சவரம்பை அரசாங்கம் நீக்கிவிட்டது. இவை 74 சதவீதம் வரை இனி முதலீடு செய்திட லாம். இந்த நடவடிக்கை யெஸ் வங்கி, கோடாக் மகிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகளுக்குப் பெரிதும் பயன் அளித்திடும்.காப்பி, ரப்பர், ஏலக்காய், பாமாயில் மரம் வளர்ப்பு மற்றும் ஆலிவ் எண் ணெய் தோட்டப் பண்ணைகள் போன்ற வற்றிற்கும் தானியங்கி மார்க்கத்தில் 100 சதவீதம் வரை அந்நிய முதலீட்டுக்குக் கதவுகள் திறந்துவிடப் பட்டிருக்கின்றன.
சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால், மோடியின் ஈராண்டு கால ஆட்சி என்பது பணக்காரர்களுடன் சேர்ந்து, பணக்காரர்களின் வளர்ச்சிக்கான ஆட்சியாக அமைந்துள்ளது. அதாவது, பணக்காரர்களின் கண்களுக்கு வெண்ணெய், உழைக்கும் மக்களின் கண்களுக்கு சுண்ணாம்பு(carrots for businessmen and sticks for the toiling masses).
தமிழில்: ச. வீரமணி


1 comment:

ஸ்ரீமலையப்பன் said...

ரிச் கெட் ரிச்சர் ... புவர் கெட் புவரர்