Friday, July 23, 2010

பாதுகாப்பு அம்சங்களை அலட்சியப்படுத்துவதன் மூலம் மக்களின் உயிருடன் விளையாடும் ரயில்வே துறை



மேலும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டு, 60 உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது, நூற்றுக்கணக்கானோர் கடுங் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். ஆயினும், மத்திய ரயில்வே அமைச்சர், ‘இது மேலும் ஒரு சதித்திட்டம்’ என்று கதையளந்து கொண்டிருக்கிறார். ஐமுகூ-2 அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் தலைமைக்கோ, அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கோ, மனித உயிர்கள் மிகவும் மலிவானதாகிவிட்டன. விபத்தில் இறந்தவர்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலையோ அனுதாபமோ கூட காட்டாமல் திமிருடன் பதிலளிப்பது மிகவும் வெட்கக் கேடானதாகும், இவ்வாறு விபத்துக்கள் நடைபெறும்போது மனச்சான்றின் உறுத்தல் சிறிதுகூட இல்லாமல், வழக்கமாகத் தெரிவிக்கப்படும் வருத்தம் கூட தெரிவிக்காமல், ‘‘இது எதிரிகளின் நாசவேலை’’ என்று கூறிக்கொண்டிருக்கிறார். ரயில்வே வாரியத்தின் தலைவரும், அமைச்சரின் கூற்றை அடியொட்டி, விபத்து தொடர்பாக, ‘நாசவேலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கில்லை’ என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

ஐமுகூ-2 அரசாங்கம் பொறுப்பேற்ற பின் 2009 மே மாதத்திற்கும் 2010 ஜூலை மாதத்திற்கும் இடையில் பெரிய அளவிலான ரயில் விபத்துக்கள் 16 நடைபெற்றிருக் கின்றன. 269 பேர் இவற்றில் பலியாகி இருக்கிறார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுங் காயங்கள் அடைந்திருக்கிறார்கள். சிறிய விபத்துக்கள் உட்பட அனைத்தையும் சேர்த்தோமானால், 2009 மே மாதத்திற்குப் பின் மொத்தம் 162 விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன, இவற்றில் 428 பேர் இறந்திருக்கின்றனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் இவ்விபத்துக்கள் குறித்து பொறுப்புணர்ச்சியுடனோ அல்லது தார்மீக வேதனையுடனோ எவ்விதக் கவலையும் படாது, விபத்து நடைபெற்ற இடத்தில், ‘‘விபத்துக்கான காரணம் குறித்து நான் சந்தேகிக்கிறேன், என் மனதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன, எது நடந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்குப் பின்னால் இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என்று கூறியிருக்கிறார். 2010 மே 28 அன்று மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு மற்றொரு ரயிலுடன் மோதி 149 பேர் கொல்லப்பட்டபோது, அமைச்சர், ‘‘இந்த ரயில் விபத்துக்குப்பின்னே ஓர் அரசியல் சதி இருக்கிறது. இந்த நாசவேலையைச் செய்தவர்கள், பல உயிருடன் விளையாடியவர்கள் மன்னிக்கப்படக் கூடாது’’ என்று பேசினார். அதற்கு முன்னதாக, 2009 அக்டோபர் 21 அன்று கோவா எக்ஸ்பிரஸ் - மேவார் எக்ஸ்பிரஸ் மதுரா அருகில் மோதிக்கொண்டதில் 21 பேர் கொல்லப்பட்டபோது, அமைச்சர், ‘‘ரயில் சங்கிலியைப் பிடித்து இழுத்ததுதான் இதற்குக் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள், சிலர் இது ஒரு ‘சிக்னல்’ பிரச்சனை என்கிறார்கள். இது ஒரு கிரிமினல் குற்றமாகக் கூட இருக்கலாம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தீர்மானிக்க இதனை நான் விட்டுவிடுகிறேன்’’ என்றார். புதுதில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் இறந்தபோதும், பலர் காயம் அடைந்தபோதும், மீண்டும் ஒருமுறை இவர் எவ்விதப் பொறுப்புணர்ச்சியுமின்றி, ‘‘இது நிர்வாகத்தவறால் ஏற்படவில்லை, இத்தகைய குழப்பங்களுக்கு மக்கள்தான் பொறுப்பு. இத்தகைய நிலைமைகளைக் கட்டுப்படுத்துவது கடினம்’’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
உத்தர் வங்க எக்ஸ்பிரசுடன் வனஞ்சல் எக்ஸ்பிரஸ் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ரயில்வே அமைச்சர் கூறும் சந்தேகங்களை நிராகரித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், விபத்துக்கு ரயில்வே ஊழியர்களுக்கும், ரயில்வே சாதனங்களுக்கும் இடையே தொடர்பாக ஏற்படாததால் ஏற்பட்ட கோளாறே (ளலளவநஅ கயடைரசந) காரணம் என்று தெரிவித்திருக்கிறது. ரயில்வே அமைச்சரின் கூற்றினை உள்துறை அமைச்சகம் நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்பு ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளானபோது, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தபோதும், இதேபோன்று உள்துறை அமைச்சகம் அதனை நிராகரித்தது.

ஆனால் அதனைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாது, ரயில்வே அமைச்சரும், அவருடைய திரிணாமுல் காங்கிரசும் விபத்துக்களுக்குப் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிக் கட்சிகளையும் குறி வைத்து, சதித்திட்டங்கள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்தில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்தின்போதும் இவ்வாறே கூறப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தல்களில் ஆதாயம் அடைந்தது திரிணாமுல் காங்கிரஸ்தான். அப்படியானால் சந்தேகத்தின் கூர்முனை எந்தப் பக்கத்தில் இருக்க வேண்டும்? சதித் திட்டங்கள் இருப்பதாகக் கூறும் திரிணாமுல் காங்கிரசின் கூற்றுக்களிலிருந்தே, இது யார் பக்கம் திரும்பியிருக்கிறது என்பது தெளிவாகும். கொல்கத்தாவில் ஒவ்வோராண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டிடும் வருடாந்திர கூட்டத்திற்கு இரு நாள்களுக்கு முன் மீண்டும் இதுபோன்றதொரு துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்திருக்கிறது.

இப்போது நடைபெற்றுள்ள விபத்து குறித்தும், மற்ற விபத்துக்களைப்போலவே பல முக்கிய கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் விடையில்லை. இவை அனைத்தும் முன்பு பலமுறை விரிவாகக் கூறப்பட்டிருப்பதால் இப்போது மீண்டும் அவற்றைக்கூற வேண்டிய தேவை யில்லை. கடந்த ஓராண்டுகளில் நடைபெற்ற விபத்துக்கள் அனைத்துமே, பெரிய அளவில் நிர்வாக எந்திரத்தில் உள்ள கோளாறுகளை (ளலளவநஅ கயடைரசந) சுட்டிக் காட்டுகின்றன. உலகில் மிகப் பெரிதான நம்முடைய ரயில்வே துறையைத் திறம்பட இயக்கிட போதுமான அளவிற்குக் கவனம் செலுத்தப்பட வில்லை என்பதையே இவ்விபத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய ரயில்வேயில், சரக்குப் போக்குவரத்து தவிர, ஒவ்வொரு நாளும் 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. சுமார் 90 ஆயிரம் பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக இருக்கின்றன. இவற்றை நிரப்பிட ரயில்வே அமைச்சருக்கு நேரமே கிடைக்கவில்லை. இப்பணியிடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை பாதுகாப்பு அம்சங்கம் சம்பந்தப்பட்டவைகள் என்பதைக் கேள்வியுறும்போது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இப்போது ரயில்வே அமைச்சராக இருப்பவர் இதற்கு முன்பும் இதேமாதிரி அமைச்சராக இருந்த சமயத்தில், கொங்கண் ரயில்வேயில் முன்னாள் மேலாண் இயக்குநராக இருந்தவர், இரு ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுத்திடும் வகையில் தானியங்கி தடுப்பு சாதனம் (ஹஊனு - யவேi-உடிடடளைiடிn னநஎளைந) ஒன்று கண்டுபிடித்து பரிந்துரைத்தார். கொங்கண் ரயில்வேயில் மட்டம் இந்த சாதனம் இப்போது பயன்படுத்தப்பட்ட வருகிறது. ஆயினும் இதனை மற்ற ரயில்வேக்களிலும் அறிமுகப்படுத்திட வேண்டும் என்கிற ஆர்வமோ அல்லது அதற்கான நேரமோ ரயில்வே அமைச்சகத்திற்கு இல்லை.

நாட்டில் மிகவும் கேந்திரமான பங்களிப்பினைச் செய்து வரும் ரயில்வேயில் நிலைமைகள் இவ்வளவு மோசமாக இருப்பதை அனுமதித்திட முடியாது. மத்திய ரயில்வே அமைச்சர், தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை, தான் உறுதிமொழி எடுத்துக்கொண்டபடி, உண்மையான முறையில் ஆற்றவில்லை. நிர்வாக எந்திரம் செம்மையாகச் செயல்படுவது தொடர்பாக அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு என்ற போதிலும், தனிப்பட்ட முறையிலும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு. அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் பிரதமர் அவர்கள் இதனை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் உத்தரவாதப்படுத்த வேண்டியது, மேலும் ஒரு காரணத்தாலும் அவசியமாகிறது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பிரதமர் அடிக்கடி பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார். மாவோயிஸ்ட் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பலவற்றின் மூலம், மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவிட தங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உதவியது என்பதையும், அதனுடன் உயிரோட்டமான தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தெளிவுபட உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய முரண்பாட்டினை பிரதமர் அவர்கள் தெளிவுபடுத்திட வேண்டியதும் அவசரத் தேவையாகும்.

நாட்டின் நலன் கருதி, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் இந்தியன் ரயில்வேயில் நாள்தோறும் பயணித்திடும் இரண்டு கோடி மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி, இவை தொடர்பாக ஐமுகூ-2 அரசாங்கமும், பிரதமரும் ஓர் அறிவிப்பினைச் செய்திட வேண்டியது அவசியமாகும். நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் அபாயத்தை உண்டாக்கும் முறையில் மிகவும் பொறுப்பற்றதன்மையுடன் தொடர்ந்து நடந்து கொள்பவர் குறித்து நாடு இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது, மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

(தமிழில்: ச.வீரமணி)

Monday, July 19, 2010

பிஎஸ்என்எல் ஊழியர்கள் அக்டோபர் 19 - 21 உள்ளிருப்பு வேலைநிறுத்தம்





புதுதில்லி, ஜூலை 19-

பிஎஸ்என்எல்-ஐப் பாதுகாத்திட, நாட்டைப் பாதுகாத்திட பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் வரும் அக்டோபர் 19-21 தேதிகளில் மூன்று நாட்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் மேற்கொள்வார்கள் என்று புதுதில்லியில் நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிறப்பு மாநாடு பிரகடனம் செய்திருக்கிறது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதுதில்லி, மாவலங்கார் அரங்கில் திங்கள் அன்று காலை சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் பிரகடனத்தை முன்மொழிந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தலைவர் வி.ஏ.என். நம்பூதிரி உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘அரசு, சென்ற வேலைநிறுத்தத்தின் போது அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தான் அளித்த வாக்குறுதியை மீறியதன் மூலம் துரோகம் செய்துவிட்டது. அது மட்டுமல்ல பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாருக்குத் தாரை வார்த்து முழுமையாக ஒழித்துவிடவும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.

பிஎஸ்என்எல் நிர்வாகம் தன்னுடைய வணிகக் கொள்கைகளைத் தீர்மானித்திடவும், இறுதிப்படுத்திடவும் முழு சுதந்திரம் அளித்திட வேண்டும். நாட்டின் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு அரசுத்துறை மற்றும் அரசுத்துறையைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து மட்டுமே சேவைகளைப் பெற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனிக் கார்பரேஷனாக்கும்போது கொடுத்த உறுதிமொழியின்படி உரிமக் கட்டணங்களிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.
3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக் கட்டணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து கட்டாயமாகப் பெற்றுள்ள 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அரசு, திருப்பித்தர வேண்டும்,
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்குத் தாரைவார்த்து, கடைசியில் நிறுவனத்தையே இல்லாதொழித்திட வகைசெய்யும் பிட்ரோடா குழுவின் பரிந்துரைகளை அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயங்கிடும் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெறும் இத் தேசிய மாநாடு வரும் அக்டோபர் 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நாடு முழுதும் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை மேற்கொள்வது என்று தீர்மானிக்கிறது. ஒரு வேளை அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால், நேரடி நடவடிக்கைகள் இறங்கிற பொறுத்தமான முடிவினை மேற்கொள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவிற்கு தேசிய மாநாடு முழு அங்கீகாரம் அளிக்கிறது.

இவ்வாறு தேசிய மாநாட்டின் பிரகடனத்தை வி.ஏ.என். நம்பூதிரி முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா மாநாட்டைத் துவக்கி வைத்தார். சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் எம்.கே. பாந்தே வாழ்த்துரை வழங்கினார்.

அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் பிரகடனத்தின் மீது விவாதம் நடத்தியபின், பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

(ச.வீரமணி)

Thursday, July 15, 2010

செப்டம்பர் 7 அகில இந்திய வேலை நிறுத்தம்




விலைவாசி உயர்வைக் கண்டித்து
செப்டம்பர் 7 அகில இந்திய வேலை நிறுத்தம்
மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய மாநில அரசு ஊழியர் அமைப்புகள் பிரகடனம்

புதுதில்லி, ஜூலை 15-

மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்தக் கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் செய்திட, புதுதில்லியில் நடைபெற்ற தொழிலாளர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்திருக்கிறது.

சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய மத்தியத் தொழிற் சங்கங்களும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டாவது தேசிய சிறப்பு மாநாடு, வியாழன் அன்று புதுதில்லியில் மாவலங்கார் அரங்கில் நடைபெற்றது. ஏ. கே. பத்மனாபன் (சிஐடியு) உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமைக்குழுவாக இருந்து மாநாட்டை வழிநடத்தினர். மாநாட்டில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் எம்.கே. பாந்தே, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா மற்றும் பல்வேறு மத்தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:

‘‘அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் ஒரு நடவடிக்கையாக அனைவருக்குமான பொது விநியோக முறை மூலம் அத்தியாவசியப் பொருள்களை மான்ய விலையில் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.

உலகப் பொருளதார நெருக்கடியின் விளைவாக, தொழில் முனைவோருக்கு ஊக்க நிவாரணம் அளிப்பது போன்று, வேலையிழப்புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களைக் காப்பாற்றிட, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எவ்வித விதிவிலக்குமின்றி தொழிலாளர் நலச் சட்டங்களைக் கடுமையாக அமல்பமுடுத்த வேண்டும், அதனை மீறுவோர் மீது தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாக்கக்கூடிய விதத்தில் 2008 முறைசாராத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்,

லாபத்தை அள்ளித்தரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது.

என்னும் ஐந்து முக்கிய கோரிக்கைகள் மீது அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும் இணைந்து சென்ற 2009 செப்டம்பர் 14 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரம்மாண்டனமான அளவில் முதல் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 2009 அக்டோபர் 28 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம், 2009 டிசம்பர் 16 அன்று தர்ணா, 2010 மார்ச் 5 அன்று சிறைநிரப்பும் போர், ஆகியவை மிகவும் சக்தியாக நடைபெற்றன.

விலைவாசியைக் குறைக்கக் கோரியும், குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. ஆயினும் உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வந்துள்ளன. இது தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
முதலாளிகளால் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதற்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தபோதிலும், அதைப்பற்றி அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை, தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது, வேலைகளை வெளியே கொடுத்து (அவுட்சோர்சிங் முறையில்) வாங்கிக் கொள்வது அதிகரித்து வருகின்றன.

லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்க்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. உதாரணமாக அரசு, கோல் இந்தியா லிட்,. பிஎஸ்என்எல், செயில், என்எல்சி, இந்துஸ்தான் காப்பர். என்எம்டிசி முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்தபோதிலும், அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதுடன் அதன் மீதிருந்த கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டது.

எனவே, அனைத்துத் தொழிற்சங்கங்களின் 2வது தேசிய மாநாடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் வரும் 2010 செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கிறது.

நாட்டில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும், மத்திய மாநில அரசு ஊழியர்களும் இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தை மாபெரும் அளவில் வெற்றியாக்கிட வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது. அரசு அதன்பின்னும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியை சக்தியாக நடத்திடுவது என்றும் மாநாடு தீர்மானிக்கிறது.

இவ்வாறு மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் ஆர்.முத்துசுந்தரம், (பொதுச் செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்), சுகுமால் சென் (முன்னாள் பொதுச் செயலாளர்,
அ.இ.மா.அ.ஊ.சம்மேளனம்), ஆர்.சிங்காரவேலு. பி.எம்.குமார் உட்பட அனைத்து சிஐடியு-வின் தமிழ் மாநில கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

(ச.வீரமணி).