Showing posts with label Sitaram Yechury. Show all posts
Showing posts with label Sitaram Yechury. Show all posts

Tuesday, May 25, 2021

பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்திடவேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள் சீத்தாராம் யெச்சூரி

 


பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்திடவேண்டும்

என்றே மக்கள் விரும்புகிறார்கள்

சீத்தாராம் யெச்சூரி

[கோவிட் 19 மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இது தொடர்பாக தி இந்து நாளிதழ் செய்தியாளர் ஷோபனா கே.நாயருக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு:]

கேள்வி: கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் அனைத்து எதிர்க்கட்சியினரையும் இணைப்பதற்கான முயற்சிகள் குறித்துத் தங்களால் சொல்ல முடியுமா?

சீத்தாராம் யெச்சூரி: கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலை காலத்தின்போது 21 கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டோம். அதில் அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருந்தோம். நேரடியாக ரொக்க மாற்று, அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக உணவு அளித்தல் உட்பட பல கோரிக்கைகள் அதில் இடம் பெற்றன. ஆனாலும் அரசாங்கம் நாங்கள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ அனுப்பிய எந்தக் கடிதத்திற்கும் பதிலளிக்கவில்லை.

சென்ற ஆண்டு முதலாவது அலை வந்தபோது உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காததற்கான விலையை இப்போது நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே ஒரு பொதுத்துன்மை இருக்கிறது. இன்றைய பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகக் கலந்தாலோசனைகள் மேற்கொள்வது சாத்தியம் இல்லை. ஒவ்வொருவரையும் தொலைபேசிவாயிலாகவோ அல்லது இணையம் மூலமாக சந்திப்பதிற்குச் சற்றே கால அவகாசம் தேவைப்படுகிறது.  ஆனாலும், இந்தப் பிரச்சனை மீது அரசாங்கத்தைப் பதில்சொல்ல வைப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்த ஒரு மேடை அவசியம் தேவை என்றே நான் நினைக்கிறேன். மே 2 அன்று அரசாங்கம் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் எழுதியிருந்த கடிதத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் நாங்கள் கூட்டாக எழுதி அனுப்பியுள்ள கடைசி இரு கடிதத்திலும் அது கையெழுத்திடவில்லை. ஒன்றுபட்ட எதிர்க்கட்சி முன்னணி அமைப்பதில் அதன் பங்களிப்பு ஒழுங்கற்று இருந்துவருகிறது.

கேள்வி: இத்தகைய உங்களின் முயற்சிகளில் ஆம் ஆத்மி கட்சி எப்போதுமே ஓர் அங்கமாக இருந்ததில்லை. இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையத் தயங்குகின்றனவா அல்லது இதர எதிர்க்கட்சிகள் அக்கட்சிகளை இணைத்துக்கொள்ள தயங்குகின்றனவா?  

சீத்தாராம் யெச்சூரி: இதற்கு ஆம் ஆத்மி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும்தான் பதில் சொல்ல வேண்டும். மே 2 கடிதத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கையெழுத்திட்டது. பின்னர் உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வந்தன. அதன்பின்னர் வெளியிடப்பட்ட இரு கடிதங்களிலும் அது கையெழுத்திடவில்லை. இவ்வாறு கையெழுத்திடாமல் ஒதுங்கிக்கொண்டதற்கான காரணத்தை அக்கட்சிதான் சொல்ல வேண்டும். இதே போன்றதே ஆம் ஆத்மி கட்சியுமாகும். உண்மையில், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களும் இத்தகைய முயற்சிகளில் எப்போதும் தங்களை இணைத்துக் கொண்டதில்லை.  

கோவிட்-19 பேரழிவு நாட்டை சீர்குலைத்துக்கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டைப் பீடிப்பதற்கு முன்பே நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்திருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  இத்துடன் பெருந்தொற்றும் சேர்ந்துகொண்டபின்னர் மக்களின் வாழ்வாதாரங்களில் கடும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு, அரசாங்கம் மக்களுக்கு நேரடி ரொக்க மாற்று, இலவச உணவு போன்றவற்றைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இதனைச் செய்திருக்கின்றன.

கேள்வி:  எதிர்க்கட்சிகளை இணைத்திடும் இத்தகைய முயற்சிகள் கூட்டுக் கடிதங்கள் அனுப்புவதுடன் வரையறுத்துக்கொள்ளப்படுமா? அல்லது அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையக்கூடிய விதத்தில் இருந்திடுமா?

சீத்தாராம் யெச்சூரி: உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது. அதற்குள் கங்கை நதியில் அதிக அளவில் தண்ணீர் ஓடும். துரதிர்ஷ்டவசமாக கங்கையில் சடலங்கள் மிதந்து சென்றகொண்டிருக்கின்றன. இதற்கு மோடி அரசாங்கம் மற்றும் மாநில யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஆகியவற்றின் தவறான நிர்வாக நடைமுறைகளே காரணங்களாகும். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளிலிருந்தும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே பாஜகவிற்கும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் மிகவும் குறைவான விதத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாஜக-விற்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளையும் பாருங்கள். பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் சுவர்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: கேரளாவில் கொள்கை முடிவின்படி பினராயி விஜயன் தலைமையிலிருந்த முதல் அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைத்து அமைச்சர்களும் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவிற்கு விதிவிலக்கு கொடுத்திருக்க முடியாதா?

சீத்தாராம் யெச்சூரி: அமைச்சரவையில் யாரைச் சேர்ப்பது என்பதும், யாரை விடுவிப்பது என்பதும் கட்சியின் மாநிலக்குழு எடுக்கும் முடிவாகும். அது அங்கே ஒருமனதாக எடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றை சமாளித்ததில் கே.கே.ஷைலஜாவின் பங்களிப்பு கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுதும் மற்றும் உலகம் முழுதும விரிவான அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, பாராட்டுக்களைப் பெற்றது. சென்ற அமைச்சரவையில் அவர் முதல்முறையாகத்தான் அமைச்சராக இருந்தார் என்பதையும் நினைவுகூர்ந்திடுவோம். இரண்டு காரணங்களால் விதிவிலக்கு அளிக்க முடியவில்லை. முதலாவது, நீங்கள் ஷைலஜாவிற்கு விதிவிலக்கு அளிக்கிறீர்கள் என்றால், பின் மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் குறித்து என்ன சொல்வீர்கள்? அவரும் கேரளாவில் மாற்றுப் பொருளாதாரத் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக அமல்படுத்தியவர். அதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவருக்கு இணையாக திறம்படச் செயலாற்றியவர். இதேபோன்று ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். மாநிலங்களவையில் இருதடவைகள் அங்கம் வகித்தேன். மூன்றாவது தடவை எனக்கு அளிக்கவில்லை என்பதற்காக ஏகப்பட்ட கூச்சல். எங்கேயாவது ஒரு விதிவிலக்கை நீங்கள் ஏற்படுத்திவிட்டீர்கள் என்றால் பின் அதுவே விதியாக மாறிவிடும். பெண் தலைவர்களை மேலேகொண்டுவர வேண்டும் என்பதைப் பொறுத்தவரை முன்பிருந்த அமைச்சரவையில் இரு பெண்கள் இடம்பெற்றார்கள். இப்போது மூவர் இடம் பெற்றிருக்கிறார்கள்.  

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பினராயி விஜயன் அனைவரையும் உந்தித்தள்ளிவிட்டு மேலே வந்துவிடுவார் என்று ஒரு பயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே, உங்கள் விமர்சனங்கள் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இத்தகைய சிந்தனையோட்டங்கள் மேலேயிருந்து கட்டளையிடும் தலைவர்களைக்கொண்ட கட்சியில்தான் காணப்படும். பல அரசியல் கட்சிகளில் இது உண்மைதான். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வித்தியாசமான கட்சியாகும். அது செயல்படும் விதமும் முறையும் அலாதியானதாகும். ஒரு வீர்யம் மிகுந்த உள்கட்சி ஜனநாயகத்தைக் கொண்டுள்ள கட்சி எங்கள் கட்சியாகும்.  எங்களைப் பொறுத்தவரை, கூட்டுத்தலைமையின் முடிவு என்பதே எப்போதும் தனிநபர் முடிவைவிட மேலோங்கியிருக்கும். எவ்வளவோ தடவைகள் பொதுச் செயலாளரின் முடிவுகள் நிராகரிக்கப்பட்டு, கூட்டுத்தலைமையின் முடிவு செயல்படுத்தப் பட்டிருக்கின்றன. என் விஷயத்தில் மட்டுமல்ல, எனக்கு முன்பும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஜோதிபாசு பிரதமராக வேண்டும் என்பதற்கு பொதுச் செயலாளர் தோழர் சுர்ஜித்தும் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆயினும் கட்சியின் கூட்டுத்தலைமை தவறு என்று கூறி அதனை நிராகரித்தது. எங்கள் கட்சியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் இத்தகைய கேள்விகளை எழுப்புவார்கள்.

கேள்வி: மேற்கு வங்கத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் கட்சியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

சீத்தாராம் யெச்சூரி: மேற்கு வங்க வாக்காளர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய உணர்வு, அங்கே பாஜக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும். ஏனெனில் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரமே வங்கத்தின் மாண்புகளுக்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானவைகளாக இருந்தது. வங்கத்தில் வாக்காளர்கள் மத்தியில் பிரதானமாக முன்வந்த கேள்வி, யாரால் பாஜக-வைத் தோற்கடிக்க முடியும் என்பதேயாகும். இத்தகைய உணர்வு வங்கத்தில் மட்டும் இல்லை. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்த மக்கள் மத்தியிலும் இந்த உணர்வு மேலோங்கியிருந்தது. நிர்வாகத்திலிருந்து பாஜக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்கிற உணர்வு அவர்கள் மத்தியிலும் இருந்தது. கேரளாவில் பாஜக-விற்கு முன்பிருந்த ஓரிடம் கூட இப்போது அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. வங்கத்தில் பாஜக-விற்கு எதிரான வாக்கு என்பது திரிணாமுலுக்கு ஆதரவான வாக்கு என்பதைவிட கூடுதலாகச் செயல்பட்டிருக்கிறது.  

பிரிட்டிஷாரிடமிருந்து நாம் பெற்றுள்ள பாரம்பர்யமான தேர்தல் அமைப்புமுறை என்பது இரு கட்சிகளுக்கான போட்டி என்பதேயாகும். இங்கே ஒரு மூன்றாவது கட்சி போட்டியிட்டால்  அது நசுக்கப்பட்டுவிடும்.

ஓர் உண்மையான அரசியல் யுத்தம் இப்போதுதான் தொடங்கி யிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய முகங்கள் பலவற்றைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது. கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. இப்போது இவர்கள்தான் கட்சியின் எதிர்காலம்.

கேள்வி: ஃபர்புரா ஷேக் மதகுரு அப்பாஸ் சித்திக் தலைமையிலான இந்தியன் மதச்சார்பற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்தது தவறில்லையா? கட்சி இதுகுறித்து மறுஆய்வு செய்துகொண்டிருக்கிறதா?

சீத்தாராம் யெச்சூரி: தேர்தல் முடிவுகள் குறித்து வங்கத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் மறுஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.  வங்கத்தில் எங்கள் குறிக்கோள் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும் என்பதாகும். இந்தியன் மதச்சார்பற்ற முன்னணியில் அங்கம் வகித்திட்ட தலைவர்களில் சிலர் கடந்த காலம் எப்படியிருந்தபோதிலும் அதன் தலைமையில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்கள் இடம்பெற்றிருந்தார்கள். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவோ அதன்படி நாங்கள் சென்றுகொண்டிருப்போம்.

(நன்றி: தி இந்து (ஆங்கிலம்), 25.5.21)

தமிழில்: ச.வீரமணி

Thursday, May 21, 2020

மத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்:சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம் யெச்சூரி
20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு என்று பிரதமர் நரேந்திரமோடி கம்பீரமாக அறிவித்து, அதன் விவரங்கள் மத்திய நிதி அமைச்சரால் ஐந்து தவணைகளில் அறிவிக்கப்பட்டது. இவர்கள் அறிவித்துள்ள இந்த நிதித் தொகுப்பின்மூலம், மோடியும் பாஜக மத்திய அரசாங்கமும், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றையும் அதன்காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சமூக முடக்கத்தையும் தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும், அரக்கத்தனமான முறையில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் மேலும் வெறித்தனமாக அமல்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றை முறியடிக்கிறோம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சமூக முடக்கக் காலம், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையினரால் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக, இந்துத்துவா மதவெறித் தீயை மேலும் தீவிரமாக விசிறிவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, இந்தக் காலம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அமைதியானமுறையில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்தியவர்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்களைத் தாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அரக்கத்தனமான சட்டப்பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒருமுறை, இவர்கள் கைது செய்யப்படுவதில் மத விவரக்குறிப்புகள் விஷத்தனமான முறையில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.
மூன்றாவதாக, ஜனநாயக உரிமைகள், சிவில் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்காகப் போராடுகிறவர்கள் மற்றும் தங்களுக்கு எதிராக மாற்றுக்கருத்துக்களைக் கூறுகிறவர்கள் அனைவரையும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகப் பிரிவு, சட்டவிரோத தடைச் சட்டம் (UAPA), தேசியப் புலனாய்வுச் சட்டம் (NIA) ஆகிய அரக்கத்தனமான சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராகவும், அதன் கொள்கைகளுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பதிவு செய்கிற ஊடகவியலாளர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள், பலிவாங்கப்படுகிறார்கள் மற்றும் குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குகளில் பதிவு செய்யப்படுகிறார்கள். இவ்வாறு ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்களுடன் சேர்த்து, உழைக்கும் மக்கள், குறிப்பாக தொழிலாளர் வர்க்கம், சட்டரீதியாகப் பெற்றிருந்த உரிமைகள் மீதும் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். சமூக முடக்கக் காலத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உண்மையில், பாஜக மாநில அரசாங்கங்களில் சில, மூன்று ஆண்டு காலத்திற்கு தொழிலாளர்நலச் சட்டங்கள் அனைத்தையும் ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கின்றன. இவ்வாறு, கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றை எதிர்க்கிறோம் என்ற போர்வையின்கீழ் உழைக்கும் மக்கள் கடுமையாகப் போராடி பெற்ற உரிமைகளின் மீது கூச்சநாச்சமின்றி தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது.
நான்காவதாக, சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கைகளுக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் உரிமைகளை முற்றிலுமாக மறுதலித்துக்கொண்டிருக்கிறது, அதிகாரங்கள் அனைத்தையும் தன்னகத்தே குவித்துக்கொண்டு தன்னை வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.      இவ்வாறு ஒரு சர்வாதிகார ஒற்றையாட்சி முறையை நிறுவக்கூடிய நடவடிக்கைகளில் வெறித்தனமாக இறங்கி, அனைத்து முடிவுகளும் மத்திய அரசாங்கத்தாலும், பிரதமராலும் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றால் மாநிலங்களின் சுமைகள் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன.
நாடும், நாட்டு மக்களும் குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திடவும் அதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் போராடிக் கொண்டிருக்கிற அதே சமயத்தில், மோடியின் தலைமையின்கீழ் இயங்கிடும் ஆர்எஸ்எஸ்/பாஜக மத்திய அரசாங்கம்  அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றன.
சுய சார்பு அல்ல, மாறாக அடிபணிதல்
இந்தியாவின் சுய சார்பை மேம்படுத்தப்போகிறோம் என்ற பெயரில், மோடியால் பொருளாதார ஊக்குவிப்புத் தொகுப்பு முன்வைக்கப்பட்டிருக்கிறது. மோடிக்கு, எதை அறிவித்தாலும் அது தன்னுடைய சொந்தப் பங்களிப்பு என்பதுபோல் அறிவிக்கும் பழக்கத்தின் அடிப்படையில், இப்போது சுயசார்பு என்பதையும் ஏதோ புதிதான ஒன்று என்பது போலவும் அதனைத் தான் முன்னெடுத்துச்செல்லப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். பொருளாதாரம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவில் சுய சார்பு என்கிற கருத்தாக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த ஓர் அம்சமாக இருந்து வந்திருக்கிறது. தாதாபாய் நௌரோஜி மற்றும் இந்தியாவின் செல்வத்தை பிரிட்டிஷார் சூறையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே, சுதந்திர இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாக சுய-சார்பு இருந்து வந்தது. சுய சார்பு நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்றாக விளங்குகிறது.  
ஆனாலும், மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு, இந்தியாவின் சுயசார்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அதனை மேலும் அந்நிய மற்றும் உள்நாட்டிலுள்ள கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு அடிபணியவைத்திடும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. இந்த முன்மொழிவுகள் நேரடியாகவே அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுத்துத் தந்திருக்கிறது. மேலும் இந்த நடைமுறையில், நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக மோடி அரசாங்கம் அமல்படுத்திவரும் கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை அருவருப்பான அளவிற்கு வலுப்படுத்தும் விதத்தில் வாய்ப்பு வாசல்கள் மேலும் அகலத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த முன்மொழிவுகள் அனைத்துமே நாட்டின் சொத்துக்களை மிகப்பெரிய அளவில் சூறையாடுவதற்கானவைகளே தவிர வேறல்ல. நம் நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளும் 74 சதவீதம் வரையிலும் இப்போது அந்நிய நேரடி முதலீட்டுக்கு அகலத்திறந்து விடப்பட்டிருக்கிறது. இவற்றில் ராணுவ உற்பத்தித் தளவாடங்களும், அணு எரிசக்தித்துறையும் அடக்கம். அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட இருக்கின்றன. இவை நிச்சயமாக மாபெரும் அளவில் ஊழலுக்கு வழிவகுத்திடும். இவ்வாறு கார்ப்பரேட் நலன்களுக்கு அடிபணியும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிதித்தொகுப்பைத்தான் மோடி-கோவிட்-குணப்படுத்தும் முறை! (Modi-Covid-cure!) எனச் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிதி ஊக்குவிப்புத் தொகுப்பின் விவரங்கள்
கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனையொட்டி மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற பின்னணியிலும் இந்த நிதித்தொகுப்பு மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுகாதார வசதிகள்: கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பிரதானமாகச் செய்யவேண்டியது என்னவெனில், நம் சுகாதார அமைப்பு முறைகளையும் அதன் கீழ் இயங்கும் துறைகளையும் வலுப்படுத்துவதேயாகும். சமூக முடக்கம், தொற்றைக் குணமாக்கிடாது. தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும் நம்மை வலுப்படுத்தவதற்குத் தேவையான தயாரிப்புகளுக்கு போதிய அளவுக்கு அவகாசம் அளிப்பதற்கு மட்டுமே அது பயன்படும்.   இதற்கு நம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இத்தொற்றிலிருந்து முதலில் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகளை முறையாக அளித்திட வேண்டும். ஆயினும், சமூக முடக்கம் அறிவித்து 50 நாட்கள் கழிந்தபின்பும், இதுநாள்வரையிலும் அவர்களுக்கு இவ்வாறு போதிய அளவுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
மருத்துவமனைகள்: கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது என்பதன் பொருள், அதற்குத் தேவையான அளவிற்கு நம் மருத்துவமனைகளில் இத்தொற்றுக்கு சிகிச்சை செய்வதற்கான அளவிற்குக் கணிசமான இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதாகும். இன்றையதினம் இந்தியாவில் ஆயிரம் மக்களுக்கு 0.8 மருத்துவர்கள் என்ற அளவிலும், 0.7 மருத்துவனைப் படுக்கைகள் என்ற அளவிலும்தான் நிலைமைகள் இருக்கின்றன. இது மிகவும் பரிதாபமான நிலையாகும். சமூக முடக்கக் காலத்தை, நம் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனாலும், இந்தத் திசைவழியில் மோடி அரசாங்கம் எதுவுமே செய்யாமல் இருக்கிறது. உலகில் பல நாடுகள், தங்கள் நாடுகளிலிருந்த தனியார் மருத்துவமனைகளை, கொரானா வைரஸ் தொற்று சவாலை சமாளிப்பதற்காக, பொது உபயோகத்திற்குப் பயன்படுத்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அதுபோன்று எவ்விதக் கட்டளையையும் மோடி அரசாங்கம் பிறப்பித்திடவில்லை. கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்களைப் பாதுகாத்திட மிகவும் அவசியமாகத் தேவைப்படும் வென்டிலேடர்கள் போதுமான அளவிற்கு நம் நாட்டில் இல்லை, கடும் பற்றாக்குறை நீடிக்கிறது.
சோதனைகள்: சமூக முடக்கக் காலத்தில், மக்களில் எவருக்கேனும் ‘பாசிடிவ்’ எனப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்திட, மிகப்பெரிய அளவில், பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுவும் நடந்திடவில்லை. இன்றையதினம், இந்தியா, உலகில் மிகவும் குறைவான அளவில் சோதனை செய்து பார்க்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. நம் நாட்டில் பத்து லட்சம் மக்களில் 1700 பேர் என்ற அளவில்தான் சோதனை செய்து பார்க்கப் பட்டிருக்கிறார்கள். பல நாடுகள் பத்து லட்சம் பேர்களில் ஒரு லட்சம் பேர்களை சோதனை செய்து பார்த்திருக்கின்றன. ஸ்பெயின், பத்து லட்சம் பேர்களில் 50 ஆயிரம் பேர்களுக்கும் மேலாக சோதனை செய்து பார்த்திருக்கிறது. சீனாவில், கொரானா வைரஸ் முதன்முதன் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் பகுதியில் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதை எதிர்கொள்வதற்காக, இப்போது, மீண்டும் அனைவரும் சோதனை செய்து பார்க்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் எங்கே குரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கிறது என்பதையும், எங்கே அது மிக வேகமாகப் பரவுகிறது என்பதையும் கண்டறிந்து அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்தாக அவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கு, சோதனைகள் செய்து பார்க்கப்பட வேண்டியது அவசியம். இதுவும் இங்கே நடைபெறாதது, மிகவும் வருந்தத்தக்கதாகும். சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்தியாவில் உள்ள 91 மாவட்டங்களில் 191 பேர் ‘பாசிடிவ்’ எனக் கண்டறிப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். இன்றையதினம் 550 மாவட்டங்களில் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மே 8ஆம் தேதிக்குப் பின்னர், சராசரியாக 3600 பேர், ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டு, தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக, குரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவிதத்தில் நம் திறன்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளாமல், மோடி அரசாங்கத்தால் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு முறை கைவிடப்பட்டிருக்கிறது
எதார்த்த நிலை இப்படி இருந்தபோதிலும், சுகாதார இந்தியாவை உருவாக்குவதற்கு மிகவும் அடிப்படைத் தேவையாக விளங்கும்,  அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு முறையை உருவாக்குவதற்கு, இப்போது மோடி அரசாங்கம் அறிவித்திருக்கிற நிதித்தொகுப்பு அநேகமாக எதுவுமே செய்திடவில்லை. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிகச்சிறந்த சுகாதாரப் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று பேசினார்களேயொழிய, அவற்றை உருவாக்குவதற்காக ஒரு காசு கூட ஒதுக்கீடு செய்திடவில்லை. இன்றையதினம் மத்திய அரசு, சுகாதாரத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவு செய்கிறது. இப்போது வெளியிடப்பட்டிருக்கிற நிதித்தொகுப்பு மூலம் இதனைக் குறைந்தபட்சம் 3 சதவீதமாகவாவது உயர்த்தி இருக்க வேண்டும். ஆனாலும், மோடி அரசாங்கம், இந்தியாவின் ஏழை மக்களுக்கு உதவி, நிவாரணம் அளித்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதைவிட, அதனுடைய சொந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே சுறுசுறுப்பாக இருக்கிறது.
மக்களின் நிலைமைகள்: இந்த நிதித்தொகுப்பு வந்திருக்கும் பின்னணியின் இதர அம்சம் மக்களின் நிலைமைகள் ஆகும். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இரண்டாகப் பிரிந்ததற்குப்பின்னர், இந்த அளவிற்கு மிகப் பெரிய அளவில் மக்கள், தங்கள் சொந்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்காக, பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து செல்வது என்பதைப் பார்த்திருக்கவில்லை.  இதில் பலர் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள். இன்றும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.  ஐம்பது நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்கள் பசி-பட்டினியுடன், மிகவும் சோர்வடைந்து, பல இடங்களில் விபத்துக்களுக்கு ஆளாகி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நம் சொந்தச் சகோதர சகோதரிகளுக்கு, போக்குவரத்து வசதிகளை இலவசமாகத் தருவதற்கு, மோடி அரசாங்கம் மறுத்திருக்கிறது. இப்போது இவர்கள் வெளியிட்டுள்ள நிதித்தொகுப்பும், இன்றையதினம் இந்தியச் சாலைகள், முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதகுலத்தின் துயரார்ந்த அவலக் காட்சிகளைத் துடைத்தெறிய எதுவும் செய்திடவில்லை. அதேபோல், மக்களின் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் பசிக்கொடுமையைப் போக்குவதற்கும் எதையும் அறிவித்திடவில்லை.
வேலையின்மைக் கொடுமை: இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE-Centre for Monitoring Indian Economy) சமூக முடக்கக் காலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 14 கோடியாக அதிகரித்திருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. நகரங்களில் பத்து தொழிலாளர்களில் எட்டு பேர் தாங்கள் பார்த்து வந்த வேலைகளை இழந்துவிட்டதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருக்கிறது.  நாட் கூலிப் பெற்று வந்தவர்கள், சிறிய பெட்டிக்கடை வர்த்தகர்கள், தலையில் சுமந்து வர்த்தகம் செய்தவர்கள் கோடானுகோடி பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றனர். திறன்படைத்த தொழிலாளர்கள் (skilled workers), ஊடகவியலாளர்கள் பலரும் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள் அல்லது ஊதிய வெட்டை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிதித்தொகுப்பு இவர்களின் துயர் துடைத்திட போதுமான அளவில் எதுவும் செய்திடவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள்
இந்தப் பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வருமானவரி செலுத்த வேண்டிய நிலையில் இல்லாத, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 7500 ரூபாய் ‘நேரடி ரொக்க மாற்று’ (Direct Cash transfer) செய்திட வேண்டும் என்று கோருகிறது. இது, அவர்கள் உயிருடன் நீடித்திருப்பதற்கு அவர்கள் கைகளில் கொஞ்சம் பணம் இருப்பதற்கு உதவிடும். மேலும், பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு பரவிவருவதன் காரணமாக, தேவைப்படும் அனைவருக்கும் உணவு தான்யங்கள் இலவசமாக அளிக்கப்பட வேண்டியது அவசியத் தேவையாகும். ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் 10 கிலோ உணவு தான்யங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் உள்ள 7 கோடியே 70 லட்சம் டன்கள் உணவு தான்யங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் இல்லங்களுக்கு போக்குவரத்து வசதிகளை இலவசமாக செய்துகொடுத்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு
நிதி ஊக்குவிப்பு என்பதன் வரையறையின்படி, ஆட்சி புரிந்திடும் அரசாங்கம் நிதியாண்டிற்காக பட்ஜெட் செலவினத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக செலவிடுவது என்பது பொருளாகும். அறிவிக்கப்பட்டிருக்கிற தொகுப்பில் பெரும்பாலானவை ஏற்கனவே அறிவித்த திட்டங்களேயாகும். அவை மறுபடியும் மேலும் ஒரு கட்டுப்போட்டு அளிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். இதில் கொடுக்கப்பட்டிருக்கிற அழுத்தம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன்கள் அளிக்கப்படும் என்பதைத் தவிர அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் நேரடிச் செலவினம் என எதுவும் கிடையாது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இவை அனைத்தும் நாட்டின் நிதிக் கொள்கையின் அடிப்படை அம்சங்களாகும். இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட வேண்டியவைகளாகும்.
இவர்கள் அறிவித்திருக்கிற நிதித் தொகுப்பில் உண்மையில் கூடுதலான செலவினம் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அது 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வருகிறது. அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவு. பல்வேறு பொருளாதார மேதைகள் பலவிதங்களில் கணக்கிட்டு, அரசாங்கத்தின் உண்மையான செலவினம் மற்றும் அது அறிவித்துள்ள அனைத்தும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீதத்திற்கும் 1.5 சதவீதத்திற்கும் இடையேதான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இந்த ஊக்குவிப்புத் தொகுப்பு, இன்றைய நிலைமைகளில் எந்த ஊக்குவிப்பையும் அளிக்கப் போவதில்லை.
இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பட்ஜெட் செலவினம்,   30 லட்சத்து, 42ஆயிரத்து, 230 கோடி ரூபாய்களாகும். ஓர் ஊக்குவிப்பு என்பது, இதைவிடக் கூடுதல் தொகை என்று பொருளாகும். இவர்கள் பட்ஜெட்டில் அறிவித்த செலவினங்களையே செய்திருக்கிறார்களா, இல்லையா என்று எவருக்கும் தெரியாது. அரசாங்கத்தின் வருவாய்கள், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெளிவாகும். சமூக முடக்கக் காலத்தில் அது மேலும் மோசமாக மாறியிருக்கிறது. எனவே, இவர்கள் அறிவித்துள்ள கூடுதல் செலவினமும் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படும் என்பதும் மிகவும் நிச்சயமற்ற தன்மையேயாகும்.   கண்டிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், அரசாங்கம், அறிவித்துள்ள ஊக்குவிப்பு உண்மையில் மேற்கொள்ளப்படுகிறதா, இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு, அது தன்னுடைய வருவாய்கள் மற்றும் செலவினங்களை காட்டும் பட்ஜெட் அறிக்கையை அறிவித்திட வேண்டும்.
முழுவீச்சில் தனியார்மயம் மற்றும் தாராளமயம்
நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப்போல, அனைத்துத் துறைகளும் அந்நிய நேரடி முதலீட்டிற்கும், உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கும், இப்போது அகலத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. இந்தத் தனியார்மயம், நாட்டின் சொத்துக்களை அரசாங்கத்தின் தினச் செலவுகளுக்காக விற்பனை செய்வது போன்றதாகும். இது, ஓர் விவசாயி தன்னுடைய தினசரி செலவுகளுக்காக, தன்னுடைய நிலத்தை விற்பது போன்றதாகும். இச்செயல் பொருளாதார அறிவுடனும் செய்யப்படவில்லை, சாமானியப் பொது அறிவுடனும் கூட செய்யப்படவில்லை. எனினும், இது இரக்கமற்ற கொள்ளை லாப வேட்டைக்கான பாதையாகும். 
இவ்வாறு நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதற்கு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவதற்காகத்தான், எட்டு மணி நேர வேலை மற்றும் தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற முக்கியமான உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது, வெளிப்படையான சூறையாடல் மற்றும் சர்வாதிகாரத் தாக்குதல்களின் ஒரு கூட்டுக் கலவையாகும்.
வேளாண்மை: பொது முதலீடுகளின் மூலமாக விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மீண்டும், விவசாயிகளுக்குக் கடன் வசதிகள் செய்துதரப்படும் என்று கூறியிருக்கிறார்கள். விவசாயிகள், ஏற்கனவே பெற்ற கடன் சுமைகளிலிருந்து மீளமுடியாமல் தற்கொலைகளைச் செய்துகொண்டிருக்கக்கூடிய தருணத்தில், புதிய கடன்களை அவர்கள் பெற முன்வருவார்களா என்பது அநேகமாக சந்தேகம்தான்.
இந்தத் தருணத்தில் என்னசெய்ய வேண்டும்? அறுவடைக் காலம் வந்திருக்கிறது. அறுவடை செய்த பயிர்கள் அரசாங்கத்தால் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படாமல் இருக்கின்றன. இது குறித்தெல்லாம் ஒருவார்த்தை கூட இந்தத் தொகுப்பில் காணப்படவில்லை. அடுத்த விவசாயப் பருவமும் ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது. விதைகள் மற்றும் இடுபொருட்கள் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு இவற்றையெல்லாம் அளிப்பதற்கு எந்த நடவடிக்கையும் இந்தத் தொகுப்பில் இடம்பெறவில்லை.    
 இந்தத் தொகுப்பில்  குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள், சந்தைகள் குறித்தெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இருந்துவரும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தைக் கிழித்தெறிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் உணவு தான்யங்கள் மாநிலங்களுக்கிடையே முறைப்படுத்தப்படாத விலைகளின் அடிப்படையில் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. இது, எதிர்காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திடும். 
மாநிலங்களின் மீதான தாக்குதல்கள்
கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடித்திடும் நடவடிக்கைகளில் மாநில அரசாங்கங்கள் முன்னணியில் நிற்கின்றன. அவற்றுக்கு உரிய வாய்ப்பு வசதிகளைச் செய்து தரவில்லை என்பது மட்டுமல்லாமல், இந்த நிதித்தொகுப்பானது அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலைவைத் தொகைகள் அளிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தைக்கூட அளித்திடவில்லை. மாநில அரசாங்கங்கள் தற்போது தங்களுடைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 5 சதவீதம் வரை கடன்பெறும் வரம்பை (borrowings) உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது. எனினும், இவ்வாறு வரம்பை உயர்த்தியிருப்பதன் பொருள் அநேகமாக எதுவும் கிடையாது. ஏனெனில், இவ்வாறு உயர்த்தியிருக்கும் கடன் வரம்பு, வணிக அடிப்படையில்தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதிக வட்டி விகிதத்தில் மாநிலங்களைத் தள்ளி இருப்பது அவற்றுக்கு பெரிய அளவில் கடன் சுமைகளை ஏற்படுத்திடும். இந்திய ரிசர்வ் வங்கி மாநில அரசாங்கங்களால் வெளியிடப்படும் பத்திரங்களை ‘பிரகடனம் செய்யப்படும் ரெபோ விகிதத்தில்’ (declared repo rate) வாங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தத் தொகுப்பு இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. எல்லாவற்றையும்விட மோசமான விஷயம் என்னவென்றால், மத்திய அரசாங்கம் தற்போது பேரிடர் நிவாரண நிதியத்தின்கீழ்  சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய மாற்றல்களைக் (statutorily mandated transfer) கூட, மாநிலங்களுக்கு ஓர் ஊக்குவிப்புத் தொகுப்பாக அளித்ததாக, அல்லது, மத்திய அரசு, மாநில அரசுகள்மீது காட்டிய தாராளம் என்பதுபோல் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. மத்திய அரசாங்கம், பிஎம்கேர்ஸ் (PM CARES) என்னும் பெயரில் ஏற்படுத்திய தனியார் அறக்கட்டளையின்கீழ்  வசூலித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களிலிருந்து, மாநிலங்களுக்கு குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்காக நிதி உதவிகளைச் செய்திட வேண்டும்.
இந்த நிதித்தொகுப்பின் பல்வேறு அம்சங்கள் ஆய்வுசெய்து பார்க்கப்படும் போது, இவற்றில் பல நீண்டகால நடவடிக்கைகளாக இருப்பதையும், நாட்டின் பொருளாதாரத்திற்கோ, அல்லது, அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ, உடனடி ஊக்குவிப்பு அளிக்கக்கூடிய விதத்தில் எதுவும் இல்லாமல் இருப்பதையுமே காட்டுகின்றன. நிதித் தொகுப்பின் இதர அம்சங்கள் குறித்து தனியே ஆய்வு செய்யப்படும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாதார செயல்திட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நடப்பு நிலைமையில் பின்பற்றப்பட வேண்டிய, பொருளாதார செயல்திட்டம் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டு, அதில் தன்னுடைய பரிந்துரைகளையும் தெரிவித்திருக்கிறது. அதனைக் குடியரசத் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அதில் நாம், அரசாங்கத்தால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதாரத் திட்டம் என்ன என்பதை முன்வைத்திருக்கிறோம். பொருளாதார நெருக்கடியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாங்கொணா வேதனைகளும் தீர்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என்ன என்று அதில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த மூன்று நடவடிக்கைகளையும்  இப்போது எடுத்திட வேண்டும்.
மத்திய அரசாங்கம் நமது பொருளாதாரத்தையும், மக்கள் நலனையும் சரி செய்ய நாம் அளித்துள்ள இந்த முன்மொழிவுகளை உடனடியாக உரிய அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 
இந்த நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் உடனடியாக மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நிர்பந்தங்களையும் அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி கேட்டுக் கொள்கிறது.” 
இந்த செயல்திட்டம், இந்தியப் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள அடிப்படை பிரச்சனை என்ன என்பதை சரியாக அடையாளம் காட்டியது. இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே, குரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே, பொருளாதார மந்த நிலைக்குள் (recession ) நுழைந்துவிட்டது. இதன் காரணமாக மக்களின் தேவைகள் அனைத்து அளவிலும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி மிகவும் கூர்மையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, பொருளாதாரத்தில் கிராக்கி இன்மை (lack of demand) ஏற்பட்டு, ஏராளமான தொழில் பிரிவுகள் மூடப்படுவதற்கும், பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படுவதற்கும் இட்டுச்சென்றன. இந்த நிலைமை தேசிய சமூக முடக்கக் காலத்தில் மேலும் மோசமாகியது. ஆகையால், மக்களின் கைகளில் வாங்கும் சக்தியை அதிகரிக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரத்தை புதுப்பித்திட வேண்டிய முக்கிய பிரச்சனையை உடனடியான, குறுகிய கால மற்றும் நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பொது முதலீடுகள்: இதனை கடன்கள் அளிப்பதன் மூலமாகச் செய்திடாமல், அரசாங்கம் நேரடியாக செலவு செய்வதன் மூலமாகவே மேற்கொள்ள முடியும். நம் நாட்டிற்கு அதிக அளவில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட மிகப்பெரிய அளவில் பொது முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றை தனியார் மூலதனத்திடம் ஒப்படைப்பது என்பது எப்போதும் வெற்றி பெற முடியாது. ஏனெனில் அவர்கள் இவற்றுக்காக முதலீடு செய்வதிலிருந்து லாபத்தை எடுப்பதற்கு வெகு காலமாகும் என்பதால், அவர்கள் இதற்காக கடன்களை எழுப்புவார்கள். எனவே, உலகில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் அனைத்துமே – அமெரிக்காவிலிருந்து மக்கள் சீனக் குடியரசு  வரையிலும் – அரசாங்கங்கள்தான் பொது முதலீடுகள் மூலமாக உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதில் பிரதான பங்கினை ஆற்றி இருக்கின்றன. இன்றைய நிலைமைகளில் எவ்விதமான நிதித் தொகுப்பாக இருந்தாலும் இத்தகைய அணுகுமுறைதான் இருந்திட வேண்டும்.
இத்தகைய பொது முதலீடுகள் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட,  கோடானுகோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இட்டுச் செல்லும். தொழிலாளர்கள் தாங்கள் ஈட்டிய ஊதியங்களைச் செலவு செய்யத் தொடங்கிவிட்டார்களானால், உள்நாட்டுத் தேவை உயரத் தொடங்கிடும், பின்னர் அதன் காரணமாக, மூடிய தொழிற்சாலைகளும் மற்றும் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளும் மீளவும் திறக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும்.
இவற்றைச் செய்வதற்குப் பதிலாக இந்த அரசாங்கத்தின் நிதித்தொகுப்பு, கார்ப்பரேட்டுகளுக்கும் மற்றும் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளுக்கும் முதலீடு செய்வதற்காகப் பெரிய அளவில் மூலதனத்தை அளிப்பதன் மீது கவனம் செலுத்தி இருக்கிறது. லாபம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே எவரும் முதலீடு செய்திட முன்வருவார்கள். பொருளாதாரத்தில் கிராக்கி (demand) இல்லை என்கிறபோது, இத்தகைய முதலீடுகளின் மூலம் உற்பத்தியாகும் பொருள்கள் உள்நாட்டில் விற்க முடியாது. அவற்றை சர்வதேச அளவிலும் விற்க முடியாது. ஏனெனில உலகப் பொருளாதார நிலைமையும் மந்தமாகவே இருக்கிறது.
எனவே லாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகளே இருக்க முடியாது.  எவ்வளவுதான் அரசாங்கம் நிதியைக் கொட்டிக்கொடுத்தாலும், எவ்வளவுதான் அத்தகைய நிதிச் செலவினத்தைக் குறைத்தாலும், பொருளாதாரத்தில் கிராக்கி இல்லையேல் அவற்றால் வேலை செய்ய முடியாது.
எனவே, மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பால் நம் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்ட முடியாது. எனினும் இந்த நிதித்தொகுப்பின் உண்மையான நோக்கம், நாம் முன்பே கூறியதுபோல், முன்பு அறிவித்த திட்டங்களுக்கான மறுதொகுப்பேயாகும். மேலும், கொரானா வைரஸ் தொற்றாலும், சமூக முடக்கத்தாலும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்களை அளித்து அவர்களைச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கிடும் அதே சமயத்தில், நாட்டின் சொத்துக்களை எந்த அளவிற்கு வேகமாகச் சூறையாட முடியுமோ அந்த அளவிற்குச் சூறையாட வேண்டும் என்பதுமேயாகும்.
இவர்களின் இந்தப் பாதை, இந்தியாவின் பொருளாதார சுயசார்பின் நலன்களுக்கு எதிரானதாகும். இந்தப் பாதை, இந்திய மக்களின் நலன்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் வளத்திற்கு எதிரானவைகளாகும். இந்தப் பாதை கூட்டுக் களவாணி முதலாளித்துவத்திற்கு வசதி செய்து கொடுக்கும் பாதையாகும். அதன் மூலம் ஆளும் கட்சிக்கும் தெளிவாகத் தெரியக்கூடிய விதத்தில் ஆதாயங்கள் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை. இந்த மக்கள் விரோதப் பாதையை ஏற்க முடியாது.
இப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக முடக்கக் காலத்தின்கீழ், குரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இப்போதைய நிலைமையில், நாட்டின் கோடானுகோடி மக்களின் உடனடித் தேவைகளுக்கு உடனடியாக உதவிடும் விதத்தில், இந்த அரசாங்கம் இந்தப் பாதையில் செல்வதை மாற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மக்களின் நிர்ப்பந்தங்களை வலுப்படுத்திட வேண்டும்.            
(தமிழில்:ச.வீரமணி)   



Tuesday, May 12, 2020



புலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்
வருமானவரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும்
ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாகச் செய்திட வேண்டும்.
சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்
புதுதில்லி, மே 12-
 புலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், வருமானவரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும், ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாகச் செய்திட வேண்டும். இம்மூன்று கோரிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முகநூல் காணொளிக்காட்சிமூலம் நடைபெற்றது. அப்போது சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
இன்று இரவு நமது பிரதமர் மீண்டும் தொலைக்காட்சியில் எட்டு மணிக்குப் பேசப் போவதாக கூக் கூறியிருக்கிறார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார்? நமக்குத் தெரியாது. அந்த சமயத்தில் அவர் சொன்ன பிறகுதான் தெரியும். நேற்று காணொளிக்காட்சி நடைபெற்ற முதல்வர்கள் கூட்டத்தில் பல பரிந்துரைகள் வந்தன. பல மாநிலங்களில் பல முதலமைச்சர்கள் தங்களுக்கு நிதி தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதேபோன்று பல முதலமைச்சர்கள், சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, தங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை, மாநில அரசுகளே சமாளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எந்த உதவியும் மத்திய அரசு இதற்காகச் செய்திடவில்லை. இவ்வாறு நிலைமைகள் இருக்கக்கூடிய நிலையில்தான் இன்றிரவு பிரதமர் தொலைக்காட்சியில் பேசப்போகிறார். அவர் என்ன சொல்லப் போகிறார், எவருக்கும் தெரியாது. இதுவரையிலும் தெரியாது.
சமூக முடக்கம் தொடங்கி இன்றுடன் 49 நாட்கள் கடந்துவிட்டன. சமூக முடக்கம் துவங்கிய சமயத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 566. இப்போது 49 நாட்களுக்குப்பின் அது 70756, இன்றைய தினம் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,293.
சமூக முடக்கத்தைப் பயன்படுத்தி நாம் என்ன சாதித்திருக்க முடியும்?
உண்மையிலேயே இதனைப் பயன்படுத்திக்கொண்டு மேலும் சிறந்த முறையில் அனைத்து மக்களையும் சோதனை செய்திருந்தால், இதனை மேலும் மிகச்சிறப்பாகக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். பல விஷயங்களை இது வரை செய்யவில்லை. குறைந்தபட்சம் இப்போதாவது செய்ய வேண்டும். செய்ய முடியும். செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
நேற்றையதினம் முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, இந்தியா இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை உலகம் பாராட்டியதாகக் குறிப்பிட்டார். அவர்கள் குறிப்பிட்டது கேரளாவைப் பற்றி. கேரளா மாடல், உலகளாவியமுறையில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 35 சர்வதேச  புகழ்பெற்ற செய்தியேடுகள் தங்கள் முதல் பக்கத்திலேயே, எப்படிக் கேரளா மிகவும் வலுவான முறையில் கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி இருக்கிறது என்று  பாராட்டியிருக்கின்றன.
கேரளா இதனைச் செய்யும்போது, மற்ற மாநிலங்கள் ஏன் செய்ய முடியாது? இதற்கு உங்களுக்குச் சரியான தரவுகள் தேவை. பின்னர் அதன்மீது அறிவியல்பூர்வமான அணுகுமுறை தேவை. அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இதுநாள்வரையிலும் எதுவும் செய்யப்படவில்லை.
நிலைமைகள் இவ்வாறிருக்கும் அதே சமயத்தில் இப்போது உங்களுடன் நான் பகரவிருக்கும் மிக முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால், ஆட்சியாளர்களுக்கு இதைவிட வேறொரு முக்கியமான நிகழ்ச்சிநிரல் வைத்திருக்கிறார்கள் என்பதாகும்.
கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடிப்பதுதான் நம் அனைவருக்கும் மையமான பிரச்சனையாக இருக்கிறது. இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லை. இதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் நாடும், நாட்டு மக்களும், அரசாங்கமும் செயல்படவேண்டும். அவ்வாறு செயல்பட்டு, இறப்போர் எண்ணிக்கையை எவ்வளவுக்குக் குறைக்க முடியுமோ அவ்வளவுக்குக் குறைத்திட வேண்டும். இதிலிருந்து ஏதேனும் விலகல் இருக்குமாயின், துரதிர்ஷ்டவசமாக அது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. ஆனால், அவ்வாறுதான் இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதுபோன்று தோன்றுகிறது.
கடந்தசில நாட்களாக நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம்? அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டிருக்கின்றன. மாநில அரசுகளிடம் எதுவும் கேட்பதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. 8 மணி நேர வேலை 12 மணி வேலையாக மாற்றப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் வேலை இழப்புகள், பணி இறக்கங்கள், ஊதிய வெட்டுகள். இவ்வாறு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ள அதே கார்ப்பரேட்டுகள்தான் பிரதமருக்கு, அவரது பிஎம்கேர்ஸ் நிதிக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தியிருப்பது, சீர்திருத்தம் அல்ல மாறாக படுபிற்போக்குத்தனமாக மாற்றியிருப்பதை அனுமதிக்க முடியாது. இது எதிர்த்து முறியடிக்கப்படும்.
அதேபோன்று விவசாயத்துறையிலும் நிலங்களை, கார்ப்பரேட்டுகள் நேரடியாக வாங்கக்கூடிய விதத்தில் முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு இருந்துவரும் பாதுகாப்புச்சட்டங்கள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக எண்ணற்ற சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இவற்றை ஏற்க முடியாது. இவை எதிர்த்து முறியடிக்கப்படும். இவை அனைத்தும் நாட்டிலுள்ள சமத்துவமின்மையை அதிகப்படுத்திடும்.
பல பத்தாண்டுகளாகக் கடுமையாகப் போராடிப் பெற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை அனுமதிக்க முடியாது.
அடுத்து, இந்தக் காலகட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாற்றுக்கருத்தைக் கூறுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டம் பாய்கிறது. செய்தியாளர்களுக்கு எதிராக அது பாய்கிறது, சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அது பாய்கிறது, அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அது பாய்கிறது. அவர்கள் அனைவரும் சட்டவிரோத தடைச்  சட்டம் அல்லது தேசியப் புலனாய்வுச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. உச்சநீதிமன்றம்கூட கொரானா வைரஸ் தொற்றிலிருந்து சிறைவாசிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்களை பிணையில் அல்லது பரோலில் வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.
அடுத்து குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைதியான முறையில் போராடியவர்களை இப்போது இத்தகைய அரக்கத்தனமான சட்டங்களின்கீழ் கைது செய்திருக்கிறார்கள்.
‘இதுவா கொரானா வைரஸ் தொற்றை எதிர்க்கும் நடவடிக்கைகள்? இந்த நோயை எதிர்த்து ஒரேவிதமான சிந்தனையுடன் போராட வேண்டும் என்பது இதுதானா?
இவ்வாறு இவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்பது வேறாக இருக்கிறது.
அதீதமாக அதிகாரங்கள் குவிப்பு, இப்போதைய அரசமைப்புச் சட்டத்தை மறுதலித்தல், தொழிலாளர் நலச்சட்டங்கள் ஒழிப்பு, விவசாயிகள் பாதுகாப்புச்சட்டங்கள் ஒழிப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மிரட்டல், ஒரு குறிப்பிட்ட சமூக இனத்தினரை மட்டும் குறிவைத்துத் தாக்குதல் – ஆகிய இவை அனைத்தும் அதிர்ச்சியளிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. இவ்வாறு மதவெறிதீயை ஒரு சமூகத்தினருக்கு எதிராக விசிறிவிடுவது இவர்களின் அடிப்படை நிகழ்ச்சிநிரலாக இருந்துவருகிறது.
இந்த அரசு கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறதா? அல்லது நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் விதத்தில் செயல்படுகிறதா?
இன்று நாட்டு மக்கள் முன்பு, அடிப்படையாக மூன்று பிரச்சனைகள் மிகவும் முக்கியமாகத் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது. முதலாவதாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை. இன்றைக்கும்கூட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். பசி, பட்டினி. அவர்கள் போகிற பாதையில் அரசு நிறுவனம் ஒன்றுகூட முன்வந்து அவர்களுக்கு உதவிடவில்லை. அவர்கள் போகிறபாதையில் எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதோ அங்கே அவர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. உச்சநீதி மன்றத்தில் மார்ச் 31 அன்று இந்த அரசு என்ன சொல்லியது? நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களே இல்லை என்று சொல்லியது. உச்சநீதிமன்றமும் அப்படியே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏதேனும் ரயிலில் ஏறி ஊர்ப்போய்ச் சேரமுடியாதா என்ற ஏக்கத்துடன் ரயில் பாதைகளில் அவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள்மீது ஓடும் ரயில்கள் ஏறி பிணமாகத்தான் அவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது.
இதுவா கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வழி?
49 நாட்களுக்குப்பின் இப்போதாவது இவர்கள் இலவசமாக ரயில்களில் பயணம் செய்ய பிரதமர் அறிவித்திட வேண்டும். ஆனால் என்ன நிலைமை? கார்ப்பரேட்டுகள், இவர்கள் மீண்டும் பணியில் வந்து சேரவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ வழி எதுவும் செய்து தரவில்லை, 49 நாட்களாகப் பட்டினியில் வாட விட்டீர்கள். இப்போது மிரட்டுகிறீர்கள். நினைவில்கொள்ளுங்கள். தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல. அவர்களுக்கு உரிமைகள் உண்டு. எனவே உரியமுறையில் திரும்பவும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அடுத்து இரண்டாவதாக, வருமானவரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும்.
மூன்றாவதாக, ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாகச் செய்திட வேண்டும்.
இம்மூன்று கோரிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்-
(ந.நி.)

Friday, May 8, 2020




கொரானா வைரஸ் தொற்றை முறியடிப்பதில்
மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நிற்கும்
-சீத்தாராம் யெச்சூரி
மூக முடக்கம் மே 17 வரைக்கும் நீட்டிக்கப்பட்ட போதிலும், மே 4க்குப் பின்னர் கட்டுப்பாடுகள் சற்றே தளர்த்தப்பட்டிருக்கின்றன.  இது அநேகமாக எதிர்பார்த்த ஒன்றுதான். மே 5 தேதியில், இந்தியாவில் 3,875 புதிய வழக்குகள் ஒரே நாளில் பதிவாகி இருக்கிறது. இது கடந்த ஒருவார காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் ஒரு நாளைய சராசரியுடன் ஒப்பிடும்போது இரண்டரை மடங்கு அதிகமாகும். மே 4க்கும் 5க்கும் இடையே 194 பேர் இறந்திருக்கின்றனர். இது இதுவரை ஒரு நாளில் இறந்தவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தொற்று பீடிக்கத் தொடங்கியபின்னர் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும்.
வெறுமனே சமூக முடக்கம் மட்டும் கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கோ மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்கோ பயன்தராது என்று நாம் திரும்பத் திரும்பக் கூறி வருகிறோம். சமூக முடக்கம், இத்தொற்றால் ஏற்படக்கூடிய கடும் பாதிப்புகளை ஒத்திவைத்திடும். அவ்வளவுதான். ஆனால் இதனைத் தடுத்திட வேண்டும் என்றால் அதற்கு அனைத்து மக்களையும் முறையாகவும், அறிவியல்பூர்வமாகவும் சோதனை செய்து, ‘பாசிடிவ்’  என்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களைப் பிரித்து,  முழுமையாகத் தனிமைப்படுத்தி வைத்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சிகிச்சை அளித்து, குணப்படுத்திட வேண்டும்.
கேரளா ஒரு முன் உதாரணம்
இதற்கு இடது ஜனநாயக முன்னணியின் தலைமையின் கீழ் கேரள அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஓர் உதாரணமாகும்.   கொரானா வைரஸ் தொற்றின் ஆபத்தை மிகவும் வலுவானமுறையிலும், அறிவியல்பூர்வமாகவும் எதிர்கொண்ட ஒரு மாநிலம் என்றும், அதாவது, சோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, ஆதரவு அளித்த கேரளாவின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இந்தத் தொற்று வேகமாகப் பரவுவதற்கு முன்பே உரியமுறையில் முன்னெச்சரிக்கைகள் விடுத்தபோதும், ஆளும் பாஜக அரசாங்கம் அதனை முன்கூட்டியை தடுத்திட எவ்விதமான நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இத்தொற்று தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களை சோதித்துப் பார்த்திடும் விகிதம் நம் நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. (அதாவது, பத்து லட்சம் பேர்களில் 864 பேருக்கு மட்டும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது, ஸ்பெயினில் 41,332 பேர் என்பதுடன் ஒப்பிட்டால், நாம் எந்த அளவிற்குப் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இது 2020 மே 5 தேதியக் கணக்கு.)
சமூக முடக்கம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை
சமூக முடக்கம் அறவிக்கப்பட்ட விதம்தான் புலம்பெயர் தொழிலாளர்களின் மிகவும் மோசமான நிலைமைக்குக் காரணமாகும். வெறும் 4 மணி நேர கால அவகாசத்தில் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதால் மாநில அரசாங்கங்களோ அல்லது மக்களோ இதனால் ஏற்படும் நிலைமைகளைச் சமாளிக்கத் தயாராயில்லாத நிலையில் இருந்தார்கள். திடீரென்று புலம் பெயர் தொழிலாளர்கள் வேலையையும், வருமானத்தையும், அவர்கள் தங்குமிடங்களையும் பறித்தது. இதனால் நிர்க்கதிக்கு உள்ளான அவர்கள் தொலைதூரங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று வீதிகளில் திரண்டார்கள். ஒருவிதத்தில், எந்த நோக்கத்திற்காக சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்டதோ அதையே,  அதாவது கொரானா வைரஸ் தொற்றுக்கான நோய்க்கிருமிகள் பரவாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தையே,  மனிதர்களுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தையே, இது முறியடித்தது. சமூக முடக்கக் காலத்தை நம்முடைய சுகாதார வசதிகளை, சுகாதார ஊழியர்களுக்கான சுய பாதுகாப்புக் கருவிகள் பெறுதல், வெண்டிலேடர்கள் போன்றவற்றுடன்  போதுமான அளவிற்கு  மருத்துவ வசதிகளைப் பெருக்குதல்  ஆகியவற்றிற்குப் பயன்படுத்தி இருக்க வேண்டும். எனினும் இது நடக்கவில்லை. தேவையின் அடிப்படையில், பொதுப் பயன்பாட்டிற்கு தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்திட கட்டளைகள் பிறப்பித்திருக்க வேண்டும். ஸ்பெயின் போன்று சில நாடுகள் அனைத்துத் தனியார் மருத்துவ வசதிகளையும் தேசியமயமாக்கும் அளவிற்கு சென்றிருக்கின்றன.
வேலைகளை இழந்து, பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகும் மக்களைக் காப்பாற்றிட தேவையான அளவிற்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் இந்தத் திசைவழியில் எதுவுமே நடந்திடவில்லை. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு அடுத்த மூன்று மாத காலத்திற்கு, மாதந்தோறும் 7,500 ரூபாய் வீதம் ரொக்க மாற்று செய்யப்பட வேண்டும் என்று நாம் தொடக்கத்திலிருந்தே கோரிக் கொண்டு இருக்கிறோம்., மேலும், மத்திய அரசின் கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் 77 மில்லியன் (7 கோடியே 70 லட்சம்) டன்கள் உணவு தான்யங்களை இலவச ரேஷன் மூலம் ஏழை மக்களுக்கு விநியோகிப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பசியால் வாடும் மக்களைக் காப்பாற்றிட வேண்டும் என்றும் கோரி வருகிறோம்.
மத்திய அரசாங்கம், இவற்றைச் செய்திட முன்வருவதற்கு மறுத்திருக்கிறது. குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் பிரதமரின் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, பல நூறாயிரம் கோடி ரூபாய்கள் வசூலிக்கப்பட்டிருக்கிறது, வசூலிக்கப்பட்டுக்கொண்டுமிருக்கிறது. இந்தத் தொகை, குரோனா வைரஸ் தொற்றை வலுவானமுறையில் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு,  போதுமானதற்கும் அதிகமாகவே இருக்கும்.
அளவுக்கு மீறிய அதிகாரக் குவிப்பு
மத்திய பாஜக அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களைக் கையாளும் விதம் மிகவும் மோசமானதாக இருக்கிறது. முதலாவதாக, மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைக் கடந்த இரு காலாண்டுகளுக்கு அளித்திடாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இதன் காரணமாக மாநில அரசாங்கங்கள், கொரானா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்குப் போதிய நிதி வசதி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருப்பது மாநில அரசாங்கங்கள்தான். மாநில அரசாங்கங்களைக் கலந்து ஆலோசிக்காமல் திடீரென்று தேசிய சமூகமுடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இப்போது பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் மாநில அரசாங்கங்களின் பொறுப்புதான் என்றும் எனவே அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசாங்கங்கள்தான் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் தான் உருவாக்கி இருக்கின்ற சிறப்பு நிதியத்திற்கு அனைத்து அரசு ஊழியர்களையும் கட்டாயப்படுத்தி ஒரு நாள் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதிலிருந்து எவ்விதமான உதவியையும் இதுவரை செய்திடவில்லை.
மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பில், பாதிக்கும் மேலான தொகை ஏற்கனவே அறிவித்திருந்த மத்திய அரசுத் திட்டங்களுக்கானவையாகும். இந்தத்தொகை கூட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவேயாகும்.  இதனைக் குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகவாவது, அதாவது சுமார் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்திட வேண்டும், அதன் மூலம் மாநில அரசாங்கங்களுக்கு கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை அவைகள் மேற்கொள்வதற்குத் தாராளமான நிதி உதவியினைச் செய்திட வேண்டும்.
இதனைச் செய்திட மத்திய அரசு தவறும்பட்சத்தில், வருவாயைப் பெருக்கிட  மாநில அரசுகளுக்கு உள்ள ஒரேவழி  பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுவின் விலைகளை உயர்த்துவதுதான். இது, ஏற்கனவே கொரானா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கோடிக்கணக்கான சாமானிய மக்களின்  துன்பதுயரங்களையும், சுமைகளையும் மேலும் அதிகப்படுத்திடும்.
இவையெல்லாவற்றையும்விட மிகவும் மோசமான விஷயம், இப்போது புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக இந்திய ரயில்வேயால் தொடங்கப்பட்டிருக்கிற சிறப்பு ரயில்களுக்கான போக்குவரத்துக் கட்டணத்தை மாநில அரசுகளே அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகும். இது கிரிமினல்தனமானதாகும். இது, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் 360ஆவது பிரிவின்கீழான நிதி அவசரநிலையாகும். இது, கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக வலுவாகப் போராடுவதற்கான நம் சக்தியை ஆழமானமுறையில் அரித்துவீழ்த்துகிறது.
மாநில அரசாங்கங்களுக்கு நிதி உதவிகளை உடனடியாகச்செய்திட வேண்டும். ஆனால், மத்திய அரசாங்கம், இதனைச்செய்வதற்குப் பதிலாக, சிறப்பு ரயில்களை இயக்குவதற்காக இந்தியன் ரயில்வே 85 சதவீத செலவினத்தைச் செய்திருப்பதாக நொண்டிச் சமாதானங்களைக் கூறிக் கொண்டிருக்கிறது. ரயில்வே போக்குவரத்து மக்கள் பொதுப் போக்குவரத்தாகும். இதன் செலவினங்களை வெறும் லாப நட்டக் கணக்காகப் பார்க்கக் கூடாது. உலகில் உள்ள நாகரிகமான நாடுகள் அனைத்துமே பொதுப் போக்குவரத்தை ஒரு சேவையாகவும், மக்களின் ஒட்டுமொத்த நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசையாகவும் தான் இயக்கிக் கொண்டிருக்கின்றன.
மே 5 அன்று, உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை மீதான பொதுநல மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு நிதி அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்றத்திடம் போக்குவரத்துக் கட்டணத்தை மாநில அரசுகள்தான் தர வேண்டும் என்று கூறி நீதிமன்றம் கூறியதை ஏற்க மறுத்திருக்கிறது. மேலும் தொழிலாளர்களிடமிருந்து பெற்ற தொகை எவ்வளவு என்று நீதிமன்றத்திடம் கூறவும் மறுத்துவிட்டது. இதன் விவரங்களை வெளிப்படுத்தவதற்கு தனக்கு எவ்விதமான அறிவுரைகளும் அரசால் வழங்கப்படவில்லை என்று அரசு வழக்குரைஞரான அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுதான் பாஜக அரசாங்கத்தின் இரட்டை வேடம். பொய்ப்பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களைச் சார்ந்தே அது இயங்கிக் கொண்டிருக்கிறது.
பாஜகவிற்கு கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சிந்தனையைத் தவிர வேறெந்த சிந்தனையும் கிடையாது
கொரானா வைரஸ் தொற்றுக் காலத்தில்கூட மக்களின் நலன்கள் குறித்தோ மற்றும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்தோ கவலைப்படாது, மத்திய அரசாங்கத்தின் ஒரே சிந்தனை தன்னுடைய கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான். கோடானுகோடி மக்கள் வறிய நிலைக்கும், பசி-பஞ்சம்-பட்டினி நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள அதே சமயத்தில், அவர்களுக்கு எவ்விதமான நிதி உதவியும் செய்ய மறுத்திடும் அதே சமயத்தில், மத்திய அரசாங்கம், தேசிய சமூக முடக்கக் காலத்திலும்கூட, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் வாங்கியிருந்த கடன் தொகையான 68 ஆயிரத்து 800 கோடி ரூபாய்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர்களாவார்கள். இதன் பெயர்தான் கருணையற்ற கூட்டுக்களவாணி முதலாளித்துவம் என்பதாகும். மக்களின் பசி-பஞ்சம்-பட்டினியைப் போக்க இவர்களிடம் பணம் கிடையாது. அவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு ரயிலில் அனுப்பி வைத்திட பணம் கிடையாது. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மக்களின் டெபாசிட் தொகைகளைக் கடனாகப் பெற்றுத் திருப்பிச்செலுத்தாது சூறையாடிய, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்றுவதற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது.
கொள்ளை லாபமே குறிக்கோள்
சமூக முடக்கக் காலத்திலும், முதலாளிகளாலும் கார்ப்பரேட்டுகளாலும் கிரிமினல்தனமான முறையில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்மென்கிற வெறி தொடர்கிறது. இந்தக் காலகட்டத்தில் ரிலயன்ஸ் நிறுவனம் 17.7 சதவீதம் தன் லாபத்தை அதிகரித்திருக்கிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உலக அளவில், அமெரிக்காவின் உயர் பத்து பில்லியனர்கள் தங்கள் செல்வாதாரங்களை 208 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கூடுதலாக சேர்த்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அதேசமயம் மறுபக்கத்தில், கோடானு கோடி தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள், ஊதிய வெட்டுக்கு ஆளாகியுள்ளார்கள்.   தேசிய சமூக முடக்கம் தொடங்கியபின்னர், சுமார் 14 கோடி பேர் வேலைகளை இழந்து, வேலையில்லாதோர் பட்டாளத்துடன் இணைந்துள்ளார்கள் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) மதிப்பிட்டிருக்கிறது. முதலாளித்துவத்தின்கீழ் மனிதாபிமானமற்ற சுரண்டலின் கோர வடிவங்கள் இவையாகும்.
பல முதலாளித்துவ நாடுகள் கூட தங்களின் மக்களை இன்றைய இக்கட்டான நேரத்தில் காப்பாற்றுவதற்காக, பெரிய அளவில் நிதித்தொகுப்புகளை அளித்திருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜப்பான் தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் நிதித் தொகுப்பை அறிவித்திருக்கிறது. அமெரிக்கா 10 சதவீதம் அறிவித்திருக்கிறது. இதனை மேலும் உயர்த்தப்போவதாகவும் உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கியிருப்பது தொடர்கிறது. இதனை உயர்த்திட மறுத்து வருகிறார்கள்.
ஆனால் அதே சமயத்தில் மத்திய அரசாங்கம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவினத்தில் பிரதமருக்காகப் பிரம்மாண்டமான முறையில் புதிய வீடு கட்டுவதற்காகவும், மத்திய விஸ்டா என்னம் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடங்கள்  புதிதாகக் கட்டுவதற்குமான முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே, இவர்களுக்குத் தங்கள் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்தச் செல்வதற்குப் பணம் இருக்கிறது. இத்துடன் கூடுதலாக, ‘பிஎம்கேர்ஸ்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிதியத்தையும் உருவாக்கி, கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்தி அபரிமிதமாகப் பணத்தை வசூல் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதிலிருந்தும் ஒரு காசு கூட கொரானா வைரஸ்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இதுவரையிலும் செலவு செய்திட முன்வரவில்லை. அதேபோன்று கொரானா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதற்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் பயன்படுத்திடவில்லை. இந்த சிறப்பு நிதியத்தில் சேர்ந்துள்ள தொகை குறித்து அரசாங்கத்தின் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட முடியாது. இதில் சேர்ந்துள்ள தொகை குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் அல்லது கணக்கும் இல்லை.
கொரானா வைரஸ் தொற்று வெளிப்படுவதற்கு முன்பே நம் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தது. இப்போது பாஜக மத்திய அரசாங்கமானது, நம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தங்கள் மதவெறி நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே குறியாக இருக்கிறது.
பயமுறுத்தும் எதேச்சாதிகாரம்
ஆளும் வர்க்கங்கள் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும்போதெல்லாம் எதேச்சாதிகாரமான முறையில் அரசாங்கம் மற்றும் மக்கள் மீது தங்களுடைய கட்டுப்பாடுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கான வேலைகளில் எப்போதுமே இறங்கிடும். இத்தகைய செயல்பாடுகள் இப்போதும் மிகவும் நாணமற்றமுறையில் நடந்துகொண்டிருக்கிறது.   அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் அனைவரையும் மிகவும் அரக்கத்தனமான சட்டங்களான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (UAPA) மற்றும் தேசியப் புலனாய்வு சட்டம் (NIA) ஆகியவற்றின்கீழ் பதிவு செய்யப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைதியானமுறையில் கிளர்ச்சிகளை மேற்கொண்ட செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், புகழ்மிக்க வல்லுநர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை இவ்வாறு காலில்போட்டு மிதிப்பதும், தங்களுக்கு எதிராகக் கருத்துக்கூறுபவர்களை வேட்டையாடுவதும் இக்காலகட்டத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் பின்பற்றப்படுவதை நோக்கி …
மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், இப்போதைய பாஜக அரசாங்கத்திற்கு ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லாமலிருப்பதாகும். பாஜக அரசாங்கம், தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வெறிபிடித்த பாசிஸ்ட் அரசாக மாற்ற வேண்டுமென்கிற திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில்தான் குறியாக இருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றுப் பரவலுக்கே முஸ்லீம்கள், சிறுபான்மையினர்தான் காரணம் என்று இவர்கள் பரப்பிய வெறுப்புப் பிரச்சாரத்தின் விளைவாக சமூகத்தில் மக்கள் மத்தியில் வகுப்புவாத அடிப்படையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம், அதனுடைய 7.14ஆவது பத்தியில் இந்த அம்சத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் சமயத்தில், அது ஆர்எஸ்எஸ்-இன் பாசிஸ்ட் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்லும் என்று பாஜகவின் ஆபத்துக்களைக் குறிப்பிட்டிருக்கிறது.
எனவே, கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தையும், பாஜக மத்திய அரசாங்கம் ஆளும் வர்க்கங்களும், அதன் கூட்டுக் களவாணி முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில்  மக்களைச் சுரண்டுவதை உக்கிரப்படுத்திக் கொண்டிருப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் மிகவும் மோசமானமுறையில் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகள் நலச் சட்டங்களாக  மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.    எட்டு மணி நேர வேலை என்பது பல மாநிலங்களில் 12 மணி நேர வேலையாக மாற்றப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின்  ஊதியங்களும் கடுமையான முறையில் வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு பக்கத்தில், இந்த நிலைமையை மத்திய அரசாங்கம் தன்னுடைய எதேச்சாதிகாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. நம்முடைய அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தைக் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு, ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களின் அடிப்படை உரிமைகளைச் சூறையாடி, அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் குவித்துக் கொண்டிருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவதும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் முழுக்க முழுக்க மாநில அரசுகளின் பொறுப்புதான்என்று மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.  மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி உதவி செய்யாதது மட்டுமல்ல, மாநில அரசுகளுக்குத் தான் பகிர்ந்து அளிக்க வேண்டிய சட்டபூர்வமான நிலுவைத் தொகைகளைக்கூட அளிக்க மறுத்து வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அமைதியாகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள், புகழ்பெற்ற பிரமுகர்களைக் குறிவைத்துக் கைதுசெய்திருப்பதன் மூலமும், தங்களுக்கு எதிராகக் கருத்து கூறும் எவராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் மூலமாகவும், பாஜக மத்திய அரசாங்கம் தன்னுடைய சொந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலம், கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது.
இறுதியாக, ஆட்சியாளர்கள் மதவெறித் தீயை விசிறிவிடுவதை உக்கிரப்படுத்தியிருப்பதும், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியிருப்பதும், நாட்டில் குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரின் ஒன்றுபட்டுப் போராட்டத்தினை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய முஸ்லீம் வெறுப்பு மனோபாவம் அதிகரிக்கப்படுவதற்கு எதிராக உலகில் பல நாடுகள் எதிர்வினையாற்றி இருக்கின்றன. ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகள் உலகில் உள்ள பல நாடுகளிடமிருந்து இந்தியாவைத் தனிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நம் போராட்டத்தையும் பலவீனப்படுத்திடும்.
எனவே, இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்புவதற்கும் மற்றும் புதுப்பிப்பதற்கும் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தை அமல்படுத்த வைப்பதற்கு நிர்ப்பந்தம் அளித்திடும் விதத்தில் அதிகபட்ச அளவில் மக்களையும், அரசியல் கட்சிகளையும், வெகுஜன அமைப்புகளையும் மற்றும் மக்கள் இயக்கங்களையும் அணிதிரட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள நம் அனைவரின் கடமையாகும். கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் இந்த சமயத்தில், பொருளாதாரத்திற்கான வரைபடத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது வெளியில் வெளியிட்டிருக்கிறது. இவற்றை நம் பிரச்சாரங்களின் போது மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
நாடு முழுதும் உள்ள நம் கட்சிக் கிளைகள் அனைத்தும் கோடானுகோடி மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை அளிப்பதற்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தொடரும். இன்றைய தினம் எழுந்துள்ள ஆழமான சவால்களை எதிர்கொள்வதில் மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நிற்பது என்றென்றும் தொடரும்.
(தமிழில்: ச.வீரமணி)