Wednesday, August 1, 2018

மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக கண்டனம் முழங்குக முரளிதரன் அறைகூவல்


மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு எதிரான
அட்டூழியங்களுக்கு எதிராக கண்டனம் முழங்குக
முரளிதரன் அறைகூவல்
புதுதில்லி, ஆக.1-
தமிழ்நாட்டில் சமீபத்தில் காது கேளாத சிறுமி ஒருத்தி கூட்டு வன்புணர்வுக்கொடுமைக்கு ஆளாகியதற்கு எதிராக மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து அமைப்புகளும் கண்டனம் முழங்கிட வேண்டும் என்று புதுதில்லியில் கூடிய பல்வேறு ஊனமுற்றோர்க்கான உரிமைகளுக்கான அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக தலைநகர் புதுதில்லியில் திங்கள் அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊனமுற்றோர் உரிமைகளுட்ககான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் பேசுகையில், நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு வேதனையைத் தெரிவித்தார்.
சமீபத்தில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த பல மாற்றுத்திறனாளி பெண்களும் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் இல்லங்கள் அதிலும் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள்  அடைக்கப்பட்டுள்ள பெண்களின் இல்லங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய முரளிதரன், அவற்றை மேற்பார்வையிடுவதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். ‘
ஊனமுற்ற பெண்களுக்கான தேவைகளைக்கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்வப்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கிரிமினல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் திருத்தப்பட்டபோதிலும்கூட, அவற்றின்  அமலாக்கம் என்பது அநேகமாக இல்லாமலிருப்பதையும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
(ந.நி.)



No comments: