Saturday, September 7, 2013

எம் தொழிலாளர் நெஞ்சங்களில் குமுறும் எரிமலை


எம் தொழிலாளர் நெஞ்சங்களில் குமுறும் எரிமலை
புதிய பென்சன் மசோதாவை எதிர்த்து தபன்சென்  எச்சரிக்கை
புதுதில்லி, செப். 7-
ஓய்வூதிய நிதியத்திற்கு எதிராக தொழிலாளர்களின் நெஞ்சங்களில் எரிமலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு-வின் பொதுச் செயலாளருமான தபன்சென் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெள்ளியன்று ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டமுன்வடிவின்மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு தபன்சென் பேசியதாவது:
‘‘இந்தச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சியின் சார்பில் எதிர்க்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவின் மீதான பரிந்துரைகளைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் பொதுவாக கருத்தொற்றுமை இருந்தது. நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்க இயக்கமும் இதனை எதிர்த்து வருகின்றன. இடதுசாரி தொழிற்சங்கம், வலதுசாரி தொழிற்சங்கம், இரண்டும் மத்தியில் உள்ள தொழிற்சங்கம் - இவைகளுக்குள் எந்த வித்தியாசமும் இன்றி அனைத்து சங்கங்களும் இதனை எதிர்த்து வந்தன. இச்சட்டமுன்வடிவு இங்கே கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் தங்களுக்கு மாபெரும் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். நாடு முழுதும் பல்வேறு இயக்கங்கள் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருசிலரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் மட்டும் நீங்கள் ஆட்சியை நடத்திவிட முடியாது.
இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்குபவர்கள், உங்கள் கருவூலத்திற்கு வருவாயைத் தேடித்தருபவர்கள், வேலையளிப்பவர்களுக்கு லாபத்தை ஈட்டித்தருபவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். 
இந்தச் சட்டமுன்வடிவின் மூலம், ஓய்வூதியம் என்பது மனிதன் ஓய்வுபெற்ற பின் உயிர்வாழ்வதற்கு உத்தரவாதமாகக் கிடைக்கக்கூடிய ஓர் ஊதியம் என்பது ஒழித்துக்கட்டப்படுகிறது. இச்சொற்றொடர் சமூகப் பாதுகாப்பு என்னும் கலைக்களஞ்சியத்திலிருந்து நீக்கப்படுகிறது. ஓய்வுபெற்றபின்னர் அதுவரை சமூகத்திற்காக உழைத்து வந்த உழைப்பாளி மக்கள் வயதான காலங்களில் தாங்கள் உயிர்வாழ்வதற்காகப் பெற்று வந்த ஊதியம் இச்சட்டமுன்வடிவின் மூலம் அவர்களிடமிருந்து பறித்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும்? ‘‘அந்நிய நிறுவனங்கள் இங்கே வரும். வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கொண்டுவரும். நமக்கு சிறந்தவகையில் ஓய்வூதியம் அளிக்கும்.’’ இவ்வாறு இச்சட்டமுன்வடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. தங்கள் சொந்த நாடுகளிலேயே வர்த்தகத்தை ஒழுங்காகச் செய்ய முடியாத இவர்கள் இங்கே வந்து நம்முடைய ஓய்வூதிய நிதியத்தை, நம்முடைய மக்களின் பயன்பாட்டிற்காக, சிறந்த முறையில் மேலாண்மை செய்வார்களாம். இதை நாம் நம்ப வேண்டுமா
இது தொடர்பாக அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன? நம் நாட்டில் இயங்கிவரும் சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசாங்கத்தையும், தங்களை நம்பி காப்பீடு செய்துள்ள காப்பீட்டுதாரர்களையும் ஏமாற்றி வருவது குறித்து ஜனவரி 1 முதல் இந்த அரசாங்கத்திற்கு நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இவர்களின் மோசடியான நடவடிக்கைகளின் காரணமாக முறைசாராத் தொழிலாளர்களும்நெசவாளர்களும், கைவினைஞர்களும் மிகவும் மோசமான முறையில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிகவும் தெளிவான முறையில் சாட்சியங்கள் இருக்கின்றன. இதுதொடர்பாக நிதி அமைச்சகத்திற்கும், ஐஆர்டிஏ எனப்படும் இன்சூரன்ஸ் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கும் ஜனவரி 1இலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. அயல்நாடுகளிலிருந்து அந்நிய மூலதனம் கொட்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
எந்த எந்த நிறுவனங்கள் இவ்வாறு ஏமாற்றி இருக்கின்றன என்று நிதி அமைச்சருக்குத் தெரியும். ஐஆர்டிஏ-க்குத் தெரியும். இன்சூரன்ஸில் இதுபோன்ற நிலை என்றால், ஓய்வூதிய நிதியத்தின் கதி என்ன?
ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்குப் பயன் அளிக்கும் திட்டம் என்றிருந்ததை இந்த அரசாங்கம் ஓய்வூதியர்கள் பங்களிப்பு அளிக்கும் திட்டம் என்று மாற்றி இருக்கிறது. இப்புதிய திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தைத் தவிர மற்ற எல்லாமே உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த ஓய்வூதிய நிதியத்தை யார் கையாளப் போவது? இதிலிருந்து பயன் அடையப் போவது யார்? அனைத்தும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஓய்வூதியப் பங்களிப்பினை தன் ஊதியத்தில் பத்து விழுக்காடு என ஒவ்வொரு மாதமும் தன் வாழ்நாள் முழுதும் செலுத்தி வரும் ஊழியர் பெறப்போகும் ஓய்வூதியம் என்ன என்பது மட்டும் உத்தரவாதப் படுத்தப்படவில்லை.
அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? மக்களவையிலும், மாநிலங்களவையில் அரசியல் கருத்தொற்றுமை மூலம் பெரும்பான்மையைப் பெற்று இச்சட்டமுன்வடிவை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் நாடு முழுதும், ஏன் உலகம் முழுதும், படிப்படியாக ஓர் எரிமலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள். இத்தகைய மோசடியை தொழிலாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்.
பிரதமர் என்ன கூறுகிறார் என்று மிகவும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் ஆகஸ்டு 30 அன்று இந்த அவையில் நம் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை குறித்து  ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். நாட்டின் பொருளாதார நிலை அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் இருக்கிறது என்றும் அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர், மிக எளிய சீர்திருத்தங்கள் மேற்கொண்ட காலமெல்லாம் முடிந்துவிட்டன என்றும், இனிவருங்காலங்களில் மிகவும் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார். என்ன அந்தக் கடினமான சீர்திருத்தங்கள் என்பதையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார்.
அவற்றில் ஒன்று இந்த ஓய்வூதிய நிதியம். மற்றொன்று மக்களுக்கு அளித்து வரும் மான்யங்களை  வெட்டுவது. இன்றுள்ள நெருக்கடியிலிருந்து மீள இவ்விரு கடினமான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதாக அவர் பட்டியலிட்டார். இவ்வாறு இது கடினமான சீர்திருத்தங்களுக்கான நேரம் என்று பிரதமரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
எளிதான சீர்திருத்தங்களுக்கான காலம் முடிந்துவிட்டது, கடினமான சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாங்கள் வாதத்திற்காக ஒத்துக்கொண்டாலும், இந்த அரசாங்கத்திடம் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம், அவ்வாறு எளிதான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அதனால் பயனடைந்தவர்களிடம் - கார்ப்பரேட் வர்க்கத்தினரிடம் - உங்கள் கடினமான சீர்திருத்தங்களைப் பிரயோகியுங்கள். தயவுசெய்து முயற்சியுங்கள். நாட்டில் மிகவும் இருளார்ந்த நிலையில் நிதிப் பற்றாக்குறை (களைஉயட னநகiஉவை) இருக்கிறது. அதைவிட ஆழமான முறையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஊரசசநவே ஹஉஉடிரவே னுநகiஉவை) இருக்கிறது.  எனவே கடந்த இருபதாண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த எளிய சீர்திருத்தங்களின் காரணமாகப் பயன் அடைந்த வர்க்கத்தினரிடம் கேளுங்கள். அவர்களுக்கு அளித்த சலுகைகளைத் திரும்பப் பெறுங்கள். குறைந்தபட்சம்  அவர்கள் அரசுக்கு அளிக்காமல் இருக்கும் நேரடி மற்றும் கார்ப்பரேட் வரித் தொகைகளில் பாதியையாவது வசூல் செய்திடுங்கள். சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் இதில் பாதியையாவது வசூல் செய்திடுங்கள். தயவுசெய்து தொழிலாளிகளை விட்டுவிடுங்கள். தயவுசெய்து உழைக்கும் வர்க்கத்தினரை விட்டுவிடுங்கள். நாட்டின் இக்கட்டான சூழ்நிலையிலும், தாங்கள் கடினமான சீர்திருத்தங்களைக் கொண்டுவரவிருக்கும் இந் நேரத்திலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கிக் கொண்டிருப்ப வர்களை, நாட்டிற்கு வருவாயை உருவாக்கித் தருபவர்களை விட்டுவிடுங்கள். தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள். அரசாங்கம் அவர்களுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறது.
கடைசியாக ஒரு வேண்டுகோள். நான் என்னதான் வேண்டுகோள் விடுத்தாலும் அது கேளாதவர் காதில்  ஊதிய சங்கு போன்றதுதான் என்பது எனக்குத் தெரியும். இச்சட்டமுன்வடிவின்மீது சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். அவற்றை நிறைவேற்றித்தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன். திருத்தங்கள் இன்றி இச்சட்டமுன்வடிவை நிறைவேற்றி தொழிலாளர் களின் வாழ்வைச் சூறையாட அனுமதிக்கக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
(ந.நி.)


 
     



No comments: