Thursday, July 13, 2017

வீரப் பெண்மணிகளே... தலை வணங்குகிறோம்! (2)






மேரி டேவிஸ்
1917இல் தொழிற்சாலைகளில் பெண்கள் ஏராளமாகப் பணியில் சேர்ந்தார்கள். அங்கே வேலைபார்த்து வந்த ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டதால் அந்த இடங்களில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். 1917 பிப்ரவரி 23 அன்று (கிரிகோரியன் காலண்டரின்படி இப்போதைய மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் வேலைநிறுத்தங்களாலும், பெண்கள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்களாலும் அனுசரிக்கப்பட்டது.
இது புரட்சிக்கு இட்டுச் சென்றது என்று போல்ஷ்விக் இதழான பிராவ்தா குறிப்பிட்டது.: ‘…புரட்சியின் முதல் நாள் மகளிர் தினமாகும். … பெண்கள் … ராணுவ வீரர்களின் தலைவிதியைத் தீர்மானித்தார்கள். அவர்கள் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கொட்டடிகளுக்குச் சென்றார்கள், ராணுவ வீரர்களிடம் பேசினார்கள், அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் புரட்சியுடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள். … வீரப் பெண்மணிகளே, உங்களுக்குத் தலைவணங்குகிறோம்.’ஆயினும், பாரம்பரியமாகக் கூறப்பட்டுவரும் கருத்துக்கு முரணாக, புரட்சிகர நடைமுறையில் உழைக்கும் பெண்கள் ஈடுபட்டதன் துவக்கம்தான் இது. பூர்ஷ்வா பெண்ணியலாளர்களைப் பொறுத்தவரை இதுவே அவர்களது முடிவாக மாறிவிட்டது.
பூர்ஷ்வா பெண்கள் முதலில் எல்வாவ் (டுஎடிஎ) ஆலும், பின்னர் கெரன்ஸ்கியாலும் வழிநடத்தப்பட்ட புதிய தற்காலிக அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்றார்கள். அவர்களது பிரதானமான கோரிக்கை, ‘யுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்’ என்பதேயாகும்.இத்தகைய யுத்தத்திற்கு ஆதரவான பெண்களின் மத்தியிலிருந்துதான் ஒரு பெண்கள் பட்டாலியன் உருவாக்கப்பட்டது. ஜெர்மானியர்களையும், போல்ஷ்விக்குகளையும் எதிர்த்துப் போரிட அது கேட்டுக்கொள்ளப்பட்டது. யுத்தத்தைத் தொடர்ந்து நடத்திடுமாறு கெரன்ஸ்கியைக் கேட்டுக்கொள்வதற்காக வந்த பாங்குர்ஸ்ட், 1917 ஜூலையில் அவர்களைச் சந்தித்தார்.எனினும், பெண் தொழிலாளர்கள், முழுமையாக யுத்தத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் நின்றார்கள். இதன்காரணமாக அவர்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாகத் தொடர்ந்தது.
சேவைத் தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைக்கூட வேலைக்குத் திரும்புமாறு அவர்களால் கேட்டுக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, 1917 மார்ச் மாதத்தில், சோஃபியா கொன்சார்ஸ்கயா என்னும் போல்ஷ்விக்கால் தலைமை தாங்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் நான்கு வாரங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தார்கள்.1917 ஏப்ரலில் ஒரு லட்சம் ராணுவவீரர்களுடைய மனைவிகள், பேரணியாகச் சென்று, ‘சிறந்த ரேஷன் வழங்கு’, என்றும் ‘யுத்தத்திற்கு முடிவு கட்டு’ என்றும் முழக்கமிட்டார்கள். கொலந்தாய் இவர்களது பேரணியில் உரையாற்றினார். போல்ஷ்விக்குகள் பெண்களின் மத்தியில் கிளர்ச்சிப் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக செயல்பட்டார்கள். பெண்களின் இதழான ரபோட்னிஸ்டா மீண்டும் வெளிவந்தது. அதன் விற்பனை 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை சென்றது.
நதேழ்தா குரூப்ஸ்கயா மற்றும் இனெஸ்ஸா அர்மாண்ட் இதன் ஆசிரியர் குழுவிலிருந்து செயல்பட்டார்கள்.புரட்சிக்கு எதிராக ஆகஸ்ட்டில் சதியில் ஈடுபட்ட கொர்னிலாவின் முயற்சிகளை எதிர்ப்பதில் பெண் தொழிலாளர்கள் மிகவும் முனைப்புடன் செயல்பட்டார்கள். அவர்கள் தடை அரண்களை எழுப்புவதில் உதவியதுடன், ‘செஞ் சகோதரிகள்’ (‘சுநன ளுளைவநசள’) என்ற பெயரில் மருத்துவ உதவிகளுக்கும் ஏற்பாடு செய்தார்கள். செப்டம்பரில், சமய்லாவா பெண் தொழிலாளர்களின் முதல் மாநாட்டை நடத்தினார். அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் அது மீண்டும் கூட்டப்பட்டது.புரட்சிக்கு முன்பும் பின்பும் கூட ஏராளமான பெண்கள் செஞ் சேனையினராகத் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். படைவீரர்களாகவும் சென்று போரிட்டுள்ளனர்.புரட்சிக் காலத்தில் பெண்கள் ஆற்றிய பங்களிப்பிற்கு முக்கிய சான்றாவணமாகத் திகழ்வது, அக்டோபர் 18 அன்று சோசலிஸ்ட் அரசாங்கம் பிறப்பித்த முதல் ஆணைகளில் ஒன்று, திருமணம் மற்றும் குடும்பம் குறித்த சட்டம் ஆகும்.
இந்தச் சட்டம், பெண்களின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக உறவுகளின்மீது ஒரு புரட்சிகரமான பார்வையை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது.ரஷ்யப் புரட்சியின் பெண்களின் பங்களிப்பு குறித்து 1920இல் செட்கின்னுடன் நடைபெற்ற உரையாடலின்போது தோழர் லெனின் மிகவும் சிறப்பாகத் தொகுத்தளித்திருக்கிறார். அப்போது அவர், ‘பெண் தொழிலாளர்கள் புரட்சியின்போது மிகவும் அற்புதமானமுறையில் செயல்பட்டார்கள். அவர்களில்லாமல் எங்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது’ என்று கூறினார்.இப்போது, நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தோழர் லெனின் கூறிய வார்த்தைகள், பெண்களின் புரட்சிகரப் பங்களிப்பு குறித்த முனைப்பான நினைவூட்டலாக இருந்திட வேண்டும்.
(நன்றி: மார்னிங் ஸ்டார்)
(கட்டுரையாளர்: பிரிட்டனில்,  ராயல் ஹாலோவேயில் உள்ள லண்டன் பல்கலைக் கழகத்தின், தொழிலாளர் வரலாற்றுத்துறை, வருகைப் பேராசிரியராவார்)
(தமிழில் : ச.வீரமணி)

No comments: