Friday, December 31, 2010

சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவோம்



அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாள்தோறும் ஏற்றப்படும் பொருளாதாரச் சுமைகளின் வேதனை தாங்காது முனகிக் கொண்டிருக்கும் மக்கள் மீதான ஆழ்ந்த அனுதாபங்களுடனேயே இவ்வாழ்த்துக் களை தெரிவிக்க வேண்டி இருக்கிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதன் காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கொடூரமான வகை யில் அரிக்கப்பட்டு சரிந்துகொண்டிருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 77 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க வழியின்றி உழன்று கொண்டிருக்கக்கூடிய நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக நாள்தோறும் உயர்ந்து கொண்டிருப்பதானது, அவர்களை மேலும் மேலும் கொடிய பஞ்சநிலையை நோக்கித் தள்ளிக் கொண்டி ருக்கின்றன.

வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைக்கு உதவி

2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு சர்க்கரை கிலோ 50 ரூபாய் என்ற அளவிலும் துவரம் பருப்பு கிலோ 100 ரூபாய் என்ற அளவிலும் மற்றும் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும், அதேபோன்று சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்குக் கடுமையாக உயர்ந்தும் இருந்தன. இப்போது 2010 முடிவுக்கு வரக்கூடிய நிலையில். வெங்காயத்தின் விலை அநேகமாக அனைத்து நகரங்களிலும் கிலோ 70 ரூபாய்க்கு விற்கக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறது. இது மற்ற காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருள்களின் வழங்குதல் மற்றும் தேவை ஆகியவற்றிற்கு இடையேயான பொருத்தமின்மையே இதற்குக் காரணம் என்கிற அரசாங்கத்தின் வாதமெல்லாம் ஏற்புடையதல்ல.

தில்லியில் 2008க்குப் பின் வெங்காயம் வழங்கப்படுவது என்பது 60 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்திருக்கிறது. ஆயினும் அதன் மொத்த விலை 300 விழுக்காட்டிற்கும் மேலாகப் பாய்ந்து சென்றிருக்கிறது. சென்ற ஆண்டு சர்க்கரைக்குச் செய்ததுபோலவே இந்த ஆண்டு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவது தாராளமாக்கப்பட்டிருக்கிறது. வெங்காயத்தின் தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விளைவாக விலைகள் தாறுமாறாக உயரக்கூடும் என்று தெரிந்திருந்தும் அரசு இவ்வாறு செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இத்தகைய ஏற்று மதிக்கு ஊக்கத் தொகைகளும் அளிக்கப்பட்டிருக்கிறது. 2005-06ஆம் ஆண்டில் 7.8 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த வெங்காய ஏற்றுமதி, 2009-10ஆம் ஆண்டில் சுமார் 19 லட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரித்திருக்கிறது. விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் மத்தியில் கடும் ஆவேசம் ஏற்பட்டதை அடுத்து, அரசு வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்திருக்கிறது. இப்போது வெங்காய இறக்குமதியை எவ்விதத் தீர்வையுமின்றி அனுமதித்திருக்கிறது. அதாவது, விலை வாசியைக் கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதிக்கு மானியம் அளித்திருக்கிறது. ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகை அளிப்பதும், இறக்குமதிக்கு மானியம் அளிப்பதும் இவ்வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வழிவகைகள் என்பது தெள்ளத்தெளிவான ஒன்று.

இந்த ஆண்டு ஏப்ரல் 1இலிருந்து நவம்பர் 30 வரையிலான காலத்தில் வேளாண் பொருட்களின் வர்த்தகத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 8,33,605.53 கோடி ரூபாயாக இருந்தது. சென்ற ஆண்டு இதே கால அளவிற்கு இது, 7,66,133.46 கோடி ரூபா யாக இருந்தது. இத்தகைய கூர்மையான உயர்விலிருந்து ஊக வர்த்தகத்தின் மூலமாக வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியிருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. ஆயினும், அரசாங் கம் அத்தியாவசியப் பொருள்களின் மீதான ஊக வர்த்தகத்தைத் தடை செய்யவோ அல் லது நிறுத்தி வைக்கவோ மறுக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கக் கூடிய மற்றுமொரு மாபெரும் ஊழல் என்று இதனை கூறலாம் அல்லவா?

கருப்பு எழுத்துக்களால்

ஊழல்களைப் பற்றிப் பேசப்புகுந்தால், 2010ஆம் ஆண்டினை சுதந்திர இந்திய வர லாற்றிலேயே கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஆண்டாகக் கொள்ளலாம். ஊழல்கள் அனைத்திற்கும் தாயாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சொல்லலாம். இதனை அடுத்து சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டமை, நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டமை, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க ஊழல் முதலானவற்றைக் குறிப்பிடலாம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு கஜானாவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி(சிஏஜி)யால் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாபெரும் ஊழல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதன் விளைவாக நம் மக்களின் வாழ்க்கைத்தரம் கடு மையான முறையில் பறிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் வளங்கள்

கொள்ளை போக அனுமதி

ஆயினும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, மக்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படா மல், நாட்டின் வளங்கள் இவ்வாறு மிகப் பெரிய அளவில் கொள்ளை போக அனுமதித் திருப்பது, அதன் மீது வலுவான வகையிலும் மற்றும் நியாயமான முறையிலும் சந்தேகத் தினை ஏற்படுத்தி இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்திட நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் கோரியபோதும் அதனை ஏற்க அகம்பாவத்துடன் அது மறுத்ததன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ‘வீணடிக்கப்படுவதற்கு’ இட்டுச் சென்றது, கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டதற்குப் பின்னர், பிரதமர் தன்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவைச் சந்திக்கத் தயார் என்றும் அறிவித்தார். இதையே அவர் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தாரானால் நிலைமைகள் வேறுமாதிரி இருந்திருக்கக் கூடும்.

மேலும் பிரதமர் பொதுக்கணக்குக் குழுவின் முன்பு ஆஜராகத் தயார் என்றால், அவர் ஏன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் ஆஜராகக் கூடாது?

பயன்தராத நடவடிக்கைகள்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் பல்வேறு அமைப்புகளின் மீதும் கடும் தாக்குதல்கள் தொடுப்பதிலும் முனைப்பாய் இருந்தது, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), மத்திய விஜிலன்ஸ் கமிஷன் போன்றவைகளின் செயல் பாடுகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல்களின் தொடர்பாக சோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. ஊழல்கள் நடைபெற்ற சமயத்தில் சோதனை நடத்தாமல் வெகுகாலம் கழித்து நடத்துவதால் பெரிய அளவிற்கு பிரயோசனம் இருக்காது என்ற போதிலும் அரசாங்கம் தான் மிகவும் நியாயமாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு செய் திருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு

மேற்கண்ட நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் கொள்கைகள் நெறிபிறழ்ந்து சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கின்றன. வரவிருக்கும் ஆண்டுகளிலும் இத்தகைய நிலைமைகள் தொடரக் கூடும். இந்த ஆண்டின் நடவடிக் கைகளைப் பரிசீலனை செய்ததிலிருந்து நம் அனுபவம் என்னவெனில், ஓர் அரசாங்கம் திறமையுடன் செயல்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அதற்குப் பெரும்பான்மை இருந்தால் மட்டும் போதாது, அதற்கும் மேலாக நம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், அதன் மூலம் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, அது செயல்படவும் வேண்டும். ஆனால் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவற்றைச் செய்திடாமல், ஜி-20 மாநாடுகளிலும், அனைத்து பி-5 நாடுகளின் தலைவர்களுடனும் பங்கேற்பதால் பயனேதும் இல்லை.

மக்கள் இயக்கம் ஒன்றே வழி

இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிப் போக்குகளை வைத்து வரவிருக்கும் ஆண்டிற்கான நிகழ்ச்சிநிரலை வரையறுக்க வேண்டியிருக்கிறது. வெகுஜனப் போராட்டங்களின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களுக்கு ஆதரவானதாக மாற்றக்கூடிய விதத்தில் நிர்ப்பந்தம் அளிக்காவிட்டால், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கமுடியாது. நாட்டை நல்லமுறையில் உருவாக்கிடவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திடவும் சமூக நீதியை நிலைநாட்டவும் இந்திய மக்களாகிய நாம் மகத்தான சக்தியைப் பெற்றிருக்கிறோம். ஆயினும், நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்திடவும், சிறந்ததோர் இந் தியாவை உருவாக்கிடவும் கூடிய வகையில் அரசின் கொள்கைகள் அமைந்தால்தான் இவற்றை அடைவது சாத்தியம். அரசாங்கம் அத்தகைய வகையில் செயல்பட வேண்டும். நம் மக்களுக்கான சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க 2011இல் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்!

தமிழில்: ச.வீரமணி

Sunday, December 26, 2010

உச்சரிப்பதோ சாமானியர், சேவகமோ பெருமுதலாளிக்கு...


கில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இரண்டு நாள் மாநாடு தில்லி அருகே புராரியில் நடைபெற்று முடிந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங் கம் ஒன்றன்பின் ஒன்றாக பல ஊழல் குற்றச் சாட்டுக்களால் தாக்கப்பட்டுத் தள்ளாடிக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் இம்மாநாடு நடந்து முடிந்துள்ளது. 2009 மே மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் முடிவின்போது வெற்றிக் களிப்பில் இருந்த மனோநிலை இப்போது மறைந்துவிட்டது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் நிலை, தீர்க்கமுடியாத நிலையில் தொடரும் விவசாய நெருக்கடி, வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருத்தல் ஆகியவை காங்கிரசின் சாமானியர்களுக்கான மேடையை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. கட்சி ஸ்தாபனமானது ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டியின் கலகம், பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட படுதோல்வி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் லஞ்சக் குற்றச்சாட்டுக்களாலும், இவற்றை சமாளிக்க முடியாததன் காரணமாக பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீதும் ஏற்பட்ட நம்பகமின்மையாலும் நிலைகுலைந்து போயுள்ள காங்கிரஸ் தலைமையானது, குற்றச்சாட்டை எதிர்கொள்வதைவிட எதிர்த்தாக்குதல் தொடுக்கலாம் என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது. ஊழல் குறித்து பாஜக நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் ஊழல்களையும் தற்போதைய கர்நாடக பாஜக அரசாங்கத்தின் ஊழல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவை மிகச் சரியானவையே. ஆயினும், காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய அரசியல் தீர்மானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் அவை ஆளும் மாநிலங்களில் ஊழல்கள் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இடது முன்னணியைச் சேர்ந்த எந்த ஒரு அமைச்சரும் ஊழல் புகார்களை எதிர் கொண்டதில்லை என்பதை காங்கிரஸ் கட்சி நன்கு அறியும். காங்கிரஸ் தலைவர் தன் தலைமையுரையில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால், அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக் கப்படுவதற்கு முன்பே அவர்கள் அமைச்சர் பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட்டுவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் ஒப்புக்கொள்ளாத விஷயம் என்னவெனில், மகாராஷ்டிரா முதல்வரும் மற்ற அமைச்சர்களும் புரிந்திட்ட ஊழல்கள் மறைக்க முடியாத அளவிற்கு வெளிச்சத்திற்கு வந்த பின்னர்தான் அவர்கள் நீக்கப்பட்டார்கள் என்பதாகும்.

அதுமட்டுமல்ல, பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயுள்ள தொடர்பின் காரணமாகவே லஞ்சம் உச்சத்திற்குச் சென்றுள்ளது என்பதனை காங்கிரஸ் கட்சி உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையானது, தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தங்கள் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதிலோ, அதன் பிரதிபலனாக அவர்களிடமிருந்து சலுகைகள் பெறுவதிலோ தவறேதும் இல்லை என்றே காங்கிரஸ் தலைமை கருதுகிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க மறுப்பதே இதற்குச் சரியானதோர் எடுத்துக்காட்டாகும்.

காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் தீர்மானங்களில், கட்சியானது சமூக ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டது. உண்மையில் இது மக்களை ஏமாற்றுவதற்கான சூழ்ச்சிதான். பொருளாதாரத் தீர்மானமானது மக்களின் உள்ளார்ந்த வளர்ச்சி குறித்தும் மக்களின் உரிமைகள் குறித்தும் பேசுகிறது. வேலை செய்யும் உரிமை, கல்விக்கான உரிமை, நிலத்திற்கான உரிமை, உணவுக்கான உரிமை முதலானவற்றைக் காங்கிரஸ் கட்சியும் குறிப்பிடுகிறது. ஆனால், இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறினாலும், அக்கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடு என்பது இதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. இவ்வாறு சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது.

‘‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது கிட்டத்தட்ட உத்தரவாதம் செய்யப்பட்டிருப்பதாக’’ தன்னுடைய பொருளாதாரத் தீர்மானத்தில், அது குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன? நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் ஒருசில மாநிலங்கள் தவிர வேறெங்கும் அமல்படுத்தப்பட்டிருக்க வில்லை. நாடு முழுவதுமே விவசாயிகள் தங்கள் நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் அரசின் கொள்கைகளின் காரணமாகப் பறிகொடுத்து விட்டு, பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பசி, பஞ்சம், பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு உரிமை என்பது இன்னமும் தொலை தூரக் கனவாகவே இருந்து வருகிறது. நாட்டில் பொது விநியோகமுறையை பெருமளவில் வெட்டிக் குறைத்திருக்கும் மத்திய அரசின் கொள்கையே இதற்குப் பிரதான காரணமாகும்.ஆனால் காங்கிரஸ் கட்சி இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி மக்களின் இன்றைய துன்ப துயரங்களுக்கு மாநில அரசுகளே காரணம் என்று வீணே பழிபோட முயற்சிக்கிறது.

பொதுத்துறையின் கேந்திரமான பங்களிப்பு குறித்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். எந்தச் சூழ்நிலையில்? மன் மோகன்சிங் அரசாங்கமானது, மிகஅதிக அள வில் இலாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில் மும்முரமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில்தான் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ‘பொதுத் துறையின் பங்குகளில் 51 விழுக்காடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்திடும்’ என்று மக்களுக்கு உறுதிமொழி அளித்துக் கொண்டே, அவர்களை ஏமாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கட்டற்ற வணிகமயம் மற்றும் தனியார்மயம் மூலமாக வசதி படைத்த பிரிவினருக்கான கல்வி முறையை மேம்படுத்தி, சாமானிய மக்களின் கல்வியை வெட்டிச் சுருக்கும் ஐ.மு.கூட்டணி அரசின் புதிய கொள்கைகள் மூலம் கல்வி உரிமையும் வெட்டிச் சுருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசியல் பிரச்சனைகள் குறித்து அது நிறைவேற்றியுள்ள அரசியல் தீர்மானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடதுசாரிகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறித் தாக்குதல் தொடுத்திருக்கிறது. மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் அரசியல் அல்லது தேர்தல் ஆதாயங்களுக்காக தொடர்ந்து வன்முறையை பிரயோகிக்கின்றது என்று குற்றஞ்சாட்டி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தான் திரிணாமுல் காங்கிரசின் இளைய பங்காளியாக இருந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், இடதுசாரிகள் மீதும் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. முர்சிதாபாத், பர்தமான் போன்ற மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சியானது மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது நேரடியாகவே தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. திரிபுராவில், மார்க்சிஸ்ட் கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்துவதற்காக, காங்கிரஸ் கட்சியானது ராஜீவ்காந்தி காலத்திலிருந்தே, பிரிவினை சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு, பயங்கரவாத வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியையும் இடது ஜனநாயக முன்னணியையும் எதிர்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியானது சாதிய மற்றும் மதவெறி சக்திகளுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கியதில்லை.

மேலும் மற்றொரு அரசியல் தீர்மானத்தில், காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூட்டணி அரசாங் கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இடதுசாரிக் கட்சிகள் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு செயல்படுவதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அயல்துறைக் கொள்கை நிலைகள் பலவற்றை எதிர்க்கின்றன. உண்மையில், காங்கிரசும் பாஜகவும்தான் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையும், அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையையும் பின்பற்றுவதில் ஒரு பொதுவான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.

அயல்துறைக் கொள்கைத் தீர்மானம், ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் அயல்துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கை போன்றே வாசிக்கப் பட்டிருக்கிறது. நாட்டின் அயல் துறைக் கொள்கையைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றிருக் கும் யதார்த்தத்தை மறைக்க முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்திய அதிகாரிகள், வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கியபோதிலும், அயல்துறைக் கொள்கையில் அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய விதத்தில் திருப்திகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடமிருந்து தந்திச் செய்தி (கேபிள்) சென்றிருப்பதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டிருக்கிறது.

தீர்மானத்தில் மேலும், ‘‘மூன்றாம் உலக நாடுகளை வழிநடத்திச் செல்வதில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் இந்தியா’’, என்று குறிப்பிட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியா, மூன்றாம் உலகத்தில் நடைபெற்ற இயக்கங்களுக்குத் தலைமை தாங்கியது உண்மைதான். ஆனால் இன்றைய தினம் அதனை அது கைகழுவிவிட்டது என்பதில் ஐயமில்லை. இப்போது அது அமெரிக்காவின் ஆசியுடன் ‘‘உலக அளவிலான அதிகார மையமாக’’ மாறிட அவா கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 125 ஆண் டுகள் நிறைவு அடைந்துள்ள நிலையில் அதன் நிலை எப்படி இருக்கிறது? ‘‘சாமானிய மனிதர்’’களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை உதறித் தள்ளிவிட்டு, அதிகார வெறி பிடித்த பெரு முதலாளிகளின் கருவி யாக மாறியதன் விளைவாக, காங்கிரஸ் கட்சி அழுகிக்கொண்டிருக்கும் அறிகுறி களையே காண முடிகிறது.

தமிழில்: ச.வீரமணி

Saturday, December 25, 2010

வரலாறு படைத்திட்ட பிஎஸ்என்எல் ஊழியர்களின் வேலை நிறுத்தம்:விஏஎன் நம்பூதிரி, தலைவர்



பிஎஸ்என்எல்ஊழியர் சங்கம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல்-இல் டிசம்பர் 1 அன்று தொடங்கி டிசம்பர் 2 அன்றிரவு விலக்கிக்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் என்பது பிஎஸ்என்எல்-இல் வேலை செய்யும் மூன்று லட்சம் ஊழியர்கள், நிறுவனத்தைத் தனியாருக்கத் தாரை வார்ப்பதையோ, விருப்ப ஓய்வு என்ற பெயரிலோ அல்லது வேறெந்த வகையிலுமோ ஊழியர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைப்பதையோ, ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பிரகடனத்தின் அடையாளமாக அமைந்தது. பிஎஸ்என்எல் தொடர்புகளுக்காக வெகுகாலமாகக் காத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான கைபேசி இணைப்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வேலைநிறுத்தம் முன்னிலைப் படுத்தியது.

ஏப்ரல் 20 வேலைநிறுத்தமும் அதன்பின் நடைபெற்ற தொடர் நடவடிக்கைகளும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், இதர பல கோரிக்கைகளுடன் மேற்கண்ட முக்கியமான கோரிக்கைகளையும் வலியுறுத்தி, 2010 ஏப்ரல் அன்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது. வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற்றதன் காரணமாக வேலைநிறுத்தத்தின் முதல் நாளன்றே மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்த்து வைக்கப்படும் என்று அரசுத்தரப்பில் எழுத்து பூர்வமாக உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. ஒரு சில கோரிக்கைகள் மீது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், மற்ற கோரிக்கைகள் மீது கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் அமல்படுத்தப்படவில்லை. முக்கியமான கோரிக்கைகளை அமலாக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதன் விளைவாக ஊழியர்கள் மிகவும் கொதிப்படைந்திருந்தனர்.
தனியாருக்குத் தாரைவார்த்தல் / சுயஓய்வு மூலம் ஆட்குறைப்பு
ஐமுகூ-2 அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் வேலைகளை மிகத் துரிதகதியில் செய்யத் தொடங்கியது. சாம் பிட்ரோடா குழு அறிக்கையானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 30 விழுக்காடு பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களைக் வெட்டிக்குறைத்திட வேண்டும் என்றும், கேந்திரமான தனியார் ஒருவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்திருந்தன. பிஎஸ்என்எல் ஊழியர்கள் இவற்றை முழுiயாக எதிர்த்து நின்றபோதிலும், பிஎஸ்என்எல் நிர்வாகம் ஏற்கனவே இந்தத் திசைவழியில் நடவடிக்கைகளைத் தொடங்கி இருந்தன. பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள கார்பரேட் நிறுவனங்களும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாட்டில் உள்ள டெலிகாம் துறையை முழுமையாகத் தாங்கள் வசப்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அதன் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ள மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தன.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாட்டின் அனைத்து நகரங்களிலும் மாநகரங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கேந்திரமான பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய கார்பரேட் நிறுவனங்களும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக அமைக்கப்பட்ட துறையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்தது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

சாம் பிட்ரோடா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக. டெலிகாம் துறையால் மற்றொரு குழு அமைக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்தினை எந்த விதத்தில் தனியாருக்குத் தாரை வார்ப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியுடன் கூறப்பட்டது. அதேபோன்று சுய ஓய்வு என்ற பெயரில் ஊழியர்களை வெட்டிக் குறைப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டது. ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க அரசின் உயர்மட்ட அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி, அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான போராட்டத்திற்குச் செல்வது என்று தீர்மானித்தது.

எந்தவொரு வேலைநிறுத்தம் என்றாலும் அதற்கு முழுத் தயாரிப்புப் பணிகள் அவசியம். கோரிக்கைகள் குறித்து ஊழியர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டியதும் அவசியம். வேலைநிறுத்தத்திற்காக கோரிக்கைகள் பிரதானமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துடன் சம்பந்தப்பட்டதால், இது தொடர்பாக மேலும் தீவிரமான பிரச்சாரம் அவசியமாக இருந்தது. எனவே இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் ஏராளமான எண்ணிக்கையில் சிறுபிரசுரங்களும் நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன.
அகிலஇந்திய சிறப்பு மாநாடு - 19 ஜூலை 2010

வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புப் பணிகளின் முதல் கட்டமாக 2010 ஜூலை 19 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக புதுதில்லியில் அகில இந்திய சிறப்பு மாநாடு நடைபெற்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்து பங்கேற்றார்கள். இச்சிறப்பு மாநாட்டில் எம்.கே. பாந்தே (சிஐடியு), ஜி. சஞ்சீவரெட்டி (ஐஎன்டியுசி) மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். இச்சிறப்பு மாநாட்டில் 2010 அக்டோபர 19 முதல் 21 வரை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மாநிலங்களிலும் மாநில அளவிலான சிறப்பு மாநாடுகள் நடைபெற்றன. ஏராளமான எண்ணிக்கையில் மாநில மொழிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு, சுற்றுக்கு விடப்பட்டன.

2010 அக்டோபர் 19 முதல் 21 பண்டிகைக் காலமாக இருந்ததாலும், கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதாலும், வேலைநிறுத்தத்தை 2010 டிசம்பர் 1 - 3 தேதிகளில் நடத்துவது என கூட்டு நடவடிக்கைக் குழு, தீர்மானித்தது.

நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி

2010 நவம்பர் 19 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வந்து கலந்து கொண்டனர். பேரணி, புதுதில்லி, ஜன்பத் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமையிடத்திலிருந்து புறப்பட்டு, டால்ஸ்டாய் வீதி வழியாக, நாடாளுமன்ற வீதியை அடைந்தபோது, காவல்துறையினரால் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பாசுதேவ் ஆச்சர்யா, பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார். கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனர் விஏஎன் நம்பூதிரி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அபிமன்யு மற்றும் தலைவர்கள் உரையாற்றினார்கள். ஊழியர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமருக்கும், மக்களவை சபாநாயகருக்கும் அளிக்கப்பட்டது.

2010 டிசம்பர் 1 அன்று வேலைநிறுத்தம் தொடங்கியது

வேலைநிறுத்தத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னரும், பிஎஸ்என்எல் நிர்வாகம் மௌம் சாதித்தது. பின்னர் பெயரளவில் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், உருப்படியாக ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. 2010 நவம்பர் 29 அன்று அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் நடைபெற்ற மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்கள் முழுமையாக வெற்றி பெற்றன. வேலைநிறுத்தம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய/மாநில அரசு ஊழியர் அமைப்புகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. அவை தங்கள் முழுமையான ஆதரவை வேலைநிறுத்தத்திற்கு அளித்தன.

பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிசம்பர் 1 தினத்தை தனியார்தாரைவார்ப்பு எதிர்ப்பு தினமாக அனுசரித்து அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு அறைகூவல் விடுத்தது. மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் பெடரேஷன் மற்றும் பல்வேறு அமைப்புகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன. அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓட்டி ஓய்வூதியர் சங்கமும், பிஎஸ்என்எல் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர் சம்மேளனமும் வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளித்தன.

டிசம்பர் 1 அன்று காலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் துவங்கியது. நாடு முழுதும் உள்ள பிஎஸ்என்எல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் ஸ்தம்பித்தன. பல மாநிலங்களில் மாநில அளவிலான முதன்மை பொது மேலாளர்கள்கூட அலுவலகத்திற்கு வரவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். கொல்கத்தா, தில்லி, சென்னை, பங்களுரு, திருவனந்தபுரம் மற்றும் பெரிய நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர் நிர்வாகம் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆயினும் கோரிக்கைகள் அரசுடனும் டெலிகாம் துறையுடனும் சம்பந்தப்பட்டதால் எவ்விதமான முடிவும் எடுக்கப்பட முடியவில்லை.

முதல் நாள் நடைபெற்ற வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றதால், சில இடங்களில் வேலைநிறுத்தத்தில் சேராத ஒரு சில ஊழியர்கள் கூட இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர்களுடன் டெலிகாம் துறை செயலாளர் டிசம்பர் 2 அன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத்தில் அவர் விரிவான விவாதத்திற்குத் தயங்கியபோதிலும், பின்னர் முழுமையாக ஒத்துழைத்தார். பின்னர் பிஎஸ்என்எல் தலைவர்/மேலாண் இயக்குநருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்திட தற்சமயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும், ஊழியர்களை சுய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்றும், அரசுத் தரப்பில்உறுதிமொழி அளிக்கப்பட்டது. மேலும் 15 மில்லியன் லைன்கள் வாங்குவதற்கான டெண்டரும் விரைவில் விடப்படும் என்று உறுதிதரப்பட்டது. 2007க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் தொடர்பாக ஓய்வூதியத் திருத்தம் குறித்து மீள கேபினட் குறிப்பு அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உறுதிதரப்பட்து. ஊதிய நிர்ணயம் தொடர்பாகவும் சங்கங்களுடன் கலந்து பேசி பிஎஸ்என்எல் போர்டுக்கு அனுப்பப்பட்டு புதிதாக ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்றும் உறுதிதரப்பட்டது.

பின்னர் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 டிசம்பர் 2 அன்றிரவு 8 மணிக்குக்கூடி அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்தபின் வேவைநிறுத்தத்தை விலக்கிக்கொள்வதென முடிவு செய்தது.

வேலைநிறுத்தத்தில் கிடைத்த படிப்பினைகள்

வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஓரிரண்டு ஊழியர்களின் நிதிக் கோரிக்கைகளாக இருந்த போதிலும், மற்றவை அனைத்தும் பிஎஸ்என்எல் வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் உத்தரவாதப்படுத்தக் கூடியவைகளாகும். அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான ஓர் அரசியல் வேலைநிறுத்தம் என்றுகூட இதனைக் கூற முடியும்.
அரசுத்தரப்பில் நிறுவனத்தைத் தனியாருக்குத் தற்போதைக்குத் தாரை வார்க்க மாட்டோம் என்றும் சுய ஓய்வில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பமாட்டோம் என்றும் கூறப்பட்டிருந்தாலும் அவை தற்காலிகமானவைகள் மட்டுமே. அரசின் கொள்கைகளை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமானால், அரசின் கொள்கைகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து வீரஞ்செறிந்த நீண்ட நெடிய போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியது அவசியம். இதற்கு மக்கள் மத்தியில் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.
கூட்டு நடவடிக்கைக் குழுவை உடைத்திட அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் பொடிப்பொடியாக்கியுள்ளோம். இதனை எதிர்காலத்திலும் பேணிப்பாதுகாத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவை மேலும் வலுவானதாக மாற்றிட வேண்டும்.
டெலிகாம் துறை மிகவும் விரிவானதும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு துறை. இதில் கிடைக்கும் லாபத்தை விழுங்குவதற்காக அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையே மிக மோசமான வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அவை பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தினால்தான் தாங்கள் மக்களை முழுமையாகக் கசக்கி அதன் மூலம் கொழுக்க முடியும் என்பதால் அதற்கேற்ற வகையில் மிகவும் இழிவான முறையில் திட்டங்களைத் தீட்டிவருகின்றனர். இத்தகைய இவர்களின் இழிமுயற்சிகள் முறியடிக்கப்பட்டு, பிஎஸ்என்எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் விழிப்புடனிருந்து, மக்களின் ஆதரவுடன் இப்போராட்டத்தை மேலும் தீவிரமான முறையில் முன்னெடுத்துச் சென்று, அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நவீன தாராளமயக் கொள்கைகளை முறியடித்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி