Wednesday, March 30, 2011

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் எப்படிப்பட்டவர்?



‘‘மதுரை கலெக்டர் சகாயம், அதிமுக-வினர் போல் செயல்படுகிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று பேசும் அளவிற்கு சென்றுள்ளார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.’’

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை மாவட்ட ஆட்சியர் குறித்து அளித்துள்ள பத்திரிகை செய்தி இது. இதே சகாயம் குறித்து டெக்கான் கிரானிக்கில் மற்றும் ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் அளித்துள்ள விவரங்கள் என்ன?

‘‘என்னை கோயம்புத்தூருக்கு மாற்றியிருந்த நேரம். என் பெண் யாழினிக்கு அப்போது மூன்று வயது. திடீரென்று ஒருநாளிரவு அவள் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டாள். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றேன். உடனே மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிவிட்டார்கள். மாதக் கடைசி என்பதால் கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. புதிய ஊர். அறிமுகம் இல்லாத மனிதர்கள். எனக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கடன் கேட்கவும் சங்கடமாக இருந்தது. காஞ்சிபுரத்தில் நான் வேலை பார்த்தபோது எனக்கு நண்பராக இருந்த ஒரு பள்ளி ஆசிரியர் அப்போது கோவைக்கு மாற்றல் ஆகி வந்திருந்தார். அவரிடம் மிகவும் தயக்கத்துடன் நான்காயிரம் ரூபாய் கடன் கேட்கவும் ஓர் அரை மணி நேரத்தில் அவர் கொண்டு வந்து கொடுத்தார். உடனே குழந்தைக்கு சிகிச்சை ஆரம்பிச்சிட்டோம். ஆனால், சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்ததும்தான் என் மனமதில் இருந்த சுமை இறங்கியது.’’

சகாயம்,ஐஏஎஸ். நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்ஐசி ஹவுசிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு. வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு என பகிரங்கமாகத் தனது சொத்துப்பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்துக்குக் கீழ் தலைநிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

‘‘நான் அந்த கோயம்பத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன் என்றால்,அப்போது என் கட்டுப்பாட்டில் 650 மதுபானக் கடைகள் இருந்தன. உரிமம் புதுப்பிக்க கடைக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் என்று கொடுக்கத் தயாராய் இருந்தார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அடுத்த ஐந்தாவது நிமிடம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில், மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசித்துப் பாருங்கள். ஆனால், அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்கிறதில் ஒரேயொரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரித்துக்கொண்டே போவார்கள். அவர்களை மட்டும் சமாளித்துவிட்டால் போதும். — தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் சொந்த ஊர். மற்றவர்கள் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று சொல்கிற அம்மா. நீ படித்து கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா என்று சொல்லிக்கொண்டே இருக்கும் அப்பா. கலெக்டர்தானே, ஆயிடுவோம்னு படிச்சேன், ஆயிட்டேன். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நம்ம மனது எந்த அளவுக்கு புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ, கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணினேன்.

‘‘காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரியவர், தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். மாதிரியை ஆய்வுக்கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பியதில், மனிதர்கள் குடிக்க இலாயக்கற்ற பானம் என்று அறிக்கை வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஓர் அறிக்கை தயாரித்தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வட்டாட்சியரிடம் எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்துட்டு, கம்பெனியைப் பூட்டி சீல் வைக்கப் போறோம். எல்லோரையும் வெளியே வரச் சொல்லுங்கன்னு சொன்னோம். அந்த மேலாளரைவிட என்கூட வந்த வட்டாட்சியர் ஆடிப்போயிட்டார். சார், ...பெரிய பிரச்சனை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு பதறினார். கலெக்டரைக் கேட்டால் சீல் வைக்க விடமாட்டார். சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்கன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவர், சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். முதல்வர் கிட்ட பேசுறதாச் சொல்றாங்க, சார். என்ன பண்ணலாம்னு கேட்டார். உள்ளே இருக்கிறவங்களை கைது பண்ணிட்டு சீல் வைக்க வேண்டியதுதான்னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி எட்டு பூட்டுகளையும் போட்டு சீல் வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாமல், ஒரு குக்கிராமத்துக்குப் போய் ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரடரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்குப் போன் பண்ணி இருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போண் பண்ணினேன். யாரைக் கேட்டு சீல் வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தெரியுமா? என்று எல்லோரும் கேள்வி கேட்டாங்க. நான் என் கடமையைத்தான் சார் செய்தேன். மக்களுக்கு நல்லது செய்ததுக்காக, சஸ்பெண்ட் செய்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்விட்டேன். மறு நாள் இந்த செய்தி எந்தப் பத்திரிகையிலும் பெட்டி செய்தியாகக் கூட வரவில்லை. பெப்சிக்கு சீல் வைத்த சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை,.

இரண்டு நாள் கழித்து ஜூனியர் விகடன் இதழில் மட்டும் அந்தச் செய்தி விரிவாக வந்திருந்தது,. அதற்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல் வைத்த விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிந்தது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாற்றி மாற்றி பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலாக நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டுவிட்டோம். அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டோம். இன்னும் பத்தாண்டுகளில் அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வான்னு ஒவ்வொரு மாதமும் கலெக்டர் ஆபிசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் இரவு முழுதும் அந்தந்த கிராமங்களிலேயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்போதுதான் அவங்க சொல்வதற்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாம் உணர முடியும்.

இப்படிப்பட்ட சகாயம் மீதுதான் அமைச்சர் மு.க.அழகிரி குற்றம்சாட்டுகிறார்.

---

6 comments:

ராஜேஷ், திருச்சி said...

very good sagayam.. we r proud.. but that doesnt mean that he didnt do the ADMK propoganda

Unknown said...

அவர் ஒரு தலித்தா இருக்கனும் அதான் ஒரு பக்கம் தலித்துகளுக்கே வாழ்வதாக சொல்வாங்க ஒரு பக்கம் அவங்களை நோக அடிப்பாங்க. தமிழன் மடையன்.

Vinodhini said...

இவர் தான் எங்க மாவட்ட முன்னால் ஆட்சியர்.... இவர் இருந்த பொழுது பல நலத் திட்டங்கள் எங்க மாவட்டத்துல உருப்படியா மக்களை சென்று அடைந்தது... உண்மையா ரொம்ப நேர்மையான நல்லவர்... அப்புறம் எப்புடி ஒரே மாவட்டத்துல இருக்க முடியும்... சில அரசியல்வாதிகளால் சில நாட்கள் காணாமலே போனார்....இவரை இடம் மாற்றம் செய்த பின்பு எங்க மாவட்டத்துல பெரிய பிரச்சனையே நடந்தது... இப்போது தான் மதுரைக்கு வந்திருக்கார்.... கண்டிப்பா மதுரைக்கு நல்ல காலம் தான்...இவர் இங்க இருந்த பொழுது... அரசு மருத்துவமனைகள்,சத்துணவுக் கூடம்,நியாய விலைக்கடை போன்ற எல்லா இடங்களிலும் எல்லாமே ரொம்ப சரியா நடந்தது...தப்பு யவன் செஞ்சாலும் தப்புதாண்டான்னு அழுத்தமா சொன்னார்....விவசாயிகளுக்கு முன்னுரிமை தந்தார்... இதனால சில நாய்களுக்கு லஞ்சம் வாங்க முடியல...வேலை செய்யாம டிமிக்கி குடுக்க முடியல... அரசியல்வாதிகளால ஆட்டம் போட முடியலன்னு "மூத்த தலைவர்" கிட்ட சொல்லி இடம் மாற்றம் பண்ணிடாங்க...கண்டிப்பா இதனாலேயே எங்க மாவட்டத்துல இந்த ஒரு காரனதுக்க்காகவே ஆட்சி மாற்றம் நடுக்கும்ன்னு நல்லாவே தெரியும்...இவர் எல்லோருக்கும் போதிக்கும் ஒன்று...லஞ்சம் தவிர்.. நெஞ்சம் நிமிர்...

Unknown said...

true indiann

MANO நாஞ்சில் மனோ said...

ஊழல்வாதிங்க உள்ளவரை நல்லவங்க நல்லா இருக்க முடியாதோ...

Unknown said...

avar kandipaga avarudya sevai thodara vandum.