Friday, July 31, 2015

யாகூப் மேமன் தூக்கு: சிதைக்கப்பட்ட நீதி





யாகூப் மேமன் தூக்கிலிடப் பட்டிருப்பதன்மூலம் நீதி சிதைக்கப்பட்டுள்ளது. யாகூப் மேமனின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைப்பதற்கு வலுவான காரணங்கள் இருந்த நிலையில் அவ்வாறு செய்யாது தூக்கிலிடப் பட்டிருப்பதால் இதனை வேறெந்தவிதத்திலும் சித்தரித்திட முடியாது. யாகூப் மேமன், மும்பையில் 257பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த கொடூரமான வெடிகுண்டு விபத்திற்கான சதியில் அவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்ற அடிப்படையில், ஒரு குற்றத்துடன் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆனால், இதில்அவர் பங்களிப்பும் அவர் புரிந்த குற்றத்தன்மையும் நிச்சயமாக உயர்ந்தபட்ச தண்டனைக்கு உரியவை அல்ல. இதர பத்து பேர்களுக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றியதைப்போல, இவருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், நீதி சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்திருக்கும்.
யாகூப் மேமன் இவ்வழக்கில் அதீத தண்டனைக்காகத் தனிமைப்பட்டார். ஏனெனில், இவ்வழக்கின் பிரதான சதிகாரரான அவர் சகோதரர் டைகர் மேமன், தாவுத் இப்ராகிமுடன சேர்ந்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதால்தான், யாகூப் மேமனுக்கு இத்தண்டனை. யாகூப் மேமன் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்துஇவ்வழக்கின் விசாரணையில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருந்தார். அவர் பாகிஸ்தானில் இயங்கிடும் ஐஎஸ்ஐ அமைப்பு இந்த சதிவேலைகளுக்கு எப்படியெல்லாம் உதவியது என்பதற்கான உபயோகமான தகவல்களையும், சான்றுகளையும் விசாரணை அதிகாரிகளிடம் அளித்திருந்தார்.
இதனை உளவுத்துறையில் மூத்த அதிகாரியாகப்பணியாற்றிய மறைந்த பி. ராமன் ஒப்புக்கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம், யாகூப் மேமனின் தண்டனையைக் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட இத்தகைய காரணிகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரது சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. யாகூப் மேமனுக்கு தண்டனை அளித்த வழக்கில் நடைமுறைத் தவறுகள் இருக்கின்றன என்று உச்சநீதிமன்றத்தின் இரு நபர் அமர்வாயத்தில் நீதியரசர் குரியன் ஜோசப் எழுப்பிய கூற்றை, மூவர் அடங்கிய அமர்வாயம் தன் மேலதிகாரத்தைப் பயன்படுத்தி, நிராகரித்துவிட்டது.குடியரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டத்தின் 72ஆவது பிரிவின்கீழ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதித்துறை யின் தீர்ப்பை மாற்றி, தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்க முடியும்.
இவ்வாறு செய்யப்படாதது துரதிர்ஷ்டமாகும். யாகூப் மேமனுக்கு முன்பு 2013 மார்ச்சில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்சல்குரு மிகவும்ரகசியமாகத் தூக்கிலிடப்பட்ட விதமும், அவருக்கு உரிமைகள் அளிக்கப்படாது மீறப்பட்டதும் அப்சல் குருவின் தூக்குதண்டனை அரசியல்ரீதியாகத் தீர்மானிக்கப்பட்டது என்பதைக் காட்டியது.தூக்கு தண்டனை தொடர்பாக மேல்முறையீடுகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் கூட முன்னுக்குப்பின் முரணா னவைகளாகவே இருக்கின்றன. அவை, அமர்வாயத்தில் அமரும் நீதியரசர்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவை களாகவே இருக்கின்றன. 2014ல் உச்சநீதிமன்றம் சில முக்கியமான பயங்கரவாதி களின் வழக்குகளில் தூக்கு தண்டனை களைக் குறைத் திருக்கின்றன.
மிகப் பெரிய அளவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் வழக்கில் தண்டனை பெற்றமூவரின் தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து பயங்கரவாதி களின் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கு ஒன்றில் தூக்கு தண்டனை பெற்ற தேவிந்தர் பால் சிங் புல்லார் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. இவ்விரு வழக்குகளிலும், முறையே தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்து, அவர்களது தண்டனைகளைக் குறைத்திட வலுவான அரசியல் பின்னணி அமைந்திருந்தது.2004க்குப்பின், கடந்த 11 ஆண்டுகளில், மூவர் மட்டுமே தூக்கிலிடப் பட்டிருக்கின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாபை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமானால், மற்ற இருவரும் - அதாவது அப்சல் குருவும் யாகூப் மேமனும் -முஸ்லீம்கள். இது, நம் நாட்டின் குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பில் முஸ்லீம்கள் மட்டும் வித்தியாசமான அளவுகோலின்கீழ், குறிவைத்துத் தாக்கப்படுகிறார் கள் என்று ஓவைசி போன்றவர்கள் கூறும் கூற்றை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது.
பாஜக, சிவசேனை வகையறாக்கள் பயங்கரவாதகுற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வர்களில் முஸ்லீம்களுக்கு எதிராக மட்டும் தங்கள் ரத்தவெறியைக் காட்டுகின்றன. இந்துத்வா பயங்கரவாதம் சம்பந்தப்பட்டுள்ள ஆஜ்மீர் சரீப், மாலேகான் மற்றும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டு தாக்குதல் வழக்குகள் எப்படியெல்லாம் அதிகாரிகளின் உடந்தையுடன் உரியமுறையில் விசாரணை மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டு வருகின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
தூக்குதண்டனை விதிப்பது இருக்கட்டும், இந்துத்வா பயங்கரவாதி கள் எவரேனும் தண்டிக்கப்படுவார்களா என்பதே சந்தேகம்தான். யாகூப் மேமனின் முடிவு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுகாலமாகக்கோரிவரும், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை யின் தேவையை அடிக்கோடிட்டு அழுத்தமாகக் கூறியிருக்கிறது. தூக்கு தண்டனை மிகவும் கொடுங்கோன்மையான ஒன்று.“அரிதிலும் அரிதாகஎன்னும் கொள்கை,ஒவ்வொரு நீதிபதி யாலும் வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்யப் பட்டுள்ளன. தில்லி, தேசியச் சட்டப் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வின்படி, தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நபர்களை ஆராய்ந்து பார்ப்போமானால் அவர்களில் பெரும்பகுதி யானவர்கள் ஏழைகள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாவார்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் 75 சதவீதத்தினர் ஏழைகள், 75 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தவர்கள். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள் மற்றும் சட்டவல்லுநர்கள் பலர் குரல் எழுப்பியுள்ளனர். சட்டப்புத்தகங்களிலிருந்து தூக்கு தண்டனையை நீக்குவதற்கு ஆதரவாக, பொதுக்கருத்தையும் அரசியல் கட்சிகளின் ஆதரவையும் அணிதிரட்ட வேண்டியது அவசியமாகும். இதனை அடையக்கூடிய விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாகச் செயல் படும்.
தமிழில்: .வீரமணி

No comments: