Monday, March 23, 2009

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார பிரசுரம்


, மார்ச் 23-‘விலைவாசி உயர்வு, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைவு: சாமானிய மக்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பரிசுகள்’ என்னும் தலைப்பிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான சிறுபிரசுரத்தை, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் திங்களன்று மாலை வெளியிட்டார்.தலைநகர் டில்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில், திங்களன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்பிரசுரத்தை வெளியிட்டு, பிருந்தாகாரத் பேசியதாவது:‘‘மிகவும் முக்கியமான பதினைந்தாவது மக்களவைத் தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கான சிறுபிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன. அதன் முதல் வெளியீடாக, ‘விலைவாசி உயர்வு, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைவு: சாமானிய மக்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பரிசுகள்’ என்னும் தலைப்பிலான பிரசுரத்தை இப்போது உங்கள்முன் வெளியிடுகிறோம். இதைப்போல் மேலும் பதினான்கு பிரசுரங்கள் அடுத்தடுத்து சில நாட்களில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களால் வெளியிடப்பட இருக்கின்றன. இன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய விதத்தில், விலைவாசி உயர்வு மற்றும் வளர்ந்துவரும் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பான இச்சிறுபிரசுரம் வெளியிடப்படுகிறது. இந்தியா தற்போது, உலகில் பசி-பஞ்சத்துடன் உள்ள நாடுகளில் முக்கியமான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனை ஐ.நா. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சாமானிய மக்கள் பட்டினியிலும் பஞ்சத்திலும் உழன்றுகொண்டிருப்பதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத ஆட்சியாளர்கள், ‘ஜெய்ஹோ’ கோஷத்தை முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஒருகுறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின்கீழ்தான் ஆதரவு அளிக்க முன்வந்தன. அப்போது பொதுவிநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்றும், போலியான, மோசடியான ‘வறுமைக்கோட்டிற்குக் கீழ்’ என்றும் ‘வறுமைக்கோட்டிற்கு மேல்’ என்றும் மக்களைப் பிரிக்கும் முடிவை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் பொதுவான பொது விநியோக முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆட்சியாளர்கள் வறுமைக்கோட்டுக்கு நிர்ணத்திருக்கிற கணக்கீட்டின்படி கிராமப்புறங்களில் 11 ரூபாய்க்கு மேலும், நகர்ப்புறங்களில் 17 ரூபாய்க்கு மேலும் ஊதியம் பெறும் அனைவரும் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்துவிடுகிறார்கள். எனவே இவர்களுக்கு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. என்னே கொடுமை? இதனை மாற்ற வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டு காலமாகக் கோரி வருகிறோம். ஆட்சியாளர்கள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இன்றைய நிலைமை என்ன? விளைச்சல் அமோகமாக இருந்தும், மக்கள் பட்டினியால் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அரசின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, சாமானிய மக்களை வாழ வைத்திட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. இதனை, முன்பு ஆட்சியிலிருந்த பாஜகவும் செய்யாது, இப்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரசும் செய்யாது. இவர்களுக்கு மாற்றாக இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் தலைமையிலான மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் மத்தியில் அமைந்தால்தான் இது சாத்தியம். எனவே, அத்தகையதோர் அரசாங்கத்தை அமைத்திடக்கூடிய வகையில் மக்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு பிருந்தாகாரத் கூறினார்.

No comments: