Showing posts with label editorial. Show all posts
Showing posts with label editorial. Show all posts
Thursday, December 17, 2020
Friday, August 19, 2016
இந்தியா, தேசத் துரோக சட்டப்பிரிவை கிழித்தெறிய வேண்டிய தருணம் வந்துவிட்டது
இந்தியா, தேசத் துரோக
சட்டப்பிரிவை கிழித்தெறிய வேண்டிய தருணம் வந்துவிட்டது
பேச்சுரிமை என்பது ஜனநாயகத்தின்
முத்திரைக்கல்லாகும். தேசத்துரோக சட்டப்
பிரிவுகளுக்கு அதில் இடம் இல்லை. எனினும், இந்தியத் தண்டனைச் சட்டத்தில்
தேசத்துரோகம் சம்பந்தமான 124-அ பிரிவு இன்னமும் நீடிக்கிறது. சுமார் 55
ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்றம், தேசத்துரோகம் என்பதன் வரம்பு குறித்து
வரையறுப்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவுக்கும், இந்தியத் தண்டனைச்
சட்டத்தின் 124-அ பிரிவுக்கும் இடையிலான பிரச்சனைக்குரிய உறவுமுறை குறித்து தெளிவுபடுத்தி
இருந்தது. ஆயினும், அதனைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, அதன்பின் தொடர்ந்து
வந்த மத்திய, மாநில அரசுகள் அனைத்துமே தங்கள் மனம்போனபடி தேசக்குற்றச்சாட்டுக்களை
பிரயோகித்தன. கீழமை நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றம் இதுகுறித்து அளித்துள்ள
தெளிவான தீர்வறிக்கைகள் குறித்து கவலைப்படாது, அரசுகள் கூறுவதை அப்படியே
ஏற்றுக்கொண்டு, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் உயர்நீதிமன்றம் மற்றும்
உச்ச நீதிமன்றத்தால் அவற்றின் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
1962இல்,
கேதார் நாத் சிங் (எதிர்) பீகார் மாநில அரசு என்னும் வழக்கில், தலைமை நீதியரசர்
புவனேஷ்வர் பிரசாத் சின்கா என்பவர் தலைமையிலான அரசமைப்புச்சட்ட அமர்வாயம்,
தேசத்துரோகம் குறித்து ஐயந்திரிபற தெளிவானதோர் வரையறையை அளித்தது. அரசாங்கத்தை
வன்முறை சாதனங்கள் மூலமாக மற்றும்/அல்லது சீர்குலைவு உருவாக்கும் எண்ணத்துடன்,
அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்திடும் எண்ணத்துடன் வன்முறையில் ஈடுபட்டிருக்க
வேண்டும். அரசாங்கத்தையோ அல்லது நிர்வாகத்தையே விமர்சனம் செய்வது, அது
என்னதான் காரமானதாக இருந்தாலும் அல்லது
தவறான தகவலாக இருந்தாலும், தேசத்துரோக வரையறைக்குள் வராது. வன்முறையைத் தூண்டுவது
என்பது அதன் மூக்கிய மூலக்கூறாகும். இது
23 ஆண்டுகள் கழித்து, நீதியரசர்கள் ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் பைசுனாதீன் ஆகியோரால்
பல்வந்த் சிங் (எதிர்) பஞ்சாப் மாநில அரசு வழக்கில் மீளவும் வலியுறுத்தி
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தேசத்துரோகம் என்பதை ஈர்ப்பதற்கு
எதுவெல்லாம் காரணிகளாக இருக்கும் என்று மிகவும் தெளிவாக உச்சநீதிமன்றத்தினால்
வரையறுத்து கூறப்பட்டுள்ள போதிலும், தேசத்துரோக வழக்குகள் தங்கள் முன் விசாரணைக்கு
வரும்போது, அவற்றையெல்லாம் கீழமை நீதிமன்றங்கள் பிரயோகிக்கத் தவறிவிடுகின்றன.
நீதித்துறையின் கீழ் மட்ட அளவில் உயர்நீதித்துறை அளிக்கின்ற தீர்வறிக்கைகள்
குறித்து கவலைப்படுவதே கிடையாது. உயர் அளவிலான நீதித்துறைக்கும் கீழ் மட்டத்திலான
நீதிமன்றங்களுக்கும் இடையில் இருக்கின்ற இந்த இடைவெளியை சரி செய்திட ஏன் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை?
1951இல் ஜவஹர்லால் நேரு, “தேசத் துரோக சட்டப்பிரிவு மிகவும் ஆட்சேபகரமானது மற்றும்
அருவருப்பானது. … எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக, அதனை
ஒழித்துக்கட்டுவது நல்லது,” என்று
குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் செய்யவில்லை. விரைவாக மட்டுமல்ல, பின்னர்
வந்தவர்கள் தாமதமாகவும்கூட இதனைச் செய்யவில்லை. தேசத் துரோக சட்டப்பிரிவுகளைக்
கிழித்தெறிய வேண்டிய தருணம் இதுவேயாகும்.
(நன்றி: தி எகனாமிக்
டைம்ஸ், 2016 ஆகஸ்ட் 19 தலையங்கம்)
தமிழில்: ச. வீரமணி
Sunday, October 25, 2009
இந்துத்வா சக்திகளின் வன்முறை வெறியாட்டங்களை முறியடிப்போம்

இந்துத்துவா சக்திகள் மீண்டும் ஒருமுறை தங்களுடைய கோரமான முகத்தினை உயர்த்தியுள்ளன. கோவாவில் மட்கானில் வெடிகுண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலை நடத்தியதாக, சனாதனா சன்ஸ்தா என்னும் அமைப்பானது ஒப்புக் கொண்டிருக்கிறது. மகாராஷ்ட்ராவில் தேர்தலுக்கு முன்னதாக சங்லி மற்றும் கோலாபூர் மாவட்டங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்களிலும் இந்த அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. சங்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணபிரகாஷ், ‘‘சனாதன சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கலவரங்களின்போது இந்துக்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாகவும், வாள்கள், சங்கிலிகள் ஆகியவற்றை ஒரு காரில் சனாதன சன்ஸ்தா அமைப்பினர் எடுத்துச் சென்றுள்ளார்கள் என்றும் எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன’’ என்று கூறியிருக்கிறார் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்). உண்மையில், மகாராஷ்ட்ரா, பயங்கரவாத எதிர்ப்புக் குழு (ATS - Anti Terrorism Squad)வும், வீரமரணம் எய்திய அதன் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரேயும், மகாராஷ்ட்ரா மாநிலம் தானேயில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, 2008 ஜூன் மாதத்திலேயே சனாதன சன்ஸ்தா அமைப்பைத் தடை செய்திட வேண்டும் என்று கேட்டிருந்தார். பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தற்போதைய தலைவரும் கூட, இந்த அமைப்பினைத் தடை செய்திடுமாறு ஒரு முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டதென்றும், ஆனால் அதன் தற்போதைய நிலைமை என்ன வென்று தனக்குத் தெரியாதென்றும் கூறியிருக்கிறார்.
சனாதன சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் ஆறு பேரை பயங்கரவாத எதிர்ப்புக் குழு கைது செய்திருப்பதன் பின்னணியில் இவ்வாறு பரிந்துரைகள் அனுப்பப் பட்டிருக்கின்றன. 2008 செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற மலேகான் வெடிகுண்டு தாக்குதலிலும் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் டியோலாலி மற்றும் நாசிக் நகர்களில் சதியாலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். மேலும், மலேகான் வெடிகுண்டு விபத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகேஷ் தாவாடே, 2003 ஜூனில் சின்கார் கோட்டை அருகே பஜ்ரங்தளத்தினருக்காக ஒரு பயிற்சி முகாமையே நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் இப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சில அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாக வந்த தகவல்களைச் சுட்டிக்காட்டி அவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தோம்.
‘‘நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுள்ள வெடிகுண்டு தாக்குதல்களில் பஜ்ரங் தளம் அல்லது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் வேறு பல அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதாக, காவல்துறையின் புலனாய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. 2003இல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில்ல பர்பானி, ஜால்னா மற்றும் ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல், 2006இல் நாண்டட் தாக்குதல், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு, கான்பூரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் போன்ற இவை அத்தனையிலும் பஜ்ரங் தளம் அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழான ஏதேனும் ஒரு துணை அமைப்பு ஈடுபட்டிருந்தது ,’’ என்று 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அதன்பின்னர், 2008 செப்டம்பர் 29 அன்று, பயங்கரவாத எதிர்ப்புக் குழு, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ள எண்ணற்றவர்களைச் சுற்றிவளைத்து, விசாரணை செய்து, நாசிக், போன்சாலா ராணுவப் பள்ளியைச் சேர்ந்த கமாண்டண்ட் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாகூர் உட்பட பலரைக் கைது செய்தது.
இந்துக்களுக்குத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பதென்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ‘‘இந்து நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசியல் பயிற்சியும் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டு அனைவரையும் முழு இந்துக்களாக்க வேண்டும்’’ என்பதே சாவர்கர் வைத்த கோஷம். இதனால் உத்வேகம் அடைந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஹெக்டேவார் அவர்களின் குருவான டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். சந்திப்பு 1931 மார்ச் 31 அன்று நடைபெற்றது. அவர் மார்ச் 20 அன்று தன் சொந்த நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ள வாசகங்களிலிருந்து, இத்தாலிய பாசிசம் எங்ஙனம் தன் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது என்று மிகவும் வியந்து, பாராட்டி, எழுதியிருக்கிறார். பின்னர் அவர் இந்தியா திரும்பியபின், 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்விக் கழகம் (Central Hindu Military Education Society) என்னும் அமைப்பினை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும். கோல்வால்கர், 1939இல், ஹிட்லர் யூதர்களைப் பூண்டோடு துடைத்தழித்திட நாசி பாசிசம் குறித்து குதூகலம் அடைந்து, ‘‘இந்துஸ்தானில் இருக்கிற நமக்கெல்லாம் இது நல்லதொரு பாடம் என்றும், இதனை நன்கு கற்று, ஆதாயம் அடைய வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார். சமீபத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வினை அடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொடுக்குகளான விசுவ இந்து பரிஷத்தும், பஜ்ரங் தளமும் ‘‘கர சேவகர்களுக்கு’’ப் பயிற்சி அளித்தது குறித்து பெருமைப்பட்டதைப் பார்த்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் முதல்வராக இருந்தவர், ‘‘பாபர் மசூதியை, தொழில்ரீதியான ஒப்பந்தக்காரர்களைவிட மிகவும் வேகமாகவும், திறமையாகவும் தகர்த்திட்ட கரசேவகர்களின் செயல் குறித்து மிகவும் பெருமைப்படுவதாக’’, வெளிப்படையாகவே கூறினார்.
இந்தப் பின்னணியில்தான், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் ‘‘இந்து தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்கிற சொற்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று கூறியிருப்பதானது, மிகவும் மர்மமாக இருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் குறித்து, எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களுடைய மத அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவான உண்மை. இந்த உண்மை எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒன்று என்று சொல்லக்கூடாதா? ஆம், சொல்லக்கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நிலைப்பாடாகும். 2008 அக்டோபர் 17 - 19 தேதிகளில் நடைபெற்ற அதனுடைய ‘அகில பாரதீய கார்யகாரிணி மண்டலி பைதக்’ கூட்டத்தில் ‘‘இஸ்லாமிக் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. இவ்வாறு இரட்டை நிலை எடுத்ததோடு மட்டுமல்லாது, மகாராஷ்ட்ராவிலும் மற்றும் பல பகுதிகளிலும் காவல்துறையினரும் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவினரும் மேற்கொண்ட ‘‘வெற்றிகரமான நடவடிக்கைகள்’’ குறித்து வெகுவாகப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அவர்கள் பாராட்டிய அதே பயங்கரவாத எதிர்ப்புக் குழுவானது, இப்போது இந்துத்வா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்திருப்பது குறித்து ஆர்எஸ்எஸ் செய்வதறியாது மிகவும் திகைத்து நிற்கிறது. கோவாவில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக நடைபெறும் புலனாய்வு விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டத்தின் ஆட்சி தன் கடமையைச் செய்திட வேண்டும்.
இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் முழுமையாக புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம்புரிந்த கயவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இப்போது நடைபெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகள், நாம் இப்பகுதியில் அடிக்கடி கூறிவந்ததைப்போல் இரு விஷயங்களை உறுதிப்படுத்தகின்றன. பயங்கரவாத நடவடிக்கைகள் தேச விரோதத்தன்மை கொண்டவை என்பதால் அவை தொடர்பாக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதற்குமில்லை. இரண்டாவதாக, அனைத்துவிதமான பயங்கரவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்து, வலுப்படுத்திடும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை. இவை தங்களுடைய செயல்பாடுகளினால் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையுமே அழிக்கின்றன.
பயங்கரவாத நடவடிக்கைகளைத் தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது மிகவும் கேவலமான சித்தாந்த நடைமுறைகளாகும். மதவெறி அல்லது பிராந்திய வெறி மூலம் மக்களை உசுப்பிவிடுவதன் மூலமாகப் பெரிய அளவில் தேர்தலில் ஆதாயம் அடைந்திடலாம் என்று கருதுவது இந்தியாவின் பன்முகப்பட்ட சமூகக் கலாச்சாரத் தன்மையைச் சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிடும். நாட்டின் நவீன மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாத்து, வலுப்படுத்திட வேண்டுமானால், இத்தகைய பயங்கரவாத அரசியல்கள் முறியடிக்கப்பட வேண்டியது அவசியம்.
(தமிழில்: ச.வீரமணி)
Friday, May 22, 2009
கட்சி சரியானமுறையில் படிப்பினைகளைப் பெற்று முன்னேறும்

நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், அரசை அமைப்பதற்காக, மக்களவைக்குப் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட 274 உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்து அரசு அமைக்க உரிமைகோரியிருக்கிறது. கூடுதலாக, அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக ஓர் 48 உறுப்பினர்களின் பட்டியலும் குடியரசுத் தலைவரால் பெறப்பட்டிருக்கிறது. ஒரே அணியில் இருக்காது என்று பலரால் கருதப்பட்ட பல கட்சிகள் இதிலே அடக்கம். உத்தரப்பிரதேசத்தில் எலியும் பூனையுமாகக் காணப்படும் சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகக் கடிதங்கள் தந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன், தங்கள் கட்சி காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணியில்தான் அங்கம் வகிக்கும் என்று கூறிய பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணியை மாபெரும் மக்கள் பேரணி நடத்தி அறிவித்திட்ட மதச்சார்பற்ற ஜனதா தளமும், இப்போது ஐமுகூட்டணியை ஆதரித்திடத் தீர்மானித்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னமேயே, ஆந்திராவில் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத முன்னணியில் அங்கம் வகித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போய் சேர்ந்து கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு 2009 மே 19 அன்று கூடி விவாதங்களுக்குப்பின் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘‘தேர்தல் சமயத்தில் சில மாநிலங்களில் அமைக்கப்பட்ட மூன்றாவது அணிக்கான கூட்டணிகள் மக்களால் ஒரு நம்பத்தகுந்த (credible) மற்றும் உறுதியான (viable) மாற்றாக தேசிய அளவில் பார்க்கப்படவில்லை’’ என்று மதிப்பீடு செய்திருந்ததை மேலே கூறிய நிகழ்ச்சிப்போக்குகள், உறுதிப்படுத்துகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து நடைபெற்ற தன்னுடைய அகில இந்திய மாநாடுகளின் அரசியல் தீர்மானங்களில், ‘நாட்டின் கொள்கைகளை முற்போக்கான திசைவழியில் தீர்மானிக்கக்கூடிய விதத்தில்’ ஒரு மூன்றாவது அரசியல் மாற்றை உருவாக்க வேண்டியதன் தேவையை தெளிவுபடத் தெரிவித்து வந்திருக்கிறது. அத்தகைய மாற்றானது, தேர்தல் சமயங்களில், வெட்டி ஒட்டக்கூடிய ஏற்பாடாக இருந்திட முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான மூன்றாவது மாற்று என்பது தொடர்ச்சியான மக்கள் போராட்டங் களினூடேதான் உ ருவாகிட முடியும். இதற்கு வேறெந்தக் குறுக்கு வழியும் கிடையாது.
ஆயினும், இப்போது வந்துள்ள தேர்தல் முடிவுகள், மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மிக மோசமான வீழ்ச்சியாகும். 1967இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின், இந்திய கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்குப்பின், நடைபெற்ற முதல் தேர்தலிலேயே, கட்சிக்கு 19 இடங்கள் கிடைத்திருந்தன. இப்போது நடைபெற்றுள்ள தேர்தலில் நமக்கு வெறும் 16 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து வெறும் 24 இடங்களைத் தான் பெற்றிருக்கின்றன. இவ்வாறான படுவீழ்ச்சி குறித்து சுய விமர்சன ரீதியாக மறு ஆய்வு செய்யப்பட்டாக வேண்டும். தவறுகள் மற்றும் பலவீனங்களை அடையாளம் கண்டறிந்து அவற்றைக் களைந்து, முறையான படிப்பினைகளைப் பெற்றாக வேண்டும். இடதுசாரிகளிடமிருந்து விலகிச் சென்றுள்ள மக்கள்திரளினை மீண்டும் வென்றெடுத்திட, அவர்களின் நம்பிக்கையையும் நல்லாதரவையும் மீண்டும் பெற்றிட, எதிர்காலத்தில் நம்முடைய செல்வாக்கை ஒருமுகப்படுத்தி விரிவுபடுத்திட, இது அத்தியாவசியமாகும். இந்த நடைமுறை தொடங்கிவிட்டது.
இத்தேர்தலின்போது இடதுசாரிகளுக்கு எதிராக அனைத்து கம்யூனிச எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுசேர்ந்து நின்றதைப் பார்த்தோம். மேற்கு வங்கத்தில் சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற்ற சமயத்தில் அவற்றை மிகவும் விரிவாக நாம் இப்பகுதியில் விவரித்திருக்கிறோம். அத்தகைய மகா கூட்டணியானது தங்கள் வசம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் இடதுசாரிகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக, வீசியது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப்பின்பும் நடைபெற்ற மோதல்களில் 31 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, இப்போது ஏற்பட்டிருப்பதுபோல இதற்கு முன்பும் பலமுறை கம்யூனிச எதிர்ப்புக் கும்பல்கள் உருவாகியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான சமயத்திலேயே, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘சீன ஆதரவாளர்கள்’ என்று பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, நாடு முழுதும் அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நம் தலைவர்களில் பலர் சிறையிலிருந்தே தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர். 1967இலும் 1969இலும் மேற்கு வங்கத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டபின்னர், சுமார் பத்தாண்டு காலம் காங்கிரஸ் மேற்கு வங்க மக்கள் மீது அரைப் பாசிச அடக்குமுறையை ஏவி, ஆயிரக்கணக்கான நம் தோழர்களின் உயிரைக் குடித்தது. இவ்வளவு அடக்குமுறையையும் எதிர்கொண்டுதான், நாட்டிலேயே மாபெரும் இடதுசாரி சக்தியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு மீண்டெழுந்தது. இதனை நாட்டின் அரசியல் வரலாற்றில் எவரும் உதாசீனப் படுத்திடவோ அல்லது ஓரங் கட்டிடவோ முடியாது. (கடந்த இருபதாண்டுகளில், 1989இல் வி.பி. சிங் அரசாங்கம் அமைந்ததிலிருந்து, மத்தியில் எந்த ஒரு மதச்சார்பற்ற அரசாங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவும் பங்கேற்பும் இல்லாமல் அமைந்தது கிடையாது.) எனவே, இந்தத் தேர்தலில் நமக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் அதேபோன்று நேர்மையான முறையில் சுயவிமர்சன ரீதியாக மறுபரிசீனை மேற்கொண்டு, சரியான படிப்பினைகளை நாம் பெற்றிட வேண்டும்.
இத்தலையங்கம் நம் வாசகர்களை அடையும் நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சியை நடத்திடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும். 2004இல் இதேபோன்றதொரு சமயத்தில், அப்போது அமைய இருந்த அன்றைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் கூறித்து, மிகவும் ஆழமான முறையில் விவாதங்கள் அப்போது நடந்துகொண்டிருந்தன. அவ்வாறு அமைந்திட்ட குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில்தான், ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவினை நல்கின. ஆனால் இந்த சமயத்தில், ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் குறித்து எவரும் வாய்திறக்கவே இல்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், இடதுசாரிகள் ஆதரவு அவசியமற்ற நிலையில் காங்கிரசும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளும் இடதுசாரிகள் வலியுறுத்தும் மக்கள்நலஞ்சார்ந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, ‘‘காங்கிரஸ் கட்சி இந்த அளவிற்கு நல்லதொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு, இடதுசாரிக்கட்சிகளின் நிர்ப்பந்தத்தை அடுத்து ஐமுகூ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பழங்குடியினர் பாதுகாப்பு வன உரிமைகள் சட்டம் மற்றும் சில சமூக நலத் திட்டங்கள் காரணங்களாகும்.’’ ஆனால் அத்தகைய திட்டங்கள் குறித்து இப்போது அது கவலைப்படாமலிப்பது என்னே வேடிக்கை வினோதம்!
இத்தகைய மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைள் எதுவும் வகுக்கப்படாதிருப்பதுதான் எதிர்காலத்தில் இடதுசாரிகளின் பங்கினை வரையறுத்திட இருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாகவும், மிகவும் கடுமையான முறையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருப்பதன் விளைவாகவும், மக்கள் மீது சொல்லொணா அளவிற்குப் பொருளாதாரச் சுமைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மக்களின் நலன்களைப் பாதுகாத்திட, ஆட்சியாளர்களை மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளை வகுத்திட, நிர்ப்பந்திக்கக்கூடிய வகையில் மாபெரும் போராட்டங்களை நடத்திட வேண்டியிருக்கும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக அத்தகு போராட்டங்ளை வலுப்படுத்தும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியுடன் முன்னிற்கும் அதே சமயத்தில் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் பாதுகாத்து வலுப்படுத்திடும்.
(தமிழில்: ச.வீரமணி)
Saturday, May 2, 2009
மேற்கு வங்க இடது முன்னணிக்கு எதிராக நச்சுப் பிரச்சாரம் - மக்கள் சரியாகப் பதிலடி கொடுப்பார்கள்

ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பு, ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமராக இருந்த சமயத்தில், ‘‘கல்கத்தா ஓர் இறந்து கொண்டிருக்கும் நகரம்’’ என்று இகழார்ந்த முறையில் விமர்சனம் செய்தார். இவ்வாறு இவர்களது அவதூறுப் பிரச்சாரம் அனைத்தையும் மீறித்தான், மேற்கு வங்கம் நவீன இந்தியாவை சிருஷ்டிப்பதற்கு மகத்தான அளவில் தன் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் தேர்தல் நடைபெற்ற சமயங்களில் எல்லாம், இவர்களின் துர்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இன்று, அவரது புதல்வரும், காங்கிரசின் பொதுச் செயலாளருமாகிய ராகுல் காந்தி, தன் தந்தையின் குரலையே எதிரொலிக்கிறார். ‘‘இந்தக் கம்யூனிஸ்ட்டுகளின் அரசாங்கம், ஏழைகளை மறந்துவிட்டது. மேலும், மாநிலத்தை முன்னேற்றிச் செல்வதற்குப் பதிலாக, கடந்த முப்பதாண்டுகளில், குறைந்தபட்சம் முப்பதாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது,’’ என்று பேசியுள்ளார். மேலும், வங்கத்தில் உள்ள வறுமையின் அளவை, ஒரிசா மாநிலம் காலஹண்டி, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுடன் ஒப்பிட்டிருக்கிறார். தரையில் உறுதியாகத் தடம் பதிக்காது, வானத்தில் மகிழ்ச்சியுடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பவர் களிடமிருந்து இத்தகைய அபத்தமான பேத்தல்கள்தான் வரும். அவர் பேசிய இடமான புருலியாவின் நிலைமையே, ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்ளில் அவர் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமல்ல, காங்கிரசின் தலைரும் பொதுச் செயலாளரும் பிரதிநிதித்துவப்படுத்தும் ரேபரேலி மற்றும் அமெதி தொகுதிகளில் உள்ள நிலைமைகளுக்கும் மேம்பட்டதாகும்.
காங்கிரசின் தலைவரான சோனியா காந்தியும், மேற்கு வங்கத்தில் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிதிகள், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், திருப்பி விடப்படுவதாகவும் மிகவும் இழிவான முறையில் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐமுகூ அரசாங்கமானது நிலை எடுத்ததனை அடுத்து, அதற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்ட பின்னர், மன்மோகன் சிங் அரசாங்கமானது, நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்குப் பயன்படுத்திய கத்தை கத்தையான கரன்சி நோட்டுக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் காட்டப்படும் அளவிற்கு, மிகவும் மட்டமான அரசியல் ஒழுக்கக்கேட்டிற்கு ஆளான ஒரு கட்சியின் தலைவரிடமிருந்து, இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வருவது, வேடிக்கை விநோதம்தான்.
மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கமானது, தனக்கு அளித்திட்ட தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஒரு பொதுவான பல்லவி பாடப்படுகிறது. தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணிகள் பிரதானமாக வறண்ட மற்றும் பாதி வறண்ட நிலப்பகுதிகளுக்கானது என்றும், எனவே அதிக அளவில் மழை பெய்யும் வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இது பொருந்தாது என்றும் மேற்கு வங்க இடது முன்னணி அரசு மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறது. எனவே, இத்திட்டத்தின் கீழ் வேலைக்காக நியமிக்கப்படும் மக்களை மத்திய அரசின் வேறு பல திட்டப்பணிகளிலும் இணைத்திட அனுமதிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு மத்திய அரசைக் கேட்டிருக்கிறது. ஆயினும், மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. எனவே, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழான பணிகள் செம்மையாக நடைபெறாததற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இடது முன்னணி அரசாங்கமானது ‘‘லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு’’ ‘வேலை அட்டைகள்’ (‘job cards’) கொடுக்கவில்லை என்று காங்கிரசின் தலைவர்களால் இவ்வாறு அர்த்தமற்ற முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட போதிலும், மேற்கு வங்க அரசாங்மானது தகுதியுள்ள ஏழை மக்களில் 95 லட்சம் வேலை அட்டைகள் இப்போது கொடுக்கப் பட்டிருக்கின்றன என்பதே உண்மை நிலவரமாகும். நாடு முழுவதுமே மொத்தம் 4 கோடி வேலை அட்டைகள்தான் கொடுக்கப் பட்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாட்டின் மொத்த ஜனத் தொகையில் வெறும் 8 சதவீதத்தினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள மேற்கு வங்கம், நாட்டில் விநியோகிக்கப்பட்ட மொத்த வேலை அட்டைகளில் 25 சதவீதத்தை விநியோகித் திருக்கிறது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் இடது முன்னணிக்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறு குறித்தும் ஆராய்வோம். சென்ற ஆண்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட 1993க்கும் 2003க்கும் இடையிலான பத்தாண்டு காலத்தில் - அதாவது நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்பட்ட காலத்தில் - மாநில உள்நாட்டு உற்பத்தி (state domestic product)யில் மேற்கு வங்க மாநிலத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.10 சதவீதமாகும். இந்த அளவானது நாட்டின் பதினாறு பெரிய மாநிலங்களுக்கிடையே உயர்ந்தபட்ச அளவாகும். இது, மகாராஷ்ட்ராவில் 4.74 சதவீதம், குஜராத்தில் 5.87 சதவீதம், கர்நாடகாவில் 6.27 சதவீதம், ஆந்திராவில் 5.27 சதவீதம், தமிழ்நட்டில் 5.24 சதவீதம் என்பதுடன் ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தின் உயர் சதவீதத்தின் அருமை நன்கு புரியும். இந்த ஆய்வானது, மத்திய அரசின் கொள்கை மாற்றுக்கான மையம் வெளியிட்ட ஒன்றாகும். இம்மையமானது மத்திய புள்ளியியல் அமைப்பு, பொருளாதார சர்வே மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் அடிப்படையில் இதனைத் தயாரித்துள்ளது. முன்னதாக உலக வங்கி மற்றும் திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் தயாரித்திட்ட ஆய்வுகளும் மேற்படி ஆய்வுக்கு ஒத்துப்போகின்றன.
ஒவ்வொருவருக்குமான தனிநபர் வருமானம் (per capita income) என்று எடுத்துக் கொண்டோமானால், தேசிய சராசரி 4.01 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் அதே சமயத்தில் மேற்கு வங்கமானது 5.51 சதவீத அளவிற்கு சராசரி வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. மற்ற மாநிலங்களை விட மக்கள் தொகைப் பெருக்கம், 1.64 சதவீதம் அதிகரித்திட்ட போதிலும், இந்த வளர்ச்சியை மேற்கு வங்கம் பெற்றிருக்கிறது. வங்கதேசத்திலிருந்து மட்டுமல்ல நேபாளத்திலிருந்தும் புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதும், பீகார் மற்றும் ஒரிசா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் இவ்வாறு மக்கள்தொகைப் பெருக்கத்திற்குக் காரணங்களாக உள்ளன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு எண்ணற்ற இடர்ப்பாடுகள் இல்லாம லிருந்திருந்தால், மேற்கு வங்கத்தில் தனிநபர் வருமானம் இப்போதிருப்பதை விட மேலும் அதிகமான அளவில் இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மேற்கு வங்க வளர்ச்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான். பொதுவாக, நிலச்சீர்திருத்தங்கள் என்பது மனிதாபிமான அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் ஒன்றுமே இல்லாத மக்களுக்கு இது ஒரு முக்கியமான வாழ்வாதாரமாகும். சரியான முறையில் நில விநியோகம் செய்யப்பட்டால் அது உற்பத்தித் திறனையும் (நிலம் மற்றும் உழைப்பு ஆகிய இரண்டின் உற்பத்தித் திறனையுமே) அதிகரித்திடும். அதன் விளைவாக பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடும். இவ்வாறாக, வேளாண்மைத் துறையில் ‘உள்ளீடான வளர்ச்சி’ (‘inclusive growth’), விவசாய உற்பத்தித் திறன் வளர்ச்சி மற்றும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு ஆகிய மூன்றையுமே இன்று மேற்கு வங்கத்தில் நன்கு பார்க்க முடியும்.
சுமார் 13 லட்சம் ஏக்கர நிலம் இடது முன்னணி அரசாங்கத்தால் கையகப் படுத்தப்பட்டு, நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. இதன் விளைவாக சுமார் 25 லட்சம் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலம் - மிகவும் குறைச்சலாக - பத்து லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இவ்வாறு நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரும். இந் அளவிற்கான வள ஆதாரம் பணக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மேற்கு வங்கத்தில் அபரிமிதமான அளவில் செல்வவளம் பகிர்ந்தளிக்கப் பட்டிருப்பதுதான், வேகமான கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகும். மேலும் கூடுதலாக, சுமார் 20 லட்சம் குத்தகை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பொருள், அவர்களை நிலப்பிரபுக்கள் நிலத்திலிருந்து வெளியேற்றிட முடியாது என்பதாகும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு நிலத்தில் உழுவதற்கானப் பாரம்பர்ய உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து, மாநிலத்தில் சுமார் 50 லட்சம் விவசாயிகளின் அல்லது சுமார் இரண்டரை அல்லது 3 கோடி விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கையை புரட்சிகரமான முறையில் மாற்றி அமைத்திருக்கிறது.
நாட்டில் மிகவும் நெருக்கமான முறையில் விவசாயப் பணிகள் நடைபெறும் மாநிலங்களில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஆயினும், விவசாய நிலத்தில் 28.1 சதவீத அளவற்கே நீர்ப்பாசன வசதி பெற்றிருக்கிறது. பஞ்சாப்பில் இது 89.72 சதவீதமாகும். மத்தியஅரசு, பக்ராநங்கல் அணை கட்டிக் கொடுத்திருப்பதன் காரணமாக அங்கே அது சாத்தியமாகியிருக்கிறது. ஆளால் அதுபோன்ற திட்டங்களை மேற்கு வங்கத்தில் நிறைவேற்றிட மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆயினும் கூட, நாட்டில் விளையும் உணவு தான்ய உற்பத்தியில் உயர்ந்த அளவிற்கு சராசரி விளைச்சல் காணும் மாநிலங்களில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. (பஞ்சாப், உத்தரப்பிரதேசம் முதல் இரு மாநிலங்களாகும்.) இன்றைய தினம் நாட்டிலேயே அரிசி உற்பத்தியில் மாபெரும் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. 1980களில் நாட்டின் சராசரி உற்பத்தி அளவைவிட மேற்கு வங்கம் 18 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் தேசிய சராசரியை விட 10 சதவீதம் அதிகரித்து முன்னணியில் நிற்கிறது.
இவ்வாறான யதார்த்த உண்மைகள்தான், மேற்கு வங்க மக்கள், கடந்த முப்பதாண்டு காலமாக இடது முன்னணி மீது அபரிமிதமான அன்பும் ஆதரவும் வைத்திருப்பதற்குக் காரணிகளாகும். அதனால்தான், காங்கிரசும் அதன் புதிய கூட்டாளியான திரிணாமுல் காங்கிரசும், இடது முன்னணியின் ‘அடாவடி ஆட்சி’ மேற்கு வங்கத்தில் நடைபெறுவதாக கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருந்தாலும், மக்கள் மத்தியில் அது கிஞ்சிற்றும் எடுபடவில்லை. எந்த ஒரு ஜனநாயகத்திலும், மக்கள், தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முன்வந்த அரசியல் கட்சிகளைத்தான் தேர்வு செய்திடுவார்கள். இந்த அணுகுமுறைப்படி பார்த்தோமானால், மேற்கு வங்கத்தில் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட்ட இடது முன்னணி மீது அபரிமிதமான நம்பிக்கையை மக்கள் தொடர்வதில் ஆச்சர்யம் எதுவுமில்லை,
கடந்த காலங்களில் இடது முன்னணியானது, ‘விஞ்ஞானரீதியான தேர்தல் மோசடி மூலம்’ (‘scientific wrigging’) தேர்தலில் வெற்றி பெறுகிறதென்று அடிக்கடி எதிரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை நம்பி, தேர்தல் ஆணையம் கூட, மாநில சட்டமன்றத் தேர்தல்கள் 2006இல் நடைபெற்ற சமயத்தில், அம்மாநிலத்தில் தேர்தலை ஐந்து கட்டங்களாக நடத்திடவும், தேர்தலை நடத்திடுவதற்காகப் பாதுகாப்புப் படையினரையும் தேர்தல் பணியாளர்களையும் வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ததையும் பார்த்தோம். (மேற்கு வங்க அரசு ஊழியர்கள் அனைவருமே மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர்) தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மம்தா பானர்ஜி உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் நாம் அந்த சமயத்தில், ‘‘வாக்காளர்களை மேற்கு வங்கத்திற்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யாதவரை, இடது முன்னணியைத் தோற்கடிக்க எவராலும் முடியாது’’ என்று பிரகடனம் செய்தோம். தேர்தலில் மக்கள் இடது முன்னணிககு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவினை அளித்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தனர்.
இவ்வாறாக, வங்கத்தில் கடந்த முப்பதாண்டுகளாக இடது முன்னணியின் ‘அடாவடி’ ஆட்சி நடைபெறுகிறது என்று எதிரிகள் கூறுவதன் மூலம் அவர்கள் இடதுமுன்னணியைத் தேர்ந்தெடுக்கும் மக்களை அவமதிக்கிறார்கள். ஆயினும் மேற்கு வங்க மக்கள், தங்கள் சொந்த அனுபவத்தின் காரணமாக, கடந்த முப்பதாண்டு காலமாக இடது முன்னணிக்கு அன்பும் ஆதரவும் அளித்து வந்ததைப்போலவே இப்போதும் ஆதரவினை நல்கி, எதிரிகளின் நச்சுப்பிரச்சாரத்திற்குத் தக்க பதிலடி அளிப்பார்கள் என்பது திண்ணம்.
(தமிழில்: ச.வீரமணி)
Sunday, April 26, 2009
பாஜகவின் நயவஞ்சக நாடகம்!

பாஜக தன்னுடைய ‘‘தொலை நோக்குக் கொள்கைகளை’’ தவணை முறையில் வெளியிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, கட னைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துதல்போல் தங்கள் கொள்கை களையும் மாற்றி அமைத்துக் கொண்டி ருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத் தை அடுத்து அதனை எதிர்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்துச் சரி யான பார்வை தங்களுக்கு இல்லாதது இதற்குக் காரணங்களாக இருக்கலாம். அல்லது, மக்களுக்கு தாங்கள் முன்பு அளித்த உறுதிமொழிகளிலிருந்து முரண் படுவதற்கும் மாற்றிச் சொல்வதற்கும் இது வசதியாக இருக்கும் என்று கருது வதும் கூட இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.
இப்போது வெளிவந்துள்ள பாஜக-வின் தேர்தல் அறிக்கையானது ஏராள மான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந் தாலும், இதற்குமுன் அவர்கள் அளித் திட்ட தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள அம்சங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இரு அம் சங்கள் குறித்து நாம் எதுவும் சொல்லா மல் இருக்கமுடியாது. முதலாவதாக, 1998க்கும் 2004க்கும் இடையில் அவர் கள் அரசாங்கத்தை நடத்திய காலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அவர்களுக்கிருந்த அணுகு முறை இதில் மறுதலிக்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர்கள் பொதுத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளைப் படிப்படியாகச் செய் வதற்கென்று ஓர் அமைச்சகத்தையே (ஆinளைவசல கடிச னளைinஎநளவஅநவே) உருவாக்கி இருந்தார்கள். அப்போது நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அடித்த கொள்ளைகளை எல்லாம் நினைவுகூருங்கள். 2004இல் ஐமுகூ ஆட்சிக்கு வந்த சமயத்தில் இடதுசாரிகளிடமிருந்து வந்த நிர்ப்பந் தத்தின் காரணமாக, ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே, அந்தத் துறையை ஒழித்துக் கட்டியது தான்.
இப்போது பாஜக வெளியிட்டிருக்கும் தொலைநோக்கு ஆவணத்தில், அவர்கள் கூறுவது என்ன? ‘‘ கடந்த பல ஆண்டு களாக நன்கு கட்டி வளர்க்கப்பட்டுள்ள இந்தியப் பொதுத்துறையானது நம் நாட் டின் பெருமைமிகு சிறப்பம்சமாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங் கம் பொதுத்துறையை வலுப்படுத்தும், இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதனைப் பயன் படுத்திக் கொள்ளும். அதே சமயத்தில், இதில் தனியார் துறையும் பங்கெ டுத்துக் கொள்வதற்கான வகையில் தனியார் துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் முழு மையாக அளிக்கப்படும். அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு (ஞரடெiஉ-ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ) அடிப்படையில், அரசாங்கத்தின் துறைகளை வளர்த்திட, அரசாங்கம் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.” இது எப்படி இருக்கிறது? நாம் முன்பே சொன்னதுமாதிரி, பாஜக தங்களுடைய முந்தைய நிலைபாட்டிலிருந்து தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கிறது. பொதுத்துறையைச் சார்ந்திருக்கும் வாக்காளர்களை முழுமையாக ஏமாற்றி அவர்களது வாக்குகளை அபகரிக்கும் முயற்சி என்பதைத் தவிர இது வேறொன்றுமில்லை.
இவர்கள் கூறுவதில் உள்ள இன் னொரு முக்கிய அம்சம், அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு என்பதாகும். காங் கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி களுமே இதனைத் தூக்கிப் பிடிக்கின்றன. ஆயினும், கடந்த காலங்களில் நமக்கு ஏற் பட்டுள்ள அனுபவம் என்ன? விமான நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு, அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு முறையில்தான், ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண் டார்கள். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தனியார் துறையினர், தாங்கள் போட்ட கணக்கு அனைத்தும் தப்புக்கணக்காய் மாறிப்போனதாலும், உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, விமானப் போக்கு வரத்தில் பயணிகள் வரவு மிகவும் குறைந்துபோனதாலும், அவர்கள் கடும் நஷ்டத்தை அடைந்தனர். விளைவு, அத னை விமானப் பயணிகள் தலையில் கட்ட அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கி றது. பெங்களூர் மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அநியாயமான அளவிற்கு லெவி ஒவ்வொரு பயணியிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. இதுதான் அர சாங்கம் - தனியார் ஒத்துழைப்பில் உள்ள சூட்சுமம். அதே சமயத்தில் அரசாங்கம் நடத்திடும் விமான நிலையங்கள் நிலை மை என்ன? அவை நட்டத்தில் இயங்கி னாலும் கூட அதன் சுமையை பயணிகள் தலையில் கட்ட அனுமதிக்கப்படுவதில் லை. இவ்வாறு, பாஜக-வின் தொலை நோக்குப் பார்வையானது, மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதற்கான ஒன்று என்பது தெளிவு.
இவ்வாறு நேரத்திற்கு ஏற்றாற்போல, பேசுவதென்பது பாஜகவின் நடைமுறை என்பது, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தங்கள் நிலைபாட்டை அவர்கள் முற்றிலுமாக மாற்றிக் கொண்டி ருப்பதிலிருந்து தெளிவாகிறது. 2007 நவம்பர் 28 அன்று, மக்களவையில் இந் திய - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று அத்வானி கூறியதாவது:
“123 ஒப்பந்தமானது, தற்போதுள்ள நிலையில், நாட்டிற்கு உகந்ததல்ல, ஏற்றுக்கொள்ளத் தக்கதுமல்ல. ஏனெ னில் இது இந்தியாவின் கேந்திரமான மற் றும் நீண்டகால நலன்களுக்கு விரோத மானது. மீண்டும் தேஜகூ ஆட்சிக்கு வந் தால், இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்துவோம். இதில் உள்ள நாட்டின் நலன்களுக்கு விரோத மான அம்சங்கள் அனைத்தும் நீக்கப் படும், அல்லது இந்த ஒப்பந்தமே முழு மையாக ரத்து செய்யப்படும்.’’
ஆனால், இப்போது அவர் என்ன கூறுகிறார்? “அரசாங்கம் என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நடைமுறையைக் கொண்டதாகும். அயல்நாடுகளுடன் முந்தைய அரசாங் கங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங் களை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந் துவிட முடியாது.” ஒப்பந்தத்தை “முழு மையாக” ரத்து செய்வதிருக்கட்டும், இதனை “மறுபரிசீலனைக்கு” உட்படுத் தக்கூட இவர்கள் தயாராயில்லை. அதே போன்று, “மறுபரிசீலனை” என்கிற வார்த் தை, பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் எந்தப் பக்கத்திலும் காணப்படவில்லை.
இவ்வாறாக, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, தங் களுடைய அமெரிக்க ஆதரவு நிலைப் பாட்டை மூடிமறைத்திடும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாஜக நாட்டை தவறான பாதையில் இட்டுச் செல்கிறது என்பது தெளிவு. இன்னும் சரியாகச் சொல்வ தென்றால், பாஜக தலைமையிலிருந்த தேஜகூட்டணி அரசாங்கம்தான், அமெ ரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியா ராணுவரீதியான கூட்டணியை ஏற்படுத் திக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய ஒன்றாகும். இவர்கள் ஆட்சி யிலிருந்த காலத்தில்தான் இஸ்ரேலுட னான உறவுகள் மேலும் வலுப்பட்டன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவரு டியாக, தேஜகூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை, மன் மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமும் மிகவும் நன்றாகவே தொடர்ந்து செயல்படுத்தியது.
பாஜகவின் நயவஞ்சக விளையாட் டுக்கள் இவ்வாறு தொடர்கின்றன. மக் களிடம் வெளியே சொல்வதற்கு முற்றி லும் விரோதமான வகையிலேயே அவர் களின் உண்மையான நிகழ்ச்சிநிரலும் உள்ளார்ந்த எண்ணங்களும் இருந்திடும். இதற்கு சரியான உதாரணம், அரசியல மைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை ஏற்றுக் கொள்வதாகக் இவர்கள் கூறுவதை குறிப்பிடலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஓர் அரசியல் அங்கமாகச் செயல்படும் இவர்களுக்கு, இக்குடியரசை, வெறி பிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச “இந்து ராஷ்ட்ர”மாக மாற்ற வேண்டு மென்பதே குறிக்கோளாகும். தெளிவான இந்தக் காரணத்திற்காகத்தான் இவர்கள் எவ்விதத்திலும் ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்கிறோம். எனவே தான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தை அமைத்திட, இந்திய மக்கள் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை அமைத் திட வேண்டும் என்று கோருகிறோம்.
தமிழில்: ச.வீரமணி
Subscribe to:
Posts (Atom)