Saturday, July 1, 2017

டிரம்ப்லேண்டில் மோடி


People’s Democracy
தலையங்கம்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா விற்கு ஐந்தாவது தடவையாக பயணம் செய்திருக்கிறார். இந்தத் தடவை அவர் முதன்முறையாக ஜனாதிபதி டொனால்டு டிரம்பை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்து, இந்தி யாவானது, அமெரிக்க-இந்திய நீண்டகால ராணுவசூழ்ச்சித் திட்டத்தின் இளைய பங்காளி என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.வெள்ளைமாளிகைக்கு மோடியின் விஜயம்தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் தரப்பில் சிலஐயங்கள் ஏற்பட்டிருந்தன.
ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக்கூடியவிதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருந்த தால், இதற்குமுன் எவரும் ஊகித்துணர முடியாத அளவிற்கு இத்தகைய ஐயங்கள் ஏற்பட்டிருந்தன. புவிவெப்பமயமாதல் தொடர்பாக பாரீஸ்ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு எதிராக டிரம்பின்விமர்சனம், இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் வேலைசெய்வதற்கு எச்-1பி விசா வழங்குவதில் கட்டுப் பாடுகள், அமெரிக்க வேலைகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யக் கூடாது என்று அவர் அழுத்தம் செலுத்தி வந்தது போன்ற அம்சங்கள் டிரம்ப்பால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்று இந்திய அரசாங்கத்தின் தரப்பில் கருதப் பட்டு வந்தது.அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சி அம்சங்கள்அனைத்திற்கும் மோடி அரசாங்கம் வளைந்துகொடுத்திருக்கிறது. மோடியின் பயணத்தின் நிறைவில் இரு நாடுகளுக்கும் இடையே வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை இத்தகைய அணுகு முறையுடன்தான் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.இருநாடுகளுக்கும் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் ஒத்துழைப்பினை ஆழப்படுத்திட உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?இந்தியா, அமெரிக்காவிடமிருந்து இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில், 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கடல் கண்காணிப்பு ஆயுதத் தளவாடங்களை இந்தியா வாங்க இருக்கிறது.மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கிடையேயும் ராணுவ ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அமெரிக்க பகாசுர ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்கீட் மார்ட்டின், இந்திய நிறுவனமான டாடாவுடன் இந்தியாவில் கூட்டாக எப்.16 போர்விமானங்களைக் கட்டுவதற்கு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஜூலை மாதத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான கப்பல் படைகளுக்கு இடையே நடைபெறவுள்ள மலபார் கூட்டுப் பயிற்சி குறித்தும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இந்தியா அணி சேர்ந்ததற்குப்பின்னர், இவ்விருநாட்டின் தலைவர்களும் தங்கள் பிணைப்பை, ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் ‘பொறுப்புள்ள பணியாளர்கள்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். தென்சீனக் கடல் தொடர்பான இவர்களது அறிக்கை, ‘இப்பிராந்தியம் முழுவதும் கடல்வழியே பயணிப்ப தற்கும், கடலுக்கு மேல் வான்வழியே செல்வதற்கும், வணிகரீதியாக செயல்படுவதற்கும் உள்ள சுதந்தி ரத்தை மதித்திடுவதன் முக்கியத்துவம்’ குறித்தும் குறிப்பிட்டிருப்பதானது, சீனாவிடமிருந்து விலகிச் செல்ல விருப்பம் தெரிவித்து, மோடி சமிக்ஞை அளித்துவிட்டார் என்பதையே காட்டுகிறது.
வடகொரியாவுக்கு குறி
இந்த அறிக்கையில், வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைபாடும் குறிப்பிடப்பட்டிருக் கிறது. ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (DPRK)தொடர் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை எதிர்த்திட இவ்விருநாடுகளும் இணைந்து செயல்பட உறுதிகொள்கிறது’ என்று இந்தியா கூறியிருக் கிறது. ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் இத்திட்டங்களுக்கு ஒத்துழைத்திடும் அனைத்துத்தரப்பினருக்கு எதிராகவும் இணைந்து செயல்படவும்’ இந்தியா உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு இந்தியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கு எதிராக தீவிரமான முறையில் நிலைபாட்டினை மேற்கொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
அமெரிக்காவுக்கு இந்தியா தாராளம்
அமெரிக்காவிற்குள்ளேயே அதிக வேலைகளை உருவாக்குவதற்கு இந்தியா தன்னா லான அனைத்தையும் செய்திடும் என்கிற உத்தர வாதத்தை மீண்டும் டிரம்ப்புக்கு அளிக்கக்கூடிய அளவிற்கு, மோடி சென்றிருப்பதுபோலவே தோன்றுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 100 போயிங்ரக பயணிகள் விமானங்களை வாங்கிடும் என்கிறஅறிவிப்பானது, டிரம்ப்பால் வரவேற்கப்பட்டி ருக்கிறது. இது அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட உதவும் என்று அவர் கூறியிருக்கிறார். அதேபோன்று, இருநாடுகளின் கூட்டறிக்கையானது, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனிக்்கும் இந்திய அணுமின் கழகத்திற்கும் இடையே,ஆறு அணு உலைகள் வாங்குவது சம்பந்தமான இறுதிக்கட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் குறிப்பிட்டிருக் கிறது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் சமீபத்தில்தான் தன்னுடைய திவால் தன்மையை பிரகடனம் செய்திருக்கிறது. இவ்வாறு திவாலாகிப்போன நிறுவனத்தை தூக்கிப்பிடிப்பதற்கு, இந்திய மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்கிட மோடிஅரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. மேலும், மேற்படி அணுமின், திட்டங்களை நிறைவேற்றக் கூடிய விதத்தில் தோஷிபா நிறுவனத்தின் தலைமை யிலான வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்திற்குத் தற்போது போதிய அளவிற்கு வல்லமை உண்டா என்பதற்கான உத்தரவாதம் எதுவும் கிடையாது.
இந்தியச் சந்தைக்கு குறி
டிரம்ப் நிர்வாகம் தங்களை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய விதத்தில் இந்தக் கூட்டறிக்கையை உருவாக்கியுள்ள அதே சமயத்தில், இந்தக் கூட்டறிக்கையானது, இருநாடு களுக்குமிடையே சுதந்திரமான மற்றும் நேர்மையான வர்த்தகக் கொள்கைகளை உயர்த்திப்பிடித் திடுவோம் என்று வஞ்சகமானமுறையில் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை ஒருங்கிணைந்த முறையில் மறுஆய்வு செய்திட இருக்கிறோம் என்ற முன்மொழிவும்கூட, நம்நாட்டைப்பொறுத்தவரை ஓர் ஆபத்தான அறிகுறியையே காட்டுகிறது.
இதனை அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு இப்போதி ருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், வர்த்தகப் பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடைபெற்ற சமயத்தில், டிரம்ப் மோடியிடம் கூறியிருப்பதுடன் பொருத்திப் பார்த்திட வேண்டும். அமெரிக்காவில் உற்பத்தியாகும் அனைத்துவிதமான பொருட்களும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி, இனி இந்திய சந்தைக்குள் பாயும் என்பதே இதன் பொருளாகும்.‘இந்தியாவில் உற்பத்தி செய்க’ என்னும் மோடியின் முழக்கத்திற்கு அமெரிக்கா எப்படி உதவும் என்பது குறித்து கூட்டறிக்கையில் எதுவும் இல்லை. அதேபோன்று இந்தியாவின் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஒப்பந்தத்தை நிறை வேற்றிட இந்தியா பசுமைத் தொழில்நுட்பத்தை பெறுவதற்கு அமெரிக்கா எந்த விதத்தில் உதவிடும் என்பது குறித்தும் கூட்டறிக்கையில் எதுவும் இல்லை.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர் களுக்கு எச்-1பி விசா வசதிகளைத் தொடர்வது சம்பந்தமாகவும் எவ்விதமான உறுதிமொழியும் இக்கூட்டறிக்கையில் இல்லை. கூட்டறிக்கை தொடர்பாக மோடி அரசாங்கம் தம்பட்டம் அடித்துக்கொள்ளக்கூடிய ஒரே யொரு வெளிப்பாடு என்னவெனில், பாகிஸ்தான்தன் எல்லையை பிற நாடுகள் மீதான பயங்கர வாதத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தாது என்பதைஉத்தரவாதப்படுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டி ருப்பதாகும். இது, இதற்கு முன்னர் ஜனாதிபதி ஒபாமாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள அறிக்கை யுடன் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
எனினும்,டிரம்ப் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் உள்ளநிலைமைகளைச் சமாளித்திட பாகிஸ்தானைத் தான் ராணுவ சூழ்ச்சிக்கான தளமாக பார்ப்பது இப்போதும் தொடர்கிறது. மோடி பகட்டான ஆரவாரத்துடன் மும்முறைடிரம்பைக் கட்டித்தழுவிய போதிலும், இருநாடு களுக்கும் இடையேயான கூட்டறிக்கையானது, அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய விதத்திலும், இந்தியாவின் நலன்களை மிகவும் எச்சரிக்கையுடன் கண்டு கொள்ளாமல் உதாசீனம் செய்துள்ள நிலையில் இருப்பதையுமே காட்டுகிறது.
ஜூன் 29, 2017
தமிழில்: ச. வீரமணி


No comments: