Monday, August 4, 2008

“ஓய்வு எடுப்பதுதான் எனக்குத் தொந்தரவு”-மதுக்கூர் இராமலிங்கம்

1990ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்காக தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் வந்திருந்தார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ச்சியான பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். திருவாரூர் பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். பொதுக்கூட்ட செய்தி களை சேகரிப்பதற்காக சென்றிருந்த நான், அவரை அணுகி செம்மலர் ஏட்டிற்கு சிறப்புப்பேட்டி ஒன்று அளிக்க முடியுமா? என்று கேட்டேன். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்ட அவர், மதியம் 3 மணிக்கு வருமாறு கூறியிருந்தார். மதிய உணவு அருந்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பார், அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்று நானாக நினைத்துக் கொண்டு 3.30 மணி அளவில் அவரது அறைக்குச் சென்றேன். ஆனால் அவரோ பேட்டி தருவதற்கு தயாராக வரவேற்பறையில் அமர்ந்திருந் தார். “இளைஞனே நான் உன்னை 3 மணிக்கு அல்லவா வரச்சொல்லியிருந் தேன். 2.45 மணிக்கே நான் தயாராக வந்து அமர்ந்துவிட்டேன்” என்று கூறினார். அப் போதே எனக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது.“ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பீர்கள், உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதினேன்” என்று கூறினேன். “உண்மையில் ஒருவேலையும் செய்யா மல் ஓய்வு எடுப்பதுதான் தொந்தரவு” என்று சிரித்துக் கொண்டேகூறிய அவர், எந்த ஒரு செயலிலும் நேரம் தவறாமை மிக முக்கியம் என்று அறிவுறுத்தினார். “சரி நான் தயார். நீ கேள்விகளை கேட்கலாம்” என்றார். அவரது உதட்டு அசைவிற்காக இந்திய அரசியலே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவரிடம் எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. எனது நிலையை அவ ராகப் புரிந்து கொண்டு இப்போதுள்ள அர சியல் நிலையை நான் கூறிவிடுகிறேன். அதற்குள் நீ உன் கேள்விகளை தயார் செய்துகொள் என்று கூறிவிட்டு, தேசம் சந்திக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டார். உங்களது சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறினேன். கம்யூனிஸ்டுகளை பொறுத் தவரை பொதுவாழ்க்கை, சொந்த வாழ்க் கை என்று தனித்தனியாக இல்லை. இரண்டும் ஒன்றுதான் என்றார். இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அன் றைக்கு பஞ்சாபில் பிரபலமாக இருந்த கதார் கட்சியிலோ, காங்கிரஸ் கட்சியிலோ சேராமல் கம்யூனிஸ்ட் கட்சியை தேர்வு செய்தது ஏன்? என்று கேட்டேன். தேச விடுதலை என்பது உடனடி இலக்காக வும் ஒட்டுமொத்த சமூக விடுதலை என்பது இறுதி இலக்காகவும் இருந்தது. பகத்சிங் தனது தியாகத்தின் மூலம் பஞ்சாபில் மட்டுமல்ல இந்தியா முழுவ தும் இருந்த இளைஞர்களை இந்த பாதைக்கு ஈர்த்திருந்தார் என்று துவங் கிய அவர், அப்போதும் கூட சிறையில், சித்ரவதை முகாமில், தான் பட்ட பாடுகளை விவரிப்பதற்கு பதிலாக விடுத லைப்போராட்டம் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் அதில் எவ்வாறு பல பாதைகள் இணைந்திருந்தன என்று நுணுக்கமாக விவரித்தார். பேட்டி முடியும் தறுவாயில் “நேரம் தவ றாமை மிகவும் முக்கியம்” என்று மீண் டும் ஒருமுறை கூறினார்.கடலூரில் ஒரு செய்தியாளர் கூட்டத் தில் பங்கேற்று தோழர் சுர்ஜித் கேள்வி களுக்கு விடைசொல்லிக் கொண்டிருந் தார். கடைசியில் ஒரு செய்தியாளர் மதச் சார்பின்மையைப் பற்றி இவ்வளவு தூரம் பேசும் நீங்கள் சீக்கியர்களுக்குரிய டர்பன் அணிந்திருப்பது ஏன்? தாடி வைத்திருப் பது ஏன்? என்று கேட்டார். அதற்கு சுர்ஜித் சிரித்துக் கொண்டே “நீங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனது டர்பனையும் தாடியையும் கவனித் துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட் டுவிட்டு “ஏன் எனக்குத் தாடி நன்றாக இல்லையா?” என்றும் கேட்டார். அந்த நிருபரோ அசடு வழிந்தார்.சீக்கியர்களுக்கு அடையாளம் டர்பன், தாடி மட்டுமல்ல, சிறு கத்தி கூட வைத் திருக்க வேண்டும். ஆனால் என்னிடம் அது இல்லை. டர்பனும் தாடியும் ஒரு மதத்தின் அடையாளம் அல்ல. தேசிய இன அடையாளம். தமிழர்கள் வேட்டி கட் டுவதுபோல சீக்கியர்கள் டர்பன் கட்டுகி றார்கள். எல்லா மலர்களும் ஒரே மாதிரி இருப்பது அல்ல அழகு. பல வண்ண மலர் கள் ஒரே தோட்டத்தில் இருப்பதுதான் அழகு. அதுதான் இந்தியாவின் சிறப்பு என்று கவித்துவத்தோடு முடித்தார்.

No comments: