Showing posts with label price rise. Show all posts
Showing posts with label price rise. Show all posts

Wednesday, July 27, 2016

ஊகவணிகத்திற்குத் தடை விதித்திட வேண்டும் - மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு





ஊகவணிகத்திற்குத் தடை விதித்திட வேண்டும்
மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

புதுதில்லி, ஜூலை 28-

நாட்டில் உணவுப் பொருள்களை வாங்கும் மக்களும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள், அவற்றை உற்பத்தி செய்த விவசாயிகளும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இடையில் வர்த்தகம் செய்யும் இடைத்தரகர்கள்தான் ஊக வர்த்தகத்தின் மூலம் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள். எனவே ஊக வர்த்தகத்தைத் தடை செய்ய இந்த அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதன் அன்று விலைவாசி உயர்வு குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
“மக்களின் வாழ்வோடும் சாவோடும் சம்பந்தப்பட்டிருக்கிற மிகு முக்கியமான பிரச்சனை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் எங்கள் கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் இப்பிரச்சனை மீது கிளர்ச்சிப் பிரச்சாரம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் இவற்றில் பங்கேற்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
பொதுவான அம்சம் என்னவென்றால் அத்தியாவசியப் பண்டங்கள் அனைத்தின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றன. இங்கே அரசுத்தரப்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் அமைச்சகங்களின் சார்பில் தாக்கல் செய்துள்ள எண்ணற்ற விவரங்கள்,   கடந்த 22 மாதங்களில் ஒட்டுமொத்த சில்லரை பணவீக்கம் 5.7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பதாகும். இது அரசுத்தரப்பில் தரப்பட்டிருக்கிற புள்ளிவிவரம். உணவுப் பொருள்களின் பணவீக்கம் 8 சதவீதத்தை நெருங்கும். “உணவு எரிந்து கொண்டிருக்கிறது’’ என்று ஊடகங்கள் எழுதியுள்ளன. இது தலைப்புச் செய்தி. உருளைக் கிழங்கு விலை 65 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பருப்பு மற்றும் பயறு வகைகளின் விலைகள் 27 சதவீதமும், காய்கறிகளின் விலைகள் 17 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு அத்தியாவசியப் பொருள்களின் தொடர் விலை உயர்வு மூலம் அரசாங்கம் மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் சார்பில் இங்கே பேசிய உறுப்பினர்கள் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளும் காரணம் என்றும், உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்போர் மற்றும் கள்ளச்சந்தைக்காரர்கள் மீது அவை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். அது உண்மை தான்.  அதனை நான் மறுக்கவில்லை. அதனைச் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்திட மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
இன்றைய தினம் பருப்பு வகைகளின் விலை என்ன? 2014க்கும் 2016க்கும் இடையில் இவற்றின் விலைகள் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளன.  இதற்கு கள்ளச்சந்தை மட்டும் காரணம் அல்ல. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளும் காரணமாகும்.
மத்திய அரசு எரிபொருள்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருப்பது, பணவீக்க விகிதத்தை அதிகரித்திடும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.  எரிபொருள்களின் விலைகள் உயரும்போது, போக்குவரத்துக் கட்டணங்களும் உயரும்.
இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சமயத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 106 டாலர்களாக இருந்தது. இது 2016 ஜனவரியில்  பேரலுக்கு 26 டாலர்கள் என்று குறைந்துவிட்டது.  இப்போது ஜூலையில் அது பேரலுக்கு 40 டாலர்கள் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இவ்வாறு 106 டாலரிலிருந்து 26 டாலராக வீழ்ச்சி அடைந்தபோதிலும்,  இந்த அரசு என்ன செய்தது? டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலைகளைத் தொடர்ந்து ஏற்றியது. சுத்திகரிக்கப்பட்டு,  பெட்ரோல் பம்புகளுக்கு ரூ. 25.10 கொடுக்கப்பட்டபோதிலும், மக்களுக்கு லிட்டருக்கு ரூ.54.30க்கு விற்றது. இவ்வாறு இரு மடங்கு விலை வைத்து மக்களுக்கு விற்றது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.62.56 ஆகும். இது தில்லியின் நிலை. சுத்திகரிப்பு நிலையங்களில் இதற்கு ஆகும் செலவு வெறும் ரூ.22.94தான். இதைவிட 40 ரூபாய் அதிகமாக மக்களிடம் கறக்கப்படுகிறது. ஏன்? ஏனெனில் இந்த அரசாங்கம் தான் இதற்குக் காரணமாகும். 
இந்த அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை ஒன்பது தடவைகள் உயர்த்தி இருக்கிறது. இதன் விளைவாக பெட்ரோலுக்கு லிட்டருக்கு 40 ரூபாய் அதிகமாக மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று டீசலுக்கு லிட்டருக்கு 35 ரூபாய் அதிகமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவைதான் நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக பணவீக்கம் உயர்வதற்குக் காரணமாகும்.
இவ்வாறு பணவீக்கம் உயர்ந்ததற்கு முழுமையாக மத்திய அரசே காரணம். எந்தவொரு மாநில அரசும் கிடையாது. மக்களைக் கசக்கிப்பிழிந்து இந்த அரசு தன் வருவாயை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு எரிபொருள் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் மக்களை ஒரு பக்கத்தில் கசக்கிப்பிழியும் அதே சமயத்தில் வேறு பல வழிகளிலும் அவர்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரு ஆண்டுகளாக இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ள செஸ் (cess) என்னும் கூடுதல் வரி விதிப்பைப் பாருங்கள். புதிய செஸ் வரிகள் என்பவை யாவை?  இது தொடர்பாக ஒரு நீண்ட பட்டியலே வெளியிடப்பட்டிருக்கிறது.   இவ்வாறு புதிய செஸ் வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 2015-16ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சேவை வரி (service tax) 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.  தூய்மை இந்தியா (ஸ்வாச் பாரத்) செஸ் வரி 0.5 சதவீதம், கிருஷி கல்யாண் செஸ் வரி 0.5 சதவீதம், வாகனங்கள் மீதான உள்கட்டமைப்பு செஸ்வரி, வாகனங்களின் வகைக்கேற்ப 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரை, சுத்தமான சுற்றுச்சூழல் செஸ்வரி (இது முன்பு சுத்தமான எரிசக்தி செஸ் வரி என்று அழைக்கப்பட்டது) இப்போது இரண்டு மடங்காகி இருக்கிறது. இவையன்னியில் எண்ணெய் வளர்ச்சி செஸ்வரி. இது டன்னுக்கு 4500 ரூபாயாக இருந்தது, இப்போது 20 சதவீதம் மதிப்பீட்டு வரியாக (ad valorem) அதிகரிக்கப்பட்டிருக்கிறது. Ad valorem என்பதன் பொருள்  வரிகளையும் சேர்த்து என்ன விலையோ அது. இதன்மீது 20 சதவீதம் எண்ணெய் வளர்ச்சி செஸ் வரி விதித்திருக்கிறார்கள். அடுத்து இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி செஸ்வரி. இது 2015ஆம் ஆண்டுவரை 64 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்விக்காக இதிலிருந்து ஒரு காசு கூட செலவழிக்கப்படவில்லை.  இந்த செஸ்வரிகள் அனைத்தும் அரசின் கஜானாவிற்குத்தான் சென்று கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து செஸ்வரிகளையும் ஒருங்கிணைத்தால் இவை சாமானிய மக்கள் மீதான கூடுதல் சுமையாகும்.  இத்தகைய செஸ்வரிகளும் விலைவாசி உயர்வுக்குக் காரணமாகும்.
இந்த செஸ்வரிகளை யார் செலுத்துகிறார்கள்? நுகர்வோர்தான் செலுத்துகிறார்கள். இவ்வாறு நுகர்வோர் அனைத்து செஸ்வரிகளையும் செலுத்தும்போது அது பணவீக்கத்திற்கு இட்டுச் செல்கிறது.
இந்த செஸ்வரிகளிலிருந்து மாநில அரசுகளுக்கு எதுவும் செல்வதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உண்மையில் செஸ்வரி மூலம் ஈட்டப்படும் தொகை முழுவதுமாக மத்திய அரசுக்குத்தான் சொந்தம். இதில் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாது.
இன்றையதினம் பணவீக்கம் அதிகரிக்கிறது என்றால் அதற்கு மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள்தான் காரணம். மத்திய அரசு மட்டுமே இதற்குப் பொறுப்பாகும். எனவே, என்ன செய்யப்பட வேண்டும்?
நாடு முழுவதும் மிகவும் வறிய நிலையில் உள்ளது. நாட்டின் வேலையின்மையின் வளர்ச்சி விகிதம் குறித்து இங்கே பேசிய அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தார்கள்.
மாண்புமிகு வணிகத்துறை அமைச்சர் 1.35 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் தெரிவித்திருக்கிறார். ஒவ்வோராண்டும் வேலை சந்தைக்குள் புகுந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா? 1 கோடியே 30 லட்சம் இளைஞர்களாகும். ஆனால் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் வேலைகளோ 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அதாவது 1 சதவீதம் மட்டுமே.
இவ்வாறு வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் உண்மையில் மக்களைக் கொன்றுகொண்டிருக்கிறது.  இவை சொல்லொண்ணா அளவிற்கு வறுமையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மக்கள் மீது நேரடியான தாக்குதல்களை மத்திய அரசு ஏவிக் கொண்டிருக்கிறது.
மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளைக் குறைத்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். வருவாயைப் பெருக்குவதற்காக மக்களை இவ்வாறு பல வழிகளில் கசக்கிப்பிழியும் மத்திய அரசு, அவர்களின்  குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளுக்காக, அவர்களின் வாழ்வுக்காக ஏதாவது செய்திட வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் மீது ஒன்பது தடவைகள் கலால் வரியை உயர்த்தி இருக்கிறது. எண்ணற்ற செஸ் வரிகள் மூலம் ஏராளமாக வசூல் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக இவற்றிலிருந்து என்ன செய்திருக்கிறார்கள்?
அடுத்து, இந்த அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை என்பது, அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் மீதான ஊக வர்த்தகத்தைத் (forward trading and futures trading) தடை செய்திட வேண்டும். இது மிகவும் முக்கியம். ஏனெனில் ஊக வர்த்தகம் அனைத்தையும் தங்கள் கைகளுக்குள் எடுத்துக் கொள்கிறது. முன்பு அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் பயறு வகைகள், ஜீனி, உருளைக் கிழங்கு மட்டும்தான் இதன்கீழ் இருந்தது. இப்போது  அனைத்து அத்தியாவசியப் பண்டங்களும் இதன் கீழ் வந்திருக்கிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்.
முன்பொருதடவை இவ்வாறு தடை விதித்தோம். அத்தியாவசியப் பண்டங்களை ஊக வர்த்தகத்திலிருந்து விலக்கி வைத்தோம். ஆறு மாதங்களுக்குள்ளாகவே அவற்றின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. ஆயினும் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம். இதனை இந்த அரசு உடனடியாகச் செய்தாக வேண்டும்.
அடுத்து முக்கியமான பிரச்சனை, விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கம் ஆகும். பணவீக்கம் என்பது என்ன?
பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில், பணவீக்கம் என்பதன் பொருள் வருமானம் நுகர்வோரிடமிருந்து பெற்று உற்பத்தியாளருக்கு மறுவிநியோகம் செய்யப்படுகிறது  என்பதாகும். அதாவது, நுகர்வோர் அதிகம் கொடுத்தால், உற்பத்தியாளர் அதிகம் ஈட்டுகிறார் என்று அர்த்தம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ஏழைகளிடமிருந்து பிடுங்கி பணக்காரர்களிடம் கொடுப்பது என்று அர்த்தம். இத்தகைய மறுவிநியோகம்தான் இப்போது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.  இதன்காரணமாக நாட்டில் நாட்டு மக்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகமாகி இருக்கின்றன. 
இன்றைய தினம் நாட்டில் 100 (அமெரிக்க டாலர்) பில்லியனர்களைப் பெற்றிருக்கிறோம்.  அதாவது  நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிலிருந்து, பாதி அளவு வரைக்கும் இடையிலான சொத்தின் மதிப்பை மேற்படி நூறு பில்லியனர்களும் பெற்றிருக்கிறார்கள்.
நம் நாட்டின் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ன கூறுகிறது? இந்தியாவில் உள்ள 90 சதவீதம் குடும்பங்கள் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஈட்டிக் கொண்டிருக்கிறது. இந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒருசில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்திருக்கிறது.
இதுதான் வித்தியாசம். பணவீக்கம் என்பதன் பொருள் நாட்டிலுள்ள ஏற்றத்தாழ்வை மேலும் அதிகப்படுத்துவது என்பதேயாகும். அதாவது ஏழைகளிடமிருந்து கசக்கிப் பிழிந்து வாங்கி, பணக்காரர்களுக்குக் கொடுப்பது.
இத்துடன் இந்தியாவில் மேலும் ஒரு கூடுதலான அம்சத்தையும் பார்க்கிறோம். பொருளாதாரத் தத்துவங்கள் இதனை விளக்கிடவில்லை.
நம் நாட்டில் உண்மையில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தவர்கள் இதனால் பயனடையவில்லை. இவ்வாறு விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள்தான் அதிகமான அளவில் பயன் அடைந்திருக்கிறார்கள்.
உதாரணமாக பருப்புகள் குறித்து எடுத்துக் கொள்வோம்.  நாம் பருப்பு வகைகளை வாங்குகிறோம். ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த பருப்பை விற்பதற்காக அவருக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.50.50 கொடுக்கிறோம். ஆனால் சந்தையில் அதன் விலை என்ன தெரியுமா? ரூ. 120. அதே பருப்பை இறக்குமதி செய்வதற்கு என்ன விலை கொடுக்கிறோம், தெரியுமா? ரூ. 152. மக்களுக்கு அளிப்பதற்காக இவ்வாறு இறக்குமதி செய்கிறோமாம். நம் விவசாயிக்குக் கொடுப்பது கிலோவிற்கு ரூ.50.50. ஆனால் அதனை சந்தையில் விற்கும்போது அதன் விலை ரூ.120. யார் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு பொருளாதாரத் தத்துவத்தையே இங்கே நாம் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு இந்தியாவில், பணவீக்கத்தின் காரணமாக நுகர்வோர் அவதிப்படவில்லை, உற்பத்தியாளர் ஆதாயம் அடையவில்லை. மாறாக நுகர்வோரும் அவதிப்படுகிறார், பொருள்களை உற்பத்தி செய்த விவசாயிகளும் அவதிப்படுகிறார்கள், ஆனால் இடையில் வந்துள்ள இடைத்தரகர்கள் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு அரசின் கொள்கைகளால் இத்தகைய இடைத்தரகர்கள்தான் கொழுத்திருக்கிறார்கள். இதனைக் கட்டுப்படுத்திட வேண்டும் என்று கோருகிறோம்.
நீங்கள் உண்மையிலேயே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இத்தகைய இடைத்தரகர்களின் ஊக வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(.நி.)

Sunday, March 21, 2010

விலைவாசி உயர்வு: மனஉறுத்தலே இல்லாதிருக்கும் மத்திய அரசு



தலையங்கம்:

மத்திய அரசு, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருப்பது குறித்து இதுநாள்வரை மனஉறுத்தல் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு வந்ததைக்கூட, தற்போது அது அதிகாரபூர்வமாகக் கைவிட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதங்களுக்குத் தொகுப்புரை வழங்கிய சமயத்தில், நிதியமைச்சர், ‘‘மார்ச் மாதத்திற்குள்ளேயே பணவீக்கம் இரு இலக்கத்தை எட்டினால்கூட நான் ஆச்சர்யப்பட மாட்டேன்’’ என்று எவ்வித கூச்சநாச்சமுமின்றி, தெரிவித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல, அவர் மேலும் ஒருபடி மேலே சென்று, நாட்டில் இதற்கு முன்பும் பலமுறை இவ்வாறு உயர் விகிதத்தில் பணவீக்கம் இருந்ததென்றும், எனவே இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஆண்டில் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர், ‘‘விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது’’ என்று கூறியதையே நிதியமைச்சர் இவ்வாறு எதிரொலித்திருக்கிறார். தங்கள் கையறுநிலையைத் தெரியப்படுத்தியுள்ள அரசாங்கம், விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பைக் கைவிட்டதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இவ்வாறு விலைவாசி உயர்வினால் ஆளும் வர்க்கங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் வழிவகுத்துக் கொடுத்திருப்பதுதான் அதைவிடக் கொடுமையாகும். இவ்வாறு ஒளிரும் இந்தியனை மேலும் ஒளிரச் செய்வதற்கும், அவதிப்படும் இந்தியனை மேலும் மோசமான முறையில் அவதிக்குள்ளாக்குவதற்கும் ஆட்சியாளர்கள் வழிவகுத்துத் தந்திருக்கிறார்கள்.

நாம் இந்தப் பகுதியில் எங்ஙனம் அரசு, நேரடி வரிமீதான சலுகைகள் மற்றும் பல்வேறு விதமான வரிச் சலுகைகள் மூலம் கார்பரேட் நிறுவனங்களும் உயர்நிலையில் வருமானவரிக் கட்டுபவர்களுக்கும் நாட்டின் வளங்கள் மிகப் பெரிய அளவில் செல்வதற்கு,மிகவும் வெட்கங்கெட்ட முறையில் பட்ஜெட்டில் பல வழிகளை வகுத்துத் தந்திருக்கிறது என்பதை விளக்கி இருக்கிறோம். அதே சமயத்தில், சாமானியர்களோ மறைமுக வரிகளை அதிகரித்திருப்பதன் மூலம் மேலும் அவதிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். எரிபொருள் மற்றும் ரசாயன உரங்களின் விலை உயர்வுகள் பெரும்பகுதியாக உள்ள சாமானிய மக்களின் வறுமைநிலைமையை மேலும் மோசமானதாக்கிடும். பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஒரு ஏற்றம் காணப்பட்டதற்கும் இவ்வாறு பணக்காரர்களுக்குப் பல்வேறு வாய்ப்புவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டதுதான் காரணமாகும்.

பட்ஜெட்டில் காணப்பட்ட பல அம்சங்களும் இயற்கையாகவே பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இருந்ததால், மொத்த விலைவாசிக் குறியீட்டெண் (Wholesale Price Index) கடந்த பதினாறு மாதங்களில் கடந்த பிப்ரவரியில்தான் உயர்ந்த அளவிற்கு 9.89 விழுக்காட்டு நிலையைத் தொட்டது. எரிபொருள்களின் விலை உயரவும், கலால் தீர்வைகளை உயர்த்தியதும்தான் இந்த உயர்வுக்குப் பிரதான காரணங்களாகும். மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பிரதான உணவுப் பொருள்களான பருப்பு வகைகள் மற்றும் தான்யங்களின் பணவீக்க அளவு, முந்தைய ஆண்டைவிட முறையே 11.79 மற்றும் 35.58 விழுக்காடு அதிகமாகும். சீனி விலை 55.45 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.

நாடாளுமன்றத்திலும், நாடு முழுதும் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணிகளிலும், தில்லியில் மார்ச் 12 அன்று நடைபெற்ற இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியிலும் இடதுசாரிக் கட்சிகள் பரிந்துரைத்தது போன்று, விலைவாசியைக் கட்டுப்படுத்திட, ஐமுகூ -2 அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வில்லை. மாறாக பணக்காரர்களுக்கு அதிக அளவு ஆதாயங்களை அளிக்கும் வகையில்தான் நடந்துகொண்டு வருகிறது.

இன்றியமையப்பண்டங்கள் அனைத்தின் மீதும், முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆயினும் இதனைச் செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது. ஏனெனில் ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவோருக்கு இது கொள்ளை லாபத்தை அளிப்பதால், அவர்களுக்கு ஆதரவாக அரசு இதனைச் செய்ய மறுக்கிறது. ஊக வர்த்தகத்தில் விவசாயம் சார்ந்த உணவுப் பண்டங்கள் தொடர்பான ஊக வர்த்தகத்தில் மட்டும் 2009 ஏப்ரல் 1க்கும் 2010 ஜனவரி 30க்கும் இடையேயான வர்த்தகம் 102.59 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இதன் மதிப்பு என்பது சுமார் 10 லட்சத்து 13 ஆயிரத்து 379 கோடியே 97 லட்சம் ரூபாயாகும். ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எவரொருவரும் அவர்கள் விற்பனை செய்திடும் பொருள்களின் விலைகள் முன்பைவிட உயர்வாக இருந்தால்தான் விற்க வருவார்கள். அவர்கள் கொள்ளை லாபம் அடிக்க வேண்டுமானால் அவர்கள் விற்பனை செய்திடும் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்திட வேண்டும். இவ்வாறு இவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக அப்பாவி சாமானிய மக்கள் அதிக விலைகொடுத்து பொருள்களை வாங்க வேண்டியிருக்கிறது.
அடுத்து நாம் கிடங்குகளில் உள்ள உணவு தான்யங்களை விடுவித்து பொது விநியோக முறை மூலம் மக்களுக்கு அளித்திடக் கோரினோம். பொருளாதார ஆய்வறிக்கையின்படி எதிர்பார்த்த உணவு தான்ய விளைச்சல் 200 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமைதான். ஆனால் அதைவிட அதிகமாக சுமார் 474.45 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் இருக்கின்றன. இவற்றை எலிகளுக்கு இரையாக்கிடாமல், வெளியில் எடுத்து மக்களுக்குப் பொது விநியோக முறையில் பகிர்ந்து கொடுத்தால் அதன் மூலம் ஏறிவரும் விலைவாசியைக் கணிசமான அளவிற்குக் கட்டுப்படுத்த முடியும் என்றோம்.

ஆனால் நாம் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எதையும் எடுத்திட அரசு மறுத்துள்ள அதே சமயத்தில், எரிபொருள் மற்றும் ரசாயன உரத்தின் விலையையும் உயர்த்தி வெட்கங்கெட்டமுறையில் அதனை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறது. இவ்வாறு அரசு, நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பணக்காரர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, நாட்டின் பெரும்பகுதி மக்களின் தோள்களில் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது.

பணவீக்கம் என்பது வருமானப் பகிர்வை உற்பத்தியாளருக்கு சாதகமாகவும், நுகர்வோருக்குப் பாதகமாகவும் மாற்றக்கூடிய அற்புதமான ஒரு பொருளாதார வழியாகும். முதலாளித்துவத்தின் கீழ் இதுதான் நடைபெறும். ஆயினும், நம்மைப் போன்ற முதலாளித்துவ நாடுகளில், பணவீக்கத்தால் பயனடைவோர் உற்பத்தியாளர்கள் அல்ல. மாறாக, உற்பத்தியாளர்களுக்கும் நுகர் வோருக்கும் இடையே இடைத்தரகர்களாகச் செயல்படுபவர்கள்தான் அதிகமான அளவில் பயனடைவார்கள். நாட்டு மக்களுக்கு உணவை அளித்திடும் உழவர்கள், கடன் சுமையைத் தாங்கு முடியாது, தொடர்ந்து தற்கொலைப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் ஏறும் விலைவாசியால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி, தத்தளிக்கும் நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இடைத்தரகர்கள் மட்டும் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள்.

நாட்டில் மக்கள் இயக்கங்களை வலுப்படுத்துவதன் மூலமாக மட்டும்தான், இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளைஅமல்படுத்தும் ஐமுகூ - 2 அரசாங்கத்திற்கு அதன் கொள்கைகளை மாற்றியமைக்க நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். மார்ச் 12 அன்று இடதுசாரிக் கட்சிகளின் பிரம்மாண்டமான எதிர்ப்புப் பேரணியை அடுத்து வரும் ஏப்ரல் 8 அன்று, நாடு முழுதும் மாவட்டத் தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் செய்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்திட இருக்கிறோம். இவ்வாறு வீரஞ்செறிந்த மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான், ஐமுகூ 2 அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நாசகர மக்கள் விரோதக் கொள்கைகளை மாற்றியமைத்திட முடியும்.

(தமிழில்:ச.வீரமணி)