Monday, April 13, 2009

காங்கிரஸ் - பாஜகவின் கொள்கை கோட்பாடற்ற கதாகாலட்சேபங்கள்



தலையங்கம்:


காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது, அற்ப விஷயங்கள் குறித்து கதாகாலட்சேபங்கள் செய்து வருகின்றன. உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்தோ, அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் அளிப்பது குறித்தோ எதுவும் கூறாமல், இவ்வாறு அற்பவிஷயங்களை முன்வைப்பதுதான் தங்களுக்கு நலம் பயக்கும் என்று உண்மையிலேயே அவை கருதுகின்றன.

உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒரு கோடிக்கும் மேலான வேலைகள் (jobs) பறிபோய்விட்டன. இதன் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் தற்கொலைகள் செய்து கொள்வதென்பதும், தங்கள் குடும்பம் உயிர்வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களின் உடல் உறுப்புகளை விற்பது என்பதும் தொடர்கதையாகிவிட்ட நிலையில், இதைப்பற்றியெல்லாம் எதுவும் கூறாது, மக்களின் நேரடி வாழ்க்கையில் சம்பந்தப்படாத அற்ப விஷயங்களை இக்கட்சிகள் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.
பாஜக-வானது, அது தன்னுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக, மதவெறித் தீயை கூர்மைப்படுத்தும் வண்ணம் வெறுப்புப் பேச்சுக்கள் மூலமாக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளன. இவ்வாறு பிலிபித்தில் பேசிய வருண் காந்தியையும், ஒரிசா மாநிலத்தில் கந்தமகால் தொகுதியில் பேசிய நபரையும் வேட்பாளர்களாக பாஜக நிற்க வைத்து அவர்களைப் பாதுகாத்திட முனைந்துள்ளது. கந்தமகால் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலக்கெடு முடிவடைந்தபின்னர், கிறித்துவ சிறுபான்மையினர் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற அத்தகைய வெறுப்புப் பேச்சைக் கக்கிய அவ்வேட்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாஜக-வானது தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்திருப்பதைப்போல மதவெறி நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை விசிறிவிடத் தீர்மானித்திருக்கிறது.

இப்போது பாஜக-வின் சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட்டிருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பிரதமரும், ஒருவரை ஒருவர் மிகவும் இழிவான முறையில் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர். அத்வானி, மன்மோகன்சிங்கை மிகவும் பலவீனமான பிரதமர் என்று கூற, மன்மோகன் சிங், அத்வானி மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் மேற்கொண்ட தர்மசங்கடமான அம்சங்களை எடுத்துரைத்திருக்கிறார். கந்தகாரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தான் கையறு நிலையிலிருந்ததாக அத்வானி கூறியது, கராச்சி சென்றிருந்தபோது ஜின்னா குறித்து கூறியது உட்பட இதில் அடங்கும். இதுவல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாவும், அவரது மகன் ராகுலும் கூட பிரதமருக்கு ஆதரவாக நின்று, அத்வானி மீது வசைமாறி பொழிந்து கொண்டிருக்கின்றனர்.


உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக 75 லட்சம் வாக்காளர்களுடன் திகழும் இந்தியாவில் உள்ள பெரிய கட்சிகளாகச் சொல்லிக் கொள்ளும் இவைகள் நடத்திடும் கதாகாலட்சேபம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது? உலகப் பொருளாதார மந்தத்தால் விண்ணையெட்டியுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப்பற்றிக் கிஞ்சிற்றும் இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் நாள்தோறும் சாப்பாட்டிற்கே வழியின்றி திண்டாடும் நிலை குறித்து கொஞ்சமாவது கவலைப்பட்டார்களா?


மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்தும் அவற்றிற்கு எங்ஙனம் நிவாரணம் அளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கக்கூடாது என்பதில் காங்கிரசும், பாஜகவும் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எனவேதான், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது மட்டும் கவனம் செலுத்திடும் வகையில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து விடிவும், நல்லதோர் வாழ்க்கையும் தரக்கூடிய விதத்தில் அதற்காகப் போராடும் ஓர் அரசியல் மாற்று தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.


இந்தப் பின்னணியில்தான், பிரதமர் மன்மோகன்சிங், கேரளாவில் தேர்தல் பிரச்சாரப் பயணம் செய்கையில், கம்யூனிஸ்ட்டுகள் மீது வசைமாறி பொழிந்திருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் எப்போதுமே வரலாற்றில் தவறான பக்கத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும் இடதுசாரிக் கட்சிகள் எடுத்து வைத்துள்ள விவாதங்கள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் இவ்வாறு விலகிச்சென்றிருக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகள் சுதந்திரத்திற்கு எதிராக நின்றார்கள் என்று கடும் பிற்போக்கான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகளின் ‘பங்கு’ எவ்வாறானதாக இருந்தது என்பது குறித்து 1992 ஆகஸ்ட் 9 அன்று, நாடு தன்னுடைய 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிய தருணத்தில், அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா இந்திய நாடாளுமன்றத்தின் நள்ளிரவு அமர்வின்போது ஆற்றிய உரையைக் கூறினாலே போதுமானது. அப்போது அவர், ‘‘கான்பூர், ஜாம்செட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களை அடுத்து, அரசின் செயலாளர், 1942 செப்டம்பர் 5 அன்று லண்டனுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். அதில் அவர், ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலரின் நடவடிக்கைகளிலிருந்து இவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்கள் என்பது தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைவிட வேறேதேனும் சான்று வேண்டுமா, என்ன? சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரே, இந்திய நாடாளுமன்றத்தில், அதிகாரபூர்வமாகக் கொண்டாடப்பட்ட விழாவில் பேசியபோது, ‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் ‘‘பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களாக’’ இருந்திருக்கிறார்கள் என்று கூறி பதிவாகியிருப்பதை விட வேறென்ன சான்று தேவை?


ஆயினும், பிரதமர் அவர்கள் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜக-வுடன் இணைந்து நின்றுகொண்டு, அதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, ஆர்எஸ்எஸ்-இன் பங்கு குறித்து (பாஜக-வானது இதன் அரசியல் அங்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று) எதுவும் கூறாமல் வாய்மூடி மவுனம் சாதிக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, பம்பாய் உள்துறை, குறிப்பிட்டிருந்ததாவது: ‘‘ஆர்எஸ்எஸ் அமைப்பானது, 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து வாய்திறந்து எதுவுமே கூறவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது முழுமையாக செயல்பட்டது’’. இது தொடர்பாக நானாஜி தேஷ்முக் கூட ஒருதடவை, ‘‘ஏன், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ஓர் அமைப்பு என்ற முறையில், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்று வினா எழுப்பினார்.
மக்களின் துன்ப துயரங்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து எதுவுமே கூறாது, வாக்களிக்கக்கோரும் காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் அரசியல் நிலை குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது ஒதுங்கியிருக்கும் இவ்விரு கட்சிகளும், எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பதற்கு, பணபலத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுவதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. மக்கள் மத்தியில் இவர்கள் முன்வைத்திருக்கும் கேள்வி, யாருடைய கொள்கை சிறந்த கொள்கை என்பதல்ல. மாறாக, யார் அதிக அளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியும் என்பதுதான். சமீபத்தில் கர்நாடகாவில் இரு வாகனங்களில் இருந்த சாக்குப் பைகளில் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டதிலிருந்து எந்த அளவிற்கு, இந்த அரசியல் கட்சிகள், அரசியல் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதில், மேலும் கொடுமை என்னவெனில், இந்தப் பணத்திற்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை என்பதும், இது எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பதை எவரும் கூறாததுமாகும்.


இத்தகைய சூழ்நிலைமையில், இத்தகைய கேடுகெட்ட அரசியல் கட்சிகளின் வலைகளுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் வலுப்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடுவோருக்கு தங்கள் ஆதரவினை அளித்திட வேண்டும். இதுநாள்வரை காங்கிரசுடனும், பாஜகவுடனும் ஒட்டிக்கொண்டிருந்த பல கட்சிகள் அவற்றைக் கழட்டிவிட்டுவிட்டு, இத்தகைய மாற்று அரசியல் கொள்கையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய மாற்றால்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். எனவேதான், மக்கள், நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: