Wednesday, October 15, 2008

மன்மோகன்சிங்கிற்கு ஜோதிபாசு கடிதம்

புதுடில்லி, அக்.14-என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு கடிதம் எழுதியுள்ளார்.

தலைநகர் டில்லியில் திங்கள் அன்று தேசிய ஒருமைப்பாடு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்குமாறு, பிரதமர், ஜோதிபாசுவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை விளக்கியும், நிகழ்ச்சிநிரல் தொடர்பாக சில பரிந்துரைகளை விளக்கியும் ஜோதிபாசு, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம் வருமாறு:

‘‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி அதனுடைய நிகழ்ச்சிநிரலையும் அனுப்பியிருந்தீர்கள். என் உடல் மிகவும் நலிவுற்றிருப்பதன் காரணமாக என்னால் நேரடியாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆயினும் நிகழ்ச்சிநிரலில் கண்டுள்ள விவரங்கள் குறித்து ஒருசில பரிந்துரைகளை கூட்டத்தில் விவாதிப்பதற்கா இத்துடன் அனுப்பி இருக்கிறேன்.தேசிய ஒருமைப்பாடு குறித்து துல்லியமான பரிந்துரைகள் பலவற்றை எங்கள் கட்சியின் சார்பில் ஆட்சியில் இருந்து அத்துணை அரசாங்கத்திற்கும் அவ்வப்போது அனுப்பி வந்திருக்கிறோம். ஆயினும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசின் சார்பில் எவ்வித கொள்கைத் திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை. தேசிய ஒருமைப்பாடு ஒரு வலுவான யதார்த்தமானதாக மாற வேண்டுமானால் அரசு தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கை நிலைப்பாடுகளில் அடிப்படை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு அரசியல் உறுதி அவசியம். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேரே, அரசின் கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் என்று அழைக்கப்படும் பிரதான விதிகள்தான். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்க்கைக்குரிய போதுமான வாழ்வாதாரம், வேலை செய்ய உரிமை, செல்வம் ஒரு பக்கத்தில் குவியா வண்ணம் உள்ள பொருளாதார முறை, கல்வி உரிமை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி, தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம், ஆண் - பெண் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் அனைத்தும் இந்த பிரதான விதிகளில் உள்ளடங்கி இருக்கின்றன. ஆனால் இந்த விதிகளில் எதுவுமே அமல்படுத்தப்பட முடியவில்லை. நாட்டில் ஆட்சியாளர்கள் இன்னமும் சமூகப் பொருளாதார முறைகளில் செல்வந்தர்களைச் சார்ந்தே செயல்படுவதே இதற்குக் காரணமாகும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன்பின் ஆட்சி புரியத் தொடங்கி 58 ஆண்டுகள் கழிந்த பின்பும், சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.நாட்டின் பொருளாதார அமைப்பில் மேற்கூறிய காரணிகளினால், நாடு சுதந்திரத்திற்குப்பின் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவித்திருக்கிறது. இந்தியா தொழில் மேல்கட்டுமானத்துடன் கூடிய ஒரு விவசாய நாடாகும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை நாம் பெற்ற பின்னர், 1950களின் மத்தியில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த போதிலும், அடுத்தடுத்து வந்த காங்கிர° மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைமைகளிலான மத்திய அரசாங்கங்கள் நிலச்சீர்திருத்தங்களைச் செய்திட மறுத்து விட்டன. கிராமப்புரங்களில் ஏழை - பணக்காரன் ஏற்றத்தாழ்வு வளர்ந்துகொண்டே இருக்கிறது. கிராமப்புர விவசாய மக்கள் கடும் துன்பத்திற்காளாவது தொடர்கிறது. கிராமப்புர மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்யும் மத்தியச் சட்டம் ஒன்று இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.தாராமயக் கொள்கையும், ஏகாதிபத்திய ஆதரவு உலகமயக் கொள்கையும் நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு நிதிநிறுவனங்கள் சூறையாடிட வழிவகுத்துத் தந்திருக்கிறது. அதிகார வர்க்கம், கல்வி முறை, ஊடகம், கலாச்சாரம் அனைத்திலும் இப்போது அந்நிய மூலதனம் தங்குதடையின்றி, புகுந்து கொண்டிருக்கின்றன. இதனால் பிராந்திய அளவிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன என்றும், நாட்டு ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கின்றன என்றும் கூறினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. நிலச்சீர்திருத்தம் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தி, அவற்றை மக்களுக்கு மறுவிநியோகம் செய்யாதது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிட்டு உருவாக்காதது ஆகியவற்றை சாதிக் குழுக்கள் பயன்படுத்திக் கொண்டு, மக்களை சாதிய ரீதியாக பிளவுபடுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அரசியல், சமூக, பொருளாதார சமத்துவமில்லையென்றால், மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சாதியினர் அதிலும் குறிப்பாக தலித்துகள் மிக எளிதாக இத்தகைய சாதிய சக்திகளுக்கு இரையாகிவிடுவார்கள், இரையாகியும் இருக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பின்தங்கிய நிலைமைகளை வகுப்புவாதம் பயன்படுத்திக்கொண்டு வேருன்றிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். இட ஒதுக்கீடு அவசியம்தான் என்றாலும், குறிப்பாக பொருளாதார வல்லமையைத் தராத நிலையில், இத்தகைய இட ஒதுக்கீடு மட்டும் பிரச்சனைகளைத் தடுத்துவிடாது. பொருளாதாரக் கட்டமைப்பில் அடித்தட்டில் உள்ளவர்கள், சமூகக் கட்டமைப்பிலும் அடித்தட்டில் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைத் திணித்தல், விவசாயத்தில் அரசு முதலீட்டை இல்லாமல் ஒழித்தல், விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்தல் - இவை அனைத்தும் ஒடுக்கப்பட்டமக்களை சொல்லொணாத் துயரத்திற்குள்ளாக்கி யுள்ளன. இக்காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாநில ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி, பல்வேறு ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடையாளங்களையும் மேலும் மோசமாக்கி இருக்கிறது.மத்திய - மாநில உறவுகளை மாற்றி அமைத்திட நாங்கள் மிக விரிவான அளவில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தோம். அதன்விளைவாக, திருமதி இந்திராகாந்தி அவர்களால் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் முழுமையாக திருப்தி அளிக்கக்கூடியவை அல்ல என்றாலும், ஒருசில நிதி உறவுகள் தொடர்பாக அதன் கருத்துக்கள் இன்னமும் அமல்படுத்தப்பட வில்லை.மத்திய - மாநில உறவுகள் ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும் சில மாநிலங்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் தொடர்கிறது. மத்திய அரசின் இத்தகைய நிலைபாட்டினை நாட்டைச் சீர்குலைக்க முயலும் சக்திகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

சிறுபான்மை இனத்தவரின் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த ஆணையங்களின் அறிக்கைகள் பலவும் தூதி அடைந்து கிடக்கின்றன. நாட்டைப் பீடித்துள்ள மதவெறி அச்சுறுத்தலை அரசியல் உறுதி மற்றும் நிர்வாகத் திறமை மற்றும் மதச்சார்பற்ற மாண்பினை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் போராடி முறியடித்திட வேண்டும். குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக, மதவெறி சக்திகளுடன் சமரசம் மேற்கொள்ளும் போக்கு பரவலாக இருக்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் தன்னுடைய செயல்பாடுகளின் காரணமாக சிறுபான்மை வகுப்புவாதம் வளரத் துணை செய்கிறது. இதனால் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திட, இப்போது எழுந்துள்ள பலவீனங்களைப் போக்கிட, பல்வேறு பரிந்துரைகளை நாங்கள் அளித்திருக்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். பணபலம் - புஜ பலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 1994இல் அமைக்கப்பட்ட ஒன்பது பேர்கள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்பமை அம்சமாக மதச்சார்பின்மை வரையறுக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கெதிராக உள்ள மத்தி மாநில உறவுகளின் திசைவழி மாற்றி அமைக்கப்பட வேண்டும்.நிலச்சீர்திருத்தங்கள், உயர்ந்த அளவிலான ஊதியங்கள், விவசாயம், பொருளாதாரம் மற்றும் நிதித்துறைகளில் அரசின் தலையீடுகள் அதிகரித்தல், வேலைவாய்ப்பு பெருகுதல், பொதுத்துகைளைப் பாதுகாத்தல், ஏகாதிபத்திய ஆதரவு தாராளமயக் கொள்கைகளைக் கைவிடுதல், பெண் சமத்துவம், தலித்துகள் - பழங்குடியினர் சமூக விடுதலை, இறுதியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் - இவை அனைத்தும் உள்ளடங்கியதாக நம்முடைய அரசியல் கண்ணோட்டத்தின் உந்துவிசை, இருந்திட வேண்டும். தேசிய ஒருமைப்பாடு குறித்த முக்கிய மூலக்கூறு, அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையிலிருந்து விலகி இருத்தலாகும். இவை அனைத்தையும் நிறைவேற்ற, மத்திய அரசாங்கம் அரசியல் உறுதியைக் கடைப்பிடித்து, செயலில் இறங்கிட வேண்டும். இல்லாவிடில் நாடு பெரும் ஆபத்திற்குள்ளாகும்.

இவ்வாறு ஜோதிபாசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: