Monday, March 3, 2008

அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா தொடரக்கூடாது-சிபிஎம்

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா தொடரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‘‘அயல்துறைக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சிப் போக்குகள்’’ குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் மேற்படி அறிக்கையில், ஹைடு சட்டத்தின் பிரயோகம் குறித்தும், ராணுவம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள சில அறிக்கைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்து, ‘ஹைடு சட்டம் அமெரிக்காவுக்கு மட்டுமே பயன்படத்தக்கது’ என்றும், இந்தியாவின் உரிமைகள் இருதரப்பு 123 ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அவ்வாறு அமெரிக்க அதிகாரி என்று குறிப்பிடுவது, அமெரிக்க அரசின் அயல்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ் அவர்களைத்தானே தவிர வேறு யாரையுமல்ல. அவர்தான் பிப்ரவரி 14 அன்று அயல்துறை விவகாரங்கள் குழுவின் பிரதிநிதிகள் அவையில் ‘‘ஹைடு சட்டத்திற்கு முரணாக அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவிற்கு ஆதரவாக நாங்கள் இருந்திட மாட்டோம்’’ என்றும், ‘‘ஹைடு சட்டத்துடன் முழுமையாக ஒத்துப்போய்த்தான் ஆக வேண்டும்’’ என்றும் மிரட்டியிருந்தார். இதுதான் ஹைடு சட்டம் குறித்து, அமெரிக்க அரசாங்கத்தின் தெளிவான நிலைபாடு. ஹைடு சட்டத்திற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்வது இந்திய அரசுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. இதனை நம்புவார் யாருமில்லை. ஹைடு சட்டமோ அல்லது ஹைடு சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தமோ 2006 ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு உட்பட்டவைகளாக இல்லை. நாட்டில் விரிவான அளவில் அரசியல் கட்சிகளுடனான கருத்தொற்றுமையைக் ‘‘கோர’’ அரசாங்கம் முயலும் என்று அரசு, நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது விந்தையிலும் விந்தையாகும். நாடாளுமன்றத்தின் 2007 குளிர்காலக் கூட்டத் தொடரில் 123 ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களை அரசாங்கம் முதலில் மதித்து நடந்திட வேண்டும். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அரசின் நிலைபாட்டிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கிடையாது என்பதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக அரசியல் கருத்தொற்றுமை ஏற்படவே இல்லை. எனவே, இந்த ஒப்பந்தத்தை அரசு மேலும் தொடரக் கூடாது.’’

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

No comments: