Showing posts with label CITU. Show all posts
Showing posts with label CITU. Show all posts

Tuesday, August 30, 2016

குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு கேலிக்கூத்து மற்றும் ஏமாற்றும் சூழ்ச்சியாகும்


குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு
கேலிக்கூத்து மற்றும் ஏமாற்றும் சூழ்ச்சியாகும்
மாபெரும் வேலைநிறுத்தத்தின் மூலம் அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்
தபன்சென் அறிக்கை
புதுதில்லி, ஆக. 31-
குறைந்தபட்ச ஊதியம் குறித்து அரசின் அறிவிப்பு கேலிக்கூத்து மற்றும் தொழிலாளர்களை ஏமாற்றும் சூழ்ச்சியாகும். செப்டம்பர் 2 மாபெரும் வேலைநிறுத்தத்தின் மூலமாக அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் கூறினார்.
இது தொடர்பாக அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:
"செவ்வாய்க்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் தொழிலாளர்துறை அமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தின் சார்பில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது, அதில் அரசாங்கம், தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே 2016 செப்டம்பரி 2 வேலைநிறுத்தத்திற்குப் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களை ஏமாற்றும் கேலிக்கூத்தே தவிர வேறல்ல என்றே சிஐடியு கருதுகிறது. 
அரசாங்கம், குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று நிதி அமைச்சர் கூறியிருப்பது உண்மையல்ல. குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு 2016 ஆகஸ்ட் 30 அன்று சந்தித்தது. அனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதைத்தொடர்ந்து கூட்டம் எவ்வித முடிவும் மேற்கொள்ளாமல் முடிந்தது.  இந்தநிலையில் அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது வேலைநிறுத்தத்திற்கு முன்பு தொழிலாளர்களை திசைதிருப்பி, குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியேயாகும். 
அரசாங்கம் நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 350 ரூபாய் (அதாவது மாதத்திற்கு 26 நாட்களுக்கு 9,100 ரூபாய்) தர தயாராயிருப்பதாகவும், இதன்மூலம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருப்பது குரூரமான ஜோக் ஆகும். தொழிற்சங்கங்கள் இதனை கேலிக்கூத்து என்று கூறி நிராகரித்துவிட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு போனசை விடுவித்திருப்பதும் ஏதோ அரசாங்கத்தின் கருணையால் ஒன்றுமல்ல. போனஸ் வழங்குதல் சட்டத்தின்படி உச்சவரம்பைக் கூடுதலாக்கி இருப்பதை அரசாங்கம் இப்போது அமல்படுத்தி இருக்கிறது. இதனை இந்த அரசாங்கம் எப்போதோ செய்திருக்க வேண்டும்.  இப்போது அதனை அரசாங்கம் விடுவித்துவிட்டு, அரசாங்கம் ஊழியர்களின் எண்ணற்ற விஷயங்களைப் பரிசீலனை செய்துகொண்டிருப்பதாக வஞ்சகமான முறையில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. இதனை ஏதோ சாதனை போல சித்தரித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில்தான் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கங்கள்  2014-15ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குதல் சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன. இதற்கு அவை கேரளம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் அந்தத் தீர்ப்புகள் இந்த அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தாது. இவ்வாறு இவர்களின் உண்மை நோக்கங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
பத்திரிகையாளர் கூட்டத்தில் அரசாங்கத்தின் திட்டப் பணிகளில் பணியாற்றும் அங்கன்வாடி, மதிய உணவு, `ஆஷா` போன்றவற்றில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் பற்றிக் கேட்கப்பட்டபோது, திட்டப்பணிகளில் பணியாற்றுவோர் எல்லாம் தொண்டர்கள் (volunteers) என்றும் அவர்கள் ஊழியர்கள் (workers) அல்ல என்றும் நிதி அமைச்சர் கூறி அந்தக் கேள்வியை தள்ளுபடி செய்துவிட்டார். ஆனால் இதே தேஜகூ ஆட்சிக்காலத்தின்போதுதான், 46ஆவது  இந்தியன் தொழிலாளர் மாநாட்டின்போது, திட்ட ஊழியர்கள் அனைவரும் ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்கிற முந்தைய ஐஎல்சி மாநாட்டின் பரிந்துரைகளை மீளவும் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்ந்திட வேண்டும். 
அமைச்சர் மேலும் திட்ட ஊழியர்கள் அனைவரும் சமூகப் பாதுகாப்புப் பயன்களின் வருவதற்கான வழிவகைகளைக் காண ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஓராண்டுக்கு முன்பு 2015 ஆகஸ்ட் 26-27 தேதிகளில் இதே அமைச்சர் இதேபோன்று சென்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்பாக திருவாய் மலர்ந்தருளினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இதுதொடர்பாக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. 
எதார்த்தத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் அரசாங்கம் அறிவித்துள்ளவை ஏமாற்றும் வேலையை தவிர வேறல்ல. இதனை ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கம் நிராகரித்திட வேண்டும். வேலைநிறுத்தம் தொடங்க இருக்கும் இச்சமயத்தில் தொழிலாளர்களைக் குழப்புவதற்காகவே, தவறாக திசைதிருப்புவதற்காகவே இத்தகைய விளையாட்டில் இந்த அரசாங்கம் இறங்கி இருக்கிறது. இத்தகைய கபடத்தனமான மற்றும் வஞ்சனையான அரசாங்கத்தின் சூழ்ச்சியை தொழிலாளி வர்க்கம் 2016 செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்வதன் மூலம் முறியடித்திட வேண்டும்."
இவ்வாறு தபன்சென் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,
(ந.நி.)


Tuesday, April 29, 2014

மே தின புரட்சிப் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிப்போம்!


ஏ.கே.பத்மநாபன்
மே தினக்கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் தொழிலாளர் வர்க்கத்தினிடையே போராட்ட உணர்விலும், ஒருமைப்பாட்டிலும் புத்தெழுச்சியை ஏற்படுத்திடும். இந்த ஆண்டு, உலகம் முழுதும் மே தினத்தைக் கொண்டாடுகையில், இந்தியத் தொழிலாளி வர்க்கம் மிகவும் முக்கியமானதொரு அரசியல் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் 16ஆவது மக் களவைக்கான பொதுத் தேர்தல்களில் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டது.இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் களத்திலும், இந்தியத் தொழிலாளி வர்க்கம், உலகின் பல பகுதிகளிலும் உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினரின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ள பல அம்சங்களை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.
ஊதியங்கள், வேலைப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன், உழைக்கும் மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்து இந்தியத் தொழிலாளி வர்க்கமும் வேறுபடவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே நம் நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்தவைகளாகும்.
தங்கள் வாழ்க்கைப்பிரச்சனைகளுடன் நேரடியாகவும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனைகள் மீது உழைக்கும் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்டுள்ள போராட்டம் என்பது கடந்த ஐந்தாண்டுகளாக அது நடத்திவரும் பிரம்மாண்டமான ஒன்று பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வரலாறு படைத்திட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் உட்பட ஒன்றுபட்ட இயக்கம் மற்றும் பல்வேறு துறையினர் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் என்பவை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளை மாற்றுவதற்கான அவசியத்தின்மீது கவனம் செலுத்தும் வகையில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். அந்தவிதத்தில் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் பிரம்மாண்டமான போராட்டங்களுடன் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவைகளேயாகும்.
நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் முதலாளித்துவ உலகம்
கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகம் கடும் நெருக்கடிக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் தத்தளித்துக் கொண் டிருக்கிறது. அதன் பாதிப்புகள் உலகம் முழுதும் உள்ள சாமானிய மக்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்களும் மற்றும்உலகின் பல கண்டங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் இந்நெருக்கடியின் ஆழமான பாதிப்புகளுக்கு எதிரானவை களேயாகும்.
ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலையின்மை கிரிஸில் 27.4 சதவீதம், ஸ்பெயினில் 26.7 சதவீதம், போர்த்துக்கல்லில் 15.5 சதவீதம், பல்கேரியாவில் 12.9சதவீதம், இத்தாலியில் 12.7 சதவீதம்என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். உலகம் முழுதும் உள்ள நாடுகளில் வேலையில்லாதோர் பட்டாளத்தில் இவர்கள்தான் பெரும் பகுதியினராவார்கள்.இவ்வாறு வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்திருப்பதானது, வேலை யிலிருப்போரின் ஊதியங்களிலும் மற்றும் அவர்களின் சமூகப் பாதுகாப்புப் பயன்களிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
இவ்வாறு நிகழும் என்றுதான் வரலாறும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறது. சிக்கன நடவடிக்கைகள்என்ற பெய ரில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் உண்மையில் நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடுமையான முறையில் தாக்குதல்களைத் தொடுத் துள்ளன. இதுநாள்வரையில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் தத்துவார்த்தரீதியில் ஆதரவாக இருந்தவர்கள்கூட தற்போது ஆளும் வர்க்கத்தினரும், சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி போன்றவற்றின் கட்டளைகளை ஏற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏப்ரல் 4 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.
மாற்று ஐரோப்பா சாத்தியமே’’, என்றும், “சிக்கன நடவடிக்கைகள் ஒழிக’’ என்றும் முழக்கமிட்டவண்ணம் அவர்கள் பேரணியாகச் சென்றுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியாளர்கள் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஒழித்திட முன்வரவேண்டும் என்று பேரணியில் வந்தோர் முழக்கமிட்டுள்ளார்கள்.துரதிர்ஷ்டவசமாக, உலகின் பல பகுதிகளில் அநீதிக்கு எதிராகவும், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் நடத்திடும் இத்தகைய பிரம்மாண்டமான இயக்கங்கள், “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத் தில்’’ நடந்ததைப்போலவே, அரசியல் திசை தெரியாமல், தொழிலாளர்கள் தங்கள் கோபத்தைக் காட்டுவதோடு அப்படியே அமிழ்ந்து போய்விடுகின்றன.
தொழிலாளி வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
மே தினம் இப்பிரச்சனைகள் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுப்பதன் மூலமே நீடித்திருக்க முடியும். இப்போது நாம் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான நெருக்கடிகளும் இந்த முதலாளித்துவ அமைப்பு உருவாக்கியவை களேயாகும். எனவே இந்த அமைப்புமுறையையே எதிர்த்திட வேண்டும். தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் பிரிவினர் அனைவரும் அன்றாடம் அவர்கள் மேற்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்குப் பின்னே இருக்கின்ற அரசியலையும் தோலுரித்துக் காட்டிட வேண்டும். இவை அனைத்தும் நம்முன் உள்ள மிக முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மே தின எழுச்சி கோருகிறது. இன்றைய உலகில் அல்லது இது தொடர்பாக நம் நாட்டிலும் நம் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுக்கு எதிராக உக்கிரப் படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல் நம் சமுதாயத்தின் சமூக வலைப்பின்னலையே அரித்து அழித்துக் கொண்டிருப்பதை ஆழமாக ஆய்வு செய்து அதற்கு எதிராகச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாட்டில் 45 கோடிக்கும் மேலான உழைக் கும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் மிகவும் குறைந்த அளவிலானவர்களே வெகுஜன ஸ்தாபனங்களில் அணிதிரட்டப் பட்டிருக்கிறார்கள்.
எனவே நம்முன் உள்ள பிரதான கடமை, நம் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதாகும். மேலும் தொழிற்சங்க இயக்கம் நாட்டுப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் தங்கள் பிரச்சனைகளாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நாட்டின் உழைப்பாளர் பட்டாளத்தில் அவர்கள் பெரும் எண்ணிக்கை யிலானவர்களாகும். அவர்கள் மிகவும் கருணையற்ற முறையில் சூறையாடப் பட்டுவருகிறார்கள். அதன் விளைவாக நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அவலநிலை தொடர்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியிலே இன்றளவும் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ மற்றும் சீர்திருத்த சிந்தனைகள் நம்முன் உள்ள மற்றுமொரு மாபெரும் சவாலாகும். இது நம் பணியை மிகவும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. தொழிற்சங்கங்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் வலுப்படுத்த வேண்டியதும், உழைக்கும் மக்கள் மத்தியில் விஞ்ஞான சோசலிசப் புரிந்துணர்வைப் பரப்புவதும் மிகவும் அவசியமாகும்.இவற்றுடன், நம் நாட்டிற்கென்று பிரத்யேகமான சில பிரச்சனைகள் இருக்கின்றன.
இவற்றையும் நம் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களின் போது கையில் எடுப்பதுடன், இவற்றின்மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் அதன் தலையீடுகளையும் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.இந்த ஆண்டு முதல் உலகப்போர் ஆரம்பித்த நூறாவது ஆண்டாகும். உலகில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகம் மற்றொரு உலக யுத்தத்தை எதிர்கொண்டு அதன் விளைவாக எண்ணற்றவர்கள் பலியானதும், அவர்களின் உடைமைகளுக்கு அபரிமிதமான இழப்பு ஏற்பட்டபோதிலும், யுத்த முஸ்தீபு மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை. ஏகாதிபத்திய நாடுகள் நேரடியாக வும் மறைமுகமாகவும் பலநாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.சிரியா, வெனிசுலா, பாலஸ்தீனம், கியூபா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாமும் நம் எதிர்ப்புக் குரலினை எழுப்பிட வேண்டும்.
ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்களால் லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானம் பலியாகிஇருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். மே தினம் என்பது நம்முன் உள்ள பணிகளை நினைவுகூர்வதற்கான வாய்ப்பாகும். சிஐடியு-வின் நிறுவனத் தலைவரான தோழர் பி.டி. ரணதிவே, மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியங்களை நினைவுகூர்ந்து நமக்குக் கூறியிருப் பதாவது: மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியம் என்பது எப்போதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கே முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், தொழிலாளி வர்க்கம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் சபதம் ஏற்பதுடன் நம் பகுதி கோரிக்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதாகும்.
’’இந்த மாபெரும் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து, இந்தியாவில் இன்றைய தினம் தொழிலாளி வர்க்கம் சமூக விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துடன் பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் இணைத்திடக்கூடிய வகையில் சபதம் ஏற்போம். வர்க்கப் போராட்டத்தின் வீரர்கள் மற்றும் எண்ணற்ற தியாகிகளின் மாபெரும் தியாகம் ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி, போராட்டப் பதாகையை உயர்த்திப் பிடித்து, முன்னேறுவோம்.
வாழ்க மேதினம்.
தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக.
புரட்சி ஓங்குக.
தமிழில்: ச.வீரமணி