Tuesday, September 24, 2013

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த குறிப்பு
புதுதில்லி, செப். 24-
புதுதில்லியில் திங்கள் அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிப்பு ஒன்று பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:
1. அதிகரித்துவரும் மதவெறி நிகழ்வுகள்:
மிகவும் கவலையளிக்கக்கூடிய விதத்தில் சமீபத்தில் மதவெறி நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ள பின்னணியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்ட்வார், பீகார் மாநிலத்தில் நவாடா மற்றும் பெட்டியா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் மிகப்பெரிய அளவில் வன்முறையில் நாற்பது பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆகிய  மதவெறி வன்முறைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஓராண்டில் ராஜஸ்தானிலும், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சிகளை அடுத்து இவை நடந்திருக்கின்றன.
சமீபகாலத்தில் வகுப்புவாத நிலைமை மிகவும் மோசமாக மாறிக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இவை தற்செயலாக வெடித்த சம்பவங்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக ஒருசில மதவெறி-அரசியல் சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப் பட்டவைகளேயாகும்.
மத வன்முறைச் சம்பவங்களுக்கான காரணங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதைப்போலத்தான் இருந்திருக்கின்றன. அதாவது, இரு மதத்தினரும் கலந்து வாழக்கூடிய பகுதிகளில் மத ஊர்வலங்கள் செல்லும்போது ஆத்திரமூட்டல் சம்பவங்களை உருவாக்குதல்ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைச் சேர்ந்த இளம்பெண்கள் மீது இதர சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளுதல், மதவெறித் தீயை விசிறிவிடும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு அதன்மூலம் சமூகத்தினரிடையே பரஸ்பரம் நம்பிக்கையின்மையை உருவாக்குதல், இவற்றின் மூலம் எந்தவொரு சிறு நிகழ்ச்சியையும் தீப்பொறியாகப் பயன்படுத்தி காட்டுத்தீ அளவிற்கு மோதலை உருவாக்குதல் - என கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போலத்தான் இருந்திருக்கின்றன. ஆயினும், இதில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் அம்சம் என்னவெனில், முசாபர்நகரில் நடந்தைப்போல, இத்தகைய கலவரங்கள் கிராமப்புறங்களில் பரப்பப்படுவதுதான். இவ்வாறு நடைபெற்ற அனைத்துக் கலவரங்களின்போதும், வன்முறையின் கூர்முனைத் தாக்குதல்களை சிறுபான்மை சமூகத்தினர்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் கொன்று குவிக்கப்படுகின்றனர், அவர்களது சொத்துக்கள்தான் சூறையாடப்படுகின்றன.
மதவெறி சித்தாந்தத்தை  ஆரத்தழுவிக் கொண்டுள்ள அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்திபதற்றத்தை உருவாக்கி வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்திக்  கொள்கின்றன.  
உள்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரங் களின்படி, இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை   497 மதவெறி நிகழ்வுகள் நாட்டில் நடைபெற் றுள்ளன, இவற்றில் 107 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 1,697 பேர் காயங்கள் அடைந்திருக்கிறார்கள்.
வரவிருக்கும் 2014 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே இவ்வாறு மதவெறி நடவடிக்கைகள் விசிறிவிடப்படுவதாகத் தோன்றுகிறது.   இவ்வாறு மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பயன் அடைபவர்கள் யார் என்பதை எளிதாக அடையாளம் காண முடியும்.
2. மதவெறி நடவடிக்கைகளைச் சமாளித்திட நடவடிக்கைகள் எடுத்திடுக:
எனவே, மத வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால், இதனை உருவாக்கும் அரசியல் - மதவெறி சக்திகள்   மற்றும் அமைப்புகள் எவை என்பதை முதலில் அடையாளம் காண வேண்டியது அவசியமாகும். அதன்பின்னர் அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்திடக்கூடிய வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மதவெறிப் பிரச்சாரத்தைத் தடை செய்தல், இதர சமூகத்தினர் மீது வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களைத் தடை செய்வது சம்பந்தமான சட்டங்களை பிரயோகிக்க வேண்டும்.
இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்  நிர்வாகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். நிர்வாகமும், காவல்துறையும் காலத்தே செயல்படுவதும், வன்முறை நிகழ்கையில் பாரபட்சமின்றித் தலையிட்டு வன்முறையைக் கட்டுப்படுத்துவதும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கயவர்களைக் கைது செய்வதும் கூட மிகவும் அவசியமாகும்.
வகுப்புவாத வன்முறைத் தடைச் சட்டமுன்வடிவு (கூhந ஞசநஎநவேiடிn டிக ஊடிஅஅரயேட ஏiடிடநnஉந க்ஷடைட) மேலும் காலதாமதம் எதுவுமின்றி சட்டமாக நிறைவேற்றப் பட வேண்டும். இச்சட்டம் மதவெறி வன்முறைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது வேறுவகையிலான மோதல்கள் மற்றும் வன்முறை வடிவங்கள் தொடர்வாக விரிவுபடுத்தப்படக் கூடாது. மேலும், இச்சட்டம் நிறைவேற்றப்படுகையில், மாநில அரசுகளின் சட்டம் - ஒழுங்கு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற அடிப்படைப் பொறுப்புகளைப் பறிப்பதாக இருந்துவிடாது, கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திடல் வேண்டும். 
சில மாநிலங்களில் தற்போதுள்ள கல்விமுறை மற்றும் பாடப் புத்தகங்கள் மதவெறி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றையும் பரிசீலனை செய்து, இவற்றில் உள்ள தீமைகளைக் களைய வேண்டியதும் அவசியமாகும்.
சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் பல மதவெறித் தீயை உமிழ்வதற்குப் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறோம். இவ்வாறான மதவெறிப் பிரச்சாரத்தைத் தடை செய்திட வேண்டும், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்திடு வேண்டும். இது தொடர்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு, உரியமுறையில் திருத்தப்பட வேண்டும். இந்தச் சட்டப்பிரிவு மாற்றுக்கருத்துக் கூறுபவர்களை ஒடுக்குவதற்கு துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மதவெறி வன்முறைப் பிரச்சனை என்பது நிர்வாகரீதியான வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல என்று பார்க்கப்பட வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில், மதவெறி அரசியல் வரலாற்றை ஆராயுங்கால், இது அடிப்படையில் ஓர் அரசியல் பிரச்சனையே என்பதை உணரமுடியும். எனவே இது அரசியல் ரீதியாகவும் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கு மதச்சார்பின்மைக் கொள்கையை உறுதியுடன் பின்பற்றுவது அவசியத்தேவை. அப்போதுதான் மதவெறி சித்தாந்தத்தையும், அரசியலையும், அதன் ஊற்றுக்கண் மற்றும் மூலவேர் எதுவாக இருந்தபோதிலும், அதனை எதிர்த்து முறியடிப்பது என்பது சாத்தியமாகும்.
மதநல்லிணக்கம் சம்பந்தமாக மற்றொரு முக்கியமான அம்சமும் உண்டு. அது சிறுபான்மையிர் தொடர்பாக நேர்மையான மற்றும் நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவது சம்பந்தமானது. வகுப்புவாதம் பயங்கரவாத வன்முறை போன்ற தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கிறது. பயங்கரவாதத்தை, அதன் ஊற்றுக்கண் எதுவாக இருந்தாலும், அதனை எதிர்த்து முறியடிப்பது அவசியம் என்று சொல்கிற அதே சமயத்தில், தனிப்பட்ட ஓர் இனத்தை மட்டும் இதனுடன் பொருத்திப்பார்க்காதுமிகவும் எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் வேட்டையாடப்படுவதையே அனுபவம் நமக்குக் காட்டுகிறது. எண்ணற்ற வழக்குகளில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுநீண்ட காலத்திற்கு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வழக்குகள் பலவற்றில் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட இளைஞர்கள்  கடைசியில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  மேலும் பல வழக்குகளில் இவ்வாறு பொய்யான மற்றும் அற்ப சாட்சியங்களை வைத்துக்கொண்டு இளைஞர்களைக் கைது செய்து வழக்கு தொடுத்ததை நீதித்துறை கண்டித்திருக்கிறது.
காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறை ஏஜன்சிகள் மத்தியில் காணப்படும் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறை சமூகத்தினர் மத்தியில் மனமுரிவையும் (யடநையேவiடிn), கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
பாகுபாடு காட்டப்படும் இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதும் அரசின் பொறுப்பாகும். இவ்வாறு நீதித்துறையையே நகைப்பிற்காளாக்கிய காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.
3. பெண்கள் பாதுகாப்பு:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல்கள் அளவுக்கு மீறி அதிகரித்த வண்ணம் உள்ளன. வன்புணர்ச்சி, கூட்டுவன்புணர்ச்சி, இளம் பெண்கள் மீது அமிலம் (acid) வீசப்படுதல், குழந்தைகள்கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல்  அதிகரித்திருக்கின்றன. ஆயினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனைகள் என்பது மிகவும் வருத்தம் தோய்ந்த நிலைமையில் இருப்பது தொடர்கிறது. இத்தகைய குற்றம்புரிவோர் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற உணர்வு ஆட்சியாளர்கள் மத்தியில் போதிய அளவிற்கு இல்லாதிருப்பதே இத்தகைய கயவர்கள் ஊக்கத்துடன் செயல்படுவதற்குக் காரணமாகும். இத்தகைய கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  சட்டத்தை மதிக்காது அதனைத் துஷ்பிரயோகம் செய்கிற காவல்துறையினர் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இத்தகைய வழக்குகளை விரைந்து தீர்ப்பு சொல்லக்கூடிய விதத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுவதும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அவை அனைத்தும் அவசர அவசியமாகும்.
தில்லியில் நடைபெற்ற கொடூரமான கூட்டு வன்புணர்வு வழக்கினை அடுத்து, மக்கள் கடுங்கோபத்துடன் கிளர்ந்தெழுந்ததை அடுத்து, புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆயினும் இது இன்னமும் முழுமையாக முறையாக அமல் படுத்தப்படவில்லை. எப்படிப்பார்த்தாலும் இது போதுமானதும் அல்ல. ஏனெனில்இது வர்மா குழு அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் சட்டத்தின் ஷரத்துக்களில் இணைத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக, கவுரவம் என்ற பெயரில் இளைம் தம்பதியர் கொல்லப்படும் கொடூரங்கள் தொடர்கின்றன.  இத்தகைய கவுரவக் கொலைகள்புரிவோருக்கு எதிராக தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டியதும் அவசியத் தேவையாகும். சில மாநில அரசுகள் இவ்வாறு கொண்டுவர வேண்டியது அவசியம் இல்லை என்று கருதுவதால், இத்தகைய சட்டம் கொண்டுவரப்படாதது துரதிர்ஷ்டவசமாகும். தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக படுபிற்போக்குத்தனமான பழைய சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக செல்ல அவை விரும்பவில்லை.
அனைத்து சமூகத்திலும் உள்ள வகுப்புவாத மற்றும் அடிப்படை சக்திகள் தங்கள் ஆணாதிக்க சிந்தனையைத் (யீயவசயைசஉhயட எயடரநள ) திணிப்பதற்காக பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை கட்டாயப்படுத்துகின்றன, அவர்களது உரிமைகளைத் தராது மீறுகின்றன. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களையும், பெண்கள் துன்புறுத்தப்படுதலையும் மதவெறி அமைப்புகள் தங்கள் தங்கள் மதத்திற்கு எதிரானவை என்பதுபோல் மதவெறிச் சாயம் பூசிஇதர சமூகத்தினருக்கு எதிராக மதவெறி உணர்வையும், வெறுப்பையும் தூண்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
அரசியலில் மிக உயர் இடத்தில் இருக்கக்கூடிய நபர்கள் மற்றும் தங்களைத்தாங்களே ‘‘கடவுளின் அவதாரங்கள்’’ ("படின அநn") என்று சொல்லிக்கொள்ளக்கூடிய சில பேர்வழிகள் பெண்களைத் துன்புறுத்தத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்பது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறு எண்ணற்ற பேர்வழிகள் நாடு முழுதும் காணப்படுகிறார்கள். இவர்கள் புரிந்திடும் குற்றங்கள் மிகவும் மோசமானவைகளாகக் கருதப்பட்டு அவ்வாறு குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய பேர்வழிகளுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதில் இரக்கம் காட்டக்கூடாது, இரட்டை நிலை பின்பற்றப்படக் கூடாது.
அதேசமயத்தில், வேலைவாய்ப்பு, சம ஊதியம், உத்தரவாதமளிக்கப்பட்ட சமூகப்பாதுகாப்பு, நிலம் மற்றும் இதர சொத்துக்களில் உரிமைகள் ஆகியவற்றிலும் சமத்துவமின்மை நீடித்தல் பெண்களை ஆண்களைச் சார்ந்தே வாழ வைத்திருக்கின்றன. எனவே வன்முறைக்கு மிக எளிதாகப் பலியாகிவிடுகிறார்கள்.  பொருளாதாரச் சுதந்திரம், குறிப்பாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்படுதல், மிகவும் அவசியமாகும். இவர்கள்தான் பாலியல் வன்முறைக்கு மிகவும் பலியாகிறார்கள் என்பதால் இவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அளிக்கப்படக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
பாலியல் வன்முறையில்லாத ஒரு சுதந்திரமான சுற்றுச்சூழலை உருவாக்கக்கூடியவிதத்தில் பெண்களுக்கு உரிமைகள் உருவாக்கப்பட வேண்டியது அடிப்படை அவசியமாகும். பாலின சமத்துவத்தின் அடிப்படையில்பாலியல் வன்முறையற்ற ஒரு சமூகத்தில் வாழக்கூடியவிதத்தில் பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதனை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் நம் கல்வி முறையும் அனைத்து மட்டங்களிலும் மாற்றப்பட வேண்டும்.
4. தலித்துகள்/பழங்குடியினர் நலன்கள்:
தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களது மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பட்ஜெட் ஒதுக்கீடு இருந்திட வேண்டும். ஆயினும், இது தொடர்பான திட்டக் கமிஷன் வழிகாட்டுதல்கள் வெறும் தாள்களிலேயே இருக்கின்றன. பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கிய நிதிகள் அவர்களுக்கு முழுமையாக செலவு செய்யப்படாது, காலாவாதியாவது அல்லது வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுவது அனுபவமாக இருக்கின்றன.
இவ்வாறு நடைபெறாமல் தடுத்திட, இவ்வாறு துணைத் திட்டங்களின் ஒதுக்கப்படும் தொகைகள் முறையாக அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் உரிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.  இத்தகையதொரு சட்டத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்து நாடாளுமன்றத் தில் நிறைவேற்றிட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)



     

No comments: